Friday 16 March 2012

காது கொடுத்துக் கேளுங்க...

மனுஷங்களுக்கிடையேயான உறவு சீர் படுறதும், கெடுறதும் இந்த ஒரு செயல்லதான் அடங்கியிருக்குன்னே சொல்லலாம். “அப்பவே சொன்னேன்.. கேட்டாத்தானே”ன்னோ, “நான் சொல்றதை எப்பவுமே காதுல போட்டுக்கறதேயில்லை"ன்னோ,.. மத்தவங்க எப்பவுமே குறைபட்டுக்கற அளவுக்கு நடந்துக்கறது நிச்சயமா நம்மைப் பத்தின ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாது. 

ஒரே ஒரு வாயை படைச்ச ஆண்டவன் ஏன் ரெண்டு காதுகளைப் படைச்சான் தெரியுமா?.. மத்தவங்களோட வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேக்கறதுக்காகத்தான். ஒருத்தர் வந்து நம்ம கிட்ட தன்னோட மனக் கஷ்டத்தைச் சொல்றாருன்னு வெச்சுப்போம். அதுக்கான தீர்வை நாம கொடுக்காட்டியும் கூட அதைக்கேக்கறதே அவருக்கு ரொம்ப ஆறுதலைக் கொடுக்கும். “இன்னொருத்தர் சொல்றதை முழுசும் காது கொடுத்துக் கேட்டாலே உலகத்துல பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துடும்”ன்னு மேனேஜ்மெண்டின் குருவான ‘பீட்டர் ட்ரக்கர்(Peter Drucker)’ என்பவர் சொல்லியிருக்கார். நிஜம்தானே.. 

கேக்கறதுங்கறது நிஜமாவே கேக்கறதா இருக்கணும். மத்தவங்க என்ன சொல்றாங்கங்கறதை உன்னிப்பா முழு கவனத்தோட கேக்கப் பழகணும். அப்பத்தான் மத்தவங்க சொல்ல வர்றதை முழுசாப் புரிஞ்சுக்க முடியும். நம்ம உடல்மொழியும் அதை உறுதிப் படுத்தறதா இருக்கணும். உம் கொட்டறது சின்னதா தலையாட்டிக் கேக்கறது, ‘அப்றம் என்னாச்சு’ன்னு அவங்களை மேலும் சொல்லத் தூண்டறதுன்னு நாம்தான் நம்பிக்கை கொடுக்கணும்.

அப்டியில்லாம அவங்க சொல்றப்ப இடையிடையே குறுக்குக் கேள்விகள் கேட்டு அவங்களைக் குழப்பி, அவங்க சொல்ல வந்த விஷயத்தையே திசை திருப்பி, “ஏந்தான் இவங்க கிட்ட சொல்ல வந்தோமோ”ன்னு எரிச்சல் பட வைக்கிற நல்ல ஆத்மாக்களும் நிறையவே இருக்காங்க. அப்படியில்லாம அவங்க சொல்லி முடிச்சப்புறம் கேள்வி கேட்டுத் தெளிவு படுத்திக்கறது நல்லது.

சில பேர் இருக்காங்க.. மத்தவங்க சொல்றதை முழுசும் காதுல வாங்கிக்காம அரைகுறையாக் கேட்டு, இவங்களா ஒரு முடிவு செஞ்சுக்கிட்டு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு படுத்தியெடுப்பாங்க.  அவங்க சொல்றதை மத்தவங்க கேக்கணும், ஆனா மத்தவங்க இவங்க கிட்டே ஏதாவது சொல்ல வர்றப்ப நழுவிடுவாங்க. எதிராளிதான்.. பாவம். நொந்து நூடுல்ஸாகிடுவார்.

“ஏதோ அவங்க சொல்றாங்க.. நாம கேட்டு வைப்போமே”ன்னு கடமையேன்னு நின்னோம்னா அது சொல்ற விஷயத்தையும் சொல்ற நபரையும் அலட்சியப் படுத்தற மாதிரி ஆகிடும். இல்லையா?.. அது நிச்சயமா அவங்களுக்கிடையேயான உறவையும் பாழ்படுத்திடும். அது நண்பர்களாகவோ, உறவுகளாகவோ, பெற்றோர் மற்றும் குழந்தைகளாகவோ, இல்லைன்னா கணவன் மனைவியாகவோ யாரா வேண்ணாலும் இருக்கலாம்.

மத்தவங்களையாவது சமாளிச்சுடலாம். ஆனா, கணவன் மனைவிக்கிடையில இது பூதாகரமான பிரச்சினையை உண்டு செய்யும். அதுலயும் சில குடும்பங்கள்ல மத்தவங்க என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேப்பாங்க.. ஆனா, தன்னோட துணை ஏதாவது சொல்ல வர்றப்ப மட்டும் ரொம்ப முக்கியமான வேலை இருக்கற மாதிரி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவாங்க. இல்லைன்னா, கேக்கற மாதிரி பாவ்லா செஞ்சுக்கிட்டே டிவியிலயோ இல்லை செய்தித்தாளுலயோ மூழ்கிடுவாங்க. “நான் இப்ப என்ன சொன்னேன்”னு மட்டும் துணை இவங்களை க்ராஸ்செக் செஞ்சா அவ்ளோதான். “ஹி..ஹி.. நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்”ன்னு ரொம்ப மரியாதையா திருதிருன்னு முழிச்சுட்டே வழிவாங்க. ஆரம்பத்துல பொறுத்துப் போற துணை கடைசியில என்னிக்காவது கோடையிடி மாதிரி குமுறித் தீர்த்துடுவாங்க. சாது மிரண்டா வீடும் கொள்ளாதுங்க..

சரி.. ஒருத்தர் உங்க கிட்ட தன்னோட மனசுல உள்ளதைச் சொல்ல வரார்ன்னு வெச்சுப்போம். அவரைப் பத்தி நாம ஏற்கனவே நம்ம மனசுல “இவங்க இப்டித்தான்”னு ஒரு பிம்பம் வரைஞ்சு வெச்சுருப்போமே.. அதைக் கொஞ்ச நேரம் ஒரு போர்வையைப் போட்டு மூடி வெச்சுடறது நல்லது. அவங்க கொட்டற சொற்களுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டிருக்கற நிஜத்தையும், உண்மையான மன உணர்வுகளையும் கொஞ்சம் புரிஞ்சுக்கறது அவசியம். ஒரு வேளை அவங்களுக்குத் தன்னோட உணர்வுகளை சரியான வார்த்தைகள்ல விளக்கிச் சொல்லத் தெரியாம இருக்கலாம். அதுக்காக அதை அலட்சியப் படுத்திட முடியாதே. உதாரணமா மாமியார்ன்னா அவங்க மருமகளைக் கண்டிப்பாக் குத்தம் சொல்றவங்களாத்தான் இருப்பாங்கன்னு ஒரு பிம்பம் இருக்கு. அப்படியில்லாம மருமகளால கொடுமைப் படுத்தப்படற மாமியாராகவும் கூட இருக்க வாய்ப்பிருக்கே.

ரொம்ப நாளுக்கு முன்னாடி நடந்த நிஜக்கதை இது.. நிறையப்பேர் கேள்விப் பட்டிருப்பீங்க. பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்த பையனுக்கு சாக்ஸ் போடறப்ப பையன் கால் வலிக்குதுன்னு அழுதிருக்கான். குழந்தை ஸ்கூலுக்குப் போறதுக்கு அடம் பிடிச்சு அழறது சகஜம்தானேன்னு அதை அசட்டையா விட்டுட்டாங்க. வற்புறுத்தி ஸ்கூலுக்கும் அனுப்பி வெச்சுட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி ரொம்ப நேரத்துக்கப்புறம், பெத்தவங்களுக்கு சாக்ஸுல ஒளிஞ்சுருந்த தேள் ஒண்ணு பையனைக் கொட்டிடுச்சுன்னு ஸ்கூல்லேர்ந்து தகவல் வருது. அலறியடிச்சுட்டு ஓடினாங்க, “ஐயோ.. காலைல கால் வலிக்குதுன்னு குழந்தை சொல்லுச்சு.. நான் கேக்காம விட்டுட்டேனே”ன்னு அழுது தீர்த்துட்டாங்க. காலம் கடந்த ஞானம்!!

இதுல இன்னொண்ணையும் சொல்லணும்.. நம்ம குடும்பங்கள்ல ஒரு பொண்ணு புகுந்த வீட்டுல என்ன கஷ்டப்பட்டாலும் சரி.. எத்தனை கொடுமைகளை அனுபவிச்சாலும் சரி, ”மாமியார் மெச்சிய மருமகள் உண்டா?.. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். நீதான் அனுசரிச்சுப் போகணும்”ன்னு அந்தப் பொண்ணு உண்மையிலேயே தான் படற கஷ்டத்தைச் சொல்லும் போதெல்லாம் பூசி மெழுகி அனுப்பிடுவாங்க. அதைக் காது கொடுத்துக் கேக்கறதோ, இல்லை பிரச்சினைக்கு தன்னோட அனுபவத்துலேர்ந்து ஒரு நல்ல முடிவு சொல்றதோ நிறையப் பேர் செய்யறதேயில்லை.

எனக்குத் தெரிஞ்சு இப்படியொரு பொண்ணு வாழ்க்கையில இப்டித்தான் நடந்தது. அந்தப் பொண்ணு அழும் போதெல்லாம் அதுக்கு புடவையோ இல்லை பணமோ கொடுத்து சமாதானப் படுத்தி புகுந்த வீட்டுக்கு அனுப்பிச்சுடுவாங்க. கடைசியில வெறுத்துப் போன அந்தப் பொண்ணு தன்னோட உயிரையே மாய்ச்சுக்கிச்சு. “எம் பொண்ணு அப்பவே சொன்னாளே.. கேக்காம போயிட்டேனே”ன்னு அந்த அப்பா அவ்ளோ கதறினார். என்ன பிரயோசனம்??.. இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம் இல்லியா?. தன்னோட மகள் வாழ்க்கையில் தான் தலையிட்டுக் கெடுத்துடக் கூடாதுன்னு நினைச்ச தகப்பன் தன்னோட பெண்ணின் வார்த்தைகள்ல எத்தனை உண்மையிருக்குன்னு கொஞ்சம் உணர முயற்சி செஞ்சுருந்திருந்தா இது தவிர்க்கப் பட்டிருக்குமே.

குழந்தைங்க சொல்ல வர்றதை,.. முக்கியமா டீனேஜ் குழந்தைங்க சொல்ல வர்றதை நிச்சயமா கேக்கணும். இது அவங்களுக்குள்ளயும் இந்த நல்ல பழக்கத்தை கண்டிப்பா வளர்க்கும். நல்ல பேச்சாளனா இருக்கறதைவிட நல்ல கேட்பவரா இருப்பதுங்கறது ஒரு கலை. தன்னோட மன உணர்வுகளை பகிர்ந்துக்க குடும்பத்துல உள்ளவங்க தயாரா இல்லாதப்ப, அந்தக் குழந்தை ரொம்பவே ஏங்கிப் போயிடுது. தன்னோட மனசை உண்மையாவே காது கொடுத்துக் கேக்கறவங்க, அல்லது அப்டி கேக்கற மாதிரி நடிக்கிறவங்க பக்கம் அது நிச்சயமா திரும்பிடுது. பெத்தவங்க மேல ஒரு வெறுப்பு உண்டாகவும் மத்தவங்களோட கைப்பொம்மையா அந்தக் குழந்தை திசை மாறித் தீய வழிகள்ல போறதுக்கும் இது ஒரு காரணமா அமைஞ்சுடுது. நம்ம வீட்டுல கொழுகொம்பை சரியாக் கட்டலைன்னா, நம்ம வீட்டுக்கொடி பக்கத்து வீட்ல படர்றது இயற்கைதானே..

சில வீடுகள்ல குழந்தைங்கதானேன்னு அவங்க பேச்சை சரியா கேக்கறதேயில்லை. பள்ளிக்கூடத்துல நடந்தது, ஸ்கூல் பஸ்ஸுல நடந்தது, ஃப்ரெண்டோட நடந்த சண்டைன்னு அது எதையாவது பேச வரும்போதெல்லாம் “டோண்ட் டிஸ்டர்ப் மீ.. போய் விளையாடு, இல்லைன்னா டிவி பாரு”ன்னு திருப்பி அனுப்பிட்டு, அதுங்க சொல்ல வர்றதைக் கேக்கறதேயில்லை. இந்த “டோண்ட் டிஸ்டர்ப் மீ”யையே கேட்டு வளர்ற குழந்தைங்க வளர்ந்து பெரிசானதும் அதையே பெத்தவங்களுக்கு திருப்பிச் சொல்லுவாங்க. வயசானப்புறம் “பிள்ளைங்க நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குது.. நேரமில்லைன்னுட்டு ஓடிடுது”ன்னு குறைபடற பெத்தவங்க அதிகம். ஆனா, இதுக்கு வித்திட்டதும் நாமதான்ங்கறதை ஏனோ மறந்துடறோம்.


35 comments:

Sankar Gurusamy said...

ரொம்ப அருமையா முக்கியமான விசயத்தை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். உண்மையிலேயே காது குடுத்து மனசையும் குடுத்து கேட்டா பல பிரச்சினைகள் இல்லாமலே போய் விடும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

http://anubhudhi.blogspot.in/

ராமலக்ஷ்மி said...

இந்தப் பழக்கம் ரொம்ப அருகி வருகிறது:(! அவசியமான பதிவு சாந்தி! மிக நன்று.

கோமதி அரசு said...

குழந்தைங்க சொல்ல வர்றதை,.. முக்கியமா டீனேஜ் குழந்தைங்க சொல்ல வர்றதை நிச்சயமா கேக்கணும். இது அவங்களுக்குள்ளயும் இந்த நல்ல பழக்கத்தை கண்டிப்பா வளர்க்கும். நல்ல பேச்சாளனா இருக்கறதைவிட நல்ல கேட்பவரா இருப்பதுங்கறது ஒரு கலை. தன்னோட மன உணர்வுகளை பகிர்ந்துக்க குடும்பத்துல உள்ளவங்க தயாரா இல்லாதப்ப, அந்தக் குழந்தை ரொம்பவே ஏங்கிப் போயிடுது. தன்னோட மனசை உண்மையாவே காது கொடுத்துக் கேக்கறவங்க, அல்லது அப்டி கேக்கற மாதிரி நடிக்கிறவங்க பக்கம் அது நிச்சயமா திரும்பிடுது. பெத்தவங்க மேல ஒரு வெறுப்பு உண்டாகவும் மத்தவங்களோட கைப்பொம்மையா அந்தக் குழந்தை திசை மாறித் தீய வழிகள்ல போறதுக்கும் இது ஒரு காரணமா அமைஞ்சுடுது. நம்ம வீட்டுல கொழுகொம்பை சரியாக் கட்டலைன்னா, நம்ம வீட்டுக்கொடி பக்கத்து வீட்ல படர்றது இயற்கைதானே..//

நல்லா சொன்னீங்க சாந்தி.

குழந்தைகள் பெற்றோர்களுடன் எல்லா விஷ்யங்களையும் பேசும் சுதந்திரமும் அதை காது கொடுத்து கேட்டு அதில் இருக்கும் பாதக, சாதகங்களுக்கு நல்ல தீர்வு பெற்றோர் கொடுக்கும் போது நல்ல நட்பு , உறவு பொற்றோர் குழந்தைகளிடம் ஏற்படும்.

நல்ல பதிவை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

அருமையான பகிர்வு.

அந்த காது படத்தை பார்த்தா தான் பயமா இருக்குங்க:))

ஹேமா said...

படம் வெருட்டுது சாரல்.காதால் இரண்டு பிரயோசனம்.ஒன்று உளவாங்கிக் கேட்டுகொள்வது.மற்றது ஒரு காதால் கேட்டு மற்றக் காதால் விட்டுவிடுவது.அதனால்தான் இரண்டு காதுகள் படைத்தாரோ கடவுள்.காதின் அலசல் அருமை !

பாச மலர் / Paasa Malar said...

நல்லதொரு பகிர்வு...உரிய காலத்தில் காது கொடுத்துக் கேட்காமல் பின் லபோ திபோவென்று அலறியடித்துக் கொள்கிறோம்...நம்மில் அநேகர் அநேக சமயங்களில்

குறையொன்றுமில்லை. said...

நல்லதொரு பகிர்வு சாந்தி உன்னோட ப்ளாக் ஸ்பாட் . காம் வருதே. எங்களுக்கெல்லாம் . இன் வருது ஸோ தமிழ்மணத்தில் இணைக்கவே முடியல்லே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் உள்ள காது எவ்ளோ பெரிசா இருக்கு! ;)

நீங்க சொல்லியுள்ள விஷயங்கள் அதைவிடப்பெரிசு தான்.

//ஒருத்தர் வந்து நம்ம கிட்ட தன்னோட மனக் கஷ்டத்தைச் சொல்றாருன்னு வெச்சுப்போம். அதுக்கான தீர்வை நாம கொடுக்காட்டியும் கூட அதைக்கேக்கறதே அவருக்கு ரொம்ப ஆறுதலைக் கொடுக்கும். //

மிகவும் வாஸ்தவமான வரிகள்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

சந்திர வம்சம் said...

நம்ம வீட்டுல கொழுகொம்பை சரியாக் கட்டலைன்னா, நம்ம வீட்டுக்கொடி பக்கத்து வீட்ல படர்றது இயற்கைதானே..//

உண்மை தான்

உணவு உலகம் said...

மனித உறவுகள் மேம்பட அருமையான உபாயங்கள். நன்றி.

Yaathoramani.blogspot.com said...

இன்றைய சூழ்லில் உண்டாகிற பல பிரச்சனைகளுக்கு காரணமே
யாரும் காது கொடுத்துக் கேளாமல் கேட்பது போல் நடிப்பதுவே
பதிவின் கருவும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
பயனுள்ள பதிவு

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,
கேட்காமல் இருப்பது மகா கொடுமை.
அதையும் அடக்கி வளர்க்கப் பட்ட பெண்கள், புக்ககத்தில் அமைதி கிடைக்காமல் பிறந்தகம் வரும்போது
குடும்ப எதிர்காலத்துக்காகப் பொறுத்துப் போ என்று சொல்வது வருத்தம் தருவது. எத்தனை நபர்களுடைய சுதந்திரம் பறி போகிறது.
இப்போ இருக்கிற தலைமுறை மாறினாலும்,வேடிக்கை என்ன என்றால் இப்போழுது பெண்கள் கல்லூரிக்குப் போனதும் பெறும் திடீர் சுதந்திரம் அவர்கள் பெற்றோர் பேச்சைக் கேட்பதில் சிரமம் வந்துவிடுகிறது.அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் பெற்றோர் படும் சிரமத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
அம்மாவும் பெண்ணும் ஒரு பக்கம் .அப்பா ஒரு பக்கம்.:0)

மாதேவி said...

அவசியமான பகிர்வு.

பகிர்ந்துகொள்வதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றிக் கூறியுள்ளீர்கள்.
ஆமாம் இடைவெளியும்,துன்பமும் குறைய வழிவகுக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

கம்யூனிகேஷன் ரொம்ப அவசியம் எனபதனருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

சந்திர வம்சம் said...

[ma]அருமையான பகிர்வு.[/ma]

சந்திர வம்சம் said...

[im]http://www.desicomments.com/dc/10/26633/26633.jpg[/im]

ரிஷபன் said...

ஒருத்தர் உங்க கிட்ட தன்னோட மனசுல உள்ளதைச் சொல்ல வரார்ன்னு வெச்சுப்போம். அவரைப் பத்தி நாம ஏற்கனவே நம்ம மனசுல “இவங்க இப்டித்தான்”னு ஒரு பிம்பம் வரைஞ்சு வெச்சுருப்போமே.. அதைக் கொஞ்ச நேரம் ஒரு போர்வையைப் போட்டு மூடி வெச்சுடறது நல்லது. அவங்க கொட்டற சொற்களுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டிருக்கற நிஜத்தையும், உண்மையான மன உணர்வுகளையும் கொஞ்சம் புரிஞ்சுக்கறது அவசியம். ஒரு வேளை அவங்களுக்குத் தன்னோட உணர்வுகளை சரியான வார்த்தைகள்ல விளக்கிச் சொல்லத் தெரியாம இருக்கலாம். அதுக்காக அதை அலட்சியப் படுத்திட முடியாதே.

Superb.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கர் குருசாமி,

வீட்டுப்பிரச்சினையோ நாட்டுப்பிரச்சினையோ மத்தவங்க மன உணர்வுகளைப் புரிஞ்சுக்காததால்தானே பெருசாகிடுது. அவங்க சொல்லறதைக் கேக்காம எப்படிப் புரிஞ்சுக்கறது?.. இல்லையா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வரவுக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ரொம்ப நன்றி, வரவுக்கும் வாசிச்சதுக்கும்.

மஹா said...

அவசியமான அருமையான பகிர்வு

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆதி,

மத்தவங்க சொல்றதை நல்லாக் கேட்கணும்ன்னுதான் ரெண்டு காதுகளைப் படைச்சுருக்கார் கடவுள். சரியாக் கேக்காத ஆட்களுக்கு காதை இப்படிப் பெரூசாக்கிருவாராம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வாசிச்சதுக்கு நன்றிங்க,

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

காலம் கடந்தபின் வருந்தி என்ன பயன்?.. இல்லையா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

அதற்கான வழிமுறைகளை நமது சகோக்கள் ஏற்கனவே பதிவிட்டு விட்டார்கள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பத்மா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

மிக்க நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்திர வம்சம்,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

மகளுடைய திருமண வேலையில் பிஸியா இருந்த போதிலும் வாசிச்சு கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

இப்படியும் ஒரு புறம் நடக்கத்தான் செய்யுது..

வாசிச்சதுக்கு நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரெண்டு பக்கமும் இருந்தாத்தான் அது 'கம்'யூனிகேஷன் :-))

வாசிச்சதுக்கு நன்றிங்க.,

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்திர வம்சம்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

மிக்க நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails