வரமாகவும், சாபமாகவும், சிலருக்கு தப்பித்துக்கொள்ளும் யுக்தியாகவும் இருக்கிறது மறதி.
தான் சாப்பிடும்போது காக்கா , குருவி, ஆடு, மாடு, நிலா, கட்டாந்தரை என்று அத்தனை பேரின் பசியையும் ஆற்றிவிடுகிறது குழந்தை.
இலக்கை அடைவதற்கான கெடு நெருங்கும்போது ஏற்படும் பதற்றமான மனநிலையைக் கட்டுக்குள் வைப்போம். இல்லையெனில் தவறுகள் ஏற்படக்காரணமாகி இலக்கிற்கும் நமக்குமான இடைவெளியை அதுவே அதிகப்படுத்திவிடும்.
உறவுகளிலோ பொருட்களிலோ உண்டான விரிசலைச் சரி செய்து விட்டதாய் நினைத்துக் கொண்டாலும், நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஓர் ஓரத்தில்.
இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு.
காலை வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக்கொண்டு, மொத்தமாய் மூழ்கடிக்கும் புதைகுழி போன்றது சுயபரிதாபம்.
துளியும் முன்னேற்பாடின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவதென்பது, நட்சத்திரங்களின் சூட்டில் குளிர் காய்வதற்கு ஒப்பானது.
சரியான நேரம் வாய்த்தும், செய்து முடிக்காமல் காலம் தாழ்த்த வைக்கும் சோம்பேறித்தனமே வெற்றியின் முதல் எதிரி.
வேர்களின் உழைப்பிற்கான பரிசை கிளைகளும் பகிர்ந்து கொள்கின்றன.
தலையிலோ கன்னத்திலோ வைத்துக்கொண்டு இடிந்து உட்காரப்படைக்கப்படவில்லை கைகள். அவற்றுக்கான ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் மீதமிருக்கின்றன.
7 comments:
பதற்றமான மனநிலை உட்பட அனைத்தும் அருமை...
அனைத்தும் அருமை.
அருமை
அருமை
அனைத்தும் நன்று.
தலைப்புத்துளி அழகிய கவிதை.
//இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு.//
கவிதைநயத்தோடு ஒரு வாழ்வியல் ரசனை. பகிர்ந்த அனைத்தும் மனம் தொட்டன. பாராட்டுகள் சாந்தி.
அனைத்துமே அருமை.....
த.ம. +1
அனைத்தும் நன்று. சிந்திக்கவும் வைக்கிறது.
Post a Comment