Tuesday 8 March 2016

பெண்..

படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி

பொய்மையை நம்பிடும் பொம்மையன்று சீர்தூக்கி
மெய்மையை ஆய்வாள் இவள்

விளக்கம்: யார் என்ன பொய் சொன்னாலும் நம்பிக்கொண்டு பொம்மை போல் இல்லாமல், ஆராய்ந்து அதிலுள்ள உண்மையை  அறிவாள்

மரணத்தின் கண்களில் மண்தூவி மன்னும்  
தரணியை ஆள்கிறாள் பெண்

விளக்கம்: பிறக்கு முன்னும் பின்னும் அவளை அழிக்க மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் முறியடித்து, மரணத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இவ்வுலகை ஆள்கிறாள்.

விலைகொடாமற் பெண்ணுக்கு வாழ்வது கிட்ட
தலையெடுக்க வேண்டும் சுயம்

விளக்கம்: வரதட்சணை எனும் விலை கொடுக்காமல் பெண்ணுக்கு மணவாழ்வு கிடைக்க மனவுறுதியுடன் சுயமாய் சிந்திப்பவளாய், தன் காலில் நிற்பவளாய் தன்மானத்துடன் இருப்பவளாய் இருத்தல் வேண்டும்.

கல்விதனைப் பற்றிடக் கெட்டியாய் பெண்ணுக்கு
நல்வினைகள் ஓங்கும் தினம்

விளக்கம்: கல்வி எனும் பிடியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டால் பெண்ணுக்கு நல்லவை நடக்கும்.

கருவறுத்த தீயோரும் தான்மறந்தார் தம்மைக்
கருக்கொண்ட தாயுமோர் பெண்

விளக்கம்: பெண்ணைக் கருவிலேயே அழிக்கும் தீயவர், தம்மைச்சுமந்தவளும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடுகின்றனர்.

தளைப்பட்ட பெண்பாவாய் கட்டனைத்தும் மாயை
களைந்தே எழுக விரைந்து

விளக்கம்: தன்னைக் கட்டிப்போட்டிருப்பதாக நினைக்கும் தளைகள் அனைத்தும் மாயையே.. அவற்றை விரைந்து களைந்து எழுவாய் பெண்ணே.

செதுக்கியும் ஆக்கியும் செய்திடுவாள் செம்மை
ஒதுக்கிடாளோர் குப்பை அறி

விளக்கம்: வேண்டாத குப்பை என்று ஒதுக்காமல் என எதையும் செதுக்கிச் செம்மை செய்திடுவாள். (எதற்கும் லாயக்கில்லாதவர் என ஒதுக்கப்பட்ட மனிதர்களையும் செம்மையாக்குபவள் பெண்)

வால்: மகளிர்தினத்தின் சிறப்புக்கொண்டாட்டமாய் எனது குறள் வெண்பாக்கள் அரங்கேறுகின்றன.

4 comments:

ஸ்ரீராம். said...

அருமை... அருமை.

மகளிர்தின நல் வாழ்த்துகள்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

படம், படக்குறள், படவிளக்கம் அனைத்தும் அருமை!
மகளிர்தின நல்வாழ்த்துகள் சகோதரி.
(இன்றுதான் உங்கள் தளத்தைக் கண்டேன், இனித் தொடர்வேன்)

வெங்கட் நாகராஜ் said...

அருமை அருமை.....

மகளிர் தின நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails