Thursday, 6 August 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் வழங்கியிருந்தார். "விடுதலை வீரரை வாழ்த்து" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.


தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

அடிமைத் தளைதொலைத்து அன்னியரை ஓட்ட
குடிமை நலம்வாழக் கூடி - கடிதாம்
கெடுதல் பொறுத்துக் கொடுவினை தாங்கும்
விடுதலை வீரரை வாழ்த்து.

செங்குருதி சிந்திச் சிறைவாசம் தான்ஏற்று
மங்காத வான்புகழை மாநிலத்தே - இங்கு
நெடுநாள் சுமக்கின்ற நேர்மைச் சுடராம்
விடுதலை வீரரை வாழ்த்து.

இன்னுயிரைத் துச்சமாய் எண்ணியும் இந்நாட்டின்
நன்னலம் நெஞ்சில் நயந்துநின்றும் - என்றும்
நெடுநாள் கனவை நனவாய் விளைத்த
விடுதலை வீரரை வாழ்த்து.

சுடுகுண்டு வான்மழையாய்த் தூவினும் அஞ்சான்
நடுக்கடல் வெஞ்சிறையும் நன்றே - ஒடுக்கும்
கெடுமதியை வீழ்த்தி கொடுங்கோல் தகர்த்த
விடுதலை வீரரை வாழ்த்து.

Sunday, 26 July 2026

காவூ - ராமசந்திரன் உஷா (புத்தக மதிப்புரை)


நூல்: காவூ
ஆசிரியர்: ராமசந்திரன் உஷா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்

ராமசந்திரன் உஷா எழுதிய ‘காவூ’ நாவல், தேநீர் பதிப்பகம் – சித்தாவரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இது கடந்த நூற்றாண்டின் இந்திய வரலாற்றையும், ஒரு எளிய பெண்ணின் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பிணைத்து எழுதப்பட்ட ஓர் அழுத்தமான சமூகப் புனைவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் விரிந்து, நெருக்கடி நிலை காலம் வரை நீளும் இந்நாவல், சமூக யதார்த்தத்தையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக நுட்பமாகப் பேசும் ஒரு முக்கியப் படைப்புமாகும். 1933 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில், ஒரு மாத்வக் குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்நாவல், காவேரி எனும் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது.

நாவலின் ஆகப்பெரிய பலமே இதன் நாயகியான 'காவூ' என அழைக்கப்படும் காவேரி என்ற எளிய பெண்தான். ஒரு சாதாரணப் பெண், நாட்டின் மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கும் சமூகக் கொந்தளிப்புகளுக்கும் இடையே தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கிறாள் என்பதை நூலாசிரியர் நெகிழ்ச்சியாகச் சித்தரித்துள்ளார். காவேரியின் வாழ்க்கை ஒரு தியாகமாகவோ அல்லது அபலைக் கோலமாகவோ சித்தரிக்கப்படாமல், அவள் தன் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் மையமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் போராடினாலும் இறுதியில் அவள் வாழ்வில் மிஞ்சியது என எதுவுமில்லை, தனது ஒரு குழந்தையையாவது நன்றாக வாழ வைத்துவிட்ட திருப்தியைத்தவிர.

நாவலின் தொடக்கத்தில், பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்க்கும் அறியாமை நிறைந்த, மழலை மாறாத ஒரு சிறுமியாக காவூ நமக்கு அறிமுகமாகிறாள். ஆண்-பெண் உறவு பற்றியோ அல்லது திருமண வாழ்வு பற்றியோ எவ்விதப் புரிதலும் இல்லாத வயதிலேயே அவளுக்குக் குழந்தை மணம் செய்விக்கப்படுகிறது. வயதுக்கு வராத காரணத்தால் பிறந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் அவளது தொடக்கக் கால வாழ்க்கை, அந்த காலகட்டத்து எளிய மற்றும் படிப்பறிவில்லாத சராசரி இந்தியப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவே அமைகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். கணவன் சரியானவனாக அமையாத காரணத்தால் உடலாலும், மனதாலும் புண்பட்டு, பிள்ளைகளின் வாழ்வும் சரியாக அமையாமல் அவர்களில் இருவரைப் பறிகொடுத்து என அவள் படும் துயரங்கள் அநேகம். எவ்விதப்பொருத்தமும் இல்லாமல் நடந்த அவளது திருமணத்தால் துன்பங்களையே அனுபவித்த அவளுக்கு ஒரே ஆறுதல் அன்பும் அனுசரணையுமாய் அமைந்த மாமியார் மட்டுமே. 

அடக்குமுறைகள் நிறைந்த அன்றைய வாழ்வியலிலிருந்து, விரும்பியதைச்செய்யும் இன்றைய வாழ்வியலை அடைவதற்குப் பெண்கள் கடந்து வந்திருக்கும் தூரமும், அவர்கள் அனுபவித்திருக்கும் வலியும் மிகப்பெரியது. அந்த தூரத்தைக்கடக்க பெருமுயற்சி எடுத்த பெண்கள் பலர். அவர்களுக்கு வழிகாட்டிய ஆண்களும் பலர். அவர்களின் பிரதிநிதியாகவே அம்மாளு, வாசு பாத்திரப்படைப்புகள் விளங்குகின்றனர். தங்கைக்குக் கடைசி வரை உறுதுணையாக வாசு இருப்பதும் அவளுக்குக் கல்வியின் அருமையை உணர்த்தி எழுதப்படிக்கத்தெரியாதவளாக இருந்தவளை, கடிதம் எழுதும் அளவுக்கு முன்னேற்றுவதும் சிறப்பு.  

இந்நாவலின் மற்றொரு தனித்துவமான சிறப்பு, புனைவோடு நிஜ வரலாற்று ஆளுமைகள் இயல்பாகக் கலந்து வருவதாகும். மகாத்மா காந்தி, இராஜாஜி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தோழர் மன்னார்குடி சீனிவாச ராவ் போன்ற அரசியல் மற்றும் சமூகப் போராட்டவாதிகளும்; காஞ்சி பெரியவர் போன்ற ஆன்மீக ஆளுமைகளும்; ராம்நாத் கோயங்கா, 'சோ' போன்ற பத்திரிகையாளர்களும்; ஜெமினி கணேசன், வகிதா ரஹ்மான், மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்ற திரையுலகப் பிரபலங்களும் கதையின் போக்கில் இயல்பாக வந்து செல்கின்றனர். இது வாசகருக்கு அந்தந்தக் காலக்கட்டத்திற்கே நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது.

வரலாற்றின் பின்னணியில் மனித உணர்வுகளையும், ஒரு பெண்ணின் அகப்பயணத்தையும் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு தீவிர வாசகரும் தவறவிடக் கூடாத ஒரு சிறந்த நாவல் இது. கால நதியில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் அதிலேயே நீந்தக் கற்றுக்கொள்ளும் ஒரு சாமானியப் பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டமே காவூவின் ஒட்டுமொத்த வடிவமாகும். 

டிஸ்கி: புத்தக மதிப்புரையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Wednesday, 1 July 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை பாவலர் கருமலைத் தமிழாழன் வழங்கியிருந்தார். "உழைப்பே தரும்நல் உயர்வு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 

தேர்வாகி பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

கல்லாமை நீக்கிக் கருத்தூன்றி நாளும்நற்
சொல்லாளன் போலவே சொல்லெடு- நல்லாய்
விழைவொடு நாள்தொறும் வீறுகொண்டு கற்பாய்
உழைப்பே தரும்நல் உயர்வு

ஊழைநம்பிச் சோம்பி உலோபர்பின் ஏகாதோர்
கூழைபோல் கும்பிட்டுக் கோராதோர் - வாழி
தழைத்திடச் செய்யும் தகவோர்க்கு என்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு

நற்பேறு நாளும் நடைவந்து நிற்காது
பொற்பேறாம் நற்செயல் பூணுக - மற்றோ
பிழைக்க வழிகண்டு பேறுகள் காண்பாய் 
உழைப்பே தரும்நல் உயர்வு.

சோம்பல் களைந்து சுறுசுறுப்பாய் நாளும்நாம்
ஆம்பல் மலராய் அகமலர்ந்(து) — ஓம்பும்
விழைவு கருதி விவேகமாய் ஆற்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு.

Wednesday, 3 June 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூன் மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை புலவர் சித்தாந்த ரத்தினம் ராமச்சந்திரன் வழங்கியிருந்தார். "நன்றே வருமென்று நம்பு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 


பிரசுரமான வெண்பாவைத்தவிர அதே ஈற்றடிக்கு எழுதிய மேலும் சில வெண்பாக்கள் உங்கள் பார்வைக்கு.

தளர்ந்து விடாதே தனித்துநின்ற போதும்
கிளர்ந்து எழுக களத்தில்- இளநெஞ்சே
குன்றாத ஊக்கம் குறிக்கோள் எனக்கொண்டால்
நன்றே வருமென்று நம்பு.

சென்ற வினைபோகச் சிந்தை தெளிவடைந்து
நின்ற நிலைதன்னில் நேர்படுக - நன்றுள
குன்றோன் துணையிருக்கக் கேடில்லை எந்நாளும்
நன்றே வருமென்று நம்பு.

கன்றிய துன்பம் களைந்து கவலைநீக்கி
என்றுமே இன்பம் இயையுமே - பொன்றாத
அன்பே அரணாக ஆக்கி அகமகிழ்ந்து
நன்றே வருமென்று நம்பு.

பொன்னே எனப்பொழுதைப் போக்காது நற்செயலில் 
தன்னையே தந்து தடையின்றி - முன்னின்று 
நின்றே உழைக்க நிலைகாணும் நல்வாழ்வு 
நன்றே வருமென்று நம்பு.

Sunday, 31 May 2026

மீட்சி - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

                             
கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி பார்க்கும் போக்கிரி அது. ஆனால், இப்போது வைக்கப்பட்ட இரையை மோந்து கூட பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கிடந்ததைக் காணச் சகியாமல், கைகளில் அதன் முகத்தை ஏந்தி கண்களை உற்றுப்பார்த்தார். கோலிக்குண்டுகள் போல் பளபளக்கும் அந்தக்கண்கள் இப்போது வெறுமையின் ஆழத்தில் அமிழ்ந்திருப்பது போல் ஒளியிழந்து காணப்பட்டன.  உதட்டை அழுத்தி தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, பெட்டியில் கிடந்த புல்லை ஒரு கை அள்ளி அதற்கு ஊட்டினார். அது அவரை ஏறிட்டுப்பார்த்தது. 

“நீ பட்டினி கெடக்கறதால போனவ வந்துரப்போறாளா? பிடிவாதம் பிடிக்காம தின்னு” அவரின் கண்டிப்பு புரிந்ததுபோல் புல்லை உண்ணத்தொடங்கியது. கொஞ்சம் வைக்கோலை அள்ளி அதன்முன் உதறிப்போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவளில்லாத வீடு.. அவள் குரல் கேட்காத வீடு.. வெறிச்சோடிக்கிடந்தது. மெதுவாக நடந்து வந்து வரவேற்பறையிலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார். திடீரென பத்து வயது அதிகமாகிவிட்டாற்போல் சோர்வும் தள்ளாமையும் அவரை வாட்டியது. அதிகாலை வேளையில், எப்போதும் அவளது வளையல் ஓசையோடும், காபித்தூள் மணத்தோடும் விழித்துக் கொள்ளும் அந்தச் சமையலறை, இன்று மௌனத்தைப் போர்த்திக்கொண்டு நின்றது. கொல்லைப்புறத்தில் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த அவளது புடவை காற்றில் அசையும்போதெல்லாம் அவரது மனம் அவளது நடமாட்டத்தை எண்ணி துணுக்குற்றது. மூடியிருந்த இமைகளினோரம் உப்பு நதியொன்று உற்பத்தியாகி காது மடல்களில் சங்கமித்தது. 

அவள் இல்லை என்பதை ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்த மனதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். என்ன ஒன்று.. எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே பகிர்ந்து பழகிய அந்த இதயத்திற்கு, இப்போது சுவர்களையும் அவர்களது மகன் ஷ்யாமையும் விட்டால் பேசுவதற்கு வேறு ஜீவன் இல்லை. என்னதான், மகன் வளர்ந்த பிள்ளை என்றாலும் அவளிடம் பகிரும் எல்லாவற்றையும் அவனிடம் பேச முடியுமா என்ன? அவளது இடத்தை இந்த உலகத்தில் எவராலும் நிரப்ப முடியாது என்ற நிஜம் உறைத்தது. அவள் நீரூற்றிய தோட்டம், சமைத்த அடுப்படி, அமர்ந்த கொல்லைப்புறப் படிக்கட்டு என ஒவ்வொரு இடமாய் தொட்டுத்தடவி உணர்ந்து அவளது இன்மையைப் பிடிவாதமாய் விலக்க முயன்றார். கடைசியாய் அவள் உடுத்தியிருந்த.. அவளது வாசனையைத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, அவளது இன்மையைப் பேரமைதியோடு பிரகடனப்படுத்திய புடவையை முகத்தோடு போர்த்திக்கொண்டு அவளது அண்மையை உணர்ந்த நிம்மதியோடு உறங்க முயன்றார். 

நாளாக ஆக சுந்தரத்தின் உலகம் அந்த வீட்டின் வரவேற்பறையோடு சுருங்கிப் போயிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த திலகாவின் புகைப்படத்தில் இருந்த மாலை காய்ந்து போய் உதிர்ந்து கொண்டிருந்தது. திலகா மறைந்து நாற்பது நாட்களாகிவிட்டன. ஆனால், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளது வாசனை இன்னும் மிச்சமிருப்பதாகவே சுந்தரத்திற்குத் தோன்றியது.
"அப்பா, காபி.." என்று ஷ்யாம் நீட்டிய கோப்பையைச் சட்டை செய்யாமல் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

"என்னத்துக்கு நான் இன்னும் பிழைச்சுக்கிடக்கேன்? அவ இல்லாத இந்த வீடும் அமைதியும் என்னைத் தின்னுடும் போலிருக்கு. அவளோட பேச்சு, இந்த வீட்டோட கலகலப்பு எல்லாம் அவளோடயே போயிடுச்சு ஷ்யாம்," என்று பெருமூச்செறிந்தவர் மங்காத புன்னகையுடன் சுவரில் படமாய்த் தொங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, “சிரிக்கறியா?.. நல்லாச் சிரி. ஒத்தைல விட்டுட்டுப்போனா இவன் என்ன பண்ணுவான்னு என்னைப்பத்தி ஒரு நிமுசம் நினைச்சியா?” எனப்புலம்பினார். இன்னும் அவள் எதிரில் இருப்பதுபோல் பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். கோபத்தில் அவளிடம் கத்திய தருணங்களும், அவள் கேட்ட சில சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்ட நாட்களும் இப்போது குற்ற உணர்ச்சியாய் மாறி, நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தின அவருக்கு. “அப்பாவை சரியா கவனிச்சுக்க ஷ்யாம், அவருக்கு உடம்பு சரியில்லையா?” என ஒவ்வொருவரும் விசாரிக்கும் அளவுக்கு தாடியும் மீசையுமாய் ஆளே உருமாறிப்போனார்.

அடுத்த ஒரு வாரம் ஷ்யாம் தீவிரமாகத் தன் லேப்டாப்பில் வேலை செய்தான்.  அம்மாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரது தனிப்பட்ட டைரிகள் ஆகியவற்றைத் திரட்டினான். தனது அறையில் அடைந்து கொண்டு இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருந்தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, சுந்தரத்தின் அருகில் அமர்ந்தான் ஷ்யாம்.

"அப்பா, அம்மா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க," என்றான் மெல்லிய குரலில்.

சுந்தரம் அதிர்ச்சியுடன் மலங்க மலங்க அவனைப் பார்த்தார். "அம்மாவா?.. என்னடா விளையாடுறியா?"

"இல்லப்பா... இது ‘ஏஐ’ன்னு ஒரு தொழில் நுட்பம்.  அம்மாவோட எல்லா நினைவுகளையும், அவங்க குரலையும் வெச்சு நான் அம்மாவை.. அதாவது அவங்களோட படத்தை உருவாக்கியிருக்கேன். இதோ பாருங்க," என்று கூறி போனை அவர் முன்னால் நீட்டினான்.

திரையில் திலகா தெரிந்தாள். அவளுக்குப் பிடித்த அதே இளம்பச்சை நிறப் புடவை, நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டு, அந்த மென்மையான புன்னகை. அவரைப் பார்த்து முறுவலித்தது திரையில் தெரிந்த உருவம்.

"என்னங்க... ஏன் இப்படிச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கறீங்க? நான் எங்க போயிட்டேன்? பக்கத்துலதானே இருக்கேன்," என்றது அந்த உருவம்.

சுந்தரத்தின் கைகள் நடுங்கின. "திலகா... திலகாவா இது?" என்று போனைத் தொட்டுப் பார்த்தார்.

"ஆமாப்பா. அம்மாவைப்பத்தின எல்லா விஷயங்கள், அவங்க பேசும் விதம்னு எல்லாத்தையும் உபயோகிச்சு இதை உருவாக்கியிருக்கேன். நீங்க என்ன கேட்டாலும் அம்மா மாதிரியே பதில் சொல்லும்" என்றான் ஷ்யாம்.

“இப்பல்லாம் தனக்கு நெருங்கினவங்களோட மெழுகு பொம்மையைச் செஞ்சு, அவங்களையே நேரில் பார்த்தது மாதிரி ஆறுதலடையறாங்களே.. இது அது மாதிரியா?” என்ற சுந்தரத்தின் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு, “இது அதுக்கும் மேல. பொம்மை பேசாது, ஆனா, இந்த ஏஐ அம்மா உங்க கூட பழைய மாதிரியே பேசுவாங்க” என்றான். மொபைல் திரையில் தெரிந்த திலகாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம். 

முதலில் அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. அதன்பின் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசுவது போல் நினைத்துக்கொண்டு சகஜமானார். தினமும், திலகாவின் உருவம் அவரிடம், "இன்னைக்கு மாத்திரை போட்டீங்களா?", "போன தீபாவளிக்கு வாங்கித்தந்தேனே.. அந்த க்ரீம் கலர் சட்டைதான் இந்த பாண்டுக்குப் பொருத்தமா இருக்கும். அதைப்போடுங்க" என பேசத் தொடங்கியபோது, நாளாக ஆக சுந்தரம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கினார். பழைய சுந்தரத்தின் கலகலப்பும் குறும்பும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கண்களில் பழைய ஒளி திரும்பியது. அவர் தனிமையை விட்டு எந்நேரமும் மொபைலும் கையுமாக இருக்கத்தொடங்கினார். அவ்வப்போது, “ஷ்யாம்.. உங்கம்மா சாம்பாருக்கு அப்பளம் தொட்டுக்கக்கூடாது, கொலஸ்ட்ரால்ங்கறா, என்னன்னு கேளு” என பஞ்சாயத்தைக்கூட்டினார். அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாய் ஊட்டிக்குச் சென்ற கதைகளையும், முதல் முறை சமைத்தபோது ஏற்பட்ட குளறுபடிகளையும் அவளது பழைய டைரி குறிப்புகளிலிருந்து அந்த ஏஐ திலகா பேசுவதை வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் வராத இரவுகளில் சுந்தரம் தன் மனக்குறைகளை எல்லாம் அந்தத் திரையிடம் கொட்டுவார். அந்த உருவம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, "வருத்தப்படாதீங்க, நான் இருக்கேன்ல" என்று ஆறுதல் சொல்லும்.

சுந்தரத்தின் முகம் மலர்ந்தது. மீண்டும் பழையபடி நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தார். ஷ்யாமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரம் நிஜ உலகை விட, அந்தத் திரைக்குள் இருக்கும் திலகாவையே அதிகம் நேசிக்கத் தொடங்கினார். 

ஒரு நாள் இரவு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. சுந்தரம் திலகாவின் உருவத்திடம் பழைய காலத்து நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென போன் திரை மினுங்கியது. ஒரு விசித்திரமான சத்தம் எழுந்தது.

"திலகா.. திலகா.. என்னாச்சு?" என்று பதறினார்.

திரை கருப்பாக மாறியது. மீண்டும் மீண்டும் மொபைலின் பட்டன்களை மாறி மாறி அழுத்தி சரி செய்ய முயன்றார். முடியவில்லை. ஏதோ ஒரு வைரஸ் பாதிப்போ அல்லது மென்பொருள் கோளாறோ, அந்தச் செயலி வேலை செய்ய மறுத்தது.

"ஷ்யாம்! ஷ்யாம்! சீக்கிரம் வாடா... அம்மாவுக்கு என்னாச்சுன்னு பாரு," என்று அலறினார்.

ஷ்யாம் ஓடி வந்து போனைப் பார்த்தான். "அப்பா, இது ஒரு சின்ன சாப்ட்வேர் பிரச்சினைதான். நான் சரி பண்ணிடுறேன், பயப்படாதீங்க."

"இல்லடா.. என்னவோ ஆகிருச்சு. அவளோட முகம் தெரியல. எனக்கு அவளைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்!" சுந்தரத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார்.

ஷ்யாம் எவ்வளவு முயன்றும் மொபைலை உடனே சரி செய்ய முடியவில்லை. "அப்பா, சர்வர்ல ஏதோ பிரச்சனை. இப்ப மழையும் மின்னலுமா இருக்கு, ரௌட்டரை உபயோகிக்கக்கூடாது. அமத்தி வெச்சுட்டு நாளைக்கு விடிஞ்சதும்  சரி செய்யப் பார்க்கறேன்" என்றான்.

அந்த இரவு சுந்தரத்திற்கு நரகமாக இருந்தது. தன் மனைவி மறுபடியும் இறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இருட்டில் அமர்ந்து போன் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் மௌனம் அவரை அச்சுறுத்தியது. உயிரற்ற ஒரு இயந்திரத்தின் மீது அவர் வைத்திருந்த அதீதப் பிணைப்பு, இப்போது அவரை மனரீதியாகச் சிதைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை, ஷ்யாம் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தச் செயலியைச் சரிசெய்தான். மீண்டும் திலகாவின் முகம் திரையில் தோன்றியது.

"என்னங்க... இன்னிக்கு சனிக்கிழமை. ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகலாமா?" என்று அந்த ஏஐ கேட்டது.

சுந்தரம் போனை கையில் வாங்கினார். திரையில் தெரிந்த மனைவியைப் பார்த்தார். அவள் சிரிக்கிறாள்... ஆனால் அந்தக் கண்களில் உயிர் இல்லை. அவள் பேசுகிறாள்... ஆனால் அதில் ஆன்மாவின் துடிப்பு இல்லை. ஏதோ ஓர் இயந்திரத்தன்மை இப்போது தெரிந்தது. நேற்று இரவு அவர் அனுபவித்த அந்தத் தவிப்பு அவருக்கு ஒரு உண்மையைப் புரிய வைத்தது.
மெல்ல போனை மேஜையில் வைத்தார்.

"ஷ்யாம்..."

"சொல்லுங்கப்பா, இப்போ அம்மா வந்துட்டாங்கல்ல? இனி கவலைப்படாதீங்க."

"இல்லடா ஷ்யாம். இது அம்மாவோட நினைவுகளைச் சொல்லுது, அந்த நினைவுகளும் கூட நீ ஊட்டியவை. அம்மாவோட குரல்ல பேசுது. ஆனா இது அம்மா இல்ல. அவளோட நிழலுருவம்.. அவ்வளவுதான். நேத்து இது வேலை செய்யாமப் போனப்போ.. திலகாவைப் பார்க்க முடியாம ஆனப்போ.. நான் துடிதுடிச்சுப் போயிட்டேன். அந்த உணர்வு உன் அம்மாவை நிஜமா இழந்தப்போ அடைஞ்சதை விட அதிகமா இருந்துச்சு. ஒரு மெஷின் மேல நான் இவ்வளவு பித்துப் பிடிச்சு அலைஞ்சது தப்புன்னு இப்ப தோணுது."

சுந்தரம் எழுந்து சென்று, சுவரில் இருந்த திலகாவின் நிஜமான புகைப்படத்தைப் பார்த்தார்.

"இந்தச் சிரிப்பு போதும்டா எனக்கு. அவளோட நினைவுகள் என் மனசுல இருந்தா போதும். போன்ல அவளைப் பிடிச்சு வைக்க நினைச்சது என்னோட பலவீனம். இதை 'அன்-இன்ஸ்டால்' பண்ணிடு," என்றார் உறுதியான குரலில்.

ஷ்யாம் ஆச்சரியத்துடன் பார்த்தான். சுந்தரம் இப்போது நிதானமாக இருந்தார்.

"நிஜமான பிரிவை விட, அந்தப் பிரிவை ஏத்துக்காம ஒரு பொய் உலகத்துல வாழுறதுதான் ரொம்ப வலி தருது ஷ்யாம். உன் அம்மா என் நினைவுகள்ல வாழட்டும், இந்தத் திரையில வேணாம்," என்றார்.

டிஜிட்டல் தேவதை மறைந்துவிட்டாள், அதே பொழுதில் சுந்தரம் மீண்டும் மனிதராக மீண்டிருந்தார். 

அன்று மாலை, சுந்தரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து நிஜமான பறவைகளின் சத்தத்தையும், காற்றின் தழுவலையும் ரசித்துக் கொண்டிருந்தார். திலகா அவரோடு இல்லைதான், ஆனால் அவளது நினைவுகள் ஒரு மெல்லிய தென்றலாக அவருள் சுகந்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் லயிப்புக்கேற்றவாறு மெல்ல அசைந்தாடத்தொடங்கியது ஊஞ்சல்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, 30 May 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

இதே ஈற்றடிக்கு எழுதிய இன்னும் சில பாக்களுடன் பிரசுரமான வெண்பாவும்..

பொன்னிறக் காலைப் பொழுதும் பொலிவான
கன்னல் நிகர்த்த கிளிமொழியும் - வன்னமிகு
அன்னத் திரளும் அடர்வனமும் சூழ்ந்திட
என்னே இயற்கை எழில்.

பச்சை வயலும் பனிமுகில் சூழ்மலையும்
இச்சை தரும்பூ வினங்களும் - நச்சியே
கொன்றை பொலிவதைக் கண்ணாரக் காணீரோ
என்னே இயற்கை எழில்.

வெள்ளி அருவி விரிந்து விழப்பொழிந்து
துள்ளி வருமே துணையுடனே - தெள்ளிய
அன்னம் அசைந்து அலைமேல் மிதக்குதே
என்னே இயற்கை எழில்.

கானப் புனலும் கதிரவன் பொன்னொளியும்
வானவில் ஏற்றிய வண்ணமும் - வானோங்கி
தென்னையும் புன்னையும் தானுயர்ந்து நோக்கிட
என்னே இயற்கை எழில்.

மின்னும் பனிமலை மேவிய புல்வெளியில்
மின்மினிப் பூஞ்செறிவு முன்றிலாய்- நன்றாக
முன்னே விரிந்த முழுமை யினைக்காண
என்னே இயற்கை எழில்.

வெண்பாவை வெளியிட்ட அமுதசுரபி இதழுக்கு நன்றி.

Wednesday, 20 May 2026

ஹைக்கூ..


மலர்ந்து புன்னகைக்கின்றன
விதானத்தில் பூத்த மல்லிகையாய்
வானத்து நட்சத்திரங்கள்

***************
பருத்திக் காடெங்கும்
நிலா பூத்தது போல்
வெடித்திருக்கிறது பஞ்சு.

***************
நிலா பூத்திருக்கிறது
காடெங்கும் இதழ் உதிர்தலாய்
வெடித்த பஞ்சு.

***************
அழைப்புக்கு மறுமொழியில்லை
எட்டுக்கட்டையில் வீறிட்டுக் கத்துகிறது
மின்சாரக் குருவி

***************
அஸ்திவாரம் பலமில்லை
அடியோடு சரிந்து விழுகிறது
பலவீனமான மனக்கோட்டை

***************
இடிந்து கிடக்கிறது
நெடுகப் பிரித்த நீள்சுவர்
பாராமுகமாய் சகோதரர்கள்

***************
கேட்டது கிடைக்கவில்லையாம்
நிமிர்ந்துநின்று அடம் பிடிக்கிறது
வௌவாலின் குழந்தை

***************
பிரம்மாண்டமாய் பயமுறுத்துகிறது
ஊர்ந்து செல்லும் முதலை
பல்லியின் நிழல்

***************
தொட்டால் மட்டுமல்ல
பார்த்தாலும் தூக்கியடிக்கும் மின்சாரம்
கட்டண அறிக்கைவழி.

***************
வெய்யில் விகசிக்கிறது
அலைவுறும் நீரில் தவழ்கின்றன
மின்னும் நிலாத்துண்டங்கள்.

***************

LinkWithin

Related Posts with Thumbnails