Friday 7 April 2017

சாபுதானா கிச்சடி.

மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை உபயோகப்படுத்திச் செய்யப்படும் உப்புமா மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காலை அல்லது மாலை டிபனாகவும் விரத நாட்களுக்கான உணவாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வடக்கர்களால் "சாபுதானா கிச்சடி" என்றழைக்கப்படும் இப்பண்டம் செய்வதற்கு மிகவும் எளிதானது. மேலும், மாவு மற்றும் ப்ரோட்டின் சத்து நிரம்பியது.

மளிகைக்கடைகளில் வற்றல் போட உபயோகப்படும் ஜவ்வரிசி எனக் கேட்டு வாங்கவும். நைலான் ஜவ்வரிசி கிச்சடி செய்ய உதவாது. ஒரு கப் ஜவ்வரிசியை இரண்டு முறை நன்கு தண்ணீரில் அலம்பி வடித்து விடவும். பின் ஜவ்வரிசியின் மேற்பரப்பில் ஒரு செ.மீ அளவே தண்ணீர் நிற்குமளவிற்கு நீரூற்றி ஊற விடவும். வாகைப்பொறுத்து ஜவ்வரிசி ஊற அரைமணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரம் வரைக்கும் ஆகலாம். காலையில் கிச்சடி செய்ய வேண்டுமானால் இரவே ஊற வைத்து விடலாம். மாலையில் வேண்டுமெனில் முற்பகலில் ஊற வைக்கவும். அத்தனை நீரையும் உறிஞ்சிக்கொண்டு நன்கு ஊறி உதிர்உதிராக வந்துவிடும். ஊறிய ஜவ்வரிசியில் ஒன்றை எடுத்து நசுக்கினால் மசிய வேண்டும். மசியவில்லையெனில் மேலும் சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அரை கப் வேர்க்கடலையை கருகாமல் வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். காரத்திற்கேற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைப் பொடியாக ஒரு தேக்கரண்டியளவு நறுக்கிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவராத்திரி, ஏகாதசி போன்ற விரத நாட்களில் செய்வதானால் வெங்காயம் சேர்க்க வேண்டாம்.

ஒரு அகன்ற வாணலியில் இரண்டு டேபி்ஸ்பூன் நெய்யைச்சூடாக்கி அதில் கால் தேக்கரண்டி சீரகத்தைப்போட்டு பொரிய விடவும். பின் நறுக்கி வைத்த மிளகாய், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றைப்போட்டு வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கியபின், அத்துடன் ஜவ்வரிசியையும் ருசிக்கேற்ப காலாநமக் அல்லது சாதாரண உப்பைச் சேர்த்துக்கிளறியபின் மூடி ஒரு நிமிடம் வேகவிட்டு, பொடித்த வேர்க்கடலை மற்றும் உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆகும்வரை மறுபடியும் மூடியி்ட்டு குறைந்த தீயில் வேக விடவும். அவ்வப்போது மூடியைத்திறந்து கிச்சடியைக் கிளறிக்கொடுக்கவும். உதிர்உதிராக நன்கு வெந்தபின் இறக்கி கொத்துமல்லித்தழையைத்தூவி சிறு எலுமிச்சைத்துண்டுடன் பரிமாறவும். சாப்பிடும்போது சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைப்பிழிந்து கிச்சடியுடன் கலந்து பின் சாப்பிடுதல் மரபு.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் செய்முறைப் பயிற்சி விளக்கம்
மிக மிக அருமை
செய்து பார்க்க உத்தேசித்திருக்கிறோம்
வாழ்த்துக்களுடன்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

செஞ்சு சாப்பிட்டுட்டு சொல்லுங்க.

வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...

செஞ்சாச். தின்னாச். சூப்பர்! தேங்க்ஸ்.

LinkWithin

Related Posts with Thumbnails