Friday 18 December 2015

தொலைத்த பொக்கிஷங்கள்

 நன்றி- தி இந்து
2005 ஆம் வருடம் ஜூலை மாதம் மும்பையை ஒரு மழை உருட்டி விளையாடியது. வருடாவருடம் வந்து செல்லமாய் மெல்லக்கிள்ளிப்போகும் மழை அவ்வருடம் பேயறை அறைந்ததில் நாங்களெல்லாம் நிலை குலைந்துதான் போனோம். சில இடங்களில் தரைத்தளத்தை மூழ்கடித்ததோடு நில்லாமல் முதல் தளத்தையும் அசுர வேகத்தில் விழுங்கியிருந்தது வெள்ளம். அவற்றில் என் குழந்தைகள் படித்த பள்ளியும் ஒன்று.

அப்போது யூனிட் டெஸ்டுகள் நடந்து கொண்டிருந்ததால் அதற்கு முன்பே வகுப்பு நோட்டுப்புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு தரைத்தளத்திலிருந்த ஸ்டாஃப் ரூமில் வைக்கப்பட்டிருந்தன. எதிர்பாரா விதமாய் பெருமழை வெள்ளம் இரவே ஸ்டாஃப் ரூமில் புகுந்து அத்தனையையும் மூழ்கடித்தது. வெள்ளம் வேறு இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் புத்தகங்கள் அனைத்தும் மழை+சாக்கடை நீரில் ஊறிக்கிடந்தன. மழைநீர் வடிந்து பள்ளியும் திறந்தபின் நோட்டுப்புத்தகங்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இங்க் பேனாவை உபயோகித்து எழுதப்பட்டவை தண்ணீரில் கந்தரகோலமாயிருக்க பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்த குறிப்பேடுகள் தப்பிப் பிழைத்திருந்தன.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு துணி காய வைக்கும் கொடிக்கயிற்றில் தொங்க விட்டு நீரெல்லாம் வடிந்தபின் அப்படியே உலர விட்டு தாள்கள் கிழியாது என்று நம்பும் பக்குவத்திற்கு உலர்ந்தபின் இஸ்திரிப்பெட்டியால் தேய்த்து மீதமிருந்த ஈரத்தையும் உலர்த்தினோம். இங்க் பேனாவால் எழுதப்பட்ட குறிப்பேடுகளை குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சங்கொஞ்சமாக எழுதிக்கொடுத்தோம்.

சமீபத்திய சென்னை மழையின்போது ஏராளமான புத்தகங்கள் பாழான செய்திகளைப் பார்க்கும்போதும் கேட்கும் போதும் இப்படி ஏதாவது செய்து அந்தப்புத்தகங்களைக் காப்பாற்ற முயற்சிக்கலாமே என்று மனது அடித்துக் கொள்கிறது. வாக்யும் க்ளீனர் ஹேர் ட்ரையர் போன்ற உபகரணங்களின் ஃப்ளோயர் கொண்டும் வெப்பக்காற்றால் உலர வைக்கலாம். இயன்றவர்கள் தெரிந்தவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

அச்சுப்பிரதிகளை ஏதாவது செய்து நிச்சயமாக மீட்டெடுக்கலாம். குப்பை மலையில் இன்னொரு குவியலாக அவை கிடப்பதைக் காணும்போது மனது வலிக்கிறது. //புத்தகங்கள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பல்ல. அவை நேற்றின் வரலாற்றை, இன்றைய நிகழ்வை நாளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொக்கிஷங்கள்’ என்பார்கள்.// ரொம்பவும் சரி. விதி வசத்தால் பெரும்பாலான சமயங்களில் அப்பொக்கிஷம் நம் கண்ணெதிரிலேயே நம் கையை விட்டுப்போவதை ஒரு விதக் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டே இருக்க நேர்ந்து விடுகிறது.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" எனும் ஆன்றோர் வாக்கு, ஒருவன் கற்ற கல்விக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர கல்வி கற்க உதவும் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் முதல் மடிக்கணினி, மேசைக்கணினி வரையிலான சாதனங்களுக்குப் பொருந்தாது என்பது இது வரை எத்தனையோ முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு புத்தகம் வெளியாகிறதெனில் எழுத்தாளரிலிருந்து அச்சிடுபவர் வரை அதன் பின் எத்தனையோ பேரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறைந்திருக்கிறது. அத்தனையையும் இப்போதைய மழை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. இப்போதும் தனி நபர்களின் சேமிப்பிலிருந்த புத்தகங்கள் முதல் வரும் ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகத்திருவிழாவிற்காக பதிப்பகத்தார் அச்சிட்டு தயார் செய்து வைத்திருந்த புத்தகங்கள் வரையில் அத்தனையும் வெள்ளநீரில் மூழ்கி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இவற்றில், பதிவர்களாகிய நாம் வெளியிட்டிருந்த நூல்களும் அடங்கும் என்பது ஆற்றவியலாத சோகமே. நீரில் மூழ்கியதால் ஒரு சில இடங்களில் அச்சு இயந்திரங்களும் பழுதாகியிருப்பதும் பெரும் குலைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியாகும் தி இந்து இது தொடர்பாக சிறப்புக்கட்டுரையொன்று வெளியிட்டிருக்கிறது.

மும்பை வெள்ளம் வடிந்த போது, அதிகம் சேதமாகாத, குறைந்த சேதமுள்ள பொருட்களை கடைக்காரர்கள் மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்தார்கள். தள்ளி விட்டார்கள் என்றே சொல்லலாம். மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். அம்மாதிரியே அதிகம் சேதப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி குப்பையில் எறிவதை விட, தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கலாம். வீணாக குப்பையில் மக்கி அழிவதை விட வாசிப்பில் விருப்பமுள்ள ஒருவர் கையில் சென்று சேர்வது கலைமகளுக்கும் விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆம் பொக்கிஷங்களை கூடுமானவரையில்
பயன்படுத்த முயற்சித்தலே புத்திசாலித்தனம்.
படம் பதிவை விட அதிகம் சொல்கிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

வேதனையான நிகழ்வு. பால கணேஷ் சேர்த்து வைத்திருந்த புத்தகமெல்லாம் பாழ் என்று சொன்ன போதே மனம் வலித்தது. இந்துவில் இந்தக் கட்டுரை படித்தபோது இன்னும் வலித்தது.

மோகன்ஜி said...

எனது நண்பர்கள் சிலரின் இழப்புகளைக் கேட்கும் போது இரத்தக் கண்ணீர் வருகிறது.புத்தகங்கள் டிஜிடைஸ் செய்துகொள்ள இலகுவான முறைகள் நடைமுறைக்கு வர வேண்டும்..

LinkWithin

Related Posts with Thumbnails