Sunday, 8 March 2026

வலை ஜிமிக்கி - பண்புடன் மின்னிதழில் வெளியானது.


அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது அவளுடைய தலையாட்டலுக்கேற்ப மெலிதாக அசைந்து கன்னங்களின் ஓரத்தை உரசிச்செல்வது தனி அழகு. வலை ஜிமிக்கி வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டுக்கேட்டதற்காக பிரத்தியேகமாக அவளது பாட்டியே அதை வடிவமைத்து நகைக்கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொடுத்திருந்தாள். அம்மாதிரி நுணுக்கத்தை இப்போது வரும் மெஷின் கட் நகைகளில் பார்க்கவே முடியாது.

அந்த ஆண்டு குலதெய்வக்கோவிலின் பொங்கல் திருவிழாவிற்காகத் தன் அப்பாவுடன் சொந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தாள் சுவாதி. ஊரே கோலாகலமாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் பெரியப்பா வீட்டில் கூடியிருந்தார்கள். சுவாதியின் நெருங்கிய உறவினரான பெரியம்மா கஸ்தூரி, சுவாதியை உச்சி முகர்ந்து வரவேற்றார்.

அன்று மாலை திருவிழா முடிந்து அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கஸ்தூரி சுவாதியின் காதுகளைக் கவனித்தார். வலை ஜிமிக்கியோடு அதன் முத்துகளுக்குப் பொருத்தமாக முத்துகள் கோர்த்த மாட்டலையும் அணிந்திருந்தது வசீகரமான அழகைக் கொடுத்திருந்தது. "சுவாதி, இந்த ஜிமிக்கி எங்கே வாங்கினே? என்னமா ஒரு அழகா இருக்கு! இப்போலாம் இப்படி ஒரு கைவேலைப்பாட்டைப் பார்க்கவே முடியாது," என்று வியந்து சொன்னார்.

சுவாதி பெருமையாகச் சிரித்தாள். "ஆமா பெரியம்மா, இது எங்க பாட்டி எனக்குக் கொடுத்தது."

கஸ்தூரி "சரோஜாக்கும் வலை டிசைன்ல ஒரு ஜோடி ஜிமிக்கி செய்யணும்னு ஆசை. இந்த டிசைன் ரொம்ப அழகாயிருக்கு. ஒரு ரெண்டு நாளைக்குக் கழட்டிக்கொடுத்தீன்னா கடையில் மாடலுக்குக் காமிச்சுட்டுத் திருப்பித்தந்திருவேன்" என்றார். சரோஜா அவரது மகள். சமீபத்தில் திருமணமாகி முதல்முறையாக அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.

சுவாதிக்கு இதயம் ஒரு நொடி நின்றது போலிருந்தது. காதுகளிலிருந்து அந்த பாரத்தை இறக்கி வைப்பது, தன் உயிரையே கழற்றிக் கொடுப்பது போல அவளுக்குத் தோன்றியது. அதை அணிந்த நாளிலிருந்து இது வரை கழட்டியிராததால் "பெரியம்மா... இது..." என அவள் இழுத்தாள்.

அப்பா பக்கத்துல இருந்துகொண்டு, "மக்கா, பெரியம்மதானே கேக்கா? குடு... ஒரு ரெண்டு நாள்ல தந்துருவாள்லா? சொந்தக்காரங்ககிட்ட என்ன தயக்கம்?" என்றார். அப்பாவின் சொல்லுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சுவாதி, கைகள் நடுங்க அந்த ஜிமிக்கிகளைக் கழற்றிக் கொடுத்தாள். கழற்றிய பின் தன் காதுகள் வெறுமையாக இருப்பதை அவளால் சகிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலை, எதிர்பாராத விதமாக அப்பாவிற்கு ஒரு முக்கியமான அவசர அழைப்பு வரவே, குடும்பத்துடன் உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல். சுவாதி பதறிப்போனாள். 

"பெரியம்மா, அந்த ஜிமிக்கி..."

"அதற்குள் என்னம்மா அவசரம்? நகைக்கடைக்குப் போயிட்டு, அடுத்த வாரம் உன் தம்பி ஊருக்கு வரும்போது அவன்கிட்டக் கொடுத்து அனுப்புறேன். இல்லன்னா நானே நேர்ல வந்து தர்றேன்," என்றார் கஸ்தூரி உறுதியாக. சுவாதி கனத்த இதயத்துடன் ஊருக்குத் திரும்பினாள்.

வாரம் ஒன்று கடந்தது. சுவாதி தன் செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கஸ்தூரியிடமிருந்து அழைப்பு வரவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு அவளே அழைத்தாள்.

"சுவாதி, இப்போதான் கூப்பிடலாம்னு இருந்தேன்.  இன்னும் ரெண்டு நாள்ல கொண்டு வரேன்" என்றார் கஸ்தூரி. அடுத்த வாரம் அழைத்தபோது, "உங்க ஊருக்குத்தான் பொறப்பட்டுட்டு இருந்தேன், ஒங்க மாமா சொந்தத்துல ஒரு இறப்பு, இப்ப அங்கதான் இருக்கேன். ஊருக்கு வந்ததும் மொத வேலையா ஒங்க வீட்டுக்குத்தான் வருவேன்" என்றார். இப்படி வாரங்கள் மாதங்களாகின. சுவாதிக்கு அழுகையே வந்துவிட்டது. அவளது காதுகளில் ஒரு சாதாரணக் கம்மலைப் போட்டிருந்தாள், ஆனால் அது அவளுக்கு ஏனோ அந்நியமாகவே இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாதி மீண்டும் அழைத்தாள். இந்த முறை கஸ்தூரியின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது.

"பெரியம்மா, போதும். என் ஜிமிக்கியைக் கொடுத்துடுங்க. நான் நேர்ல வந்து வாங்கிக்கவா?" என்றாள் கோபமும் அழுகையுமாக.

கஸ்தூரி நீண்ட பெருமூச்சு விட்டார். "சுவாதி... என்னை மன்னிச்சிடுமா. சரோஜாவுக்கு ஜிமிக்கி ஆர்டர் கொடுக்கைல கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஆகிட்டுது. கடையில் நின்னுக்கிட்டு இன்னும் நாலு கிராம் எடை கூடுதலாச் செய்யச்சொல்லுங்க, அப்பத்தான் பாரிக்கமா இருக்கும்ன்னு ஒரே நச்சு. எங்க பட்ஜெட்டையும் தாண்டிப்போயிட்டுது. கையிருப்பிலும் காசு இல்ல.  வேற வழியில்லாம உன் ஜிமிக்கியை அடகு வச்சிட்டேன்..."

சுவாதிக்குத் தலை சுற்றியது. "என்ன பெரியம்மா சொல்றீங்க? அது என் பாட்டி எனக்குக் கொடுத்தது. அதை எப்படி நீங்க அடகு வைக்கலாம்?"

"சூழல் அப்படி சுவாதி... இன்னும் ரெண்டு மாசத்துல வயல் அறுவடையானதும் மீட்டுத் தந்துடுறேன்..." என்று அவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். ஆனால் சுவாதியின் காதுகளில் எதுவும் விழவில்லை. அவள் அடைந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. பெரியம்மா செய்த நம்பிக்கை துரோகம் அவளைக் குலைத்தது. சுவாதி கோபத்துடன் போனை வைத்தாள். "உறவுன்னா என்னப்பா? ஒருத்தரோட பலவீனத்தை இன்னொருத்தர் லாபமாக்குறதுதானா? ஏன் மனுஷங்க இவ்வளவு சுயநலமா இருக்காங்க?" என்று தன் அப்பாவிடம் பொருமினாள். மாதங்கள் ஓடின. ஆனால் ஜிமிக்கி வந்தபாடில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் அக்காட்சி அவளை வதைத்தது.

ஓராண்டு கழித்து, ஒரு அதிகாலை நேரத்தில் வாசலில் ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது. சுவாதியின் அப்பா கதவைத் திறந்தார். வெளியே கஸ்தூரி நின்றிருந்தார். முகம் வாடிப் போயிருந்தது.

அப்பா எதையும் பேசவில்லை. கஸ்தூரி நேராக சுவாதியின் அறைக்குள் நுழைந்தார். சுவாதி அவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கஸ்தூரி மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டார். "சுவாதி..  என்னைய மன்னிச்சிருடி. அந்த ஜிமிக்கிய அடகு வச்ச இடத்துல இருந்து மீட்க முடியல. வட்டி ஏறிப்போச்சு. இப்போ அந்த நகை மூழ்கிப்போச்சு மக்கா..." என்று விம்மினார்.

சுவாதிக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வயலில் வருமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் நகையை மீட்க முடியாமல் மூழ்கிப்போனதையும், எப்பாடு பட்டேனும் அதே போல் நகையைச் செய்து கொண்டு தந்தபின்தான் இனி இந்த வாசல்படி ஏறுவேன் என்றும் பெரியம்மா சொல்லிவிட்டுச் சென்றது கூட கவனத்தில் ஏறாமல் உணர்விழந்து அமர்ந்திருந்தாள். துக்கமும் கோபமும் பொங்கிப்பொங்கி வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா!! என உள்ளுக்குள் கசந்தது.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. கொஞ்சங்கொஞ்சமாக அந்த நினைவுகளையெல்லாம் மறக்க முயன்று கொண்டிருந்தாள் அவள். என்னதான் எதிர்பாராதவிதமாக நடந்திருந்தாலும் தன்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் எனத்தோன்றியது. அப்பாவிடம் சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்து, தானே அந்த நகையை மீட்டிருந்தால் மூழ்கியிருக்காதே! எனவும் யோசித்தாள். பாட்டி ஞாபகமாக வைத்திருந்ததை இப்படிக் கை நழுவ விட்டுவிட்டோமே என தன் மீதே கோபம் கொண்டாள். கோபம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறிப்போயிருந்தாலும் அதன் வடு இன்னமும் இருந்தது. 

சரோஜாவுக்குக் குழந்தை பிறந்து, அதற்குப் பெயர் சூட்டும் விழாவுக்கு விருப்பமே இல்லாமல்தான் சுவாதி சென்றிருந்தாள். அங்கே போனால் அவர்களையெல்லாம் பார்க்க நேரிடும், நீறு பூத்திருக்கும் நெருப்பு கனன்று கொள்ள ஆரம்பிக்கும் எனப் பயந்தாள். வீட்டினுள் கஸ்தூரி பெரியம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். சரோஜாவின் புகுந்த வீட்டிலும் நிலைமை சரியில்லை எனக் கேள்விப்பட்டிருந்தாள். ஏதோ பணப் பிரச்சனை வர, சரோஜாவின் நகைகளை எல்லாம் அவளது மாமியார் பிடுங்கிக் கொண்டதாகத் தகவல்.

சுவாதியைக்கண்டதும் கஸ்தூரி ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். கன்னம் தடவி முத்தினார். “நீ வருவேன்னு காத்திருந்தேன் மக்கா” எனச்சொன்னபோது கண்களில் அதே பழைய பாசம் மினுமினுத்ததைக் கண்ட சுவாதிக்கும் உள்ளுக்குள் ஏதோ கரைந்தது. அவளைத் தனியாகக் கூட்டிப்போனவர், பர்ஸ் உள்ளிருந்து ஒரு சிறிய ரோஸ் நிறக் காகிதப்பொட்டலத்தை எடுத்தார். அதனுள்ளிருந்த ஒரு சிறிய பட்டுத் துணியை விரித்தார். உள்ளே அதே வலை டிசைன் ஜிமிக்கி மின்னிற்று.

சுவாதி அதிர்ச்சியுடன் பார்த்தாள். "இதோ உன் சொத்து சுவாதி. இதை மீட்கத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். அடகு வெச்சிருந்தவங்க கிட்ட கெஞ்சிக்கூத்தாடி மறுபடி தவணை கேட்டு எப்படியோ பணத்தைப்புரட்டி உன்னோட நகையையே மீட்டுட்டேன். உன் பாட்டியையே உங்கிட்ட சேர்த்த மாதிரி தோணுது. இப்போதான் என் மனசு நிம்மதியா இருக்கு," என்றார் கண்ணீருடன்.

சுவாதி அதை வாங்கிப் பார்த்தாள். ஒரு காலத்தில் அவளது உயிராக இருந்த அந்த ஜிமிக்கி, இப்போது அவளுக்கு வெறும் பொருளாக மட்டுமே தெரிந்தது.

கஸ்தூரியின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சுவாதியின் கோபம் ஒரு நொடியில் பனியாகக் கரைந்தது. 

"பெரியம்மா, இதுக்காக நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?" என்றாள் சுவாதி அவரை அணைத்துக்கொண்டு.

"மானம் பெருசு சுவாதி. அதைவிட உன் அன்பு பெருசு. இந்த நகை நம்ம மனசுல ஏற்படுத்தின விரிசல் ரொம்பப்பெருசு. அதை எப்படியாவது நிரப்பணும், என் பிள்ளை நீ.. என்னை விட்டு விலகிடக்கூடாதுன்னு நினைச்சேன். நம்ம பொருளை நம்மோட அனுமதி இல்லாம இன்னொருத்தர் அழிச்சா, மனசு என்ன பாடுபடும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு," என்றார் கஸ்தூரி.

அவள் மெதுவாகச் சொன்னாள், "நகை திரும்ப வந்துட்டுது. ஆனா என் மனுஷங்க மேல இருந்த அந்த நம்பிக்கை போயிட்டுதே? நகை போனா மீட்டுரலாம், ஆனா போன நம்பிக்கையை எப்படிக் கொண்டு வர்றது? இப்போ, இந்தப் பொன் எனக்குப் பெருசாத் தெரியல பெரிம்மா. நீங்க உங்க தப்ப உணர்ந்தீங்களே, அதுதான் எனக்குப் பெரிய நகை. போயிட்டுப்போகுது. காலம் எல்லாத்தையும் ஆத்தும்ன்னு சொல்வாங்க. ஆத்தட்டும்…” என்றவள், கையிலிருந்த நகையை தொட்டிலில் கிடந்த குழந்தையின் கையில் வைத்து அதன் உள்ளங்கையை மூடி, “இது இந்தச் சித்தியோட பரிசு செல்லம்.. வளர்ந்தப்புறம் போட்டுக்கோ” என்றாள். “சரோஜா கழுத்துல, காதுல எதுவுமில்லாம இருக்கா, இதைப்போட்டுக்கச்சொல்லுங்க பெரிம்மா” என கஸ்தூரியின் காதுகளில் கிசுகிசுத்தாள். கண்கலங்கப்பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரி, குழந்தையை எடுத்து சுவாதியின் மடியில் இட்டாள். கொஞ்சத்தொடங்கிய சுவாதியையும் மடியிலிருந்த குழந்தையையும் ஒரு சேர அணைத்தன அவள் கைகள்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, 5 February 2026

அத்தினி - சித்ரா சிவன்( புத்தக மதிப்புரை)


நூல்: அத்தினி
ஆசிரியர்: சித்ரா சிவன்
வெளியீடு: பிறகு பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு)
முதல் பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 229
விலை:280

இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் ஒரு நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ள சித்ரா சிவனின் மூன்றாவது புத்தகமே அத்தினி. இது இவரது முதல் நாவலுமாகும். இந்த நாவல் ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. மேலும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, சௌமா இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளது. சித்ரா சிவன் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எழுதிவருகிறார்.

“அத்தினி” என்ற சொல் பெண்யானையையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும். யானைக்கூட்டத்தில் ஆளுமை மிக்க ஆண் யானைகள் இருந்தாலும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெண்யானையே அக்கூட்டத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச்செல்லும், இடர்களை முன்கூட்டியே அறிந்து தன் கூட்டத்தைப் பாதுகாத்துக்கொள்ளும். அவ்வாறே, வெளிப்பார்வைக்கு ஆண் குடும்பத்தை நடத்துவது போல் தோன்றினாலும், முக்கியமான முடிவுகளை அக்குடும்பத்திலுள்ள தலைமைப்பெண்ணே எடுக்கிறாள். ஆண் அந்த முடிவைச் செயல்படுத்துகிறான். சில குடும்பங்களில் பெண்ணே வெளிப்படையாகக் குடும்பத்தை நடத்திச்செல்வதைக் காண முடியும். இது நாம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சம். 

இவ்வாறு தலைமைப்பண்புடன் இயங்கும் பெண்களிடம் தைரியமும், தன்னம்பிக்கையும், சுதந்திர மனப்பான்மையும் சற்று அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைப்பயணத்தில் கூட நமக்கு வேறு துணை யாரும் தேவையில்லை என்ற முடிவுடன் தனித்தியங்குவர். அப்படிப்பட்ட சகோதரிகளான பவித்ரா தேவி, உமையாள் என்ற இரு பெண்களையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்டிருக்கிறது எழுத்தாளர் சித்ரா சிவனின் “அத்தினி” என்ற இந்நாவல். 

ஆஸ்பத்திரி கேண்டீனை கதைக்களனாகக் கொண்டிருக்கும் நாவலில் ருசிக்குக் குறைவில்லை, பாத்திரங்களுக்கும் குறைவில்லை. பவித்ரா எனும் அத்தினியின் கூட்டத்தில்தான் எத்தனையெத்தனை அத்தினிகள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதாமல், ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருப்பதுதான் பெருஞ்சிறப்பு. அவரவரின் வலிகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதிலேயே அமிழ்ந்து கிடக்காமல் அந்த வலிகளை வெல்லும் யுக்திகளையும் கையாண்டு நகர்ந்து செல்கின்றனர்.

பெண்களின் கதைகளைப் பெண்களே எழுதும்போது, அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சரிதா, பூங்கொடி போன்றவர்களின் கதைகளைப் புரிந்துகொள்ள முடிவதைப்போல. ஆஸ்பத்திரியில் பவித்ரா சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணிடமும்தான் எத்தனை சோகம் கொட்டிக்கிடக்கிறது. பெரும்பாலும் குடும்ப வன்முறைக்கு ஆட்பட்டவர்களாக, ஆணாதிக்கத்தால் நசுக்கப்படுபவர்களாக இருக்கும் அவர்களின் தலை சாயும் ஒரு தோளாக இருக்கிறாள் பவித்ரா. அவள் மூலம், பெண்கள் விரும்பும் ஓர் உலகத்தைப் பல நிகழ்வுகள் மூலம் சுட்டுகிறார் எழுத்தாளர். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நிறுவப்பட்டிருக்கும் பல சமூகக்கோட்பாடுகளை அநாயாசமாக உடைத்தெறிந்திருக்கிறார். ஏன் கூடாது? என்ற கேள்வி வாசிப்பவர் மனதில் எழும் எனில் அதுவே அவரது எழுத்தின் பலம். ஆற்றொழுக்குப்போன்ற தெளிவான நடையில் பட்டுப்போன்ற மொழியில் ஒழுகிச்செல்கிறது நாவல். ஆங்காங்கே பட்டுக்கத்தரித்தாற்போன்று கருத்துகளைச்சொல்லவும் தவறவில்லை ஆசிரியர்.

அன்னக்கொடியின் பாத்திரப்படைப்பு மிகவும் கவர்ந்தது. அத்தனை ஆளுமையுள்ள, பொருளாதாரச் சுதந்திரமுள்ள ஒரு பெண்ணாக இருந்தபோதும் கணவனின் சொல்லைத்தாங்கவியலாமல் தன்னையே கொளுத்திக்கொள்ளுமளவு அவள், கணவன் என்ற ஆணின் அதிகாரத்தால் பலவீனப்படுகிறாள். அவளது தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் ஆளுமைத்திறனின் எச்சமே பவித்ராவாக நீள்கிறது. வாழ்வில் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளால், திருமணத்தை வெறுத்த சகோதரிகள் தனியாகவே வாழ்கிறார்கள். குடும்பச்சொத்துகளையும் காத்துக்கொண்டு தேவைப்படுபவர்களுக்குத் தங்களாலான உதவியைச்செய்துகொண்டு வாழ்ந்த அவர்களின் வாழ்வில் மாறன், இளங்கோ எனும் இரு ஆண்கள் குறுக்கிடுகிறார்கள். நாவலில் பெரும்பாலும் கூறப்பட்ட ஆண்களைப்போலில்லாமல் இவர்கள் நல்லவர்களாகச் சித்திரிக்கப்பட்டது சிறப்பு. எல்லா ஆண்களும் கெட்டவர்களாக இருந்து விடுவதில்லைதானே. அவர்களில் மாறனை உமையாள் திருமணம் செய்துகொண்டு அவளுக்கான தனிக்கூட்டை அமைத்துக்கொண்டுவிடுகிறார். பவித்ராவும் இளங்கோவும் ஒருவர் கனவை ஒருவர் மதித்து அவரவர் பாதையில் செல்கின்றனர். ஆனால் அதுவுமே பவித்ராவை இன்னும் புடம் போடுமேயன்றி பலவீனப்படுத்தாது. கூட்டத்தின் முன்னால் தலை குலுக்கி, மத்தகத்தை நிமிர்த்திகொண்டு நடை போடும் அந்த அத்தினி.

Sunday, 25 January 2026

வயிற்றுக் கணக்கு - சரவணன் சந்திரன் (புத்தக மதிப்புரை)

நூல்: வயிற்றுக்கணக்கு
ஆசிரியர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 220
முதல் பதிப்பு : 2024

எழுத்தாளன் தான் சொல்ல விரும்புபவற்றை கதை, கவிதை, கட்டுரை, யாப்பு எனப் பல வடிவங்களின் மூலமாகப் பகிர்கிறான். இவற்றில் தான் சந்திக்கும் மனிதர்களை வாசித்து அந்த அனுபவங்களை நம்முடன் கட்டுரை வடிவில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன். அச்சு, மின், காட்சி என எல்லா தரப்பட்ட ஊடகங்களிலும் பங்களித்திருக்கும் அனுபவம், இவரது முதிர்ந்த எழுத்துகளிலும் பிரதிபலிக்கிறது. மொத்தம் 27 கட்டுரைகளைக்கொண்டிருக்கும் இத்தொகுப்பினை வாசிக்கும்போது, இவை கதைகளா? அல்லது கட்டுரைகளா? என்ற உளமயக்கம் ஏற்படுகிறது. 

இலக்கிய மாந்தருக்குச் சற்றும் குறையாத வாழ்வியல் அனுபவங்களுடன் நடமாடும் மனிதர்கள், சித்தர்களுடனான அனுபவப்பகிர்வுகள், செய்யும் மீன்தொழில் முறையில் கொண்டிருக்கும் கடல் மற்றும் கடலுணவு பற்றிய ஞானம், விவசாயத்தையும் ஏற்றுச்செய்வதால் வானிலை மாற்றங்கள் பற்றிய கவனிப்பு, விளையாட்டு வீரராகவும் இருப்பதால், உடலை, ஆரோக்கியத்தைக் கவனிப்பது என எல்லாவற்றையும் ஒருக்கியிருக்கும் இவற்றை வாழ்வியல் கதைகள் என்றே சொல்லலாம். தன்னைச்சுற்றி இருப்பவற்றைக் கவனிப்பதும், அவற்றை எழுத்தில் கொண்டுவருவதும் எழுத்தாளனின் இயல்பு, ஆனால், நாமும் களத்தில் இருப்பது போன்றே உயிரோட்டத்துடன் உணரச்செய்கிறது இவரது எழுத்து. 

எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் பழக்கம் எப்படி வந்தது எனவும் அச்சுமையை எப்படி இறக்கி வைத்து, தன்னைத்தானே அணைத்து வைக்கப் பழகிக்கொண்டார் எனச்சுட்டுகிறார் ‘அணைத்தல்’ என்ற கட்டுரையில். 

பூத்துக்கிடந்த வயிறு, ஓய்ந்து அணைவது வரையிலானது வயிற்றுக் கணக்கு மட்டுமல்ல.. வாழ்ந்த காலத்தின் கணக்கும் கூட. அதற்குப்பின்தான் மனித மனது நாவால் ருசித்தவற்றையெல்லாம் மனதால் ரசிக்க ஆரம்பிக்கிறது. பிறர் சாப்பிடுவதைப் பார்த்தாலே அதற்கு நிறைந்து விடுகிறது. தொகுப்பின் தலைப்புக்கட்டுரையாய், சோற்றுக்கணக்கின் பாதிப்பில் அமைந்த “வயிற்றுக்கணக்கு” சுவாரஸ்யம்.

நுணுக்கமாகக் கணித்து மதிப்பிடும் மனிதர்களைப்பற்றிய “கண்மதிப்பு” கட்டுரை சிறப்பு. சரியாகக் கணித்து கவனமுடன் செயல்பட்டாலே பல தோல்விகளைத் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவல் பிறந்த கதையைக்கூட அவ்வளவு சுவையாகச் சொல்லியிருக்கிறார் “சுபிட்ச முருகன்” கட்டுரையில்.

அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. அதை அடுத்தவர் மேல் ஏற்றித்துன்புறுத்தி அடுத்தவர் மேல் ஆக்கிரமிப்பு செலுத்தினால் என்னாகும்? “காதலின் பரிசு” கட்டுரையை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். தற்காலத்தில் விவசாயம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது என்கிறார். எப்படி? என்பதை மூங்கில் புல் கட்டுரையில் காணலாம். அத்தனை இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளைக் கடந்துதான் நடந்துகொண்டிருக்கிறது விவசாயம். 

போதையின் பாதையில் தடுமாறி கெடுவழியில் சென்ற மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. ‘இளைதாய் முள்மரம் கொல்க’ என்பது வாக்கு. இக்கால இளைஞர்களில் சிலர் அவ்வாறு மூத்தோர் சொல் கேட்டு கெடுவழக்கங்களைக் கைவிடுவரா? எனச் சந்தேகிப்போர் “பொறுப்பு” கட்டுரையை வாசித்தல் நலம். தங்க ஊசிகள் நடமாடும் நாட்டில் நமது கண்ணை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

“மனிதன்தான் படைப்புச்செயலின் உச்சம்” என்று கூறும் சரவணன் சந்திரனின் படைப்புகளில் மனிதர்களுக்கும் அவர்தம் ஓயாத கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரு மூட்டை தானியத்தை ஒரே நாளில் கொத்தித்தின்ன ஆசைப்படும் வாசகக் குருவிகளுக்கு ஏற்றதுதான் அந்த விளைநிலம்.

Sunday, 14 December 2025

சாரல் துளிகள்


அறியாமலே போய்விட்ட கண்ணீருக்கு எங்ஙனம் ஆறுதலளிப்பது? மலராமலே உதிர்ந்து விட்ட மொட்டுகளின் நறுமணத்தை எங்ஙனம் திறப்பது? முகிலுள்ளிருக்கும் மதியை எங்கிருந்தோ நோக்கியிருக்கும் அல்லியின் தவத்தை யாரே கலைக்கவும் கூடும். பிரிந்திருந்தும் முழுமை கொண்டிருப்பவற்றின் பூரணத்துவத்தைப் புரிந்தவர்தான் யார்.

பறவைகளெல்லாம் தனக்காகத்தான் வந்தன என எண்ணி ஏமாந்தது இறுதியில் தானியங்களை இழந்து தனித்து விடப்பட்ட வயல்.

தனது காலில் இடித்துக்கொள்ளாதவரையில், பாதையிலிருக்கும் இடையூறைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. தான் பாதுகாப்பாய் இருக்கும் வரையிலும் இன்னொருவரின் குடையிலிருக்கும் பொத்தல்களைப்பற்றி அக்கறை கொள்வதுமில்லை. அனைவருக்கும் பொதுவாகப்பொழிந்த வெயிலும் மழையும் எல்லை மீறிய ஓர் தினத்தில் கோர்த்துக்கொண்டன அத்தனை கரங்களும், பாகுபாடுகளை மறந்து.

நடக்கும் வழியெங்கும் பூக்கள் மட்டுமே இருக்க வேண்டும், முட்கள் கூடாதென்பது ஆசை. இலைகள் கூட இருக்கக்கூடாதென்பது பேராசை.

அத்தனை ஊசிகளால் தைத்து ஓர் மரகதக்கம்பளத்தைப் போர்த்துகிறது மழை.

எங்கோ ஒரு வனாந்திரத்தின் அந்தகாரத்தில் யாருக்காகவும் அன்றி, தனக்காக மட்டும் பூத்திருக்கும் மலருக்குக் கம்பீர மணம்.

இரையை இறுக்கும் மலைப்பாம்பைப்போல் இவ்வாழ்வை இறுக்கித் திணறச்செய்கின்றது பித்தேறிய மனது. 

பாலைப்பூக்களென கொஞ்சங்கொஞ்சமாய் உதிர்ந்து படியும் நேசத்தால் இளகுகின்றன அன்பின்மையின் இறுகிய சொற்கள்.

சொல்லின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள முயலாமல், மேலோட்டமாகப் பொருள் கொள்வதென்பது, உள்ளிருக்கும் பருப்பின் ருசியை அறிய முற்படாது காயின் தோலை ருசிப்பதாகும். 

சற்றுத் தாமதமாகவே உதிக்குமாறு நிலவிடம் வேண்டிக்கொண்டது குழந்தை. நிலாச்சோறு ஊட்டும் அம்மை இன்னும் வேலையிலிருந்து வரவில்லையாம்.

Friday, 28 November 2025

படமும் பாடலும் (10 )

சொன்னால் விலகுவாரும் சொக்கிச் சுவைப்பரே
இன்சுவையும் சூடும் இளநுரையும் நன்றாமே
பொன்நிகர் அப்பமுடன் பச்சி பகராதோ
மன்னுபுகழ் காபியின் மன்

உன்னதம் காணவென உள்ளத்தால் உள்ளியது
நன்முத்தும் பொன்னும் நிறைக்காது ஏங்கியது
நின்றாடும் ஆசையால் நெஞ்சமிங்கு தேடியது
இன்னொரு காபி இனிது.
****************************************************************

கள்ளத்தால் வாழும் கடும்பாவி யோர்வாழ்வு
உள்ளத்தில் நோயாய் உருப்பெறும் - உள்ளபடி
இன்னயம் பேசாதோர் இல்தவிர்த்துச் செல்தலுடன்
நன்னயம் நாடாமை நன்று.
*********************************************************************
பொன்னலரி சென்னியோன் பொற்கழல் சூடுதல் மன்னுயிர் ஓதிய மாண்பிங்கு இன்னபிற உன்னதம் ஈதென ஊரார் உவப்பதெலாம் என்னென காண்கிலேன் யான் 
*********************************************************************


இலைபழுத்து வீழும் நிலையெள்ளு வோர்முன் 
அலைபொலியும் தண்பூ தலையால் - மலைவேந்த
சீரற்றோர் தாழார் சிலநாளில் மேலெழுவார்
ஆரக்கால் அஃதே உலகு.

Tuesday, 7 October 2025

படமும் பாடலும் (9)


எண்ணிய தெய்துவது எப்போவென் றேங்கியே
கண்ணில் மிதக்கும் கனவு


போஹாவும் மிக்சர் பழமும் கலந்துண்ண
ஆஹா அமிர்தம் இது.
***************************************************************



அன்னை பிழைத்தால் அவளுக்கு ஏச்சுண்டு
கன்னற் கனிமொழியாள் செய்யும் குறும்புகளோ
முன்னர் கடிதோச்சும் மூதன்னை பின்தணிந்து
அன்பை அளிப்பாள் அணைத்து.
**************************************************************************


குழைந்து கிடக்கும் குளமெலாம் ஊறும்
தழைகள் பொலிந்து துளிர்க்கும் - துழைஇ
குழைக்கும் உழவர்க் கினியதாம் நன்றாய்
மழையை அருந்திய மண்.
***************************************************************************
எட்டிநாம் நிற்பினும் அட்டியின்றிக் கண்பார்ப்பான் 
கிட்டே நெருங்கிடக் கட்டுண்டோ - இட்டமுடன் 
சட்டென சென்னிசூடிச் சிக்கெனப் பற்றுக
விட்டலன் பாதம் விடாது.


Saturday, 23 August 2025

அம்மாவின் சேலை - "பூபாளம்" இதழில் வெளியானது

சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி

பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் பிரித்து வெகு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. விசேஷங்களுக்கு உடுத்தும் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன், ஜரிகை போட்ட ஜிகுஜிகுவென்ற புடவைகள் ஒவ்வொன்றும் பழைய தலையணை உறைகளுக்குள் தனித்தனியாகப் பொதியப்பட்டிருந்தன. அக்கம்பக்கம் கோவில்களுக்குப்போக, ஷாப்பிங் மற்றும் உற்றார் உறவினர் வீடுகளுக்குப் பளிச்செனச்செல்ல என அதற்கேற்ற வகையில் உள்ள புடவைகளை இன்னொரு அடுக்கில் வைத்திருந்தாள். தினப்படி வீட்டில் உடுத்தும் எளிய காட்டன் புடவைகள் நடுத்தட்டில் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தி வேண்டும், ஏனோதானோவென செயல்படுவது அவளுக்குப் பிடிக்காது. வீட்டில் உடுத்தும் சேலைகளைக்கூட அவ்வப்போது கஞ்சி போட்டு, மொடமொடப்பாக அயர்ன் செய்து உடுத்துவாள். எப்போது அவளைப் பார்த்தாலும் ஏதோ இப்போதுதான் வெளியில் கிளம்பத்தயாராய் இருப்பது போல் பளிச்சென்று இருப்பாள். ரகு லேசாக முன்னகர்ந்து வாத்சல்யத்துடன் சேலைகளைப் பட்டும்படாமலும் வருடியபோது, பொத்தென்று ஒரு சேலை கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அசங்கி, உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மேட்சிங் ப்ளவுஸ் லேசாக சேலைக்கு வெளியே வந்து தெரிந்தது. 

குனிந்து எடுத்து முகத்தை சேலையில் புதைத்துக்கொண்டு முகர்ந்து அனுபவித்தான். அந்த மென்மையும் வாசனையும் அவளது மடியில் படுத்துக்கிடந்த தினங்களை ஞாபகப்படுத்தியது. அம்மாவின் மடியில் யார் படுப்பதென்பதில் எப்பொழுதும் அவனுக்கும் சின்னக்காவுக்கும்தான் போட்டி. வெளியூரில் வேலை கிடைத்து, பெட்டியை அடுக்கும்போது முதலாவதாக அம்மாவின் பழம்புடவையொன்றைத்தான் எடுத்து வைத்துக்கொண்டான். வீட்டு ஞாபகம் மேலிட்டு அதிகமாகி ஏக்கமாக மாறி தூக்கம் தொலைத்த இரவுகளில் அதைப் போர்த்திக்கொண்டு உறங்குவான். அம்மாவே அருகிலிருந்து தலையைக்கோதி தூங்க வைப்பதுபோல் உணர்வான்.

கையிலிருந்த புடவையின் மேல் அவன் பார்வை சென்றது. இதே மாதிரியான புடவையால்தான் அன்றைக்கு அம்மாவுக்கும் பாட்டிக்குமிடையே சண்டை வந்தது. இதுதானா அது?! இல்லையில்லை.. இது பிங்க் கலர் அல்லவா!, அம்மாவிற்குக் கோபமேற்படுத்திய அந்தப்புடவை நல்ல வாடாமல்லி கலர். பேத்தியின் பிறந்த நாளுக்கென பாட்டி வாங்கி வைத்திருந்தாள். புடவையைக் கண்டதும் பெரியம்மாவின் கண்கள் விரிந்தன. அவளது வழக்கப்படி முதலில் விலையைப் பார்த்தாள். விலையுயர்ந்த புடவை என்றதும் ஆசையில் பளபளத்தன அவள் கண்கள். “இதை நான் எடுத்துக்கறேனே அம்மா?” என மூத்த மகள் ஆசைப்பட்டுக்கேட்டதும் புடவையை அவளிடம் தூக்கிக்கொடுத்து விட்டு பேத்திக்கு வாடாமல்லி கலரில் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு சின்ன மகளின் வீட்டுக்கு வந்தார். 

வந்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், நடந்ததைச் சொல்லிவிட அம்மாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ‘எம்புள்ளையோட பொறந்த நாளுக்குன்னு வாங்குனதை நீங்க வழக்கம்போல ஒங்க மூத்தமகளுக்கே தாரை வாத்துட்டு வந்துருக்கீங்களா’ என ஆவேசப்பட்டுச்சீறியவர், அந்த புதுப்புடவையை வாங்கி, பாட்டி பதறப்பதற சரிபாதியாக இரண்டாகக் கிழித்தார். “அடுத்த வீட்டு ராகினி அக்காட்ட கொடுத்து ஒனக்கும் கீதா அக்காக்குமா ரெண்டு பாவாடை தைக்கச்சொல்லு” என சின்னக்காவை அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட பெரியம்மா அதன்பின் அடுத்தவர் புடவைகளுக்கு, முக்கியமாய் தங்கையின் உடமைகளுக்கு ஆசைப்படுவதையே விட்டுவிட்டார்.

அவர்களது குடும்ப வட்டாரத்தில் அவளது உடைரசனை மிகவும் பிரசித்தம். “ஏட்டி சியாமளா.. ஒனக்குன்னு எங்கேருந்துதான் கிடைக்குதோ?!!.. நாங்களுந்தான் நாகருகோயிலு, திருனேலின்னு கட கடயா அலஞ்சு அலசுதோம். இந்தக் கலருதாம் வேணும்ன்னு கட கடயா முங்கி முத்தெடுத்தோம். அப்புடியும் வீட்டுக்கு வந்து பிரிச்சுப்பாத்தா அந்தச்சேல அவ்வளவா நல்லாயில்லாத மாதிரி தோணி, புடிக்காம போயிட்டு. ஒனக்கு எந்தச்சேல கட்டுனாலும் அம்சமா பொருத்தமா இருக்கு” என பாதி வயிற்றெரிச்சலில் குமைவார்கள். “அவளும்.. அவளுக்க சீலையும்.. பெரிய ஆப்பீசர் கணக்கால்லா மினுக்கிட்டு அலயுதா” என்பவர்கள் கூட, “சியாமளா.. நாளைக்கு மகன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க சொக்காரங்க, அப்றம் கல்யாணப்பொண்ணுன்னு எல்லாருக்கும் சேலை எடுக்கணும். நீயும் வாயேன், உன் செலக்ஷந்தான் டாப்பா இருக்கும்” என கூச்சநாச்சமில்லாமல் அழைப்பார்கள்.

இத்தனைக்கும் ஒவ்வொரு பெண்களைப்போல் பத்து கடைகள் ஏறியிறங்கி, எல்லாப்புடவைகளையும் கலைத்துப்போடச்சொல்லி கடை ஊழியர்களின் பொறுமையைச் சோதிக்கும் ரகமில்லை அவள். ரேக்குகளில் அடுக்கப்பட்டிருப்பவைகளை கண்ணாலேயே அலசி ஆராய்ந்து நாலைந்தை எடுத்துப்போடச்சொல்லி ஒன்றை செலக்ட் செய்து ஐந்து நிமிடத்தில் கடையை விட்டு வெளியே வருபவள் அவள். “உங்களுக்கு உங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா? எங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா?” என அவன் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு நான் வாங்கிக்கறதுதான் பிடிக்கும்?” என குறும்புடன் சொன்னாள்.

“பீரோ முழுக்க புடவையா வாங்கி அடுக்கி வெச்சிருக்கியே.. கொடுத்து வெச்சவதான் போ..” என ஓர் உறவுக்காரி சொல்லிவிட்டுப்போன அன்றைக்கு அந்திக்கருக்கலில், உப்பும், மிளகும், கடுகும், வரமிளகாயுமாய் பொட்டலம் கட்டி, புடவைகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டவள் அவள். அம்மாவின் புடவைக்காதலைப் பற்றிப் புரிந்திருந்த மகள்களும் மகன்களும் அவளுக்கு விதவிதமாய் வாங்கிக்கொடுத்தாலும், அவளுக்கு ரகு ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப்போய் வரும்போது அந்தந்த ஊரின் ஸ்பெஷல் என வாங்கி வரும் புடவைகள் என்றால் தனிப்பிரியம். “பணக்கார மகன் வாங்கிக்கொடுக்கறதுதானே ஒனக்குப்புடிக்கும், நாங்க வாங்கிக்கொடுக்கறதுல்லாம் புடிக்குமா?” என சின்னக்கா ஒரு நாள் குத்தலாகச்சொன்னபோது, “ஏட்டி.. என்ன வார்த்தை சொல்லுகே? தாய்க்கு எல்லாப்புள்ளையளும் ஒண்ணுதான்” என அடக்கிவிட்டாள்.

“கையைத்தூக்க முடியலைப்பா இப்பல்லாம், ப்ளவுஸ் போடறதுக்குள்ள சீவன் போகுது” வயோதிகத்தின் முதல்படியில் நின்றுகொண்டு அலுப்புடன் அம்மா சொன்னபோது, முதன்முதலாக நைட்டி அணிய நேர்ந்த கூச்சமும், இனிமேல் புடவையே கட்டிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவளிடம் லேசாக எட்டிப்பார்த்தது. நாளாக ஆக நடமாட்டம் குறைந்தபோது பார்த்துப்போகவென வந்திருந்த சின்னக்கா, “இனும உடுத்தமுடியாதுன்னு ஆயாச்சுன்னா, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு புடவைங்களைத் தரலாமில்ல? நாங்களாவது கட்டி அனுபவிப்போம்” என்றதற்கு,

“என் கண்ணுள்ள வரைக்கும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கட்டும், நான் போனதுக்கும்பொறவு என்னமும் செஞ்சுக்கோங்க” என்று ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

அப்படியெல்லாம் சேலைகளை ஆசையுடன் கட்டிக்காத்த அம்மாவைத்தான் இன்று சிதையில் வைத்து விட்டுத் திரும்பியிருந்தார்கள் அவனும் அண்ணனும். நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை, பின்னால் கேட்ட பேச்சுக்குரல் நனவுக்குக்கொண்டுவந்தது.
அக்காக்களும் அண்ணியும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்..

“என்னதான் சொல்லுங்க.. அம்மாவோட கலெக்ஷன் போல வராது”

“அப்பம்லாம் அம்மா புதுப்புடவை எடுத்தா, மொதல்ல என்னைத்தான் கட்டச்சொல்லுவாங்க. அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு செண்டிமெண்ட்” இது பெரியக்கா.

“நீ கல்யாணமாகிப்போனப்புறம் அம்மா என்னைக் கட்டிக்கச்சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” இது சின்னக்கா.

“எனக்கு அம்மாவோட ஞாபகமா ஒரு சேலை வேணும்”

“எனக்கும்..”

“எனக்கும்..” 

சேலைக்கடை போல் ஆகியிருந்தது வீட்டுக்கூடம்.

“அடடா!!.. அதுக்கென்ன? ஒண்ணென்ன?! யார்யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கிடுங்க” என்றான் பெரியண்ணன்.

அவர்கள் வருவதை உணர்ந்து வழிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான் ரகு. அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு புடவையாகக் கையிலெடுத்துப்பார்த்து, பிடித்தவற்றை.. முக்கியமாக விலையுயர்ந்தவற்றைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்கள். அவரவர் வாங்கிக்கொடுத்தவற்றையும் கவனமாக அவரவரே எடுத்துக்கொண்டனர்.

“இந்த காப்பிப்பொடி கலர் புடவை, மகேசுக்கு நல்லாருக்கும், அவளுக்குத்தான் கொடுக்கப்போறேன்னு அத்தை சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்றாள் அண்ணி. மகேசு என்ற மகேஸ்வரி அவள் மகள்.

“அந்தப்புடவை அம்மாவோட சித்தி பையன் அவன் மகளோட கல்யாணத்துக்கு அம்மாவுக்கு வச்சுக்குடுத்ததுதானே? அம்மா சார்பா அந்தக்கல்யாணத்துக்கு நான் ஐயாயிரம் ரூவா மொய் செஞ்சேன் பாத்துக்கோ. பரவால்ல, மாமா நல்ல புடவையாத்தான் எடுத்திருக்கார்” என்ற சின்னக்கா புடவையைத் தன்மேல் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள்.

“எம்புள்ள இன்ன நேரம்ன்னு கிடையாது.. பெரியவளாகிருவா. அவளுக்கு ஆச்சியோட சீரா, மொதப்பொடவையா இத கொண்டுட்டுப் போறேன். காப்பிப்பொடி கலர் அவ நெறத்துக்கு நல்லா எடுப்பா இருக்கும்” என்றாள் பெரியக்கா.

புடவைகளின் சரசரப்பினூடே பேச்சும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஒரே புடவைக்கு அத்தனை பேரும் போட்டி போடும்போது பெண்கள் நடத்தும் நுண்ணரசியலை நினைத்து அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இது எனக்கு வேண்டும்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் அதே சமயம் அத்தனை பேருக்கும் அழுத்தமாகப் புரியும் வண்ணம் எப்படி சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒரு சதுரங்க ஆட்டத்துக்கேயுரிய லாவகத்துடன் எத்தனை அழகாகக் காய் நகர்த்தி பாகம் பிரித்துக்கொள்கிறார்கள் என ஆச்சரியப்பட்டான். தனக்குத் திருமணமாகியிருந்தால் இந்நேரம் தன் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பாளோ என யோசனையாக இருந்தது. இவர்கள் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்களா அல்லது அதைச்சாக்கிட்டு அவளது பொருட்களை மிச்சமில்லாமல் சுருட்டுகிறார்களா எனப்புரியவில்லை.

அண்ணி அவனது மௌனத்தைக்கலைத்தாள். “ஒங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா கொழுந்தம்பிள்ளே?”

வேண்டாமெனச்சொல்லலாமா என ஒரு நிமிடம் யோசித்தான். அம்மையை வேண்டாமென அப்படி சுலபமாகச் சொல்லிவிட முடியுமா? 

சுற்றிலும் பார்த்தான். கொடிக்கயிற்றில் அம்மாவின் இன்னும் துவைக்காத ஒரு நைட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இறப்பதற்கு முந்தைய நாள்தான் உடம்பு துடைப்பதற்காக அட்டெண்டர் அதை அவிழ்த்துப்போட்டிருந்தார். அதை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டான். அம்மாவின் கடைசி வாசனை,.. இனியெப்போதுக்குமாக இது போதும். நைட்டிக்கும் முந்தானை உண்டு, அம்மாவை நினைத்து ஏங்கும் பிள்ளைகளை அது அரவணைத்து ஆறுதலளிக்கும். நாப்தலீன் மணக்கும் சேலைகளை மற்றவர்களே வைத்துக்கொள்ளட்டும்.

அவன் நைட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அணைத்தாற்போல் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டு எழுந்தான். அம்மையே குழந்தையாக அவன் தோளில் சாய்ந்திருப்பதுபோல் ஒரு தாய்மையுணர்வை உணர்ந்தபோது அவனுக்குச் சிலிர்த்தது. நைட்டியின் கைப்பாகம் அவனது கையில் உரசியபோது அம்மாவே தன் கையைப்பற்றியிருப்பது போல் உணர்ந்தான். “நடுச்சாமம் ஆகப்போகுது, போய்த்தூங்கு மக்கா” என்ற அம்மாவின் குரல் காதில் கேட்டதுபோல் இருந்தது. நைட்டியைத்தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 

வெகு நாட்களுக்குப் பின் அம்மையின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பது போல் ஒரு ஆறுதல், கொந்தளித்துக்கொண்டிருந்த அவனது மனதைச் சற்று அமைதியுறச்செய்தது. மரத்துப்போயிருந்த மனது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. இனிமேல் அம்மையை எப்போதுமே பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தாக்க, சூடான கண்ணீர் அவன் இமைகளினோரம் வழிந்து நைட்டியை நனைத்தது.  கண்ணீர் வழிய வழிய துக்கம் மெல்ல மெல்ல கரைந்து, தூக்கம் கண்ணைச்சுழற்றியது. மின்விசிறியின் காற்றில் மெல்ல படபடத்துக்கொண்டிருந்த நைட்டி மெதுவாக அவன் கன்னத்தை உரசியது. “அழாதே மக்கா..” என அம்மையே அவனது கண்ணீரைத் துடைத்ததுபோல் உணர்ந்தான். ‘என் அம்மா.. எங்கூடவேதான் இருப்பா” என தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக்கொண்டான். அம்மாவின் கை தனது தலையைக்கோதுவது போன்ற கற்பனையுடன், இமைகள் கனக்க  ஆழுறக்கத்தில் இன்னும் இன்னுமென அமிழத்தொடங்கினான்.

LinkWithin

Related Posts with Thumbnails