Saturday 6 May 2023

ஈற்றடிக்கு எழுதிய பாக்கள்.


துளிர்க்கும் முகையால் களிக்கும் களிறு
குளிர்பனி தூங்கி ஒளிமர மொத்த
தளிர்நிறை காவில் களியாடும் உள்ளத்(து)
ஒளியில் விரியும் உலகு

நெளிகயிறு பாம்போ விளிகுரல் பேயோ
இளிவரல் அஞ்சி ஒளிப்பர் கிலியை
தெளிந்த மனத்திற்குத் தீங்கில்லை உள்ளத்(து)
ஒளியில் விரியும் உலகு.

பிறப்பும் இறப்பும் பிறவியில் நேராம்
சிறப்பும் சறுக்கலும் அஃதே அறிவாய்
தெளிந்த மனத்திற்குத் தீங்கில்லை உள்ளத்(து)
ஒளியில் விரியும் உலகு.

கல்வி கெடுப்போன் கெடுமதி கொண்டோன்
கலப்பட ஔடதம் காய்கனி செய்வோனை
சற்றுமா ராயாமல் சுற்றம் பிழைப்போனை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

குடிநீர் குலைப்பார் ஒருக்காரே குப்பை
மடிப்பிள்ளை பெண்ணெனில் மாய்த்திடும் பற்றிலர்
சற்று மறியா செழுமரம் சாய்ப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

கச்சிதமாய் கூண்டிலிட்டு காய்பழ மும்வைத்து
மிச்சமீதி சேவை முடித்துத் திரும்புகையில்
நச்சென்று தாழ்ப்பாளும் நைத்தது கண்டு
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

இச்சகத்து னக்கோர் இணையுண்டோ வென்றவர்
அச்சமின்றிப் பொய்யுரைத்த அச்சிறு சச்சரவு
மிச்சமற்றுப் போமோ மயங்கி விடையற்று
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails