Sunday, 26 July 2026

காவூ - ராமசந்திரன் உஷா (புத்தக மதிப்புரை)


நூல்: காவூ
ஆசிரியர்: ராமசந்திரன் உஷா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்

ராமசந்திரன் உஷா எழுதிய ‘காவூ’ நாவல், தேநீர் பதிப்பகம் – சித்தாவரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இது கடந்த நூற்றாண்டின் இந்திய வரலாற்றையும், ஒரு எளிய பெண்ணின் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பிணைத்து எழுதப்பட்ட ஓர் அழுத்தமான சமூகப் புனைவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் விரிந்து, நெருக்கடி நிலை காலம் வரை நீளும் இந்நாவல், சமூக யதார்த்தத்தையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக நுட்பமாகப் பேசும் ஒரு முக்கியப் படைப்புமாகும். 1933 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில், ஒரு மாத்வக் குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்நாவல், காவேரி எனும் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது.

நாவலின் ஆகப்பெரிய பலமே இதன் நாயகியான 'காவூ' என அழைக்கப்படும் காவேரி என்ற எளிய பெண்தான். ஒரு சாதாரணப் பெண், நாட்டின் மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கும் சமூகக் கொந்தளிப்புகளுக்கும் இடையே தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கிறாள் என்பதை நூலாசிரியர் நெகிழ்ச்சியாகச் சித்தரித்துள்ளார். காவேரியின் வாழ்க்கை ஒரு தியாகமாகவோ அல்லது அபலைக் கோலமாகவோ சித்தரிக்கப்படாமல், அவள் தன் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் மையமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் போராடினாலும் இறுதியில் அவள் வாழ்வில் மிஞ்சியது என எதுவுமில்லை, தனது ஒரு குழந்தையையாவது நன்றாக வாழ வைத்துவிட்ட திருப்தியைத்தவிர.

நாவலின் தொடக்கத்தில், பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்க்கும் அறியாமை நிறைந்த, மழலை மாறாத ஒரு சிறுமியாக காவூ நமக்கு அறிமுகமாகிறாள். ஆண்-பெண் உறவு பற்றியோ அல்லது திருமண வாழ்வு பற்றியோ எவ்விதப் புரிதலும் இல்லாத வயதிலேயே அவளுக்குக் குழந்தை மணம் செய்விக்கப்படுகிறது. வயதுக்கு வராத காரணத்தால் பிறந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் அவளது தொடக்கக் கால வாழ்க்கை, அந்த காலகட்டத்து எளிய மற்றும் படிப்பறிவில்லாத சராசரி இந்தியப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவே அமைகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். கணவன் சரியானவனாக அமையாத காரணத்தால் உடலாலும், மனதாலும் புண்பட்டு, பிள்ளைகளின் வாழ்வும் சரியாக அமையாமல் அவர்களில் இருவரைப் பறிகொடுத்து என அவள் படும் துயரங்கள் அநேகம். எவ்விதப்பொருத்தமும் இல்லாமல் நடந்த அவளது திருமணத்தால் துன்பங்களையே அனுபவித்த அவளுக்கு ஒரே ஆறுதல் அன்பும் அனுசரணையுமாய் அமைந்த மாமியார் மட்டுமே. 

அடக்குமுறைகள் நிறைந்த அன்றைய வாழ்வியலிலிருந்து, விரும்பியதைச்செய்யும் இன்றைய வாழ்வியலை அடைவதற்குப் பெண்கள் கடந்து வந்திருக்கும் தூரமும், அவர்கள் அனுபவித்திருக்கும் வலியும் மிகப்பெரியது. அந்த தூரத்தைக்கடக்க பெருமுயற்சி எடுத்த பெண்கள் பலர். அவர்களுக்கு வழிகாட்டிய ஆண்களும் பலர். அவர்களின் பிரதிநிதியாகவே அம்மாளு, வாசு பாத்திரப்படைப்புகள் விளங்குகின்றனர். தங்கைக்குக் கடைசி வரை உறுதுணையாக வாசு இருப்பதும் அவளுக்குக் கல்வியின் அருமையை உணர்த்தி எழுதப்படிக்கத்தெரியாதவளாக இருந்தவளை, கடிதம் எழுதும் அளவுக்கு முன்னேற்றுவதும் சிறப்பு.  

இந்நாவலின் மற்றொரு தனித்துவமான சிறப்பு, புனைவோடு நிஜ வரலாற்று ஆளுமைகள் இயல்பாகக் கலந்து வருவதாகும். மகாத்மா காந்தி, இராஜாஜி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தோழர் மன்னார்குடி சீனிவாச ராவ் போன்ற அரசியல் மற்றும் சமூகப் போராட்டவாதிகளும்; காஞ்சி பெரியவர் போன்ற ஆன்மீக ஆளுமைகளும்; ராம்நாத் கோயங்கா, 'சோ' போன்ற பத்திரிகையாளர்களும்; ஜெமினி கணேசன், வகிதா ரஹ்மான், மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்ற திரையுலகப் பிரபலங்களும் கதையின் போக்கில் இயல்பாக வந்து செல்கின்றனர். இது வாசகருக்கு அந்தந்தக் காலக்கட்டத்திற்கே நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது.

வரலாற்றின் பின்னணியில் மனித உணர்வுகளையும், ஒரு பெண்ணின் அகப்பயணத்தையும் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு தீவிர வாசகரும் தவறவிடக் கூடாத ஒரு சிறந்த நாவல் இது. கால நதியில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் அதிலேயே நீந்தக் கற்றுக்கொள்ளும் ஒரு சாமானியப் பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டமே காவூவின் ஒட்டுமொத்த வடிவமாகும். 

டிஸ்கி: புத்தக மதிப்புரையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails