Saturday 22 September 2018

கண்பதி - 2018

“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”


எங்கள் வீட்டுப்பிள்ளையார்
இவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பிள்ளையார்
என வேண்டி விரும்பி அழைக்கும் மக்களின் அழைப்பையேற்று பிள்ளையார் எங்களூருக்கு வந்து கொலுவிருந்து அருள் பாலித்து வருகிறார். வழக்கம்போல் பத்து நாட்கள் இருந்து விட்டு "நா போயிட்டு வரேன்" என பத்தாம் நாளான அனந்த சதுர்த்தசியன்றி விடைபெற்றுக்கொண்டு விடுவார். ஆரத்தி பூஜை, பஜனை என கோலாகலமாக இருந்து விட்டு அவர் விடைபெற்றுச் சென்றதும் சட்டென்று ஒரு சூன்யம் மனதைச் சூழ்ந்து கொண்டு அரிக்கத்தொடங்கிவிடுகிறது. நவராத்திரிக்கு அம்பாள் வந்து கொலுவிருக்கும் வரைக்கும் இதே சூன்யம்தான் மனதை ஆளப்போகிறது. 

சுற்றுப்புறச் சூழலைக்காக்கும் பொருட்டு மஹாராஷ்ட்ராவில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மக்கர் எனப்படும் தெர்மோகூல் பொருட்களும் அடங்குவதால் பிள்ளையாருக்கான தெர்மோகூல் மண்டபங்கள் இவ்வருடம் எங்குமே காணக்கிடைக்கவில்லை. மூங்கில், மற்றும் துணிகளைக்கொண்டு செய்யப்பட்ட அலங்காரங்களே எங்கும் காணக்கிடைத்தன. கல்யாணிலிருக்கும் "பாயி கா புத்லா" பகுதியில் மூங்கில் கம்புகளால் மோதகம் மற்றும் தேங்காய் வடிவில், சட்டம் அமைக்கப்பட்டு அதில் தேங்காய் நாரைப் பொதிந்து உருவம் கொடுக்கப்பட்ட மண்டபங்கள் நிறையச் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வண்ணமே கைகளால் செய்யப்பட்டு நீர் வண்ணமடிக்கப்பட்டிருந்த பிள்ளையார்களும் இவ்வருடம் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்போதாவது சூழலைப்பற்றிய அக்கறை வந்ததே எனத்தோன்றியது நிஜம்.


வழக்கப்படி எங்கள் வீட்டுக்கும் பிள்ளையார் வந்த, ஐந்து நாட்கள் கொலுவிருந்து, ஐந்தாம் நாளான "கௌரி கணபதி" தினத்தன்று விடைபெற்றுச் சென்றார். பார்வதியின் இன்னொரு பெயர்தான் கௌரி. பிள்ளையார் சதுர்த்திக்கு முன் தினம் இவரை சில வீடுகளில் இருத்தி பூஜை செய்வார்கள். பின்னர் சதுர்த்தி ஆரம்பித்த ஐந்தாம் தினத்தன்று அனைவருக்கும், முக்கியமாக சுமங்கலிகளுக்கு விருந்திட்டு, தாம்பூலமளித்து பின்னர் கௌரியையும் பிள்ளையாரையும் விசர்ஜன் செய்வர். சில வீடுகளில் பிள்ளையாரை இருத்தாமல் கௌரியை மட்டும் வைத்துப் பூஜை செய்வதுமுண்டு. 


எங்கள் பிள்ளையாரையும் யதாஸ்தானம் அனுப்பி, கையில் கட்டுச்சோறு கொடுத்து, விசர்ஜன் செய்து விட்டு வந்தோம். நிர்மால்யம் என அழைக்கப்படும் களைந்து வைத்த பூஜைப்பொருட்கள் ஒரு பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், சில சமயம் அது நிரம்பி வழிந்து பக்தர்களின் காலில் மிதிபடுவது மனக்கஷ்டம் கொடுக்கக்கூடிய காட்சி. இம்முறை ஒரு பெரிய ட்ரக்கைக் கொண்டு வந்து நிறுத்தி, ஆட்கள் அங்கே நின்று அதில், நிர்மால்யத்தைச் சேகரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நல்ல விஷயம்தான்.


வழக்கமாக, சதுர்த்தி ஆரம்பித்த பின்னும் லேசான மழை இருந்து அனந்த சதுர்த்தசிக்குப் பின் நின்று விடும். மழையில் நனைந்து கொண்டே ஆரத்தி செய்த அனுபவங்களும் மும்பைக்கர்களுக்கு உண்டு. ஆனால் ஏனோ இவ்வருடம் பத்து நாட்களில் மழையே இல்லாமல் இருந்தது. இவ்வருடம் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பிள்ளையார்தான் காக்க வேண்டும். 

கட்டுச்சோறும் கையுமாக.
கிளம்பிச்சென்ற பிள்ளையாரின் இனிய ஞாபகங்களோடும் வரவிருக்கும் நவராத்திரியைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடும் இப்பண்டிகைக்காலம் இனிதே ஆரம்பித்திருக்கிறது. வரும் காலமெல்லாம் எல்லோருக்கும் எல்லா நலனும் விளைய இறைவன் அருள்வானாக.

"கணபதி பப்பா மோர்யா"

வால்: ஒன்றிரண்டு படங்களைத்தவிர மற்ற அனைத்தும் மொபைலில் க்ளிக்கியவை. இன்னுமிருக்கும் படங்கள் வரவிருக்கும் இடுகையில்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

கணபதி பப்பா மோர்யா.....

சிறப்பான படங்கள் பகிர்வு. இங்கேயும் இப்போது நிறைய கொண்டாடுகிறார்கள். வேறு விழாவில் இருந்ததால், நேற்றைய விசர்ஜன் சமயத்தில் படங்கள் எடுக்க இயலவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails