Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Tuesday, 11 February 2014

"நிழற்படக் கவிதைகள்".. நன்றி முனைவர் அண்ணாகண்ணன் :-)

இலக்கிய உலகில் திரு. அண்ணா கண்ணனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருப்பினும் பூக்கடைக்கு ஒரு அறிமுகம் :-))

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

இனி,
நிழற்படக் கவிதைகள் - முனைவர் அண்ணாகண்ணன்

கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது, கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.

மாநகரம், எத்தனையோ பழிகளையும் வசைகளையும் சுமந்துகொண்டு நிற்கிறது. இங்குள்ள நெருக்கடிகள், துரத்தல்கள், பற்றாக்குறைகள், சிக்கல்கள், ஏமாற்றங்கள்.... அனைத்தும் பல்வேறு கோணங்களில் பல்லோரால் பல்லாண்டுக் காலமாகப் பதிவாகி வருகின்றன. இந்தப் பதிவுகளின் விளைவுகள் என்ன என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். மாநகரச் சூழல் எவ்வளவு வறட்சிகரமாக இருப்பினும் இதனால், இங்கு வாழும் படைப்பாளர்களின் படைப்பூக்கமும் படைப்பாக்கமும் வறண்டுவிடவில்லை. இது, எதிர்மறைக்குள்ளும் ஒரு நேர்மறை அம்சம்.

மும்பை மாநகரில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், மாநகரின் அழுத்தங்களுக்கு இடையிலும் தன்னை ஒரு படைப்பாளியாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். இவர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம்... எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருகிறார். வல்லமை மின்னிதழின் ஃபிளிக்கர் படக் குழுமத்தையும் இவரே நிர்வகித்து வருகிறார். இவருடைய நிழற்படங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  அவை, தனித்துவம் வாய்ந்தவை. புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடுகள்... எனப் பலவும் இவரின் நிழற்படங்களில் மிளிருகின்றன.

நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் சூரியச் சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளை, கொத்துக் கொத்தாய்ப் பூத்த பறவைகளின் வாசத்தில் கிறுகிறுத்து நின்ற மாமரம், ஏகாந்த வெளியில் ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்கள், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பறவை.... எனப் பலவும் நேரடியாகக் காணும் உணர்வை நம்முள் ஏற்படுத்துகின்றன. தேய்பிறைப் புன்னகை என்ற சொல்லாடல், நேர்த்தியான காட்சிப் பதிவு.

குழந்தைகள், மன அழுத்தத்திலிருந்து நம்மைக் காத்து வருகிறார்கள். எவ்வளவு சிக்கல்கள் இருப்பினும் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, மனம் லேசாகிவிடுகிறது. குழந்தைகளைக் கருவாகக் கொண்ட இவரது கவிதைகளை நான் பெரிதும் ரசித்தேன். அறிதுயில் என்ற கவிதை, மிக அழகு. ரயிலோடும் வீதிகள், வாசனையாய் ஒரு வானவில், மழலை நிலா... உள்ளிட்ட பல கவிதைகளில் குழந்தைமையை இவர் கொண்டாடியிருக்கிறார்.

சிறைப்படும் 
ஒவ்வொரு தருணத்திலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்

என்ற வரிகளில்தான் எவ்வளவு உற்சாகம்!

கதைக் கவிதைகளும் இவருக்கு இயல்பாக வருகின்றன. தாத்தா இறந்த பிறகு திண்ணைக்கு இடம்பெயரும் பாட்டியும் பொறந்த வீட்டுச் சொத்தில் பங்கு கேட்டு மனைவியை விரட்டுகையில் நிகழும் திருப்பமும் நிகழ்காலச் சிக்கல்களின் சூடான பதிவுகள். 

வென்றுவிட்டதாய்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்

என அவர் குறிப்பிடுவது, வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடங்களில் ஒன்றாகும்.

இந்தக் கவிதைத் தொகுப்பு, கலவையான உணர்வுகளுடன், கதம்பமாக மணம் வீசுகிறது. சாந்தி மாரியப்பன், ஏதோ பெயருக்கும் எண்ணிக்கைக்கும் எழுதாமல், உள் உணர்வுக்கும் சமூகப் பயனுக்குமாக எழுதி வருகிறார். எதிர்காலத்தில் இவரது மொழி,  இன்னும் கூர்மை பெறும். இவரால் இன்னும் சிறப்பான படைப்புகளை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது கவிதைப் பயணம் சிறப்புடன் தொடர, எனது நல்வாழ்த்துகள். இவரது வல்லமையால் இந்த மாநிலம் பயனுறட்டும்.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிக் கௌரவித்த முனைவர் அண்ணா கண்ணனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்..

கவிதைத்தொகுப்பைத் தபாலில் வாங்க..

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110

aganazhigai@gmail.com

Tuesday, 28 January 2014

"சிறகு விரிந்தது" புத்தக வெளியீட்டு விழா..

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். கூடவே ராமலக்ஷ்மியின் “இலைகள் பழுக்காத உலகம்” புத்தகத்திற்கான வெளியீடும் நடந்தது.

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில், பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா..
முகநூலில் தினமும் வெளியாகும் புத்தக வெளியீட்டு விழா பகிர்வுகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம், சென்னையில் வசிக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கமாகவும் இருந்தது. போகட்டும்.. பிழைத்துக்கிடந்தால் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் :-)

தன்னுடைய படைப்புகளைப் புத்தகமாகப் பார்ப்பதென்பது, அதுவும் முதல் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில்.. அதை விடப் பேரின்பம் ஒரு எழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களினிடையே என்னுடைய புத்தகமும் தென்பட்டதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத உணர்வு என்னை ஆட்டிப்படைத்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் புத்தகங்களைப் பதிப்பித்துப் புத்தகத்திருவிழாவிற்குக் கொண்டு வந்ததோடு, என்னைப்போல் தூரதேசத்தில் இருப்பவர்களுக்காக புத்தக வெளியீட்டையும் நடத்திக்கொடுத்த பொன் வாசுதேவனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

என்னுடைய கவிதைத்தொகுப்பும் இங்கே கிடைக்க ஆரம்பித்து விட்டது. 

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))

Friday, 3 January 2014

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். 
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன். 
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

Thursday, 19 September 2013

பூந்தோட்டம்.. (19-09-2013 அன்று பூத்தவை)

மணிச்சிகை: கோலாகலமாய் அம்ச்சி மும்பைக்கு வந்த கணபதி அதே கோலாகலத்தோடு திரும்பிப் போயிருக்கிறார். குழுவினர் தங்கள் முழு பலத்தையும் காட்டி வாசித்த பாண்டு வாத்திய இசையைக் கேட்டவண்ணம் வந்தபோதே அடுத்து வரும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவருக்கான ஆசனத்தில் அமர்த்தி, மாலை மரியாதை செய்து, மோதகம் நிவேதனம் செய்து, காதுக்கினிமையாக ஆரத்திப் பாடல்களைப்பாடி அவரை மகிழ்வித்தனர். உபசாரங்களில் மகிழ்ந்து சற்றே ரிலாக்ஸாக இருந்த பொழுதில் திடீரென்று ஹைபிட்சில் ஒலித்த 'லுங்கி டான்ஸ்' பாட்டால் தூக்கி வாரிப் போட்டதன் காரணமாக கையில் வைத்திருந்த மோதகம் தெறித்து எங்கோ விழுந்து விட்டதாகக் கேள்வி. போன வருஷப் பிள்ளையார்கள் 'ஷீலா கி ஜவானி, சிக்னி சமேலி' போன்ற காலத்தால் அழியாக் காவியங்களைக் கேட்டு இன்புற்றதை இந்த வருஷப் பிள்ளையார்கள் அறியவில்லை.. பாவம்.

தினமும் ஆரத்தி முடிந்ததும் அடுத்து அனுபவிக்கப்போகும் இ(ம்)சையை எதிர்நோக்கி காதுகளை இறுக மூடிக்கொண்டதால் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குக் கூட சரியாக காதுகொடுக்க முடியவில்லையாம். "போனால் போகட்டும் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். வந்து நிம்மதியாக உட்கார்ந்து கொண்டார். ரெண்டு வகை மோதகங்கள், போளி எல்லாம் சாப்பிட்டு விட்டு, "அம்மாடி,.. இங்கே ஒண்ணரை நாள் நிம்மதியா இருந்தேன். அடுத்த வருஷமும் வாரேன்" என்றுவிட்டுப் போயிருக்கிறார்.
எங்க வீட்டுப்பிள்ளை..
"பாட்டா பாடுறீங்க?.. உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கறுவியர், மும்பையின் ஒரு மண்டலில் ட்ரெஸ் கோட் கொண்டு வந்துவிட்டார். தேசிய உடையான பெர்முடாஸில் வந்தவர்களை அலேக்காகக் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் பந்தலுக்கு வெளியே விடும்படி அமைப்பாளர்களின் மனதில் புகுந்து கொண்டு இவர் செய்த திருவிளையாடலை என்னவென்பது!!! "இருங்க,.. இன்னும் பதினஞ்சு நாளில் எங்கம்மா வருவாங்க. அவங்க கிட்ட உங்க விளையாட்டைக் காட்டினா தெரியும் சேதி" என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார். "ஹைய்யோ.. ஹைய்யோ.. புரியாத விளையாட்டுப் பிள்ளையா(ரா) இருக்கியே. அந்தம்மா வந்தாங்கன்னா பத்து நாளும் எங்களோட சேர்ந்து கும்மியடிப்பாங்க தெரியுமோ" என்று மக்கள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

உந்தூழ்(மூங்கில் பூ): புகைப்படப்பிரியனில் நான் எடுத்த இந்தப்படம் முத்துக்கள் பத்தில் ஒரு முத்தாக வெற்றி பெற்றது. தீர்ப்பு சொன்ன நாட்டாமைக்கு நன்றி :-)

எறுழம்பூ: வீட்டுக்கு வெளியே போனாலே சுவாரஸ்யமான அனுபவங்களுக்குக் குறைவிருக்காது. ஒரு சமயம் வண்டியை ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே பார்க்கிங்கில் சுவரையொட்டி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தால் பின்னால், பக்கவாட்டுகளில் என்று சகட்டு மேனிக்கு வண்டிகளை நிறுத்தியிருந்தார்கள். எந்த வகையிலும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தோம்.. ஹார்ன் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று முயற்சிக்கலாமென்றால் அதற்கும் பலனிருக்காது. அந்தச்சாலையில் ஓடும் எக்கச்சக்க வண்டிகளில் ஏதாவதொரு வண்டியின் ஹார்ன் என்று நினைக்கப்பட வாய்ப்பிருக்கிறதே. கடைசியில், வண்டியின் ஹெட்லைட்டுகள் மற்றும் பிற லைட்டுகளைப் போட்டு விடச்சொல்லி ரங்க்ஸிடம் சொன்னேன். லைட்டுகளைப் போட்டு விடுவதால் பாட்டரி டவுன் ஆகிவிடுமே என்று ரங்க்ஸுக்குத் தயக்கம். பயந்தால், தயங்கினால் காரியம் ஆகுமா என்ன?. "சும்மா வெறும் ரெண்டு செகண்டுக்குப் போட்டு விடுங்க. லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியறதைப் பார்த்தால் யாராவது வருவாங்க" என்று சொல்லிக்கொண்டே....... இருந்தேன். அது படியே ஆகிற்று :-). என் நச்சரிப்புத் தாங்காமல் விளக்குகளை எரிய விட்டார்.

முதல் தளத்திலிருந்த ஒரு கடைப்பையர் பார்க்கிங்கிலிருக்கும் வண்டியின் விளக்குகள் எரிவதைப் பார்த்து விட்டு உதவிக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், "அந்த வண்டியின் ஓனரின் ஆபீஸ் இங்கேதான் இருக்கு. விஷயத்தை அவரிடம் சொல்றேன்" என்று கூறிவிட்டு ஓனரை அழைத்து வந்தார். 'ஸாரி' கேட்டு விட்டு அந்த வண்டி நகர்ந்து வழியேற்படுத்திக் கொடுத்ததும், நாங்கள் கிளம்பினோம். "சொன்னாக் கேக்கணும்ன்னு இதுக்குத்தான் சொல்றது" என்று சொன்னபடியே அவரைப் பார்த்தேன். என்றுமில்லா முனைப்போடு சாலையைக் கவனித்துக் கூர்ந்து பார்த்தபடி கியரை மாற்றினார் அவர் :-))))))))

சுள்ளி(மராமரப்பூ): சாரல் துளிகளில் ஒரு துளியை "குங்குமம் தோழி" ஃபேஸ்புக்கின் முக வரி பகுதியில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தோழி.
கூவிரம் பூ: எல்லைப்பிரச்சினையென்பது அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவியிருப்பது என்னவோ உண்மைதான். என்றாலும் மின்சார ரயில்களிலும் அவை அதிகமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன போலும். எதையாவது விற்றுக்கொண்டு வருபவர்கள் அதைத் தீவிரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைச் சமீபத்திய ஒரு பயணத்தில் காண நேர்ந்தது. பத்து ரூபாய்க்குப் பதினைந்து எலுமிச்சம் பழங்கள் விற்கும் இரண்டு பசங்கள் ஒரே சமயத்தில் ரயிலில் ஏறி விட்டார்கள். அப்புறமென்ன வாய்த்தகராறுதான் இருவருக்கும். "இது என் ஏரியான்னு தெரியுமில்லே.. அப்புறம் ஏன் வண்டியில் ஏறினே?.." என்று கேட்டான் முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?" என்று கேட்டு விட்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான் இரண்டாமவன். முதலாமவன் திகைத்து நின்று விடவில்லை. "தஸ் கா லிம்பு லே லோ..(பத்து ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கிக்கோங்க)" என்று இரண்டாமவன் சவுண்ட் விடும்போதெல்லாம் "அச்சா,.. படாவாலா இதர் ஹை (பெரிய நல்ல பழங்களெல்லாம் இங்கே கிடைக்கும்)" என்று தன் கையிலிருந்த பழப்பொதிகளைக் காண்பித்துக்கொண்டிருந்தான். உண்மைக்குமே அவன் வைத்திருந்த பழங்கள் நல்ல தரமானவையாக இருந்தமையால் சட்சட்டென விற்றுத்தீர்ந்து கொண்டிருந்தன. முகம் சிறுத்துப்போன இரண்டாமவன் எந்த ஸ்டேஷனில் இறங்கி வெளியேறினான் என்று தெரியவில்லை :-)))

Saturday, 17 August 2013

"என்னவோ போடா மாதவா.."

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் வாழ்வையும் ஈந்த எத்தனையோ தியாக உள்ளங்களைப்பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களையும் நம் வருங்காலத்தலைமுறையினருக்கு நம்மில் ஒருசிலரேனும் எடுத்துரைத்துக்கொண்டுதானிருக்கிறோம். என்றாலும் பிற பண்டிகைகளையும் காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு தினங்களையும் கொண்டாடும் அளவுக்கு நாம் குடியரசுதினத்தையும், சுதந்திரதினத்தையும் கொண்டாடுகிறோமா என்றால் வேதனைக்குரிய பதில்தான்  கிடைக்கிறது. அதிலும், "குடியரசுதினம் கொண்டாடப்படுமளவுக்குச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?.. இங்கே மட்டுந்தான் இப்படியா? அல்லது தேசம் முழுக்கவே இப்படியான மனோநிலைதான் நிலவுகிறதா!" என்பதில் எனக்கு என்றுமே சந்தேகமுண்டு..
மற்ற இடங்களில் எப்படியோ.. மும்பையில் குடியரசுதினம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. குடியிருப்புகளும் அரசாங்க அலுவலகங்களும், வீதிகளும் அன்று அட்டகாசமாக தேசியக்கொடியின் தோரணங்களாலும், வண்ணக்காகிதங்கள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையில் கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தேறும். அதன்பின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகளும் நடத்திப் பரிசளிக்கப்படும். அன்று நல்ல நேரத்தில் சத்ய நாராயணா பூஜை செய்யப்பட்டு தேச, மற்றும் மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடக்கும். மாலையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ‘ஹல்திகுங்கும்’ நிகழ்ச்சியுமுண்டு. குடியிருப்பில் அன்று லஞ்சோ அல்லது டின்னரோ கட்டாயமுண்டு.


இத்தனை அமர்க்களங்களும் வேண்டாம்.. அதில் ஒன்றிரண்டையாவது சுதந்திரதினத்தன்று கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அலுவலகங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில குடியிருப்புகளையும் தவிர மற்ற இடங்களில் கொடி கூட ஏற்றுவதில்லை. இப்படியிருக்கும் சுதந்திரத்தையும் அந்தச்சுதந்திர தினம்தானே நமக்கு வழங்கியிருக்கிறது. 

சென்ற சுதந்திர தினத்தன்று, வழக்கம்போல் புகைப்பட வேட்டைக்காகப் புறப்பட்டேன்.(வண்டிக்கருகில் வந்த விற்பனையாளர்களைத்தவிர சாலைக்காட்சிகளெல்லாம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குற்றம் குறை பொறுத்தருள்க). ஒன்றிரண்டு இடங்களிலாவது பொதுஇடங்களில் கொடியேற்றும் வைபவம் நடக்கும்.. பார்க்கலாம், காமிராவிலும் பிடிக்கலாம் என்று ஆசையோடு கிளம்பிய எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வழியில் தென்பட்ட ஒன்றிரண்டு மாண்டிசோரி நர்சரிப்பள்ளிகளில் மட்டும், மூவர்ணப்பலூன்களும் கொடிகளுமாக அலங்காரங்களும் தேசபக்திப்பாடல்களுமாகக் குழந்தைகள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏதோ.. குழந்தைகளாவது கொண்டாடுகிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதைத்தவிர தெருவில் சுதந்திரதினம் என்பதற்கான எந்த அடையாளமுமில்லை. அரசு அலுவலகங்களிலும்கூட பிரத்தியேகமான அலங்காரங்கள் எதுவும் தென்படவில்லை. போனால் போகிறதென்று கொடி மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. 



தொல்லைக்காட்சியின் முன் மக்கள் முடங்கி விட்டதால், அதிகம் ஆளரவமற்ற கடைத்தெருவிலும் சாலைகளின் சிக்னல்களிலும் கொடிகளை விற்றுக்கொண்டிருந்தவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்தியமாக இதுவும் இன்னொரு நாளாகத்தான் தெரிந்தது. வீட்டுக்குத்திரும்பும்போது வாங்கி வந்த காகிதக்கொடிகளில் ஒன்றைக் குடியிருப்பின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளியின் மேசையில் குத்தி வைத்து விட்டு வந்தேன். இப்படியாக, ‘எங்க குடியிருப்பிலும் கொடியேத்தியாச்..”

Wednesday, 14 August 2013

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்"

பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-)

நகர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்களுக்காக..




'இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

Monday, 29 July 2013

மழைப்பேச்சு கேட்க வாங்க..

எதிரே வரும் வாகனத்திற்காக ஒதுங்குவதை விட, அது தெறிக்க வைத்துச்செல்லும் மழைத்தண்ணீரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கும் மனிதர்களே அதிகம்.. ஸ்ஸ்ஸப்பா.. 

வருணரிடம் ஒப்படைத்துச்சென்ற மும்பை கரைந்திருக்கிறதா? அல்லது அப்படியே இருக்கிறதா? என்பதைப் பார்ப்பதற்காக ஒரு நாள் விசிட் வந்திருக்கிறார் சூரியர். காலையிலிருந்து வெய்யிலடிக்கிறது.

மழைக்காலத்தில் தண்ணீரைத்தான் வெந்நீராய்த்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள், 'தேவையில்லை அப்படியே அருந்துங்கள்' என்கிறார்கள் மினரல் வாட்டர் கம்பெனியினர்.. ஒரே கொயப்பமப்பா.
நாலு சக்கர வாகனத்தில் செல்லும்போது தேரில் அசைந்தாடிச்செல்லும் உணர்வையும், இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஒட்டகத்தில் பயணிக்கும் உணர்வையும் தருகின்றன மழை நீர் நிரம்பிய குண்டுகுழிகள். ஸ்ஸ்ஸப்பா..

மழைக்கோட்டின் தொப்பியிலிருந்து வழியும் தண்ணீரை உள்ளங்கையில் பிடித்துத் தெறித்து, குடைக்குள் தலை நனையாமல் வரும் அம்மாவின் முகத்தை நனைக்கிறது குறும்புக்குழந்தையொன்று.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர் குடை பிடிப்பதால் இருவருமே நனையாமல் செல்லலாம் என்பதைக் கண்டு கொண்டதால், மும்பையில் மழைக்கோட்டுகள் வியாபாரம் டல்லடிக்கும் அபாயம் இருக்கிறதென்று பட்சி சொல்கிறது.
மழைக்கு இதமாக எத்தனையிருந்தாலும் அத்தனையிலும் விஞ்சி நிற்பது இஞ்சி,ஏலக்காய் போட்ட தேநீர்தான், என்பதைக் கண்டறிந்தவன் மிகவும் ரசனைக்காரனாக இருந்திருக்க வேண்டும்.

ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப்பெண்கள் பழைய, தாத்தா காலத்து வாக்கிங் ஸ்டிக் குடைகளுக்கு மாறி வருகிறார்கள். புதியன கழிதலும் பழையன புகுதலுமாய் உருளுகிறது ஃபேஷன் சக்கரம்.

நடந்து போவதற்குப் பதிலாக நாட்டியமாடியபடிச் செல்கிறார்கள்.. மழைநீர் தேங்கிய பள்ளங்களில் பதிக்கப்பட்டிருக்கும் சிறு கற்களின் மேல்..

தேங்கிய மழைநீரில் ஆட்டம் போடுகிறார்கள் சிறியவர்கள்,.. வீட்டினுள் வந்த நீரை ப்ளாஸ்டிக் முறமெடுத்து விரட்டுகிறார்கள் பெரியவர்கள்.. சம்பவம் நடந்தது, நடந்து கொண்டிருப்பது நடக்கப்போவது மும்பையில்..
நான்கடிக்கு ஒருமுறை முளைத்து உதிரும் நீர்ச்சிறகுகளை விரித்துப் பறந்து வருகின்றன வாகனப்பறவைகள்.

அலுவலகமோ கல்விச்சாலையோ விட்டு வெளியே வரும்போது நனையவா, குடைபிடிக்கவா என்று மனதில் நடக்கும் பட்டிமன்றத்திற்கு தலையில் நீர் தெளித்துத் தீர்ப்பளிக்கிறது மழை.

வரிசையில் செல்லும் எறும்புகளைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களினூடே குறும்புக்கார எறும்பாய், கிடைக்கும் இடைவெளிகளில் நுழைந்து செல்கிறது இருசக்கர வாகனமொன்று.

டிஸ்கி: மழைக்கால அவதானிப்புகள்.

Thursday, 25 July 2013

குங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி.

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.

சாரல் துளிகளை ஆரம்பத்தில் சும்மா விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தேன். அதன்பின் நாளாக நாளாக கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களைப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இது ஆகிவிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்ததும் உற்சாகமாக எழுத ஆரம்பித்தேன். ஃபேஸ்புக்கில் எழுதும் துளிகளில் சிலவற்றைக் 'குங்குமம் தோழியின் தினமொழிகள்' வெளியீட்டிலும் காணும் பேறு கிடைத்தது. நமக்கான அங்கீகாரத்தை விடவும் மகிழ்ச்சியான விஷயம் இருக்கிறதா என்ன :-)

கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக்கில் பகிர்பவற்றை குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்(சுமார் 10 துளிகள்) சேர்ந்ததும் இங்கே ப்ளாகிலும் பகிர்ந்து வருகிறேன். பின்னாளில் என்றைக்காகவது புத்தகமாக வருமா? என்றும் சில நல்ல உள்ளங்கள் கேட்பதுண்டு. காலம்தான் அதற்குப்பதில் சொல்ல வேண்டும்.

'சாரல் துளிகள்' மொத்தமும் எப்பொழுது புத்தகமாக வருமென்று நானறியேன், ஆனால் இந்தத்தொகுப்பிலிருந்து ஒரு துளியான, 

"வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்."

என்ற துளி, அச்சுப்புத்தகத்தில், அதாவது இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது. 

குங்குமம் இதழுக்கு மிக்க நன்றிகள்.

Monday, 22 July 2013

விருந்தோ விருந்து..

பார்க்க நன்றாக இருப்பதெல்லாம் சாப்பிடவும் நன்றாக இருக்குமென்று சொல்வார்கள். நன்றாக இருக்கிறதோ இல்லையோ,.. இருப்பது மாதிரியான தோற்றத்தைக் கண்டிப்பாக உண்டு பண்ணலாம். சுமாராக, கொஞ்சம் இனிப்புக்குறைவாக இருக்கும் பாயசத்தைக்கூட நாலைந்து வறுத்த முந்திரிப்பருப்புகள், திராட்சைப்பழங்களைக் கொண்டு அலங்கரித்து வைத்தால் பாயசம் வேண்டாமென்று சொல்பவர்கள் கூட அரைக்கிண்ணமாவது சாப்பிட்டு விடுவார்கள். காய்கறிகள் வேண்டாமென்று சொல்லும் குழந்தைகளை, இட்லியில் இருக்கும் பட்டாணிக்கண்களும், கேரட் மூக்கும், தக்காளி உதடுகளும் கவர்ந்திழுத்து விடும். சாப்பாட்டை அழகாக அலங்கரித்து வைக்கும் முறையில் இப்படி எதையாவது செய்து வயிற்றுக்குள்ளே தள்ளி விடுவது அம்மாக்களுக்கு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்களுக்கும் கை வந்த கலை.

ஆரம்பம் ஆப்பிளுடன்..
பொதுவாக சில உணவங்கங்களுக்குள்ளே நாலா பக்கமும், ஸ்னாக்ஸ், இட்லி வடை, பூரி போன்ற சாப்பாட்டு வகைகள், ஜூஸ் வகைகள் போன்ற உணவு வகைகளின் படங்களை அசத்தலான ஒளியமைப்புடன் மாட்டியிருப்பார்கள். அதுவும் ஐஸ்க்ரீம், ஃபலூடா, வட இந்திய இனிப்பு வகைகளுக்குக் கூடுதல் கவனமெடுத்து செய்திருப்பார்கள். இவற்றைப் பார்க்கும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் இது கண்டிப்பாகக் கவர்ந்திழுக்கும். இந்த வகை ஒளிப்படக்கலையை ஃபுட் ஃபோட்டோகிராபி என்று அழைப்பார்கள். ஒரு சில நுட்பங்களைப் பின்பற்றினாலே போதும்,.. "அட!!.. அந்த அயிட்டமா இது!" என்று பார்ப்பவர்கள் நாவில் எச்சில் ஊறச்செய்யும் அழகழகான படங்களை எடுத்துத்தள்ளலாம். ஒரு சில நுட்பங்களை இங்கேயும் தந்திருக்கிறார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், முயற்சித்தும் பயனடையுங்கள். என்னுடைய ஒரு சில முயற்சிகள் இங்கே உங்கள் பார்வைக்காக..

இவைகள் இல்லாத பால்யமா..

கேக்காமலேயே கிடைக்கும் கேக்..


த்த்த்த்த்த்த்தேன் மிட்டாய்..

கூட்டணியில் செஷ்வானும் மக்ரோனியும்..

கடாயில் இருப்பதால் இது கடாய் மஷ்ரூம்..

நான்கட்டாய்..(பிஸ்கட் வகை)


ப்ப்ப்ப்ப்ப்ப்பா.. பாஸ்தா.

மகள் செய்த Rabdi..

ஜலீலாக்காவிடம் பரிசு பெற்றுத்தந்த 'சூரா'..

ஆஹா.. வட போகலை. இங்கேயிருக்கு :-)

பார்த்த கண்கள் இதையும் ரசிக்குமே..

கண்களால் சாப்பிட்டாலும் ஜீரணமாக உதவும் பெருஞ்சீரகம் :-)

LinkWithin

Related Posts with Thumbnails