Thursday 24 March 2016

வண்ணங்களின் திருவிழா - ஹோலி

மார்ச் மாதத்தின் மறுபாதியிலிருந்தே குளிர் குறைந்து வெய்யில் வர ஆரம்பித்து விட்டாலும், வடக்கில் ஹோலி தினம்தான் வேனிற்காலத்தின் முதல்தினமாக மக்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. 

இந்தப்பண்டிகையைப்பற்றி அமைதிச்சாரல் என்ற பூர்வாசிரமப்பெயரில் உலவிய போது அருளிச்செய்தவை மறு உபன்யாசம் செய்யப்படுகிறது.
ஹோலி வடநாட்டுப்பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறதே என்று நினைக்கிறீர்களா!!!.. சமீப காலமா கொண்டாடப்படறதைச் சொல்லலைங்க.. நாம காமன்பண்டிகைன்னு கொண்டாடுகிறோமே.. அதுதான் நம்மூரு ஹோலி. ஹோலின்னா எரித்தல்ன்னு அர்த்தம்... இப்ப தெளிவாயிட்டுதா!!!

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப்பற்றித் தெரியும்தானே!!!. அவர் மன்மதனை எரித்ததும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி உயிர்ப்பித்ததும்ன்னு எல்லாம் கதைகள். இந்தச் சம்பவத்தின் நினைவா நம்மூரிலும் மன்மதனின் உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.
வட இந்தியாவுல ஹோலி பிரகலாதனோட சம்பந்தப்பட்டது. பிரகலாதன் தன்னை விட்டுட்டு, ஹரி நாமத்தை ஜபித்ததால் அவங்கப்பா ஹிரண்யகஷ்புக்கு கோபம் வந்துட்டுது. பின்னே.. வராதா!!!. 'அது எப்படி நீ இன்னொருத்தரை பெஸ்ட்'ன்னு சொல்லலாம்ன்னு அவருக்கு கோபம்.. பக்கத்துல உக்காரவெச்சி அட்வைஸ் கொடுத்துப்பாத்தார், பயமுறுத்திப்பாத்தார், ஒன்னும் வேலைக்காவலை!! :-((

கவுன்சிலிங் கொடுக்க வேற யாரு இருக்கான்னு பார்த்து ஒவ்வொருத்தரையா அழைச்சார். வந்தவங்களும் 'தம்பி, உங்கப்பா, நல்லவரு... நாலும் தெரிஞ்ச வல்லவரு, அவரை பகைச்சுக்காதே'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணாங்க.. ம்ஹூம்.. பிரகலாதன் மசியலை..

பெத்த மகன்னு கூட பாக்காம, பிரகலாதனோட உயிருக்கே ஆபத்து விளைவிச்சும் பாத்தார்.. பயத்துலயாவது புள்ளை.. "ஹிரண்யகஷ்பாய நமஹ" ன்னு சொல்லிட மாட்டானான்னு ஒரு நப்பாசை. புள்ளை என்னான்னா அந்த ஆசையில ஒரு லோடு மண்ணைக்கொட்டிட்டு ' நாராயணாய நமஹ' ன்னு சொல்லுது!!! இது சரிப்படாது.. தங்கையுடையான் எதற்கும் அஞ்சான்னு நினைச்ச ஹிரண்யகஷ்பு ஓலை அனுப்பினார் தங்கை ஹோலிகாவுக்கு..

'ஹோலிகா'வும் 'அண்ணே.. கூப்பிட்டு விட்டியாமே? ஆள் வந்து சொல்லுச்சு' என்றபடி வந்து சேந்தா.. .அப்பாடா!!!..பண்டிகைக்கு பெயர்க்காரணம் வந்தாச்சு.. விபரத்தைச்சொல்லி 'நீயாவது புத்தி சொல்லும்மா' ன்னு அண்ணன் வேண்டுகோள் வைக்க, அவளுக்கும் தோல்விதான். கடைசி சந்தர்ப்பத்திலயும் தோல்வின்னதும் ரெண்டு பேருக்கும் கோபம் தாங்கல. போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி 'தங்கச்சி, ஒன்னோட வரம் இன்னும் active ஆகத்தானே இருக்கு' ன்னு உறுதி செஞ்சுக்கிட்டு ஏற்பாடுகளெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு ஹிரண்யகஷ்பு.

ஹோலிகாவை தீ தீண்டலாகாது என்பது அவளுக்குக் கிடைச்ச வரங்களில் ஒன்னு. இதைப்பயன்படுத்தி, பிரகலாதனை எரிச்சு, ஒழிச்சுடணும்ன்னு திட்டம். பாவம்.. சின்னப்பையன்னு கூடப்பாக்கலை.. தயாரா இருந்த சிதையில், அவனை மடியில் வெச்சிக்கிட்டு, ஹோலிகா உக்காந்துக்கிட, நெருப்பு மூட்டப்பட்டது. 'ஐயோ.. அம்மா' ன்னு ஒரு அலறல் குரல்.... அலறல் வளர்ந்து, எதிரொலிச்சு, பின் தேய்ந்து மறையுது. நெருப்பும், புகைமண்டலமும் மெல்லமெல்ல குறைஞ்சபின்னே பாத்தா!! இதென்ன!!!... பிரகலாதன் நெருப்பால் எந்தவித சேதாரமுமில்லாம, நிக்கிறான்.. ஹோலிகா சாம்பலாகிக் கிடக்கிறாள். பிரகலாதன் வாய் மட்டும் 'நாராயணாய நமஹ'ன்னு உச்சரிச்சுக்கிட்டிருக்கு. ஹிரண்யகஷ்புக்கு ஒன்னும் புரியலை.. அப்புறமாத்தான் தெரிய வருது.. ஹோலிகா தனியா நின்னா நெருப்பு அவளை ஒன்னும் செய்யாது. அப்படித்தான் வரம் கிடைச்சிருக்கு. அவளும் பிரகலாதனுமா ரெண்டு பேரா நின்னதால வரம் back fire ஆகிடுச்சு. வாங்கும்போதே terms and conditions ஐ பாத்து வாங்கியிருக்க வேண்டாமோ!!! கியாரண்டி, வாரண்டி பீரியட் ஒன்னும் பாக்காம வாங்கிட்டாங்க. இப்போ ஹோலிகாவே எக்ஸ்பயர் ஆயாச்சு.

இதுதான் ஹோலியும்,பெயரும் வந்த கதை. ஹோலி இங்கே இரண்டு நாள் பண்டிகை. முதல் நாள் ச்சோட்டி ஹோலி, ரெண்டாம் நாள் ப(b)டீ ஹோலின்னு கொண்டாடப்படுது. ச்சோட்டி ஹோலி அன்னிக்குக் காலையிலேயே பண்டிகைக்கான ஏற்பாடு ஆரம்பிச்சுடும். பில்டிங் முன்னாடி காலி இடத்திலும், தெருக்களிலுமா சின்னதா குழி தோண்டி வெச்சிடுவாங்க. அப்புறமா, தோகையுடனுள்ள கரும்பு ஒன்னும், இலைகளோட கூடிய சின்ன மரக்கிளை ஒன்னும் முதல்ல நடுவாங்க. பச்சை மரம் ஹோலிகா உயிரோட எரிஞ்சதை குறிக்குமாம். அப்புறம், அதைச் சுத்தி, பெரிய பெரிய மரத்துண்டுகள், விறகுகள், வரட்டி, எல்லாம் அடுக்குவாங்க. கடைசியா பூமாலை ஒன்னும், ஹோலிக்குன்னே கிடைக்கிற சர்க்கரை மாலை ஒன்னும் போடுவாங்க.
ஹோலிக்கு நைவேத்தியமா பூரண்போளி, பாப்டி, குஜியா(சோமாஸ் அல்லது கரஞ்சி) மற்றும் அவரவர்க்கு வசதிப்பட்டதைச் செய்து, ஆரத்தித் தட்டில் அடுக்கி கொண்டு சென்று பூஜை செய்வார்கள். சில இடங்களில் சத்ய நாராயண பூஜை செய்வதுமுண்டு. பின் கலசத்திலிருக்கும் நீரை bonfire ஐ சுற்றி வலம் வந்து கொண்டே, தரையில் ஊற்றிக்கொண்டு வருவார்கள். கடைசியா, தட்டிலிருக்கும் தேங்காயை, bonfire ல் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் வயதில் பெரியவரை அழைச்சு, அவர் கையாலே நெருப்பிடச்செய்வார்கள். bonfire எரியும் நிகழ்ச்சிக்கு 'ஹோலிகா தகன்' என்றே பெயர். நெருப்பு எரியும் போது, எல்லோரும் ஒருவரை ஒருவர், 'ஹோலி ஹை'ன்னு சொல்லி வாழ்த்திக்குவாங்க. ஆரத்தி தட்டிலிருக்கிற, மஞ்சள்,குங்குமம், குலாலை ஒருவருக்கொருவர் இட்டுக்குவாங்க. இன்னிக்கு கலர்ப்பொடியை சின்னப் பசங்க மட்டும் பூசிக்குவாங்க. நெருப்பிலிடப்பட்ட தேங்காய்கள் சில சமயம் வெடித்துச்சீறிக்கொண்டு தீக்கு வெளியே வந்து விழும். சுட்ட தேங்காயை துண்டுகளாக்கி எல்லோருக்கும் பிரசாதமா கொடுப்பாங்க.



மறுநாள் எப்போ விடியும்ன்னே காத்திட்டிருப்பாங்க. காலை நாஷ்டா ஆனதும்,கிளம்பிடுவாங்க. முகம், கை கால்களில் தேங்கா எண்ணெய் தேய்ச்சுக்குவோம். அப்படித்தேய்ச்சுக்கிட்டா கலர்ப்பொடிகள் ஒரு அளவுக்கு மேல் ஒட்டாதில்ல. அதுக்குத்தான். ஒருவர் வீட்டிலிருந்து புறப்ப்பட்டு, இன்னொருவர் வீட்டுக்குப்போய் அவரை அழைச்சிக்கிட்டு அடுத்தவரை அழைக்கப் போறதைப் பாத்தா நம்ம ஆண்டாளம்மா மார்கழி நீராட கிளம்பினமாதிரிதான் தோணும். வீட்டுக்கு வர்றவங்களுக்காக ஏதாவது பலகாரமும் செஞ்சு வெச்சிருப்பாங்க. பில்டிங்குகளில் எல்லோருக்கும் பொதுவா, கலர்ப்பொடிகள், ஸ்நாக்செல்லாம் அரேஞ்ச் பண்ணியிருப்பாங்க. கலர்ப்பொடி பூசாத முதல் நாள் கணக்கையெல்லாம் இன்னிக்கி நேர் பண்ணிடுவாங்க. கையில் யார் அகப்பட்டாலும் அவங்களுக்கு வேஷங்கட்டிட்டுதான் விடுவாங்க. நம்ம பிள்ளைங்களையே குரலை வெச்சித்தான் அடையாளம் காணணும். மிகையா இருந்தாலும் இதுதான் உண்மை.. சில இடங்களில் ஹோலி ஸ்பெஷலா பாங் என்று சொல்லப்படற ஒருவகை பானமும் இருக்கும். அதைக்குடிச்சிட்டு சிலபேர் பண்ற அலப்பறை இருக்கே...

இவையனைத்தும் சென்ற வருடத்தைய படங்கள்
ஹோலி வந்தாச்சுன்னா சம்மர் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அடிக்கிற வெயிலுக்கு தண்ணியில ஊறினா நல்லாத்தான் இருக்கும். Eco friendly holi ன்னு இப்ப புதுசா பிரச்சாரம் பரவிக்கிட்டிருக்கு. ஹோலிகா தகனுக்காக நிறைய மரங்கள் வெட்டப்படுறதால மரங்களோட எண்ணிக்கை குறையுதில்லையா?? இப்ப இருக்கிற மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைஞ்சா எப்படி!!! அதனால ஒரு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.. எல்லோருக்கும் பொதுவா, ஒரு இடத்தில கொண்டாடினா bonfires எண்ணிக்கை குறையுமே..அதுவும், நல்லா இருக்கிற மரங்களை வெட்டாம, காய்ஞ்சு விழுந்துபோன மரம், மற்ற வேஸ்ட்டுகள் இதெல்லாம் உபயோகப்படுத்தலாமாம். அதுக்காக டயர், ப்ளாஸ்டிக்கெல்லாம் போடணும்ன்னு அர்த்தமில்லை. அது இன்னும் மோசமாச்சே!!

நவி மும்பையில் இப்போதெல்லாம் ஹோலிக்காக மரத்துண்டுகள் கூட அதிகம் உபயோகிக்கப்படுவதில்லை. குழி வெட்டி சாலையையும் சேதப்படுத்துவதில்லை. தரையிலேயே பெயருக்கு நாலைந்து மரக்குச்சிகளையும் நடுவில் கரும்பையும் வைத்துக் கட்டி விட்டு வைக்கோல் பொதிகளால் பொதிந்து ஆளுயரத்திற்கும் மேல் சொக்கப்பனை தயார் செய்து விடுவார்கள். கணகணவென எரிய ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் அத்தனை வைக்கோலும் குச்சிகளும் எரிந்து சாம்பலாகி விடும். சாஸ்திரத்திற்காகப் போடப்பட்டிருக்கும் ஒரே ஒரு சிறிய மரத்துண்டும் மறுநாள் கனிந்து சாம்பலானதும் அதில் தண்ணீரை ஊற்றிக்குழைத்து வரும் கருஞ்சாந்தை நெற்றியில் இட்டுக்கொள்வார்கள். அதன் பிறகே வண்ணப்பொடிகளைக்கொண்டு விளையாட ஆரம்பிப்பார்கள். இந்த வருடம் ஹோலிகா எரிந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒருவர் தான் அணிந்திருந்த பழைய பனியனைக் கழற்றித் தீயிலிட்டார். திருஷ்டி கழிவதற்காகவோ, சனிப்பரிகாரமாகவோ ஏதோ ஒரு காரணமும் சொன்னார். எங்கள் குடியிருப்பிலிருக்கும் ஒரு பெண்மணிக்கு வந்ததே கோபம். "பூஜை செய்து வளர்த்த தீயில் இப்படியெல்லாம் கண்டதையும் போடக்கூடாது. முதலில் அதை வெளியில் தூக்கிப்போடு" என கோபாவேசமாகக் கத்த ஆரம்பித்து விடவே, நடுங்கிப்போன மனிதர், பாதி எரிந்த நிலையிலிருந்த பனியனை ஒரு குச்சியின் உதவியால் தூக்கிப்போட்டு விட்டு மாயமாய் மறைந்து விட்டார். 
இது இன்று காலையில் சுடச்சுட எடுக்கப்பட்ட புதுப்படம் 
சென்ற வருடம் மஹாராஷ்ட்ரத்தில் மழை பொய்த்துப்போனதால் கடும் தண்ணீர்ப்பஞ்சம் நிலவுகிறது. ஒரு நாளைக்கு மிகக்குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்படுவதால் இம்முறை தண்ணீர் தவிர்த்த ஹோலி கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்காக மட்டும் ஒரே ஒரு பக்கெட் தண்ணீர் கொடுக்கப்பட்டது. தண்ணீரில்லாமல் என்ன ஹோலி என்று அட்டகாசம் செய்த இளசுகளை முதல் மாடியிலிருந்து அவர்கள் மேல் இரண்டு மூன்று பக்கெட் தண்ணீர் ஊற்றிக் குளிர வைத்தார்கள் குடியிருப்பின் நிர்வாகிகள். 

வண்ணங்களின் திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்வின் வண்ணத்தைப் பூசட்டும்..

5 comments:

ராமலக்ஷ்மி said...

வண்ணங்களின் திருவிழாவைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி. படங்களும் பகிர்வும் மிக அருமை.

ஸ்ரீராம். said...

வண்ணத்திருவிழா பற்றி அறிந்தேன். தீனி வகையறா எதுவும் ஸ்பெஷலா இருக்காது போல! சென்னையிலும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது ஹோலி என்பது சாலைகளில் காணப்பட்ட கலர்க்கலர் இளைஞர்கள்/இளைஞிகள் சாட்சியானார்கள்!

Third Eye said...

முதல் முதலாக ஹோலியை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி!

'பரிவை' சே.குமார் said...

வண்ணங்களின் திருவிழாவை அழகாக காட்டிய வண்ணப்படங்கள் அருமை...

rajamelaiyur said...

ஹாப்பி கோலி

LinkWithin

Related Posts with Thumbnails