Saturday 9 March 2019

வெள்ளை சாம்பாரும் ஆச்சியும் பின்னே ஞானும்.

நெல்லை, மற்றும் குமரி மாவட்டங்கள்ல சாம்பார் பொடி போட்டு, பொடி போடாம தேங்கா அரைச்சு ஊத்தின்னு ரெண்டு விதமான சாம்பார் பண்ணுவாங்க. இதுல பொடி போட்டதை "இடி சாம்பார்"ன்னு நெல்லை மக்கள் இன்னும் பிரத்தியேகமா குறிப்பிடுவாங்க. கொத்தமல்லி, மொளவாத்தல், வெந்தயம், சீரகம்ன்னு எல்லாத்தையும் வறுத்து மசாலாவை உரல்ல போட்டு உலக்கையால் இடிச்சு, சலிச்சு பண்றதால அந்த காரணப்பெயர். இதை நாரோயில் மக்கள் "கறுத்த சாம்பார்"ன்னு சொல்வாங்க. தேங்கா அரைச்ச மசாலா சேர்த்ததை "வெள்ளை சாம்பார்"ன்னு சொல்வாங்க. ரெண்டு சாம்பார்களையும் வேறுபடுத்திப் புரிஞ்சுக்கறதுக்காக இந்தப்பெயர்கள்.
எங்க அம்மாச்சி "வெள்ளைசாம்பார்" வெச்சா கூடுதலா ரெண்டு உருண்டை சோறு உள்ளே போகும். வேக வெச்ச பருப்போட தோட்டத்துல வெளைஞ்ச நாலு கத்தரிக்காயை பறிச்சுட்டு வந்து நாலா வகுந்து போட்டு ஒரு உருளைக்கிழங்கு, நாலு துண்டு மாங்கா, ரெண்டு தக்காளின்னு அதுகளையும் பெரிசு பெரிசா வெட்டிப்போட்டு ஒரு பக்கம் கொதிச்சுட்டுக் கிடக்கும். அந்த நேரத்துல அங்கனக்குள்ளயே கெடக்குற அம்மில, சீரகமும் மஞ்சத்துண்டையும் வெச்சு நுணுக்கி, மொளவாத்தல வெச்சு மையா அரச்சு அது கூட ஒரு தேங்காச்சில்லை வெச்சு சதைச்சு நல்லா அரைச்சு உருட்டி எடுத்துக்கிடுவாங்க. புளியையும் நல்லா கரைச்சு கொழம்புல ஊத்திட்டு தோட்டத்துக்குப் போவாங்க. அங்க இருக்கற முருங்க மரத்துலேர்ந்து கையளவு கீரையும் ரெண்டு காயுமா பறிச்சுட்டு வந்து, பொடுபொடுன்னு கீரையை ஆய்ஞ்சு காயை நறுக்கி, அரைச்ச மசாலாவையும் இதுகளோட சேர்த்து குழம்புல போடுவாங்க. அப்பதான் பறிச்ச காய்ங்கறதால கொதிக்கற கொழம்புல போட்ட அடுத்த நிமிஷமே வெண்ணெயா வெந்துரும். கூடவே போட்ட முருங்கைக்கீரை வெந்து கொழம்பு எட்டூருக்கு மணக்கும்.

வழக்கமா தாளிக்கற மாதிரி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை எல்லாம் தாளிச்சுச் சேர்த்தா, மணமே "சோத்தைக் கொண்டா கொண்டா"ன்னு கூப்பாடு போட வைக்கும். தாளிக்கும்போது ரெண்டு வெண்டைக்காயை அரிஞ்சு போட்டு நல்லா வசக்கி சேர்த்தா அது தனி ருசி. எங்க அம்மை இது எல்லாத்துக்கும் மேல கூடுதலா ஒரு பக்குவம் செய்வா. என்னன்னா... கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை சூடா இருக்கற குழம்புல பிச்சுப்போட்டு மூடி வைப்பா. அதெல்லாம் நாரோயில் சந்தைல கொத்தமல்லி இலை வரத்துக்கு அப்புறம் ஏற்பட்ட பண்டுவம். ஆனாலும் அது என்னதான் மாயமோ!!! எங்க ஆச்சியோட அந்தப்பக்குவம் எங்க குடும்பத்துப் பெண்கள் யாருக்குமே வாய்க்கலை.

வயல்லேர்ந்து பறிச்சுட்டு வந்த வாழையிலைல சோத்தைப் போட்டு, இம்புடுபோல நெய்யூத்தி கொழம்பையும் ஊத்தி மலையாள பப்படத்தையும் பொரிச்சு ஒரு ஓரமா வைப்பாங்க. சாப்ட்டு முடிச்சு ரொம்ப நேரமானப்றமும் கை மணத்துக் கிடக்கும். எங்க வீட்டுக்கு வந்தாக்கூட அவங்க வெச்ச சாம்பார்ன்னா தனியா தெரியும். வாசனையை வெச்சே கணடுபிடிச்சுருவோம்.

ஆச்சிகளைப்போலவே ஆச்சி சமையலும் தனித்துவம் வாய்ந்தவைதான். பல்லாண்டு ஆனாலும் நினைவில் நின்று ருசி்ப்பவையன்றோ அவை.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... படிக்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.....

உங்கள் வீட்டில் ஆச்சி சமையல், எங்கள் வீட்டில் அம்மாவின் அத்தை சமையல்.... அம்மா வழிப் பாட்டி நாங்கள் பார்த்ததே இல்லை.

Jaleela Kamal said...

அருமையான சாம்பார்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஜலீலாக்கா.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails