Saturday, 23 August 2025

அம்மாவின் சேலை - "பூபாளம்" இதழில் வெளியானது

சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி

பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் பிரித்து வெகு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. விசேஷங்களுக்கு உடுத்தும் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன், ஜரிகை போட்ட ஜிகுஜிகுவென்ற புடவைகள் ஒவ்வொன்றும் பழைய தலையணை உறைகளுக்குள் தனித்தனியாகப் பொதியப்பட்டிருந்தன. அக்கம்பக்கம் கோவில்களுக்குப்போக, ஷாப்பிங் மற்றும் உற்றார் உறவினர் வீடுகளுக்குப் பளிச்செனச்செல்ல என அதற்கேற்ற வகையில் உள்ள புடவைகளை இன்னொரு அடுக்கில் வைத்திருந்தாள். தினப்படி வீட்டில் உடுத்தும் எளிய காட்டன் புடவைகள் நடுத்தட்டில் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தி வேண்டும், ஏனோதானோவென செயல்படுவது அவளுக்குப் பிடிக்காது. வீட்டில் உடுத்தும் சேலைகளைக்கூட அவ்வப்போது கஞ்சி போட்டு, மொடமொடப்பாக அயர்ன் செய்து உடுத்துவாள். எப்போது அவளைப் பார்த்தாலும் ஏதோ இப்போதுதான் வெளியில் கிளம்பத்தயாராய் இருப்பது போல் பளிச்சென்று இருப்பாள். ரகு லேசாக முன்னகர்ந்து வாத்சல்யத்துடன் சேலைகளைப் பட்டும்படாமலும் வருடியபோது, பொத்தென்று ஒரு சேலை கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அசங்கி, உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மேட்சிங் ப்ளவுஸ் லேசாக சேலைக்கு வெளியே வந்து தெரிந்தது. 

குனிந்து எடுத்து முகத்தை சேலையில் புதைத்துக்கொண்டு முகர்ந்து அனுபவித்தான். அந்த மென்மையும் வாசனையும் அவளது மடியில் படுத்துக்கிடந்த தினங்களை ஞாபகப்படுத்தியது. அம்மாவின் மடியில் யார் படுப்பதென்பதில் எப்பொழுதும் அவனுக்கும் சின்னக்காவுக்கும்தான் போட்டி. வெளியூரில் வேலை கிடைத்து, பெட்டியை அடுக்கும்போது முதலாவதாக அம்மாவின் பழம்புடவையொன்றைத்தான் எடுத்து வைத்துக்கொண்டான். வீட்டு ஞாபகம் மேலிட்டு அதிகமாகி ஏக்கமாக மாறி தூக்கம் தொலைத்த இரவுகளில் அதைப் போர்த்திக்கொண்டு உறங்குவான். அம்மாவே அருகிலிருந்து தலையைக்கோதி தூங்க வைப்பதுபோல் உணர்வான்.

கையிலிருந்த புடவையின் மேல் அவன் பார்வை சென்றது. இதே மாதிரியான புடவையால்தான் அன்றைக்கு அம்மாவுக்கும் பாட்டிக்குமிடையே சண்டை வந்தது. இதுதானா அது?! இல்லையில்லை.. இது பிங்க் கலர் அல்லவா!, அம்மாவிற்குக் கோபமேற்படுத்திய அந்தப்புடவை நல்ல வாடாமல்லி கலர். பேத்தியின் பிறந்த நாளுக்கென பாட்டி வாங்கி வைத்திருந்தாள். புடவையைக் கண்டதும் பெரியம்மாவின் கண்கள் விரிந்தன. அவளது வழக்கப்படி முதலில் விலையைப் பார்த்தாள். விலையுயர்ந்த புடவை என்றதும் ஆசையில் பளபளத்தன அவள் கண்கள். “இதை நான் எடுத்துக்கறேனே அம்மா?” என மூத்த மகள் ஆசைப்பட்டுக்கேட்டதும் புடவையை அவளிடம் தூக்கிக்கொடுத்து விட்டு பேத்திக்கு வாடாமல்லி கலரில் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு சின்ன மகளின் வீட்டுக்கு வந்தார். 

வந்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், நடந்ததைச் சொல்லிவிட அம்மாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ‘எம்புள்ளையோட பொறந்த நாளுக்குன்னு வாங்குனதை நீங்க வழக்கம்போல ஒங்க மூத்தமகளுக்கே தாரை வாத்துட்டு வந்துருக்கீங்களா’ என ஆவேசப்பட்டுச்சீறியவர், அந்த புதுப்புடவையை வாங்கி, பாட்டி பதறப்பதற சரிபாதியாக இரண்டாகக் கிழித்தார். “அடுத்த வீட்டு ராகினி அக்காட்ட கொடுத்து ஒனக்கும் கீதா அக்காக்குமா ரெண்டு பாவாடை தைக்கச்சொல்லு” என சின்னக்காவை அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட பெரியம்மா அதன்பின் அடுத்தவர் புடவைகளுக்கு, முக்கியமாய் தங்கையின் உடமைகளுக்கு ஆசைப்படுவதையே விட்டுவிட்டார்.

அவர்களது குடும்ப வட்டாரத்தில் அவளது உடைரசனை மிகவும் பிரசித்தம். “ஏட்டி சியாமளா.. ஒனக்குன்னு எங்கேருந்துதான் கிடைக்குதோ?!!.. நாங்களுந்தான் நாகருகோயிலு, திருனேலின்னு கட கடயா அலஞ்சு அலசுதோம். இந்தக் கலருதாம் வேணும்ன்னு கட கடயா முங்கி முத்தெடுத்தோம். அப்புடியும் வீட்டுக்கு வந்து பிரிச்சுப்பாத்தா அந்தச்சேல அவ்வளவா நல்லாயில்லாத மாதிரி தோணி, புடிக்காம போயிட்டு. ஒனக்கு எந்தச்சேல கட்டுனாலும் அம்சமா பொருத்தமா இருக்கு” என பாதி வயிற்றெரிச்சலில் குமைவார்கள். “அவளும்.. அவளுக்க சீலையும்.. பெரிய ஆப்பீசர் கணக்கால்லா மினுக்கிட்டு அலயுதா” என்பவர்கள் கூட, “சியாமளா.. நாளைக்கு மகன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க சொக்காரங்க, அப்றம் கல்யாணப்பொண்ணுன்னு எல்லாருக்கும் சேலை எடுக்கணும். நீயும் வாயேன், உன் செலக்ஷந்தான் டாப்பா இருக்கும்” என கூச்சநாச்சமில்லாமல் அழைப்பார்கள்.

இத்தனைக்கும் ஒவ்வொரு பெண்களைப்போல் பத்து கடைகள் ஏறியிறங்கி, எல்லாப்புடவைகளையும் கலைத்துப்போடச்சொல்லி கடை ஊழியர்களின் பொறுமையைச் சோதிக்கும் ரகமில்லை அவள். ரேக்குகளில் அடுக்கப்பட்டிருப்பவைகளை கண்ணாலேயே அலசி ஆராய்ந்து நாலைந்தை எடுத்துப்போடச்சொல்லி ஒன்றை செலக்ட் செய்து ஐந்து நிமிடத்தில் கடையை விட்டு வெளியே வருபவள் அவள். “உங்களுக்கு உங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா? எங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா?” என அவன் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு நான் வாங்கிக்கறதுதான் பிடிக்கும்?” என குறும்புடன் சொன்னாள்.

“பீரோ முழுக்க புடவையா வாங்கி அடுக்கி வெச்சிருக்கியே.. கொடுத்து வெச்சவதான் போ..” என ஓர் உறவுக்காரி சொல்லிவிட்டுப்போன அன்றைக்கு அந்திக்கருக்கலில், உப்பும், மிளகும், கடுகும், வரமிளகாயுமாய் பொட்டலம் கட்டி, புடவைகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டவள் அவள். அம்மாவின் புடவைக்காதலைப் பற்றிப் புரிந்திருந்த மகள்களும் மகன்களும் அவளுக்கு விதவிதமாய் வாங்கிக்கொடுத்தாலும், அவளுக்கு ரகு ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப்போய் வரும்போது அந்தந்த ஊரின் ஸ்பெஷல் என வாங்கி வரும் புடவைகள் என்றால் தனிப்பிரியம். “பணக்கார மகன் வாங்கிக்கொடுக்கறதுதானே ஒனக்குப்புடிக்கும், நாங்க வாங்கிக்கொடுக்கறதுல்லாம் புடிக்குமா?” என சின்னக்கா ஒரு நாள் குத்தலாகச்சொன்னபோது, “ஏட்டி.. என்ன வார்த்தை சொல்லுகே? தாய்க்கு எல்லாப்புள்ளையளும் ஒண்ணுதான்” என அடக்கிவிட்டாள்.

“கையைத்தூக்க முடியலைப்பா இப்பல்லாம், ப்ளவுஸ் போடறதுக்குள்ள சீவன் போகுது” வயோதிகத்தின் முதல்படியில் நின்றுகொண்டு அலுப்புடன் அம்மா சொன்னபோது, முதன்முதலாக நைட்டி அணிய நேர்ந்த கூச்சமும், இனிமேல் புடவையே கட்டிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவளிடம் லேசாக எட்டிப்பார்த்தது. நாளாக ஆக நடமாட்டம் குறைந்தபோது பார்த்துப்போகவென வந்திருந்த சின்னக்கா, “இனும உடுத்தமுடியாதுன்னு ஆயாச்சுன்னா, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு புடவைங்களைத் தரலாமில்ல? நாங்களாவது கட்டி அனுபவிப்போம்” என்றதற்கு,

“என் கண்ணுள்ள வரைக்கும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கட்டும், நான் போனதுக்கும்பொறவு என்னமும் செஞ்சுக்கோங்க” என்று ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

அப்படியெல்லாம் சேலைகளை ஆசையுடன் கட்டிக்காத்த அம்மாவைத்தான் இன்று சிதையில் வைத்து விட்டுத் திரும்பியிருந்தார்கள் அவனும் அண்ணனும். நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை, பின்னால் கேட்ட பேச்சுக்குரல் நனவுக்குக்கொண்டுவந்தது.
அக்காக்களும் அண்ணியும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்..

“என்னதான் சொல்லுங்க.. அம்மாவோட கலெக்ஷன் போல வராது”

“அப்பம்லாம் அம்மா புதுப்புடவை எடுத்தா, மொதல்ல என்னைத்தான் கட்டச்சொல்லுவாங்க. அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு செண்டிமெண்ட்” இது பெரியக்கா.

“நீ கல்யாணமாகிப்போனப்புறம் அம்மா என்னைக் கட்டிக்கச்சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” இது சின்னக்கா.

“எனக்கு அம்மாவோட ஞாபகமா ஒரு சேலை வேணும்”

“எனக்கும்..”

“எனக்கும்..” 

சேலைக்கடை போல் ஆகியிருந்தது வீட்டுக்கூடம்.

“அடடா!!.. அதுக்கென்ன? ஒண்ணென்ன?! யார்யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கிடுங்க” என்றான் பெரியண்ணன்.

அவர்கள் வருவதை உணர்ந்து வழிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான் ரகு. அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு புடவையாகக் கையிலெடுத்துப்பார்த்து, பிடித்தவற்றை.. முக்கியமாக விலையுயர்ந்தவற்றைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்கள். அவரவர் வாங்கிக்கொடுத்தவற்றையும் கவனமாக அவரவரே எடுத்துக்கொண்டனர்.

“இந்த காப்பிப்பொடி கலர் புடவை, மகேசுக்கு நல்லாருக்கும், அவளுக்குத்தான் கொடுக்கப்போறேன்னு அத்தை சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்றாள் அண்ணி. மகேசு என்ற மகேஸ்வரி அவள் மகள்.

“அந்தப்புடவை அம்மாவோட சித்தி பையன் அவன் மகளோட கல்யாணத்துக்கு அம்மாவுக்கு வச்சுக்குடுத்ததுதானே? அம்மா சார்பா அந்தக்கல்யாணத்துக்கு நான் ஐயாயிரம் ரூவா மொய் செஞ்சேன் பாத்துக்கோ. பரவால்ல, மாமா நல்ல புடவையாத்தான் எடுத்திருக்கார்” என்ற சின்னக்கா புடவையைத் தன்மேல் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள்.

“எம்புள்ள இன்ன நேரம்ன்னு கிடையாது.. பெரியவளாகிருவா. அவளுக்கு ஆச்சியோட சீரா, மொதப்பொடவையா இத கொண்டுட்டுப் போறேன். காப்பிப்பொடி கலர் அவ நெறத்துக்கு நல்லா எடுப்பா இருக்கும்” என்றாள் பெரியக்கா.

புடவைகளின் சரசரப்பினூடே பேச்சும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஒரே புடவைக்கு அத்தனை பேரும் போட்டி போடும்போது பெண்கள் நடத்தும் நுண்ணரசியலை நினைத்து அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இது எனக்கு வேண்டும்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் அதே சமயம் அத்தனை பேருக்கும் அழுத்தமாகப் புரியும் வண்ணம் எப்படி சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒரு சதுரங்க ஆட்டத்துக்கேயுரிய லாவகத்துடன் எத்தனை அழகாகக் காய் நகர்த்தி பாகம் பிரித்துக்கொள்கிறார்கள் என ஆச்சரியப்பட்டான். தனக்குத் திருமணமாகியிருந்தால் இந்நேரம் தன் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பாளோ என யோசனையாக இருந்தது. இவர்கள் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்களா அல்லது அதைச்சாக்கிட்டு அவளது பொருட்களை மிச்சமில்லாமல் சுருட்டுகிறார்களா எனப்புரியவில்லை.

அண்ணி அவனது மௌனத்தைக்கலைத்தாள். “ஒங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா கொழுந்தம்பிள்ளே?”

வேண்டாமெனச்சொல்லலாமா என ஒரு நிமிடம் யோசித்தான். அம்மையை வேண்டாமென அப்படி சுலபமாகச் சொல்லிவிட முடியுமா? 

சுற்றிலும் பார்த்தான். கொடிக்கயிற்றில் அம்மாவின் இன்னும் துவைக்காத ஒரு நைட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இறப்பதற்கு முந்தைய நாள்தான் உடம்பு துடைப்பதற்காக அட்டெண்டர் அதை அவிழ்த்துப்போட்டிருந்தார். அதை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டான். அம்மாவின் கடைசி வாசனை,.. இனியெப்போதுக்குமாக இது போதும். நைட்டிக்கும் முந்தானை உண்டு, அம்மாவை நினைத்து ஏங்கும் பிள்ளைகளை அது அரவணைத்து ஆறுதலளிக்கும். நாப்தலீன் மணக்கும் சேலைகளை மற்றவர்களே வைத்துக்கொள்ளட்டும்.

அவன் நைட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அணைத்தாற்போல் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டு எழுந்தான். அம்மையே குழந்தையாக அவன் தோளில் சாய்ந்திருப்பதுபோல் ஒரு தாய்மையுணர்வை உணர்ந்தபோது அவனுக்குச் சிலிர்த்தது. நைட்டியின் கைப்பாகம் அவனது கையில் உரசியபோது அம்மாவே தன் கையைப்பற்றியிருப்பது போல் உணர்ந்தான். “நடுச்சாமம் ஆகப்போகுது, போய்த்தூங்கு மக்கா” என்ற அம்மாவின் குரல் காதில் கேட்டதுபோல் இருந்தது. நைட்டியைத்தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 

வெகு நாட்களுக்குப் பின் அம்மையின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பது போல் ஒரு ஆறுதல், கொந்தளித்துக்கொண்டிருந்த அவனது மனதைச் சற்று அமைதியுறச்செய்தது. மரத்துப்போயிருந்த மனது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. இனிமேல் அம்மையை எப்போதுமே பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தாக்க, சூடான கண்ணீர் அவன் இமைகளினோரம் வழிந்து நைட்டியை நனைத்தது.  கண்ணீர் வழிய வழிய துக்கம் மெல்ல மெல்ல கரைந்து, தூக்கம் கண்ணைச்சுழற்றியது. மின்விசிறியின் காற்றில் மெல்ல படபடத்துக்கொண்டிருந்த நைட்டி மெதுவாக அவன் கன்னத்தை உரசியது. “அழாதே மக்கா..” என அம்மையே அவனது கண்ணீரைத் துடைத்ததுபோல் உணர்ந்தான். ‘என் அம்மா.. எங்கூடவேதான் இருப்பா” என தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக்கொண்டான். அம்மாவின் கை தனது தலையைக்கோதுவது போன்ற கற்பனையுடன், இமைகள் கனக்க  ஆழுறக்கத்தில் இன்னும் இன்னுமென அமிழத்தொடங்கினான்.

Thursday, 14 August 2025

மனத்துக்கண் மாசிலன்.. ( பண்புடன் இதழில் வெளியானது)


செக்கச்சிவந்திருந்தது வானம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மேகங்கள் விளிம்புகளில் செம்பஞ்சுக்குழம்பைப்பூசிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தன. வினோதுக்கு மருதாணியின் சிவப்பு மிகவும் பிடிக்கும். பூசிய மறுநாள் தோன்றும் இளஞ்சிவப்பு, நாளாக ஆக மெருகேறி அடர்வண்ணமாய் மின்னும் ரத்தச்சிவப்பு, கொஞ்சங்கொஞ்சமாய் நிறமிழந்த ஜாங்கிரி வண்ணம் என ஒவ்வொன்றையும் ரசிப்பான். சூரியனும் பளீரென்ற நீலவானில் ஒரு ஜாங்கிரியாக மிதந்து கொண்டிருந்தது. அழகான வளையம் வளையமாக ஜீராவின் மினுமினுப்புடன் பார்த்தாலே தின்னத்தூண்டுவதாக.. அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. கையை நீட்டி அதை எடுத்தான். கைக்குச்சிக்காமல் அது நழுவிக்கொண்டேயிருந்தது. அவனுக்கு அழுகையும் கோபமுமாக வந்தது. “அம்மா..” என கத்தினான். 

“இங்கேதான்ப்பா இருக்கேன், என்ன வேணும்?” கமலம்மாளின் மென்மையான குரல் பக்கத்தில் கேட்டது.

“இந்த ஜாங்கிரி தட்டோடு ஒட்டிக்கிச்சு. எடுக்க வரலை, எடுத்துக்கொடுங்களேன்” என்றான்.

“எங்கேப்பா?”

“இங்கதான்..” என்றவாறு திரும்பியவன் திகைத்தான். எங்கே போச்சு அதுக்குள்ள!! எனக்குழம்பினான். டேபிளின் துணியை இழுத்து அதனடியில் பார்க்க முற்பட்டான். அம்மா சட்டென்று கையை நீட்டித்தடுத்தாள். “போகட்டும் விடு.. உனக்கு ஜாங்கிரிதானே வேணும். சாயந்திரம் அண்ணனை வாங்கிட்டு வரச்சொல்றேன். இப்ப இந்த இட்லியைச்சாப்பிடு. அம்மா வேண்ணா ஊட்டி விடட்டா?” அவனது பதிலுக்குக் காத்திராமல் கொஞ்சிக்கெஞ்சி ஊட்டி விட்டு, வாய் துடைத்து, அவனது மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். சோபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே சரிந்து தூங்க ஆரம்பித்தான்.

‘இன்னிக்கு மனப்பிரமையால கொஞ்சம் அதிகமா கஷ்டப்படறான் போலிருக்கே’ கவலையுடன் அவனையே நோக்கியபடி பக்கத்தில் அமர்ந்தார் கமலம்மாள். சில நாட்களாகவே வினோத் சரியாகத் தூங்கவில்லை. ஆகவே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே அவனது வழக்கமான மாத்திரைகளோடு தூக்க மாத்திரையையும் சேர்த்து கொடுத்து விட்டிருந்தார். எப்போதுமே தூக்கமின்மையைத் தொடர்ந்து வரும் சில நாட்களை அவன் பெரும் அவஸ்தையுடன் கடக்க வேண்டியிருந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் மாயக்காட்சிகளால் பெரும் குழப்பமடைந்தான். அவன் சொல்வதை யாராவது நம்ப மறுத்தாலோ அல்லது காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாகக் கடந்தாலோ பெருங்கோபம் கொண்டான். “இல்லாததைச்சொல்ல நானென்ன பைத்தியமா?” எனக்கத்தியபடி கையில் கிடைத்ததைப் போட்டுடைப்பது வழக்கமாக ஆகியிருந்தது. 

“இதை ஹாலுஷினேஷன்னு சொல்லுவாங்க”

அவனைப் பரிசோதித்து முடித்து, கைகளைக் கழுவிக்கொண்டு அமர்ந்த டாக்டரின் முன் அவனது மெடிக்கல் ஃபைல் விரிந்து கிடந்தது. ஏகப்பட்ட டெஸ்டுகள், அவற்றின் ரிசல்ட் ரிப்போர்ட்டுகளோடு சமீபத்தில் எடுத்த எம் ஆர் ஐ ரிப்போர்ட்டும் இணைந்திருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து அலசி விட்டுத்தான் அதைச்சொன்னார். 

“அப்படீன்னா?” என வினோதின் அப்பா கேட்டார்.

“மாயத்தோற்றம். ஒரு விஷயம் இருக்கு.. ஆனா இல்லே. இல்லே.. ஆனா இருக்குங்கற மாதிரியான விஷயம்” என்றார் டாக்டர்.

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் டாக்டர்”

“இப்ப, இந்த ரூம்ல நீங்க, நான், இந்த டேபிள், சேர்ன்னு இருக்கறது எல்லாம் வினோதுக்கு மட்டும் வேற மாதிரி தெரியும். வேற மாதிரி உணர்வார், வேற எங்கியோ இருக்கற மாதிரி புரிஞ்சுக்குவார். அதையே நம்பவும் செய்வார்”

“ஆமா டாக்டர். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருந்தப்ப கூட ‘அப்பா.. ஃப்ளைட் ஏன் லேட்டாகுதுன்னு கவுண்டர்ல விசாரிங்கன்னு நச்சு பண்ணிட்டிருந்தான்”

“எங்க ஆஸ்பத்திரியோட லைட்டிங் அமைப்பு, யூனிஃபார்ம் உடுத்திய ரிசப்ஷன் பெண்கள், அடுத்த நோயாளிக்கான அழைப்பைச்சொல்லும் ஸ்பீக்கர் இதெல்லாமும் அவருக்கு ஏர்போர்ட்டை நினைவுபடுத்தியிருக்கு. அதான் ஆஸ்பத்திரி அவருக்கு ஏர்போர்ட்டா தெரிஞ்சுருக்கு, அதனால அப்படிக் கேட்டிருக்கார்”

“இது இப்படியேதான் இருக்குமா டாக்டர்? சரியாகாதா? வாழ வேண்டிய வயசுப்புள்ளை இவன்” தழுதழுத்தாள் கமலம்மாள்.

“கவலைப்படாதீங்க, நம்ம உடம்பு அடிப்படையில் கெமிக்கல்களாலதான் கட்டமைக்கப்பட்டிருக்கு. உடம்போட சுரப்பிகள், ஹார்மோன்கள் எல்லாத்துக்குமே அடிப்படை உப்புகள்தான், அதாவது கெமிக்கல்கள்தான். இதோட விளையாட்டுதான் நம்ம உணர்ச்சிகள், நம்ம சிந்தனைகள் எல்லாத்துக்கும் அடிப்படை. இவரோட எண்ணங்களும் மனசும் ஒண்ணையொண்ணு இயக்குது. ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரின்னு வெச்சுக்கோங்க. மனசைக்கட்டுப்படுத்தத்தெரிஞ்சா எண்ணங்களும் கட்டுப்படும். இந்த பிரமைகளும் குறையும். ஆனா, எண்ணங்களால சுரக்கற கெமிக்கல்களால இவரோட மனசு கட்டுப்பட மறுக்குது. இவரோட ரத்தத்துல சோடியம் அதிகமா இருக்கறதால கொஞ்சம் உக்கிரமா இருக்கார். இவரோட சாப்பாட்டில் உப்பைக்குறைங்க” 

“மத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு, முன்னைக்கு இப்ப முன்னேற்றம் தெரியுது. மருந்துகளோட உங்க ஒத்துழைப்பும் கவனிப்பும் பாசமும் அவருக்கு இப்ப ரொம்பவே தேவை. அவர் மனபிரமையால ஏதாவது பேசறப்ப மறுத்துப்பேசாம அவர் போக்கிலேயே பேச விடுங்க. கொஞ்ச நேரத்துக்கப்றம் தான் என்ன பேசினோம்ங்கறதே அவருக்கு ஞாபகம் இருக்கப்போறதில்லை. அதனால அவர் பேசறதை சீரியஸா எடுத்துக்காதீங்க. மறுக்கறப்பதான் வயலண்ட் ஆவாங்க. மனசறிஞ்சு எந்தத் தீங்கும் செய்யவோ பேசவோ மாட்டார். அதை நீங்க புரிஞ்சுக்கணும். மருந்துகளோட டோஸைக் கொஞ்சம் மாத்தியிருக்கேன். கொஞ்சம் தூங்குவார்.. தூங்க விடுங்க. அடுத்த மாசம் கூட்டிட்டு வாங்க. ஆல் தி பெஸ்ட்”. ப்ரிஸ்க்ரிப்ஷனை டைப் செய்து பட்டனைத்தட்டினார். அருகிலிருந்த ப்ரிண்டர் துப்பிய ப்ரிஸ்கிரிப்ஷனை ஃபைலின் உள்ளே வைத்து மூடி நீட்டினார். 

ஒரு வாரமாக அவர் அறிவுறுத்தியபடியேதான் எல்லோரும் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். அவன் என்ன பேசினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்கள். பக்குவமாகப் பதிலளித்தார்கள். ஆனாலும் சில சமயங்களில் சற்று மிகையாக நடந்து கொள்ளும்போது, கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே திருப்பித்திருப்பிச்சொல்லும்போது தங்கள் பொறுமை உடைந்து விடக்கூடாதே எனப் பயந்தார்கள். அவனது உடல் தன்னைச்சரி செய்து கொள்வதற்கான நேரத்தை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற மருத்துவரின் அறிவுரையை அம்மாதிரியான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதல் போல் சொல்லிக்கொண்டார்கள்.
 
கடந்த சில மாதங்களாகத்தான் இப்படியிருக்கிறான். அதற்கு முன் அவனும் மற்ற ஆண்களைப்போல் இயல்பாக இருந்தவன்தான். கல்லூரி முடித்ததுமே வேலையும் கிடைத்துவிட, வழக்கமான அம்மாக்கள் போல் தன் பிள்ளைக்கொரு கல்யாணத்தைப்பண்ணிப் பார்த்து விட வேண்டுமென கமலம்மாள் முனைந்திருந்த நேரம். அன்றைக்கு மட்டும் அந்தச்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் எல்லாம் கூடி வந்து இன்றைக்கு அவனும் ஒரு குடும்பஸ்தனாகியிருப்பான்.

அன்றைக்கு கமலம்மாள் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். பருப்பு டப்பாவைத்தேடியபோதுதான் கை மறதியாக அதை மேல்தட்டில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. எட்டி எடுக்க முனைந்தாள், எட்டவில்லை. நாற்காலியைப்போட்டுக்கொண்டு ஏறி எடுக்கலாம் என அவள் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வரத் திரும்பும்போதுதான் வினோத் தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழைந்தான். இல்லையில்லை… விதி அவனை இழுத்து வந்தது. 

“இதுக்குத்தான் அப்பாவையும் என்னையும் மாதிரி ஒசரமா வளரணும்ங்கறது. நகருங்க.. நான் எடுத்துத்தரேன் என்றவாறு டப்பாவை இழுத்தவன் தலையில் நங்கென்று ஏதோ விழுந்தது. “அம்மா..” எனக்கத்தியவாறு தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான். டப்பா விழுந்து மொத்தமும் சிதறியதையும் பையன் தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்ததையும் கண்டவள் பதறியடித்து மகனிடம் ஓடி வந்தாள். நல்லவேளையாக ரத்தம் எதுவும் வரவில்லை என உறுதிப்படுத்திக்கொண்டாள். அதற்குள் எலுமிச்சை அளவுக்கு உச்சந்தலையில் புடைத்து வீங்கியிருந்தது. “தேய்ச்சு விட்டுராதே.. ஐஸ் ஒத்தடம் கொடுத்தா சரியாப்போயிரும்” என்றபடி அவனை அழைத்து வந்து ஹாலில் உட்கார வைத்து, துணியில் கட்டிய ஐஸ் துண்டங்களால் ஒத்தடம் கொடுத்தாள்.

களேபரம் கொஞ்சம் ஓய்ந்தபின் அடுக்களைக்குச்சென்று அத்தனையையும் சீராக்கியபோதுதான் அவன் தலையில் விழுந்தது என்னவென்று கண்டாள். இஞ்சி, பூண்டு, ஏலக்காய் போன்றவற்றை இடிப்பதற்காக வைத்திருந்த சின்ன கல்பத்தா சரிந்து கிடந்தது. காலையில்தான் மூத்தவனின் குழந்தை அடுக்களையில் வந்து குறும்பு செய்து கொண்டிருந்தபோது, அவன் காலில் போட்டுக்கொண்டு விடக்கூடாதென அவசரத்தில் கைக்குக்கிடைத்த இடத்தில் அதைச் செருகி வைத்திருந்தாள். இப்போது அதுவே தீம்பாக முடிந்ததையெண்ணி தன்னைத்தானே கடிந்துகொண்டாள். “புள்ளைய ஆஸ்பத்திரிக்குப்போயி வீக்கம் வத்தறதுக்கு ஒரு ஊசியைப்போட்டுட்டு வரச்சொல்லணும். சரியாப்போயிரும்” என எண்ணிக்கொண்டாள்.

ஆனால், அவள் எண்ணியது போல அது சரியாகப்போகவில்லை. அப்போதைக்கு வீக்கம் வற்றி அவர்களும் அதை மறந்து விட்டிருந்தார்கள். ஒரு மாதம் போல் கழிந்திருக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது என வினோத் சொல்ல ஆரம்பித்தான். விண்விண்ணெனத் தெறிக்கும் வலியோடு தலையைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருப்பான். சாத்தியமான எல்லா நோய்க்கூறுகளுக்கும் டாக்டர் பரிந்துரைத்த டெஸ்டுகளையெல்லாம் எடுத்து எல்லாமே நார்மல் என ரிப்போர்ட் வந்தது. எங்கேயோ வெறித்துப்பார்த்துக்கொண்டு வெகு நேரமாய் அவன் அமர்ந்திருப்பது ஆரம்பித்தது. டிவியிலிருந்து ஆட்கள் இறங்கி வந்து தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாக அவன் சொன்ன அன்றுதான் குடும்ப மருத்துவர், “நீங்க ஒரு ந்யூராலஜிஸ்டைப் பார்க்கறது நல்லது” என்றார். 

ஆதியோடந்தமாய் அத்தனையையும் கேட்டுக்கொண்ட ந்யூராலஜிஸ்ட், அவர் பங்குக்கு சில டெஸ்டுகளை எடுத்தார். சில விவரங்களை அவனிடமும் குடும்பத்தினரிடமும் தனித்தனியாகக் கேட்க வேண்டுமென்றார். அவனிடம் பேசியபின், “அம்மாவை வரச்சொல்லுங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க” என்றார். வெளியே வந்தவன், “அம்மா.. டாக்டர் கேக்கறதுக்கு கவனமா பதில் சொல்லுங்க, இல்லைன்னா எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குன்னு நினைச்சுக்கப்போறார்” என்றான்.

“போடா..” என்றுவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.

அவளிடமும் பேசி விவரங்களை அறிந்து கொண்டபின், “இதோ பாருங்கம்மா, தலைல கனமான பொருள் விழுந்ததால ஒரு சின்ன ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கு. மருந்துகளால அதைக் கரைச்சிரலாம். ஒண்ணும் பயப்படாதீங்க. ஆனா அந்தக்கட்டியால ரத்த ஓட்டம் தடைபட்ட பகுதிகள்ல சின்ன பாதிப்பு இருக்குது. ஆண்டவன் அருளால, நினைவாற்றல் பாதிக்கப்படலை, கை கால் இயக்கம் முடங்கலை. ஆனா கொஞ்சம் சித்தப்பிரமை மாதிரி அப்பப்ப ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துக்கு ஏற்படும். மாயத்தோற்றங்கள் தென்படும். அதால அவருக்கு எது நிஜம்? எது மாயைங்கற குழப்பம் ரொம்பவே இருக்கும். அந்த சமயங்கள்ல அதெல்லாத்தையும் அவர் நம்பறதோட நீங்களும் நம்பணும்ன்னு எதிர்பார்ப்பார். சில சமயம் அந்தக் கனவுலகிலேயே வாழவும் செய்வார். கொஞ்சம் பொறுமையா கையாண்டுதான் இதை சரி செய்யணும். எப்பவுமே குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருந்தாதான் எதையும் சரிவர நடத்த முடியும். அதுவும் நீங்க அவரோட அம்மா. இதில் பெரும்பான்மையான பங்கு உங்களோடதாத்தான் இருக்கும். புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். மருந்துகள் எழுதித்தரேன், நாளடைவில் சரியாகிரும்” என்றார் மருத்துவர்.

ஆடிப்போயிருந்தாள் கமலம்மாள். ‘தெய்வமே.. என் குழந்தையை காப்பாற்றிக்கொடு, உன் சந்நதிக்கு வரேன் தாயே’ என கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள். “எல்லாம் சரியாப்போயிரும்” என எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல் தனக்குத்தானேயும் சொல்லிக்கொண்டாள். வினோதின் அண்ணன் தினேஷுக்கு மட்டும் மருத்துவர் சொன்னதை சொல்லி வைத்தாள். ‘மெடிக்கல் லீவ் போடேன்ப்பா.. உடம்பைச் சரியாக்கிட்டு அப்றம் வேலைக்குப் போகலாமில்லே?’ என வினோதைத் தாஜா செய்து லீவ் போட வைத்தாள். பிரமை கூடிவரும் நேரங்களில் பிள்ளை எங்காவது தொலைந்து விடுவானோ அல்லது அவனைப்பற்றி அக்கம் பக்கம் யாராவது வம்பு பேசி அதனால் அவனது பிற்காலத்தில் அமையப்போகும் திருமண வாழ்வுக்குப் பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்தாள். சிகிச்சையாலும் அவளது அன்பான கவனிப்பாலும் அவனும் கொஞ்சங்கொஞ்சமாகத் தேற ஆரம்பித்திருந்தான்.

மொபைல் கிணுகிணுத்தது… சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள். ‘அடக்கடவுளே.. உட்கார்ந்து கொண்டே தூங்கிட்டேன் போலிருக்கு’ கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். வினோத் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. பாத்ரூம் போயிருப்பான் என எண்ணிக்கொண்டவள் மணியைப்பார்த்தாள், மதியம் இரண்டரை ஆகியிருந்தது. “வினோத்.. சாப்பிட வாப்பா. தட்டு வைக்கிறேன்” குரல் கொடுத்து விட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தாள். தெருவில் கலவையான குரல்கள் கூச்சலும் குழப்பமுமாய்க் கியாமுயாவெனக் கேட்டுக்கொண்டிருந்தன. நகர்ந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். அவள் கண்ட காட்சி விசித்திரமாயிருந்தது.

முழு சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரியை, சாதாரண லுங்கியும் பனியனும் அணிந்த, பொதுஜனம் போல் தோன்றிய ஒருவன் கைகளைக் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று கொண்டிருந்தான். தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்த்தார்களேயன்றி யாரும் அதைத்தடுக்க முயலவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தவாறே வீட்டுக்குள் நுழைந்த தினேஷிடம்,  ‘ஒரு போலீஸை இப்படி நடத்துவது அரசாங்கக்குற்றம் அல்லவா?’ என மருகினாள் கமலம்மாள்.

“ஐயோ அம்மா!.. உங்களுக்கு விஷயமே தெரியாதில்லே. அந்த போலீஸ் யூனிஃபார்ம்ல இருக்கறவன் உண்மைல ஒரு ஃப்ராடு. வாடகைக்கு யூனிஃபார்மை வாங்கிப்போட்டுக்கிட்டு அங்கங்க மிரட்டி காசு பிடுங்கிட்டிருந்தான். அவனை கையும் களவுமா பிடிக்க ஒரு நிஜமான போலீஸ் ஆபீசர் ரொம்ப நாளா மஃப்டில சுத்திட்டிருந்தார். இன்னிக்கு, அவர் கிட்டயே கைவரிசையை காமிச்சிருக்கான். அதான் அந்தக்கையைக்கட்டி இழுத்துட்டுப்போறார். தெருமுனைலதான் போலீஸ் ஜீப் நிக்குது. பாத்துட்டுதான் வரேன்” என்றான் தினேஷ்.

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! சட்டத்தின் கைகள் நீளமானவை, அதன் பிடியிலேர்ந்து தப்ப முடியுமா. சரி.. அது அதன் கடமையைச்செய்யட்டும், நாம நம்ம கடமையைச்செய்வோம். சாப்பாடு ஆறி அவலாகறதுக்குள்ள மொதல்ல சாப்பிடுவோம்” என்றாள்.

“சட்டத்தோட கைகள் மட்டுமில்லே.. இந்த பொடிப்பயலோட கைகளும் வரவர நீளுது. பாருங்க, எப்படி கிள்ளறான்னு. ஆமா, வெளில என்ன கலாட்டா? ஒரே சத்தமா கேட்டுது?” முகத்தைத்துடைத்த டவலை நாற்காலியின் முதுகில் போட்டு விட்டு அமர்ந்தான் வினோத்.

“அது ஒண்ணுமில்லைப்பா.. சும்மா ஏதோ சத்தம்” வினோதுக்குத்தெரியாமல் அம்மாவுக்கு மட்டும் ‘எதுவும் பேசாதீங்க’ என்பது போல் கண்ணைக்காட்டி ஜாடை செய்தான் தினேஷ். பேசும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்று கூட வினோதைத் தூண்டுவதாக அமைந்து விடலாம் என்பதால் அவனிடம் சற்றுக் கவனமாகவே பேசுவது வழக்கம்.

மனம் ஒரு விசித்திரமான ஜந்து. அதை ஆற்றுப்படுத்தும் சொற்களையோ செயல்களையோ விட, அதை ஆட்டுவிக்கும் விதமாய் நடப்பவற்றையே அது மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. இறுகப்பற்றிக்கொள்கிறது, மிட்டாயைக் கொடுக்க மறுக்கும் குழந்தையாய் நம்முடைய சமாதானச்சொற்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அலறி அழுகிறது. அதன் போக்கிலேயே விட்டுத்தான் அதை வசப்படுத்த வேண்டும். கடைசிச்சந்திப்பின்போது மருத்துவர் சொல்லியிருந்தது நினைவில் மோத ‘வினோதின் மனமும் விரைவிலேயே அவன் வசப்படும். என் குழந்தையும் மற்றவர்களைப்போல் நன்றாக வாழ்வான்.. வாழ வேண்டும்’ என அந்தத்தாயுள்ளம் பிரார்த்தித்தபடி பூஜையறை இருக்கும் திசை நோக்கி கை கூப்பியது.

டிஸ்கி: கதையைப் பிரசுரித்த பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, 18 July 2025

சாரல் துளிகள்

அன்பெனப்படுவது..
கைச்சூட்டால் கூட வதங்கிவிடாமல் ஒரு மலரை உள்ளங்கையில் பொத்திப் பாதுகாப்பது.

இளைப்பாறிய அத்தனை பறவைகளும் பறந்து சென்றபின், இலைகளெல்லாம் உதிர்ந்தபின், கிளைகளும் கழிந்து அடிமரம் மட்டும் எஞ்சியபோது வேரடி மண் இறுக்கிக்கொண்டது தனது பந்தத்தை.

பனியை விதைத்து நிலவொளியை அறுவடை செய்யக் காத்திருந்தவனின் எஞ்சிய கனவுகளில் ஒரு ஊதாப்பூவைச் செருகுகிறது வெயில்.

அன்பு, அழகு, குணம், உதவும் மனம், திறமை போன்றவற்றில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ பிறருடன் பழகவும் நட்பு பாராட்டவும் தகுதிகளாய்க்கொள்கின்றனர் சிலர். பணம் ஒன்றை மட்டுமே அவ்வாறு நெருங்குவதற்கான ஒரே தகுதியாய்க் கொள்கின்றனர் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள் போன்ற சிலர்.

அங்கெங்கெனாது எல்லா இடங்களிலும் நீக்கமற வந்துவிட்டது காசில்லா பணப்பரிமாற்றம். வாய்க்கரிசிக்கும் நெற்றிக்காசுக்கும் கூட க்யூஆர் கோட் வந்து விட்டதென்றால் நிம்மதியாகப் போய்விடும். 

நாலு பேர் என்ன சொல்வார்கள்? சமுதாயம் நம்மை எப்படிப்பார்க்கும்? என்ற அச்சத்திலும் குழப்பத்திலும்தான் பல தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சமுதாயம் என்பதும் அதிலிருக்கும் நாலு பேர் எனப்படுபவர்களும் வேறு யாருமல்ல.. நீங்களும் நானும்தான். புறம் பேசுதல், முன்பின் அறியாதவர்களைப்பற்றி மனம் போன போக்கில் எடைபோடுதல், வன்மம் வளர்த்தல் போன்ற பல கல்யாண குணங்களை எப்போது விட்டொழிக்கப்போகிறோம்? எப்போது திருந்தப்போகிறோம்?!

வலியைச்சொல்லி அழக்கூட விதியற்றுப்போனவர்களின் கண்ணீர்க்குரலை மௌனமாய்க் கேட்டுக்கொள்கிறது தலையணை.

ஓங்கியோங்கி அறைந்து கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறது மழை. பழம் விட மறுத்து பிடிவாதமாய் இன்னும் இறுகிக்கொள்கிறது திறவா நெடுங்கதவம்.

ஒன்றுக்கும் மதிப்பில்லாத உறுத்தலை விலைமதிப்பில்லா முத்தாக்கி வெல்கிறது சிப்பி. உறுத்தல்களை எண்ணியெண்ணி விலைமதிப்பில்லா நேரத்தையும் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் தோற்கிறோம் நாம்.

உளி தொடா ஆழத்தில் புதைந்து கிடக்கிறது சிற்பியின் மனம் தொட்டுக்கொணராத இன்னொரு சிலை.

Monday, 30 June 2025

ச்சுண்டா.. இதை ருசித்ததுண்டா!!

ச்சுண்டா.. பெயரைக்கேட்கும்போது ஏதோ ஹிந்திப்பட வில்லனின் பெயரைப்போல் இருக்கிறதல்லவா! ஆனால் இது கோடைகாலத்தின் ஹீரோக்களில் ஒன்றான மாங்காயில் செய்யப்படும் ஒரு இனிப்பும் புளிப்புமான தொக்கு வகை. குஜராத்தில் மிகப்பிரபலமான பாரம்பரிய வகையான இது தற்காலத்தில் அதன் அண்டை மாநிலங்களிலும் தயாரிக்கப்படுகிறது. 

முக்கனிகளில் ஒன்றான மா மலிந்துகிடக்கும் வேனிற்காலம் இது. பழமாகச் சாப்பிட்டதுபோக மாம்பழப்புளிசேரி, மாம்பழக்காடி எனவும் செய்தாயிற்று. இன்று முருகனுக்குகந்த வைகாசி விசாகத்திருநாள். குமரி மாவட்டத்தில் மாம்பால் என்றழைக்கப்படும் மாம்பழக்காடியைச் செய்து படைப்பார்கள். அதன் செய்முறையை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். சீசனில் அதிகமாகக் கிடைக்கும்போது இங்குள்ளவர்கள் மாம்பழத்தை அரைத்துக் கூழாக்கி, ஐஸ் ட்ரேயிலிட்டு கட்டிகளாக்கி ஜிப்லாக் பைகளில் நிரப்பி ஃப்ரீசரில் சேமித்துக்கொள்வார்கள். சிலர் ஆம்ரஸ் செய்து அதையும் சேமிப்பார்கள். பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஆம்ரஸ் அருமையான ஜோடி. வெயில் கொளுத்தும் தினங்களில் மாம்பழத்தைக்கூழாக்கி தட்டில் ஊற்றி வெயிலில் காய வைத்து அது இறுகியதும் துண்டு போடப்படும் "ஆம் பாப்பட்" என்ற வஸ்து வாய்க்கு உணக்கையானது.

வெயில் கொளுத்தும் நாட்களில் அதை வீணாக்காமல் மாங்காயைப் பல்வேறு பதார்த்தங்களாகப் பதப்படுத்தி சேமித்து வைத்துக்கொண்டால் அடுத்து வரும் மழை, குளிர்காலங்களில் பெரிதும் பயன்படும். ஊறுகாய், தொக்கு, உப்பிலிடு, முரப்பா என இவற்றின் வரிசையில் தவறாது இடம் பெறுகிறது "சுண்டா"

இது ஒரு குஜராத்திய வகை கட்டா மீட்டா ஊறுகாய். ஆனாலும் மஹாராஷ்ட்ர மக்களும் தயாரித்து ஸ்டாக் வைத்துக்கொள்வதுண்டு. அண்டை மாநிலங்களிடையே ரெசிப்பிகளைப் பகிர்வது புதிதா என்ன? பாரம்பரிய முறைப்படி செய்வதானால் கிட்டத்தட்ட ஒரு வாரமும் கொளுத்தும் வெயிலும் ஒரு சில மசாலாக்களும் தேவைப்படும் இந்த "சுண்டா"வை ஒரு மணி நேரத்தில் கொட்டும் மழைக்காலத்தில் சில மசாலாக்களைத் தவிர்த்துவிட்டு என் முறைப்படி செய்தேன். பருவமழை முந்திக்கொண்டு விசிட் செய்ததற்கு நான் பொறுப்பாக முடியாதல்லவா..

பொதுவாக எல்லா வகை மாங்காய்களிலும் செய்யலாம் என்கிறார்கள். பாட்டின் பிழைக்குத்தக்கன பரிசைக் குறைப்பதுபோல் இல்லாமல் அதிக புளிப்புக்கு அதிக சீனி சேர்க்க வேண்டும். என்னவொரு ப்ரச்னை எனில் ஏகத்துக்கும்சீனி சேர்த்தால் டயபடீஸ் காரர்கள் மோந்து பார்த்தாலே 500க்கு மேல் சுகர் எகிறிவிடும் அபாயமிருப்பதால் அதிகம் புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காயில் செய்தல் நலம். அதிக புளிப்புள்ள காய்களை ஊறுகாய் போட்டுத் தீர்த்துக் கட்டிவிடலாம்.

ஒரு பெரிய கிளிமூக்கு மாங்காயை கேரட் துருவியில் பூப்பூவாய்த் துருவி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு அதோடு சம அளவுக்கு சீனியோ அல்லது சீனியும் வெல்லமும் சேர்ந்த கலவையையோ சேர்த்து கால் ஸ்பூன்உப்பும் அதேயளவு மஞ்சள் பொடியும் சேர்த்துக் கிளறி அரை மணி நேரத்துக்கு மூடி வைத்து விடவும். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் மாமி, சித்தப்பா போன்ற காவியங்களைக் கண்டவர் நெஞ்சம் போல் நெகிழ்ந்து நீர் மல்கி இருக்கும். அதை அப்படியெல்லாம் ஈஸியா விட்ரப்பிடாது. கொண்டு போய் தகதகவென எரியும் அடுப்பில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்துவிட வேண்டும். சீனி நன்றாகக் கரைந்து மாங்காய் பளபளவென நிறம் மாறி ஒரு கம்பிப்பதத்திற்கு பாகு வரும்வரை அவ்வப்போது லேசாகக் கிளறி விடவும்.

பதம் வந்ததும் கால் ஸ்பூன் சீரகத்தூளும் அரை ஸ்பூன் மிளகாய்த்தூளும், கால் ஸ்பூன் ஏலப்பொடியும் சேர்த்துக் கிளறி அடுப்பை தகதகவென எரியவிட்டு ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரைக்கும் கிளறுங்கள். அடிப்பிடிக்காமல் இருக்கணும். இனிப்பும் புளிப்பும் காரமும் எங்கோ ஒரு மூலையில் உப்பும் கலந்து ருசிக்கணும். இனிப்பும் புளிப்பும் முன்னே நிற்கிறதெனில் சிட்டிகையளவு காரம் சேருங்கள். அல்வா பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் நிரப்பிக்கலாம்.

சப்பாத்தி, பூரி, ப்ரெட்டில் தடவிக்கலாம், சாப்பாட்டுடன் ஊறுகாய் மாதிரி தொட்டுக்கலாம், அல்லது சும்மாவே கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டு கொஞ்சங்கொஞ்சமா ருசிக்கலாம். சுண்டாவுக்குத் தொட்டுக்க ஜில்லுன்னு மழையும் ஒரு புத்தகமும் இருந்தாப் போதும்.

Thursday, 1 May 2025

உழைப்பாளர் தினத்தில் பிறந்த மஹாராஷ்ட்ர தினம்


உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப ஆண் பெண் பேதமில்லாமல், உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமே வாழ்த்துகளைச்சொல்லுவோம். அடுக்களையில் உழைப்பவராயினும் ஆபீசில் களைப்பவராயினும், வீதியில் பாடுபடுபவராயினும் விண்வெளியில் சாடுபவராயினும் அனைவரும் ஒன்றே. உடலாலும் மூளையாலும் உழைப்பவர் அனைவரும் ஓர் வர்க்கமே. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

இன்று மஹாராஷ்ட்ரத்தில் மஹாராஷ்ட்ர திவஸ் கொண்டாடப்படுகிறது. மொழி வாரியாகப் பிரிந்து மராட்டிய மாநிலம் உருவான தினம் இன்று. மேலதிகமாக விக்கியண்ணன் கொடுக்கும் தகவல்கள் இதோ..

The States Reorganisation Act, 1956 defined boundaries for the states within India on the basis of languages. The Bombay State that was formed as a consequence of this act, however, was composed of different areas where different languages were spoken; Marathi, Gujarati, Kutchi and Konkani. The Samyukta Maharashtra Samiti was at the forefront of the movement to divide the Bombay State into two states; one composed of areas where people primarily spoke Gujarati and Kutchi and the other where people primarily spoke Marathi and Konkani.
The state of Maharashtra and Gujarat were formed as a result of this movement according to the Bombay Reorganisation Act, 1960 enacted by the Parliament of India on 25 April 1960. The act came into effect on 1 May 1960, hence the reason of annual celebration. from onwards.

பல வருடங்களுக்கு முன் எனது வலைப்பூவில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி..

//தனி மாநிலம் வேண்டுமென்று போராடிய சம்யுக்த மராட்டிய இயக்கத்தினரின் ஒரு போராட்டத்தின் போது 105 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மராட்டிய மாகாணம் கலைக்கப்பட்டு, தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960ல்உருவானது. மஹாராஷ்டிர மாநிலம் பிறந்த இத்தினத்தை இங்குள்ள மக்கள் "மஹாராஷ்டிர திவஸ்" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உழைப்பாளர் தினமான மே தினமும், மஹாராஷ்ட்ர தினமும் ஒவ்வொரு வருடமும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 

மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள், முந்தைய ஹைதராபாத் மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் போன்றவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. குஜராத்தி மொழி பெருவாரியாகப்பேசப்படும் பகுதிகள் இணைக்கப்பட்டு குஜராத் மாநிலமும் இதே நாளில்தான் உருவானது. இன்றைய தினம் தாதரிலிருக்கும் சிவாஜி பார்க்கில் ஊர்வலங்கள், மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவதோடு மராட்டிய மாநில ஆளுநரின் உரையும் கட்டாயம் இடம் பெறும். மஹாராஷ்டிர தினத்தன்று மாநிலம் முழுவதும் மதுபான விற்பனையும் கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருக்கும்.//

Sunday, 27 April 2025

சாரல் துளிகள்

மண்ணிறங்கிய முதல் மழைத்துளியைக் கண்டது ஒரு நொடி. காலடித்தடத்தில் ஊறும் நீரைக்கண்டது மறு நொடி. இரண்டுக்குமிடையே குளிர்ந்து கிடக்கிறது மேகத்தின் வாழ்வு.

விழி மூடி ஓய்வெடுக்க ஏங்கும் களைத்தவளுக்கு, தலை சாய்க்கக் கிடைத்திருப்பது இலவம் பஞ்சுத்தலையணையா அல்லது மீன் கூடையா என்பது ஒரு பொருட்டேயல்ல. அவளுக்கு அதுவும் ஒரு தாய்மடியே.

பலி கொள்ளும் வரை.. இரையுடன் சற்று விளையாடுகிறது புலி, தப்பிக்க கருணை காட்டி நேரமளிக்கிறது சிலந்தி, வாத்சல்யமும் பாசமும் காட்டுகிறான் மனிதன்.

ஒருவர் தனது கடமைகளிலிருந்து விலக பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் வழுவாமலிருக்க தன்னறம் ஒன்றே காரணமாய் இருக்க முடியும்.

புரிந்தும் புரியாதவர்போல் அராஜகம் செய்வோரே, சாதுர்யமாய்க் காய் நகர்த்தி எதிராளியைக் குழப்புவதில் முன்னணியில் இருக்கின்றனர்.

இயல்பிலேயே கசக்கும் வேப்பம்பூவின் அமுதையும் அதற்கான தேனீ எங்கிருந்தாவது தேடி வந்துவிடுகிறது.

கண்ணாடி வளையல்களும் கொலுசுகளும் எழுதும் இசைக்குறிப்புகளுக்கான நுட்பங்கள் விடுவிக்குந்தோறும் இன்னும் இறுகிக்கொள்கின்றன.

எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் கடலில் படகைச்செலுத்த இயலாது, அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதில் உருப்படியான சிந்தனைகள் பிறக்காது.

தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாதவர்களே பிறரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் குலைப்பதில் முதலிடம் வகிக்கிறார்கள்.

நமது அபிமானத்தைப் பெறுவதற்காக இன்னொருவரைத் தரம் தாழ்த்துபவர்கள் ஆபத்தானவர்கள். வேறொருவரின் அபிமானத்தைப் பெறுவதற்காக என்றாவது நம்மையும் தரம் தாழ்த்தக்கூடும் இவர்கள். அன்பைப் பூசிக்கொண்டிருக்கும் அவர்களை அடையாளம் காண்பதும் எளிதல்ல.

Monday, 21 April 2025

உணவு மஹாத்மியம்..

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்காலத்தில் உணவைப்பற்றிய விழிப்புணர்வும் உடல் நலத்தின் மேல் அக்கறையும் மக்களிடையே பெருகி வருகிறது. ஒரு காலத்தில் ஊருக்குள் ஒன்றிரண்டு ஹோட்டல்கள் இருந்தாலே அதிசயம். ஆனால் இப்பொழுதோ தெருவுக்கு ஐந்தாறு ஹோட்டல்கள், மெஸ்கள் என பெருகிக்கிடக்கின்றன. போதாததற்கு, வேண்டியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டால் வீட்டுக்கே கொண்டு வந்து தந்து விடும் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்றவற்றின் பெருக்கம். பல வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்டே இராத பெரும்பாலான உணவுகள் இன்று சர்வ சாதாரணமாக நமது தட்டுக்கு வந்திருக்கின்றன. 
அவையெல்லாம் நமது உடலுக்கு ஊறு விளைவிக்காதவைதானா? அம்மாக்கள், பாட்டிகள் சமைத்ததைப்போல் ஆரோக்கியமும் ருசியும் நிரம்பியவைதானா? என அலசிப்பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கூடவே, ‘அப்படியெல்லாம் யோசிக்க விட்டுவிடுவோமா?’ என கங்கணம் கட்டிக்கொண்டு ஏகப்பட்ட செய்முறைகளும் ஒவ்வொரு உணவகத்தின் சிறப்புகளையும் பற்றி யூட்யூபர்களின் ‘வேற லெவல்’ ரிவ்யூக்களும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. பலனாக, வீட்டுச்சாப்பாடு சிறந்ததா? வெளிச்சாப்பாடு சிறந்ததா? என மேடைகளில் விவாதிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

‘உணவே மருந்து’ என வாழ்ந்து வந்தவர் நம் மக்கள். நோய் வாய்ப்பட்டு விட்டால், எந்த வகை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் சரி, பத்தியச்சாப்பாடுதான் போடுவார்கள் நம் அம்மாக்கள். நகைச்சுவைக்காக நாம் ரசத்தை எவ்வளவோ கிண்டல் செய்கிறோம். ஆனால், காய்ச்சல் வந்து வாய் கசந்து கிடக்கும் ஒருவனுக்குத்தான் தெரியும் ரசம் வாய்க்கு எவ்வளவு உணக்கையாக இருக்கிறதென்று. மாறி வரும் உணவுப்பழக்கம், நேரமின்மை, வீட்டின் அஸ்திவாரமான குடும்பத்தலைவிக்கே உடல் நலம் குன்றுவது என பல காரணங்களால் இப்பொழுதெல்லாம் சாப்பாட்டை வெளியில் ஆர்டர் செய்து தருவித்துக்கொள்வது அதிகமாகியிருக்கிறது. மாதத்தில் ஒரு நாள் எனில் பரவாயில்லை, ஆனால், எப்போதாவதுதான் வீட்டில் சமைப்போம் என்ற நிலை ஆரோக்கியத்துக்கும், பணத்துக்கும் கேடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மிகவும் சுத்தமாக, சுகாதாரமாகச் சமைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், வெளிச்சாப்பாடு உண்மையிலேயே அப்படித்தான் சமைக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. வீட்டிலிருக்கும் அல்சர் நோயாளிக்கு, வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு, அதிக உடல் எடை கொண்ட உறுப்பினர்களுக்கு என ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் நாம் பார்த்துப்பார்த்து சமைப்பதைப்போல் வெளியில் சமைத்து அனுப்புவதில்லை. ருசியையும், மணத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்த நிச்சயமாக செயற்கை நிறமிகள், எசென்ஸ்கள், அளவுக்கதிகமான எண்ணெய் போன்றவை கண்டிப்பாகச் சேர்க்கப்பட்டே வரும். வேடிக்கை என்னவெனில், வீட்டுச்சாப்பாடு போரடிக்கிறதென்று, வெளியில் சாப்பிடும்போது, வீட்டுச்சாப்பாடு மாதிரி திருப்தியாகவேயில்லை என அலுத்துக்கொள்வதுதான். 
ஒரு காலத்தில் பண்டிகைகள், நல்ல நாட்கள் என ஏதாவது விசேஷங்கள் வரும்போதுதான் வீட்டில் பட்சணங்கள், பலகாரங்கள் என ஏதாவது செய்வார்கள். இப்பொழுதெல்லாம் நினைத்தபோது செய்தோ, வெளியில் வாங்கியோ சாப்பிடுகிறோம். அவற்றில் பெரும்பாலானவை எண்ணெய்யில் குளித்த, நெய்யில் புரண்டவையாக, எக்கச்சக்கமான கலோரிகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. அதிகமும் உடலுழைப்பு தேவைப்படாத, நாற்காலியிலேயே அமர்ந்திருக்கும் இன்றைய வாழ்க்கை முறையால் அந்த அதிகப்படியன கலோரிகள் எரிக்கப்படாமல் ஊளைச்சதையாய், வேண்டாத கொழுப்பாய் உடலில் தங்குகிறது. அது வேண்டாத வியாதிகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது. இதன் விபரீதத்தை உணர்ந்து சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  லோ கார்ப் முதலான பல்வேறு உணவு முறைகள், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர் மக்கள். ஆனால், இவை ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலில், டயட்டீஷியனின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனில், வெளிச்சாப்பாட்டையே முற்ற முழுக்கத் தவிர்த்து விட வேண்டியதுதானா எனக்கேட்டால் தவிர்க்க வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இருவரும் வேலைக்குப்போகும் வீடுகளில் பணியிடத்துக்கும் வேலையிடத்துக்கும் இடையே பெருந்தூரம் இருந்தால் பயணத்திலேயே பெரும்பொழுது கழிந்து விடும். என்னதான் எளிமையாகச் சமையலைத் திட்டமிட்டுக்கொண்டாலும் ஏதாவதொரு கட்டத்தில் அலுப்பும் சலிப்பும் நிச்சயம் ஏற்படும். அப்படியான சந்தர்ப்பங்களில் வெளியில் சாப்பிடுவதில் தவறொன்றுமில்லை. அதற்காகக் குற்ற உணர்வு கொள்ளவும் தேவையில்லை. மஹாராஷ்ட்ராவில் “போளி பாஜி கேந்த்ர” மிகவும் பிரபலம். சோறு, சப்பாத்தி, பருப்புக்குழம்பு, இரண்டு வகைக்கறிகள், அதிகம் போனால் ஏதாவதொரு இனிப்பு, இவ்வளவுதான் அவர்களின் மெனு. பெண்களே சுகாதாரமாகச் சமைத்துத்தருகிறார்கள். சோளம், கம்பு, தினை போன்ற சிறுதானியங்களில் செய்த ரொட்டி, விரத நாட்களில் ஜவ்வரிசி உப்புமா, வடை போன்றவையும் கிடைக்கும். வேலை முடிந்து வீட்டுக்குச்செல்லும் பெண்கள் இவற்றில் தங்களுக்கு வேண்டியதை வாங்கிச்செல்வதுண்டு. 
முழு உணவுத்தட்டு
தேவையைத்தவிர, வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் ஆர்வமும் வெளிச்சாப்பாட்டு வகைகளைத் தேடி உண்ணத்தூண்டுகிறது. சிலர், வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ சென்றால் முதலில் அந்தப்பகுதியின் ஸ்பெஷல் உணவு என்ன? என்று நிச்சயமாக அறிந்து ருசி பார்ப்பார். மும்பைக்கு வருபவர்கள் வடா பாவ், பாவ் பாஜி, மிசல் பாவ், சாபுதானா வடா, தாலிபீட் போன்ற மராட்டிய உணவுகளை ருசி பார்க்க நிச்சயம் விரும்புவர். அதைப்போலவே தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் இட்லி தோசை உண்ண விரும்புவதுமுண்டு. என்னதான் சமையலில் விற்பன்னராக இருந்தாலும் சில பகுதிகளின் வட்டார உணவுகளை அதே ருசியுடன், பக்குவத்துடன் சமைக்க இயலாது. அப்படியிருக்க சமையலில் அ ஆ கூட தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்? மக்களின் இந்த உணர்வை நாடி பார்த்துப் புரிந்து கொண்ட உணவகங்கள் இப்பொழுதெல்லாம் நாம் மறந்து விட்ட பாரம்பரிய உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் காலையுணவாக பழைய கஞ்சி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். 

மனிதனின் முக்கியமான அடிப்படைத்தேவைகளில் முதலிடம் பிடிப்பது உணவு. இந்தியர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது “சாப்பிட்டீர்களா?” என வினவிக்கொள்வது வழக்கம். இந்தியாவில் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்பட்ட பஞ்சங்களின்போது உணவுப்பற்றாக்குறையால் பெருமளவு மக்கள் உயிர் துறக்க நேரிட்டதின் நீட்சியாகவே அவ்வாறு விசாரித்துக்கொள்கிறோம்  என்பர். அப்படி அடிப்படைத்தேவையான உணவை எக்காரணங்கொண்டும் வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திருமணம் போன்ற விசேஷங்களின்போது எக்கச்சக்கமான அயிட்டங்களைப்பரிமாறி அவை சாப்பிடப்படாமல் வீணாகிறது, ஆகவே, முற்காலம் போல் குறைவான அதே சமயம் சுவையான அயிட்டங்களைப்பரிமாறி நிறைவான விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாகி வருவதும் வரவேற்கத்தக்கதே.

எதைக்கொடுத்தாலும் போதும் என்ற மனநிறைவு கொள்ளாத மனிதன் உணவை மட்டுமே “போதும்.. போதும்” என்கிறான். ஆகவேதான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கின்றனர். 

அன்னம் என்பது சக்தி, அன்னமயம் பிராண மயம்.

டிஸ்கி: புழுதி மின்னிதழின் உணவுச்சிறப்பிதழில் வெளியானது.

LinkWithin

Related Posts with Thumbnails