Thursday 8 August 2013

முதன்முதலாக... பரவசமாக..

முதன்முதலாகக் கம்ப்யூட்டரைப் பார்த்தபோதும், அதைக் கையாண்டபோதும் ஏற்பட்ட அனுபவங்களை எழுதச்சொல்லி ஆதி அழைத்திருக்கிறார். 

'விக்ரம்' படம் வந்தபொழுது, அந்தப்படத்தை மிகவும் ஆவலாக அனைவரும் போய்ப்பார்த்தமைக்கு கமலோ, அம்பிகாவோ, வசனமெழுதிய சுஜாதாவோ ஒவ்வொரு வகையிலும் காரணமென்றாலும், 'கம்ப்யூட்டரெல்லாம் காட்டறாங்கப்பா." என்ற காரணம்தான் அதிமுக்கியமானதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் ஆ.. ஊ என்றால் எதற்கெடுத்தாலும், எந்தப்பொருளையாவது விற்கவேண்டுமென்றாலும் அதைக் கம்ப்யூட்டருடன் சம்பந்தப்படுத்தினால் போதும். மார்க்கெட் பிய்த்துக்கொண்டு போகும். டிஸ்கோவுக்கும் நதியாவுக்கும் அடுத்தபடியாக கம்ப்யூட்டரின் பெயரைச்சூட்டிக்கொண்டிருந்த பொருட்கள் எத்தனையெத்தனையோ. 'கம்ப்யூட்டர் சேலை' என்று ஒன்று பிரமாதமாக வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதுவே டிசைன் செய்ததாம். ராக்கெட் விடும் கம்ப்யூட்டருக்கு சேலை நெய்யுமிடத்தில் என்ன வேலை என்று நினைத்தாலும், ஆளுக்கொன்று வாங்கத்தவறவில்லை நாங்கள்.

இப்படியாகத்தானே பெயருடன் முதலில் பரிச்சயம் ஏற்பட்டாலும் நேரில் அதைத் தரிசனம் செய்யும் வாய்ப்பென்னவோ கன காலம் கழித்துத்தான் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டர் என்பது நவீன முறையிலான டைப்ரைட்டர் என்ற எண்ணம் மாறி, அது என்னவெல்லாம் செய்யுமென்று ஓரளவு தெளிவு வந்திருந்தது. விண்டோஸ் 3.1 கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில்தான் விண்டோஸ்-95வை அறிமுகப்படுத்துவதற்காக NIITயினர் தொலைக்காட்சியில் தொடராக கேள்வி பதில் முறையில் ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து பார்த்ததில் 'இதான்,.. இப்படித்தான்' என்று புரிதல் ஏற்பட்டிருந்தது. நாமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆரம்பித்து, ரங்க்ஸ், "மைக்ரோசாப்ட் ஆபீஸ் கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும்' என்றதில் வகுப்பில் சேர்வதில் முடிந்தது.

தேடிப்பிடித்து, இன்ஃபொடெக்கின் franchise நடத்திக்கொண்டிருந்த ஒரு வகுப்பிலும் சேர்ந்தேன். அப்பொழுதெல்லாம் மைக்ரோசாப்ட் ஆபீசில் வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட் மட்டுந்தான் இருந்தது. அதிலும் வீட்டில் வெட்டி ஆபீசராய் இருந்த காரணத்தாலோ என்னவோ 'ஆபீஸ் கத்துக்கறேன்' என்று சொல்லிக்கொள்வதே ஒரு பெருமையாகவும் இருந்தது. கி..கி..கி.. முதல் நாள் வகுப்பில் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்ததும் ஏதோ தெய்வத்தின் முன் அமர்ந்திருந்தது போலிருந்தது. கர்சர், மௌஸ் என்று ஒவ்வொன்றையும் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரியும் ஆகவே ஃபிங்கரிங் பிரச்சினை இல்லை. டைப்ரைட்டரில் அடுத்த வரி டைப் செய்ய வேண்டும்ன்றால் ஒரு லீவரை நகர்த்த வேண்டும். இதில் தானாகவே நகர்ந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த வகுப்பு முடியுமுன்பே அதெல்லாம் சலித்து விட்டது :-) என்றாலும் அவர்கள் நடத்திய தேர்வில் ஒவ்வொரு தாளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மொத்தமாக 96% எடுத்தேன். 

வகுப்புக்குப் போய்க்கொண்டிருந்த சமயம், ரங்க்சின் ஆபீசில் ஒவ்வொரு செக்ஷனுக்கும் மேம்பாட்டுக்காக ஒரு தொகை ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். ரங்க்சிடம் நான் ஆபீசுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிப்போடச்சொன்னேன். அதான், மைக்ரோ சாப்ட் ஆபீஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து அது ஆபீஸ் வேலைகளை எப்படியெல்லாம் எளிதாக்குகிறது என்பது நான் வகுப்புக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து புரிய ஆரம்பித்திருந்ததே. ரங்க்ஸின் வேலைப்பளு குறையுமே என்ற நல்லெண்ணம்தான். ஆபீசில் கம்ப்யூட்டர் வாங்கியபிறகு, அடிக்கடி போன் செய்து சந்தேகம் கேட்டுக்கொள்வார். 

ஆபீசில் வாங்கிய கம்ப்யூட்டரைப் பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களையெல்லாம் அழைத்துச்சென்றார். குழந்தைகள் கேம்சில் மும்முரமாகிவிட நான் எனக்குத் தெரிந்ததை ரங்க்சிற்கு வகுப்பெடுத்தேன். முக்கியமாக எக்செலும், வேர்டில் மெயில் மெர்ஜும் கற்றுக்கொண்டார். அதன் பின் அடிக்கடி நாங்கள் ஆபீசுக்குப் போவது வழக்கமானது. குழந்தைகள் கேம்சை விட்டுவிட்டு பெயிண்ட் ப்ரஷ், வேர்ட் போன்றவற்றில் பழக ஆரம்பித்தனர். நானோ வகுப்பில் கற்றுக்கொண்டதை இங்கே பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பேன். 
இந்தச்சமயத்தில்தான் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கலாமென்று முடிவெடுத்தோம். குழந்தைகளின் படிப்புக்கும், ரங்க்சின் வேலைக்கும் உதவியாய் இருக்குமென்று முடிவெடுத்து, வாங்கி வீட்டினுள் அது வலது காலெடுத்து வைத்து நுழைந்தபோது ஏதோ சாதித்து விட்ட பெருமிதமும் ஏற்பட்டது. குழந்தைகள் விளையாடிய நேரம் போக என் கைக்கும் எப்பவாவது கிடைக்கும் :-)) பாட்டுக்கேட்பது, சினிமா பார்ப்பது என்று அது ஒரு மினி டிவியாகவும் ரேடியோவாகவும் உருவெடுத்தது.

கற்றுக்கொண்டாலும் வேலைக்குச்செல்ல நான் முயற்சிக்கவில்லை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாத சூழ்நிலையில் இரண்டொரு சமயம் குழந்தைகளையும் வகுப்புக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை அங்கே ஆபீஸ் ரூமில் உட்கார வைத்து விட்டு நான் வகுப்புக்குப் போன சம்பவங்களுமுண்டு. இந்த நிலையில் வேலைக்கு எங்கே முயற்சி செய்ய?.. எம்மெஸ் ஆபீசைத்தவிர வேறு கோர்ஸுகள் கற்றுக்கொள்ள நான் முயற்சிக்கவுமில்லை. இதனாலேயே பக்கத்துப் பள்ளியில் கிடைக்கவிருந்த கம்ப்யூட்டர் டீச்சர் வேலை கைவிட்டுப்போனது. அதற்கு basic-க்கும் கற்றிருக்க வேண்டுமாம். இந்த பேசிக் நாலெட்ஜ் இல்லாததால் ஒரு நல்ல டீச்சரை அந்தப் பள்ளி இழந்தது (யாருப்பா அங்கே கல்லெடுக்கறது?.. உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும். ஓக்கே? :-) ). ஆனாலும் கற்ற வித்தை கை கொடுத்தது. எங்கள் குடியிருப்பில் காஷியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்ததால் வரவு செலவு இத்யாதிகளை வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் அழகாகக் கணக்கிட்டு, ப்ரிண்ட் எடுத்து ஒவ்வொரு wing-ன் நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டச்செய்தேன். இது அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. 

சினிமா பார்க்கவும் சாலிடெர், ஃப்ரீசெல் போன்ற ஒலிம்பிக் தரமுள்ள விளையாட்டுகளை விளையாடுவதையும் தவிர எப்பவாவது வேலையும் செய்யும் கம்ப்யூட்டரில் அப்பொழுதெல்லாம் சில சமயங்களில் மட்டும்தான் எதையாவது வாசிப்பேன். அதுவும் தமிழ் வாசிப்பது அபூர்வம். தமிழிலும் இருக்கிறதென்று தெரிந்தால்தானே வாசிப்பதற்கு :-). அப்படியிருந்த நிலை மாறி இப்பொழுது கம்ப்யூட்டரே பழியாகக் கிடப்பதும், அதில் எழுத ஆரம்பித்திருப்பதும் எனக்கே ஆச்சரியமூட்டுகிற மாற்றம்தான். அதைப்பற்றியும் எழுத வேண்டும்தான். தம்பி குமாரும் அதைத்தான் எழுத அழைத்திருக்கிறார். எழுதி விடுவோம் :-))

விருப்பமிருப்பவர்கள் அனைவரும் இந்தத்தொடர்பதிவைத் தொடரலாம்..

14 comments:

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

இராஜராஜேஸ்வரி said...

இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி..

அழகான கணினி அனுபவம் .. பாராட்டுக்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கம்ப்யூட்டர் பற்றிய தங்களின் அனுபவங்கள் யதார்த்தமாகவும், ரஸிக்கும்ப்டியாகவும் சுவையாக உள்ளன.

பராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

சென்னை பித்தன் said...

கணினி அனுபவம் கன சுவாரஸ்யம்!

எல் கே said...

GOt "BASIC" KNOWLEDGE NOW??

ADHI VENKAT said...

என் அழைப்பை ஏற்று விரைவாக பதிவிட்ட உங்களுக்கு என் நன்றி...:)

உங்க நடையில் பிரமாதமாக இருந்தது.

”குழந்தையை பார்த்துக்க ஆளில்லாத சூழ்நிலையில்” இதே தான் இங்கயும்...:)))

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். பொதுவாக எல்லோருடைய கணினி அனுபவங்களையும் படிக்கும்போது சில அம்சங்கள் பொதுவாகவும், சில தனிப்பட்டும் இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அருமை சாரல். எவ்வளவு கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இன்னும் எக்சல்,பவர் பாயிண்ட் எல்லாம் தெரியாது.தமிழ் எழுத மட்டும் கற்றுக் கொண்டுவிட்டேன்:)பிறகு ஃபோட்டொ,பெயிண்ட்,இப்படி குட்டி குட்டி சமாசாரங்கள்.

பார்வதி இராமச்சந்திரன். said...

ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. மிக வெளிப்படையாக, ஒரு நண்பருடன் பேசுவது போல் இருந்தது நடை. பகிர்விற்கு மனமார்ந்த நன்றி.

'பரிவை' சே.குமார் said...

சுவராஸ்யமான பகிர்வு அக்கா....

Kiruba said...

அன்று இருந்த கணினி அனுபவங்கள் வித்தியாசமாக உள்ளது. நல்ல பதிவு

http://chummakonjaneram.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரசியமான பகிர்வு.....

இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமையான அனுபவப் பகிர்வு. 97-ல் கணினி வந்தது வீட்டுக்கு. தட்டச்சு தெரிந்திருந்ததால் கீபோர்ட் இலகுவாக வசப்பட்டது. 2003-ல் முரசு எழுத்துருவில் தமிழ் அடிக்க ஆரம்பித்த போது ஏற்பட்ட பரவசம் இருக்கே:). எக்ஸல் கணவரிடம் கற்றுக் கொண்டேன், கணக்கு வழக்குகளை மெயிண்டெயின் செய்ய:)!

LinkWithin

Related Posts with Thumbnails