Wednesday, 3 June 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூன் மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை புலவர் சித்தாந்த ரத்தினம் ராமச்சந்திரன் வழங்கியிருந்தார். "நன்றே வருமென்று நம்பு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 


பிரசுரமான வெண்பாவைத்தவிர அதே ஈற்றடிக்கு எழுதிய மேலும் சில வெண்பாக்கள் உங்கள் பார்வைக்கு.

தளர்ந்து விடாதே தனித்துநின்ற போதும்
கிளர்ந்து எழுக களத்தில்- இளநெஞ்சே
குன்றாத ஊக்கம் குறிக்கோள் எனக்கொண்டால்
நன்றே வருமென்று நம்பு.

சென்ற வினைபோகச் சிந்தை தெளிவடைந்து
நின்ற நிலைதன்னில் நேர்படுக - நன்றுள
குன்றோன் துணையிருக்கக் கேடில்லை எந்நாளும்
நன்றே வருமென்று நம்பு.

கன்றிய துன்பம் களைந்து கவலைநீக்கி
என்றுமே இன்பம் இயையுமே - பொன்றாத
அன்பே அரணாக ஆக்கி அகமகிழ்ந்து
நன்றே வருமென்று நம்பு.

பொன்னே எனப்பொழுதைப் போக்காது நற்செயலில் 
தன்னையே தந்து தடையின்றி - முன்னின்று 
நின்றே உழைக்க நிலைகாணும் நல்வாழ்வு 
நன்றே வருமென்று நம்பு.

Sunday, 31 May 2026

மீட்சி - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

                             
கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி பார்க்கும் போக்கிரி அது. ஆனால், இப்போது வைக்கப்பட்ட இரையை மோந்து கூட பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கிடந்ததைக் காணச் சகியாமல், கைகளில் அதன் முகத்தை ஏந்தி கண்களை உற்றுப்பார்த்தார். கோலிக்குண்டுகள் போல் பளபளக்கும் அந்தக்கண்கள் இப்போது வெறுமையின் ஆழத்தில் அமிழ்ந்திருப்பது போல் ஒளியிழந்து காணப்பட்டன.  உதட்டை அழுத்தி தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, பெட்டியில் கிடந்த புல்லை ஒரு கை அள்ளி அதற்கு ஊட்டினார். அது அவரை ஏறிட்டுப்பார்த்தது. 

“நீ பட்டினி கெடக்கறதால போனவ வந்துரப்போறாளா? பிடிவாதம் பிடிக்காம தின்னு” அவரின் கண்டிப்பு புரிந்ததுபோல் புல்லை உண்ணத்தொடங்கியது. கொஞ்சம் வைக்கோலை அள்ளி அதன்முன் உதறிப்போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவளில்லாத வீடு.. அவள் குரல் கேட்காத வீடு.. வெறிச்சோடிக்கிடந்தது. மெதுவாக நடந்து வந்து வரவேற்பறையிலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார். திடீரென பத்து வயது அதிகமாகிவிட்டாற்போல் சோர்வும் தள்ளாமையும் அவரை வாட்டியது. அதிகாலை வேளையில், எப்போதும் அவளது வளையல் ஓசையோடும், காபித்தூள் மணத்தோடும் விழித்துக் கொள்ளும் அந்தச் சமையலறை, இன்று மௌனத்தைப் போர்த்திக்கொண்டு நின்றது. கொல்லைப்புறத்தில் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த அவளது புடவை காற்றில் அசையும்போதெல்லாம் அவரது மனம் அவளது நடமாட்டத்தை எண்ணி துணுக்குற்றது. மூடியிருந்த இமைகளினோரம் உப்பு நதியொன்று உற்பத்தியாகி காது மடல்களில் சங்கமித்தது. 

அவள் இல்லை என்பதை ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்த மனதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். என்ன ஒன்று.. எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே பகிர்ந்து பழகிய அந்த இதயத்திற்கு, இப்போது சுவர்களையும் அவர்களது மகன் ஷ்யாமையும் விட்டால் பேசுவதற்கு வேறு ஜீவன் இல்லை. என்னதான், மகன் வளர்ந்த பிள்ளை என்றாலும் அவளிடம் பகிரும் எல்லாவற்றையும் அவனிடம் பேச முடியுமா என்ன? அவளது இடத்தை இந்த உலகத்தில் எவராலும் நிரப்ப முடியாது என்ற நிஜம் உறைத்தது. அவள் நீரூற்றிய தோட்டம், சமைத்த அடுப்படி, அமர்ந்த கொல்லைப்புறப் படிக்கட்டு என ஒவ்வொரு இடமாய் தொட்டுத்தடவி உணர்ந்து அவளது இன்மையைப் பிடிவாதமாய் விலக்க முயன்றார். கடைசியாய் அவள் உடுத்தியிருந்த.. அவளது வாசனையைத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, அவளது இன்மையைப் பேரமைதியோடு பிரகடனப்படுத்திய புடவையை முகத்தோடு போர்த்திக்கொண்டு அவளது அண்மையை உணர்ந்த நிம்மதியோடு உறங்க முயன்றார். 

நாளாக ஆக சுந்தரத்தின் உலகம் அந்த வீட்டின் வரவேற்பறையோடு சுருங்கிப் போயிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த திலகாவின் புகைப்படத்தில் இருந்த மாலை காய்ந்து போய் உதிர்ந்து கொண்டிருந்தது. திலகா மறைந்து நாற்பது நாட்களாகிவிட்டன. ஆனால், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளது வாசனை இன்னும் மிச்சமிருப்பதாகவே சுந்தரத்திற்குத் தோன்றியது.
"அப்பா, காபி.." என்று ஷ்யாம் நீட்டிய கோப்பையைச் சட்டை செய்யாமல் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

"என்னத்துக்கு நான் இன்னும் பிழைச்சுக்கிடக்கேன்? அவ இல்லாத இந்த வீடும் அமைதியும் என்னைத் தின்னுடும் போலிருக்கு. அவளோட பேச்சு, இந்த வீட்டோட கலகலப்பு எல்லாம் அவளோடயே போயிடுச்சு ஷ்யாம்," என்று பெருமூச்செறிந்தவர் மங்காத புன்னகையுடன் சுவரில் படமாய்த் தொங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, “சிரிக்கறியா?.. நல்லாச் சிரி. ஒத்தைல விட்டுட்டுப்போனா இவன் என்ன பண்ணுவான்னு என்னைப்பத்தி ஒரு நிமுசம் நினைச்சியா?” எனப்புலம்பினார். இன்னும் அவள் எதிரில் இருப்பதுபோல் பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். கோபத்தில் அவளிடம் கத்திய தருணங்களும், அவள் கேட்ட சில சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்ட நாட்களும் இப்போது குற்ற உணர்ச்சியாய் மாறி, நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தின அவருக்கு. “அப்பாவை சரியா கவனிச்சுக்க ஷ்யாம், அவருக்கு உடம்பு சரியில்லையா?” என ஒவ்வொருவரும் விசாரிக்கும் அளவுக்கு தாடியும் மீசையுமாய் ஆளே உருமாறிப்போனார்.

அடுத்த ஒரு வாரம் ஷ்யாம் தீவிரமாகத் தன் லேப்டாப்பில் வேலை செய்தான்.  அம்மாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரது தனிப்பட்ட டைரிகள் ஆகியவற்றைத் திரட்டினான். தனது அறையில் அடைந்து கொண்டு இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருந்தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, சுந்தரத்தின் அருகில் அமர்ந்தான் ஷ்யாம்.

"அப்பா, அம்மா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க," என்றான் மெல்லிய குரலில்.

சுந்தரம் அதிர்ச்சியுடன் மலங்க மலங்க அவனைப் பார்த்தார். "அம்மாவா?.. என்னடா விளையாடுறியா?"

"இல்லப்பா... இது ‘ஏஐ’ன்னு ஒரு தொழில் நுட்பம்.  அம்மாவோட எல்லா நினைவுகளையும், அவங்க குரலையும் வெச்சு நான் அம்மாவை.. அதாவது அவங்களோட படத்தை உருவாக்கியிருக்கேன். இதோ பாருங்க," என்று கூறி போனை அவர் முன்னால் நீட்டினான்.

திரையில் திலகா தெரிந்தாள். அவளுக்குப் பிடித்த அதே இளம்பச்சை நிறப் புடவை, நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டு, அந்த மென்மையான புன்னகை. அவரைப் பார்த்து முறுவலித்தது திரையில் தெரிந்த உருவம்.

"என்னங்க... ஏன் இப்படிச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கறீங்க? நான் எங்க போயிட்டேன்? பக்கத்துலதானே இருக்கேன்," என்றது அந்த உருவம்.

சுந்தரத்தின் கைகள் நடுங்கின. "திலகா... திலகாவா இது?" என்று போனைத் தொட்டுப் பார்த்தார்.

"ஆமாப்பா. அம்மாவைப்பத்தின எல்லா விஷயங்கள், அவங்க பேசும் விதம்னு எல்லாத்தையும் உபயோகிச்சு இதை உருவாக்கியிருக்கேன். நீங்க என்ன கேட்டாலும் அம்மா மாதிரியே பதில் சொல்லும்" என்றான் ஷ்யாம்.

“இப்பல்லாம் தனக்கு நெருங்கினவங்களோட மெழுகு பொம்மையைச் செஞ்சு, அவங்களையே நேரில் பார்த்தது மாதிரி ஆறுதலடையறாங்களே.. இது அது மாதிரியா?” என்ற சுந்தரத்தின் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு, “இது அதுக்கும் மேல. பொம்மை பேசாது, ஆனா, இந்த ஏஐ அம்மா உங்க கூட பழைய மாதிரியே பேசுவாங்க” என்றான். மொபைல் திரையில் தெரிந்த திலகாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம். 

முதலில் அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. அதன்பின் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசுவது போல் நினைத்துக்கொண்டு சகஜமானார். தினமும், திலகாவின் உருவம் அவரிடம், "இன்னைக்கு மாத்திரை போட்டீங்களா?", "போன தீபாவளிக்கு வாங்கித்தந்தேனே.. அந்த க்ரீம் கலர் சட்டைதான் இந்த பாண்டுக்குப் பொருத்தமா இருக்கும். அதைப்போடுங்க" என பேசத் தொடங்கியபோது, நாளாக ஆக சுந்தரம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கினார். பழைய சுந்தரத்தின் கலகலப்பும் குறும்பும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கண்களில் பழைய ஒளி திரும்பியது. அவர் தனிமையை விட்டு எந்நேரமும் மொபைலும் கையுமாக இருக்கத்தொடங்கினார். அவ்வப்போது, “ஷ்யாம்.. உங்கம்மா சாம்பாருக்கு அப்பளம் தொட்டுக்கக்கூடாது, கொலஸ்ட்ரால்ங்கறா, என்னன்னு கேளு” என பஞ்சாயத்தைக்கூட்டினார். அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாய் ஊட்டிக்குச் சென்ற கதைகளையும், முதல் முறை சமைத்தபோது ஏற்பட்ட குளறுபடிகளையும் அவளது பழைய டைரி குறிப்புகளிலிருந்து அந்த ஏஐ திலகா பேசுவதை வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் வராத இரவுகளில் சுந்தரம் தன் மனக்குறைகளை எல்லாம் அந்தத் திரையிடம் கொட்டுவார். அந்த உருவம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, "வருத்தப்படாதீங்க, நான் இருக்கேன்ல" என்று ஆறுதல் சொல்லும்.

சுந்தரத்தின் முகம் மலர்ந்தது. மீண்டும் பழையபடி நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தார். ஷ்யாமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரம் நிஜ உலகை விட, அந்தத் திரைக்குள் இருக்கும் திலகாவையே அதிகம் நேசிக்கத் தொடங்கினார். 

ஒரு நாள் இரவு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. சுந்தரம் திலகாவின் உருவத்திடம் பழைய காலத்து நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென போன் திரை மினுங்கியது. ஒரு விசித்திரமான சத்தம் எழுந்தது.

"திலகா.. திலகா.. என்னாச்சு?" என்று பதறினார்.

திரை கருப்பாக மாறியது. மீண்டும் மீண்டும் மொபைலின் பட்டன்களை மாறி மாறி அழுத்தி சரி செய்ய முயன்றார். முடியவில்லை. ஏதோ ஒரு வைரஸ் பாதிப்போ அல்லது மென்பொருள் கோளாறோ, அந்தச் செயலி வேலை செய்ய மறுத்தது.

"ஷ்யாம்! ஷ்யாம்! சீக்கிரம் வாடா... அம்மாவுக்கு என்னாச்சுன்னு பாரு," என்று அலறினார்.

ஷ்யாம் ஓடி வந்து போனைப் பார்த்தான். "அப்பா, இது ஒரு சின்ன சாப்ட்வேர் பிரச்சினைதான். நான் சரி பண்ணிடுறேன், பயப்படாதீங்க."

"இல்லடா.. என்னவோ ஆகிருச்சு. அவளோட முகம் தெரியல. எனக்கு அவளைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்!" சுந்தரத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார்.

ஷ்யாம் எவ்வளவு முயன்றும் மொபைலை உடனே சரி செய்ய முடியவில்லை. "அப்பா, சர்வர்ல ஏதோ பிரச்சனை. இப்ப மழையும் மின்னலுமா இருக்கு, ரௌட்டரை உபயோகிக்கக்கூடாது. அமத்தி வெச்சுட்டு நாளைக்கு விடிஞ்சதும்  சரி செய்யப் பார்க்கறேன்" என்றான்.

அந்த இரவு சுந்தரத்திற்கு நரகமாக இருந்தது. தன் மனைவி மறுபடியும் இறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இருட்டில் அமர்ந்து போன் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் மௌனம் அவரை அச்சுறுத்தியது. உயிரற்ற ஒரு இயந்திரத்தின் மீது அவர் வைத்திருந்த அதீதப் பிணைப்பு, இப்போது அவரை மனரீதியாகச் சிதைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை, ஷ்யாம் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தச் செயலியைச் சரிசெய்தான். மீண்டும் திலகாவின் முகம் திரையில் தோன்றியது.

"என்னங்க... இன்னிக்கு சனிக்கிழமை. ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகலாமா?" என்று அந்த ஏஐ கேட்டது.

சுந்தரம் போனை கையில் வாங்கினார். திரையில் தெரிந்த மனைவியைப் பார்த்தார். அவள் சிரிக்கிறாள்... ஆனால் அந்தக் கண்களில் உயிர் இல்லை. அவள் பேசுகிறாள்... ஆனால் அதில் ஆன்மாவின் துடிப்பு இல்லை. ஏதோ ஓர் இயந்திரத்தன்மை இப்போது தெரிந்தது. நேற்று இரவு அவர் அனுபவித்த அந்தத் தவிப்பு அவருக்கு ஒரு உண்மையைப் புரிய வைத்தது.
மெல்ல போனை மேஜையில் வைத்தார்.

"ஷ்யாம்..."

"சொல்லுங்கப்பா, இப்போ அம்மா வந்துட்டாங்கல்ல? இனி கவலைப்படாதீங்க."

"இல்லடா ஷ்யாம். இது அம்மாவோட நினைவுகளைச் சொல்லுது, அந்த நினைவுகளும் கூட நீ ஊட்டியவை. அம்மாவோட குரல்ல பேசுது. ஆனா இது அம்மா இல்ல. அவளோட நிழலுருவம்.. அவ்வளவுதான். நேத்து இது வேலை செய்யாமப் போனப்போ.. திலகாவைப் பார்க்க முடியாம ஆனப்போ.. நான் துடிதுடிச்சுப் போயிட்டேன். அந்த உணர்வு உன் அம்மாவை நிஜமா இழந்தப்போ அடைஞ்சதை விட அதிகமா இருந்துச்சு. ஒரு மெஷின் மேல நான் இவ்வளவு பித்துப் பிடிச்சு அலைஞ்சது தப்புன்னு இப்ப தோணுது."

சுந்தரம் எழுந்து சென்று, சுவரில் இருந்த திலகாவின் நிஜமான புகைப்படத்தைப் பார்த்தார்.

"இந்தச் சிரிப்பு போதும்டா எனக்கு. அவளோட நினைவுகள் என் மனசுல இருந்தா போதும். போன்ல அவளைப் பிடிச்சு வைக்க நினைச்சது என்னோட பலவீனம். இதை 'அன்-இன்ஸ்டால்' பண்ணிடு," என்றார் உறுதியான குரலில்.

ஷ்யாம் ஆச்சரியத்துடன் பார்த்தான். சுந்தரம் இப்போது நிதானமாக இருந்தார்.

"நிஜமான பிரிவை விட, அந்தப் பிரிவை ஏத்துக்காம ஒரு பொய் உலகத்துல வாழுறதுதான் ரொம்ப வலி தருது ஷ்யாம். உன் அம்மா என் நினைவுகள்ல வாழட்டும், இந்தத் திரையில வேணாம்," என்றார்.

டிஜிட்டல் தேவதை மறைந்துவிட்டாள், அதே பொழுதில் சுந்தரம் மீண்டும் மனிதராக மீண்டிருந்தார். 

அன்று மாலை, சுந்தரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து நிஜமான பறவைகளின் சத்தத்தையும், காற்றின் தழுவலையும் ரசித்துக் கொண்டிருந்தார். திலகா அவரோடு இல்லைதான், ஆனால் அவளது நினைவுகள் ஒரு மெல்லிய தென்றலாக அவருள் சுகந்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் லயிப்புக்கேற்றவாறு மெல்ல அசைந்தாடத்தொடங்கியது ஊஞ்சல்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, 30 May 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

இதே ஈற்றடிக்கு எழுதிய இன்னும் சில பாக்களுடன் பிரசுரமான வெண்பாவும்..

பொன்னிறக் காலைப் பொழுதும் பொலிவான
கன்னல் நிகர்த்த கிளிமொழியும் - வன்னமிகு
அன்னத் திரளும் அடர்வனமும் சூழ்ந்திட
என்னே இயற்கை எழில்.

பச்சை வயலும் பனிமுகில் சூழ்மலையும்
இச்சை தரும்பூ வினங்களும் - நச்சியே
கொன்றை பொலிவதைக் கண்ணாரக் காணீரோ
என்னே இயற்கை எழில்.

வெள்ளி அருவி விரிந்து விழப்பொழிந்து
துள்ளி வருமே துணையுடனே - தெள்ளிய
அன்னம் அசைந்து அலைமேல் மிதக்குதே
என்னே இயற்கை எழில்.

கானப் புனலும் கதிரவன் பொன்னொளியும்
வானவில் ஏற்றிய வண்ணமும் - வானோங்கி
தென்னையும் புன்னையும் தானுயர்ந்து நோக்கிட
என்னே இயற்கை எழில்.

மின்னும் பனிமலை மேவிய புல்வெளியில்
மின்மினிப் பூஞ்செறிவு முன்றிலாய்- நன்றாக
முன்னே விரிந்த முழுமை யினைக்காண
என்னே இயற்கை எழில்.

வெண்பாவை வெளியிட்ட அமுதசுரபி இதழுக்கு நன்றி.

Wednesday, 20 May 2026

ஹைக்கூ..


மலர்ந்து புன்னகைக்கின்றன
விதானத்தில் பூத்த மல்லிகையாய்
வானத்து நட்சத்திரங்கள்

***************
பருத்திக் காடெங்கும்
நிலா பூத்தது போல்
வெடித்திருக்கிறது பஞ்சு.

***************
நிலா பூத்திருக்கிறது
காடெங்கும் இதழ் உதிர்தலாய்
வெடித்த பஞ்சு.

***************
அழைப்புக்கு மறுமொழியில்லை
எட்டுக்கட்டையில் வீறிட்டுக் கத்துகிறது
மின்சாரக் குருவி

***************
அஸ்திவாரம் பலமில்லை
அடியோடு சரிந்து விழுகிறது
பலவீனமான மனக்கோட்டை

***************
இடிந்து கிடக்கிறது
நெடுகப் பிரித்த நீள்சுவர்
பாராமுகமாய் சகோதரர்கள்

***************
கேட்டது கிடைக்கவில்லையாம்
நிமிர்ந்துநின்று அடம் பிடிக்கிறது
வௌவாலின் குழந்தை

***************
பிரம்மாண்டமாய் பயமுறுத்துகிறது
ஊர்ந்து செல்லும் முதலை
பல்லியின் நிழல்

***************
தொட்டால் மட்டுமல்ல
பார்த்தாலும் தூக்கியடிக்கும் மின்சாரம்
கட்டண அறிக்கைவழி.

***************
வெய்யில் விகசிக்கிறது
அலைவுறும் நீரில் தவழ்கின்றன
மின்னும் நிலாத்துண்டங்கள்.

***************

Monday, 27 April 2026

மௌனத்தின் நறுமணம் - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு. குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து வண்ணவண்ண எண்களோடும் எழுத்துகளோடும் படங்களோடும் மல்லுக்கட்டிய அவனது மூளை, இப்போது சிக்னலில் தெரியவிருக்கும் ஒரு சொட்டுப் பச்சை நிறத்திற்காக ஏங்கியது. எப்போது ஊருக்குப்போய் நிம்மதியாக இருப்போம் என்றிருந்தது.

சென்னையின் அசுரவேகப் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு நீண்ட பெருமூச்சோடு இரயிலேறினான். குளிர்சாதனப் பெட்டியின் செயற்கைக் குளிர் காற்று அவனது நுரையீரலைச் சுட்டது. கையில் இருந்த லேப்டாப் பையை ஒருமுறை பார்த்தான். ஐந்து ஆண்டுகள்… ஐந்து ஆண்டுகளில் அவன் புழங்கியது வெறும் எண்களோடும் குறியீடுகளோடும், இழந்தது சொந்த மண்ணின் ஈரத்தையும், அந்த மனிதர்களின் அன்பையும்.

இரயில் தண்டவாளங்களில் தாளம் தட்டியபோது, சுபாஷின் மனம் காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டது. ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு கலவையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக அவன் ஊருக்குப்போனது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது ஊர் எப்படியிருக்கும்? மனிதர்கள் எப்படியிருப்பார்கள்? தெரு முனையிலிருந்த அந்தப் பழைய வீட்டை அதன் சொந்தக்காரர்கள் இடித்துப் புதிதாகக் கட்டுகிறார்கள் என அம்மா ஒரு முறை சொல்லியிருந்தாள். எனில், அதன் வாசலிலிருக்கும் செண்பகப்பூ மரத்தையும் வெட்டியிருப்பார்களோ?! என யோசித்தான்.

அதிகாலை நான்கு மணிக்கு இரயில் நிலையத்தில் இறங்கியபோது, மார்கழியின் அதிகாலைப்பனியிலும் அவனது மண்ணுக்கே உரித்தான அந்த இளம் சாரல் காற்றிலும் தேகம் சிலிர்த்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அந்த அதிகாலையிலும் ஒரு சில தேநீர்க்கடைகள் இயங்கிக்கொண்டிருந்தன. விபூதி பூசிய பாய்லர், பால் பாத்திரம், கடைக்குத் தனி அழகைக்கொடுத்தன. சாம்பிராணியும் மலர்களும் மணக்க சுவரில் அடித்திருந்த ஷெல்பில் வீற்றிருந்தனர் தெய்வங்கள். அன்றைய தினம் முதன்முதலாய்க் காய்ச்சிய பால் ஒரு தம்ளரில் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கூடவே இரண்டு வடைகளும். தூக்கத்தை உதற ஒரு டீ குடிக்கலாமா? என நினைத்தவன், வீட்டிற்குப் போய் அம்மாவின் கையால் குடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, நிலையத்தின் வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறினான். தன் வீட்டின் வாசலில் நின்றபோது, பழைய வேப்பமரத்தின் கசப்பு கலந்த மணம் அவனை அணைத்துக் கொண்டது.

அவனது அம்மா அலமேலு, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவள், மகனைக் கண்டதும் கையில் இருந்த கோலமாவைச் சிறதவிட்டு ஓடி வந்தாள்.

“வா மக்களே.. தேகம் ஏன் இப்படிக் கறுத்துப் போயிருக்கு? ஆளே மெலிஞ்சுட்டியே. நேரத்துக்குச் சாப்புடுகியா இல்லியா?” – அம்மாவின் பாசம் எப்போதும் மாறாதது, அது காலத்தைக் கடந்த ஒரு மகா நதி.

மறுநாள் காலை, கோயிலுக்குச் சென்ற சுபாஷ், அந்தக் காட்சியைக் கண்டான்.

பிள்ளையார் கோயிலின் வெளியே அந்த சின்ன பூக்கடையில், பூங்காவனம் அமர்ந்திருந்தாள். பூக்காரம்மாளின் மகள் அவள்.

அவள் கைகள் பூக்களைத் தொடுக்கும் விதம் ஒரு கவிதை போல இருந்தது. ஒவ்வொரு மலரையும் நாரிடம் ஒப்படைக்கும்போதும், அதனிடம் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்கிறாளோ, அந்த சுவாரஸ்யத்தில் அவை தன்னைத்தானே தொடுத்துக் கொள்கின்றனவோ எனும்படி இருந்தது. தியானம் போல் பூத்தொடுத்துக்கொண்டிருந்த அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவளது கண்கள் ஒரு பேராழியைப் போலத் தெளிந்திருந்தன.

சுபாஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது இயல்பல்லாத விசித்திரமான அமைதி, அவனை ஒருவித அசௌகரியத்திற்கு உள்ளாக்கியது. அவள் ஒரு மொட்டைப் போலத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு, உலகத்திற்கும் தனக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத திரையைத் தொங்கவிட்டிருந்தது போலத் தோன்றியது.

மதிய உணவின் போது, அலமேலு சூடாகப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது சுபாஷ் மெல்லப் பேச்சைத் தொடங்கினான்.

“அம்மா, கோயிலில் பூங்காவனத்தைப் பார்த்தேன். பூக்காரம்மா மகள்தானே? ஏன் அவ ஒரு மாதிரியா இருக்கா? பூ வாங்க வர்றவங்க கிட்ட கூட ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்தான் பேசறா. முன்னாடி நல்லாத் துறுதுறுன்னு பேசிட்டுத் திரிவாளே?”

அலமேலு பெருமூச்சு விட்டு ஒரு கணம் அமைதியானாள். “அவ ஒரு மாதிரி ஆயிட்டாடா சுபாஷ். ‘ஏண்டி இப்படி இருக்க?’ன்னு கேட்டா, அவ சிரிப்பா… ஆனா அந்தச் சிரிப்புல சத்தமே இருக்காது. அவளுக்குப் படிப்பு வரும், ஆனா படிக்கப்போக மாட்டேன்னுட்டா. வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு எல்லாமும் அழகா நறுவிசா செய்ய வரும். அவ கையால ஒரு சொம்பு தண்ணி ஊத்துனாலே அந்த மகிழ்ச்சியில தோட்டமே பூத்துச்சொரிஞ்சுரும். ஆனா அவ எதையும் அவளுக்கா மனசுல தோணுனாத்தான் செய்வா. பட்டணத்துல இருக்கற அவ அக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாலாவது அங்க அவ வயசுல இருக்கற பிள்ளைகளைப்பார்த்து இவளும் கலகலப்பா இருப்பான்னு நினைச்சாங்க. ம்ஹூம்.. போக மாட்டேன்னுட்டா. இந்த ஊர்ல இருக்குற பூக்களோடவே அவளோட காலம் கழிஞ்சுட்டு இருக்கு.”

“ஏன்மா, அவளுக்கு ஏதாவது மனசுக்கஷ்டமா?”

“தெரியலடா. நீ தட்டைப் பார்த்து சாப்பிடு. இன்னுங்கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?“

ஊரே அவளைப் பற்றி ஒரு விசித்திரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது—”பூக்காத மொட்டு” என்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை என அம்மா சொன்னதிலிருந்து, ‘ஏன் இப்படியிருக்கிறாள்?’ என்ற கேள்வி அவன் தலைக்குள் குளவியாய்க் குடைந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு மாலை வேளையில், காலாற நடந்துகொண்டிருந்த சுபாஷ், கோவிலிலிருந்த நந்தவனத்திற்குச் சென்றான். அங்கே பூங்காவனம் தனியாகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். செடிகளுக்கு இடையே அவள் மறைந்து மறைந்து தெரிவது, ஒரு தேவதை தன் தோட்டத்தைப் பராமரிப்பது போல இருந்தது. சுபாஷ் மெல்ல அவளை நெருங்கினான்.

“பூங்காவனம்… என்னை ஞாபகம் இருக்கா?”

அவள் நிமிர்ந்து பார்த்தாள், அந்தப் பார்வையில் ஒரு தீட்சண்யம் இருந்தது. புன்னகைத்தாள். “ஞாபகம் இருக்கு சுபாஷ். சென்னைக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. அஞ்சு வருஷம் உங்க உருவத்துல நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உங்க குரல் அப்படியே இருக்கு.”

அவளுக்குத் தன்னை ஞாபகமிருப்பது குறித்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பூப்பறித்துக்கொண்டே நகர்ந்த அவளை அவனும் தொடர்ந்தான்.

“ஆனா நீ நிறைய்ய மாறியிருக்கே. ஏன் பூங்காவனம் இப்படி மௌனமா இருக்க? ஊரே உன்னைப் பத்திப் பேசுது. ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்லை? யாரோடாவது உனக்கு மனத்தாங்கலா?”

பூங்காவனம் தன் கையில் இருந்த ஒரு மல்லிகை மொட்டை வருடியபடி பேசினாள்.

“சுபாஷ்… சென்னை எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு… ஆனா, இங்க இருக்கற மாதிரி அமைதியா இருக்காது, நம்ம ஊரை நான் ரொம்பவே நினைச்சுப்பேன்” என்றான் தயக்கத்துடன். “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை. சின்னப்பிள்ளைகளா நாம விளையாடறப்ப எவ்ளோ கலகலப்பா வாய் ஓயாம பேசிட்டே இருப்ப. நீ ஏன் பூங்காவனம் இப்படி மாறிட்ட? ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்ல? ஊரே உன்னை ‘பூக்காத மொட்டு’ன்னு கிண்டல் பண்றது உனக்கு வருத்தமா இல்லையா?”

பூங்காவனம் அருகில் மரத்தின் கிளையில் இருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்துக் கூடையில் போட்டாள். “பூக்குறதுன்னா என்ன சுபாஷ்? இதோ இந்தச் செம்பகப்பூ போல இதழ் விரிச்சுத் தன்னை, தன் மனசை, தன் எண்ணங்களை மத்தவங்களுக்குக் காட்டுறது மட்டும்தான் பூக்குறதா? என் மௌனமும் ஒரு பூதான். அதை நுகரத் தெரிஞ்சவங்களுக்குத்தான் அதோட வாசனை புரியும்.”

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு முதிர்ச்சி இருந்தது. “உங்க நகரத்துல ஒரு நிமிஷமாவது சத்தம் இல்லாம இருக்க முடியுமா? உங்க போன், உங்க கம்ப்யூட்டர், உங்க கார்… எல்லாம் சத்தம் போட்டுட்டே இருக்கு. அந்தச்சத்தம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இங்க, இந்த இயற்கைக்கு நடுவுல இருக்குற அமைதியிலும், இந்தப்பூக்களின் மௌனத்திலும் எனக்கு என்னவோ இனம் புரியாத நிம்மதி கிடைக்குது”

சுபாஷ் பேச முடியாமல் நின்றான். அவளது வார்த்தைகள் வெறும் பேச்சல்ல;

“இங்க பாருங்க… இந்தச் செடியில இருக்குற ஆயிரம் மொட்டுகளை.. நானும் பூக்காத மொட்டாவே இருக்க விரும்புறேன். ஏன்னா, மொட்டுக்குள்ள தான் அந்தப் பூவோட மொத்த வாசமும் செறிஞ்சு இருக்கு. விரிஞ்சா சில மணித்துளிகள்ல அது காத்துல கரைஞ்சு போயிரும். என் மௌனமும் அப்படித்தான். அமைதியா இருக்கேன், அதனால நிம்மதியா இருக்கேன். ஆனாலும், இந்தப் பூக்களோடு, இந்த மண்ணோட ஈரத்தோடு, இந்தக்காத்தோடு, இந்தத் தேனீக்களோடு நான் நிறைய்யப் பேசிக்கிட்டுதானிருக்கேன்.

“நான் ஏன் பூக்கணும் சுபாஷ்? பூத்தாப் பறிப்பாங்க… இல்லன்னா வாடி காய்ஞ்சு விழும். மொட்டாவே இருக்கும்போது நான் எனக்குள்ளே முழுமையா இருக்கேன்

அவள் தொடர்ந்தாள், “நீங்க எல்லாரும் ஒருத்தரோடொருத்தர் பேசறீங்க, ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சுக்கறீங்க. உண்மையில் யாரும் யாரையும் புரிஞ்சுக்கறது இல்லை. இங்க, நான் அதிகமா பேசாம இருக்கேன்.. அதனாலயே எல்லோரையும் எல்லாத்தையும் கவனிச்சு ஆழமாப்புரிஞ்சுக்கறேன். நீங்கல்லாம் பேசிப்பேசி பிரச்சினைகள் கூடுதலாகி ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கலோடு கடைசியில் பேசாம இருந்துடறீங்க. நான் ஆரம்பத்துலயே பேச்சைக் குறைச்சுக்கிட்டேன். அது அப்படியே பழகிடுச்சு, நல்லாருக்கு.. அவ்ளோதான்”

சூரியன் மறையத் தொடங்கியது. பூங்காவனம் தன் கூடையைத் தூக்கிக் கொண்டு மௌனமாகப் படியிறங்கினாள். அவளது பாதங்கள் மண்ணில் படாதது போல ஒரு பிரமை. அவள் விட்டுச் சென்ற அந்தப் பூக்களின் வாசனையை விட, அவளது வார்த்தைகளின் மணம் சுபாஷின் மனதிற்குள் ஆழமாக இறங்கியது.

அவளது அறிவு, அவளது முதிர்ச்சி, அவளது தெளிவு… இவை எதையும் அவன் எங்கேயும் யாரிடமும் இதுவரை கண்டதில்லை. அவள் பூக்காத மொட்டு அல்ல; அவள் பூக்கத் தேவையில்லாத அளவுக்குத் தன்னுள் மலர்ந்துவிட்ட ஒரு முழுமை.

அன்று இரவு சுபாஷால் உறங்க முடியவில்லை. ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் பூஜைக்காக தூரத்தில் கோயில் மணியின் சத்தம் மெலிதாகக் கேட்டது. சுபாஷ் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தூரத்தில் பூங்காவனம் கோயிலுக்குப் பூக்கூடையுடன் செல்வது தெரிந்தது. உடன் நடந்துகொண்டிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோதும், அவள் இப்போதும் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தாள். அவளது மௌனம் அந்த ஊர் முழுவதும் ஒரு நறுமணமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது.. அவள் அதிகம் பேசாத ஒரு பூக்காத மொட்டாகவே இருக்கத் தீர்மானித்திருப்பது, இந்த உலகத்திடமிருந்து தன் மௌனத்தின் நறுமணத்தைத் தற்காத்துக் கொள்ளத்தான்.

மறுநாள் காலை, அவன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். ஆனால், இம்முறை அவனது கண்களில் ஒரு தெளிவு இருந்தது. அவன் தன் பையில் ஒரு காய்ந்த மகிழம்பூவை எடுத்துப் போட்டுக்கொண்டான். அந்தப் பூவின் நறுமணம் அவனுக்குப் பூங்காவனத்தின் மௌனத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அவனுக்குள் பூங்காவனம் விதைத்த அந்த மௌனத்தின் விதை ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியிருந்தது.

வண்டி நகரத் தொடங்கியது..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, 20 April 2026

நிழல் சுமக்கும் நதி - சிறுகதை (வாசகசாலை மின்னிதழில் வெளியானது)


கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும், தூசியும், வாகனப்புகையும் ஒரு ஒவ்வாமையைத்தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான், குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான். அவியலும் எரிசேரியுமாகச்சாப்பிட்டுப் பழக்கப்பட்ட நாக்கு, மிசல் பாவ், வடா பாவ், ப்ரட் கட்லெட் என பழக்கப்படாத மசாலாக்களால் சுவையுணரும் சக்தியை இழந்து கிடந்தது. என்றைக்காவது ரொம்பவும் ஆசை ஏற்பட்டால் வாஷியின் ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவிலிருந்த கேரளா ஹவுஸுக்குப் போய் மதியம் அவியல் பொரியலுடன் சத்யை உண்டு வருவான். 

வாரந்தோறும் ஊருக்குப் போன் பண்ணும்போது, “இன்னிக்கு என்ன சமையல்?” என அம்மாவிடம் கேட்டுக்கொள்வான். “புளிக்கறி வெச்சு அப்பளம் பொரிச்சேன் மக்கா” என்றால் “என்னை விட்டுட்டு சாப்பிட்டீங்க இல்லே? கொதி விழட்டும்” எனப் பரிகசிப்பான். என்றைக்காவது விசேஷ தினங்களில் அவியல் என்றால் அவன் அந்தப்பக்கம் மௌனமாகி விடுவது இந்தப்பக்கம் அம்மாவின் நெஞ்சில் துக்கமாய் கட்டை போல் உறையும். “அவியல்ன்னா புள்ள பேயா திம்பானே” என அன்று முழுவதும் புலம்பி வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் சாப்பிட விடாமல் ஆக்குவாள். ஊரின் ஏக்கம் மிகுந்து தளும்பிய ஓர் நாளில், “ஊருக்கு வந்துரலாம்ன்னு பாக்கேன்மா” என அவன் சொன்னபோது அவள், “வந்துரு மக்களே.. உள்ளது போல பாத்துக்கிடலாம்” எனச்சொன்னாலும் அதைச்சொல்வதற்கு முன் அவள் ஒரு நிமிடம் மௌனித்தது அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது. வீட்டு நிலைமையை உத்தேசிக்கும்படி அவள் சொல்வதாகப்பட்டது.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாகச் சம்பாதிக்கத்தொடங்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இது ஒரு சாபக்கேடு எனப்பட்டது. பிடித்திருக்கிறதோ இல்லையோ.. கிடைத்த வேலையில் சேர வேண்டும், எந்த ஊருக்கானாலும் சரி, எந்த நாடானாலும் சரி.. கேள்வி கேட்காமல் பெட்டியைக்கட்டிக்கொண்டு கிளம்பிப்போக வேண்டும். மாதந்தோறும் வரும் சம்பளத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அத்தனைக்கனவுகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். கொஞ்சம் வசதியுள்ள அல்லது பிள்ளைகளின் சொல் செல்லுபடியாகும் குடும்பத்தில் பிறந்திருந்தாலாவது ‘எனக்குப் பிடிக்காததை மனசு ஒப்பி செய்ய முடியாது’ என மறுத்துவிடலாம். இங்கே அதற்கும் வழியில்லாமல் இந்த மும்பை மாநகரில் வந்து விழுந்தாயிற்று. வாங்கும் சம்பளத்திற்கு நியாயமாய் கடனேயென்று வேலை பார்த்துக்கொண்டிருந்த போதும், சீக்கிரமே பேப்பர்.. அதாவது ராஜினாமா போட்டு விட வேண்டும் என தினந்தோறும் தோன்றிக்கொண்டிருந்தது.

அவன் ஏறிய ஹார்பர் லைன் லோக்கல் ரயில், ஒரு இரும்புக் கரடியைப் போல உறுமிக்கொண்டு தண்டவாளங்களில் பாய்ந்தது. இன்றைக்குக்கூட்டம் கொஞ்சம் குறைவுதான், பெட்டியினுள்ளே நிற்குமளவுக்கு சற்றுத்தாராளமாகவே இடமிருந்தது. வாசலின் அருகேயே கம்பியில் சாய்ந்து நின்ற கார்த்திக்கின் பார்வை வெளியே விரிந்த மும்பையின் புறநகர் நிலப்பரப்பின் மீது படிந்திருந்தது. அழுக்கு படிந்த குடிசைப் பகுதிகள், வானைத் தொடும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த சதுப்பு நிலங்கள் என எல்லாமே அவனுக்கு ஒருவித ஒவ்வாமையைத் தந்தன. மும்பை வழக்கப்படி நெஞ்சுப்பக்கமாய்த் திருப்பி மாட்டிக்கொண்ட லேப்டாப் பேக் கனத்தது. இலக்கில்லாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தவன், குறுகுறுவெனத் துளைக்கும் பார்வையை உணர்ந்து பெட்டிக்குள் பார்வையைத்திருப்பினான். சட்டென்று புன்னகைத்து, “நமஸ்தே” என்றான். பதிலுக்கு “நமஸ்தே” என்றார் துக்காராம்.

 ஒரே ரயிலில் தினமும் பார்த்துக்கொள்வதால் பரிச்சயம், எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்வதும், புன்னகையைப் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சில நாட்களில் லக்கேஜ் கம்பார்ட்மெண்டில் ஏறிவிடுவார். தொளதொளவென்ற வெள்ளை பைஜாமா, வெள்ளைச்சட்டை, தலையில் வெள்ளைவெளேரென்ற குல்லா, நெற்றியில் குங்குமப்பொட்டு இதுதான் துக்காராம். காலடியில் ஏழெட்டு துணிப்பைகள் ஒன்றோடொன்று கோர்த்து இணைக்கப்பட்டுக் கிடந்தன. அவற்றுக்குள் லேசாகத் தெரிந்த விதவிதமான டிபன் பாக்ஸ்களும், பைகளில் வரையப்பட்டிருந்த வண்ணக்குறியீடுகளும் எண்களும் அவர் ஒரு தொழில்முறை டப்பாவாலா என்பதைச்சொல்லாமல் சொல்லின. வீடுகளிலிருந்து அவரவரின் அம்மாவோ, மனைவியோ கொடுத்துவிடும் சூடான சாப்பாட்டை அலுவலகங்களில் குறித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பவர்கள் அவர்கள்.  

வண்டி வாஷி பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. கீழே ததும்பிக்கொண்டிருந்த அரபிக்கடலலைகளும், மேலே பறக்கும் கடற்பறவைகளும் ஒரு கணம் கார்த்திக்கின் கவனத்தைத் திருப்பின. அந்த முதியவர் அவனை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு கருணையும், அதே சமயம் ஒரு பிடிப்பும் இருந்தது. அனுபவசாலியான அவரது பார்வை அவனை அளந்தது. 

"என்ன தம்பி... யோசனை ரொம்ப பலமா இருக்கு?"

அவர் கேட்டது மராத்தியில் என்றாலும், அவரின் கண்களில் இருந்த கனிவு அவனுக்குப் புரிந்தது. ‘ப்ச்’ என்ற ஒலியோடு ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான். அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அசட்டுச்சிரிப்புடன் அவனுக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பதில் சொன்னான். "ஒன்னுமில்லை சாச்சா, இந்த ஊரு எனக்குச் செட் ஆகலை.. இங்க இருக்கற வாழ்க்கைமுறை ரொம்பவே பரபரப்பா இருக்கு. நான் எங்க ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன்"

“ம்… நீ மும்பைக்கு வந்து எத்தனை வருஷங்களாகுது?”

“ஆறு மாசம்..”

“இவ்வளவுதானா?.. ஆறு மாசத்தில் இந்த ஊரைப்பற்றி என்ன புரிஞ்சுக்கிட்டே? இந்த ஊரு இருக்கே.. இதுக்கு நீ என்ன கொடுக்கறியோ அதைப் பத்து மடங்கா உனக்குத் திருப்பிக்கொடுக்கும். மும்பை உன்னைத் தூக்கி எறியாது தம்பி. நீ இந்த ஊரை நேசிச்சா, இந்த ஊர் உன்னைத் தன் குழந்தையா ஏத்துக்கும்” என்றவர் சற்று நேரம் வெளியே ஓடும் காட்சிகளில் லயித்துவிட்டுத்தொடர்ந்தார். “என் அனுபவத்துல சொல்றேன், பிழைப்புத்தேடி வர்றவங்களை, கடுமையா உழைக்கிறவங்களை இந்த மும்பாதேவி என்னிக்கும் கைவிட்டதில்லை. காலூன்றி நிற்க இடம் கிடைச்சாலும் போதும், அதிலும் ஒருத்தன் ஒத்தைக்கால்லயாவது நின்னு வியாபாரம் செஞ்சு சம்பாதிப்பான் பார்த்திருக்கியா?”

நிறையவே பார்த்திருக்கிறான் அவன். ரயிலுக்குள் வரும் சிறு வியாபாரிகளையும் கூட. 

“ஆனாலும், இந்தப் பரபரப்பு.. இந்த வேகம்.. யாரும் யாரோடும் ஒட்டாத தன்மை.. என்னவோ எனக்கு பேசாம ஊருக்கே போய் உறவுகளோட இருந்து கூழோ கஞ்சியோ குடிச்சுட்டுக் கிடக்கலாம் போலிருக்கு” என்றான். 

பெரியவர் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு முதிர்ச்சியும், பல ஆண்டுகால அனுபவமும் தெரிந்தது. "மும்பையில வேகம் இருக்கு தம்பி, ஆனா அந்த வேகத்துலதான் இந்த நகரத்தோட உயிர் இருக்கு. யாரோ போல் விலகி நடக்கற இதே மனிதர்கள்தான் மும்பைல ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கும்போதும் உறவுகளை விட நெருக்கமா ஒருத்தருக்கொருத்தர் துணையா நிற்பாங்க தெரியுமா?” என்றவர் அமைதியாகி இலக்கில்லாமல் வெளியே பார்த்தார். பின், “இதே மஹாராஷ்ட்ரால சாங்க்லிங்கற ஊர்லதான் பிறந்து வளர்ந்தேன். விவசாயம் பொய்ச்சுப்போய் பிழைக்க வழியில்லாம, நான் மும்பைல வந்து விழுந்தப்ப இந்த நகரம் என்னையும் ஏந்திக்கிட்டு உசிர் கொடுத்தது. ஒட்டுதல் இல்லாத மனிதர்களா இருந்திருந்தா நான் இங்கே பிழைச்சிருக்க முடிஞ்சுருக்குமா? ஆச்சு.. முப்பது வருஷம். எனக்குச்சோறு இந்த ஊர்லதான்னு முடிவாகிருச்சு” எனப் பெருமூச்செறிந்தார்.

விழிகள் விரியக்கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் குறுக்கிட்டான். “உங்க வாழ்க்கை சுலபத்தில் நல்லா அமைஞ்சுட்டுது, எல்லோருக்கும் அப்படியிருக்குமா?” என்றான்.

பெரியவர் பகபகவெனச்சிரித்தார். “இல்லை தம்பி, இங்க ஒவ்வொரு நொடியும் போராட்டம்தான். நான் ஒரு ரயிலைத்தவற விட்டாலும் அன்னிக்கு சில உசிர்களைப் பட்டினி போட்ட பாவத்துக்கு ஆளாகிருவேன். நல்ல வேளையா அந்த பாண்டுரங்கன் என்னை எப்பவும் காப்பாத்தறான். கொரோனா தாண்டவமாடி, லாக்டவுன் முடிஞ்சப்புறம் எங்க பிழைப்பு பழைய மாதிரி இல்லை தம்பி,. ஒரு நாளைக்கு நாப்பது அம்பது டப்பாக்கள் டெலிவரி கொடுத்த இடத்துல இப்ப பத்துப்பதினஞ்சு டப்பா ஆர்டர் கிடைச்சாலே அதிகம். இப்பத்தான் எல்லோரும் ஆன்லைன்லயே சாப்பாடு ஆர்டர் செஞ்சுக்கறாங்களே.”

ரயில் காற்றில் கலைந்த முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டான். “அப்புறம் எப்படிச்சமாளிக்கறீங்க?”

“கொஞ்சம் பேர் செக்யூரிட்டி வேலைக்குப்போனோம், சிலர் கிடைச்ச வேலைகளைச்செஞ்சோம். கடனேன்னு செய்யாம கடமையைச்செஞ்சா சலிப்பு வராது” என்ற பெரியவர் கண் சிமிட்டினார். “நாங்க கூரியர் சர்வீஸும் செய்ய ஆரம்பிச்சுட்டோம். எங்க கிட்ட கொடுத்தா எந்த டாகுமெண்டையும் சரியான ஆள் கிட்ட சேர்த்துருவோம். வெள்ளைக்காரனே பாராட்டுன சிஸ்டமாக்கும் எங்களோடது”

“கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்ற கார்த்திக் தொடர்ந்தான். “ஊரை விட்டு வந்தப்புறம் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள போராடிக்கிட்டே இருக்கேன்”

ரயில் பேலாப்பூரை சமீபித்துக்கொண்டிருந்தது. "தம்பி, கஷ்டம் எல்லா இடத்துலயும் இருக்கும். நீ வெறுக்கற இந்தப் போராட்டம் உன்னை ஒரு மனுஷனா செதுக்கும். சவாலான வாழ்க்கை உன்னைப் பக்குவப்படுத்தும். போராட்டமே இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சோறு மாதிரி. போராடி ஜெயிக்கிறதுதான் உனக்கு ஒரு அடையாளம் கொடுக்கும்," என்றவர் கனிவுடன் தொடர்ந்தார்.

“ஊருக்குப்போனா மட்டும் சோறு சும்மா வந்துருமா? அங்கியும் உழைப்பேதானே? அந்த உழைப்பை இங்க போடு, நாலு காசு சம்பாதி. கூடப்பிறந்தவங்களுக்கும் உழைக்கக் கத்துக்கொடு. முடிஞ்சா அவங்களுக்கும் நல்ல வழி காட்டி முன்னேத்து. உன்னைப்பார்த்து மத்தவங்களும் கத்துக்கற மாதிரி இரு. வெறுங்கையோட மட்டும் போய் நிக்காதே, அவங்க பார்க்கற பார்வையில் குறுகிடுவே. புத்தியாப்பொழைச்சுக்கோ.. அப்றம் உன் இஷ்டம்”

பெரியவர் பேசப் பேச, கார்த்திக்கின் மனதில் இருந்த பாரம் மெல்லக் குறைந்தது. அவன் இதுவரை மும்பையைப் பார்த்த கோணம் விலகி வேறு கோணம் தெரிந்தது. வாசலருகே நின்றிருந்தவன் எட்டி வெளியே பார்த்தான். ப்ளாட்ஃபாரமும் அதில் அலைமோதி நின்றிருந்த ஜனத்திரளும் தெரிந்தன. இப்போது அந்த வேகம் அவனுக்குப் பயத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, அந்த வேகம்தான் இந்த நகரத்தின் இதயத்துடிப்பு என்பதை அவன் உணர்ந்தான்.

ரயில் பேலாப்பூர் ஸ்டேஷனை நெருங்கியது. கார்த்திக் தன் போனைப் பார்த்தான். அதில் இருந்த அந்த ராஜினாமா டிராஃப்ட்டை ஒரு நிமிடம் உற்று நோக்கினான். பின், ஒரு தீர்க்கமான முடிவோடு அதை அழித்தான். வண்டி நின்றதும் மனிதக் கூட்டம் ஒரு அருவியைப் போல உள்ளே நுழையத் தொடங்கியது. அந்த நெரிசலுக்குள் துக்காராம் ஒரு மீனைப் போல நீந்தி வெளியேறி மறைந்தார். வெண்முத்துப்போல் அவரது தொப்பி மட்டும் தெரிந்துக்கொண்டிருந்தது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு கார்த்திக் பிளாட்பாரத்தில் கால் வைத்தபோது, அவனது கால்களில் ஒரு புதிய உறுதி இருந்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தபோது, வழக்கமாக எரிச்சலூட்டும் அந்த ஹார்ன் சத்தங்கள் இப்போது ஒரு இசையாகத் தெரிந்தன. பிளாட்பாரத்தில் ஓடும் மனிதர்கள் அவனுக்கு அந்நியர்களாகத் தெரியவில்லை; அவர்களும் அவனைப் போலவே ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி ஓடும் சக பயணிகள் என்று புரிந்தது. அந்தப் பிரம்மாண்டமான மனிதக் கடலில் ஒரு துளியாகக் கலப்பதில் ஒரு நிம்மதியைக் கண்டான். மும்பை இப்போது அவனுக்கு அந்நியமாகத் தெரியவில்லை. இதுவும் என் ஊர்தான் என எண்ணிக்கொண்டான்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட வாசகசாலை மின்னிதழுக்கு நன்றி.

Monday, 16 March 2026

சாரல் துளிகள்

                      

கொட்டு முழக்கத்துடன் பிறர் எதிர்காலத்தைக் குறி சொல்லும் பூம்பூம் மாட்டுக்காரனை மௌனமாகத் தொடர்கிறது தன் எதிர்காலம் அறியா மாடு.

அத்தனை ஈரத்தையும் அள்ளிப்பருகிய அக்னித்துளிகளைச் சேகரித்த மனது, உருகியுருகி இறுகியது.

பேசிப்பேசியே ஒன்றை நீர்த்துப் போகவும் செய்ய முடியும், அடர்த்தியாக்கவும் முடியும். சலிக்காமல் பேசித்தள்ளுகின்றன வாய்கள், அலுக்காமல் செய்தியைக் கடத்துகின்றன கண்களும் காதுகளும், ஒன்று விடாமல் சேமித்துக்கொள்கிறது மூளை. முடிவெடுக்க வேண்டிய மனமோ திணறிக் களைத்து கடைசியில் ஜடநிலைக்குப்போய் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' எனத் தலையாட்ட ஆரம்பிக்கிறது.

காலில் பட்டு நசுங்கவேண்டியிருக்கும், உலர்ந்து சருகாக வேண்டியிருக்கும் என்ற இயற்கை நியதிகளைப் பொருட்படுத்தாமல் தன்பாட்டுக்கு மலர்ந்து உலகைப் பார்க்கின்றன மலர்கள்.

முட்டைப் பருவத்தில் விட்டுச்சென்ற குழந்தைகளைத் தேடித்தேடி ஒவ்வொரு தாவரத்திற்கும் அலமுறையிட்டு அழுது அலைகிறது பட்டாம்பூச்சி.
ததும்பும் நீரைத் தளும்பிச் சிந்திவிட்டு ஓடுகிறது லாரி. பொசுங்கிய பாதங்கள் ஒற்றியொற்றி ஏந்திக்கொள்கின்றன அன்பின் துளிகளை.

அவரவருக்கென்றோர் இடத்தை
அடையப்போராடும் கிளியந்தட்டில்
தனக்குரிய பீடத்தை 
எப்படியோ கண்டறிந்து
அமர்ந்து விடுகின்றன சாமிகள்.

அன்பு எதையும் வற்புறுத்தாது, அன்பின் பெயரால் நடத்தும் ஆக்கிரமிப்போ ஒன்றுமில்லாமல் வழித்துத் துடைத்துவிடும்.

கனிகளின் இனிமையை மட்டும் சிலாகிப்பவன், அதன் பின்னிருக்கும் இயற்கையின் உழைப்பை அறிந்தும் அறியாதவனாகவே காட்டிக்கொள்கிறான்.

காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் வித்தையோடு.

LinkWithin

Related Posts with Thumbnails