Monday 11 May 2015

பெருவாழ்வு

அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம் என பலப்பல நதிகளை இணைத்துக்கொண்டு பெருநதியாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது இவ்வாழ்வு.

கொழுந்து விட்டெரிய வைக்கும் நொடியை எதிர்நோக்கி காற்றுக்காகக்காத்திருந்த பேரார்வம் கொண்ட சிறுபொறி பெரு வனத்தை விழுங்கிப் பசியாற்றிக்கொண்டது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் சில விஷயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தவறான நேரத்தில் சொல்லப்பட்டால் சரியான சொற்களும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.

திட்டமிட்டுச்செய்யும் முயற்சிகள் எந்த முன்னேற்றமும் காணாத நிலையில், திட்டமிடப்படாமலே சில தங்களைத்தாங்களே நடத்திக்கொண்டு விடுகின்றன.

ஒவ்வொரு விடையிலும் முன்னெப்போதோ தேடிய இன்னுமொரு விடையையும் விடுவித்துக்கொண்டே போகிறது வாழ்வெனும் குறுக்கெழுத்துப்புதிர்.

சுறுசுறுப்பு ஒரு நூலிழை அதிகமாகும்போது பதட்டத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. முன்னது ஆக்கும், பின்னது தள்ளாட வைக்கும்.

எவ்விதத்துன்பத்தையும் தாங்கிக்கொள்பவர்களால்கூட, தனக்கு இழைக்கப்பட்ட  துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

காரணமில்லாமல் காரியமில்லை, ஆனால் அந்தக்காரணத்தைக் கேட்பதற்கு சில சமயங்களில் மனதும் நேரமும் இருப்பதில்லை.

இருண்ட பக்கங்கள் மட்டுமே கொண்ட வாழ்வு விதிக்கப்பட்டவர்கள் ஒளியை நோக்கிச் செல்லுமிடமெல்லாம் அவ்விருள் ஒரு நாய்க்குட்டியைப்போல அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

3 comments:

sury siva said...

முக்காலத்துக்கும் உண்மையான எண்ணங்களை
சொல்லால் அலங்கரித்து இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சிந்தனைகள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை. மூன்றும் நான்கும் மனதில் நிறுத்த வேண்டியவை.

LinkWithin

Related Posts with Thumbnails