Friday 13 April 2012

வந்தாள் சித்திரை மகள்..


இதோ, 

இன்னுமொரு புத்தாண்டு.

வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம். 

கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்த சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகிறோம். என்னதான் தமிழ்ப்புத்தாண்டு என்றாலும் இது தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில், முக்கியமாக எங்கள் நாஞ்சில் நாட்டுப்பகுதியில் இன்றும் கேரளச்சாயலுடன் விஷூக்கனி கண்டே கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் தாக்கத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் விஷூக்கனி காணும் வழக்கம் ஒரு சில ஆண்டுகளாகக் காணப்படுகிறது.

விஷூ என்பதற்கு சரிசமமான என்ற பொருளும் உண்டு. அதாவது இன்றைய தினம் நாளும், இரவும் ஒரே அளவைக் கொண்டிருக்குமாம். இதனால்தான் நாஞ்சில் பகுதியிலும், கேரளத்திலும் இதை நாங்கள் சித்திரை விஷூ என்றே குறிப்பிடுவோம்.

சித்திரை விஷூவை முன்னறிவிப்பது போல் எங்கும் மஞ்சள் சரக்கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விட்டன. சர விளக்குகளை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி விட்டது போன்று தோன்றும் இந்த மஞ்சள் சரக்கொன்றை சிவனுக்கு மிகவும் பிரியமானதாம். இந்தப்பூ விஷூக்கனியில் கட்டாயம் இடம் பெறும்.
 சரக்கொன்றை கிடைக்காததால பொக்கே வெச்ச இந்த வருஷக் கொண்டாட்டம்..
பூஜையறையிலோ அல்லது வரவேற்பறையிலோ விஷூவுக்கு முந்தைய நாள் இரவில் விஷூக்கனிக்கான ஏற்பாடுகள் அந்த வீட்டின் மூத்த பெண்மணியால் செய்யப்படும். ஒரு உருளியிலோ அல்லது அகலமான ஒரு தாம்பாளத்திலோ எல்லா வகையான பழங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், தங்க,வெள்ளி நகைகள், பணம், சில்லறைக்காசுகள் போன்றவை நிரப்பப்பட்டு, அதனுடன் மஞ்சள் சரக்கொன்றை மலரும் வைக்கப்படும். இதனை ஒரு கண்ணாடியின் முன் வைப்பார்கள். இந்த உருளியில் அருகில் அழகான கிருஷ்ணர் படமோ அல்லது சிலையோ வைக்கப்படும். இதனுடன் நிலவிளக்கும் மறுநாள் காலையில் தீபமேற்றத் தயாராக வைக்கப்படும். வாசலில் அழகான மாக்கோலம் போடப்பட்டு, நுழைவாயிலில் மாவிலைத்தோரணங்களும் கட்டி அலங்கரிப்பதுண்டு.

மறுநாள் இருள் பிரியாத, ஒருவர் முகம் இன்னொருவருக்குச் சரியாகப் புலப்படாத அந்த அதிகாலையில் வீட்டின் மூத்த பெண்மணி முதலில் எழுந்து, தீபமேற்றி விஷூக்கனி தரிசித்து விட்டு, வீட்டின் உறுப்பினர்களை ஒவ்வொருவராகக் கண்களைப்பொத்திக் கொண்டு வந்து, விஷூக்கனியின் முன் நிறுத்துவார். கண்களைத்திறந்ததும், இனிய கனி வகைகளையும், தங்கம், வெள்ளி, காசு பணம் போன்ற ஐஸ்வர்யங்களை முதலில் கண்டு விட்டு, தீபத்தையும் தரிசித்து விட்டு, பின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பர். வருட ஆரம்பத்தில் நல்லவையையே கண்டால், அந்த வருடம் முழுமையும் நன்றாகவே இருக்கும், வருட முழுமைக்கும் காசு பணத்திற்கும் இனிமைக்கும் குறைவிருக்காது என்பது நம்பிக்கை. வருட ஆரம்பத்தில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்டால் பிற்பாடு ஏதாவது தீங்கு வந்தால் கூட, “யார் முகத்துல முழிச்சேனோ.. தெரியலை சாமி” என்று அடுத்தவரை வைய இடமிருக்காது :-)

கனி கண்டானதும், அனைவரும் குளித்து தயாராக வந்ததும், பூஜை நடைபெறும். அவலுடன், பழங்கள், வெல்லம், தேன், தேங்காய் போன்றவை சேர்த்துப் பிசைந்து உருண்டை பிடித்து நைவேத்தியமாக வைப்பார்கள். புதுமணத்தம்பதியினருக்கு பெண் வீட்டிலிருந்து தலை விஷுச் சீராக கிலோ கணக்கில் அவல், வெல்லம், தேங்காய், பழங்கள், ஏலக்காய், வெற்றிலை பாக்கு எல்லாம் முதல் நாளே வந்து விடும். தமிழகத்தின் மற்ற இடங்களைப்போல் அல்லாமல், எங்கள் பகுதியைப்பொறுத்தவரை சித்திரை முதல் நாள் என்றால் அவல்தான் பிரதானமாக கருதப்படும். அதுவும் சம்பா அவல் என்றால் இன்னும் விசேஷம்.
பதிவு மட்டுமல்ல படமும் மீள்பதிவா போடலாமாக்கும் :-)
தீபாராதனை முடிந்ததும், வீட்டின் மூத்தவர்கள் இளையவர்களுக்குப் பரிசாகப் பணம் கொடுப்பதுண்டு. இதை நாங்கள் “விஷூக் கை நீட்டம்” என்று சொல்லுவோம். சொந்தங்கள் கொடுக்கா விட்டால் கூட கையை நீட்டி அவர்கள் பாக்கெட்டிலிருந்து உரிமையுடன் பணத்தை எடுத்துக் கொள்வதாலும் இதற்கு கை நீட்டம் என்று பெயர் வந்திருக்குமோ என்னவோ. யோசிக்க வேண்டிய விஷயம் இது :-) இன்றைய தினம் முழுக்க சிறியவர்கள் அனைவரும் பெரியவர்கள் காலில் தடால் தடால் என்று விழுந்து எழுந்திருப்பார்கள். எதற்கா?.. ஆசி வாங்குவதற்கில்லை, கை நீட்டம் வாங்கத்தான். காலில் விழுந்தால் கையில் காசு.

மதிய விருந்து ‘சத்ய’ என்று அழைக்கப்படுகிறது. பலாப்பழ சீசன் தொடங்கி விட்டபடியால் இன்றைக்கு நிறைய வீடுகளில் பலாப்பழ பிரதமன் செய்யப்படும். சிறுபயிறு பாயசமும் கட்டாயம் இடம் பெறும். வெறும் ஒரு வகைப் பாயசத்துடன் நாங்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை,.. ஆகவே, ‘விஷு சத்ய’வில் பால் பாயசமும் உண்டு. 

இன்றைய தினம் கோயில்களிலும் கனி காணல் நடைபெற்று பக்தர்களுக்கு பகவான் கை நீட்டம் கொடுப்பார். சில சமயங்களில் தமிழ்,கேரள புத்தாண்டு தினங்கள் ஒரே நாளில் வருவதுண்டு. இந்த முறை கேரள மக்களுக்கு நாளை புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே ஐயப்பன், இன்று அவனைத்தரிசிக்கச் சென்ற என்னிடம், ”மக்ளே,.. நீ நாள வரூ. நமக்கு கனி காணாம். பின்னே கை நீட்டமும் தராம். இப்போள் அரவண கழிக்கூ” என்று சொல்லி அரவணைப்பிரசாதத்தைத் தந்து அனுப்பினான். கோயிலில் கணபதி ஹோமமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்த படியால் கூடுதலாக அவல் பிரசாதமும் கொடுத்தான். சென்ற வருடம் ஒரே நாளில் தமிழ் மலையாள விஷூக்கள் வந்ததால், தரிசனம் செய்யப் போயிருந்த போது கை நீட்டம் கிடைத்தது. 
சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம். நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே.மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல், மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல், புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய்,

புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் நந்தன ஆண்டு அனைவரின் வாழ்விலும் நந்தவனமாய் மகிழ்ச்சி குலுங்கிடச் செய்யட்டும்..

டிஸ்கி: வல்லமையில் மட்டுமல்லாமல் இங்கேயும் வாழ்த்திக்கறேன்.


22 comments:

Asiya Omar said...

அருமையான பகிர்வு.இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் சாரல் !

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி

தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 4

துளசி கோபால் said...

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துகள்.

புது (பாம்புப்)பஞ்சாங்கத்தில் இன்னிக்கு சித்திரை ஒன்னு & விஷூபுண்யகாலம் ரெண்டுமே போட்டுருக்குன்னு இன்னிக்கே கைநீட்டம் வாங்கிக்கிட்டேன்:-))

குறையொன்றுமில்லை. said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் நந்தன ஆண்டு அனைவரின் வாழ்விலும் நந்தவனமாய் மகிழ்ச்சி குலுங்கிடச் செய்யட்டும்.

கோமதி அரசு said...

சாந்தி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நானும் புத்தாண்டு பதிவு போட்டு இருக்கிறேன். நேரம் இருக்கும் பாருங்கள்.

raji said...

நந்தன வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் சாந்தி!

கை நீட்டம்(!)இப்போதுதான் கேள்விப்படுகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள்.

தங்களுக்கு என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

பால கணேஷ் said...

நந்தன ஆண்டு நல்லனவற்றையே தர உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாரல் மேடம்!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு சாந்தி. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

அருமையான பகிர்வு சாரல். மீண்டும் பழைய காலத்துக்குப் போஉவிட்டேன். எங்கள் பாட்டி வீட்டில் இந்தப் பழக்கம் உண்டு. கையில் காசும் கிடைக்கும். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்....

ஸாதிகா said...

உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

சித்திரை மகளை
வரவேற்று
அவள் பிறப்பிற்கான
விளக்கங்கள் மிக அருமை நண்பரே...

தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

எங்க வீட்டிலும் விஷுக்கனி கண்டு, பச்சடியும்,பாயசமும் சாப்பிட்டு இனிமையாக கழிந்தது.
சிறு வயதில் அக்கம், பக்கம் வீடுகளில் கைநீட்டம் வாங்க ஓடுவோம். நானும் ரோஷ்ணியை ஒரு நமஸ்காரம் செய்யச் சொல்லி விஷுக்காசு கொடுத்தேன்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

பாச மலர் / Paasa Malar said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

மஹா said...

இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! விஷூ, விஷூக் கனி விவரம் தெரிந்து கொண்டேன்.
எனது உளங் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

அழகிய படங்களுடன் நல்ல பதிவு. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் நந்தன வருட வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி..

LinkWithin

Related Posts with Thumbnails