Showing posts with label புத்தக வெளியீடு. Show all posts
Showing posts with label புத்தக வெளியீடு. Show all posts

Monday, 19 February 2024

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பு வெளியீடு.


"நல்லாச்சி" கவிதைகளை எழுத ஆரம்பிக்கும்போது ஆச்சி இப்படி அழுத்தமாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என அறியவில்லை. சொல்ல நினைப்பவற்றை போகிற போக்கில் பேத்தியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வேடிக்கையும் விளையாட்டுமாகச் சொன்னபடி, அனைத்தும் அறிந்த அனுபவஸ்தியானாலும் பேத்தியின் முன் எதுவுமே தெரியாதவளாய் திருதிருவென விழித்துக்கொண்டு அவள் வந்தபோதே தெரிந்து விட்டது நல்லாச்சி தனிக்காட்டு ராணியாகத்தான் வலம் வரப் போகிறாளென. 

சில வருடங்களுக்கு முன் துளித்துளியாக எழுத ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் சற்றேறக்குறைய தினமுமே அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சுடுபாதையில் குளிர்தருவாக அவளே ஆறுதலளித்தாள். முன்னட்டையை அலங்கரிக்கும் என் அம்மாவின் அம்மா "பொன்னம்மாச்சி" எனக்கு உந்துதலாக இருந்தாலும் என்னைச்சுற்றியிருந்த பல்வேறு நிஜமும் கற்பனையுமான ஆச்சிகளும் இந்நூலில் நடமாடுகிறார்கள். 

எனக்கு இந்த வருட பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் "நல்லாச்சி" கோதை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. மிக்க நன்றி தேனாச்சி. பபாசியின் துணைத்தலைவர் திரு. புருஷோத்தமன் கைகளில் "நல்லாச்சி"யைக் கண்ட தருணம் மகிழ்வானது, மறக்க முடியாதது.

எனது முதல் கவிதைத்தொகுப்பான "சிறகு விரிந்தது" வெளியான சமயம் என்னால் போக இயலாத சூழல், ஆகவே இந்தத்தடவை எப்படியும் சென்னை புத்தகத்திருவிழாவுக்குச் செல்ல வேண்டுமென்று கிளம்பி விட்டேன். ஜனவரி 16ம் தேதி மாலை எழுத்தாளர் கலாப்ரியா அண்ணாச்சியின் திருக்கரங்களால் "நல்லாச்சி" எனும் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு இனிதே வெளியிடப்பட்டது. தோழிகள் ஜெயந்தி நாராயணன், வல்லபா ஸ்ரீநிவாசன், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் நட்புகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

புத்தகத்தை வாங்க கோதை பதிப்பகத்தின் 9080870936 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, 28 January 2014

"சிறகு விரிந்தது" புத்தக வெளியீட்டு விழா..

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். கூடவே ராமலக்ஷ்மியின் “இலைகள் பழுக்காத உலகம்” புத்தகத்திற்கான வெளியீடும் நடந்தது.

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில், பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா..
முகநூலில் தினமும் வெளியாகும் புத்தக வெளியீட்டு விழா பகிர்வுகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம், சென்னையில் வசிக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கமாகவும் இருந்தது. போகட்டும்.. பிழைத்துக்கிடந்தால் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் :-)

தன்னுடைய படைப்புகளைப் புத்தகமாகப் பார்ப்பதென்பது, அதுவும் முதல் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில்.. அதை விடப் பேரின்பம் ஒரு எழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களினிடையே என்னுடைய புத்தகமும் தென்பட்டதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத உணர்வு என்னை ஆட்டிப்படைத்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் புத்தகங்களைப் பதிப்பித்துப் புத்தகத்திருவிழாவிற்குக் கொண்டு வந்ததோடு, என்னைப்போல் தூரதேசத்தில் இருப்பவர்களுக்காக புத்தக வெளியீட்டையும் நடத்திக்கொடுத்த பொன் வாசுதேவனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

என்னுடைய கவிதைத்தொகுப்பும் இங்கே கிடைக்க ஆரம்பித்து விட்டது. 

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))

LinkWithin

Related Posts with Thumbnails