Thursday 5 September 2024

சாரல் துளிகள்


கனவுகள் நொறுங்கும் ஒலி காதுகளுக்குக் கேட்பதில்லை.

நனவின் இருண்மைகளுக்குள் அடைகாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன மேலும் பல கனவுகள்.

ஆடியில் தன் பிம்பத்தை நோக்கியவாறு வெகுநேரம் நின்றிருந்தது நனவு. பொறுத்திருந்து பொறுமையிழந்து நனவின் கைகோர்த்து நடக்கத்தொடங்கிய பிம்பம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது கனவென.

நிராசையாகப் போகக்கூடியவை எனத் தெரிந்தே காணும் கனவுகளுக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசு.

பூவாகிக் காயாகிக் கனியக் காத்ததைப் பறிகொடுப்பதையொத்ததே, கனவு வளர்த்து நிதர்சனத்துக்காகப் பலி கொடுப்பதும்.

கனவுகளால் அலங்கரிக்கப்பட்டு கனவை நோக்கி இட்டுச்செல்லும் கனவுப்பாதையில் அடிக்கொரு வேகத்தடை இடறத் தயாராய்.

கலையாத கனவொன்றை வேண்டி நின்றால், சுக்குநூறாய்க்கலைத்த துண்டுகளையள்ளிக் கையில் நிறைத்து, இணைத்து அடைந்துகொள் என்னும் விதியே.. அடியெது முடிவெது என்றாவது சொல்லிப்போ. 

யார் தொலைத்த கனவோ?!.. வழி மறந்து தவித்துக்கொண்டிருந்ததை யாரோ இன்னொருவர் அபயமளித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்.

கனவின் அடியொற்றி ஓடியும் கை நழுவி விட, குற்றப்பத்திரிகை வாசித்தபடி அமர்ந்திருப்பவரின் கண்ணுக்குள் உற்று நோக்கி, 'என்னையடையும் இலட்சியத்தைத் தொலைத்தது நீயா நானா?'வெனக்கேட்கிறது மீளவும் வந்த கனவு. 

தன்னிடம் வருபவர்களிடம் அவ்வப்போது பலியும் கேட்கிறது அடிக்கொரு தரம் சன்னதம் கொண்டு ஆடியபடியிருக்கும் உக்கிரமான ஆதி கனவிலிருந்து கிளைத்த அந்த அதியுக்கிரக் கனவு.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails