Monday 23 February 2015

சாரல் துளிகள்

1)நகரத்தின் குறுக்கு மறுக்கான தெருக்களை ஒத்திருக்கும் இலை நரம்புப்பின்னலில், வழி தவறி அலைகிறது ஒரு பொன்வண்டு.

2)பயணியர் இருக்கையில் அமர்ந்திருக்கும் வரையில் வெறிச்சோடிக்கிடப்பதாய்த் தோன்றும் சாலை, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நொடியிலிருந்து நெரிசல் மிகுந்ததாகத் தென்படத் தொடங்கி விடுகிறது.

3)மகளின் சமையலைச் சுவைத்த அம்மாக்களுக்கே தெரியும், ருசியென்பது நாவில் இல்லையென்பது..

4)எத்தனைதான் பாசமாக இருந்தாலும், அப்பாவைப் பெற்றவர்களை விட அம்மாவைப் பெற்ற ஆச்சிகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிப்போவதில் ஏதோவொரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்கிறது 

5)அடிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டுத் தூங்கி, வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்த யாரோ ஒரு மகானுபாவர்தான் ஸ்னூஸ் வசதியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்..

6)குழந்தையொன்று சிந்திச்சென்ற புன்னகைகளைச் சேமிக்கத்தொடங்கிய கணத்திலிருந்து உயிரொளி வளர்க்கத்தொடங்கியது அமாவாசை நிலவு.

7)'இந்தச்சாலைகள் இப்பொழுதிருப்பதைப்போலவே பல காலம் உறுதியுடன் இருக்கும்' என்றுரைத்த அரசாங்கத்தின் சாயம் முதல் மழையிலேயே கரைந்து ஓடிக்கொண்டிருந்தது.

8)பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

9)கூரையில் சொட்டும் மேல்தளத் தொட்டி நீர் ஞாபகப்படுத்துகிறது மழையின் தாளத்தை.

10)காலத்தின் எந்த நொடிக்கும் உடனடியாக மனதளவில் இழுத்துச்சென்று விடுகின்றன ஒளிப்படக் கால இயந்திரங்கள்.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ezhil said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை அக்கா...

LinkWithin

Related Posts with Thumbnails