பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.
சாரல் துளிகளை ஆரம்பத்தில் சும்மா விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தேன். அதன்பின் நாளாக நாளாக கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களைப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இது ஆகிவிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்ததும் உற்சாகமாக எழுத ஆரம்பித்தேன். ஃபேஸ்புக்கில் எழுதும் துளிகளில் சிலவற்றைக் 'குங்குமம் தோழியின் தினமொழிகள்' வெளியீட்டிலும் காணும் பேறு கிடைத்தது. நமக்கான அங்கீகாரத்தை விடவும் மகிழ்ச்சியான விஷயம் இருக்கிறதா என்ன :-)
கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக்கில் பகிர்பவற்றை குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்(சுமார் 10 துளிகள்) சேர்ந்ததும் இங்கே ப்ளாகிலும் பகிர்ந்து வருகிறேன். பின்னாளில் என்றைக்காகவது புத்தகமாக வருமா? என்றும் சில நல்ல உள்ளங்கள் கேட்பதுண்டு. காலம்தான் அதற்குப்பதில் சொல்ல வேண்டும்.
'சாரல் துளிகள்' மொத்தமும் எப்பொழுது புத்தகமாக வருமென்று நானறியேன், ஆனால் இந்தத்தொகுப்பிலிருந்து ஒரு துளியான,
"வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்."
என்ற துளி, அச்சுப்புத்தகத்தில், அதாவது இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது.
குங்குமம் இதழுக்கு மிக்க நன்றிகள்.
