Sunday, 6 September 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி மாத இதழில் வாசகர் அயன்புரம் த. சத்தியநாராயணன் அவர்களின் கருத்தின்படி நூற்றாண்டு நாயகர் கவியரசு கண்ணதாசனைப்பற்றி வெண்பாப்போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்போட்டிக்காக நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.


தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

காலத்தை வென்றாய் கவிஞனே நின்னெழுத்து
ஞாலத்து மாந்தர்க்கு ஞானமாம் - சீலமுறும்
கண்ணதா சாநின் கவிதையெனும் காரமுதம்
விண்ணோரும் மாந்துவர் வந்து.

பொன்னேபோல் வார்த்தைகளைப் பாட்டில் பொழிந்துலகில்
கன்னலாய்த் தந்த கவிஞனே - சொன்னதெலாம் 
இன்னமுதத் தீந்தமிழ் இன்பமூட்டும் என்றுமே 
நின்கவிதான் என்றும் நிலை

வாழ்வின் நெறியினை வான்புகழும் பாவாக்கித்
தாழ்வின்றித் தந்த தவமணியே - ஆழ்ந்ததமிழ்
மெய்ப்பொருளைப் பாட்டில் மறைத்துமிகத் தந்தாயே
பொய்யாது பெற்றாய் புகழ்

தெள்ளமுதத் தேன்பாகைத் தென்றல் இசையோடு
அள்ளிக் கொடுத்தாய் அரியகவி - கள்ளாய்
திரையுலகில் நீயமைத்த தீந்தமிழ்ப் பாட்டு
கரையாது நெஞ்சிலே காண்



Saturday, 5 September 2026

நெஞ்சிலோர் நண்டு - சுதாகர் கஸ்தூரி (புத்தக மதிப்புரை)

நூல்: நெஞ்சிலோர் நண்டு
ஆசிரியர்: சுதாகர் கஸ்தூரி
வெளியீடு: சுவாசம் பதிப்பகம் - 2026
பக்கங்கள்: 150
விலை: ரூ. 152/

'நெஞ்சிலோர் நண்டு' எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதிய மிகச்சிறந்த மருத்துவ விழிப்புணர்வுப் புத்தகப் பகிர்வாகும். இப்புத்தகம் ஆண்களுக்கு ஏற்படும் மிக அரிதான மார்பகப் புற்றுநோய் பற்றி மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் பேசுகிறது. தனக்கு ஏற்பட்ட அந்த நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்ததில் இருந்து அதன் தீவிரத்தை உணரும் வரை உள்ள நிலைகளையும் சிகிச்சை முறைகள், நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்தது என எல்லாப் படிநிலைகளையும் ஆசிரியர் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார்.

நண்டு என்ற குறியீடு புற்றுநோயின் வலியையும், அது நோயாளியின் உடலை எவ்வாறு ஆக்கிரமிக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய “நண்டு” நாவலின் நினைவு வந்தது. மருத்துவ உலகம் சாதாரண மனிதர்களுக்குப் புரியாத பல புதிர்களைக் கொண்டது என்பதை இந்தப்புத்தகம் தெளிவுபடுத்துகிறது. நோயாளியின் மன உளைச்சல், பயம் மற்றும் விரக்தி, நோயின் தன்மையை எவ்வாறு எதிர்கொள்வது ஆகியவற்றை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் உணர்வுப்பூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், அன்பும் ஒரு நோயாளியை எவ்வாறெல்லாம் மீட்டெடுக்க உதவும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் மருத்துவத் துறையில் உள்ள சவால்களையும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியத்தையும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது.

புற்றுநோய் சம்பந்தப்பட்ட மருத்துவக் கலைச்சொற்களைக் கலந்து அதே சமயம், அவற்றை எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பது இதன் மிகப்பெரிய பலமாகும். ஆற்றொழுக்குப்போன்ற நடை சுதாகர் கஸ்தூரியின் மிகப்பெரிய பலம். நடுநடுவே கம்ப ராமாயணம் கலந்து எழுதியிருப்பது ஆசிரியரின் இலக்கியப் பரிச்சயத்தையும், ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் நகைச்சுவை அவரது நகையுணர்வையும் காட்டுகிறது. இப்புத்தகம் வெறும் பகிர்வு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்குத் தேவையான ஒரு விழிப்புணர்வு ஆவணமாகவும் திகழ்கிறது. வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் பல கேள்விகளை இப்புத்தகம் தன் பக்கங்கள் வழியே எழுப்புகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிக்கும் ஒவ்வொரு குடும்பத்தாரும் கண்டிப்பாக வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பல வாழ்வியல் வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன.

ஒரு கொடிய நோய் மனித உடலைத் தாக்கும் போது, நோயாளியின் மனநிலை எவ்வாறு உடைகிறது என்பதை ஆசிரியர் ஆழமாகப் படம்பிடித்துள்ளார். பயம், விரக்தி, மற்றும் எதிர்காலம் குறித்த பொருளாதாரக் கவலைகள், தன் சந்ததியினராவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை போன்றவை ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் வாட்டுகின்றன என்பதை புத்தகம் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. உடல் வலியைக் காட்டிலும், நோயாளியின் மன உளைச்சல் எவ்வளவு கொடியது என்பதை உணர்கிறோம். ஹார்மோன் சிகிச்சையின்போது அவர் அடைந்த உணர்வு அலைக்கழிப்புகளை வாசிக்கையில் அதைக்கடந்து வர அவர் பட்ட பாடுகளை விவரிக்கையில் அவரது போராட்டக்குணத்தை நாம் நம்மையறியாமல் மனதாரப் பாராட்டுகிறோம்.

நெருக்கடியான காலங்களில் குடும்ப உறுப்பினர்களின் பாசமும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அன்பான வார்த்தைகளும், நம்பிக்கையூட்டும் வாழ்க்கைத்துணையும், ஆதரவான குடும்பமும், இடுக்கண் களையும் நட்பும் ஒரு நோயாளியைப் பாதியளவு குணப்படுத்திவிடும் என்ற வாழ்வியல் உண்மையை அனுபவப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். சரியான மருத்துவரை அணுகுவதும், சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதும் எவ்வளவு பெரிய சவால் என்பதையும் விளக்கியிருக்கிறார்.

புத்தகத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையளித்த மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை, சிகிச்சை முறைகள் போன்றவை மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அறியாமையில் இருக்கும் ஒரு நோயாளிக்கோ அவரது குடும்பத்தினருக்கோ இத்தகவல்களால் ஒரு வழிகாட்டுதல் கிடைக்குமெனில் அதுவே இப்புத்தகத்தின் வெற்றி எனலாம். ஒரு நோயாளி எதிர்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகள், அங்குள்ள அமைதி, பயம் கலந்த சூழல் மற்றும் மருத்துவக் கருவிகளின் இயக்கம் ஆகியவை மிக எதார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களுக்கு ஒரு நிஜமான மருத்துவமனைக்குள் இருக்கும் உணர்வைத் தருகிறது. பல வரிகளை வாசிக்கையில் அந்த உணர்வுகளின் தாக்கத்தைக் கடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. 

வெளிப்புற இடங்களைக் காட்டிலும், எழுத்தாளரின் 'மனம்'தான் இங்கே மிக முக்கியக் களமாகச் செயல்படுகிறது. அவரது எண்ண ஓட்டங்கள், தனக்குள் அவர் பேசிக்கொள்ளும் சுய உரையாடல்கள், வலியால் அனுபவித்த வேதனைகளை அவர் எதிர்கொண்டு சமாளித்த விதம் மற்றும் சிந்தனைகள் போன்ற அக உலகப் போராட்டங்களை நேர்மையாக வெளிப்படையாக நம்முன் வைத்திருக்கிறார். வேண்டாத சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவர் உருவாக்கிய TUFAN என்பது என்னவென்று புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ள ஒன்று. துஃபான் என்றால் சூறாவளி என்று அர்த்தம், ஆனால், இந்த சூறாவளி நம்மை அமைதிப்படுத்தும்.

புற்றுநோய் என்றில்லை.. எந்த நோய் வந்தாலும் எத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது, நோயை எதிர்த்துப் போராடும் மன உறுதி, வாழ வேண்டும் என்ற அவா, மற்றும் போராட்டக் குணம் ஆகியவை வேண்டும் என்பன புத்தகம் வலியுறுத்தும் மிக முக்கியக் கருத்துகளாக அமைந்திருக்கின்றன. உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களையும், அசாதாரணமான அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது உயிரைக் காக்கும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. மார்பகப் புற்று நோய் என்பது பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் தாக்கும் என்பதே பலருக்குத் தெரியாத நிலையில் அந்நோயை எவ்வாறு எதிர்கொள்வர்? அப்படிப்பட்டவர்களின் பயத்தைத் தெளிவித்து நம்பிக்கையூட்டும்  பகிர்வே இப்புத்தகம்.

Tuesday, 25 August 2026

சாரல் துளிகள்..


வென்றவர்களிடமும் தோற்றவர்களிடமும் இரண்டே கதைகள்தான் உள்ளன. உலகிற்குத் தெரிந்த கதை ஒன்று. அவர்களும் மனசாட்சியும் மட்டுமே அறிந்த இன்னொன்று.

யாரோ எரித்துக்கொண்டிருக்கும் சொற்தீயின் அடையாளம் தெரியாத சாம்பல் துகள்கள் படிந்து சிதைக்கின்றன இன்னொருவரின் வாழ்வை. அத்தனை பேருக்குமாய்ப் பெய்யும் ஒரு மழை துளிர்க்கச்செய்கிறது மறுபடியும்.

வானத்தின் சுருக்குப்பையில் ஔிந்துகொண்டு மண்ணின் தாகத்தை வேடிக்கை பார்க்கிறது மழை. வெயிலைச் சேமிக்கும் மேகம் கானல்நீரைக் குடித்துவிட்டு நகர்கிறது.

இல்லையெனாமல் கொடுத்துக்கொண்டிருந்ததால், கர்ணனைப்பற்றி உலகம் புரிந்து கொண்டது. ஒருமுறையேனும் கொடுக்க மறுத்திருந்தால் உலகத்தைக் கர்ணன் புரிந்து கொண்டிருப்பான்.

தோல்வியடையும்போது நம்மீது இரக்கங்கொண்டு நமக்கு ஆறுத்ல் கூற நம்மை விடச் சிறந்த நட்பு வேறில்லை. அதே சமயம், தன்னிரக்கம் என்பது சுய பரிதாபச்சேற்றில் மூழ்குவது அல்ல; சுய அன்பெனும் கயிற்றின் உதவியால் மீட்டுக்கொள்வதாம். 

உழைப்பு என்பது ஏதோ ஒரு இலக்கை அடைவதற்கான வழி மட்டுமல்ல, நம்மால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை நமக்கே அறியவைக்கும் தேடலும் அதுவே.

தடைகளை எதிர்கொள்ளும் துணிவிருந்தால், தடுக்கி விழவைக்கும் பாதையில் கூட பயணித்து சரியான இலக்கைச் சென்றடையலாம். 

ஒருபோதும் நியாயத்தின் பக்கம் நில்லாமல் தனக்கு யாரால் லாபம் என்பதை மட்டும் கருதி அவர்கள் பக்கம் நிற்கும் சுயநலமிகளை அடையாளம் கண்டு விலக்குவதும், வாழ்க்கைப்பாடங்களில் ஒன்றே.

இருள் கண்டு அஞ்சாது பொறுமையுடன் சரியான தருணத்திற்காய்க் காத்திருந்து ஆர்ப்பாட்டமில்லாது மலர்ந்து மணம் பரப்பி அனைவரையும் கவரும் இந்த மல்லிகையின் அமைதியான ஆளுமைதான் என்னே!

தன்முன் வந்து நிற்கும் அழகையும் விகாரமாய்க் காட்டும் ரசமிழந்த துருப்பிடித்த கண்ணாடிக்கும், பிறரின் நிறைகளைக் காணாது குறைகளையே காணும் விகாரங்கொண்ட மனதுக்கும் வித்தியாசமில்லை.

Friday, 7 August 2026

கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு வெண்பாப்போட்டியில் பரிசு பெற்றது,


ஃபேஸ்புக்கில் Tadrupa Events என்போர், கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி தினந்தோறும் ஒரு ஈற்றடியைக்கொடுத்து அதற்கு வெண்பா எழுதும் போட்டியை நடத்தி வருகின்றனர். இப்போட்டி ஒரு வருடத்திற்கு நடக்கவிருக்கிறது. 

42ம் நாள் (04-08-2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "எப்படிச் சொல்வேன் இதை" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.


எனது வெண்பா:
செப்பரிய பேரன்பைச் சிந்தை தனில்நிறைத்து 
ஒப்பற்ற இன்பம் உவந்தளித்தாய் - எப்பொழுதும் 
தப்பாமல் என்னுள்ளே தங்கிவிட்ட பேரன்பே 
எப்படிச் சொல்வேன் இதை.

Thursday, 6 August 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் வழங்கியிருந்தார். "விடுதலை வீரரை வாழ்த்து" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.


தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

அடிமைத் தளைதொலைத்து அன்னியரை ஓட்ட
குடிமை நலம்வாழக் கூடி - கடிதாம்
கெடுதல் பொறுத்துக் கொடுவினை தாங்கும்
விடுதலை வீரரை வாழ்த்து.

செங்குருதி சிந்திச் சிறைவாசம் தான்ஏற்று
மங்காத வான்புகழை மாநிலத்தே - இங்கு
நெடுநாள் சுமக்கின்ற நேர்மைச் சுடராம்
விடுதலை வீரரை வாழ்த்து.

இன்னுயிரைத் துச்சமாய் எண்ணியும் இந்நாட்டின்
நன்னலம் நெஞ்சில் நயந்துநின்றும் - என்றும்
நெடுநாள் கனவை நனவாய் விளைத்த
விடுதலை வீரரை வாழ்த்து.

சுடுகுண்டு வான்மழையாய்த் தூவினும் அஞ்சான்
நடுக்கடல் வெஞ்சிறையும் நன்றே - ஒடுக்கும்
கெடுமதியை வீழ்த்தி கொடுங்கோல் தகர்த்த
விடுதலை வீரரை வாழ்த்து.

Sunday, 26 July 2026

காவூ - ராமசந்திரன் உஷா (புத்தக மதிப்புரை)


நூல்: காவூ
ஆசிரியர்: ராமசந்திரன் உஷா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்

ராமசந்திரன் உஷா எழுதிய ‘காவூ’ நாவல், தேநீர் பதிப்பகம் – சித்தாவரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இது கடந்த நூற்றாண்டின் இந்திய வரலாற்றையும், ஒரு எளிய பெண்ணின் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பிணைத்து எழுதப்பட்ட ஓர் அழுத்தமான சமூகப் புனைவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் விரிந்து, நெருக்கடி நிலை காலம் வரை நீளும் இந்நாவல், சமூக யதார்த்தத்தையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக நுட்பமாகப் பேசும் ஒரு முக்கியப் படைப்புமாகும். 1933 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில், ஒரு மாத்வக் குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்நாவல், காவேரி எனும் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது.

நாவலின் ஆகப்பெரிய பலமே இதன் நாயகியான 'காவூ' என அழைக்கப்படும் காவேரி என்ற எளிய பெண்தான். ஒரு சாதாரணப் பெண், நாட்டின் மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கும் சமூகக் கொந்தளிப்புகளுக்கும் இடையே தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கிறாள் என்பதை நூலாசிரியர் நெகிழ்ச்சியாகச் சித்தரித்துள்ளார். காவேரியின் வாழ்க்கை ஒரு தியாகமாகவோ அல்லது அபலைக் கோலமாகவோ சித்தரிக்கப்படாமல், அவள் தன் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் மையமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் போராடினாலும் இறுதியில் அவள் வாழ்வில் மிஞ்சியது என எதுவுமில்லை, தனது ஒரு குழந்தையையாவது நன்றாக வாழ வைத்துவிட்ட திருப்தியைத்தவிர.

நாவலின் தொடக்கத்தில், பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்க்கும் அறியாமை நிறைந்த, மழலை மாறாத ஒரு சிறுமியாக காவூ நமக்கு அறிமுகமாகிறாள். ஆண்-பெண் உறவு பற்றியோ அல்லது திருமண வாழ்வு பற்றியோ எவ்விதப் புரிதலும் இல்லாத வயதிலேயே அவளுக்குக் குழந்தை மணம் செய்விக்கப்படுகிறது. வயதுக்கு வராத காரணத்தால் பிறந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் அவளது தொடக்கக் கால வாழ்க்கை, அந்த காலகட்டத்து எளிய மற்றும் படிப்பறிவில்லாத சராசரி இந்தியப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவே அமைகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். கணவன் சரியானவனாக அமையாத காரணத்தால் உடலாலும், மனதாலும் புண்பட்டு, பிள்ளைகளின் வாழ்வும் சரியாக அமையாமல் அவர்களில் இருவரைப் பறிகொடுத்து என அவள் படும் துயரங்கள் அநேகம். எவ்விதப்பொருத்தமும் இல்லாமல் நடந்த அவளது திருமணத்தால் துன்பங்களையே அனுபவித்த அவளுக்கு ஒரே ஆறுதல் அன்பும் அனுசரணையுமாய் அமைந்த மாமியார் மட்டுமே. 

அடக்குமுறைகள் நிறைந்த அன்றைய வாழ்வியலிலிருந்து, விரும்பியதைச்செய்யும் இன்றைய வாழ்வியலை அடைவதற்குப் பெண்கள் கடந்து வந்திருக்கும் தூரமும், அவர்கள் அனுபவித்திருக்கும் வலியும் மிகப்பெரியது. அந்த தூரத்தைக்கடக்க பெருமுயற்சி எடுத்த பெண்கள் பலர். அவர்களுக்கு வழிகாட்டிய ஆண்களும் பலர். அவர்களின் பிரதிநிதியாகவே அம்மாளு, வாசு பாத்திரப்படைப்புகள் விளங்குகின்றனர். தங்கைக்குக் கடைசி வரை உறுதுணையாக வாசு இருப்பதும் அவளுக்குக் கல்வியின் அருமையை உணர்த்தி எழுதப்படிக்கத்தெரியாதவளாக இருந்தவளை, கடிதம் எழுதும் அளவுக்கு முன்னேற்றுவதும் சிறப்பு.  

இந்நாவலின் மற்றொரு தனித்துவமான சிறப்பு, புனைவோடு நிஜ வரலாற்று ஆளுமைகள் இயல்பாகக் கலந்து வருவதாகும். மகாத்மா காந்தி, இராஜாஜி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தோழர் மன்னார்குடி சீனிவாச ராவ் போன்ற அரசியல் மற்றும் சமூகப் போராட்டவாதிகளும்; காஞ்சி பெரியவர் போன்ற ஆன்மீக ஆளுமைகளும்; ராம்நாத் கோயங்கா, 'சோ' போன்ற பத்திரிகையாளர்களும்; ஜெமினி கணேசன், வகிதா ரஹ்மான், மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்ற திரையுலகப் பிரபலங்களும் கதையின் போக்கில் இயல்பாக வந்து செல்கின்றனர். இது வாசகருக்கு அந்தந்தக் காலக்கட்டத்திற்கே நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது.

வரலாற்றின் பின்னணியில் மனித உணர்வுகளையும், ஒரு பெண்ணின் அகப்பயணத்தையும் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு தீவிர வாசகரும் தவறவிடக் கூடாத ஒரு சிறந்த நாவல் இது. கால நதியில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் அதிலேயே நீந்தக் கற்றுக்கொள்ளும் ஒரு சாமானியப் பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டமே காவூவின் ஒட்டுமொத்த வடிவமாகும். 

டிஸ்கி: புத்தக மதிப்புரையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Wednesday, 1 July 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை பாவலர் கருமலைத் தமிழாழன் வழங்கியிருந்தார். "உழைப்பே தரும்நல் உயர்வு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 

தேர்வாகி பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

கல்லாமை நீக்கிக் கருத்தூன்றி நாளும்நற்
சொல்லாளன் போலவே சொல்லெடு- நல்லாய்
விழைவொடு நாள்தொறும் வீறுகொண்டு கற்பாய்
உழைப்பே தரும்நல் உயர்வு

ஊழைநம்பிச் சோம்பி உலோபர்பின் ஏகாதோர்
கூழைபோல் கும்பிட்டுக் கோராதோர் - வாழி
தழைத்திடச் செய்யும் தகவோர்க்கு என்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு

நற்பேறு நாளும் நடைவந்து நிற்காது
பொற்பேறாம் நற்செயல் பூணுக - மற்றோ
பிழைக்க வழிகண்டு பேறுகள் காண்பாய் 
உழைப்பே தரும்நல் உயர்வு.

சோம்பல் களைந்து சுறுசுறுப்பாய் நாளும்நாம்
ஆம்பல் மலராய் அகமலர்ந்(து) — ஓம்பும்
விழைவு கருதி விவேகமாய் ஆற்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு.

LinkWithin

Related Posts with Thumbnails