Tuesday 3 March 2020

சாரல் துளிகள்

பிய்த்துப் போட்ட இட்லித்துண்டுகளாய்ச் சிதறிக்கிடக்கும் முகிற்கூட்டத்தைக் கூட்டிப் பெருக்குகிறாள் தென்றல் பெண்.

சமையல் பழகும் சிறு பெண் வார்த்த தோசை போல் பிய்ந்து கிடக்கின்றன மேகங்கள்.

மலைமகளின் தோளில் முந்தானையெனத் தொற்றிக்கொண்டிருக்கிறது முகில்.

கழுவிக் கவிழ்த்த பாத்திரம்போல் நிர்மலமாயிருக்கும் வானத்தில், ஒட்டிக்கொண்டிருக்கும் பருக்கை போல் ஒற்றை முகில்.

இலக்கில்லாத வழிப்போக்கனைப்போல் காற்று இழுத்துச்செல்லும் வழி சென்று கொண்டிருக்கிறது முகில்.

வாழையிலையில் விழுந்த சூடான அல்வா போல் வழுக்கிக்கொண்டு ஓடுகிறது மேகம்.

எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் சர்க்கரைத்துண்டுகள் போல், வான்வெளியில் ஊர்ந்து செல்கின்றன முகில்கள்.

எந்தக் குழந்தை சிந்திய தேங்காய்த் துருவலோ... சிதறிக் கிடக்கிறது வானமெங்கும் முகில்களாய். காரிருளில் பஞ்சு மிட்டாயென மெல்ல அசைந்த உருவத்திடம் 'யார் நீ?'யெனக் கேட்டேன். 'ம்யாவ்' எனக் கூறி விட்டு விர்ரென வானேகி நீந்தத்தொடங்கியது முகில்.

பருத்திப் பாலாய் முகந்தனவோ அத்தனை முகில்களும்! இத்தனை வெண்மை கொண்டிருக்கின்றன!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆஹா..இந்தப் பதிவைப் படிக்க வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற பழமொழி நினைவுக்கு வருகிறது..

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் சிறப்பு.

LinkWithin

Related Posts with Thumbnails