Tuesday 17 March 2015

சாரல் துளிகள்

வெயிலில் உருகிய மேகத்துளிகளைச் சுவைத்துக்கொண்டிருக்கிறது மும்பை பூமி..

எத்தனை நெரிசலான போக்குவரத்திலும் வாகனங்களின் வகைகளைக் கண்டுணரும் ஆணின் திறமையையும், பார்த்த மாத்திரத்திலேயே சேலையின் வகைகளைக் கண்டுபிடித்துவிடும் பெண்ணின் திறமையையும் படைத்த இறைவனின் திறமையை நான் வியக்கேன்..

அமாவாசை வானின் நட்சத்திரங்களுக்கு நிலாக்குட்டிகள் என்று பெயரிட்டது குழந்தை. புதுப்பெயருக்காக வரிசை கட்டி நின்றன பால்வீதியில் அலைந்த அனைத்தும்..

பண்டிகை நாட்களில் பெண்கள் மட்டுமல்ல கடவுளரும் ஓவர்டைம் பார்க்க நேரிடுகிறது..

தூங்கும்போது குழந்தைகள் அழகுதான், அதே சமயம் ' அப்பாடா.. ' என்றொரு நிம்மதியை உணர்வதையும் தடுக்க முடிவதில்லை :-))

தூக்கத்தினுள் நழுவிய இரவுக்காவலாளிக்கு, தூக்கம் தொலைத்த காகம் நினைவுறுத்தியது. 
கா.. கா.. கா.

குழந்தைகளின் பள்ளி ஆண்டுவிழாவின் போது நடன நிகழ்ச்சிகளுக்காக குழந்தைகளை ஒருங்கிணைப்பவருக்கும், சர்க்கஸின் ரிங் மாஸ்டருக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டு பேருக்குமே நாக்கு தள்ளி விடுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒருவரோடொருவர் நின்று பேசிக்கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக மின்தூக்கி பழுது பட்டிருக்கும் நாளாகத்தான் இருக்கும்.

(காதில் விழுந்தது)
முதலாமவர்(முறைப்பாக): எங்கிட்ட வெச்சுக்காதே.. நான் எத்தன ஊரு தண்ணி குடிச்சவன்னு உனக்குத்தெரியாது..
இரண்டாமவர்(அமைதியாக): ஏண்ணே!.. தண்ணி குடிக்கதுக்குன்னே ஊரூரா போனீங்களா?
முதலாமவர் கப்சிப்.

சோதனைக்காக ரத்தத்தின் மாதிரியை எடுத்த வல்லுநரை விட்டு, அழைத்து வந்த தந்தையைக் குரோதத்துடன் முறைக்கிறது குழந்தை..

3 comments:

RAMA RAVI (RAMVI) said...

அனைத்துமே அருமை.

//தூங்கும்போது குழந்தைகள் அழகுதான், அதே சமயம் ' அப்பாடா.. ' என்றொரு நிம்மதியை உணர்வதையும் தடுக்க முடிவதில்லை :-//
உண்மைதான்..

ராமலக்ஷ்மி said...

எல்லாம் நன்று. கடைசி அட்டகாசம்:)!

அன்புடன் மலிக்கா said...

amaithiyakka nalam? rompa nalasi na intha pakkam vanthu facbook kil kalakkuringkala. super, anaiththum azaku..

amathii ssaral samaram viisaddum..

LinkWithin

Related Posts with Thumbnails