கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும். விதை விதைச்சதும் முளைச்சு, விளைஞ்சு அறுவடையாகிரும்ன்னு அவசரப்பட முடியுமோ?.. குறைஞ்ச பட்சம் வேரூன்றித் தழைக்க ஆரம்பிச்சாலாவது எப்படியும் பிழைச்சுரும்ன்னு நம்பிக்கையோட இருக்க முடியும். அது வரைக்கும் பொறுமை.. பொறுமை.. அண்ட் பொறுமை தேவை. பொறுமை எருமையை விடப்பெரியதுன்னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க.
எப்பவும் போல அன்னிக்கும், பொறுமையா ஒரு சிகரெட் புகைக்கலாம்ன்னு பொட்டிக் கடைக்கு வந்து ஒரு சிகரெட் வாங்கிக்கிட்டு, கடையிலிருந்த லைட்டரோட பட்டனை அமுக்கினா, அது..ராம் நாம் சத்ய ஹை"அப்டீன்னு சவுண்டு விடவும் பதறியடிச்சுப் பின் வாங்கிய மக்களுக்கு, ஒரு இயக்கம் கொடுக்கற அதிர்ச்சி வைத்தியம் அதுன்னு மொதல்ல புரியலை..
காமிராவில் பிடிச்சாந்தது..
வடக்கே இந்துக்களின் இறுதி ஊர்வலத்தும்போது, கூடவே நடக்கறவங்க "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு மெதுவான குரல்ல உச்சாடனம் செஞ்சுட்டே போவாங்க. போற உசுரு கடவுள் நாமத்தைக் கேட்டுக்கிட்டே போகட்டுமேங்கற நினைப்புத்தான். அதைத்தவிர வீண் அரட்டையோ அல்லது வேறு எந்த நிகழ்வுகளோ இருக்காது. அந்த உச்சாடனத்தைக் கேக்கறப்ப கொஞ்சம் நம்ம உசுரையே அசைச்சுப் பார்த்துடற மாதிரி இருக்கும். பொதுவாவே இறுதிச்சடங்கு நிகழ்வுல கலந்துக்கறவங்களுக்கு ஒரு விதமான பற்றற்ற மனநிலை இருக்கும். பூமியில உசிரோட இருக்கறவரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய மனுஷன் கடைசியில் என்னத்தைக் கொண்டு போறான். நாமளும் அப்படித்தானே போகப்போறோம்,.. அதனால இருக்கறவரைக்கும் மத்தவங்களுக்குப் பிரயோசனமா இருக்கணும், அன்பா இருக்கணும்ன்னு ஒரு வைராக்கியமே வரும். இதைத்தானே மயான வைராக்கியம்ன்னு சொல்றோம். அந்த இடத்தை விட்டு வெளியில வந்தப்புறம், "பழைய குருடி கதவைத்திறடி"ன்னு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பறது தனிக்கதை :-) இங்கெல்லாம் இறுதி யாத்திரை போகுதுன்னா, கிட்டக்கப் போயி இறந்தவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டு அவங்கவங்க வழியில போவாங்க.
மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.
மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.
ஆனாலும் நம்ம அரசாங்கத்துக்கு மக்கள் மேல அபார நம்பிக்கைதான். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், இது போக வழக்கமான கல்வி நிலையங்கள்ன்னு எக்கச்சக்கமா ஏற்படுத்திக் கல்வியை ஊட்டறோமே.. அது வீணாப் போகுமா?. எப்படியும் மைக்ராஸ்கோப் வெச்சுப் படிச்சாவது தெரிஞ்சுக்குவாங்க என்ற அசாத்திய நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. அதனாலதான் கடுகை விடச் சின்னதா "Cigarette is Injurious to Health"ன்னு சிகரெட் பொட்டியில் எழுதி வெச்சிருக்காங்க. ஒரு வேளை இங்க்லீஷ் படிக்கத் தெரியலைன்னா என்னா செய்யறதுன்னுதான் "புகை பகை".. "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"ன்னு தமிழ்லயும் எழுதி வெச்சிருக்காங்க.
ஆனாலும் மக்கள் இந்த வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) விடறதா இல்லை. பொது இடங்கள்ல புகை பிடிச்சா அபராதம்ன்னும் ஒரு சட்டம் வந்துச்சு. ஆனாலும் ஓரளவுக்கு குறைக்க முடிஞ்சுதே தவிர முழுசும் இதை தடுக்க முடியலை. சிகரெட்டால புற்று நோய் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாக்கூட மக்கள் சட்டை செய்யறதா இல்லை. இதுக்கு மேல ஒரு அரசாங்கம் மக்களை எப்படித்தான் எச்சரிக்கை செஞ்சு பாதுகாக்க முடியுமாம்.. யக்கா நீ சொல்லேன்!! அண்ணாத்தை நீங்க சொல்லுங்களேன் :-)
நடமாடும் புகை போக்கிகள் அதான் சிகரெட் பிடிக்கிறவர்கள் தங்களோட வீட்ல தனியிடத்துலயோ, இல்லைன்னா, மறைவா எங்கியாவதோ பிடிச்சா மத்தவங்களுக்குப் பிரச்சினையில்லை. அட்லீஸ்ட் வாங்குன கையோட கடை மறைவுல நின்னு கதையை முடிச்சுட்டுக் கிளம்புனாக்கூட தொந்தரவில்லை. ஆனா, இரு சக்கரத்துலயோ நாலு சக்கரத்துலயோ போற போக்குலயும், நடந்து போகறச்சயும் புகையை மத்தவங்களுக்கும் சப்ளை செய்யறவங்களை என்னன்னு சொல்றது. சிலருக்கு அந்த வாசனை விருப்பமானதா இருக்கலாம். ஆனா, ரோட்டுல குழந்தைகளும் நடமாடுது, அவங்களுக்கு இந்தப் புகை அலர்ஜியாக் கூட இருக்கலாம்ங்கறதையும் இவங்க யோசிக்கிறது நல்லது.
புகை பிடிக்கிறவங்களை விட அதைச் சுவாசிக்கிறவங்களுக்குப் பாதிப்பு கூடுதல்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சமீபத்தில் பையருக்கு உடம்பு சரியில்லாம மருந்து வாங்கப் போயிருந்தப்ப, கடையில் ஒரு குடும்பம் நின்னுட்டிருந்தது.கடைப்பையரும் அவங்க குடும்பமும் நண்பர்கள் அதனால மனசு விட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. கசமுசன்னு கடைப்பையன் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சதும் காதை அந்தப் பக்கம் அனுப்புனேன். ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிருக்கும் அவங்களோட மூத்த பையருக்கு கான்சராம். கல்யாணம் நிச்சயமாகி ஒரு மாசமே ஆகியிருந்த நிலையில் ரொம்ப சீரியஸான கட்டத்துல அட்மிட் ஆகியிருக்கார். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத அவருக்கு, செயின் ஸ்மோக்கரான அவங்கப்பா மூலமா கான்சர் பரவியிருக்குது. பாதிக்கப்பட்ட பையருக்கு வயசு இருபத்தஞ்சைக் கூட தாண்டலைங்கறதுதான் கொடுமை.
சிகரெட்டை முடிச்சுட்டுக் கனிஞ்சுட்டிருக்கற துண்டை, அப்படியே வீசிட்டுப் போறவங்களையும் சொல்லணும். நம்ம நாட்ல கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் செருப்பில்லாம வெறுங்காலோட நடக்குற நிலைமையில் இன்னும் கூட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இங்கேயும் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வெறுங்காலோட சிக்னல்கள்ல அங்கியும் இங்கியும் ஓடறதைப் பார்த்திருக்கேன். ஏதாவதொரு ஆட்டோ, அல்லது காரிலிருந்து விழும் கனல்துண்டு அதுங்க பாதத்தைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கே.
திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்மூரு வாத்தியார் பாடி வெச்சது இங்கேயிருக்கும் Cancer Patients Aid Association- (சுருக்கமா)CPAA-க்கு எப்படித்தான் தெரிஞ்சதோ.. திருடங்களைத் திருத்தணும்ன்னா அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும்ன்னு துணிஞ்சு இறங்கிட்டாங்க. மொதல்ல குறிப்பிட்ட சிகரெட் லைட்டர்தான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இது மின்சாரத்துல இயங்கறதால ஷாக் ட்ரீட்மெண்டுன்னும் இங்க்லீஷ்ல சொல்லிக்கலாம்.
மும்பையில் பான் கடைகள் ரொம்பவே பிரபலம். பான் வகைகளும், குட்கா போன்ற வஸ்துகளோட சிகரெட்டும் இருக்கும். இதான் சரியான களம்ன்னு களமிறங்கிய CPAA மும்பையில் மட்டும் மொத்தம் 25 இடங்கள்ல இந்த லைட்டர்களை கடைக்காரங்களோட அனுமதியோட வெச்சிருக்கு. நிறையப்பேர் இதை வெச்சுக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்கதான். சரிதானே?.. தன்னோட காலைத் தானே கோடரியால வெட்டிக்க யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?. இதை வெச்சுக்க அனுமதிச்சா எங்க பொழைப்பு என்னாகறதுன்னு கேக்கறாங்க. உங்க பொழைப்புக்காக மத்தவங்க வாழ்க்கையில் விளையாடறது ஞாயமான்னு கேக்குற CPAA இந்தத்திட்டத்தை கட்டாயமாக்க வேணப்பட்ட சட்ட பூர்வமான முயற்சிகளையும் எடுத்துட்டு வருதுன்னு இதோட இயக்குனர் தெரிவிச்சுருக்கார். கான்சருக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் கிட்ட பரப்பும் முறைகளில் இந்தத் திட்டமும் ஒன்னு..
யூடியூப்ல ச்சும்மா வலை மேய்ஞ்சுட்டிருந்தப்ப கிடைச்ச புதையல் இது. மேற்கொண்டு தகவல் தேடுனப்ப இவங்களுக்குன்னு தளமும் இருக்கறதைக் கண்டு பிடிச்சேன். சேவைகள், கான்சருக்கான சிகிச்சை முறைகள்ன்னு ஒரு தகவல் சுரங்கமே இருக்குது அங்கே. லைட்டரோட ஸ்விட்சை அமுக்கினதும் எப்படி ஷாக் அடிச்சு, ஓரோருத்தரும் ஜெர்க்காகுறாங்கங்கறதை நீங்களே வீடியோவில பாருங்க ..
ஒரு சிலர் மட்டும் இந்த உச்சாடனத்தை தனக்கான எச்சரிக்கை ஒலிக்கிறதா எடுத்துக்கிட்டு , "இந்த சிகரெட் பழக்கம் இனிமேலும் அவசியமா"ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மெஷினைக் கண்டு பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னும் சில துணிஞ்ச மனசுள்ளவங்க அந்த லைட்டரைத் தைரியமா உபயோகப் படுத்தறாங்களாம். வழக்கமா அரசாங்கம், ஜோரா ஆரம்பிச்சு ஆரம்ப ஜோர்ல கொண்டாடப்பட்டு, கடைசியில காயலாங்கடைக்குப் போற நல்ல திட்டங்கள் மாதிரி இல்லாம, பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..
இப்போ தீர்ப்பு மக்கள் கையில்....