Thursday 14 June 2018

சாரல் துளிகள்


எதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது.

ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்து நிற்கிறது. சற்று முயன்று தள்ளி இதையும் கடத்தி விடலாமென முயலும்போது இன்னொன்று தொலைவில் நின்று கையசைக்கிறது. ஒவ்வொன்றையும் புறந்தள்ளியபடி கடக்கிறோம் நாம்.

பாட்டிகள் சீரியல்களில் கரைந்து கொண்டிருக்க, பேரன்பேத்திகள் மொபைல் விளையாட்டுகளிலும் சிறப்பு வகுப்புகளிலும் மூழ்கி முத்தெடுக்க, கோலாகலமாய்க் கரைகிறது கோடை விடுமுறை.

எங்கோ ஒரு கிளையில் மரமறியாமல் மலர்ந்திருந்த பூ, எதுவும் மிச்சமின்றி தன்னை விடுவித்துக்கொண்டு அக்கைகளில் சரணடைந்த அவ்வினிய பொழுதில் முதல் மழைத்துளி திலகமிட்டது.

இன்னும் வெளுக்க ஆரம்பிக்காத அடிவான இருளில் புதைந்து கிடக்கும் ஒற்றை நட்சத்திரத்தின் தனிமையை விரட்ட மேலும்மேலும் முயன்று கொண்டிருக்கிறது சிறு அலை.

ஒரு யோகியைப் போல் மலை மேல் தனிமைத்தவத்திலாழ்ந்திருக்கும் அந்த அலைபேசிக் கோபுரத்திற்கு இடைஞ்சலுண்டாக்குவதெப்படியென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும்.

விரும்பாத ஒன்றை. விலக்கிச் செல்வதை விட, விரும்பிய ஒன்றை விரும்பாததுபோல் கடந்து செல்லத்தான் அதிக மனத்திண்மை தேவை.

பச்சையமிழந்த செடியினின்று உதிர்ந்து அழுக்குப் பிடித்த சாலையில் உருண்டு புரண்டு கதறிக்கொண்டிருக்கும் போகன்வில்லாப் பூவைத் தேற்றுகிறது அமிலப்புகையில் குளித்த செம்பருத்திப்பூ.

காலொடிந்த இதய சிம்மாசனத்தில் அமர, இளைய ராணிகளையும் குறு ராணிகளையும் கெஞ்சியழைத்துக் கொண்டிருக்கிறார் பல் கொட்டிப்போன ராஜா.

அதிக அடக்குமுறைகளுடன் பொத்திப்பொத்தி வளர்க்கப்படும் மனிதர்களும் போன்சாய் தாவரங்களும் ஒன்றுதான். இரண்டுமே தம் இயல்பான குணத்தை இழக்கின்றன.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

ஆஹா மிக மிக அற்புதமான கவிதை
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails