Saturday 27 August 2022

“நேரா யோசி" - புத்தக மதிப்புரை


திரு. சுதாகர் கஸ்தூரியின் இப்புத்தகம் சுயமுன்னேற்றப் புத்தகமா எனில் ஆம், ஆனால் உளவியல் ரீதியான சுய முன்னேற்றப்புத்தகம் என்று கூறலாம். ஒரு மனிதன் முன்னேற முட்டுக்கட்டையாய், தடைக்கல்லாய் இருப்பது எவ்விதமான வெளிக்காரணியுமல்ல.. முழு முதற்காரணி அவனேதான். அவன் எனில் அவனது மனம், அந்த மனத்தை அவன் கையாளும் விதம், அவன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாங்கு, அவற்றைத் தீர்க்கும் விதம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருக்கும் சுய மதிப்பீடு, அவனது பொறுப்புணர்வு என பலவும் கொண்டது. அவையே பெரும்பாலும் அவனது வெளித்தெரியாத எதிரிகளுமாகும்.

“எண்ணித்துணிக கருமம்” என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனங்குவித்துச் சிந்தனை செய்யப்புகும்போது, இந்த எதிரிகள்தான் தடையாக வந்து நிற்பர். இந்நூலில் அப்படிப்பட்ட 26 எதிரிகளை நமக்கு இனங்காட்டி, அவர்களை வெல்லவும் தாண்டிச்செல்லவும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது, “அட!! ஆமால்ல” என நாமும் ஒத்துக்கொள்கிறோம். நம்மில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் இனங்காண்கிறோம். இவற்றில் ஒவ்வொரு எதிரியும் முக்கியமானவர்தான் எனினும் என்னளவில், பின்னூட்டமற்ற போக்கு, சுய இரக்கம், விருப்பமும் முன் முடிவுகளும், பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு, தேர்ச்சியெனும் பொறி, எல்லையற்ற நற்பண்புகள் போன்றவற்றை மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். “நான் எதைச்செஞ்சாலும் வெளங்காது” என்ற கழிவிரக்கம் நம்மை ஒரு அடி கூட முன்னேற விடாமல் அப்படியே அங்கேயே ஆணியடித்தாற்போல் அமரச்செய்து விடும். அப்புறம் முன்னேற்றமாவது ஒன்றாவது..

மனம், மூளை இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்ற விவாதம் அவ்வப்போது எழுந்தடங்குவது உண்டு. நம் சிந்தனையின் வேகத்திற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் மாறுவதும், மூளையிலேற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் சிந்தனைகள் அமைவதும் உண்டு. Anxiety எனப்படும் மனப்பதற்றப்பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிறுசிறு பிரச்சினைகள் வந்தால் கூட அதை எதிர்கொள்ள கடினமாக இருக்கும், பயம் வந்து மூடிக்கொள்ளும், இதயத்துடிப்பு எகிற, உடல் முழுதும் வியர்த்து வழிய துவண்டு போவார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்யும், அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதோ சிங்கம் புலியை நேரில் கண்டாற்போல் பயப்படுவார்கள். அந்த பயமே அவர்களை சிறைப்படுத்தி விடுவதுமுண்டு. இதெல்லாம் மூளையிலிருக்கும் (Amygdala)செய்யும் வேலை. 

நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோது இந்த அமைக்டிலாதான், “இங்கே நிற்காதே.. ஓடி உன்னைக்காப்பாற்றிக்கொள்” என எச்சரிக்கை செய்தது, அட்ரீனலினைச்சுரக்க வைத்துப் பரபரப்பூட்டியது. தற்காலத்திலும் அதேபோல்தான், சில செய்திகளைக்கேட்கும்போது அட்ரீனலினைச்சுரக்க வைத்து பரபரப்பூட்டி விடுகிறது. அதிகமான அட்ரீனலின் சுரப்பே anxietyக்கும் காரணமாகிறது. அந்த உணர்ச்சி வேகத்தில் ஓடும் நமது அனிச்சைச்சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் அட்ரீனலினின் வேகம் சற்றுக்குறைந்த பின் வரும் சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. இந்த அனிச்சை எண்ணங்களை மாற்றியமைப்பதற்காக CBT (Cognitive Behaviour Therapy) கொடுப்பதுண்டு. கொஞ்சங்கொஞ்சமாக அமைக்டிலாவின் தாக்கத்தைக் குறைத்து தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கற்றுத்தருவார் கவுன்ஸிலர். அதாவது எதையும் “நேரா யோசிக்க”க் கற்றுத்தருவார். நேரா யோசிக்கும்போது என்னதான் நாம் பிற காரணிகளால் தூண்டப்பட்டாலும் நிதானமிழக்காமல் இருப்போம். இப்புத்தகத்திலும் அந்த தெரப்பியின் அடிப்படையிலேயே பல்வேறு உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. “You can’t change, but modify” என கவுன்ஸிலர்கள் சொல்வதுண்டு.

நமது முன்முடிவுகள் காரணமாக, பிரச்சினைகளையும், இவ்வுலகையும் அது எப்படியிருக்கிறதோ அப்படிப்பார்க்காமல், நாம் எப்படிப்பார்க்க விரும்புகிறோமோ அப்படிப்பார்க்கிறோம். இவற்றிலுள்ள பிழைகளைச்சுட்டிக்காட்டி நேராக யோசிக்கக்கற்றுத்தந்து நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது இந்நூல். 

இன்றைய தினம் நம் முன் முக்கியமாக இளைய தலைமுறையினர் முன் நிற்பது “போலிச்செய்திகள்” எனும் மிகப்பெரிய எதிரி. “முன்னோர் ஒன்றும் முட்டாளல்ல” எனவும் “ஷேர் செய்யுங்கள்” என நிபந்தனை விதித்தும் வெளியாகும் பொய்ச்செய்திகள் அனேகம். இப்பொறிக்குள் விழுபவர்கள், பிறர் மீது வெறுப்பு, கோபம், மற்றும் ஆதாரமில்லாத மருத்துவக்குறிப்புகளைப்பின்பற்றுதல் என தங்கள் சமூக, குடும்ப உறவுகளைச் சிதைத்து உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இளைய தலைமுறையினர் சற்று யோசித்தாலே அதிலிருந்து வெளி வந்து விடுவர். இந்த நூல் அனைத்துத் தரப்பினரும் வாசிக்க ஏற்றதுதான் என்றாலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் வாசித்தால் அவர்களது மனநலம், சிந்திக்கும் திறன், அதன் காரணமாக வாழ்வில் முன்னேற்றம் என எல்லாமும் மேம்படும். கல்லூரிகள், பள்ளிகளில் பாடமாக வைக்கலாம்.

எழுத்தாளர், நண்பர், திரு.சுதாகர் கஸ்தூரி பன்முக வித்தகர். வெண்பா எழுதி வியக்க வைப்பார். தெற்கத்தித் தமிழில் எழுதி ரசிக்க வைப்பார். அறிவியல் கட்டுரைகள் எழுதி அசர வைப்பார். மும்பையில் வசித்தாலும் தூத்துக்குடித் தமிழர். அவரின் நூற்களில், 6174 மற்றும் 7.83 ஹெர்ட்ஸ் என இரு நூல்களையும் வாசித்திருக்கிறேன். இந்நூல் அவரது அனைத்து நூற்களிலிருந்தும் மாறுபட்ட ஒன்று.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails