Monday 21 May 2012

பெங்களூர் விஜயமும் சந்திப்பும் - 1


பெங்களூர் கடந்த பத்துப்பதினஞ்சு நாட்களா வழக்கத்தை விட ரொம்பவே குளுரா இருந்துச்சாம். நல்லவங்க நெறைய இருக்கற அந்த பூமி ரொம்ப ரொம்ப நல்லவங்க ஒருத்தங்க போன வாரம் விஜயம் செஞ்சதால தினமும் சாரலில் நனைஞ்சு இன்னும் ஜில்லுன்னு ஆகிருச்சு. அந்த நல்லவர் யாருன்னு சொல்லலாம்ன்னா தன்னடக்கம் தடுக்குதுங்க :-))
தோட்ட நகரத்தில் பூத்தவை..
உடன்பிறப்பு வீட்டு இளவரசரை அவரோட பெயரிடும் வைபவம் சமயம் பார்த்தது,.. அதுக்கப்புறம் பார்க்கப்போக வேளையே வாய்க்கலை. அவரோட வளர்ச்சியையும் குறும்புகளையும் மெயிலில் அனுப்பற படங்களையும் வீடியோக்களையும் பார்த்தே திருப்திப் பட்டுக்கிட்டு இருந்தோம். இந்த லீவு சமயத்துலயாவது போயே ஆகணும்ன்னு என் பையர் சொன்னதால நானும் பையருமா கிளம்பிட்டோம்.

ஆனாலும், கடைசி நிமிஷம் வரைக்கும் பயணம் ரத்து செய்யப்படற ஆபத்து இருந்ததால் பறக்கும், ஊரும் வாகனங்களைத்தவிர்த்து ஓடும் வாகனத்துல,.. (அட! பஸ்ஸில்தாங்க) டிக்கெட் புக் செஞ்சோம். Neeta,Raj இன்னபிற வோல்வோ பஸ்களில் ஒரு நாள் அவகாசத்துல கூட டிக்கெட் புக் செஞ்சுக்கலாம். சிரம பரிகாரத்துக்காக நல்ல ரெஸ்டாரண்டுகளில் மட்டுந்தான் நிறுத்தப்படுது. மும்பையிலிருந்து கிளம்பினா லோனாவ்லா மற்றும் பூனாவில் மட்டுமே பயணிகளை ஏத்திக்கறதுக்காக நிக்கிறாங்க, அதுக்கப்புறம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு மாதிரி சல்ல்ல்லுன்னு பெங்களூருல போய்த்தான் ஸ்டாப்புவாங்க.

ஏற்கனவே சொல்லியிருந்தபடி கலசிப்பாளையம் பஸ் நிலையத்துல இறங்கி, அங்கே காத்துட்டிருந்த உடன்பிறப்பைக் கண்டுக்கிட்டோம். பரஸ்பர நலம் விசாரிப்புக்கு அப்றம் வீட்டை நோக்கி விரைந்தோம். போகும் வழியில் அடையார் ஆனந்தபவனின் பெங்களூர்க்கிளையில் இளவரசருக்குப் பிடிச்ச முறுக்கும், சீடையும் வாங்கிக்கிட்டோம். நொறுக்ஸில் அவருக்கு இந்த ரெண்டும்தான் பிடிக்குமாம். மும்பையிலேயே வாங்கிக்கலாம்ன்னா வாஷியிலிருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸைக் காணோம். ஹாட் சிப்ஸ் போன்ற கடைகளில் கிடைக்கிறதை வாங்கிக்கலாம்ன்னா அவங்க உபயோகப்படுத்தற எண்ணெய்யின் தரத்தைப் பத்தி ரொம்பவே யோசனையா இருக்குது. அதான் ஒரே எண்ணெய்யை எத்தனை முறை சூடாக்கி பதார்த்தங்கள் தயாரிக்கப்படுதுன்னுதான் கண்ணு முன்னாடியே பார்க்கறோமே. ஆரோக்கியத்துல ரிஸ்க் எடுக்க மனசு வரலை.

வீட்டுக்குப் போனப்ப குழந்தை நல்ல தூக்கத்துல இருந்தார். இன்னும் பதினஞ்சு நிமிஷம் பொறுத்திருந்தா தானாவே எழுந்துருவார். எதுக்கு தூங்கற குழந்தையை எழுப்பி வீணே சிரமப்படுத்தணும்?.. தானைத்தலைவர் தானே எழுந்து வரட்டும்ன்னு நாங்க சிரம பரிகாரமெல்லாம் முடிக்கவும், அவர் எழுந்து வரவும் சரியா இருந்தது. அவருக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சப்புறம் இப்பத்தான் பார்க்கறோம்ன்னாலும் குழந்தைக்கு வேத்து முகமே இல்லை. உடனேயே ஒட்டிக்கிட்டார். சாயந்திரம் குடியிருப்பிலேயே இருக்கும் விளையாட்டுப் பகுதிக்குக் கூட்டிட்டுப் போனதும் பயங்கர ஜாலியாகிட்டார்.

அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போறதால இளவரசரை அம்மா வழிப்பாட்டி பார்த்துக்கறாங்க. அருமையான பெண்மணி. அத்தைன்னு சொல்லாம இன்னொரு அம்மான்னே சொல்லலாம். அந்தளவுக்கு அருமையா அங்கே தங்கியிருந்த நாட்களில் என்னையும் கவனிச்சுக்கிட்டாங்க.
தெளிவா இருக்கும் பெலந்தூர் ஏரி..
வீட்டோட பால்கனியில் நின்னா, காத்து சும்மா பிச்சுக்கிட்டுப் போகுது. பக்கத்துலயே பெலந்தூர் ஏரி இருக்கறதால குளுமையாவும் இருக்குன்னு சொன்னப்ப அத்தை சிரிச்சாங்க. காத்து மட்டுமல்ல, சில நேரங்கள்ல ‘வாசனை’யும் சேர்ந்து வரும்ன்னாங்க. அக்கம்பக்கத்துல உள்ள கட்டிடங்களிலேர்ந்து கழிவு நீரெல்லாம் அங்கே வந்துதான் சேருதாம். அடப்பாவமே!!.. ஏரி இருக்கறதால நிறையப் பறவைகள் அங்கே நிச்சயமா வரும். ஒரு நாள் போய்ச் சுட்டுக்கிட்டு வரலாம்ன்னு காமிராவைத் தீட்டிக்கிட்டுக் காத்திருந்த என் நினைப்பில் ஒரு வண்டி மண். பறவைகள் வரக்கூட லாயக்கில்லாம போயிட்டதாம் அந்த ஏரி.

130 வயசான இந்த ஏரியோட பரப்பளவு 892 ஏக்கர். ஒரு காலத்துல சுத்திலும் இருக்கற பதினெட்டுப் பட்டி மக்களும் தங்களோட அடிப்படைத்தேவைகளுக்கு இந்தத்தண்ணியைத்தான் உபயோகப்படுத்திக்கிட்டு இருந்திருக்காங்க. அந்தளவு சுத்தமாத்தான் இருந்திருக்குது. அப்றம் எண்பதுகளில் இந்த ஏரிக்கு மத்த குளங்கள்லேர்ந்து தண்ணீர் வந்துட்டிருந்த வழிகள் அடைபட்டதாலும், நகர மயமாக்கலின் விளைவா பெருகிட்ட குடியிருப்புகள்,தொழிற்சாலைகள், கொண்டு சேர்த்த கழிவுகளிலாலும் ஏரி மெல்லமெல்ல மோசமடைய ஆரம்பிச்சுருக்கு. பத்தாக்குறைக்கு மழைத்தண்ணீர் ஏரியில் வந்து சேர்றதுக்கான வடிகால் வசதிகளும் இந்த குடியிருப்புகள், மற்றும் தொழிற்சாலைகளால மறிக்கப்பட்டுருச்சு.

தண்ணீர் கெட்டுப்போனதால அதுலேர்ந்த மீன்களெல்லாம் செத்துப்போய் தங்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்படுதுன்னு மீனவர்கள் புகார் கொடுத்ததால மீன் வளத்துறை ஏரியில் மீன் குஞ்சுகளை மறுபடியும் விட்டு வளர்க்க முயற்சி செஞ்சு பார்த்தாங்க. மீனெல்லாம் மறுபடியும் செத்து மிதந்ததுதான் மிச்சம். இப்போ அங்கே களைகளையும், புல் பூண்டுகளையும் தவிர எதுவுமே காணக்கிடைக்கலை.
மறுபடியும் குழம்பிருச்சோ?????... அப்றமா தெளிவு கிடைக்குமாயிருக்கும் :-)
முழுக்க முழுக்க தண்ணீர்ப் பரப்பா இருந்த ஏரி நான் பார்த்துக்கிட்டிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமா வீடுகளால்(weeds) மறைஞ்சுட்டே வந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்க்கறப்ப சின்னச்சின்ன தீவுகள் மாதிரியான திட்டுகள் மிதந்துட்டு வர்றதைப் பார்த்தேன். ஏரிகளில் ஆகாயத்தாமரை போன்ற செடிகள் மிதந்துக்கிட்டே நகர்ந்து போறதைப் பார்த்த எனக்கு, பெலந்தூர் ஏரியில் சின்னச்சின்ன தீவுத்திட்டுகள் மிதந்து போறதைப் பார்த்தது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. இதுகளில் வளர்ந்து நிற்கும் புற்களை, காலை நேரங்கள்ல ஆட்கள் பரிசலில் வந்து அறுத்துக் கட்டிக்கிட்டுப் போவாங்கன்னு அத்தை விவரம் சொன்னாங்க.

இதைப் பார்க்கறதுக்காகவே நடுராத்திரி ஆறரை மணிக்கே எழுந்து, காமிராக்கண்ணைத் திறந்து வெச்சுட்டுக் காத்திருந்தேன். ரெண்டு மூணு பேர் பரிசல் வலிச்சுட்டு வந்து தீவுகளில் இறங்கி, பரிசலை ஒரு ஓரமாக் கட்டி வெச்சுட்டு அங்கியும் இங்கியும் ஆளுயரத்துக்கு வளர்ந்து நிக்கிற புல்லை மளமளன்னு அறுத்துக் கட்டி, பரிசலில் ஏத்துனாங்க. மாடு,குதிரைகளுக்கான தீவனப்புல்லோன்னு தோணுது. இந்தக் கெட்டுப்போன தண்ணியில் வளரும் புல் எந்த அளவுக்கு கால்நடைகளுக்கான ஆரோக்கியமான தீவனமா இருக்கும்கறது மில்லியன் டாலர் கேள்வி. பரிசல் நிரம்பி வழியுற அளவுக்கு கல்லா கட்டுனதும், அவங்களும் கடையைக் கட்டிடறாங்க.
கவனம்... ஆட்கள் வேலை செய்கிறார்கள்.
மூணு நாள் மட்டுமே அவகாசம் இருந்ததால் எங்கேயும் சுத்திப்பார்க்கக் கிளம்பலை. முழுக்க முழுக்க குட்டிப்பையன் கூடவேதான் இருக்கணும்ன்னு மும்பையிலிருந்து கிளம்பும்போதே அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செஞ்சுருந்தாலும், ஒண்ணு ரெண்டு மக்களையாவது மீட்டாம மும்பை திரும்ப மனசு வரலை.

டிஸ்கி: இறுதிப்பகுதியான அடுத்த பகுதியில் சந்திக்கலாமா..


24 comments:

pudugaithendral said...

ஆமாம்பா,

எனக்கும் இந்த ஸ்லீப்பர் கோச் பஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. (டாய்லட் வசதி மட்டும் தான் மைனஸ்)

அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்

அமைதி அப்பா said...

//அத்தைன்னு சொல்லாம இன்னொரு அம்மான்னே சொல்லலாம். அந்தளவுக்கு அருமையா அங்கே தங்கியிருந்த நாட்களில் என்னையும் கவனிச்சுக்கிட்டாங்க//

நல்லவர்காளாக அன்பானவர்களாக இருப்பவர்களைப் பற்றி அறிவது மகிழ்ச்சி!

************

பெங்களூர்ல 'மினி பிளாக்கர் மீட்' போட்டிருக்கலாமே மேடம்?! அனேகமா யாரையாவது சந்திச்சிருப்பீங்கன்னு நம்புறேன். ஏன்னா, தலைப்பு அப்படி இருக்கு!

ஹுஸைனம்மா said...

//வழக்கத்தை விட ரொம்பவே குளுரா இருந்துச்சாம்//
ஆமாமா.. பீப்பிஸில சொன்னாஹ... சியென்னென்ல சொன்னாஹ... :-)))))))))

//ஒரே எண்ணெய்யை எத்தனை முறை சூடாக்கி//
மற்ற கடைகளில் இப்படி இல்லைன்னு எப்படித் தெரிஞ்சுகிட்டீங்க? (நாங்களும் அப்படிக் கண்டுபிடிக்கலாமேன்னுதான்... சீரியஸா...)

இளவரசருக்கு என்ன வயசுன்னு சொல்லவேயில்லியே?

//அருமையா அங்கே தங்கியிருந்த நாட்களில் என்னையும் கவனிச்சுக்கிட்டாங்க//
ஹி..ஹி... அங்கேபோய் நீங்களும் ஒரு இளவரசி ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க!!

தீவுத்திட்டுகள் - புதுமை. ஆட்கள் புள்ளிகள் போல தெரிகீறார்கள். அவ்வளவு பெரிய்ய ஏரி + தொலைவும்கூட, இல்லியா.

இதே ஏரியை (அக்கரையில் இருக்கும் கட்டிடம் அடையாளம்) ராமலக்ஷ்மிக்கா பதிவுல, ஒன்றிரண்டு பறவைகளோட பார்த்த ஞாபகம். ஒருவேளை வேறு இடமாகவும் இருந்திருக்கலாம். நான் ஞாபகசக்தியில் ‘புலி’......




இல்லை!! :-))))))

ஹுஸைனம்மா said...

தொடர... (மறந்துவிட்டேன்). சொன்னோம்ல புலின்னு....

ஆத்மா said...

நல்ல பதிவு......தொடர்ந்தும் எழுதுங்கள் ரசிக்க தயாராக இருக்கிறோம்

ராமலக்ஷ்மி said...

/நகர மயமாக்கலின் விளைவா / இப்படி பரிதாப நிலைக்கு ஆளான ஏரிகள் பல உள்ளன பெங்களூரில். படங்கள் எல்லாமே, குறிப்பாக நகரும் திட்டுகள் அழகு.

அருமையான பகிர்வு.தொடரக் காத்திருக்கிறேன்:)!

வல்லிசிம்ஹன் said...

சென்னைக்கு எப்ப வரப் போறீங்க சாரல்.!பங்களூரு சூடா இருக்குன்னு இல்ல சொன்னாங்க.:)
கெட்டுப் போய்க் கொண்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது.
இளவரசருக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி பெங்களூர்ட்ரிப் அனுபவம் நல்லா சொல்லி இருக்கே. அமைதிச்சாரல் அங்க போனதாலதான் குளு குளுன்னு இருந்துச்சாம்னு சொல்லிக்கிராங்க. உன்னை சென்னை வரச்சொல்லியும் நிறையாபேரு கூப்பிட்டிருக்காங்களே வரெ ஒருத்தர் பதிவில பாத்தேன்.சென்னை இப்ப செம ஹாட்டா இருக்காம்

Asiya Omar said...

ஹைய்யா! பெங்களூரா? என் உடன்பிறப்புகள் கிட்ட தட்ட 25 வருடமாக அங்கே இருக்காங்க,பல முறை போய் வந்தாலும் இன்னும் போக ஆசை தான்,பார்த்து பேசி அளவளாவினாலே நேரம் போய்விடுமே!நீங்க தொடருங்க படங்களோடு..உங்கள் பகிர்வு சுவாரசியம்.

VijiParthiban said...

நான் இன்னும் படிக்கவில்லை அக்கா . ஆனால் கண்ணைகவரும் புகைப்படங்கள் மிகவும் அருமை . அதான் இவ்வளவு வேகமாக கருத்துதெரிவிக்க வந்தேன் அக்கா..

VijiParthiban said...

அக்கா உங்களது பெங்களூர் பயணம் மிகவும் அருமை . தொடரட்டும் ...........

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ரெஸ்ட்ரூம் வசதி உள்ள பஸ்களும் ஓடுதுன்னு கேள்விப்பட்டு வலையில் தேடி ஏமாந்தேன் :-)

இங்கே குஜராத்தியர்கள் நீத்தாவையும் ராஜையும் ரொம்பவே விரும்புவாங்க. நம்பர் ஒண்ணில் இப்போ இவங்கதான் இருக்கறாங்க. அதுவும் ராஜ்ஜில் ஸ்லீப்பர் வசதி ரொம்ப நலலாருந்துச்சுன்னு ஒருக்கா ஆமதாபாத் போயிட்டு வந்த ரங்க்ஸ் சொன்னார்.

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

இனிமையான சந்திப்பு நடந்துச்சு,..

தம்பியின் திருமணத்தைப் பேசி முடிச்சதே நானும் அத்தையும்தான்,.. அதனால நாங்கதான் மொதல்ல தொடர்பு வளையத்துக்குள்ள வந்தோம். அதுதான் எங்க நெருக்கம் இன்னும் கூடுதலாகக் காரணம். :-)

வாசிச்சதுக்கு நன்றி.

R. Gopi said...

பெலந்தூரில் இருந்து எங்க வீடு மூணு கிலோமீட்டர் தூரம்தான்

துளசி கோபால் said...

ஏரிகள் கெட்டுக்கிடக்குதுன்னு மனசுக்கு பேஜாராப்போச்சு:(

அண்ணன் வீட்டருகில் இருக்கும் ஒரு ஏரி (பிடிஎம் லே அவுட்) கெட்டே போச்சு இந்த 18 வருசத்தில்:(

இளவரசருக்கு ஜாலிதான், மகாராணி விஜயத்தால்:-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

நீங்க கேள்வியின் நாயகிங்கறதை அடிக்கடி நிரூபிக்கறீங்க :-))

இளவரசருக்கு ரெண்டரை வயசு ஆகுது. அவரோட பெயரிடும் வைபவத்துக்குப் போனதை முன்னாடியே எழுதியிருக்கேன்.

http://amaithicchaaral.blogspot.com/2010/05/8.html

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிட்டுக்குருவி,

பறந்து வந்து வாசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

காமிராப்பையோட உங்க ஊர் வரைக்கும் வந்து, லால்பாக் வழியா ரெண்டு தடவை போயிட்டு, உள்ளே வந்து படம் எடுக்காமல் திரும்பியது நான் ஒருத்தியாத்தான் இருப்பேன் :-))

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வருண தேவனுக்குப் போன் போட்டுச் சொல்லியாச்சு.. ஜூன், ஜூலைலேர்ந்து மூணு மாசத்துக்கு சென்னைதான் டேராவாம். நானும் வந்தா சென்னையில் வெள்ள அபாயம் வந்துரும்.. அதனால இன்னொருக்கா வரேன் :-))

வாசிச்சதுக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

வாசிச்சதுக்கும் படங்களை ரசிச்சதுக்கும் நன்றிங்க..

பக்கத்துல புகைப்படப் பகிர்வுகள்ன்னு லேபிள் போட்டு ஒரு ஒன்பது இடுகைகள் இருக்குது. நேரம் கிடைக்கிறப்ப பாருங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. மூணே கி.மீ தானா?. அடுத்த தடவை கண்டுக்கிட்டாப் போச்சு :-))

அங்கே இருக்கறப்ப ராம்வி மற்றும் உங்க ஞாபகம் வந்தது நிஜம் :-)

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

எங்கூர்ல கெட்டுப்போன ஒரு குளத்தைத் தூர் வாரி, புதுத்தண்ணி நிரப்பி சுத்திலும் நடைபாதை, உக்கார பெஞ்சுகள்ன்னு கட்டி வெச்சு, பூங்காவும் அமைச்சுப் பராமரிக்கிறாங்க. ஜிலுஜிலுன்னு இருக்கு. போட் விடப்போறாங்கன்னும் கேள்வி.

நாங்க முழிச்சுக்க ஆரம்பிச்சுட்டோம்.. நீங்க?ன்னு கேக்கணும் போல இருந்தது. பெலந்தூர் ஏரியின் நிலையைப் பார்த்ததும்.

ராஜா, ராணி, மகாராணி எல்லாத்தையும் சேவகர்களாக்கும் சக்தி அந்தந்த வீட்டு இளவரசருக்கு மட்டுமே உண்டு :-)

வாசிச்சதுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails