மலர்ந்து புன்னகைக்கின்றன
விதானத்தில் பூத்த மல்லிகையாய்
வானத்து நட்சத்திரங்கள்
***************
பருத்திக் காடெங்கும்
நிலா பூத்தது போல்
வெடித்திருக்கிறது பஞ்சு.
***************
நிலா பூத்திருக்கிறது
காடெங்கும் இதழ் உதிர்தலாய்
வெடித்த பஞ்சு.
***************
அழைப்புக்கு மறுமொழியில்லை
எட்டுக்கட்டையில் வீறிட்டுக் கத்துகிறது
மின்சாரக் குருவி
***************
அஸ்திவாரம் பலமில்லை
அடியோடு சரிந்து விழுகிறது
பலவீனமான மனக்கோட்டை
***************
இடிந்து கிடக்கிறது
நெடுகப் பிரித்த நீள்சுவர்
பாராமுகமாய் சகோதரர்கள்
***************
கேட்டது கிடைக்கவில்லையாம்
நிமிர்ந்துநின்று அடம் பிடிக்கிறது
வௌவாலின் குழந்தை
***************
பிரம்மாண்டமாய் பயமுறுத்துகிறது
ஊர்ந்து செல்லும் முதலை
பல்லியின் நிழல்
***************
தொட்டால் மட்டுமல்ல
பார்த்தாலும் தூக்கியடிக்கும் மின்சாரம்
கட்டண அறிக்கைவழி.
***************
வெய்யில் விகசிக்கிறது
அலைவுறும் நீரில் தவழ்கின்றன
மின்னும் நிலாத்துண்டங்கள்.
***************
No comments:
Post a Comment