Wednesday, 25 January 2012

நினைவுச்சின்னங்கள்- என் காமிராப் பார்வையில்.

அமெரிக்காவை மனசுல நினைச்சதும் ஜுவாலை ஏந்தி நிக்கிற சுதந்திரதேவியும், டில்லியை நினைச்சதும் செங்கோட்டையும், மதுரைன்னதும் மீனாட்சியும், ஆக்ரான்னதும் தாஜ்மஹாலும்தான் ஞாபகம் வருது. (வடக்கே உள்ளவங்களுக்கு ஆக்ரான்னதும் வேற ஒரு 'வில்லங்கமான' ஞாபகமும் வர்றதுண்டு). அந்தந்த இடங்களை ஞாபகப்படுத்தற விஷயங்களைத்தானே நினைவுச்சின்னங்கள்ன்னு சொல்றோம். அதுக்காக, திருனேலின்னதும் 'அல்வா'தானே ஞாபகம் வருது. அப்டீன்னா அல்வாதான் திருனேலியோட நினைவுச்சின்னமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது. பின்னே இருட்டுக்கடை எதுக்கு இருக்குதாம்?? காலப்போக்குல அதுவும் நினைவுச் சின்னமா ஆனாலும் ஆகலாம், சொல்ல முடியாது :-) 

ஒவ்வொரு ஊர்லயும் எந்தவொரு கட்டிடத்தைக் கட்டும் போதும், எந்த நோக்கத்துல கட்டப்பட்டாலும் நாட்பட அந்த ஊரைப் பத்தி நினைக்கும் போதே சம்பந்தப்பட்ட கட்டிடமும் நினைவுக்கு வர்ற மாதிரி அந்த ஊரோட வரலாற்றுல இரண்டறக் கலந்துடுது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தோட படத்தைப் பார்க்கிறப்பவும் "அட!!.. இது அந்த ஊராச்சே.."ன்னு சட்டுன்னு அந்த ஊரோட ஞாபகமும் வந்துரும். அதுவும் அந்த ஊர் நாம போய் வந்த ஊராயிருந்தா கேக்கவே வேணாம். அங்கே தங்கியிருந்த நாட்கள், அனுபவங்கள்ன்னு சரசரன்னு கொசுவத்தி பத்திக்கும். இதுல சில கட்டிடங்களைக் கட்டும் போதே அறிஞர்கள், நிகழ்வுகளோட ஞாபகார்த்தமா நினைவுச்சின்னங்களா கட்டினாலும், சில கட்டிடங்கள் மொதல்ல வெறுமே கல்லு மண்ணாலான கட்டிடமா இருந்துட்டு காலப்போக்குல நினைவுச் சின்னங்களாப் ப்ரமோஷன் வாங்கிக்கும். அப்படி என்னோட காமிராவில் பிடிச்சிட்டு வந்த சில நினைவுச்சின்னங்களை, ஃப்ளிக்கரோட நிறுத்திக்காம இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-))

கன்னியாகுமரி: இந்தப் பேரைச் சொன்னதும் குமரியம்மனுக்கு அடுத்தபடியா மனசுல வர்றது விவேகானந்தரோட ஞாபகார்த்தமா கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னம்தான். அமெரிக்கா போறதுக்கு முந்தி அவர் இந்தப் பாறையில் அமர்ந்துதான் தியானம் செஞ்சாராம். அந்த ஞாபகார்த்தமா 1970ல் கட்டப்பட்ட இந்த மண்டபம் அரிச்செடுக்கும் உப்புக் காத்தையும் சுனாமியையும் சமாளிச்சுக் கிட்டுக் கம்பீரமா நிக்குது.

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா: கிட்டப் பார்வையில்..


விவேகானந்தரும், ஸ்ரீபாத மண்டபமும் ஒரு தொலை நோக்குப் பார்வையில்.. 
இந்த காந்தி மண்டபத்தோட படத்தைப் பார்த்த அப்றமும் இது கன்னியாகுமரிதானேன்னு தெரிஞ்சுக்காதவங்க ஒரு நடை கன்னியாரி போயிட்டு வந்துருங்க. கன்னியாகுமரிக் கடல்ல கரைக்கிறதுக்கு முன்னாடி அவரோட அஸ்தியை வெச்சிருந்த ஞாபகார்த்தமா கட்டப்பட்ட இந்த மண்டபத்துல,   மேல் விதானத்துல இருக்கற ஒரு துளை வழியா அஸ்தியை வெச்சிருந்த இடத்துக்கு ஒவ்வொரு வருஷமும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, அதாவது அக்டோபர் 2-ம் தேதி அன்னிக்கு சரியா நடுப்பகல் 12 மணிக்கு சூரிய பகவான் ஒளியபிஷேகம் செஞ்சு அஞ்சலி செலுத்தறதைப் பார்க்கக் கூட்டம் நெரியும். எள்ளு போட்டா எண்ணெய்தான் விழும். 

மும்பையில் மலபார் பகுதியில் தொங்கும் தோட்டத்துக்குப் பக்கத்துல இருக்கற கமலா நேரு குழந்தைகள் பூங்காவில் இருக்குது இந்த பாட்டிம்மாவின் ஷூ.. (பாவம்.. ஒரு ஷூவை இங்கே தொலைச்சுட்டு என்ன சிரமப் படறாங்களோ :-))

மும்பையின் தாஜ் ஹோட்டல்: 565 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல் திரு. ஜாம்ஷெட்ஜி டாடாவால் கட்டப்பட்டு,  1903-ம் வருஷம் டிசம்பர் 16-ம் தேதியன்னிக்கு விருந்தினர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கு. முதலாம் உலகப்போர் சமயத்துல இதை 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையா மாத்தி உபயோகப் படுத்தியிருந்துருக்காங்க.  இதுல படத்தோட இடது பக்கம் இருக்கறது பழைய ஹோட்டல். இதுல நடுவே இருக்கும் வெங்காயக்கூம்பு பகுதியில் ஈஃபில் டவர்ல உபயோகப் படுத்தியிருக்கற அதே வகை இரும்பை வெளிநாட்லேருந்து தருவிச்சுப் பயன்படுத்திக் கட்டியிருக்காங்களாம். 

1980-85 கால கட்டத்துல உலகத்துலயே சிறந்த ஐந்தாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்ங்கற இடத்தை அடைஞ்ச பெருமை இதுக்குண்டு. 2008-ல் 26 நவம்பர் அன்னிக்கு நடந்த தாக்குதல்ல கொஞ்சம் கலகலத்தாலும் மறுபடியும் மீண்டு வந்து, அழிவின் சுவடுகளையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டுத், தனக்காக உயிர் கொடுத்தவர்களின் நினைவையும் சுமந்துக்கிட்டுத் தலை நிமிர்ந்து நிக்குது. தாக்குதலுக்கு அப்புறம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமே அதுக்குச் சாட்சி.

மும்பையின் புகழ்பெற்ற கேட் வே ஆஃப் இந்தியா: இது வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரு. நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-). எதிர்த்தாப்ல இருக்கற தாஜ் ஹோட்டல்ல தங்கிக்கிட்டா நாள் முழுசும் பார்த்துட்டே இருக்கலாம். (சில வருந்தத்தக்க நிகழ்வுகளால இப்ப தாஜும் நினைவுச்சின்னமாகிடுச்சு ) 

மும்பையின் பாந்திரா-வொர்லி கடல் இணைப்பு: 1999-ல் பால் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு 2010-ல் மக்கள் உபயோகத்துக்காக முழுவதும் திறந்து விடப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்குப் பேர் போன மும்பையில் இந்தப் பாலம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இந்தப் பாலம் வர்றதுக்கு முந்தி, இங்கேருந்து அங்கே போகறதுக்குச் சுமார் ஒன்னரையிலேர்ந்து ரெண்டு மணி நேரம் எடுக்குமாம். இப்பல்லாம் பாந்திராவுலேர்ந்து வொர்லிக்கு வெறும் ஏழே நிமிஷத்துல போயிடலாம். போக்குவரத்து நெரிசல் இருந்தா சுமார் பத்துப்பதினஞ்சு நிமிஷங்களாகும். அவ்ளோதான்.  டோல் வசூல் கொஞ்சம் கூடுதல்தான்னாலும் நல்லாவே பராமரிக்கிறாங்க.

டிஸ்கி: ஊர் சுத்தப் போயிருந்தப்ப விவரங்கள் சொன்ன கைடுக்கும், மேல் விவரங்கள் கொடுத்த விக்கியண்ணனுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் :-))

Sunday, 15 January 2012

தாத்தா பாட்டி சொல்றதைக் கேளுங்க..


இணையத்துலேர்ந்து சுட்ட பொங்கல்..
கடவுளோட படைப்புகள்லயே ரொம்பவும் அற்புதமான படைப்பு என்ன தெரியுமா?.. மனுஷனைப் படைச்சதுதான்.மத்த படைப்புகளில் இல்லாத ஒரு அற்புதமான சக்தி மனுஷனுக்கு இருக்கு. அதான் பேசும் சக்தி.மற்ற மிருகங்களுக்கும் வாயிருந்தாலும், மனசுல தோணற எண்ணங்களை வார்த்தையால் வெளிப்படுத்தும் திறமை மனுஷனுக்கு மட்டுமே இருக்கு. அப்படிப்பட்ட மனுஷப்படைப்பை ஏந்தான் படைச்சோமோன்னு அந்தக் கடவுளே நொந்துக்கற அளவுக்கு அந்த திறமையை தவறா உபயோகப் படுத்துறதும் கூட மனுஷனோட சிறப்பம்சம்தானோ.

சில பேர் இருக்காங்க.. நகைச்சுவைங்கற பெயர்ல எப்பவும் மத்தவங்க மனசைப் புண்படுத்தி அதுல சந்தோஷப்படுறதையே வழக்கமா வெச்சிருப்பாங்கற ரகம். பொதுவா நகைச்சுவைங்கறது நாமளும் சிரிக்கணும், நாம யாரை அல்லது எதைப்பத்திக் கிண்டல் செய்யறோமோ அவங்களும் சிரிக்கணும். அதான் நல்ல நகைச்சுவை. அப்படியில்லாம ஒருத்தரோட உருவத்தையோ இல்லை அவங்களோட தனிப்பட்ட குணங்களையோ எள்ளல் செய்யறது நிச்சயமா குரூரமானது. சம்பந்தப்பட்டவங்க அழுதுக்கிட்டிருக்கப்ப மத்தவங்க சிரிக்கிறதுங்கறதை நகைச்சுவைங்கற வகையில் சேர்க்கறதை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.

இன்னும் சில ரகங்கள் இருக்காங்க. பொதுச்சபையில் எப்போ எதைப் பேசணும்ன்னே ஒரு இங்கிதமில்லாம வார்த்தைகளை வெளியிட்டுடுவாங்க. உதாரணமா, கல்யாணமாகி ஒரு வருசம்தான் ஆகியிருக்கும். அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா.. ஏதாவது விசேஷமுண்டா?..”ன்னு கேப்பாங்க. கணவர் வெளி நாட்ல இருக்க, பொண்ணு அம்மா வீட்டுக்கு ஒரு ஆறுதலுக்காக வந்துருக்கும். அதைத் தெரிஞ்சு வெச்சிருந்தாலும், அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா, ரொம்ப நாளா இங்கேயிருக்கியே?.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா?”ன்னு கேப்பாங்க. "ஆமா,.. பிரச்சினைதான். இன்னும் அம்பது பவுன் நகை கொண்டாந்தாத்தான் வீட்டுக்கு வரலாம்ன்னு எங்க மாமியார் சொல்லிட்டாங்க. எம்மேல இவ்ளோ அக்கறை காமிக்கிற நீங்க அதைப்போட்டு எங்கூர்ல கொண்டு விடுங்களேன்னு அந்தப் பொண்ணு திருப்பிச் சொன்னா இவங்க நிலை என்ன?. இதெல்லாம் தேவையா?.. எங்க கல்யாணத்துக்கப்புறம் முதல் முறையா ஊருக்குப் போனப்ப, ரெண்டு மாசம் லீவு எடுத்துட்டுப் போனோம். ஊருக்குப் போயிச் சுமார் பத்து நாள்தான் ஆகியிருக்கும். ரங்க்ஸைப் பார்த்து ஒரு உறவு, “என்னப்பா?.. தொடர்ந்தாப்ல பத்து நாளா ஊர்ல இருக்கியே, வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டியா..”ன்னு கேட்டது. அடப்பாவிகளா..ன்னு நொந்து நூடுல்ஸாயிட்டோம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” ன்னு இப்படிப்பட்ட ஆட்களுக்காகத்தான் வள்ளுவர் பாடி வெச்சிருக்காரோ என்னவோ!!. ஒண்ணும் புரியலை போங்க :-)

அதே மாதிரி, மறந்தும் மத்தவங்க கிட்ட ஒரு இன்சொல் சொல்லாம எப்பவும் சுடுசொற்களால் அபிஷேகம் செஞ்சுக்கிட்டிருக்கறவங்களும் உண்டுதான். ஒரு சொல்லால பிரிஞ்ச குடும்பங்களும் உண்டு, இணைஞ்ச குடும்பங்களும் உண்டு. இதைத்தானே “ஒரு சொல் வெல்லும்,.. ஒரு சொல் கொல்லும்”ன்னு சொல்லி வெச்சிருக்காங்க. நாலு நல்ல வார்த்தை சொல்றதால மனுஷங்களுக்கு என்ன நட்டம் ஆகிடப் போகுதுன்னே புரிய மாட்டேங்குது.

சொல்லால அவமதிக்கிறது ஒரு வகைன்னா, செயலால அவமதிக்கிறது இன்னொரு வகை. இப்ப,.. நல்ல நாளும் அதுவுமா நீங்க உங்க நண்பர் வீட்டுக்குப் போறீங்கன்னு வெச்சுக்குவோம். அட!.. இதோ,.. காணும் பொங்கல் வருது. அன்னிக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாமேன்னு குடும்பத்தோட போறீங்க. ஒரு ஃப்ரெண்டு வீட்ல உங்க தலையை வாசல்ல கண்டதுமே, அந்த வீட்டுப் பையன், “அப்பா,..நாராயணன் மாமா வந்துருக்கார்”ன்னு சொன்னதும், உங்க ஃப்ரெண்டு ஓடி வந்து,.. ”வாடா மாப்ளே..”ன்னு கையைப் பிடிச்சுட்டு வர்ற உங்க பையனைக் கொஞ்சிட்டு, “வாம்மா..”ன்னு உங்க தங்க்ஸையும் வாய் நிறைய அழைச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறார். வீட்டுக்குள்ள போனதும், அவங்க தங்க்ஸும் கலகலன்னு அன்பா உபசரிக்கிறார். இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்ன்னுட்டு அவங்க தங்க்ஸ் நிமிஷத்துல விருந்துச் சாப்பாட்டைத் தயாரிச்சுடறாங்க. நேரம் போறதே தெரியாம உக்காந்து சந்தோஷமாப் பேசிச் சிரிச்சு பொழுதைக் கழிக்கிறீங்க.

சரி,..வீட்டுக்குக் கிளம்பலாம்ன்னு திரும்பி வந்துட்டிருக்கறப்ப அதே ஏரியாவுல இருக்கற இன்னொரு ஃப்ரெண்டு வீட்டுக்கும் போயி வாழ்த்திட்டு வந்துடலாமேன்னு நினைச்சு அங்கியும் போறீங்க. நீங்க வர்றதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி அந்த வீட்டு வாண்டு வாசல்ல விளையாடிட்டு இருக்குது. உள் தாழ்ப்பாள் போட்டிருக்கற கம்பிக் கதவை நீங்களே திறந்துட்டு உள்ள வர்றதைப் பார்த்தும் கவனிக்காத மாதிரி குடும்பமே டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்ல மூழ்கியிருக்குது. திடீர்ன்னு, அப்பத்தான் உங்களைக் கவனிச்ச மாதிரி உங்க ஃப்ரெண்டு வெளியே வந்து, “வாங்க..”ன்னு ஒப்புக்கு பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டு உள்ளே போயிடறார். நீங்களும் தொடர்ந்து வீட்டுக்குள்ள போறீங்க.

உள்ளே, வீட்ல மொத்தப் பேரும் டிவி நிகழ்ச்சியோட சுவாரஸ்யத்துல மூழ்கியிருக்காங்க. நீங்க இந்த நேரத்துல வந்ததை அவங்க விரும்பலைங்கறதை அவங்க முகமே காட்டிக் கொடுக்குது. பொங்கல் பண்டிகையின் தாத்பரியத்தைப் பத்தி, வட நாட்டு நடிகை, “என்க்கூ பொங்கள் ரோம்ப ப்டிக்கும். ஆக்சுவலி நானு தீவ்லி அன்னிக்கும் பொங்கள் சாப்டும்”ன்னு சிலாகிச்சுப் பேசற தத்துவ முத்துகளைக் கேக்கறது தடங்கல் பட்டுப் போச்சேன்னு வேண்டா வெறுப்பா எழுந்து போயி, கடனேன்னு சீனி போட்ட வெந்நீர்த் தண்ணியை ‘டீ’ங்கற பேர்ல கொண்டாந்து டீபாய்ல கொஞ்சம் சிதறி விழுறபடிக்கு வெச்சுட்டுப் போறாங்க அவங்க தங்க்ஸ். அங்கேயிருக்கற மொத்த நேரமும் நீங்க மட்டும்.. நீங்க மட்டுமே பேசிக்கிட்டிருக்கறீங்க. அதை டிவியில் பாதிக் கவனமும், உங்க கிட்ட பாதிக் கவனமுமா கேட்டுட்டிருக்காரு உங்க நண்பர்.

இடைக்கிடையே, உங்க பேச்சுக் குரல் தனக்கு இடைஞ்சலா இருக்குன்னு சொல்லிக் காட்டுற மாதிரி உச்சுக் கொட்டிக்கிட்டேயிருக்காங்க அந்த வீட்டுப் பெரியவங்க. நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லிக்காம கிளம்புறதுதான்னு, நீங்க கிளம்புறப்ப, ‘சரி’ன்னு ஒத்தை வார்த்தையில் தலையாட்டிட்டு மறுபடியும் டிவியில் மூழ்கிடறாங்க. அதுக்கு மேலும் நீங்க அங்க நிப்பீங்களா என்ன??
  
இப்ப சொல்லுங்க,.. இந்த ரெண்டு வீடுகள்ல எந்த வீட்டுக்கு அடிக்கடிப் போகணும்ன்னு தோணும்?.. உங்க கருத்தை விட்டுத் தள்ளுங்க. உங்க ஃப்ரெண்ட் எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்குன்னு நட்பைப் பெருசா நினைக்கிற "நண்பேண்டா". அதுவே, உங்க குடும்பத்தாரைக் கேட்டுப் பாருங்க. நிச்சயமா முதல்ல போன ஃப்ரெண்டு வீட்டுக்குத்தான் அவங்க ஓட்டுப் போடுவாங்க. வீட்டுக்கு வந்தவங்களை அதுவும் நல்ல நாளும்  அதுவுமா குடும்பத்தோட வந்துருக்கறவங்களை ‘ஏன் வந்தே?’ன்னு சொல்லாம சொல்ற மாதிரி நடந்துக்கறவங்க வீட்டு வாசப்படியை மிதிக்காம இருக்கறதே நல்லது. இதைத்தான் நம்ம முன்னோர்கள், ‘மதியார் தலைவாசல் மிதியாதே’ன்னு சொல்லி வெச்சுட்டுப் போயிருக்காங்க.

கோடி ரூபா கொடுத்தாக் கூட உன்னை மதிக்காதவர் வீட்டுக்குப் போகாதே,  அவங்க அன்பில்லாம கொடுக்கறது அமிர்தமேயானாலும் அதைச் சாப்புடாதேன்னு நம்ம நாவப்பழப் பாட்டி, அதாங்க ஔவையாரே பாடி வைக்கலையா,..
“மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்
உண்ணாமை கோடி பெறும்”

ஏன்னா,.. அவங்களும் அப்படித்தான் ஒருத்தர் வேண்டா வெறுப்பா ஒப்புக்காகக் கொடுக்கறதை சாப்புட மாட்டாங்க. மீறிச் சாப்பிட நேர்ந்தா அவங்க மனநிலை எப்படி இருக்கும்ங்கறதையும் சொல்லி வெச்சிருக்காங்க.
“காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதேவீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ
அன்பிலாள் இட்ட அமுது.”

இது ஔவையாருக்கு மட்டுமல்ல, நமக்கும் பொதுவானதுதான். “‘வா’ன்னு ஒரு வார்த்தை சொல்லலை பார்த்துக்கோ. இனிமே அவன் வீட்டுப் படியை மிதிப்பேனா?.. செத்தாலும் மிதிக்க மாட்டேன்..”ன்னு எத்தனை பேர் வீரசபதம் எடுத்திருப்போம். எத்தனை விஷேச வீடுகள்ல, “சாப்பிடுன்னு ஒரு வார்த்தை சொல்லலை”ன்னுட்டு உறவுகளுக்குள்ளே சண்டைகள் நடக்கறதைப் பார்த்திருப்போம்.

இதெல்லாம் எதுக்குங்க?..தேவையா?. மனுஷனாப் பிறந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் மதிக்கவும், அன்பா நடத்தவும் தெரிஞ்சுக்கணும். எடுத்திருக்கறது ஒரு பிறவி. அடுத்த பிறவின்னு உண்டா இல்லியான்னே மொதல்ல யாருக்கும் தெரியாது. அது அவங்கவங்க தனிப்பட்ட நம்பிக்கைகள். அப்டியே இன்னொரு பிறவி எடுத்தாலும், மறுபடியும் இதே உறவுமுறைகளோடப் பிறப்போம்ன்னோ ஒருத்தரையொருத்தர் சந்திச்சுக்குவோம்ன்னோ நிச்சயமில்லை. அப்றம் எதுக்காக ஒருத்தரையொருத்தர் தேவையில்லாம காயப்படுத்திக்கணும்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”ன்னு வள்ளுவர் தாத்தா பாடி வெச்சுருக்கறதைப் பின்பற்றி நம்மை மதிக்காதவங்களா இருந்தாலும், இந்த நல்ல நாளும் அதுவுமா நம்ம வீட்டுக்கு வந்தா, அவங்களையும் நல்லபடியா நடத்துவோம்.பழையன கழிக்கும் போகிப் பண்டிகையில் பொறாமை, போட்டி மனப்பான்மை, கெட்ட எண்ணங்கள்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டு, புதியன பெருகும் பொங்கல் பண்டிகையில் சந்தோஷங்களை மட்டுமே பொங்க வைப்போம்.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :-)

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..



Wednesday, 11 January 2012

மும்பை-2012 புகைப்படக் கண்காட்சியும் நானும்..

அடுத்த வருஷங்களுக்கான அறிவிப்பு..
ஏதாவது ஒரு பொதுவான தொழில்ல இருக்கற நண்பர்கள் உதவி தேவைப்படும் சமயங்களில், தங்களுக்குள்ளயே ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறது சகஜம்தான். இப்ப நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குவோம். நமக்கு தெரிஞ்ச தொழில் நுட்பங்களை இடுகையிடறது மூலமா, நிச்சயம் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறோம்தானே.

1970-களில் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வெச்சிருந்த சில நண்பர்களும் அப்படித்தான் தங்களுக்குள்ளேயே தொழில் முறையில் உதவி செஞ்சுக்கறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. புகைப்படத் துறையில் நாளுக்கு நாள் எவ்வளவோ புதுப்புது முயற்சிகள் நடக்குது, புகைப்படக் கருவிகள், லென்சுகள்ன்னு சந்தைக்கு தெனமும் எவ்வளவோ விதவிதமா வந்துக்கிட்டே இருக்குது. இது தவிர, எடுத்த படத்தை டெவலப் செய்யறது, ப்ரிண்ட் போடறது, அதுகளை ஆல்பமாக்குறதுன்னு எவ்வளவோ வேலைகள் இருக்குது. (அப்ப டிஜிட்டல் காலம் வரலைங்கறதை நினைவில் கொள்க).


அந்த வேலைகளில் ஏற்படற சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுல ஆரம்பிச்சு, ஆல்பம் தயார் செய்யறதுக்கான தரமான பொருட்கள், பிலிம், எங்கே டெவலப் செய்யக் கொடுத்தா வேலை தரமானதா இருக்கும்கற தகவல் உதவிகள் உட்பட எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்குவாங்க. இப்ப நம்ம ‘பிட்,ஃப்ளிக்கர்’ எல்லாம் ஆத்துதே.. அதே கடமையைத்தான் அப்ப அவங்களும் ஆத்திக் கிட்டிருந்துருக்காங்க.

அப்பத்தான், இதை மாதிரி தகவல் உதவிகள் தேவைப்படற மத்த புகைப்பட ஆர்வலர்களுக்கும் உதவியா இருக்கற மாதிரி நம்ம வட்டத்தை பெரூசாக்கினா என்னான்னு அவங்களுக்கு தோணியிருக்கு. மளமளன்னு ஏற்பாடுகள்ல இறங்கி, 1973-ம் வருஷம் ஜூன் 23-ம் தேதியன்னிக்கு சுமார் இருபத்தஞ்சு நண்பர்கள் கூடி, Photographic Dealers Association(PDA)ன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. காலப்போக்குல வட்டம் 3400 மெம்பர்களைக் கொண்டதா வளர்ந்து தன்னோட பேரை All India Photographic Trade & Industry Association அப்டீன்னு மாத்திக்கிடுச்சு.
கண்காட்சிக்குள் ஒரு கண்காட்சி..
புகைப்படக் கலையை ஊக்குவிக்கறதுக்காகவும், லேட்டஸ்டான டெக்னிக்குகளை மக்கள் கிட்ட பகிர்ந்துக்கவும் என்ன வழின்னு யோசிச்சப்பதான் மக்களெல்லாம் ஒரு கூரையின் கீழ் கூடி எக்ஸிபிஷன் நடத்தினா என்ன?ன்னு தோணியிருக்கு. புகைப்படக் கலை சம்பந்தமா இருக்கற எல்லா விஷயங்களும் ஒரு கூரையின் கீழ் கிடைக்குதுன்னா நல்லதுதானே.. அப்படியே மக்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் கண்காட்சியா வெச்சாங்கன்னா, புது விஷயங்களையும் கத்துக்கிடலாம்ன்னு முடிவெடுத்து 1978-ம் வருஷம் முதற் கொண்டு ‘போட்டோ ஃபேர்’ நடத்த ஆரம்பிச்சுருக்காங்க. அப்பலேர்ந்து இன்னி வரைக்கும் அதே கோரேகாவ் (Goregaon) NSE மைதானத்துல இருக்கற Bombay Exhibition Centre-லதான் இது நடக்குதுங்கறது ஒரு விசேஷச் செய்தி. இங்கே மட்டும் இன்னும் மும்பையாக்காம விட்டு வெச்சிருக்காங்களேன்னு யோசனையோட பார்த்தேன். ஒரு கேட்ல மட்டும் Bombay-ஐ சுரண்டி எடுத்துட்டு, வெறுமே எக்ஸிபிஷன் செண்டரை மட்டும் விட்டு வெச்சிருக்காங்க. மத்த கேட்ல இன்னும் பாம்பேயோட அதிகாரம்தான் நடக்குது.
கண்காட்சி நடக்குற இடத்துல உள்ளே ஸ்டால் போடறவங்களுக்காகவும், அதெல்லாம் சரியாயிருக்கான்னு செக் செய்யறதுக்காக வந்து போற பார்வையாளர்களுக்கும் தனித்தனியா ஆன்லைன்ல ரெஜிஸ்ட்ரேஷன் வசதி செஞ்சுருந்தாங்க. அதெல்லாம் வெளியூர்லேர்ந்து வரவங்களுக்குத்தான். உள்ளூர்க் காரங்க நமக்கெதுக்கு? நாம நேரடியா டீல் செஞ்சுக்குவோம்ன்னுட்டு கிளம்பிட்டோம். நீள நீளமான மேசைகள்ல விண்ணப்ப படிவங்களை வெச்சுக்கிட்டு நமக்காகக் கால் கடுக்க காத்துட்டிருக்காங்க. படிவத்தை நிரப்பிக்கிட்டு, பக்கத்துலயே இருக்கற ஜன்னல்ல நூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுத்ததும், கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து காமிராவைப் பாருங்கன்னு சொல்லி நம்மைப் படம் எடுத்துக்கறாங்க. ஆச்சு.. ஐடி தயார். அதையும் ஐடியை கழுத்துல போட்டுக்கறதுக்காக ரிப்பனில் கோர்த்த கார்டையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துடறாங்க. வாங்கிட்டு நேராப் போயி க்யூவில் நின்னு உள்ளே நுழைஞ்சோம்.

பீரங்கியை.. அதாங்க.. நம்ம கேனானை தவிர மத்தவங்க எல்லாம் ஸ்டால் போட்டுருக்காங்க. ஒலிம்பஸ், ஃப்யூஜியோட நம்ம நிகானும் அங்கே நிக்கார். மொதல்ல ஒவ்வொரு வரிசையா பார்த்துட்டே வருவோம். வேணுங்கறதை மனசுல முடிச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பொருளை கம்பேர் செஞ்சு வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்திருந்தேன். அதான் ஒவ்வொரு பொருளுக்கும் நாலஞ்சு கடைகள் தொறந்து வெச்சுருக்காங்களே..
ஸ்டால்கள்..
முந்தின தடவை போயிருந்தப்ப போட்டோ, வீடியோ காமிராக்கள், லென்சுகள்ன்னு நிறைய கடைகள் இருந்தது. இப்ப ஒரே ஒரு கடையை தவிர மத்த இடங்கள்ல காமிராக்களை காணோம். ஜூம் லென்சுகள் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா இருந்தது. ஆனா sigmaவுல மட்டும்தான் லென்சுகள் வெச்சிருந்தாங்க. நாலஞ்சு கடைகள் பார்த்துட்டு, ஒரு கடையில் வாங்கினாத்தானே நமக்கு திருப்தி. வெறுமே ஒரே ஒரு கடையில் பார்த்துட்டு வாங்கினா நம்ம கொளுகையை விட்டுக் கொடுத்துட்டதா ஆகிடாதோ.. அதனால வெறுமே ட்ரைபாட் மட்டும் வாங்கிக்கிட்டேன். லென்ஸ் வேணும்னா இங்கே இருக்கற வாஷிக்குப் போனா ஆச்சு. இன்னொரு சமயம் வாங்கிக்கலாம். மொதல்ல எனக்கு எந்த மாதிரி லென்ஸ் தேவைங்கறதை மொதல்ல முடிவு செஞ்சுட்டு அப்றம் போகலாம்ன்னு ஒத்திப் போட்டுட்டேன்.

போட்டோ ஸ்டுடியோ வெச்சுருக்கறவங்களுக்கு இந்தத் தடவை நடந்த கண்காட்சி ரொம்பவே உபயோகமா இருந்துருக்கும்.ஃப்ளாஷ் லைட்டுகள், ரிஃப்ளெக்டர்கள், ட்ரைபாடுகள், பின்னணிக்கான துணிகள், அப்றம் வீடியோவுலயும், போட்டோக்கள்லயும் உபயோகப் படுத்தறதுக்கான எக்கச்சக்கமான தீம்களுக்கான சாப்ட்வேர்கள், போட்டோ ஃப்ரேம்கள், வீடியோ எடிட்டிங்குக்கான சாப்ட்வேர்ன்னு கொட்டிக் கிடந்துது. இப்பல்லாம் கல்யாண வீடியோக்கள், போட்டோக்களை 3D தொழில் நுட்பத்துல தயாரிக்கிறதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு. விருப்பமிருக்கறவங்க பேரைப் பதிஞ்சுகிட்டா, எப்படித் தயாரிக்கிறதுன்னு பயிற்சி கொடுப்பாங்க. பயிற்சி எடுத்தப்புறம் அந்த முறையில் வீடியோக்கள், போட்டோக்கள்ன்னு தயார் செஞ்சு அசத்தலாம். அதுக்குன்னு இருக்கும் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு வீடியோக்களைப் பார்த்து எஞ்சாயலாம் :-)

இப்பல்லாம் யாரும் பெயர் பொறிக்கறதில்லையாம்...
இப்பல்லாம் கப், தலையணை, ப்ளேட், பொம்மை இத்யாதிகள்ல தங்களோட போட்டோக்களை பதிஞ்சு வெச்சுக்கற வழக்கம் பெருகிட்டு வருது. முக்கியமா குட்டீஸ் இதை ரொம்பவே விரும்பறாங்க. அதுக்கான கருவிகளும் காணக்கிடைச்சது. அதே மாதிரி சினிமா, டெலிவிஷன் ஷூட்டிங்குகளுக்கு உபயோகப் படுத்தற கிரேன்கள் அங்கங்கே கொக்கு மாதிரி தலையை நீட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்குது. ‘ஸ்டெடிகேம்’ன்னு ஒரு வகை காமிரா. இது கூடுதல் அதிர்வுகள் இல்லாம ஷூட் செய்ய ஏதுவா இருக்குமாம். மத்த காமிராக்கள் மாதிரி இதை ட்ரைபாடிலோ, ட்ராலியிலோ வைக்க தேவையில்லை. காமிராமேன் உடம்புல கட்டிக்கிட்டு நடிகர், நடிகைகள் கூடவே நடந்து போய் நடிப்பைப் படம் பிடிக்க ஏதுவா Garrett Brown என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதை உடம்புல கட்டிக்கிட்டு ரெண்டு பேர் அங்கியும் இங்கியும் நடந்து டெமோ கொடுத்துட்டிருந்தாங்க.
ஸ்டெடியாப் படம் புடிக்கும் ஸ்டெடிகேம்..
கண்காட்சி நடந்த நாட்கள் முழுசும், பிரபல போட்டோகிராபர்கள் வந்து, வொர்க் ஷாப்கள் நடத்துனாங்க. அழகழகான போட்டோக்களெல்லாம் கண்காட்சிக்கு வெச்சிருந்தாங்க. விட்டுட்டு வர மனசேயில்லை. போன தடவை ஃபேஷன் ஷோ சமயத்துல மாடல்கள் ஒவ்வொரு கம்பெனிகளோட காமிராக்களைக் கையில் பிடிச்சுட்டு பூனை நடை நடந்துட்டிருந்தாங்க. இந்தத் தடவை portrait மாடலிங்காம். அங்கங்கே நின்னு போஸ் கொடுத்துட்டிருந்தாங்க. தொழில் முறை போட்டோ கிராபர்கள் சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்கிட்டு சுட்டுத் தள்ளிட்டிருந்தாங்க. என்னை மாதிரி கத்துக்குட்டிகள் ‘ஞே’ன்னு வேடிக்கை பார்த்துட்டு நகர்ந்து போயிட்டோம்.
வளைச்சு வளைச்சு படம் எடுத்தாலும் அசராம போஸ் கொடுத்தவங்க..
காஃபிடோரியா பரவாயில்லாம இருக்கு.இன்னும் நாலு டேபிள் சேர் போட்டுருந்தா, அலைஞ்சு திரிஞ்சு அலுத்த கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துட்டு, வாய்க்கு வேலை கொடுத்துருக்கலாம். இல்லாததால மியூசிக் சேர் விளையாண்ட மாதிரி, உக்காந்துர்ந்தவங்கள்ல யாரு எழுந்திரிச்சுப் போறான்னு கவனிச்சுட்டு இருந்துட்டுக் காலியான நாற்காலியைக் கபால்ன்னு கவ்விட்டு வர வேண்டியதாப் போச்சு.

அடுத்த வருஷத்துக்கான புகைப்படக் கண்காட்சி இந்தியத் தலை நகர்ல நடக்கப் போவுதாம். துண்டு போட்டு இடம் புடிக்க ரெடியா இருந்துக்கோங்க. அதுக்கு அடுத்த வருஷம் அதாவது 2014-ல் மறுபடியும் மும்பை வருதாம்.


Wednesday, 4 January 2012

சென்றதும்.. வந்ததும்..

ஹாய்.. ஹாய்.. ஹாய்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க மக்கள்ஸ்?.. எல்லோரையும் போன வருஷம் 2011-ல் பார்த்தது. அதுக்கப்றம் இப்பத்தான் இங்க வர சந்தர்ப்பம் கிடைச்சது. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயி 2012 வந்துடுச்சுப்பா :-)

எங்க பில்டிங்கிலும் கொண்டாட்டம் நடந்துது..போன வருஷங்கள்ல ஆர்ப்பாட்டமா நடந்ததை நினைச்சுக்கிட்டுப் போனா, ஒண்ணும் சுரத்தில்லை. பசங்க டான்ஸ் பண்றதுக்கு சரியான மேடையோ, இல்லை ஃபோகஸ் லைட்டோ இல்லாம, யாரு பெர்ஃபார்ம் பண்றாங்கன்னு இருட்டுல ஊன்றிப் பார்க்க வேண்டியிருந்தது. அதான் அப்டின்னா, டின்னரும் ஏனோதானோன்னு நடந்துது. டெஸர்ட்டுக்கான குல்பி தொன்னையில் பாயசம் மாதிரி குடிக்கணும் போலிருந்தது :-)
                                                  விருந்துக்காகத் தயாராகும் ரூமாலி ரொட்டி..
புது வருஷத்தை எல்லோரும் சிறப்பா கொண்டாடியிருப்பீங்க. புது வருஷத்துக்கான தீர்மானமெல்லாம் எடுத்துட்டு, ட்ரீட், பிக்னிக்ன்னு அமர்க்களமா எஞ்சாயிட்டு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பிச்சிருப்பீங்க இல்லியா. நம்மை இன்னும் மேம்படுத்திக்கறதுக்காக புத்தாண்டுல இதைச் செய்வேன், அதைச் செய்வேன்ன்னு நிறையத் தீர்மானங்கள் எடுக்கப்படறதும், முதல் வாரத்துல அதை எப்படியாவது நிறைவேத்தியே தீருவேன்னு உறுதியோட இருக்கறதும், அடுத்த வாரத்துலயே அந்த உறுதி தண்ணியில விழுந்த சோப்பாட்டம் கரைஞ்சு காணாமலே போயிடறதும் புதுசா என்ன? :-))

ஆனா, நம்மை இன்னும் மேம்படுத்திக்கணும்ன்னா மொதல்ல இது வரை நாம என்னென்ன செஞ்சுட்டிருந்தோம்ங்கறதையும் மொதல்ல கணக்குல எடுத்துக்கணும். அப்பத்தானே எதுல கோட்டை விட்டிருக்கோம், எதுல இன்னும் கவனம் செலுத்தணும்ன்னு முடிவெடுக்க முடியும். அப்படீன்னு நானும் கடையோட வரவு செலவுகளைப் பார்க்க உக்காந்தேன். ஜூப்பருன்னு சொல்ல முடியாட்டியும் பரவாயில்லாம கடை நடந்துருக்குது. போன வருஷத்தை விட இந்த வருஷம் குறைச்சலாத்தான் இடுகைகள் போட்டிருக்கேன்னாலும் அந்தக் குறையை ஒரே வருஷத்துல வலைச்சர ஆசிரியராவும், தமிழ்மண நட்சத்திரமாவும், நியமிக்கப்பட்ட சந்தோஷம் ஈடு கட்டிருச்சு. அத்தோட வல்லமை இணைய இதழின் துணையாசிரியரா பொறுப்பேத்துக்க அழைப்பு வந்து, அங்கியும் என்னாலான எலக்கியப் பணியை செய்ய முடிஞ்சதும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள்ன்னு அச்சுப் பத்திரிகைகளில் என்னோட படைப்புகள் வெளியானதும் எதிர்பாராத மகிழ்ச்சி :-) 

புதுக்காமிரா வாங்குனப்புறம் பிட்டே பழியாக் கிடந்து, கொஞ்ச நஞ்சம் கத்துக்கிட்டேன். கதை, கவிதை, கட்டுரைகள்ன்னு கலந்தடிச்சாலும் புகைப்படங்களை ப்ளாகில் அதிகம் பகிர்ந்துக்கிட்டதில்லை. எப்பவாவது ஒன்னு ரெண்டு இடுகைகள் போட்டதோட நிறுத்தியிருக்கேன். மிச்சத்தை ஃப்ளிக்கர்லயும், முகப்புத்தகத்துலயும் பகிர்ந்துக்கறதோட நின்னாச்சு இது வரைக்கும். அங்கேயும் "ஓ.கே. உனக்கு ஓரளவு படம் பிடிக்கத் தெரியுது"ன்னு ஒத்துக்கிட்டாங்க. அந்தத் தைரியத்துல இனிமே, அதுகளையெல்லாம் ப்ளாகிலும் போடலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு. ஐடியாவை நிறைவேத்தணும்ன்னா மொதல்ல காமிராவை இன்னும் நல்லா இயக்க கத்துக்கணும், அதோட முழு பயன்பாடுகளையும் உபயோகப் படுத்திப் பார்க்கணும்.  அப்படிக் கத்துக்கிட்டப்புறம் அழகழகா படங்கள் எடுக்கணும்ன்னு.. நினைக்கிறேன்.. நினைக்கிறேன்..  நினைச்சுட்டே இருக்கிறேன் :-)

புகைப்படம்ன்னதும்தான் ஞாபகம் வருது. நாளையிலேர்ந்து வர்ற ஞாயிற்றுக்கிழமை வரைக்கும், மும்பையின் கோரேகாவ்(Goregaon) பகுதியில் இருக்கற Bombay  Exhibition Centre-ல இந்த வருஷத்துக்கான PhotoFair  நடக்கப் போகுது. புகைப்படம் சம்பந்தமா ஆகாயத்தின் கீழே இருக்கற அத்தனை விஷயங்களும் ஒரு கூரையின் கீழே கிடைக்கும். கேமராக்கள், லென்ஸுகள், ட்ரைபாடுகள், அப்றம் தொழில்முறை வீடியோ, போட்டோகிராபர்களுக்கு உபயோகப்படற தீம்களுக்கான சிடிக்கள், ஸ்டூடியோக்கள்ல பின்புலத்துக்காக உபயோகப்படுத்தற அழகுத்துணிகள்ன்னு எக்கச்சக்கமா கொட்டிக் கிடக்கும். நாங்க ரெண்டு வருஷம் முந்தி போயிருந்தப்ப நுழைவுக்கட்டணமா 100 ரூபாய் கட்டணம் கட்டி, ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு கொடுத்ததும், கழுத்துல மாட்டிக்கன்னு ஒரு ஐடி கார்டு,   ஒரு பேனா, குறிப்புகள் எழுதிக்க ஒரு சின்ன நோட்பேட், எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொடுத்தாங்க. இந்த ஃபேர்ல கலந்துக்க, ஆன்லைன்லயும் விண்ணப்பம் கொடுக்கலாம். அங்கே போய் வரிசையில் நின்னு நேரத்தை வீணடிக்க வேணாம். இந்த தளத்துலயே எல்லா விவரங்களும் சொல்லியிருக்காங்க. விசிட்டர்களுக்குத் தனியா, கண்காட்சியில ஸ்டால் வைக்க நினைக்கிறவங்களுக்குத் தனியான்னு ரெண்டு விண்ணப்ப ஜன்னல்கள் இருக்குது.
மொபைல்ல க்ளிக்குனது.. :-)
தமிழ்மணம் சார்பா இந்த வருஷம், இனிமேலாவது நல்லா, நிறைய எழுதுன்னு சொல்லி ஊக்கப் பரிசா ராங்க் கொடுத்துருக்காங்க. 2011-ல் தமிழ்மணத்தோட முன்னணி வலைப்பதிவுகளா 100 பதிவுகளைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு 49-ஆவது ரேங்க் கிடைச்சுருக்கு. இது உங்க அனைவரோட ஆதரவும் இல்லாம சாத்தியமே இல்லை. அதே சமயம் பொறுப்ஸ் கூடக்கூட கொஞ்சம் வெலவெலன்னு நடுக்கமா இருக்கு. வேற ஒண்ணுமில்லை. உருப்படியா நாலு இடுகைகள் எழுதி, சமுதாயத்தை முன்னேத்துற பணியைச் சரியா நிறைவேத்தணுமேங்கற நினைப்ஸ்தான் :-)). இந்த நினைப்ஸ்தான் பொழைப்ஸைக் கெடுக்குது :-). 

பெரும்பாலான சமயங்கள்ல, அடடே!!..அதைப்பத்தி எழுதலாமே.. அடடா..இதைப்பத்தி எழுதியிருக்கலாமேன்னு தோணினாலும்,
ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.
அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது..  ன்னு ஆகிடுது. அதுவும் கரெக்டா பயணத்துலயோ, இல்லை வெளியிடங்கள்ல எங்கியாச்சும் சுத்திக்கிட்டிருக்கும்போதோ ஒரு அருமையான கரு கிடைச்சு, 'அடடா' ன்னு சொல்ற அளவுக்கு மனசுலயே ஒரு இடுகையை தயாரிச்சு வெச்சுருப்போம்.அப்றமா ஞாபகப் படுத்தி எழுதிக்கலாம்ன்னு தள்ளிப் போடப்பட்டு அதெல்லாம் அப்டியே விட்டுப் போயிடுது. இனிமேலாவது அப்டி விட்டுப் போன விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமா எழுதத்தான் வேணும்.

பழசையெல்லாம் அசை போடறதுங்கறது ஒரு தனி சுகம். சும்மா நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்க மட்டுமில்லாம, கடந்த காலத்துல நாம செஞ்ச தவறுகள்லேர்ந்து பாடம் கத்துக்கவும், நம்மைத் திருத்திக்கிடவும் அதானே ஒரு வாசலா இருக்குது. தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தற மாதிரி மனசையும் அடிக்கடி சுத்தம் செஞ்சுக்கணும். இல்லைன்னா, எதிர்மறை எண்ணங்கள்ங்கற கிருமிகள் பெருகி ஒருநாள் நம்மையே அழிச்சுடும்.அதை விடுத்து நேர்மறை எண்ணங்களை கூடிய மட்டும் வளர்த்துக்கிட்டா, தினம் தினம் கொண்டாட்டம்தான்.


Friday, 30 December 2011

கொண்டாட்டம் ஆரம்பம்..


உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது.  இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.
இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.
அல்வா கொடுக்க தேவையானவை:
கேரட்-1 கிலோ
சர்க்கரை-400 கிராம்
இனிப்பில்லாத கோவா-100 கிராம்
இது கிடைக்கல்லைன்னா கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக்கலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைச்சுக்கோங்க.
பால்- கால் லிட்டர்
ஏலக்காய்-2 பொடித்தது
எப்படி தயாரிக்கிறது:
கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.(சோப்பு போட்டேத்தான் கழுவணுமா, வாஷிங் மெஷின்ல வாஷ் செஞ்சா ஆகாதா,.. இல்லை ஆலாவுல ஊற வெச்சு கழுவணுமா.. டவுட்டு)
இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும். (மொதல்ல அடுப்பை பற்ற வையுங்கப்பா..)
லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும். (அடுப்பு எரிஞ்சா அதுல இருக்கற வாணலியும் எரிஞ்சுடாதா, அடுப்பை எதுல வெச்சு எரிக்கணும்ன்னு சொல்லவேயில்லை.. டவுட்டு)
(பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும். 
இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.(பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.. டவுட்டு)
விரும்பினா வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்த்து அலங்கரிச்சுக்கோங்க. (பாஸ்..ட்ரை ஃப்ரூட் ஃபேஷியலுக்கப்றம், அதை, ஐ-மேக்கப்,லிப்ஸ்டிக், காம்பேக்ட்டெல்லாம் போட்டு அலங்கரிக்கலாமா.. டவுட்டு)
டிஸ்கி1: வீட்ல இருக்குங்கறதுக்காக இஷ்டத்துக்கு கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்கிடாம, அல்வாவாக சாப்பிடுங்க. வடமாநிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.
புது வருசத்துக்காகவும், 
என்னோட ப்ளாக் ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாடவும், 
புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள் காரணமா அடிக்கடி இடுகை போட முடியாட்டியும், எப்பவாவது போடும் இடுகைகளுக்கு கடைக்கு வந்து உற்சாகமூட்டிய உங்க பொறுமைக்கான பரிசாகவும் அல்வா கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் நன்றிகளும் சொல்லிக்கிறேன். 
எல்லோரும் கேக் எடுத்துக்கிட்டு கொண்டாந்துருக்கற கிஃப்டை மறக்காம கொடுத்துடுங்க :-)

Saturday, 17 December 2011

கலர்ஃபுல் மாசம் கொண்டு வரப் போகுது பரிசு..


மார்கழி பொறந்தாச்சு..தெனமும் வாசல்ல புள்ளியை வெச்சு ரெண்டு கம்பியை இழுத்துட்டு நானும் கோலம் போட்டேன்னு பெயர் பண்ணிட்டு வர்றவங்க கூட இந்த மாசம் முழுசும் தெனமும் என்னென்ன புதுப்புது வகையில கோலம் போடலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க.

கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.. கோலங்கள் சீரியலைச் சொல்லலை. நிஜமான கோலத்தைச் சொல்றேன். இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பகுதியிலயும் அவங்கவங்க வழக்கப்படிக் கோலம் போடறாங்க. தமிழ் நாடுன்னா புள்ளி வெச்ச, வைக்காத இழைக்கோலங்கள், கேரளான்னா அத்தப்பூக்கோலம் அப்றம் வட மாநிலங்கள்ன்னா ரங்கோலின்னு ஒவ்வொரு பகுதியோட பேரைச் சொல்றப்பவும் அந்தப் பகுதிக்குண்டான கோலங்களும் சேர்ந்தேதானே ஞாபகம் வருது.
அத்தப்பூக்களம்ன்னு சொல்லணுமா என்ன :-)
கேரளாவோட பூக்கோலத்துக்கு வடக்கே ரொம்பவே வரவேற்பு. அலுவலகங்கள்லயோ அல்லது பள்ளிக் கூடங்கள்லயோ ஒரு விழா நடந்தா பூக்கோலம் போட்டு அசத்தறாங்க. ரங்க்ஸோட ஆப்பீஸ்ல எப்ப புதுவருசக் கொண்டாட்டம் நடந்தாலும், அத்தப்பூக்கோலம் போட்டு நடுவுல நம்மூட்டு வெளக்கை ஏத்தி வெச்சு முக்கியமான அதிகாரிகள் அஞ்சு பேரை வெளக்கேத்தி வைக்கச் சொல்றது வழக்கம். ஒருக்கா ஆரம்பிச்சு வெச்சது இங்க உள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி அப்றம் வருசா வருசம் மத்த பிரிவுகள்ல இருக்கறவங்களும் அதே மாதிரி காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம தென்னிந்திய இழைக்கோலங்களை இங்கே இருக்கறவங்க ரொம்பவே அதிசயிச்சுப் பார்ப்பாங்க. அதெப்படி விரல் நடுங்காம அவ்ளோ தெளிவா கோடுகள் வருதுன்னு அவங்களுக்கு அதிசயம். இங்கேயும் புள்ளிக் கோலங்கள் போடறதுண்டு. என்ன செய்வாங்கன்னா, வேணுங்கற அளவுல சதுரமா ப்ரவுன் பேப்பர் ஒண்ணை வெட்டியெடுத்துக்குவாங்க. அதுல ஸ்கேல் வெச்சு அளவெடுத்து புள்ளிகளை வைப்பாங்க. அப்றம் அந்தப் புள்ளிகள் மேல துளையிட்டுக்குவாங்க. ச்சார்ட் ரெடி. செம்மண் பூசிக் காய விட்டு தயாரா வெச்சிருக்கற இடத்துல இந்தப் பேப்பரை வெச்சுட்டு அந்தத் துளைகள்ல கோலமாவை ஒவ்வொரு சிட்டிகையா வைப்பாங்க. அம்புட்டுத்தேன். அப்றம் பேப்பரை எடுத்துட்டு ரெண்டு ரெண்டு புள்ளியா இணைச்சு கோலம் போடுவாங்க. இதுக்காகவே தீவாளி சமயங்கள்ல பேப்பர்+கோலமாவு+கலர்ப்பொடி பாக்கெட்டுகள் அடங்கிய ‘கோலம் கிட்’ ஒண்ணு மார்க்கெட்டுகள்ல கிடைக்கும்.

நம்மூர்ல விசேஷங்களுக்கு பச்சரிசி மாவால கோலம் போடுறது சம்பிரதாயம். வாசல்ல போடற கோலங்கள் வீட்டுக்குள்ள துர்சக்திகள் நுழையாதபடிக்கு காவல் காக்குதுங்கறது ஐதீகம். வீட்டுக்குள்ள நுழையப் பார்க்கற சக்திகள் அந்த இழைகள்ல மாட்டிக்குமோ என்னவோ.. ஆனா, அமாவாசையன்னிக்கு மட்டும் கோலம் போடாம விட்டு வைக்கிறது வழக்கமாம். ஏன்னா பித்ருக்கள் வீட்டுக்குள்ள வரணுமேன்னு சொல்லுவாங்க. கேள்விப் பட்டது ரைட்டா இல்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அதேமாதிரி நல்ல விசேஷங்கள் நடக்கறப்ப போடறதுக்குன்னு தனி வகைகளும் ‘அல்ல’ விஷயங்கள் நடக்கறப்ப இன்னொரு வகைகளும் இருக்காம். நல்ல விசேஷங்கள் நடந்தா கண்டிப்பா ரெட்டை இழைக்கோலம்தான் போடறது வழக்கம்.
சன்ஸ்கார் பாரதிக்கோலம்
நம்மூர் இழைக்கோலங்கள் அப்றம் அத்தப்பூக்கோலம் மாதிரியே இங்கே ‘சன்ஸ்கார் பாரதி’ங்கற கோல வகை ரொம்பவே பிரசித்தம்.இதுவும் கிட்டத்தட்ட நம்மூர் இழைக்கோலம்தான். இந்தக் கோலம் போடப் புறப்படறதே ஒரு போருக்கு புறப்படற மாதிரி இருக்கும். கோலமாவு அடங்கிய பொட்டலங்கள், நாலஞ்சு அளவுகள்ல சாய் வடிகட்டிகள், ரெண்டு மூணு சல்லடைகள், மண்ணெண்ணெய் ஊத்துற புனல் அப்றம் நீளமான நூல்ல கட்டிய சாக்பீஸ்ன்னு ஏராளமான உருப்படிகளோட கிளம்புவாங்க.

நூல்ல கட்டிய சாக்பீஸை எடுத்துக்கிட்டு கோலம் போடத் தேர்ந்தெடுத்த இடத்துல நூலோட நுனியை தரையோட அழுத்திப் பிடிச்சுக்குவாங்க. இன்னொருத்தர் அடுத்த நுனியில் இருக்கற சாக்பீஸை வெச்சு உக்காந்திருக்கறவரைச் சுத்தி பிரதட்சிணம் வந்து அளவா அழகா ஒரு வட்டம் போட்டுக்குவாங்க. இது நம்ம கணக்குப் பாடத்துல உபயோகப்படுத்தற காம்பஸை அடிப்படையாக் கொண்டதுன்னு கொள்க. இதான் அடிப்படை.இனிமே டிசைனைப் பொறுத்து அங்கங்க அரை வட்டங்களும் வளையங்களும் பூக்களோட டிசைன்களும் வரையப்படும். அப்றம் ஒவ்வொரு பகுதியா கலர்ப்பொடி கொண்டு நிரப்புவாங்க. பெரிய பகுதிகளுக்கு சல்லடையும் சின்ன பகுதிகளுக்கு டீ வடிகட்டிகளும் உபயோகப் படுத்துவாங்க. கலர்ப்பொடியை நிரப்பி லேசா தட்டிக்கிட்டே இருந்தா அழகா எல்லா இடங்கள்லயும் ஒண்ணு போல கலர் நிரம்பும்.இப்டி மொதல்ல கலரை நிரப்பினப்புறம் வெள்ளைக் கோலமாவை புனல்ல எடுத்துக்கிட்டு அங்கங்க இழைகளால அலங்கரிப்பாங்க.

ரொம்பவே  எக்ஸ்பர்ட்டுகளுக்கு புனல் தேவைப்படறதில்லை. அப்றம் எப்படிக் கோலம் போடுவாங்க?.. சொல்றேன். சின்னக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டறப்ப அஞ்சு விரல்களையும் எப்படிக் குவிச்சு வெச்சிருப்பீங்க?.. ஆங்.. அதேதான். கை நிறைய அள்ளிய கோலமாவை குவிச்சு வெச்ச விரலிடுக்கு வழியா வழிய விடுங்க.. ஜூப்பர். இப்ப நீங்களும் சன்ஸ்கார் பாரதி எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க.
அரிசியில் கலர் கொடுத்துப் போட்ட கோலம்

உப்புடன் கலர் கலந்து போட்ட கோலம்

தண்ணிக்குள்ள கோலம்

ஹை.. நம்மூருக் கோலம்
இது போக நீர்மேல் கோலம், தண்ணிக்குள்ள கோலம், காய்கறிக் கோலம், உப்பு, அரிசி, தானியங்களால போட்ட கோலம்ன்னு வகை வகையா இருக்கு. ஆயிரம்தான் இருந்தாலும் பசுஞ்சாணியைக் கரைச்சுத் தெளிச்சு, தூசு தும்பு போகப் பெருக்கிய மொசைக் மாதிரியான மண்தரையில் வெள்ளை வெளேர்னு மினுங்கற கோலத்துக்கு ஈடு இணையாகுமா?.. வெள்ளிச் சரிகையிட்ட பச்சைப் பட்டுப்புடவை மாதிரி அட.. அட.. அட..என்னவொரு அழகு. விடிகாலைல எழுந்து கோலம் போடுறதுங்கறது உடலுக்கும் மூளைக்கும் நல்லதொரு பயிற்சியாச்சே. கவனமா எண்ணி புள்ளி வெச்சு அதெல்லாத்தையும் இணைச்சு அழகான கோலமாக்குறதுங்கறது லேசுப்பட்ட காரியமா என்ன!!

கலர்ப்பொடிகள் அப்பல்லாம் தீவாளி, பொங்கல் சமயங்கள்ல மட்டுந்தான் யாவாரத்துக்கு வரும். அது கிடைக்காத சமயங்கள்ல எல்லாம் குங்குமம், மஞ்சப்பொடி, அப்றம் பச்சைக் கலருக்கு இலைகளை அரைச்செடுத்த சாறு, நீலக்கலருக்கு சொட்டு நீலம் இல்லைன்னா பேனாவுக்கு ஊத்தற இங்க்ன்னு வெரைட்டி காட்டுவோம்..ஈரமான கோலமாவுல இந்தக் கலர்கள் ஈஸியா கலந்துடும். அப்றம் ஒரு வாணலியில இந்த மாவைப் போட்டு லேசா வறுத்துக்கிட்டே இருந்தா நல்லாக் காய்ஞ்சு அழகா கலந்து வந்துடும். வாணலியை வீணாக்கியதுக்காக வாங்கிய திட்டெல்லாம் கோலத்தோட அழகுக்காக வாங்கிய பாராட்டுகள்ல மறந்தே போயிடும்.

இப்பல்லாம் கோலம் போடுற கலை கொஞ்சம் கொஞ்சமா அருகிக்கிட்டே வருது. ஒரு காலத்துல அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளும் கோலம் போட ஆசையா கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் எதுக்கும் டைம் இல்லைன்னு ஓடிடுதுங்க.ஏதோ பண்டிகை சமயங்கள்லயாவது கோலம் போட ஹெல்ப் செய்யுதுங்களேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதுவுமில்லாம இருக்கற அவசர யுகத்துல காலைலயும் சாயந்திரமும் வாசத்தெளிச்சு கோலம்போட யாருக்கு நேரமிருக்கு?.. அதனால ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடறாங்க. அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்புன்னா கேக்கவே வேணாம். நம்மூட்டு ஸ்டிக்கர்ல பாதியை பக்கத்தூட்டு ஸ்டிக்கர் மறைச்சுட்டு இருக்கும்.

இவ்ளோ அழகான கலையை அழிய விடலாமா?.. அதனாலதான் உதயம் இன் மற்றும் தமிழ் நண்பர்கள் இணைய தளங்கள் சேர்ந்து ஒரு போட்டியை அறிவிச்சுருக்காங்க. உங்களுக்காக வல்லமையில் வெளியான அறிவிப்பு இதோ. உதயத்தோட தளத்துலயும் அறிவிச்சுருக்காங்க. விதிமுறைகளும் அங்கேயே இருக்குது. ஜனவரி 10 போட்டிக்கான கோலங்களை அனுப்பறதுக்கான  கடைசி நாளு. கலர்ஃபுல்லானதொரு போட்டியில் கலந்துக்கிட்டு கலக்குங்க.. பரிசெல்லாமும் கூட அறிவிச்சுருக்காங்க. ஜமாய்ங்க.

வெற்றி பெற வாழ்த்துகள்.

டிஸ்கி 1: படங்களெல்லாம் இணையத்தில் சுட்டவை.

டிஸ்கி2: வல்லமையில் பொங்கல் மலருக்காக கட்டுரைகள், கதைகள், கவிதைகள், புகைப்படங்கள், உங்க வீட்டுக் குட்டீஸின் கைவண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன என்பதை துணையாசிரியர்ங்கற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவிச்சுக்கறேன். விருப்பமுள்ளவங்க vallamaieditor@gmail.com  என்ற ஈ மெயில் முகவரிக்கு அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் வல்லமையின் சிறப்பிதழில் வெளியாகும். வெளியானப்புறம் உங்க ப்ளாகிலும் போட்டுக்கலாம்ன்னு சொல்லத் தேவையில்லை இல்லையா :-)



Wednesday, 7 December 2011

ஆத்தா!!! நான் ஹாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானது)

யம்மா.. நான் மேற்படிப்புக்கு வெளியூருக்குப் போய்த் தங்கிப் படிக்க வேண்டியிருந்தா என்னை அனுப்புவீங்களா?..”இப்படித்தான் ஆரம்பிக்கும் என் பெண்ணின் கலாய்ப்பு நேரம்.

அதுக்கென்னா.. தாராளமா போயிப் படிச்சுட்டு வாயேன். இதுக்கெல்லாம் அனுப்பாம இருப்பாங்களா என்ன?.. படிப்பு விஷயத்துல விளையாடக் கூடாது தெரியுமா?..” நான்  விட்டுக் கொடுக்காம பதிலளிப்பேன்.

அப்போ என்னைத் தேடவே மாட்டீங்களா?.. என் ஞாபகமே வராதா உங்களுக்கு. ச்சே!!.. ஒரு பேச்சுக்காவது ‘உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது, தொலைதூரத்துக்கெல்லாம் உன்னை அனுப்ப மாட்டேன்’னு சொல்லுறாங்களா பாரு.”ன்னு செல்லமா அலுத்துக்குவா.

“அதெப்படிம்மா.. படிப்பு விஷயமாச்சே.. வெளியூரென்ன? வெளி நாடென்ன? அனுப்ப வேண்டி வந்தா அனுப்பித்தானே ஆகணும்.” நானும் சளைக்காம சீண்டுவேன்.

“உன் தொல்லை இல்லாம வீடு அமைதியா இருக்குமில்ல..”என் சீமந்த புத்திரன் தன் பங்குக்கு எரியுற தீயில் ரெண்டு ஸ்பூன் நெய்யை வார்ப்பார்.

“பையா,.. உன்னை யாரு கேட்டா??.. நீ சும்மாரு..”ன்னு அவரை ‘அன்பா’ அடக்கிட்டு, “நல்லதுக்கு காலமே இல்லை.. யாராவது ஒருத்தராவது வேண்டாம், நீ போகாதேன்னு சொல்றாங்களா?. அப்பா.. நீங்க சொல்லுங்க”ன்னு மேடம் ரங்க்ஸைப் பிடிச்சுக்குவா.

“நானா?.. எனக்கும் உன்னைத் தேடாதே.. ஏன்னா, தேடுச்சுன்னா அடுத்த நிமிஷம் நீ இருக்கற ஊருல வந்து நின்னுடுவேன்ல..”ன்னு சொல்லிட்டு “நாங்க உன்னை பார்க்காம இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொதல்ல உனக்கு வீட்டு ஞாபகம் வராம இருக்குமான்னு சொல்லு.”ன்னு மடக்கவும் “ஹி..ஹி..ஹி..”ன்னு தோல்வியை ஏத்துக்குவா. “சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும், காசு குடு”ன்னு மறுநாளும் இந்த எபிஸோட் தொடங்கும்.

அப்டி ஒர் நாள்லதான் இப்படி வெளியூர்ல தங்கிப் படிக்கிறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது. தனியா தங்கிப் படிக்கிறதோட நன்மைகளை எடுத்துச் சொன்னேன். என் தோழியின் பெண்ணுக்கு வீட்லேருந்து காலேஜுக்கு போக வர பயணத்துலயே நேரம் சரியா இருந்துச்சு. படிக்க நேரமில்லை, நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வர வேண்டிய நிலைமை, அதனால வீட்ல உள்ளவங்களுக்கு டென்ஷன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள். அதனால, காலேஜ் பக்கத்துலயே தங்கிப் படிக்கலாமான்னு ஒரு யோசனை. ஏனோ தெரியலை, ஹாஸ்டலை அந்தப் பொண்ணு உறுதியா மறுத்துட்டது.

அப்டீன்னா, ரெண்டு மூணு பொண்ணுங்க தனியா வீடு எடுத்து தங்கிப் படிக்கலாமேன்னும் ஒரு யோசனை அவங்களுக்கு. மும்பையில் இது இப்போ ஜகஜமாகிட்டு வருது. ஆளுக்கொரு சாமான் செட்டைக் கொண்டாந்துரலாம். வாடகை, அட்வான்ஸ், மற்ற செலவுகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கறதுனால கையையும் கடிக்காது. இங்கெல்லாம் அபார்ட்மெண்ட் கலாச்சாரம்தான். ஒவ்வொரு பில்டிங்கிலும் செக்யூரிட்டி அனுமதியில்லாம யாரும் உள்ளே நுழைஞ்சுட முடியாது.. அதனால பாதுகாப்புக்கும் கவலையில்லைன்னு முடிவெடுத்தாங்க. கடைசியில கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டுப் பார்த்துட்டு, “வேணாம், நான் வீட்லேர்ந்தே போயிக்கறேன்”ன்னு அந்தப் பொண்ணு டமால்ன்னு பல்டியடிச்சுட்டுது.

ஹாஸ்டலோ, தனிக்குடித்தனமோ ரெண்டுலயும் நல்லது கெட்டது ரெண்டும் இருக்குது. நல்லதைச் சொல்லிக் கொடுத்துட்டா அப்றம் கெட்டதை அவங்களே உதறித் தள்ளிட மாட்டாங்களா என்ன?..

பசங்களுக்காவது பரவால்லை. பொண்ணுங்க அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டே ஆயுசுக்கும் சுத்த முடியாது. கல்யாணமோ, மேற்படிப்போ இல்லை வேலை வாய்ப்போ வந்து பிரிக்கத்தான் போகுது. முதலாவது காரணத்துனால பிரிவு ஏற்படறப்ப, நினைச்சப்ப எல்லாம் அம்மா வீட்டுக்கு வர்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை. அந்தப் பிரிவுக்கு இது ஒரு வெள்ளோட்டமா இருக்கட்டுமே. கணவனும் மனைவியும் மட்டுமல்ல ரூம்மேட்ஸோ, நல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்.

அப்டி அமையலைன்னாலும், ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு வந்துட்டுப் போறப்ப அம்மா கொடுத்து விடற ஊறுகாய், முறுக்கு, அதிரசம், இன்ன பிற தீனிகளை அவங்க கூட பகிர்ந்துக்கிட்டு அவங்க கூட நல்ல நட்பை ஏற்படுத்திக்கிட்டா, அவங்களே உடன் பிறவா உடன்பிறப்பாகி சிலசமயம் வீட்டு ஏக்கத்தைக் குறைப்பாங்க J. தன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமயும் அதே சமயம் மத்தவங்களை மதிச்சும் நடக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாச்சே. இப்படி கலந்து பழகற குணமிருக்கறவங்க கண்டிப்பா புகுந்த வீட்டிலோ இல்லை அலுவலகத்துலயோ தன்னைச் சுலபமாப் பொருத்திக்கிடுவாங்க.

தனி வீடுன்னா பிரச்சினையில்லை. ஆனா, ஹாஸ்டல்ன்னாலே கலாட்டாவுக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் காலேஜ் திறந்த புதுசுல ராகிங்கும் சேர்ந்துக்கும். இந்த மாதிரியான சமயங்கள்ல பயந்து ஓடக் கூடாது. இப்பல்லாம் ராகிங் செஞ்சா கடுமையான தண்டனையும் உண்டு. அதனால சீனியர்களே கூட பெயர் கேக்கறது, தரையில் நீச்சடிக்கச் சொல்றதுன்னு சிம்பிளா இறங்கிட்டாங்க. இதெல்லாம் புதுசா வர்றவங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறதுக்காக நடத்தறது. சில கல்லூரிகள்ல ஜூனியர்களை உற்சாகப் படுத்த சீனியர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடத்தறாங்களாம்.

இப்படி ஆபத்தில்லாத ராகிங்கா இருந்தா மறுபேச்சு பேசாம அவங்க சொல்றதைச் செய்யறது நல்லது. அப்படியில்லாம உடலுக்கோ உள்ளத்துக்கோ கஷ்டம் கொடுக்கற ராகிங்கா இருந்தா தயங்காம தைரியமா அவங்க முகத்துக்கு நேரயே, ”இது தப்பு”ன்னு எச்சரிக்கை செய்யறது நல்லது. அப்டியும் கேக்கலைன்னா வார்டன் கவனத்துக்கு கொண்டு போறது நலம். தனக்கு ஒரு கெடுதல் நடக்குதுன்னா அதைத் தட்டிக் கேக்கற தைரியம் இதனால வளர்க்கப்படுது இல்லியா. இதுமாதிரி சின்னச்சின்ன விஷயங்களைத் தானே சமாளிக்கிறதால தன்னம்பிக்கையும் வளருதே. பூச்சி புழுவே எதிர்த்து நிக்கிறப்ப, ஆறறிவு மனுஷங்க நாம ஏன் எதுக்கெடுத்தாலும் பயந்து சாகணும்??

ஹாஸ்டலோ தனிவீடோ, தன்னோட உடைமைகளைத் தானே பத்திரமா பார்த்துக்கறது நல்லது. அதுக்காக என்னவோ புகுந்த வீட்டுக்குப் பொண்ணை அனுப்பற மாதிரி நகைகளை மாட்டி அனுப்பாதீங்க. இப்பல்லாம் மாணவிகள் மத்தியில் ‘நோ கோல்ட்’தான் ஃபேஷன். அதான் அவங்களுக்குப் பாதுகாப்பும் கூட. முடிஞ்சா அவரவருக்குன்னு தனியா குட்டி பீரோவோ, பூட்டிக்கிற வசதி இருக்கற ஷெல்போ வெச்சுக்கறது நல்லது. விலை கூடின பொருட்களையோ, பணத்தையோ இல்லை துணிமணிகளையோ பத்திரமா வெச்சுக்கலாம். கண்ட இடத்துல இறைச்சுட்டு, அப்றம் அதைக் காணோம் இதைக் காணோம்ன்னு தேடற வேலை மிச்சம். விலை கூடின பொருட்கள் காணாமப் போயிருந்தா நம்ம ரூம்மேட்ஸை தேவையில்லாம சந்தேகப்பட்டு உறவே பாழாகும்.

பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கவும், பட்ஜெட் போட்டுச் செலவு செய்யவும் சொல்லிக் கொடுக்கறதும் அவசியம். நாம அனுப்பற பணத்துக்கு கரெக்டா கணக்கு வெச்சிருக்காங்களான்னு செக் செய்யறதும் முக்கியம். அவங்க தங்கியிருக்கும் ஊர்லயே ஒரு நம்பகமான வங்கியில கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்து, அதை அவங்களையே பராமரிக்கவும் சொல்லணும். படிப்பு, சாப்பாடு மாதிரியான முக்கியச் செலவுகளுக்கு முதலிடம் கொடுக்கணும். முடிஞ்சா அதுல அவசரத் தேவைகளுக்குன்னு கொஞ்சம் சேமிச்சும் வைக்கச் சொல்லிக் கொடுக்கலாம். திடீர்ன்னு ஏதாவது படிப்புச் செலவோ, இல்லை உடம்பு சரியில்லாம டாக்டர் கிட்ட போகவோ வேண்டி வந்தா, வீட்லேருந்து பணம் வர்ற வரைக்கும் சேமிப்பு கைகொடுக்கும்.

காலேஜ்ல, ஹாஸ்டல்லன்னு பொருளாதாரத்துல ஏற்றத் தாழ்வுள்ள பசங்க ஒண்ணா படிக்கிறப்ப, சிலபேர் தாம்தூம்ன்னு செலவு செய்வாங்க. புதுச்செருப்பு வாங்குனதுக்கெல்லாம் ட்ரீட் கொடுப்பாங்க. அதுமாதிரியெல்லாம் எல்லோராலயும் இருக்க முடியாதே. சிலருக்கு பிடிக்கவும் பிடிக்காது. அதுவும் ரொம்ப நெருங்கின நண்பர்கள் ட்ரீட் கேட்டு நெருக்கடி கொடுக்கற சமயங்கள்ல தன்னோட நிலையை உடைச்சுச் சொல்லிடறது உத்தமம்.

வீட்ல அனுப்புன பணமும் பத்தாம, அதிகப்படி செலவுக்காக வீட்ல பொய் சொல்லிப் பணம் கேட்டு வாங்கி வீண் பந்தாவுக்காகச் செலவு செஞ்சு அப்றம் மாட்டிக்கிட்டு முழிக்கிற அவஸ்தை தேவையா என்ன?.. இதனால பெற்றோருக்கும் பசங்க மேல இருக்கற நம்பிக்கை குறைஞ்சு போகுதே. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் மெஸ் ஃபீஸ்ன்னு ஒருதடவையும், சாப்பாட்டுக் கட்டணம்ன்னு இன்னொரு தடவையும் வாங்கிக் கிட்டிருந்தார். படிப்பறிவில்லாத பெத்தவங்களை ரொம்ப நாளுக்கு ஏமாத்த முடியலை. மாட்டிக் கிட்டப்புறம் செம அர்ச்சனை நடந்தது

தன்னோட இருப்பிடத்தைச் சுத்தமா வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். அது உலகத்துக்கும் நல்லது. காலேஜ் விட்டு வந்ததும் துணிங்களை ஒரு மூலையிலும், புத்தகங்களை இன்னொரு மூலையிலும் விட்டெறியறது வீட்டுல வேண்ணா நல்லாருக்கும். எடுத்து வைக்க ‘அம்மா’ங்கற ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும். ஆனா, தனியா இருக்கறப்ப மூக்கால அழுதுக் கிட்டாவது அதை நாமதான் செஞ்சுக்கணும்ன்னு முதல்லயே அவங்க புரிஞ்சுக்கணும்.

ரூம் மேட்ஸ் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செஞ்சுக்கிட்டா மலையும் தூசு மாதிரியாயிடும். சுத்தமான இடத்துல உக்காந்து படிச்சா பாடமும் கடகடன்னு மண்டைக்குள்ள ஏறும். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்

ஹாஸ்டலோ, தனி வீடோ பசங்களுக்கு டால், உப்புமா, ப்ரட் டோஸ்ட்ன்னு ஒரு அவசரச் சமையல் செஞ்சுக்கச் சொல்லிக் கொடுக்கறது உத்தமம். “போம்மா,.. நான் படிப்பேனா, சமையல் செய்வேனா?..”ன்னு கேக்கற உங்க பிள்ளைச் செல்வம், “நேத்திக்கு ஸ்ட்ரைக்கா!!, மெஸ்ல/ஹோட்டல்ல ஒண்ணும் சாப்பிடக் கிடைக்கலை. கடைசில நீங்க குடுத்து விட்ட சின்ன ரைஸ் குக்கர்ல கொஞ்சூண்டு சாதம் வெச்சு, பருப்புப் பொடியோட சமாளிச்சேன். என் ரூம் மேட்டோடயும் பகிர்ந்துக்கிட்டேன். சூப்பர்மா!!.. எப்படிம்மா உங்களுக்கு இந்த யோசனை தோணிச்சு?..”ன்னு கேக்கும். அடுத்த தடவை புள்ளை ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகறச்சே புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி, ஜாம், ஊறுகாய்ன்னு தனியா இன்னொரு லக்கேஜும் ஹாஸ்டலுக்கு படிக்கப் போகும்.

அப்படி முடியலைன்னா, பசங்க தங்கியிருக்கற இடத்துக்கு சாப்பாடு சப்ளை ஏதாவது இருக்குதான்னு விசாரிச்சுக்கோங்க. மும்பையில் நிறைய இடங்கள்ல இந்த டப்பா சர்வீஸ் இருக்குது. மாசம் பணம் கட்டிட்டாப் போதும், மூணு வேளையும் சுடச்சுட சாப்பாடு நாம இருக்கற இடத்துக்கே வரும். அளவு அதிகமாருந்தா ரெண்டு பேர் பகிர்ந்துக்கலாம். இதனால பணமும் மிச்சப்படுது.

எல்லாத்தையும் விட முக்கியமானது ஒண்ணு இருக்கு. அதான் தனியா இருக்கக் கிடைச்ச சுதந்திரத்தை தவறாப் பயன்படுத்தாம இருக்கறது. இதுலயே கிட்டத்தட்ட எல்லாமும் அடங்கிடுது. பசங்க தங்கற ஊர்ல நம்ம சொந்தக்காரங்க இருந்தா இன்னும் விசேஷம். நம்மைக் கண்காணிக்க ஆளிருக்குன்னு அவங்க ஒரு கட்டுப்பாட்டோடயும் இருப்பாங்க, பாதுகாப்பும் கூட. நாம இருக்கிற இடத்துக்குன்னு தனி விதிமுறைகள் இருக்கலாம். அதையெல்லாம் அனுசரிச்சு நடக்கப் பழகிக்கணும். ‘விதிமுறைகள்ங்கறதே மீறத்தானே’ன்னுதான் இள ரத்தம் நினைக்கும். எதெல்லாம் கூடாதுன்னு சொல்றோமோ அதெல்லாம் செய்யணும்ன்னு துடிக்கும். இதை சகஜம்ன்னு எடுத்துக்கிட்டா ஆபத்து வர்றதும், மீள முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறதும் சகஜம்தான்னும் எடுத்துக்கணும்.


டிஸ்கி:நவம்பர் மாத லேடீஸ்ஸ்பெஷல்ல வெளியான இந்தக் கட்டுரையை உங்களுடனும் பகிர்ந்துக்கறேன்.



LinkWithin

Related Posts with Thumbnails