Showing posts with label புத்தக மதிப்புரை. Show all posts
Showing posts with label புத்தக மதிப்புரை. Show all posts

Sunday, 26 July 2026

காவூ - ராமசந்திரன் உஷா (புத்தக மதிப்புரை)


நூல்: காவூ
ஆசிரியர்: ராமசந்திரன் உஷா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்

ராமசந்திரன் உஷா எழுதிய ‘காவூ’ நாவல், தேநீர் பதிப்பகம் – சித்தாவரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இது கடந்த நூற்றாண்டின் இந்திய வரலாற்றையும், ஒரு எளிய பெண்ணின் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பிணைத்து எழுதப்பட்ட ஓர் அழுத்தமான சமூகப் புனைவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் விரிந்து, நெருக்கடி நிலை காலம் வரை நீளும் இந்நாவல், சமூக யதார்த்தத்தையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக நுட்பமாகப் பேசும் ஒரு முக்கியப் படைப்புமாகும். 1933 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில், ஒரு மாத்வக் குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்நாவல், காவேரி எனும் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது.

நாவலின் ஆகப்பெரிய பலமே இதன் நாயகியான 'காவூ' என அழைக்கப்படும் காவேரி என்ற எளிய பெண்தான். ஒரு சாதாரணப் பெண், நாட்டின் மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கும் சமூகக் கொந்தளிப்புகளுக்கும் இடையே தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கிறாள் என்பதை நூலாசிரியர் நெகிழ்ச்சியாகச் சித்தரித்துள்ளார். காவேரியின் வாழ்க்கை ஒரு தியாகமாகவோ அல்லது அபலைக் கோலமாகவோ சித்தரிக்கப்படாமல், அவள் தன் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் மையமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் போராடினாலும் இறுதியில் அவள் வாழ்வில் மிஞ்சியது என எதுவுமில்லை, தனது ஒரு குழந்தையையாவது நன்றாக வாழ வைத்துவிட்ட திருப்தியைத்தவிர.

நாவலின் தொடக்கத்தில், பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்க்கும் அறியாமை நிறைந்த, மழலை மாறாத ஒரு சிறுமியாக காவூ நமக்கு அறிமுகமாகிறாள். ஆண்-பெண் உறவு பற்றியோ அல்லது திருமண வாழ்வு பற்றியோ எவ்விதப் புரிதலும் இல்லாத வயதிலேயே அவளுக்குக் குழந்தை மணம் செய்விக்கப்படுகிறது. வயதுக்கு வராத காரணத்தால் பிறந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் அவளது தொடக்கக் கால வாழ்க்கை, அந்த காலகட்டத்து எளிய மற்றும் படிப்பறிவில்லாத சராசரி இந்தியப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவே அமைகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். கணவன் சரியானவனாக அமையாத காரணத்தால் உடலாலும், மனதாலும் புண்பட்டு, பிள்ளைகளின் வாழ்வும் சரியாக அமையாமல் அவர்களில் இருவரைப் பறிகொடுத்து என அவள் படும் துயரங்கள் அநேகம். எவ்விதப்பொருத்தமும் இல்லாமல் நடந்த அவளது திருமணத்தால் துன்பங்களையே அனுபவித்த அவளுக்கு ஒரே ஆறுதல் அன்பும் அனுசரணையுமாய் அமைந்த மாமியார் மட்டுமே. 

அடக்குமுறைகள் நிறைந்த அன்றைய வாழ்வியலிலிருந்து, விரும்பியதைச்செய்யும் இன்றைய வாழ்வியலை அடைவதற்குப் பெண்கள் கடந்து வந்திருக்கும் தூரமும், அவர்கள் அனுபவித்திருக்கும் வலியும் மிகப்பெரியது. அந்த தூரத்தைக்கடக்க பெருமுயற்சி எடுத்த பெண்கள் பலர். அவர்களுக்கு வழிகாட்டிய ஆண்களும் பலர். அவர்களின் பிரதிநிதியாகவே அம்மாளு, வாசு பாத்திரப்படைப்புகள் விளங்குகின்றனர். தங்கைக்குக் கடைசி வரை உறுதுணையாக வாசு இருப்பதும் அவளுக்குக் கல்வியின் அருமையை உணர்த்தி எழுதப்படிக்கத்தெரியாதவளாக இருந்தவளை, கடிதம் எழுதும் அளவுக்கு முன்னேற்றுவதும் சிறப்பு.  

இந்நாவலின் மற்றொரு தனித்துவமான சிறப்பு, புனைவோடு நிஜ வரலாற்று ஆளுமைகள் இயல்பாகக் கலந்து வருவதாகும். மகாத்மா காந்தி, இராஜாஜி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தோழர் மன்னார்குடி சீனிவாச ராவ் போன்ற அரசியல் மற்றும் சமூகப் போராட்டவாதிகளும்; காஞ்சி பெரியவர் போன்ற ஆன்மீக ஆளுமைகளும்; ராம்நாத் கோயங்கா, 'சோ' போன்ற பத்திரிகையாளர்களும்; ஜெமினி கணேசன், வகிதா ரஹ்மான், மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்ற திரையுலகப் பிரபலங்களும் கதையின் போக்கில் இயல்பாக வந்து செல்கின்றனர். இது வாசகருக்கு அந்தந்தக் காலக்கட்டத்திற்கே நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது.

வரலாற்றின் பின்னணியில் மனித உணர்வுகளையும், ஒரு பெண்ணின் அகப்பயணத்தையும் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு தீவிர வாசகரும் தவறவிடக் கூடாத ஒரு சிறந்த நாவல் இது. கால நதியில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் அதிலேயே நீந்தக் கற்றுக்கொள்ளும் ஒரு சாமானியப் பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டமே காவூவின் ஒட்டுமொத்த வடிவமாகும். 

டிஸ்கி: புத்தக மதிப்புரையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Thursday, 5 February 2026

அத்தினி - சித்ரா சிவன்( புத்தக மதிப்புரை)


நூல்: அத்தினி
ஆசிரியர்: சித்ரா சிவன்
வெளியீடு: பிறகு பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு)
முதல் பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 229
விலை:280

இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் ஒரு நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ள சித்ரா சிவனின் மூன்றாவது புத்தகமே அத்தினி. இது இவரது முதல் நாவலுமாகும். இந்த நாவல் ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. மேலும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, சௌமா இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளது. சித்ரா சிவன் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எழுதிவருகிறார்.

“அத்தினி” என்ற சொல் பெண்யானையையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும். யானைக்கூட்டத்தில் ஆளுமை மிக்க ஆண் யானைகள் இருந்தாலும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெண்யானையே அக்கூட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும், இடர்களை முன்கூட்டியே அறிந்து தன் கூட்டத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். அவ்வாறே, வெளிப்பார்வைக்கு ஆண் குடும்பத்தை நடத்துவது போல் தோன்றினாலும், முக்கியமான முடிவுகளை அக்குடும்பத்திலுள்ள தலைமைப்பெண்ணே எடுக்கிறாள். ஆண் அந்த முடிவைச் செயல்படுத்துகிறான். சில குடும்பங்களில் பெண்ணே வெளிப்படையாகக் குடும்பத்தை நடத்திச்செல்வதைக் காண முடியும். இது நாம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சம். 

இவ்வாறு தலைமைப்பண்புடன் இயங்கும் பெண்களிடம் தைரியமும், தன்னம்பிக்கையும், சுதந்திர மனப்பான்மையும் சற்று அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைப்பயணத்தில் கூட நமக்கு வேறு துணை யாரும் தேவையில்லை என்ற முடிவுடன் தனித்தியங்குவர். அப்படிப்பட்ட சகோதரிகளான பவித்ரா தேவி, உமையாள் என்ற இரு பெண்களையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்டிருக்கிறது எழுத்தாளர் சித்ரா சிவனின் “அத்தினி” என்ற இந்நாவல். 

ஆஸ்பத்திரி கேண்டீனை கதைக்களனாகக் கொண்டிருக்கும் நாவலில் ருசிக்குக் குறைவில்லை, பாத்திரங்களுக்கும் குறைவில்லை. பவித்ரா எனும் அத்தினியின் கூட்டத்தில்தான் எத்தனையெத்தனை அத்தினிகள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதாமல், ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருப்பதுதான் பெருஞ்சிறப்பு. அவரவரின் வலிகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதிலேயே அமிழ்ந்து கிடக்காமல் அந்த வலிகளை வெல்லும் யுக்திகளையும் கையாண்டு நகர்ந்து செல்கின்றனர்.

பெண்களின் கதைகளைப் பெண்களே எழுதும்போது, அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சரிதா, பூங்கொடி போன்றவர்களின் கதைகளைப் புரிந்துகொள்ள முடிவதைப்போல. ஆஸ்பத்திரியில் பவித்ரா சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணிடமும்தான் எத்தனை சோகம் கொட்டிக்கிடக்கிறது. பெரும்பாலும் குடும்ப வன்முறைக்கு ஆட்பட்டவர்களாக, ஆணாதிக்கத்தால் நசுக்கப்படுபவர்களாக இருக்கும் அவர்களின் தலை சாயும் ஒரு தோளாக இருக்கிறாள் பவித்ரா. அவள் மூலம், பெண்கள் விரும்பும் ஓர் உலகத்தைப் பல நிகழ்வுகள் மூலம் சுட்டுகிறார் எழுத்தாளர். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிறுவப்பட்டிருக்கும் பல சமூகக்கோட்பாடுகளை அநாயாசமாக உடைத்தெறிந்திருக்கிறார். ஏன் கூடாது? என்ற கேள்வி வாசிப்பவர் மனதில் எழும் எனில் அதுவே அவரது எழுத்தின் பலம். ஆற்றொழுக்குப்போன்ற தெளிவான நடையில் பட்டுப்போன்ற மொழியில் ஒழுகிச்செல்கிறது நாவல். ஆங்காங்கே பட்டுக்கத்தரித்தாற்போன்று கருத்துகளைச்சொல்லவும் தவறவில்லை ஆசிரியர்.

அன்னக்கொடியின் பாத்திரப்படைப்பு மிகவும் கவர்ந்தது. அத்தனை ஆளுமையுள்ள, பொருளாதாரச் சுதந்திரமுள்ள ஒரு பெண்ணாக இருந்தபோதும் கணவனின் சொல்லைத்தாங்கவியலாமல் தன்னையே கொளுத்திக்கொள்ளுமளவு அவள், கணவன் என்ற ஆணின் அதிகாரத்தால் பலவீனப்படுகிறாள். அவளது தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் ஆளுமைத்திறனின் எச்சமே பவித்ராவாக நீள்கிறது. வாழ்வில் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளால், திருமணத்தை வெறுத்த சகோதரிகள் தனியாகவே வாழ்கிறார்கள். குடும்பச்சொத்துகளையும் காத்துக்கொண்டு தேவைப்படுபவர்களுக்குத் தங்களாலான உதவியைச்செய்துகொண்டு வாழ்ந்த அவர்களின் வாழ்வில் மாறன், இளங்கோ எனும் இரு ஆண்கள் குறுக்கிடுகிறார்கள். நாவலில் பெரும்பாலும் கூறப்பட்ட ஆண்களைப்போலில்லாமல் இவர்கள் நல்லவர்களாகச் சித்திரிக்கப்பட்டது சிறப்பு. எல்லா ஆண்களும் கெட்டவர்களாக இருந்து விடுவதில்லைதானே. அவர்களில் மாறனை உமையாள் திருமணம் செய்துகொண்டு அவளுக்கான தனிக்கூட்டை அமைத்துக்கொண்டுவிடுகிறார். பவித்ராவும் இளங்கோவும் ஒருவர் கனவை ஒருவர் மதித்து அவரவர் பாதையில் செல்கின்றனர். ஆனால் அதுவுமே பவித்ராவை இன்னும் புடம் போடுமேயன்றி பலவீனப்படுத்தாது. கூட்டத்தின் முன்னால் தலை குலுக்கி, மத்தகத்தை நிமிர்த்திகொண்டு நடை போடும் அந்த அத்தினி.

Sunday, 25 January 2026

வயிற்றுக் கணக்கு - சரவணன் சந்திரன் (புத்தக மதிப்புரை)

நூல்: வயிற்றுக்கணக்கு
ஆசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 220
முதல் பதிப்பு : 2024

எழுத்தாளன் தான் சொல்ல விரும்புபவற்றை கதை, கவிதை, கட்டுரை, யாப்பு எனப் பல வடிவங்களின் மூலமாகப் பகிர்கிறான். இவற்றில் தான் சந்திக்கும் மனிதர்களை வாசித்து அந்த அனுபவங்களை நம்முடன் கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன். அச்சு, மின், காட்சி என எல்லா தரப்பட்ட ஊடகங்களிலும் பங்களித்திருக்கும் அனுபவம், இவரது முதிர்ந்த எழுத்துகளிலும் பிரதிபலிக்கிறது. மொத்தம் 27 கட்டுரைகளைக்கொண்டிருக்கும் இத்தொகுப்பினை வாசிக்கும்போது, இவை கதைகளா? அல்லது கட்டுரைகளா? என்ற உளமயக்கம் ஏற்படுகிறது. 

இலக்கிய மாந்தருக்குச் சற்றும் குறையாத வாழ்வியல் அனுபவங்களுடன் நடமாடும் மனிதர்கள், சித்தர்களுடனான அனுபவப்பகிர்வுகள், செய்யும் மீன்தொழில் முறையில் கொண்டிருக்கும் கடல் மற்றும் கடலுணவு பற்றிய ஞானம், விவசாயத்தையும் ஏற்றுச்செய்வதால் வானிலை மாற்றங்கள் பற்றிய கவனிப்பு, விளையாட்டு வீரராகவும் இருப்பதால், உடலை, ஆரோக்கியத்தைக் கவனிப்பது என எல்லாவற்றையும் ஒருக்கியிருக்கும் இவற்றை வாழ்வியல் கதைகள் என்றே சொல்லலாம். தன்னைச்சுற்றி இருப்பவற்றைக் கவனிப்பதும், அவற்றை எழுத்தில் கொண்டுவருவதும் எழுத்தாளனின் இயல்பு, ஆனால், நாமும் களத்தில் இருப்பது போன்றே உயிரோட்டத்துடன் உணரச்செய்கிறது இவரது எழுத்து. 

எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் பழக்கம் எப்படி வந்தது எனவும் அச்சுமையை எப்படி இறக்கி வைத்து, தன்னைத்தானே அணைத்து வைக்கப் பழகிக்கொண்டார் எனச்சுட்டுகிறார் ‘அணைத்தல்’ என்ற கட்டுரையில். 

பூத்துக்கிடந்த வயிறு, ஓய்ந்து அணைவது வரையிலானது வயிற்றுக் கணக்கு மட்டுமல்ல.. வாழ்ந்த காலத்தின் கணக்கும் கூட. அதற்குப்பின்தான் மனித மனது நாவால் ருசித்தவற்றையெல்லாம் மனதால் ரசிக்க ஆரம்பிக்கிறது. பிறர் சாப்பிடுவதைப் பார்த்தாலே அதற்கு நிறைந்து விடுகிறது. தொகுப்பின் தலைப்புக்கட்டுரையாய், சோற்றுக்கணக்கின் பாதிப்பில் அமைந்த “வயிற்றுக்கணக்கு” சுவாரஸ்யம்.

நுணுக்கமாகக் கணித்து மதிப்பிடும் மனிதர்களைப்பற்றிய “கண்மதிப்பு” கட்டுரை சிறப்பு. சரியாகக் கணித்து கவனமுடன் செயல்பட்டாலே பல தோல்விகளைத் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவல் பிறந்த கதையைக்கூட அவ்வளவு சுவையாகச் சொல்லியிருக்கிறார் “சுபிட்ச முருகன்” கட்டுரையில்.

அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. அதை அடுத்தவர் மேல் ஏற்றித்துன்புறுத்தி அடுத்தவர் மேல் ஆக்கிரமிப்பு செலுத்தினால் என்னாகும்? “காதலின் பரிசு” கட்டுரையை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். தற்காலத்தில் விவசாயம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது என்கிறார். எப்படி? என்பதை மூங்கில் புல் கட்டுரையில் காணலாம். அத்தனை இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளைக் கடந்துதான் நடந்துகொண்டிருக்கிறது விவசாயம். 

போதையின் பாதையில் தடுமாறி கெடுவழியில் சென்ற மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. ‘இளைதாய் முள்மரம் கொல்க’ என்பது வாக்கு. இக்கால இளைஞர்களில் சிலர் அவ்வாறு மூத்தோர் சொல் கேட்டு கெடுவழக்கங்களைக் கைவிடுவரா? எனச் சந்தேகிப்போர் “பொறுப்பு” கட்டுரையை வாசித்தல் நலம். தங்க ஊசிகள் நடமாடும் நாட்டில் நமது கண்ணை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“மனிதன்தான் படைப்புச்செயலின் உச்சம்” என்று கூறும் சரவணன் சந்திரனின் படைப்புகளில் மனிதர்களுக்கும் அவர்தம் ஓயாத கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு மூட்டை தானியத்தை ஒரே நாளில் கொத்தித்தின்ன ஆசைப்படும் வாசகக் குருவிகளுக்கு ஏற்றதுதான் அந்த விளைநிலம்.

Thursday, 23 January 2025

கழி ஓதம் - ரம்யா அருண் ராயன்

“கழி ஓதம்” ரம்யா அருண் ராயனின் முதல் சிறுகதைத்தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தைத் சேர்ந்த இவர் கவிஞருமாவார். இவரது முதல் கவிதைத்தொகுப்பான “செருந்தி” பல விருதுகளை வென்றுள்ளது. கோவையில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.
மொத்தம் பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களங்களைக்கொண்டவை. இவற்றில் ஒன்றிரண்டை இணைய இதழ்களில் அவை வெளியானபோதே வாசித்திருந்தேன்.  பெரும்பாலும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களையே கற்பனை சேர்த்து கதையாக்கியிருப்பது சிறப்பு. சிறுகதைகளுக்கான கரு நம்மைச்சுற்றி நடப்பவற்றை உற்றுக்கவனித்தாலே கிடைத்து விடும் என்பார்கள், அது உண்மைதான். முக்கியமாக தலைப்புச்சிறுகதையான கழி ஓதம். ஓதத்தைக் கருவாகக்கொண்டு நான் வாசிக்கும் முதல் சிறுகதை இதுவே. ஓதம் ஏற்படும்போது அதைக் கண்ணெதிரே படிப்படியாகக் கவனித்திருப்பதால் கதையை உள்வாங்க இயன்றது.

நம்மைச்சுற்றி நடப்பவற்றை மட்டுமல்ல, மனித மனங்களையும் படிக்கத் தெரிய வேண்டும். ரம்யாவுக்கு அது நன்றாகவே கை வந்துள்ளது. நீர்க்குரல், பின்னல், இலக்கணப்பிழைகள் போன்ற கதைகளில் உளவியல் ரீதியாகவும் ஒரு திறப்பு ஏற்படுகிறது. வவ்வாக்குட்டியும் கிட்டத்தட்ட அப்படித்தான். நடந்து கோவிலுக்குள் போக நினைத்த வவ்வாக்குட்டிக்குப்பதிலாக இன்னொரு வவ்வாக்குட்டி பறந்து கோவிலுக்குள் சென்றுவிட்டது. எந்த வவ்வாக்குட்டியாயிருந்தால் என்ன? கோவிலுக்குள் புகுவதுதான் முக்கியம் அல்லவா?! பின்னலில் எங்கோ எப்படியோ மனதில் விழுந்த விதை முளைத்து பின்னிப்பின்னி எவ்வளவு சிக்கலை உண்டாக்கிக்கொள்கிறது.

சிறுகதையாசிரியரினுள் ஒரு கவிஞரும் இருப்பதால் அழகியலுடன் அமைந்திருக்கின்றன கதைகள்.  உவர்ப்பு வாசத்துடன் மின்னும் நிலவொளி, அழும் வீடு, காற்றுடனேயே கண்ணாமூச்சி ஆடும் காற்று, சிரிக்கும் சில்லறை என ரசிக்க வைக்கின்றன வரிகள்.

ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்கள் மனதை ஒவ்வொரு விதத்தில் தொடுகின்றன. கழி ஓதம் கதையில் “தங்கப்புள்ள” என வாஞ்சையுடன் அந்த அண்ணன் கூறும்போது, பவுனும் அவளது கொலுசைச்சுமந்து தந்த கடலும் கூட அவனுக்கு மேலும் இரு சகோதரிகளாகிறார்கள். வேண்டாமென மனைவி உதறிவிட்டுப்போனாலும் இன்னும் அவளுக்கு தனது நினைப்பு இருக்கிறதா என நோட்டம் பார்க்கும் க்ளைவ்வின் நப்பாசையை என்ன சொல்ல!! இதற்கெல்லாமா விவாகரத்து வரை செல்வார்கள் எனத்தோன்றினாலும், ஆல்பம் கதையின் ஆனந்தி தனது வெகுளித்தனத்தைக் கொன்று கொள்ளும்போது பரிதாபமே மேலிடுகிறது. திருமணமாகி புகுந்த வீடு போகும்போது பெண்களிடம், ‘இன்னும் நீ சின்னப்புள்ள இல்லை. போற இடத்துல பொறுப்பா இருந்து நல்ல பேர் எடு’ என அறிவுறுத்தும்போதே அவர்களினுள்ளிருக்கும் அப்பாவித்தனத்தை கிள்ளி எறிந்துதானே அனுப்புகிறார்கள். 

தன்னியல்பு தடம் மாறும்போது அவர்கள் அது நாள் வரை இல்லாத புது மனிதர்களாக ஆகி விடுகிறார்கள், கவினைப்போல, ஆறாவெயிலாளைப்போல. அவளையும் பொற்செல்வியையும் மறக்க முடியாதபடி ஆக்கி விடுகிறது ரம்யாவின் எழுத்து. ‘குருதிக்கோடு’ வாசிப்பவர்கள் கண்களில் நீர்த்திரையிடச்செய்வது உறுதி. தனது குரலைப் பிரிய வேண்டாமென அப்புராணி கற்குவேல் முடிவெடுத்தது ஏற்றுக்கொள்ளத் தக்கதெனப்படுகிறது. தொகுப்பிலிருக்கும் பன்னிரண்டு கதைகளும் தனித்தனிக்கதைகளாயினும் அடிநாதமாக மனித நேயம் அவற்றை இணைத்திருப்பது சிறப்பு. 

Sunday, 19 January 2025

வாரணம் - ராம் தங்கம் (புத்தக மதிப்புரை)


நூல்: வாரணம்
ஆசிரியர்: ராம் தங்கம்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
விலை: 350 Rs.

ராஜவனத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது “வாரணம்” எனும் இந்த நாவல். “திருக்கார்த்தியல்” எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதை வென்ற எழுத்தாளர் ராம்தங்கம் எழுதிய இந்த நாவலில் ராஜவனம் ஒளித்து வைத்திருக்கும் பல ரகசியங்களான மேகமூட்டி மலை, ஆனையருவி மற்றும் பலவற்றை மன்றோவுக்கு மட்டுமல்ல, நமக்கும் காட்டித்தருகிறார் ஆனை ராஜசேகர்.

வனத்தின் உண்மையான அரசன் யாரெனில் அது யானைதான். ஒரு காட்டையே உருவாக்கும் வல்லமை யானைக்கு உண்டு என்பர். உணவையும் நீரையும் தேடி யானை உருவாக்கும் பாதையில்தான் பிற உயிர்கள் சென்று அவற்றைக் கண்டுகொள்ளும். ‘வனத்துல சாமி மாதிரி’ என ஆனை ராஜசேகர் சொல்வது அந்த அனுபவ உண்மையையே.

வனத்துக்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியலுக்குமிடையே ஒரு ஊஞ்சலைப்போல் நாவல் ஆடியாடித்திரும்புகிறது. இவ்விரண்டும் இரு வேறு துருவங்களானாலும் இணைக்கும் புள்ளிகளாக மன்றோவும் அவனது மாமாவான சாமர்வெல்லும் இருப்பதாகத்தோன்றுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவம் உதயமானதும், அது எவ்வாறு பரவியது என்பதும், மாவட்டத்தின் முதல் சர்ச் மயிலாடியில் கட்டப்பட்ட வரலாறும், முதல் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வும் சாமர்வெல்லின் வாயிலாக விவரிக்கப்பட்டுள்ளன. 

அக்கால அடிமை முறையில் மக்கள் எப்படி விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பதையெல்லாம் வாசிக்கையில் நமக்கும் கண்கள் கசிகின்றன. மேலாடை உடுத்தக்கூட உரிமையின்றி பெண்கள் அடக்கியொடுக்கப்பட்டிருந்ததையும் அந்த அவல நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு ஜோகன்னா செய்த முயற்சிகளையும், கன்யாகுமரி மாவட்டத்தில் கல்வி புகட்ட அவர் செய்த தொண்டுகளையும் அறிய நேர்கையில் அவர் மீது பெருமதிப்பு மேலிடுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை அடிமுறை ஆசான்கள் வர்மக்கலை, களரி போன்ற போர்க்கலைகளைப்பயிற்றுவிப்பதிலும், வைத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதிலும் வல்லவர்களாக விளங்கினர். அப்படியொரு அடிமுறை ஆசானான தங்கையா நாடாருக்கும் மிஷனரியின் ரெவரெண்ட் மீட்டுக்குமிடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியல் நிகழ்வுகளைப்பற்றியும், மிஷனரிகளின் செயல்பாடுகளைப்பற்றியும் அறிய முடிகிறது.

‘வனத்தை நேசிக்கக்கூடியவன் இல்லைன்னா வனம் எப்படி சார் காப்பாத்தப்படும்?’ என சாமர்வெல் ஆதங்கப்படுவது நியாயமானதே. நேசிப்பவர்கள் இல்லாததால்தான் இன்று பல மலைகள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக மலைவாழ் உயிரினங்கள் தங்கள் தேவைக்காக ஊருக்குள் புகுந்து உணவைத்தேடுகின்றன. இதனால் பல இடங்களில் மனிதனுக்கும் மிருகத்துக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் விளைகிறது. அழகாக இருந்தாலே ஆபத்துதான் போலிருக்கிறது.

ஆனை வேறு வனம் வேறல்ல.. இரண்டுமே வனப்பானவை, அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டுபவை, எல்லைமீறி நெருங்கிச் சீண்டினால் ஆளை ‘உண்டு.. இல்லை’ என ஆக்கும் ஆபத்தானவை. ஆராதித்தால் அருள்பவை.

ஆனை ராஜசேகருடன் மன்றோ காட்டுக்குள் செய்யும் பயணத்தில் காட்டையும், அங்கிருக்கும் இயற்கை வளங்கள், செடிகொடிகள், விலங்குகள் என ஒவ்வொன்றைப்பற்றியும் ஆசிரியர் வர்ணித்திருப்பவை அபாரம். துளித்துளியாய் நம்மையும் ரசிக்க வைக்கிறார். அதுவும் கதைக்களமான மலையகத்தமிழை நாவலின் உரைமொழியாய்க்கொண்டிருப்பது நாவலோடு இன்னும் ஒன்ற வைக்கிறது. ஆனைதுருத்தி மலையையும், ஆனையருவியையும் மன்றோ காணும் காட்சிகள் வர்ணனையின் உச்சகட்டம். எத்தனை வாசித்தாலும் ரசித்துத்தீராது. அவற்றை வாசிக்கும்போதே நாமும் அந்த அருவியில் நனைவது போல் பிரமை ஏற்படுகிறது.

கட்டையன், நெட்டையன் என ஆனைகளின் வகைகள், சபரிமலையில் பக்தர்கள் கூடும் சமயத்தில் அங்கிருக்கும் யானைகள் இந்தப்பக்கம் வலசை வந்துவிடும் புத்திசாலித்தனம், தண்ணீரைக்கண்டதும் குழந்தை போல் அவை செய்யும் அட்டகாசம், பிருத்திச்சக்கை என கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்கும் அன்னாசிப்பழ விவசாயத்தில் விவசாயிகள் யானையால் எதிர்கொள்ள நேரிடும் நஷ்டம், அதைத்தடுக்க அவர்கள் வைக்கும் ‘வெடிக்காய்’ என்ற கொடுமை என பல தகவல்களை உரையாடல் உத்தி மூலம் பகிர்ந்திருக்கிறார் ராம் தங்கம். ஜெயமோகனின் “கீறக்காதன்” யானையைப்போலவே “கீரிப்பாறை ராஜா”வும் நம் மனதில் அழியா இடம் பிடிக்கிறான்.

இயற்கையோடு இயைந்த வாழ்வையும் யானைகள் மேலான அன்பையும் அவரது அப்பாவான சுடலை மூலம் புரிந்து ஏற்றுக்கொள்ளும் ராஜசேகர் அந்த அன்பை தனது மகனிடம் மட்டுமல்ல மன்றோவிடமும் கண்டு பெருங்களிப்பு கொள்கிறார். “வனம் இல்லைன்னா மனுசனா இருந்தாலும் அவ்வளவுதான்” என்பது உண்மைதானே?

இயற்கை எல்லோரையும் நேசிக்கிறது, ஆனால் மனிதன்தான் இயற்கையை விட்டு வெகுதூரம் கடந்து சென்றுவிட்டான். “தூரத்தைக்கடக்குறதுக்குத்தானே பாதை” என்கிறார் சாமர்வெல். ஆனால், இந்த தூரத்தைக் கடப்பதற்கான பாதைதான் எதுவெனப்புலப்படவில்லை. மனிதனின் பேராசை எனும் திரை அவனது அறிவுக்கண்ணை மறைத்திருப்பது விலகும்வரை பெருவனத்தையும் அதைக்காக்கும் வாரணங்களையும் காக்க ஆனை ராஜசேகர் போன்றவர்கள் யானைகளுக்காக வாழைகளை நட்டு வைத்து உணவிட்டு  மனிதர்களுக்கும் ஆனைகளுக்குமிடையே போராடிக்கொண்டுதான் இருப்பார்கள்.

Thursday, 26 December 2024

புன்னைவனக் காவலன் - டாக்டர் அகிலாண்ட பாரதி(புத்தக மதிப்புரை)

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்வார்கள். சில நேரங்களில் ஊர் முதலில் அமையும், அதன்பின் அவ்வூருக்கு ஒரு வழிபாட்டுத்தலம் வேண்டியதன் தேவையை உணர்ந்து அமைத்துக்கொள்வதோ அல்லது இறைசக்தி தானாகவே அந்த ஊரில் வந்தமைவதோ நடக்கும். அப்படியல்லாமல் சில நேரங்களில் சுயம்புவாக எழுந்தருளும் இறைவன் பலகாலமாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்து, தக்க சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது சாரிசாரியாக வரத்தொடங்கும் பக்தர்களால் படிப்படியாக அக்கோவிலைச்சுற்றி ஊர் அமைந்து விடும். அப்படியொரு கோவில்தான் தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் “சங்கரன்கோவில்”. கோவிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமையப்பெற்ற சில கோவில்களில் இதுவும் ஒன்று.

அரியா? அரனா? யார் பெரியவர் என்று சங்கன், பதுமன் என்ற நாக அரசர்களிடையே ஏற்பட்ட பூசலுக்கு விடை காணும் பொருட்டு பார்வதி புன்னைவனத்தில் தவம் செய்ய இறைவன் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி திருமாலாகவும் சங்கரநாராயணராகக் காட்சியளித்து இருவரும் ஒருவரே என உலகத்தோர்க்குத் தெளிவித்த தலம் இது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த இந்த இடம் கோவில் அமைவதற்கு முன் புன்னைவனமாகவே இருந்துள்ளது. இந்த புன்னைவனத்தைக் காவல் காப்பதற்காக பாண்டிய மன்னர் உக்கிரபாண்டியனால் அனுப்பப்பட்ட மணிக்ரீவன் என்ற காவலனின் வாயிலாக சிவபெருமான் தன்னைச் சங்கரலிங்கமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க இத்தலத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டுமென்று உக்கிரபாண்டியர் விரும்பி ஆலயம் எழுப்பிய வரலாறே  “புன்னைவனக்காவலன்” எனும் நாவலாக மலர்ந்துள்ளது.

அக்காலத்தில் உண்மையில் இருந்த மாந்தர்களோடு கற்பனைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார் நூலாசிரியர் அகிலாண்ட பாரதி. சரளமான மொழியில் தெளிவான நடையில் நீரோட்டம் போல் விறுவிறுவெனச்செல்கிறது நாவல். அக்கால மனிதர்களின் வாழ்வியல், அந்தப்பிரதேசத்தில் வளர்ந்த தாவரங்கள், அக்கால குடவோலை முறை தெரிவு, திருமணச்சடங்குகள், புன்னைமரத்தின் சிறப்புகள், அக்கால நீர்ப்பாசன முறை, ஆலயம் எழுப்பப்பட்ட நடைமுறைகள் என எல்லாவற்றையும் பற்றி நுணுக்கமாகவும் விவரமாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது அதன் பின்னிருக்கும் ஆசிரியரின் உழைப்பு புலனாகிறது. 

கோவில் அமைந்திருக்கும் பகுதியிலும் சுற்றுவட்டாரத்திலும் அமைந்துள்ள ஊர்களின் பெயர்களையும் அவற்றின் பெயர்க்காரணங்களையும் அறியத்தந்திருப்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதில் வரும் வரலாற்றுச்சம்பவங்களுக்கான ஆதார செய்திகளையும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது. மணிக்ரீவனுக்கான கோவிலும் அவனது சிலையும் எங்கிருக்கிறது என்ற தகவல் பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த கதைசொல்லியான டாக்டர் அகிலாண்டபாரதியின் முதல் வரலாற்று நாவல் இது. ஏராளமான வரலாற்றுச்சம்பவங்களும் தகவல்களும் நிரம்பிய இந்நாவலை வாசித்து முடிக்கும்போதுதான் உண்மையில் ‘புன்னைவனக்காவலன்’ யார் என்பதே தெரியவருகிறது. தட்டையாக வரலாற்றை மட்டுமே சொல்லிச்செல்லாமல் கதை மாந்தர்களின் உள்ளக்கிடக்கைகளையும் உணர்வுப்போராட்டங்களையும் சேர்த்து சரிகையும் நூலுமாக நெய்திருப்பது ஒரு இதமான வாசிப்பனுபவத்தைத்தருகிறது.

Monday, 19 August 2024

திருநெல்விருந்து - சுகா

அனுபவக்கட்டுரைகள், ஆளுமைகளைப்பற்றிய பகிர்வுகள் எனப் பல்வேறு வகைகளில் மொத்தம் 22 கட்டுரைகளைக்கொண்டது சுகாவின் “திருநெல்விருந்து”. திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, எழுத்தாளர் என்பவை தவிர சமீபத்தில் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனந்த விகடனில் வெளியாகி மிகவும் பேசப்பட்ட தொடரான “மூங்கில் மூச்சு” உட்பட சுகா எழுதிய தாயார் சன்னிதி, வடக்கு ரத வீதி, சாமான்யனின் முகம் போன்ற புத்தகங்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றவை. “வேணுவனம்” என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

நெல்லையின் மண்வாசனை வீசும் இவர் எழுத்துகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவராயிருந்தாலும் சரி.. அந்தந்த நிமிடங்களில் அந்தந்த சம்பவங்களோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பிணைத்துக்கொள்வது திண்ணம். அவரவர் ஆச்சிகளும் அவர்களோடு கழித்த பால்யமும் நினைவுக்கு வந்து ஒரு சில நொடிகளாவது அந்தக்காலத்துக்கே போய் வாழ்ந்து விட்டு வருவர்.

கலாப்ரியா அண்ணாச்சியின் எழுத்துகளுக்கு அடுத்தபடியாக திருநவேலியை, குறிப்பாக ரதவீதிகளை சுகாவின் எழுத்துகளில்தான் நான் நுட்பமாகத்தரிசித்தேன், காலார நடந்துவிட்டு மாரியம்மன் விலாஸில் திருப்பாகம் வாங்கிக்கொண்டும் வந்தேன். என்ன ஒன்று.. சுகாவின் நெல்லையின் மீனாட்சி சொன்னதுபோல் விஞ்சை விலாஸில் நன்னாரிப்பால் குடிக்கப்போக வாய்க்கவில்லை. போலவே நடைப்பயணம் சென்று நடைச்சித்திரம் வரைவதெல்லாம் சுகா போன்றோருக்கே சாத்தியம். நடைபயில்வோரை நம்பித்தானே அத்தனை சுக்குக்காப்பிக்கடைகளும் ஹோட்டல்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். 

அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வரைதான் உள்ளூர் வெளியூர் என்ற நினைப்பெல்லாம். மாவட்ட, மாநில எல்லைகளைத்தாண்டி விட்டாலோ எல்லாமே நம்மூர்தான். அது ஆளாருச்சியாக இருந்தாலென்ன? கல்லிடைக்குறிச்சியாக இருந்தாலென்ன? மும்பையாகவே இருந்தாலும்தானென்ன? ஒரு சிலருக்கு மட்டுந்தான் ஊரோடு தொடர்பு வாய்க்கிறது. காசியின் இட்லிக்கடைக்காரரைப்போன்ற பலர் “தேவைப்படலை” என்றே இருந்து விடுகிறார்கள், “முப்பது வருஷமா இதுதான்யா நம்ம ஊரு” என்றிருக்கும் மும்பை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சமையற்கலைஞரைப்போல.

திருநெல்விருந்தும் ஆத்மருசி கந்தையா பெரியப்பாவும் பின்னே மனோஜும் வெகுநாளைக்கு வாசகர் நினைவில் நிற்பார்கள். உணவின் ருசி என்பது நாக்கோடு நின்று விடுவதில்லை, அன்பும் பாசமும் நல்ல மனசும் சேர்த்துக்குழைத்துச்செய்த உணவின் ருசி ஆன்மா வரை சென்று படிந்து விடும், ஆகவேதான் அது அமிர்தமுமாகிறது. சொந்த ஊரின் மேல் கொண்ட பாசம் என்பது வெறும் கட்டடங்களாலும் மனிதர்களாலும் மட்டும் அல்ல, அவ்வூரின் உணவின் மேல் கொண்ட பற்றும்தான். ஊர் என்பது உணவோடு பின்னிப்பிணைந்ததும்தானே? புளியோதரையுடன் பொரிகடலைத்துவையலைத்தொட்டுக்கொள்வது என்பது நெல்லைக்கேயுரிய நுண்தகவல். இக்கட்டுரைகள் முழுக்க உணவைப்பற்றி.. குறிப்பாக நெல்லையின் உணவுகளைப்பற்றி எத்தனையெத்தனை தகவல்கள். பசி நேரத்தில் இக்கட்டுரைகளை வாசிக்காதிருப்பது நலம். நாக்கு அப்படியே மிதக்கிறது, என்றாலும் டிங்கிரி டோல்மா தோசையை மனோஜுக்காகவாது நூலாசிரியர் சாப்பிட்டுப்பார்த்து விட்டு  பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம் எனத்தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை. 

உணவு, இசை மட்டுமல்லாது சுவாளங்களின் மீதும் கோட்டி கொண்டவர் நூலாசிரியர் என்பது, அவரை அறிந்தவர்கள் நன்கறிந்தது. குஞ்சுவின் சம்பந்தியான பறக்கை கோலப்பனின் பைரவப்ரியமும் அதற்குக்கொஞ்சமும் குறைந்ததல்ல. எந்த வகையில் சம்பந்தியானார் என்பதை நூலில் வாசித்துத்தெரிந்து கொள்ளுங்கள். அக்கட்டுரையை வாசிக்கும்போது எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டில் வளர்ந்த “ஹீரோ” நினைவுக்கு வந்தான்.

ஹாஸ்யமும் சுயபகடியும் சுகாவின் எழுத்தின் சிறப்பம்சம். ஆங்காங்கே கண்ணிவெடிகளைப்போல் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றின் மேல் நாம்தான் கவனமாகக் கடந்து செல்ல வேண்டும். அவரது கட்டுரைகளில் “ஜயண்ட் வீல்”க்கு எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு. வாசிப்பவர்கள் அனைவருமே சிலாகித்துச் சிரித்து உருள்வார்கள். அந்தப்பட்டியலில் இனிமேல் “சுளுக்கு” கட்டுரையும் இடம் பெறும். “இவளே” கட்டுரை அடுத்த கண்ணிவெடி. என்னமா எழுதறார்!!!!! என வியக்கும்போதெல்லாம் சட்டென நினைவுக்கு வரும், “இது தமிழ்க்கடலிலிருந்து பிறந்த நதியல்லவா!!” என்பது. தாமிரபரணிக் கரையில் பயணித்து இந்நதி கொணர்ந்து சேர்த்த அனுபவ முத்துகள் ஏராளம்.

பல்வேறு ஆளுமைகளுடன் பழகி அந்த நினைவுகளை நாம் இது வரை கண்டிராத கோணத்தில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சுகா. கோவிட் காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் என்றுமே எழுதித்தீராத அவரது நெல்லை நினைவுகளும் விதைக்கப்பட்டுள்ளன. அவை வாசகர் நெஞ்சில் நிச்சயம் அவரவர் ஊர் நினைவுகளாய் முளைத்தெழும். 

ஆசிரியர்: சுகா
பதிப்பகம்: சுவாசம்

Friday, 26 July 2024

திருக்கார்த்தியல் - ராம் தங்கம்


வாழ்வின் துயரங்களால், புறக்கணிப்புகளால், ஊழால் அலைவுறும் சிறுவர்களின் வலி மிகுந்த உலகின் சித்திரமே எழுத்தாளர் ராம் தங்கத்தின் “திருக்கார்த்தியல்” எனும் இந்தச் சிறுகதைத்தொகுப்பு. பதினொரு கதைகள் கொண்ட இந்தத்தொகுப்பு 2023 வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது பெற்றது. தொகுப்பின் தலைப்புச்சிறுகதையான “திருக்கார்த்தியல்” வென்ற பரிசுகள் எண்ணிலடங்கா.

இத்தொகுப்பிலுள்ள கதைகளில் பல, வறுமையினாலும் பசியினாலும் சிதைக்கப்பட்ட வாழ்வுடைய சிறுவர்களையே கதைமாந்தர்களாகக்கொண்டவை. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தைக்கொண்டது, அனுபவங்களைக்கொண்டது எனினும் அச்சிறுவர்கள் அனைவருக்கும் ஒரே முகம். இன்னும் சற்றுக் கூர்ந்தால் அந்த எல்லாச்சிறுவர்களும் ஒன்றே என்ற புள்ளியில் அமைவர். விதியாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு விளிம்பு நிலையிலிருக்கும் முகமற்ற அக்குழந்தைகளுக்கு ராம் தங்கம் தன்னுடைய மொழியின் வழி ஓர் அடையாளம் கொடுத்திருக்கிறார்.

சபிக்கப்பட்ட தங்கள் வாழ்வின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த இந்தச்சிறுவர்களின் வாழ்வியல் இன்னல்களை நூலாசிரியர் எவ்வித ஒப்பனையுமின்றி அலங்கார வர்ணனைகளின்றி அவர்களின் களத்திலிருந்தே அப்படிக்கப்படியே தரிசிக்க வைக்கிறார். குழந்தைத்தொழிலாளர் முறை பெருமளவில் தடை செய்யப்படாத அக்காலத்தில் நாமும் இத்தகைய சிறுவர்களை எச்சில் இலை எடுப்பவனாக, சைக்கிள் கடையில், ஜூஸ் கடையில் எடுபிடியாக, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப்படிப்பவனாக, ஹோட்டல்களில் எச்சில் தட்டுகளையும் கிண்ணங்களையும் கழுவுபவனாக, வீடுகளுக்குச் செய்தித்தாள், பால் போன்றவற்றைப் போடுபவனாக, ஷூ பாலீஷ் போடுபவனாக என பல்வேறு உருவங்களில் கண்டிருக்கக்கூடும். அவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது ‘பசி’. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றாள் அவ்வைப்பாட்டி. படிக்க வேண்டிய வயதில் தன் குடும்பத்தினரின் வயிற்றுக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது எத்தனை பெரிய துயரம்.

இத்தொகுப்பின் ஒரு சில சிறுவர்கள் அன்னையாலும் குடும்பத்தாலும், கையாலாகாமல் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் இருந்தும் யாருமில்லாமல் இருப்பது பெருவலி. ஒரு துண்டு கொழுக்கட்டைக்காக அலந்து ஊரின் தெருக்களில் நடந்து ஏமாந்து இறுதியில் சபித்து அழும் செந்தமிழின் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம். செந்தமிழைப்போலவே பாதித்த இன்னொருவன் வினோத். ‘கடந்து போகும்’ என்ற கதையின் நாயகனான அவனை எளிதில் கடந்து போக இயலவில்லை. உயிர் போகும் வாதையிலிருக்கும் நிலையிலும் அவனிடம் கடை முதலாளி வேலை வாங்குவது அப்பட்டமான உழைப்புச்சுரண்டல். இந்தச்சிறுவர்களைப்போல் கையறு நிலையில் இல்லாவிட்டாலும் தாயால் கைவிடப்பட்டு, வீட்டை விட்டே செல்வதன் மூலம் வளர்ந்த இளைஞரான ராஜீவும் அதே கோட்டிலமைகிறான்.

பிள்ளைப்பசியோ.. பெருந்தீயோ! என்பார்கள். அந்தப்பசியே இத்தொகுப்பிலிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. சிறுவர்களுக்கு வயிற்றுப்பசி எனிலோ பெரியவர்களுக்கு அகங்காரப்பசி, அதிகாரப்பசி. அந்தப்பசிக்காக அறத்தை மீறத்துணிந்த பெரியவர்களைப்போலல்லாமல் வறுமையிலும் செம்மையாக தன்னறத்தை மீறாமலிருப்பவர்கள் இச்சிறுவர்கள். இவர்களின் வாழ்வின் துயரை அவர்களின் மொழியிலேயே சொல்லும்போது அதன் வீரியம் நம்மைத்தாக்குகிறது. அப்பா அம்மா இல்லாத நிலையில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப்படிக்கும் நிலையிலும் சாதி எனும் கொடிய அரக்கனின் கைகளில் சிக்கி, வாழ்வே கேள்விக்குறியாகும் கார்த்திக் என்றாவது திரும்பி வந்து விட மாட்டானா என நம்மை ஏங்க வைக்கிறது, ‘பானி’யின் மரணமோ பெருவலியுடன் நம்மைப்புரட்டிப்போடுகிறது.

பால்யத்தையும் கல்வியையும் இழந்து விளிம்பில் வாழ நேரும் இவர்கள் முன், வாழ்வு தன் இருண்மை மற்றும் ஒளி பொருந்திய இரு கரங்களையும் நீட்டுகிறது. தாம் சந்திக்க நேரும் மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கேற்ப அவர்கள் அக்கரங்களிலொன்றைப் பற்றிக்கொள்ளக்கூடும். அதற்கேற்ப அவர்களின் திசை மாறவும் கூடும்.

நாஞ்சில் நாட்டு மண்ணில் நிகழும் இக்கதைகள் அம்மண்ணின் மொழியிலேயே, வட்டார வழக்கிலேயே அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சொல்லப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. இக்கதைகளில் சொல்லப்படும் மனிதர்கள் நம்முன் நேரடியாக வாழ்கிறார்கள். அதனாலேயே பெரிய நாடாரையும், மூத்த பிள்ளையையும் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கனகச்சிதமான சித்தரிப்பும் இயல்பான, அதே சமயம் வலுவான கதைமொழியும் கொண்டு வலிகளுடனும் காயங்களுடனும் வெளிப்பட்டிருக்கும் கதைமாந்தர் நம்முள் கடத்தும் அவ்வலியை நம்மால் வெகுநாட்களுக்கு இறக்கி வைக்க இயலாது. அதுவே இத்தொகுப்பின் வெற்றியும் கூட.

டிஸ்கி : இத்தளத்தில் இது எனது 500 ஆவது இடுகை.

Wednesday, 13 March 2024

"நல்லாச்சி" அணிந்துரை - கீதா சுதர்சனம்

நல்லாச்சி நூலுக்கு எழுத்தாளரும், வெண்பா கற்றுத்தந்த குருவும், தோழியுமான கீதா சுதர்சனம் அளித்த அணிந்துரை. மிக்க நன்றி கீதா.
**************************************************

குழந்தைகளுக்குத் தம் தாத்தா, பாட்டிகளுடன் இருக்கும் பிணைப்பு அலாதியானது. 

கூட்டுக் குடும்பமாக இருக்கும்போதும், தனிக் குடும்பமாக இருந்தால் அவ்வப்போது பார்க்கும்போதும், வெளியூரிலோ, வெளி நாட்டிலோ இருந்தால் விடுமுறை நாட்களில் சந்திக்கும் போதும் என்று, தாத்தா, பாட்டிகளுடனான நம் சிறு வயதுத் தொடர்புகள், நாம் வளர்ந்த பின்னும் நினைவில் நின்று நெகிழ/மகிழ வைப்பவை.

கருவறையிலிருந்து வெளிவந்த கணம் முதல்  சிறிது சிறிதாக விரிவடைகிறது குழந்தைகள் உலகம். அவ்வப்போது எழும் ஆர்வம் கலந்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள அவர்களிடமிருந்து கேள்விக் கணைகள் பிறந்த வண்ணம் இருக்கும்.  அவர்களே தேடி விடை காணும் வயது வரும் வரையில் தாய், தந்தையார் இல்லா நேரத்தில் அல்லது அவர்களுடன் இணைந்து தாத்தா, பாட்டிகள் வகிக்கும் பங்கு முக்கியமானது நம் நாட்டின் குடும்பக் கட்டமைப்பில்.

வயல்வெளி, தோட்டம், துரவு, ஆடு, மாடு என்று ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆச்சியைக் காணப் பட்டணத்திலிருந்து வருகிறாள் பேத்தி. அவர்கள் இருவருக்குமிடையேயான பாசப் பிணைப்பை , அவர்கள்  உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்துபவையே சாந்தி மாரியப்பனின் "நல்லாச்சி" கவிதைகள்!

இக்கவிதைகளில் சிலவற்றை முகநூலில் அவ்வப்போது கண்ணில் படும்போது படித்து இரசித்திருக்கிறேன் என்றாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்தது இனிய அனுபவம்.  படித்ததும் ஒரு குறும்படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.  கிராமப் பின்னணியில் நல்லாச்சியும், பேத்தியும் உயிர்ப்புடன்  கண்முன் வந்து நின்றனர்.  பேத்தியின் அறியாப் பருவக் கேள்விகளும், நல்லாச்சியின் சமயோஜிதமும், வெகுளித் தனமும் வெளிப்படும் பதில்களும் சில சமயம் புன்னகையையும் சில சமயம் நெகிழ்வையும் விளைவிக்கக் கூடியவை. 

பல் கொட்டும் வயதான நல்லாவுடன் அவள் தாயும்  இருக்கிறாள். தனக்கு முன், தன், பின்னிரு என்று நான்கு தலைமுறைகளை அரவணைத்துச் செல்லும் அன்பு ஆச்சியே நல்லாச்சி.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கையை, நல்லாச்சி பேத்திக்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றுக்கு ஒப்பான நகர வாழ்க்கை அம்சங்கள் குறித்துப் பேத்தி பாட்டிக்குப் பாடம் எடுப்பதும்,  நெருங்கிய தோழிகள் போல அவ்வப்போது  பிணங்கி இணைவதுமாக நேரம் நகர்கிறது இருவருக்கும்.

இட்லி, தோசை, தொப்பி என ஆச்சி மருதாணி வைக்க, நூடுல்ஸ் மெஹந்தியை பேத்தி ஆச்சிக்கு அறிமுகப்படுத்துகிறாள்!

புள்ளிக் கோலம் போட ஆச்சி கற்பிக்க, பேத்தி அவளுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறாள்!

பேத்தி பம்ப் செட்ட்டில் கொட்டும் நீரை சிறு அருவி என்றால் ஆச்சி அருவியை பெரிய பம்ப் செட் என்கிறாள்!

நகரம் சார்ந்த கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றும் பேத்தி, கோவில் யானை எப்படி முகக் கவசம் அணியும் என்று கவலைப் படுகிறாள். 

ஆச்சி கிராமத்து அன்றாட நிகழ்வுகளை வைத்து நேரம் கணித்தால், பேத்தி  குறும்பாக ஆச்சியின் அன்றாடச் செயல்களை வைத்து நேரம் கணிக்கிறாள்!

பேத்தி உறங்குவதற்காக ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்து, அதை விஞ்சும் வகையில் பேத்தி அளந்து விடும் கதைகளில் ஆச்சி முதலில் உறங்கி விடுகிறாள்! 

மரம், செடி, கொடிகள், காய், கனிகள், பறவைகள், விலங்குகள் அனைத்தும் இவர்களுடைய நாடகத்தில் பங்கேற்கின்றன. தாத்தாவும் அவ்வப்போது மாட்டிக்கொண்டு விழிக்கிறார். 

எம்பிக் குதித்தும் கைக்கெட்டா உயரத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவோடு பேத்தி காய் விட,

"ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்"

இந்த வரிகளில்தான் எத்துணை நயம்! 

இவ்வாறு  பல அழகான நிகழ்வுகளை நெல்லை, குமரி வட்டார வழக்குச் சொற்களோடு பிணைத்து, பாட்டியாகவும், பேத்தியாகவும் மாறி மாறி சாந்தியின் கற்பனைக் குதிரை தாவியோடுகிறது. 

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாசகர்கள் உய்த்துணரக் கொஞ்சம் விட்டுவைக்க வேண்டுமே என்று நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இறுதியில்  சுட்ட கொழுக்கட்டை சாப்பிடுவாளா இல்லை சுடாத கொழுக்கட்டையா என்கிற வினாவுடன்
"அவ்வைக் கிழவி நம்கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி "

என்ற பாட்டோடு
அவ்வைப் பாட்டியும் இவர்கள் பேச்சில் புகுந்து புறப்படுகிறாள்.

இதே சந்தத்தில் நம் நல்லாச்சிக்கும் ஒரு கவிதை சமர்ப்பித்து, சாந்தியின் முயற்சிக்கு என் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
***
நல்லா என்றோர் நல்லாச்சி
...நயமாம் அவளின் சொல்லாட்சி
தள்ளா வயதில் தானிருந்தும்
...தன்தாய் காக்கும் சேயாச்சி 
பொல்லாச் சனத்தின் கண்ணேறு
..போக்கிப் பேத்தி காத்திடுவாள்
நில்லாக் கணைகள் அவள்விடுக்க
...நிறைவாய் விளக்கம் அளித்திடுவாள்; 
நல்லா ஆச்சி நலமுடனே
...நீடு வாழ வாழ்த்துவமே! 

நல்லாச்சியும், பேத்தியும் தொடர்ந்து இன்னும் பேசத்தான் போகிறார்கள். அதனால் சாந்தியின் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பாகமும் நிச்சயம் வெளிவரும் என்னும் நம்பிக்கையுடன்,

கீதா சுதர்சனம்.

Thursday, 15 February 2024

சங்க காலத்து வெயில் - கலாப்ரியா


நவீன கதைமுகங்களில் மிக முக்கியமானவர் ‘சோமசுந்தரம்’ என்ற இயற்பெயர் கொண்ட “கலாப்ரியா” அண்ணாச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். நவீன கவிதைகளின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அப்போதைய கவிதைகளின் வெகுஜனப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்ததில், இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. "சங்க காலத்து வெயில்" எனும் இந்நூல் உட்பட  கவிதைத்தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள், நாவல்கள், சிறுகதைத்தொகுப்பு என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

கலாப்ரியாவின் கவிதைகள் முற்றிலும் சிறப்பானவை, தனித்துவம் கொண்டவை, பெரும்பாலான கவிதைகள் தன்னளவில் வெளிப்படையான காட்சிவடிவமும், அகத்தே உள்ளோட்டமாகக் காத்திரமான குறியீடும் கொண்டவை.

“சித்தார்த்தா
என்றழைத்த
முதுகுரல் கேட்டுத்
திரும்பிய புத்தன்
சிரித்துக்கொள்கிறான்
சொல்லைத் தாண்ட முடியாது
ஞானத்தால் என்று”

“கடலின் மேல்மட்டத்திற்கு
வரும்போதெல்லாம்
ஆகாயத்தின் உயரம்
பார்த்துப் பயந்து
வேகமாய் ஆழம் புதைகிறது
மீன்”

“நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை”
போன்ற கவிதைகளை உதாரணமாகச்சொல்லலாம்.

“இலக்கியவாதியின் சட்டி
கையைச் சுடுவதே இல்லை
அவன் கைகள்
விட்டு விடுவதுமில்லை”
என்ற கவிதையில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்.

வென்றவர்களைப்பற்றி மட்டுமே இவ்வுலகம் எப்போதும் பேசும், ஆனால், தோல்வியுற்றவர்களை அது நினைவில் வைத்திருப்பதில்லை, சொல்லப்போனால், அவர்களைச் சித்திரத்திலிருந்தே முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விடுகிறது. அத்தகைய உலகில், இசை நிற்கிறபோது இசை நாற்காலி விளையாட்டிலிருந்து விலகும் நாற்காலியைக் குறித்து வருத்தம் யாருக்கேனும் உண்டா? என கவிஞர் வினவும்போது அந்த நாற்காலி சற்றே ஆறுதல் கொண்டிருக்கும்.

கலாப்ரியாவின் கவிதைகளில் காட்சிகளாய்த் திரண்டு விரிகிறது உலகம். தான் கண்டவற்றை, உணர்ந்தவற்றை அப்படிக்கப்படியே அதிகப்படியான வர்ணனைகள், வெற்று அலங்காரச்சொற்கள் ஏதுமின்றி எளிய வாக்கியங்களில் வாசகனுக்குக் கடத்துபவை அவரது கவிதைகள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எளிய வரிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு திறப்பாகத் திறந்து கொண்டு புதிய தரிசனம் கிடைக்கிறது.

“ஊர் திரும்பும்போது
பார்வையில் பட்டால்
மகிழ்ச்சியை வழங்கும்
ஊரைப்பிரிகையில்
வருத்தம் பகிரும்
மைல் கற்களால்
வேறென்ன செய்ய முடியும்
நின்று கொண்டேயிருப்பதைத்தவிர” மேலோட்டமாக எளிதாகத் தோன்றும் இக்கவிதையின் மைல் கற்கள் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அச்சித்திரம் மறைந்து, கவிதை சொல்லும் கதையால் மனம் அலைவுறுகிறது. 

“ரசிக்கப்படும் போதெல்லாம்
செதுக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதன்
பேர்தான் கலையோ” எனில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது.

Tuesday, 6 February 2024

ராஜவனம் - ராம்தங்கம்


சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம்தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி. சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்புகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள் என இவரது படைப்புகளும் பெற்ற விருதுகளும் ஏராளம். "திருக்கார்த்தியல்" என்ற தொகுப்புக்காக இவ்வாண்டின் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதாளர்.

காடு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்து ஒளித்து வைத்திருக்கிறது. புறத்தே அது ஒன்றாகக் காட்சியளித்தாலும் அகத்தே அது இருப்பது வேறொன்றாக. அதை அறிய, காடு நமக்குச் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ள அதனிடம் சரணாகதி அடைவதன்றி யாதுளது? அப்படியொரு காடுதான் இங்கே ராஜவனமாகப் பரந்து செழிப்புற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டத்திலுமாகப் பரவியிருக்கும் மேற்கு மலைத்தொடரின் வனாந்திரத்தைக் கதைக்களமாகக்கொண்டுள்ள இந்நூலில் நுழைந்த சில நிமிடங்களிலேயே காடு நம்மைத் தன்னுடன் இணைத்துக் கரைத்துக்கொள்கிறது.

பொதுவாக வனாந்திரங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் சாகசப்பயணம் செய்வதில் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நாட்டமுண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள காளிகேசம் அருவி, கீரிப்பாறை எஸ்டேட், கோதையாறு அருவி போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் குழுக்களாக தத்தம் வாகனங்களில் பயணம் செய்வதைக் கண்டிருக்கிறேன். கன்யாகுமரி மாவட்டத்தில் பாயும் நந்தியாற்று நதிமூலம் தேடி கோபாலும் அவனது நண்பர்களும் அப்படித்தான் பயணிக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியின் வர்ணனைகளும், பட்டியலிடப்படும் கானுயிர்களும், தாவரங்களின் பெயர்களும் வியப்பூட்டுகின்றன.

கல்குளம் தாலுகா பகுதியில் பரந்திருக்கும் அக்காட்டை முற்ற முழுக்க அறிந்தவராயிருந்தால் மட்டுமே இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க முடியும். எழுத்தாளர் ஜெயமோகனின் “காடு” நாவலிலும் அவரது பல சிறுகதைகளிலும் குமரி மாவட்டத்தின் காட்டைப்பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் அது அளித்த தரிசனம் வேறு, ராம்தங்கத்தின் ராஜவனம் அளிக்கும் தரிசனம் முற்றிலும் வேறு. காடு பெருக, நிலைத்திருக்க யானைதான் முக்கியமான காரணம் என்பர். காட்டின் உண்மையான அரசன் என்றே அதைச் சொல்லலாம். அப்பேர்ப்பட்ட யானையைத் தந்தங்களுக்காக அழிக்கும் கொடூரர்கள் கையாளும் வழிமுறைகள், முக்கியமாகப் “பன்னிவெடி” பதற வைக்கிறது.

காட்டின் அபாயங்களைப்பற்றி அறிந்தும், அசட்டுத்துணிச்சலுடன் நதியின் பிறப்பிடத்தை அறியச்சென்ற கோபால் ஒரு கட்டத்தில் மறைந்த தன் தந்தையைப்பற்றி முழுதாக அறிந்து கொள்கிறான். காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்து அவரது ஆத்மார்த்தமான வழிகாட்டல் அவனுக்கு அமைகிறது. சுற்றுச்சூழல், வனவிலங்குகள், மற்றும் மலையில் வசிக்கும் காணிமக்களின் மேல் பெரும் பரிவு கொண்ட அவரது மறுபக்கம் காணிகளால் அவனுக்குக் காட்டப்படுகிறது. காணிகளுக்கு அப்பெயர் எப்படி வந்தது? அவர்களது வாழ்வியல், சடங்குகள், உணவுகள், சட்டத்துக்குப் புறம்பாக வனத்துள் நடைபெறும் அவச்செயல்கள் என பல தகவல்கள் அறியத்தரப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தின் தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏற்கனவே தமிழும் மலையாளமும் கலந்துதான் அது பேசப்படுகிறது எனினும், ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதிரியாக என உச்சரிப்பும் வழக்கும் சில கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஒவ்வொரு வகையாக மாறுபடும். நாவலின் கதைக்களமாகக் கல்குளம் தாலுகா அமைந்திருப்பதால் அம்மக்கள் பேசும் மலையகத்தமிழையே நாவலின் மக்கள் பேசும் வட்டார வழக்காக அமைத்திருப்பது பெருஞ்சிறப்பு. நாகர்கோவிலில் பள்ளியிலும் கல்லூரியிலும் உடன்பயின்ற தோழிகளின் தமிழை மீண்டுமொரு முறை கேட்டதுபோல் உணர்ந்தேன். கன்யாகுமரி மாவட்டத்தின் காணி மக்களின் மொழியும் சிறப்புற உறுத்தலின்றி அமைந்துள்ளது.

சுமார் ஒன்றரை வருட தேடல், வாசிப்பு, பயணங்கள் போன்றவற்றால் இந்நூல் உருவானதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலை வாசிக்கும்போது அந்த உழைப்பு தெளிவாகப் புலப்படுகிறது. ராஜவனத்தில் உலாவுபவர் புத்துணர்ச்சியோடு வெளிவருவது உறுதி.

வெளியீடு: வம்சி பதிப்பகம்.

Sunday, 4 February 2024

மரம் விடு தூது - ந. பரந்தாமன்


சிப்பியின் மேல் எவ்வளவோ துரும்புகளும் மணற்துகள்களும் படிந்தாலும் ஏதோவொன்றுதான் நல்முத்தாக விளைகின்றது. காணும் காட்சிகள், தோன்றும் எண்ணங்கள் யாவற்றையும் கவிதைக்களமாய்க் காண்பது கவிஞனின் மனம். அவற்றில் கவிமனதில் ஆழமாய்ப்பதிந்து உயிர்த்து ஒரு சிலவே கவிதைகளாய்ப் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த 119 கவிதைகளை "மரம் விடு தூது" என்ற முத்துமாலையாய் நம் முன் வைத்திருக்கின்றார் புதுவையைச் சேர்ந்த கவிஞர் ந. பரந்தாமன்.

ஒவ்வொரு கவிதையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுள்ளது. அன்றாட வாழ்வின் நுணுக்கமான கூறுகள், உணர்வு வெளிப்பாடுகள், அங்கலாய்ப்புகள் என அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. ஆறுதல், கட்டம் போட்ட நோட்டு போன்ற கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை. "ஒரு கவிதை நூலை வாசிக்கும்போது இதுவரை காணாமல் போயிருந்த நான் கிடைக்கப்பெற்றேன்" என்ற வரியில் கவிதைக்கும் வாசகனுக்குமுள்ள தொடர்பைக் கூறுகிறார். "அந்தோ என் ஓய்வுக்காலம் ஏதேனும் சட்டம் இயற்றப்படுமா (முதிய)குழந்தைத் தொழிலாளர் தடுப்புக்காக" என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. விருப்பப்பட்டுச் சுமக்கிறவர்கள் மத்தியில் வலிந்து சுமை ஏற்றப்பட்டுச் சுமக்கும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள்தானே. மொழிச்சிடுக்குகளுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அதிகம் சிக்கிக்கொள்ளாமல் எல்லையற்ற சுதந்திரத்துடன் புரண்டோடும் இவரின் மொழி இன்னும் சற்றுக் கூர்மை பெறின் பெருங்கவனம் பெறும். "கவிஞன் மென்மையானவன் அவன் எழுதும்
தாளை விட.." எனக்கூறும் இந்த மென்மையான கவிஞனிலிருந்து வீரியமிக்க கவிதைகள் பிறக்கட்டும்.

மரம் விடு தூது (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர்: ந. பரந்தாமன்
வெளியீடு: படி பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

Wednesday, 24 January 2024

நாழிக்கூழும் நாழி மிளகாயும் - சி. அன்னக்கொடி


மனிதனின் வாழ்வை சமுத்திரமெனக்கொண்டால், அவ்வாழ்வின் சில துளிகளை, கால் நனைத்து நிற்கும் நமக்கு ருசிக்கக்கொடுக்கும் அலைகள்தாம் சிறுகதைகள் எனக்கொள்ளலாம். சக மனிதர்களை அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள, அவர்களின் வாழ்வியலின் வண்ணச்சித்திரத்தின் ஒரு துளியையாவது அறிதல் வேண்டும். இங்கே, அப்படி துளித்துளியாய் வரைந்ததுதான் இந்த சிறுகதைத்தொகுப்பு.

முற்றிலும் கிராமத்து வாழ்வைப் பேசும் கதைகளே இந்நூலில் செறிந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் அத்தனையும் ஒன்றுக்கொன்று இழைந்து வருபவையே. தொகுப்பை முற்றிலுமாக வாசித்து முடிக்கும்போது ஒரு கிராமத்துக்கே போய் யுகயுகமாக வாழ்ந்துவிட்டு வந்த உணர்வை அளிக்கிறது. வழக்கறிஞர் சி. அன்னக்கொடி அவர்களால் முற்ற முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் மொத்தம் இருபத்து மூன்று சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

வீட்டிலுள்ள மனிதர்களிடம் பாசம் வைத்திருப்பதைப்போலவே, ஏன் அதற்கு ஒரு படி மேலாகவே தாங்கள் வளர்க்கும் ஆடுமாடுகளிடம் பாசம் வைத்திருப்பவர்கள் கிராமத்து சம்சாரிகள். அவ்வாறே அஃறிணைப்பொருட்களிடமும், பற்று மிகக் கொண்டவர்கள். தங்களுக்குச் சொந்தமானவற்றை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நகரத்து மக்களுக்கு உலக்கை ஒரு சாதாரணப்பொருள். அதுவே கிராமத்திலிருப்பவர்களுக்கோ ஒரு தெய்வத்துக்குச் சமமானது. விவசாயியின் குடும்பத்தில் தப்பித்தவறி சுளவு, உலக்கை, போன்றவற்றில் தெரியாத்தனமாகக் கால் பட்டு விட்டால் கூட தொட்டு வணங்கச்செய்வார்கள். அப்படியோர் உலக்கை ஒரு குடும்பத்தையே பிரிக்கவும் அதே போல் இணைக்கவும் செய்கிறது. எல்லாம் பற்று செய்யும் மாயம்.

உறவு முறைக்குள் இருப்பவர்களோ இல்லாதவர்களோ.. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இடக்குப்பேச்சுகள் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன. அப்பச்சிகளின் பெருமை பேசும் அப்பத்தாக்கள், அப்பத்தாக்களிடம் எசலும் பேரப்பிள்ளைகள், பெரியவர்களுக்குப் பட்டப்பெயர் வைக்கும் சிறிசுகள், முதலில் வைக்கப்பட்ட பெயர்களுக்காக வருந்தி, அதன்பின் மகிழும் சைக்கிள் தாத்தா, மகளைத் தேடியலைந்து வீட்டுக்குத் திரும்பும்போது அந்த வருத்தத்திலும், உப்புக்கண்டத்துக்காக ஒரு ஓரமாக மகிழும் தகப்பன், செத்துப்பிழைத்து பகை தீர்க்கும் கற்பகம் என நாம் காணும் சித்திரங்கள் அனேகம். 

தனித்தனிச் சிறுகதைகள்தாம் எனினும், மொத்தமாக வாசித்து முடியும்போது ஒரு உணர்வுக்குவியலான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. வெள்ளந்தி மனிதர்கள்தான் எனினும் அவர்களுக்கேயுரிய சாமர்த்தியமும் சில கதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. முக்கியமாக பொங்கக்கூட்டம், சகுனம் போன்ற சிறுகதைகள். திருடித்தின்பதுதான் ருசி என்பார்கள் சிறுவர்கள். அந்த சித்தாந்தம் பெரியவர்களுக்கும் உண்டு என்பதை கள்ளப்பனை, ஏப்பம் போன்ற கதைகளில் நிறுவி நம்மைப் புன்னகைக்க வைக்கிறார் ஆசிரியர். கத்தரிக்காய் ரசமும் மிக ருசிக்கிறது. 

கஷ்டப்பட்டு, கடன்பட்டு, கருமாயப்பட்டு விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மனப்பொருமல் தூத்தலாய்த் தெறிக்கும்போது, நாமும் உச்சுக்கொட்டுகிறோம். பாசம், கருணை, பழி வாங்கல் என அந்த மனிதர்களின் உணர்வுகளுடன் நாமும் இரண்டறக்கலக்கிறோம்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கரிசல் மண்ணின் வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும், தொகுப்பின் மொழி சற்றே மதுரை மண்ணின் வட்டார வழக்கையும் பிரதிபலிக்கிறது. வாசித்து நெடுநேரமான பின்னும் கதை மாந்தர்களைப்பற்றி நம்மைச் சிந்திக்க வைப்பது இந்நூலின் வெற்றி எனக்கொள்ளலாம்.

நூல் – நாழிக்கூழும் நாழி மிளகாயும்
ஆசிரியர் – சி. அன்னக்கொடி
வெளியீடு – கோதை பதிப்பகம்

Thursday, 24 August 2023

கனிவு - வண்ணதாசன்(புத்தக மதிப்புரை)


அன்பு ஒன்றே நிலையானது, எதிர்பார்ப்புகளற்ற அன்பு என்பது கொடுத்துக்கொடுத்து வளர்வது. அப்படிப்பட்ட அன்பினால் நிரம்பியவர்கள்தான் வண்ணதாசனின் மனிதர்கள். அந்த மனிதர்களின் வாழ்வியல் சித்திரங்களின் ஒரு துளியே “கனிவு” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் உதயம், இதயம், தாய், குங்குமம், குமுதம், இந்தியா டுடே, சுபமங்களா மற்றும் காலச்சுவடு இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான 'கனிவு' என்பதே இத்தொகுப்பின் பெயராகவும் அமைந்துள்ளது.

மனம் நொந்து இருப்பவர்கள், வயதானவர்கள், நோயாளியாய் படுக்கையில் இருப்பவர்கள், இவர்களின் கைகளை ஆதரவாய்ச் சற்று நேரம் பற்றியிருப்பதை விடப் பெரிய ஆறுதலை நம் வார்த்தைகள் தந்து விடாது. கவலை, துக்கம், கண்ணீர், சந்தோஷம் என எந்த வகையான உணர்வுகளுக்கு ஆட்படும்போதும் ஒரு கரம் வந்து நம் விரல்களைக் கோர்த்துக்கொள்ளுமேயானால் அதை விடப் பேறு என்ன உண்டு?! வண்ணதாசனின் மனிதர்களுக்கோ இவை எதுவுமில்லாவிட்டாலும் சக மனிதகர்களின் கைகளைப் பிடித்திருப்பதே ஒரு பெரும் ஆறுதலளிக்கிறது, ‘பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி’ என்ற கண்ணதாசனின் வரிகளைப்போல.. சும்மா அருகிலிருப்பதே பெரும் நிறைவாய்.

மொத்தம் பதினாறு கதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வாழ்க்கை ஆனால் அனைவருக்கும் ஒரே முகம். அன்பின் முகம். அன்பு கனிந்த குரல். இனிமேல் நவ்வாப்பழம் என்றதும் ஈஸ்வரியையும் ஆலங்கட்டி மழை என்றதும் பரமாவையும் நினைவிற்கு இழுத்து வந்து விடும் அந்தப் பசலிக்கொடி. வாழ்விலும் நீந்திக் கரையேறக் கற்றுக்கொடுக்கும் மகாதேவன் பிள்ளை போன்ற ஒருவர் எல்லோர் வாழ்விலும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

அளவுக்கதிகமாக எது கிடைத்தாலும் சில சமயம் மூச்சு முட்ட வைக்கும். தைப்பூச மண்டபம் முங்க வெள்ளம் கரை புரண்டு வரும் தாமிரபரணி, கரையிலிருப்பவற்றைச் சேதப்படுத்துவது போல அளவுக்கதிகமான அன்பும் ஒருவரை மூச்சு முட்டச்செய்து விடக்கூடாது. ஊற்றெடுத்து நிரம்பித்தளும்பும் தனலட்சுமியின் அன்பும் அதனாலேயே அவரது துக்கம் படர்ந்து பரவுவதும் அப்படிப்பட்டவையே. காலம் முழுக்க உலகுவின் நிம்மதி பறிபோனதற்குக் காரணம் புரிந்து கொள்ளப்படாத அவரது தூய அன்பா! அல்லது அவரது அன்பை இன்னொரு பெண்ணுடன் பகிர விரும்பாத அவரது மனைவியின் அன்பா?! என்னதான் சிறகுகள் விலாப்புறத்திலிருந்து முளைத்துப் பறக்க எத்தனித்தாலும் இக்காரஸ் போல கரிந்து கீழே விழுபவர்கள்தான் அனேகம்.

“ஆம்பூர் தர்மசங்கரய்யர் பார்த்ததையும் நான் பார்த்ததையும் வடக்கின் இளம் குருத்துகள் பார்த்திருக்க முடியாது”

“ஒப்புக்கொள்கிறேன், இந்த டில்லிச்சிறுமி பார்க்கிறதை உங்களைப்போன்ற பேர்கள் பார்த்திருக்கவும் அதே நேரத்தில் முடியாது”

“கனிவு” சிறுகதையில் சங்கரய்யரின் பேத்திக்கும் பெரிய ஆயானுக்கும் நடக்கும் இந்த உரையாடலில்தான் எத்தனை அர்த்தமும் நெருக்கமும் பொதிந்துள்ளது. அதுதானே அவரை தனது இருண்ட பக்கங்களை அவளிடம் திறந்து காட்டுமளவுக்குத் துணியச்செய்கிறது.

வண்ணதாசன் எனும் எழுத்தாளருக்குள் இருக்கும் கல்யாண்ஜி என்றொரு கவிஞரும் அவ்வப்போது தரிசனமளிக்கிறார். படிமங்களும் குறியீடுகளும் நிரம்பிய இந்த சிறுகதைத்தொகுப்பு இனியதொரு வாசிப்பனுபவத்தைத்தருகிறது. அவரது கதைகளிலும் கவிதைகளிலும் தவறாமல் இடம் பெறும் வாதாங்கொட்டை மரத்தையும் காய்களையும் இலைகளையும் போல நீங்காத இன்னொரு இடத்தைப் பிடிப்பது பேரன்பு. பாலத்தைப்பார்த்தாலே ஆற்றைப் பார்த்தாற்போலதான் என்பது போல் இப்போதெல்லாம் வாதாங்கொட்டை மரத்தையும் மரமல்லிப்பூக்களையும் பார்த்தாலே பேரன்பின் அடையாளமான வண்ணதாசன் ஐயாவைப் பார்த்தது போன்றுதான் என்றே எனக்குத்தோன்றுகிறது.

Saturday, 1 July 2023

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31- அருணா சீனிவாசன்(புத்தக மதிப்புரை)

வீடோ நாடோ.. அங்கே நிர்வாகம் நன்றாக இருக்கிறதென்றால் அது தானும் முன்னேறி பிறரையும் முன்னேற்றும். சிதிலமடைந்த நொடிந்த நிறுவனங்களை வாங்கி நல்ல முறையில் நிர்வகித்து லாபம் கொழிக்கச்செய்வதையெல்லாம் நாமும் கண்கூடாகக் காண்கிறோம். ஒரு நல்ல நிர்வாகி எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன உத்திகளைக் கடைப்பிடித்தால் வெற்றி காணலாம் என்பதற்கான பல வழிகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. நம் செயல்களுக்கு முதலில் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத்தின் பாலபாடம் என்றே இதைச்சொல்லலாம். ஒரு காலத்தில் பள்ளிகளில் இதிகாசங்கள், நீதிக்கதைகள் போன்றவை வாழ்க்கை நெறிகளின் முக்கியத்துவத்தைப் பயிற்றுவிக்கும் முகமாகக் கற்பிக்கப்பட்டன. அவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகள் இன்றும் நமது நிர்வாகவியலில் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி ராமாயணம், மஹாபாரதம், நீதிக்கதைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகளை ஆசிரியர் அருணா சீனிவாசன் விவரித்துள்ளார். 

வேறு வேறு யுக்திகளைக்கையாள்வதோடு காரண காரியங்களை ஆராய்ந்து இடம் பொருள் மற்றும் ஏவல் அறிந்து செயல்படுவது நிர்வாக இயலில் முக்கிய பாடம். ஒரு காரியம் ஒருவனால் சாதிக்கப்பட வேண்டுமெனில் அந்தக்குறிக்கோள் அவன் மனதில் துளிர் விட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு உதவக்கூடிய இது போன்ற பல வழிமுறைகளைப்பற்றிப்பேசுகிறது அருணாவின் இந்தப்புத்தகம். இதிகாசங்களிலிருந்தும், நீதிக்கதைகளிலிருந்தும், நீதி நூல்களிலிருந்தும், சொந்த அனுபவங்களிலிருந்தும் மட்டுமல்ல.. ஸ்டீபன் ஆர். கோவே, ஸ்பென்சர் ஜான்ஸன், சி.கே. ப்ரஹலாத், கேரி ஹேமல், டேவிட் ஃப்ரீட்மேன், கர்ட் காஃப்மேன், பீட்டர் ட்ரக்கர், பில் கேட்ஸ் போன்ற பல மேனாட்டு நவீன நிபுணர்களின் கருத்துகளிலிருந்தும் நமக்குப் பாடம் கிடைக்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல வழிமுறைகளும் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, ஒருவரது சுயமுன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது சுவாரஸ்யமான ஒன்று.

ஆன்மீகமும் வணிகமும் ஒன்றோடொன்று பிணைந்தவையே என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பார்கள். இச்சிந்தனையும் குறைந்த வளங்களில் உற்பத்தி அதிகரிக்கும் திறனும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி முகாம்களில் வலியுறுத்தப்படுகின்றன. ஆலன் ஹால்க்ரோ முன்வைக்கும் வடிகால் கருத்து பல நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அவரை ஒரு மனிதராகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் வெகு விரிவாகவும் அற்புதமாகவும் திருக்குறளின் உதாரணத்தோடு அலசப்பட்டுள்ளது. ஒரு செயலில் இறங்கும்போது தன்னை முழுக்க முழுக்கத்தயார் படுத்திக்கொண்டுதான் இறங்க வேண்டுமென்பதில்லை, 70% தயாராக இருந்தாலே போதுமானது எனச்சொல்லப்பட்டுள்ளது. உண்மைதானே?.. அலை ஓய்ந்தபின்தான் கடலில் இறங்குவேன் என்றிருப்பது நடக்கிற காரியமா?

அறிவு ரீதியான மூளை வளர்ச்சி, மனரீதியான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான எண்ண வளர்ச்சி(INTELLIGENT, EMOTIONAL, SPIRITUAL QUOTIENTS). வேலை செய்யுமிடத்தில் இக்குணங்கள் அல்லது இவற்றில் சில வெளிப்படும்போது எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஆங்கில வார்த்தைகளோடு அவற்றின் தமிழ்ப்பதமும் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

பஞ்சதந்திரக்கதைகள், பாட்டி சொன்ன கதைகளில் பொதிந்திருக்கும் வாழ்முறை நெறிகளை சிற்சில மாற்றங்களுடன் இன்றும் நிர்வாகவியல் பாடங்களாகக் கடைப்பிடிக்கலாம். இன்றைய வர்த்தக உலகில் அடிப்படையாகச் சமாளித்துப் பிழைக்க வேண்டுமென்றால் மாற்றங்கள், சிரமம், குழப்பம், பிரளயம் என எல்லாவற்றையும் எதிர்கொள்வது மட்டுமன்றி அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகவியல் நிபுணர் டாம் பீட்டர்ஸ் சொல்லியிருப்பதை சிற்சில உதாரணக்கதைகளுடன் நிறுவியிருப்பது அழகு.

நேரத்தை நிர்வாகம் செய்வது குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை வாசிக்கும்போது உண்மையிலேயே நமக்குள் ஓர் உந்து சக்தி பிறக்கிறது. ஒரு நிர்வாகிக்கு மாறுபட்ட கோணங்களிலிருந்து காணப்பழகுவதன் அவசியமும், ஊழியர்களின் சுய மதிப்பீடு உயரும்போது செயல்திறன் எவ்வாறு அதிகரிக்கும் என்ற உத்தியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ‘பேட்டி லெவிட்டான்’ என்ற பெண் எப்படி நேர்மறை எண்ணங்களை தன்னுள் ஊன்றியே கான்ஸரிலிருந்து குணமடைந்தார் என வாசிக்கும்போது எண்ணம் போல் வாழ்வு என்ற கூற்று ஞாபகத்துக்கு வருகிறது.

முழுமையான தரக்கட்டுப்பாட்டை நிறைவேற்ற தரப்பகுதிகள்(QUALITY CIRCLES) என்ற உத்தி ஏன் எப்படி அமைக்கப்பட்டுப் பயன்படுகிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். இது ஜப்பானியர்கள் அவர்களின் பாரம்பரியச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கி உபயோகிக்கும் அனேக நிர்வாக உத்திகளில் ஒன்று. பள்ளிகளில் தொழில்முறை நிர்வாகம் ஏன் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதை வாசித்தபின்பு அனைவரும் யோசிக்க ஆரம்பிப்பது கட்டாயம். 

பழமொழிகள், திருக்குறள்கள், பஞ்ச தந்திரக்கதைகள், சொந்த அனுபவங்கள் என பலவும் எடுத்தாளப்பட்டுள்ளன. நூலில் சொல்லப்பட்டுள்ள ‘ஐந்து மருமகள் கதை’யை வாசித்தீர்களானால் கூட்டாக வேலை செய்ய வேண்டியதன் அருமை விளங்கும். அன்றைய தமிழக அரசர்கள்.. குறிப்பாக ராஜராஜச்சோழனின் நிர்வாகத்திற்கும் இன்றைய நவீன நிர்வாகவியலுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. மேலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டியவைகளும் ஏராளம் உண்டு எனும்போது பெருமிதம் ஏற்படுகிறது. சிறிய வணிக நிறுவனங்களின் தனிச்சிறப்பு என்ன? அவை வளர்ந்தபின்னும் ஏன் அதே உத்திகளையே பயன்படுத்துகிறார்கள்? நான் என்ற உணர்வு ஏற்படுத்தும் அறிகுறிகளின் FLOW THEORY BY MIHALY CSIKSZENTMIHALYI பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? சின்ன நல்ல காரியமும் நேர்மறை அலைகளை எழுப்பி ‘தான்’ என்ற நிலையிலிருந்து எப்படி பொது நலம் நோக்கி நகர்த்துகிறது? நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.

நிர்வாகவியலோடு சுயமுன்னேற்றத்திற்கான பல கருத்துகளும் அக்காலத்திற்கு மட்டுமல்ல இக்காலத்திற்கும் பொருந்திப் பிரதிபலிப்பதை இந்நூலில் காணலாம். அவ்வகையில் இப்புத்தகம் மேலாண்மைக்கல்வி கற்பவர்கள், சிறு நிறுவனத்தார் மற்றும் வணிகர்களுக்கு மட்டுமல்ல தனி மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதே. 

Tuesday, 4 April 2023

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை (அம்பை) - புத்தக மதிப்புரை


அம்பையின் எழுத்தை நான் முதன்முதலில் வாசித்தது “அழியாச்சுடர்கள்” தளத்தில்தான். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை மூலம் எனக்கு அவர் அறிமுகமானார். தொடர்ந்து அவரது எழுத்துகளில் சிலவற்றைத் தேடித்தேடி வாசித்தேன். அவற்றில் ஒன்றுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற “சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு.

அம்பை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, மேகங்களும் பறவைகளும் கதைகளாய் ஆண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகக் குதித்து வருவதைப்போன்றே, பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் உலகம் துண்டு துண்டாகப் பெண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகவும் குதித்து வருகிறது. அம்பை குறிப்பிட்டிருக்கும் விதவிதமான வடிவங்களில் அமைப்புகளில் இருக்கும் புற ஜன்னல்களைப்போலவே, பெண்களின் மனதிலும் நிறைய அக ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக, அவள் காண்பதை, அவள் உணர்வதை அவள் கண்ணோட்டத்தின் வழியாகவே அம்பை தன் எழுத்துகளின் மூலம் வெளிக்கொணர்கிறார். 

இத்தொகுப்பிலிருக்கும் பெரும்பான்மையான சிறுகதைகள் மும்பையைக் கதைக்களமாகக்கொண்டவை. பல்வேறு பகுதிகளிலிருந்தும் எக்கச்சக்கமான கனவுகளைச்சுமந்து கொண்டு மக்கள் மும்பைக்கு வருகின்றனர். அம்மக்களின் கனவுகளை உண்டு செரித்தும் எரித்துச்சாம்பலாக்கியும் அதையே அடித்தளமாகக்கொண்டு இப்பெருநகரம் தன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போகிறது. போனால் போகிறதென்று ஒரு சிலரின் கனவை நனவாக்கியும் வைக்கிறது. இதில் மும்பைக்குப் பதிலாக எந்தப்பெருநகரத்தின் பெயரையும் எழுதிக்கொள்ளலாம். அந்நகரத்திலும் ஒரு மரத்தை அடையாளம் கண்டு கொண்டு, எரிவதற்கு முன் அம்மரத்தின் அருகே இருந்த தன் வீட்டை நினைத்துக் கண் கலங்கியபடி ஒரு கம்லி இருப்பாள். தன் தந்தை வேலை செய்த ஆலையை நினைத்துப்பாடியபடி ஒரு கம்மு இருப்பாள்.

நோய்மை பீடித்தவர்களுக்கு எவ்வளவு துன்பமோ அவ்வளவே துன்பத்தை, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தரும். தனக்குப் பிரியமானவர்கள் தன் முன்னே துடிப்பதைக் கண்டும் ஒன்றும் செய்யவியலாத கையறு நிலைக்குப் பெயரே நரகம். மறதி நல்லதுதான், ஆனால் அதுவே ஒரு நோயாகும்போது வாழும் ஒவ்வொரு நொடியும் நோயாளியும் சார்ந்தவர்களும் செத்துச்செத்துதான் பிழைக்கின்றனர். விதி வசமாக நோயாளி இவ்வுலகில் இல்லாமல் போய்விட்டாலும் அவர்களை நினைவூட்டுவது போல் ஏதேனும் சம்பவிக்கும்போது தாங்கவியலாமற் போகின்றது. தொண்டை புடைத்த காகம் தன் தந்தையை நினைவூட்டியபோது தாங்கவியலாமல் கதவைச்சாத்திய கல்யாணியும் நாம்தான். வாத நோய் முடக்கிப்போட்ட காமும்மா எழுதிய நூலைத்தேடி டெல்லி வரை போகும் அனன்யாவும் நாம்தான். மாமியாரைப்பார்த்துக்கொள்ள இயலாமல், அதே சமயம் அவளை முதியோர் இல்லத்திலும் விட முடியாமல் தவித்து, கடைசியில் தீக்கு தன்னைத்தின்னக்கொடுக்கும் ஊர்மிளாவும் நாமேதான். தேன்மொழி என்ற பச்சைப்பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டிருப்பது குறித்துத் தவித்து, அதன் ஒலியைக் கேட்க முயன்று, பின் ஒலியே அப்பறவைக்கு ஓர் ஆக்கிரமிப்பாக இருப்பதை உணர்ந்து வீடு நீங்கும் கூங்கா பாபாவாகிய வசந்தும் நாம்தான்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிக்கான சிகிச்சை பலனின்றி இறந்த கணவனுக்குப் பின் தானும் காலாவதியாகும் முடிவுக்குப்போகும் கமலாவின் மகன் ஆதிக்கும், கடைசி காலத்தில் மறதியால் அவதிப்பட்டு இறந்த தந்தைக்குப்பின் தங்கள் தாய்க்கு ஒரு துணை வேண்டுமென்று சுயம்வரம் ஏற்பாடு செய்யுமளவுக்கு பரந்த மனம் கொண்டு, அதே தாய் தனது கல்லூரிக்கால நண்பனுடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பதை ஒப்புக்கொள்ள இயலாமல் தவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அவரவர் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சுயநலத்தின் கைப்பாவைகள்தான் அவர்கள். “உயிரை நீடிக்கறதுல என்ன பிரயோசனம்?” எனக்கேட்டு தந்தையின் ட்ரக்கியோஸ்டமியை நிறுத்தும் ஆதியும், பிறகு சிக்கல் வராமலிருக்க “அவரவர் சொத்துகள் அவரவர் குழந்தைகளுக்குத்தான் எனப் பத்திரப்படுத்தி விட்டு மறுமணம் செய்து கொள்” எனும் சாந்தியின் குழந்தைகளும் தாய் எனும் பெண்ணின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள எவ்வனத்தின் எப்பொய்கையில் மூழ்கி எழ வேண்டியிருக்குமோ!

பதின்மூன்று சிறுகதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் “சிங்கத்தின் வால்” என்ற கதை பிரமிக்கச்செய்கிறது. இந்தியச்சமூகத்தில் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளையும், அவர்களின் அறிவு புறக்கணிக்கப்படுவதையும், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்கங்களையும் திணிக்கப்படும் கற்பிதங்களையும் அதை அவர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் நெருக்கடிகளையும் பற்றிப் பெரிதும் பேசுகின்றன அம்பையின் எழுத்துகள். அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை, அவள் உலகை, இன்னும் நுணுக்கமாக அணுகி அவள் நோக்கிலேயே புரிந்து கொள்ளலேயாம்.

Monday, 9 January 2023

சுகிரா - புத்தக மதிப்புரை (ஜெயந்தி நாராயணன்)

“சுகிரா” சிறுகதைத்தொகுப்பு
ஆசிரியர்: ஜெயந்தி நாராயணன்
பதிப்பகம்: சுஜா பதிப்பகம்
விலை: 99

ஒரு நல்ல சிறுகதையென்பது வாசகரை ஆரம்ப வரியிலேயே கட்டிப்போட்டு, கடைசி வரி வரை தன்போக்கிலேயே இழுத்துச்செல்ல வேண்டும். முடிந்த பின்பும் வண்டாய் மனதில் ரீங்கரிக்க வேண்டும். முடிவு ஒப்புதலில்லையெனில் “ஏன்?” என சுயபரிசீலனை செய்ய வைக்க வேண்டும். சிறுகதைகள் சுபமாகவோ அசுபமாகவோ முடிந்தேயாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. கண்டிப்பாக அது ஒரு நீதியைப் புகட்டியாக வேண்டுமென்ற நியதியுமில்லை. இன்னும் சொல்லப்போனால் சில சிறுகதைகள் எழுத்து வடிவில் முடிந்தாலும் வாசகர் மனதில் தொடர்வதுண்டு. அங்கே அதன் முடிவு ஒவ்வொரு வாசகரின் எண்ணத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது.

சிறுகதைகளுக்கான கருக்கள் நம் தினப்படி வாழ்விலேயே கொட்டிக்கிடக்கின்றன. நாம் சந்திக்கும் மனிதர்கள், பரிமாறிக்கொள்ளும் கருத்துகள், காண மற்றும் கேட்க நேரும் ஒவ்வொரு சம்பவங்கள் என கதைக்கருக்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றை, கேட்பவர்கள் சலித்துக்கொண்டு கொட்டாவி விடா வண்ணம் சுவைபடச்சொல்வதுதான் ஒரு கதைசொல்லியின் திறமை. ரசனையுடன் எழுதும் கதைசொல்லியால் அவை சுவாரஸ்யமான சிறுகதைகளாகவும் மலர்கின்றன.

எழுத்தாளர் ஜெயந்தி நாராயணனின் “சுகிரா” சிறுகதைத்தொகுப்பில் உள்ள கதைகளும் அத்தகையவே. புத்தகத்தைக் கையிலெடுத்தால், கடலையுருண்டையில் ஒவ்வொரு கடலையாக ரசித்து ருசிப்பதைப்போல் ஒவ்வொரு கதையும் ரசித்து வாசிக்க வைக்கிறது. மனித மனம் விந்தையானது.. கலைடாஸ்கோப்பைப்போல் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டேயிருப்பது. அப்படி தன்னுரு மாறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் உருக்கொடுத்து ரத்தமும் சதையுமான கதை மாந்தர்களாக உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர்.

வண்ணத்துப்பூச்சியின் உருமாற்றம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அப்படியில்லாமல் அந்த மாற்றம் தான் விரும்பியபடியே நிகழ வேண்டுமென வன்முறையைப் பிரயோகித்தால் என்னாகும்? ஹரிணிக்கு நிகழ்ந்ததுதான் நடக்கும். வாழ்வில் எதை வேண்டுமானாலும் மீட்டுக்கொண்டு விடலாம், சிறு வயதில் அனுபவிக்கத்தவறியவற்றைக்கூட. ஆனால், போய் விட்ட இளமையை எங்ஙனம் கடந்த காலத்திலிருந்து மீட்டெடுப்பது? ராஜியைப்போல் பிச்சியாகவே அலைந்து மடிய வேண்டியதுதானா? இவ்வாழ்வின் இக்கணம் மட்டுமே உறுதியானது, அதை வாழ்வதை விடுத்து வேண்டாத சந்தேகத்தை வளர்த்துக்கொண்டு அல்பாயுசில் மடிந்த திவ்யாவைப்போல் இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?

அன்பு ஒன்றே நிலையானது என்பதை மனிதர்கள் பெரும்பாலும் காலம் போன கடைசியில்தான் உணர்ந்து சுற்றம் சூழ வாழ விரும்புகிறார்கள். அதுவரையில் சந்தீப்பைப்போல் கூடப்பிறந்தவர்களுக்கே ஊறு விளைவிக்கவோ அல்லது பெற்றோர் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தான் நன்றாக இருந்தால் போதும் என்றிருப்பவர்களாகவோ பணத்தாசை, பேராசை, பொறாமை போன்ற தீக்குணங்களால் தீண்டப்படுபவர்களாகவோதான் பெரும்பாலோனோர் இருக்கின்றனர். மதம், இனம், செல்வம் போன்ற எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் மாச்சரியங்களுக்கும் அப்பாற்பட்ட மனிதர்களும் இச்சிறுகதைகளில் உலவுகின்றனர். தானாக விரும்பி, மனம் கலைந்தவளைப்போல் நடிக்கும் ராஜியும், வயோதிகத்தால் கடந்த கால நினைவுகள் அனைத்தையும் மறந்த.. ஆனால், “சுகிரா”வை மட்டும் ஞாபகம் வைத்திருக்கும் சுந்துவும் கண்களில் நீர் திரையிடச்செய்து விட்டார்கள். 

தேவையற்ற அலங்காரங்கள், அலுப்பூட்டும் வர்ணனைகள் ஏதுமின்றி மிக இயல்பான மொழி நடையில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதைகள் ரசிக்க வைக்கின்றன. “அன்னை” சிந்திக்கவும் வைத்தது. மீனா அவள் செய்தது தவறா? குற்றமா? என நிறையப்பேரை யோசிக்க வைப்பாள்.

Thursday, 8 September 2022

அக்கா (துளசி கோபால்) - புத்தக மதிப்புரை

புத்தகம்: அக்கா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ஆசிரியர்: துளசி கோபால்

பதிவுலகில் எங்கள் அனைவராலும் அக்கா என அன்போடு அழைக்கப்படும் துள்சிக்கா என்ற துளசி கோபால், தனது அக்காக்களோடும் அண்ணனோடும் கழித்த இளம்பிராயத்து அனுபவங்களைக் கட்டுரைகளாகத் "துளசி தளம்" என்ற தனது வலைப்பூவில் எழுதி வந்தார். அவ்வனுபவங்களின் தொகுப்பே “அக்கா” என்ற தலைப்பில் தனி நூலாக மலர்ந்திருக்கிறது. அக்கா என்றதும் எனக்கு கலாப்ரியா அண்ணாச்சியின்,

“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கச்சிப் பாப்பாக்களைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்”

என்ற புகழ்பெற்ற கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அக்காக்கள் அப்படித்தான். அக்கா என்பவள் இன்னொரு தாயும் கூட. 

அக்காக்களின் கதையைச்சொல்ல வந்த துள்சிக்கா, அதனுடன் தன் கதையையும் பின்னியே சொல்லியிருக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் மூன்று சகோதரிகளின் வாழ்வும் மூன்று வெவ்வேறு திசைகளில் பயணித்திருக்கின்றன. அக்காக்கள் என்றால் அவர்கள் தனி மரமா? மாமாக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் வாழ்க்கை முறை என எல்லாமும் சேர்ந்த தோப்புதான் அக்கா.

அக்கா என்றால் இன்னொரு அம்மாதானே? துள்சிக்காவின் பெரியக்காவைப்பற்றி வாசிக்கும்போது எனக்கு அவர் துள்சிக்காவின் இன்னொரு அம்மா என்றுதான் தோன்றியது. அந்தப்பகுதியை வாசிக்கும்போது துள்சிக்காவின் ஞாபகசக்தியை வியந்தேன். எவ்வளவு சிறுசிறு விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்து எழுதுகிறார்!. முக்கியமாக, நீளமான எலி போன கதை, அக்கா வீட்டில் மெழுகிக்கோலம் போடும் முறை, வீட்டில் என்ன நடந்தாலும்“நானு” என எல்லாவற்றுக்கும் குழந்தை ரேணு சொல்லும் விதம், முக்கியமாக அக்காவின் கல்யாணக்கூரையான பனாரஸ் பட்டுப்புடவையைக் கட்டிக்கிழித்தது, முத்தாய்ப்பு வைத்தது போல் அப்பா தனது கடைசி நாட்களை மூத்த மகள் வீட்டில் கழித்தது என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

சின்னக்காவிற்கும் அண்ணனுக்குமிடையே அகப்பட்டுக்கொண்டு சின்ன துள்சிக்கா பட்ட பாடு நமது உடன்பிறப்புகளிடையே ஏற்படும் விளையாட்டுச் சண்டைகளைக் கண்டிப்பாக நினைவூட்டும். இருவருக்கும் சமரசம் ஏற்பட்டிருக்ககூடாதா என்ற ஏக்கம் தோன்றியது நிஜம். சின்னக்காவையும் அவரது நறுவிசான காரியங்களையும் வாசிக்க வாசிக்க, அவரைக்கொண்டு போன எமன் மேல் கோபம் வந்தது. சின்னக்காவுடன் துள்சிக்கா பூவுக்குப் பங்கு கேட்கும் முறையையும், அம்மா மற்றும் அக்காக்களுடன் சினிமாவுக்குக் கிளம்பும் வைபவம் பற்றியும் விவரித்திருப்பதை வாசிக்கும்போது, அந்த உணர்வை நம்முள் நேரடியாகக் கடத்திவிடுகிறார். சிறந்த கதை சொல்லியான துள்சிக்கா.

மருத்துவரான அம்மா இருந்த வரைக்கும், கதம்பமாய் ஒற்றுமையாய் இருந்த உடன்பிறப்புகள், அவரின் இறப்புக்குப்பின் சிதறிப்போவதும், அந்தக்குடும்பம் கொஞ்சங்கொஞ்சமாய்க் கலைவதும் வாசிக்கும்போதே வலி தருகிறது. அக்காக்களின் கல்யாணம் பற்றி விவரிக்கும்போதே, அம்மா வழி குடும்பத்தையும் சற்று நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அம்மம்மாவுடன் நிகழ்த்தும் “நடு வீடு” கலாட்டா நகைக்க வைத்தது.

அக்காக்கள் என்பவர்கள் நிச்சயமாக அபூர்வப்பிறவிகள்தான், இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக அவரவர் அக்காக்கள் நினைவுக்கு வருவது உறுதி. தனது வலியைக்கூட புன்னகையுடன் நகைச்சுவையுணர்வுடன் சொல்வது எங்கள் துள்சிக்காவின் சிறப்பியல்பு. இப்புத்தகத்திலும் அது வெளிப்பட்டுள்ளது. கையிலெடுக்கும் ஒவ்வொருவரும் புன்னகை தவழ வாசித்து முடிப்பது உறுதி.

Sunday, 28 August 2022

அளம் - புத்தக மதிப்புரை


கணவன் மனைவி இருவரில் பொருளீட்டும்பொருட்டு மனைவி பிரிந்து சென்றாலோ, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காத பொறுப்பற்ற ஊதாரியாய் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, கணவன் மீதி வாழ்க்கையைத் தொடர, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிக் கரையேற்ற மிகவும் சிரமப்படுவான். அதுவே கணவனின் துணையும் ஆதரவும் இல்லாத சூழலில் வாழ நேர்ந்தால், மனைவியானவள் குடும்பத்துக்கே அச்சாணியாய் இருந்து எப்பாடு பட்டாவது குழந்தைகளை வளர்த்துக் கரை சேர்த்து விடுவாள். அப்படி கரை சேர்க்குமுன் அவள் படும் பாடுகளும் நடத்தும் போராட்டங்களும்தான் எத்தனையெத்தனை!!!! 

சின்னச்சின்ன கவலைகள் வந்தாலும் உடைந்து போவார்கள், தானும் பயந்து துவண்டு பிறரையும் பயத்துக்கு உள்ளாக்குவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். ‘பொசுக் பொசுக்கென’ அழுது தீர்ப்ப்பார்கள். ஆகவே, மலரினும் மெல்லியர் பெண்கள் எனக்கூறப்படுவதுண்டு. அப்படி மென்மையான பெண்கள்தான், வாழ்வில் விழும் அடிகளால் கெட்டிப்பட்டு, வலிமையானவளாகவும் பொறுப்பானவளாகவும் மாறுகிறாள். அதுவும், அசாதாரணமான சூழ்நிலைகளில் “அடுத்து என்ன செய்ய?” என கணவன் கலங்கி நிற்கும் சமயங்களில், “பாத்துக்கலாங்க.. சமாளிப்போம்” என அவள் கூறும் வார்த்தைகளில் கணவனுக்கு புதுத்தெம்பே அல்லவா வந்து விடுகிறது!.

ஆண் இல்லாவிட்டாலும் பெண் ஓய்ந்து உட்கார்ந்து விடுவதில்லை. குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கப்போராடுகிறாள், ‘பொம்பள வளத்த புள்ளதானே?’ என்றொரு சொல் தன் பிள்ளைகளின் மேல் விழுந்து விடக்கூடாதென பிள்ளைகளை, முக்கியமாகப் பெண்பிள்ளைகளை அடைகாத்து வளர்க்கிறாள். அவளில்லாவிட்டால் குடும்பம் நிச்சயமாக இருண்டுதான் போய்விடுகிறது. நாளொரு பாடு, பொழுதொரு போராட்டமென தினந்தினம் செத்துப்பிழைக்கும் அப்பெண்களின் பிரதிநிதியான சுந்தராம்பாள் மற்றும் அவளது மூன்று மகள்களின் கண்ணீர்க்கதையை “அளம்” நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி.

கப்பலில் வேலை செய்து சம்பாதித்து வருவதாகச்சொன்ன பொன்னையன் நாவலின் இறுதி வரி வரை திரும்பி வரவேயில்லை. வேலைக்குச் சேர்த்து விட்ட இடத்திலிருந்து காணாமல் போய் விடுகிறான். கோயில்தாழ்வு ஊரிலிருக்கும்போதும் குடும்பத்துக்காகச் சம்பாதிக்காமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் ஆகவே அவன் இருந்தாலும் இல்லாமற்போனாலும் உழைத்தாக வேண்டிய பொறுப்பு சுந்தராம்பாளுக்குத்தான். கஷ்டத்தையும் கண்ணீரையுமே சொத்தாகக் கொண்டிருக்கும் அவர்களை இயற்கைச்சீற்றமும் தன் பங்குக்குச் சோதிக்கிறது. எழ நினைக்கும்போதெல்லாம் அடித்து உட்கார வைக்கிறது. வீடு, ஆடு மாடுகள்,  விளைந்து நிற்கும் பயிர் என எல்லாவற்றையும் நந்தன, மன்மத வருடங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தில் பறிகொடுத்து நிற்கிறார்கள். புயல் வீசும் அத்தியாயத்தை வாசிக்கும்போது, “கஜா” புயல் நினைவுக்கு வந்தது.

இரண்டு முறை திருமணம் செய்து கொடுத்தும் விதவையாய்த் தாய்வீட்டுக்கே மறுபடி மறுபடி வந்து சேரும் வடிவாம்பாள், மகிழ்வாய் ஆரம்பித்த மணவாழ்வு கணவன் வேறு திருமணம் செய்து கொண்டதால் கருகி விட, மூன்று குழந்தைகளுடன் தாய்வீட்டுக்குத் திரும்பும் இரண்டாவது மகளான ராசாம்பாள், கல்யாணமாகாத கடைசிப்பெண் அஞ்சம்மாள் என அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போகிறது. அவர்களது அயராத உழைப்பை மட்டுந்தான் விதியால் பறிக்கவியலவில்லை. சுப்பையன் சிங்கப்பூரில் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கையிலேயே நாட்களை ஓட்டுகிறார்கள். என்றாவது ஒரு நாள் அவன் திரும்பி வரக்கூடும், தங்களைத் தேடுவான் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதால் கோயில்தாழ்வை விட்டு வெளியூருக்குப் பிழைக்கப்போகாமல் எல்லாச் சோதனைகளையும் தாங்கிக்கொண்டு அங்கேயே இருப்பது நெகிழ வைக்கிறது என்றாலும், குடும்பத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒருத்தனுக்காக இவ்வளவு சிரமங்களைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

வாட்டும் வறுமையில் வயிற்றுப்பாட்டைக்கழிக்க அன்றாடங்காய்ச்சியான அவர்கள் படும் பாடுகள் அநேகம். இயற்கையும் அவர்கள் மேல் கருணை கொண்டு, மின்னிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, கார கொட்டிக்கிழங்கு, அதலை விதைகள், தொம்மட்டிக்காய்களும் பழங்களும் என அள்ளி வழங்கி அரைவயிற்றுக்காவது பசியைத்தீர்க்கிறது. உப்பளத்தில் வேலைக்குச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு உப்பளத்தை வாங்குகிறார்கள். ஆண் துணையற்ற அக்குடும்பத்துக்கு அந்த உப்பளம்தான் இறுதியில் துணையாகிறது. அதில் விளையும் உப்பில் அவர்களது கண்ணீர் கலந்து இன்னும் கரிக்கலாம், யார் கண்டது?

நாவலில் நெடுக வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளின் வட்டார வழக்கு இடையோடுகிறது. அத்துடன், நெய்தல் நிலமான அப்பகுதிகள் மற்றும் உப்பளங்களின் நிலவியல் அமைப்பை மிகவும் அழகாகவும், அந்த எளிய பெண்களின் போராட்டத்தை யதார்த்தமான தனது எழுத்தால் அழுத்தமாகவும் இந்த வாழ்வியல் நூலில் பதிவு செய்துள்ளார் தமிழ்ச்செல்வி..

நூல்: அளம்
ஆசிரியர்: சு. தமிழ்ச்செல்வி
வெளியீடு: ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

Saturday, 27 August 2022

“நேரா யோசி" - புத்தக மதிப்புரை


திரு. சுதாகர் கஸ்தூரியின் இப்புத்தகம் சுயமுன்னேற்றப் புத்தகமா எனில் ஆம், ஆனால் உளவியல் ரீதியான சுய முன்னேற்றப்புத்தகம் என்று கூறலாம். ஒரு மனிதன் முன்னேற முட்டுக்கட்டையாய், தடைக்கல்லாய் இருப்பது எவ்விதமான வெளிக்காரணியுமல்ல.. முழு முதற்காரணி அவனேதான். அவன் எனில் அவனது மனம், அந்த மனத்தை அவன் கையாளும் விதம், அவன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாங்கு, அவற்றைத் தீர்க்கும் விதம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருக்கும் சுய மதிப்பீடு, அவனது பொறுப்புணர்வு என பலவும் கொண்டது. அவையே பெரும்பாலும் அவனது வெளித்தெரியாத எதிரிகளுமாகும்.

“எண்ணித்துணிக கருமம்” என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனங்குவித்துச் சிந்தனை செய்யப்புகும்போது, இந்த எதிரிகள்தான் தடையாக வந்து நிற்பர். இந்நூலில் அப்படிப்பட்ட 26 எதிரிகளை நமக்கு இனங்காட்டி, அவர்களை வெல்லவும் தாண்டிச்செல்லவும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது, “அட!! ஆமால்ல” என நாமும் ஒத்துக்கொள்கிறோம். நம்மில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் இனங்காண்கிறோம். இவற்றில் ஒவ்வொரு எதிரியும் முக்கியமானவர்தான் எனினும் என்னளவில், பின்னூட்டமற்ற போக்கு, சுய இரக்கம், விருப்பமும் முன் முடிவுகளும், பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு, தேர்ச்சியெனும் பொறி, எல்லையற்ற நற்பண்புகள் போன்றவற்றை மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். “நான் எதைச்செஞ்சாலும் வெளங்காது” என்ற கழிவிரக்கம் நம்மை ஒரு அடி கூட முன்னேற விடாமல் அப்படியே அங்கேயே ஆணியடித்தாற்போல் அமரச்செய்து விடும். அப்புறம் முன்னேற்றமாவது ஒன்றாவது..

மனம், மூளை இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்ற விவாதம் அவ்வப்போது எழுந்தடங்குவது உண்டு. நம் சிந்தனையின் வேகத்திற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் மாறுவதும், மூளையிலேற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் சிந்தனைகள் அமைவதும் உண்டு. Anxiety எனப்படும் மனப்பதற்றப்பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிறுசிறு பிரச்சினைகள் வந்தால் கூட அதை எதிர்கொள்ள கடினமாக இருக்கும், பயம் வந்து மூடிக்கொள்ளும், இதயத்துடிப்பு எகிற, உடல் முழுதும் வியர்த்து வழிய துவண்டு போவார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்யும், அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதோ சிங்கம் புலியை நேரில் கண்டாற்போல் பயப்படுவார்கள். அந்த பயமே அவர்களை சிறைப்படுத்தி விடுவதுமுண்டு. இதெல்லாம் மூளையிலிருக்கும் (Amygdala)செய்யும் வேலை. 

நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோது இந்த அமைக்டிலாதான், “இங்கே நிற்காதே.. ஓடி உன்னைக்காப்பாற்றிக்கொள்” என எச்சரிக்கை செய்தது, அட்ரீனலினைச்சுரக்க வைத்துப் பரபரப்பூட்டியது. தற்காலத்திலும் அதேபோல்தான், சில செய்திகளைக்கேட்கும்போது அட்ரீனலினைச்சுரக்க வைத்து பரபரப்பூட்டி விடுகிறது. அதிகமான அட்ரீனலின் சுரப்பே anxietyக்கும் காரணமாகிறது. அந்த உணர்ச்சி வேகத்தில் ஓடும் நமது அனிச்சைச்சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் அட்ரீனலினின் வேகம் சற்றுக்குறைந்த பின் வரும் சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. இந்த அனிச்சை எண்ணங்களை மாற்றியமைப்பதற்காக CBT (Cognitive Behaviour Therapy) கொடுப்பதுண்டு. கொஞ்சங்கொஞ்சமாக அமைக்டிலாவின் தாக்கத்தைக் குறைத்து தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கற்றுத்தருவார் கவுன்ஸிலர். அதாவது எதையும் “நேரா யோசிக்க”க் கற்றுத்தருவார். நேரா யோசிக்கும்போது என்னதான் நாம் பிற காரணிகளால் தூண்டப்பட்டாலும் நிதானமிழக்காமல் இருப்போம். இப்புத்தகத்திலும் அந்த தெரப்பியின் அடிப்படையிலேயே பல்வேறு உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. “You can’t change, but modify” என கவுன்ஸிலர்கள் சொல்வதுண்டு.

நமது முன்முடிவுகள் காரணமாக, பிரச்சினைகளையும், இவ்வுலகையும் அது எப்படியிருக்கிறதோ அப்படிப்பார்க்காமல், நாம் எப்படிப்பார்க்க விரும்புகிறோமோ அப்படிப்பார்க்கிறோம். இவற்றிலுள்ள பிழைகளைச்சுட்டிக்காட்டி நேராக யோசிக்கக்கற்றுத்தந்து நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது இந்நூல். 

இன்றைய தினம் நம் முன் முக்கியமாக இளைய தலைமுறையினர் முன் நிற்பது “போலிச்செய்திகள்” எனும் மிகப்பெரிய எதிரி. “முன்னோர் ஒன்றும் முட்டாளல்ல” எனவும் “ஷேர் செய்யுங்கள்” என நிபந்தனை விதித்தும் வெளியாகும் பொய்ச்செய்திகள் அனேகம். இப்பொறிக்குள் விழுபவர்கள், பிறர் மீது வெறுப்பு, கோபம், மற்றும் ஆதாரமில்லாத மருத்துவக்குறிப்புகளைப்பின்பற்றுதல் என தங்கள் சமூக, குடும்ப உறவுகளைச் சிதைத்து உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இளைய தலைமுறையினர் சற்று யோசித்தாலே அதிலிருந்து வெளி வந்து விடுவர். இந்த நூல் அனைத்துத் தரப்பினரும் வாசிக்க ஏற்றதுதான் என்றாலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் வாசித்தால் அவர்களது மனநலம், சிந்திக்கும் திறன், அதன் காரணமாக வாழ்வில் முன்னேற்றம் என எல்லாமும் மேம்படும். கல்லூரிகள், பள்ளிகளில் பாடமாக வைக்கலாம்.

எழுத்தாளர், நண்பர், திரு.சுதாகர் கஸ்தூரி பன்முக வித்தகர். வெண்பா எழுதி வியக்க வைப்பார். தெற்கத்தித் தமிழில் எழுதி ரசிக்க வைப்பார். அறிவியல் கட்டுரைகள் எழுதி அசர வைப்பார். மும்பையில் வசித்தாலும் தூத்துக்குடித் தமிழர். அவரின் நூற்களில், 6174 மற்றும் 7.83 ஹெர்ட்ஸ் என இரு நூல்களையும் வாசித்திருக்கிறேன். இந்நூல் அவரது அனைத்து நூற்களிலிருந்தும் மாறுபட்ட ஒன்று.

LinkWithin

Related Posts with Thumbnails