Monday 11 February 2019

சாரல் துளிகள்

வருத்தப்பட்டு வண்டியோட்டும்போதும் அலைபேசியில் பேசுவோரை மன்னியாதிரும் ஆண்டவரே. அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்.

குறும்புக்கார பகலை அத்தனை விழிகளாலும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது இரவு.

பச்சோந்தியைப்போல் நிறம் மாறிக்கொண்டேயிருந்த பகல், கனத்த இரவுக்குள் தன்னை ஔித்துக்கொண்டது.

ஏதும் எஞ்சாது எல்லாம் கொடுத்து விட்ட நிறைவில் நடையிட்டுச்செல்லும் பகல் அறியவில்லை, நாளை வரப்போகும் அதனிடம் கேட்கப்படவிருப்பவை.

விரலிடுக்கில் நீரென, ஏதுமெஞ்சாது மெள்ளக் கசிந்தொழியும் பகலிடம் மன்றாட ஏதுமில்லை. எத்தனை நிறைந்திருந்தென்ன? கையளவுதானே அள்ள முடியும்.

தாலாட்டித் தூங்க வைக்கும் இரவின் மடியில் சாய்ந்து கனவுப்புற்களை மேய்கிறது களைத்துப்போன பகல்.

ஒரு சிற்றலை போல் எழுந்தமர்ந்த வெண்பறவைகளின் இறகுகளிலிருந்து பருவெளிக்கு இடம்பெயர்ந்தது பகல்.

துளித்துளியாய் தன்னைச் செதுக்கி பட்டை தீட்டிய இருள், பகலென்று பேர் சூடிக்கொண்டது.

இரவைக் குழைத்து, தோன்றியும் மறைந்தும் வித்தை காட்டும் பல்வண்ண மாயக்கம்பளமாய் நெளிய விடுகிறது பகல்.

ஒரு மொட்டு மலர்வதைப்போல் இரவின் இதழ்கள் ஒவ்வொன்றாய் விரிய, விடுபட்டுப் பறக்கிறது அனற்பூச்சி.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails