Sunday 17 April 2022

திருநெல்வேலி - நீர் நிலம் மனிதர்கள் (நாறும்பூ நாதன்)


ஒரு பகுதியைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், அப்பகுதியின் நீர், நில வளம், அமைப்பு, மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, அப்பகுதியின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும், பகிரப்படவும் வேண்டும். அப்படி நெல்லைச்சீமையைப்பற்றி நாம் அறிந்து கொள்ள ஏதுவான ஒரு நூல்தான் எழுத்தாளர் இரா. நாறும்பூ நாதன் அண்ணாச்சி எழுதிய திருநெல்வேலி நீர்- நிலம் - மனிதர்கள். அண்ணாச்சியே இந்நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல திருநெல்வேலியின் ஒவ்வொரு அடிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு அங்குலத்துக்குமே வரலாறு உண்டு எனத்தோன்றுகிறது இந்நூலை வாசித்து முடிக்கையில். ஏயப்பா!!.. எத்தனைத்தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது இச்சுரங்கம் என மலைக்கிறோம். மாணாக்கருக்குப் பாடப்புத்தகமாகவே வைக்கலாம். 

வரலாறு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நெல்லை மண்ணிலிருக்கும் "ஆதிச்ச நல்லூர்". சிந்து சமவெளி நாகரிக ஆய்வுக்கும் முற்பட்டது இங்கு நடந்த ஆய்வு. இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வும் ஆதிச்ச நல்லூரில் நடந்ததே.  எகிப்திய பிரமிடுகளை விட இங்குள்ள முதுமக்கள் தாழிகள் பழமையானவை என அறியும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. அவ்வாறே கொற்கையில் நடந்த ஆய்வும் தமிழ்நாட்டின் பல பழம்பெருமைகளை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. பழந்தமிழகத்தில் கரன்சி அச்சடிக்கப்பட்ட முதல் இடமாக கொற்கை அமைந்துள்ளது. இவ்விரண்டு இடங்களிலும் பிஷப் கால்டுவெல் ஆரம்பித்து வைத்த அகழ்வாராய்ச்சியைப் பின்னர் பிற ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருட்களைப்பற்றியும் அவை தற்போது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப்பற்றியும் நூலாசிரியர் பல்வேறு தகவல்களைக் கொடுத்துள்ளார்.

நெல்லைச்சீமையில் அக்காலத்தில் மிஷனரிகள் வந்ததையும் அவர்கள் இங்குள்ள மக்களின், முக்கியமாக தாழ்த்தப்பட்ட, உடலில், மனதில் குறைபாடுள்ள மக்களின் அறிவுக்கண்களைத்திறந்து வைத்ததையும், ஏராளமான கல்வி நிலையங்களைத் திறந்து வைத்ததையும் வாசிக்கும்போது, தேவாலயங்களுடன் கல்வி நிலையங்களும் நிரம்பிய பாளையங்கோட்டையை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விடுகிறது. கூடவே மிஷனரிகள் அவர்கள் இந்தியாவுக்கு வந்த முக்கிய வேலையான மதம் பரப்புதலையும் செவ்வனே செய்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. ஆயினும் சாராள் டக்கர், ரெயினீஸ் அடிகளார், ஆனி ஜென் ஆக்ஸ்வித், ஃப்ளாரென்ஸ் சுவைன்ஸன், எமி கார்மைக்கேல் போன்றவர்கள் தங்களது சமயப்பணியையும் தாண்டி, கல்விப்பணிக்காக மக்கள் மனதில் ஏன் நீங்காத இடம் பெற்றனர் என்பது வரலாற்றுச்செய்தி. பாளையங்கோட்டையிலிருக்கும் பாப்பாத்தியம்மாள் கிணறுகளை யார் வெட்டினார் என்பதையும் அதன் தற்போதைய நிலை என்ன என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார். கோகிலா என்ற தஞ்சை மராட்டியப் பிராமணப்பெண், க்ளாரிந்தாவாக மாறிய வரலாறு அதன் பின்னிருக்கிறது. கழுகுமலையிலுள்ள வெட்டியான் கோவிலை, "தமிழகத்தின் எல்லோரா" என ஏன் அழைக்கிறார்கள் என்பதற்கான விடையை நூலாசிரியர் மிகவும் அழகுற விளக்கியுள்ளார். கழுகுமலை கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் ஆசிரியரின் சொந்த ஊர்ப்பாசம் கொப்பளிப்பதை நன்றாகவே உணர முடிகிறது. 

நெல்லை என்றாலே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் "சுலோசன முதலியார் பாலம்"தான் நினைவுக்கு வரும். ஊர் கூடித் தேரிழுப்பார்கள் கண்டிருக்கிறோம். இங்கே தன் மக்கள் வரிச்சுமையால் அவதிப்படக்கூடாதென்று அத்தனை நிதிச்சுமையையும் தானே சுமந்து தனது சொந்தச்செலவில் ஒரு மனிதன் கட்டிய பாலம்தான் இன்றும் அவர் பெயரைச்சொன்னபடி அங்கே நின்று கொண்டிருக்கிறது. அதன் அருகிலிருக்கும் மேலப்பாளையத்தின் உண்மையான பெயர் என்னவென்றும் அங்கு தற்போது வசித்து வரும் முஸ்லிம் மக்கள் வந்த கதையும் சொன்ன விதம் வெகு சிறப்பு.  காருகுறிச்சி அருணாசலம், உமறுப்புலவர், தமிழ் அச்சுக்கலையின் தந்தையான ஆண்ட்ரிக் அடிகளார், வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்த வீரமாமுனிவர், நாட்டார் வழக்காற்றியலின் தந்தையான பேரா.நா.வானமாமலை, போன்றோரின் பணிகளைப்பற்றிய கட்டுரைகள் ஏராளமான அரிய தகவல்களைக்கொண்டுள்ளன. அதிலும் பண்பாட்டு ஆய்வாளர்கள் சாத்தாங்குளம் ராகவன் ஐயா,  தொ.பரமசிவம் ஐயாவைப்பற்றிய கட்டுரைகள் தவற விடக்கூடாதவை. இந்த ஒவ்வொரு கட்டுரைக்குப்பின்னும் தகவல்களைச் சேகரித்த ஆசிரியரின் உழைப்பு தென்படுகிறது.

இலக்கியமும் வாழ்வும் பின்னிப்பிணைந்தவை. புத்தகத்தில் இலக்கியத்துக்கு நெல்லை மண் அளித்த பங்கு விரிவாகச்சொல்லப்பட்டுள்ளது. நெல்லை மண்ணின் பொருநை இலக்கிய வட்டம், மாநில தமிழ்ச்சங்கம் பற்றிய கட்டுரைகளின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆரெம்கேவியின் பட்டு மட்டுமல்ல அதன் முதலாளியின் வாசிப்பு ரசனையும் அழகே. வாசிப்பே எழுத்துக்கு அடிநாதம் எனச்சொல்வார்கள். வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதாலேயே கோவில்பட்டியில் நிறைய எழுத்தாளர்கள் இருந்தார்களாம். கரிசல் மண்ணின் முன்னத்தி ஏரான கி. ராஜ நாராயணன் உட்பட கோவில்பட்டியின் எழுத்தாளர்களைப்பற்றி அறிய முடிகிறது. நாகர்கோவிலில் எழுத்தாளர்கள் அதிகம் என வேடிக்கையாகச்சொல்வதுண்டு. கோவில்பட்டியோ அதையும் மிஞ்சி விட்டது.

நெல்லை என்றால் எட்டையபுரத்துப் பாரதி இல்லாமல் வரலாறு நிறைவடையாது. அவருக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு ஏற்பட்ட கதையும், அவர்தம் தந்தையார் சின்னச்சாமி ஐயர்வாளின் ஸ்பின்னிங் மில் தற்போது இருக்கும் பரிதாப இருப்பும், நெல்லையின் புகழ்பெற்ற இந்துக்கல்லூரியின் வரலாறும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

நூலில் நெல்லையின் பல்வேறு பெருமைகளான பறவைகள் சரணாலயங்கள், பத்தமடைப்பாய், கோவில்களில் இடம்பெற்றுள்ள மூலிகை ஓவியங்கள் போன்றவற்றைப்பற்றி மிகவும் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது, பிரிட்டன் அரசு சேவைக்கான விருதைப்பெறும் கோகிலா ராமலிங்கம் உட்பட. மரியா காண்டீன், தமிழகத்தில் பேராசிரியர்களுக்கென்று ஓர் அமைப்பு ஏற்படக் காரணமாக அமைந்த லூர்து நாதன் சிலை, இன்றும் மக்களிடம் நற்பெயர் பெற்றிருக்கும் மனகாவலம் ஆஸ்பத்திரி போன்ற அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 

நெல்லை என்றாலே அல்வாவுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது குற்றாலம். சீசனின்போது எப்படிக் குளிக்கவேண்டுமென்று ரசிகமணி அவர்களின் விளக்கமிருக்கிறதே.. அடேயப்பா. கி.ரா. அவர்களின் படைப்புகளில் பறவைகள், தாவரங்கள், விலங்குகள் என்ற கட்டுரை இன்னும் சற்று விரிவாக எழுதப்பட்டால் தனி நூலாகவே அமையும். அவ்வளவு தகவல்களைக்கொடுத்திருக்கிறார் ஐயா.

எல்லா ஊருக்கும் ஏதாவதொரு பெருமை இருக்கத்தான் செய்யும். ஆனால் 'எந்தூரா இருந்தாலும் நம்மூரு மாதிரி வருமா?' என்றுதான் நம் மனதில் தோன்றும். நெல்லைச்சீமையைப்பொறுத்தவரை ஊர்ப்பாசமும் ஊர்ப்பெருமையும் சற்று அதிகம் கொண்ட வெள்ளந்தி மக்கள் நிரம்பிய ஊர் இது. நதிக்கரையில்தான் நாகரிகம் செழித்து வளரும் என்பார்கள். ஜீவநதியாம் தாமிரபரணி நதிக்கரை அதை நிரூபித்திருக்கிறது. நிலமென்னும் நல்லாள் மடியில் தாங்கி வளர்த்த மனிதர்களையும், அவர்கள் பேணிக்காத்த பண்பாட்டையும் அவர்தம் வாழ்வையும் இந்நிலத்தையும் அதன் பழம்பெருமைகளில் ஒரு துளியையும் இந்த நூலின் மூலம் நமக்குக் காட்டுகிறார் நூலாசிரியர். அவரே சொல்லியிருப்பது போல் இது சமுத்திரத்தின் ஒரு துளிதான், ஆனாலும் அதுவே ஒரு சமுத்திரமாய் பரந்திருக்கிறது எனில் நெல்லையின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதாதென உணர வைப்பதே இந்நூலின் வெற்றி. 

நெல்லையிலிருந்து வெளியாகும்  'நெல்லை டைம்ஸ்" இதழில் தொடராக வெளியான 41 கட்டுரைகள் நூல் வடிவம் கொண்டு, சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. 

விலை : 270
ஆசிரியர்: இரா. நாறும்பூ நாதன்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான அறிமுகம். வாசிக்கத்துண்டும் விதமாக அமைத்து இருக்கிறது உங்கள் அறிமுகப் பதிவு. நன்றி.

கோமதி அரசு said...

திருநெல்வேலி நீர் - நிலவளம்- மனிதர்கள் புத்தகம் விமர்சனம் மிக அருமையாக இருக்கிறது.

//இந்த ஒவ்வொரு கட்டுரைக்குப்பின்னும் தகவல்களைச் சேகரித்த ஆசிரியரின் உழைப்பு தென்படுகிறது.//

ஆமாம், விடாமுயற்சியும், உழைப்பும் அதிகம்தான்.

நூல் ஆசிரியர் என் கொழுந்தன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் கணவரின் சித்தப்பா, மகன். (சித்தி மகனும்)கணவருக்கு தம்பி.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails