Wednesday 21 June 2017

வாய் பிளந்தான் மணி(மேத்தன் மணி)

திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் பத்மநாப சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலை நோக்கிச் செல்லும்போது, நமக்கு இடது புறமிருக்கும் கட்டிடத்தின் முகப்பில், தெப்பக்குளத்தைப் பார்த்தாற்போல் இருக்கிறது மேத்தன் மணி என அழைக்கப்படும் வாய் பிளந்தான் மணி.
கேரளா யூனிவர்சிட்டியில் வேலை பார்த்து வந்த சித்தப்பா அப்போது கரியவட்டத்தில் வசித்து வந்தார். ஒரு தடவை, ஸ்கூல் பெரிய லீவில் அங்கே சென்றிருந்த சமயம் பப்பநாதனைத் தரிசித்து விட்டு வெளியே வந்தபோது இந்த மணியைப் பார்த்து வியந்து நின்றது மங்கலாக நினைவிருக்கிறது. அதன்பின், பல வருடங்களுக்குப்பிறகு, என் அண்ணன் உடம்பு சரியில்லாமல் பத்மதீர்த்தக் குளத்தின் வடகரையிலிருக்கும் ஆர்யவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் தங்கியிருந்த அறை தெப்பக்குளம் வ்யூ ஆதலால் பால்கனியில் நின்று பார்த்தாலே கடிகாரமும், அந்த மனிதத்தலையின் வாய் திறந்து மூடுவதையும், ஆடுகள் மனிதத்தலையில் வந்து முட்டுவதையும் அதைக்காண கூடியிருக்கும் கூட்டத்தையும் காண முடியும். மிகச்சிறு வயதில் அதிசயித்த காட்சி ஒரு நாளிலேயே பார்த்துப்பார்த்து அலுத்துப்போனது.

சமீபத்தைய திருவனந்தபுரம் விசிட்டின்போது, பப்பநாதனைக் காணச்சென்றோம். கோவிலை நெருங்கியதும் மணியின் ஓர்மை வர ஏறிட்டுப்பார்த்தேன். ஹைய்யோ!!.. ஐந்து மணிக்கு இன்னும் ஒரு நிமிடமே இருந்தது. தகவலைச் சொன்னபோது, "அது இப்பவுமா வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கப்போவுது?" என குடும்பம் அவநம்பிக்கை தெரிவித்தது. அவர்கள் சொல்லி வாய் மூடவில்லை. மணி அடிக்கத்தொடங்கியது. வாய் பிளக்கும் மனிதத்தலையையும், ஒவ்வொரு மணி அடிக்கும்போதும் அதை முட்டும் ஆடுகளையும் கண்டு,  ஆச்சரியத்தால் அப்படியே நின்று விட்டார்கள். மும்பை திரும்பியபின், மணியைப்பற்றி மேலும் தகவல் அறியும் பொருட்டு இணையத்தைத் துழாவினால் தகவல்களை அள்ளிக்கொட்டியது மகேஷ் ஆச்சார்யாவின் வலைப்பூ.

தகவல்கள் இங்கே..

//திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தானச் சுவடிகளிலிருந்து தெரிகிறது. இதை நாளிகை சூத்திரச் சுவடி என்றும் கூறுவர்…

அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பதுடன் , துல்லியமாக நேரமும் காட்டுகிறது. இது ஒரு புதுமையான விந்தையான கடிகாரம். கடிகாரத்தின் மேலே ஒரு மனிதனின் தலை, அந்த தலையின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றையொன்று பார்ப்பது போல் அமைந்துள்ளது. கடிகாரத்தின் முட்கள் 1 மணி காட்டும் போது அந்த மனிதனின் வாய் மெதுவாக திறக்க ஆரம்பிக்கும். வாய் முழுவதும் திறந்ததும் 2 ஆட்டுக் கடாக்களும் ஒரே நேரத்தில் அந்த மனிதத் தலையில் வந்து மோதும். ஒரு மணி அடிக்கும். மனிதனின் வாய் மூடிக்கொள்ளும். அவ்வாறாக 12 மணியானால் மனிதனின் வாய் 12 தடவை திறந்து , திறந்து மூடும். ஆட்டுக்கடாக்களும் 12 தடவை முட்டும்.

இந்த விந்தையான கடிகாரத்தைத் திறம்பட செய்து முடித்தவர் திருவனந்தபுரம் அருகிலுள்ள வஞ்சியூரை சார்ந்த ப்ரம்ம ஸ்ரீ குளத்தூரான் ஆச்சாரியா என்னும் விஸ்வகர்மா ஆவார். நுட்பமான வேலைகளில் திறமை மிக்கவர். துப்பாக்கி முதல் பீரங்கி வரை எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். வெள்ளையர்கள் தங்கள் இயந்திரங்கள் பழுது பட்டால் இவரிடம் வந்து தான் ஆலோசனை கேட்பார்கள். திருவனந்தபுரம் மகாராஜாவும் , ஆலப்புழையில் இருந்த ஜான்கால்டிகேட் என்ற வெள்ளையரும் சேர்ந்து குளத்தூரான் ஆச்சாரியாவிடம் சொல்லி கடிகாரத்தைச் செய்ய வைத்தனர். இந்தக் கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டு இருப்பதுடன் துல்லியமாக நேரமும் காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை மேத்தன் மணி என்றும் வாய் பிளந்து மூடுவதால் வாய் பிளந்தான் மணி என்றும் கூறுவார்கள்.//

நன்றி மகேஷ் ஆச்சார்யா.

யாராவது பேசுவதை வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பவர்களையும், நாம் பேசுவதை சற்றே அசமஞ்சமாக, புரிந்ததோ இல்லையோ!!.. என்ற குழப்பமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டு நிற்பவர்களையும் "ஏம்டே வாப்பொளந்தான் மணி மாரி நிக்கே? போயி உள்ள சோலிகளப்பாரு" என்று திட்டுவது கன்யாகுமரி வழக்கு.

2 comments:

ஸ்ரீராம். said...

ப்ரம்ம ஸ்ரீ குளத்தூரான் ஆச்சாரியா என்னும் விஸ்வகர்மா . அந்தக் காலத்திலேயே எவ்வளவு திறமையானவர். ஆச்சர்யமாக இருக்கிறது. சுவாரஸ்யமான தகவல்கள்.

ஸ்ரீராம். said...

ஒரு வீடியோ எடுத்துக் போட்டிருக்கக் கூடாதோ....

LinkWithin

Related Posts with Thumbnails