Showing posts with label சாரல் துளிகள். Show all posts
Showing posts with label சாரல் துளிகள். Show all posts

Monday, 16 March 2026

சாரல் துளிகள்

                      

கொட்டு முழக்கத்துடன் பிறர் எதிர்காலத்தைக் குறி சொல்லும் பூம்பூம் மாட்டுக்காரனை மௌனமாகத் தொடர்கிறது தன் எதிர்காலம் அறியா மாடு.

அத்தனை ஈரத்தையும் அள்ளிப்பருகிய அக்னித்துளிகளைச் சேகரித்த மனது, உருகியுருகி இறுகியது.

பேசிப்பேசியே ஒன்றை நீர்த்துப் போகவும் செய்ய முடியும், அடர்த்தியாக்கவும் முடியும். சலிக்காமல் பேசித்தள்ளுகின்றன வாய்கள், அலுக்காமல் செய்தியைக் கடத்துகின்றன கண்களும் காதுகளும், ஒன்று விடாமல் சேமித்துக்கொள்கிறது மூளை. முடிவெடுக்க வேண்டிய மனமோ திணறிக் களைத்து கடைசியில் ஜடநிலைக்குப்போய் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' எனத் தலையாட்ட ஆரம்பிக்கிறது.

காலில் பட்டு நசுங்கவேண்டியிருக்கும், உலர்ந்து சருகாக வேண்டியிருக்கும் என்ற இயற்கை நியதிகளைப் பொருட்படுத்தாமல் தன்பாட்டுக்கு மலர்ந்து உலகைப் பார்க்கின்றன மலர்கள்.

முட்டைப் பருவத்தில் விட்டுச்சென்ற குழந்தைகளைத் தேடித்தேடி ஒவ்வொரு தாவரத்திற்கும் அலமுறையிட்டு அழுது அலைகிறது பட்டாம்பூச்சி.
ததும்பும் நீரைத் தளும்பிச் சிந்திவிட்டு ஓடுகிறது லாரி. பொசுங்கிய பாதங்கள் ஒற்றியொற்றி ஏந்திக்கொள்கின்றன அன்பின் துளிகளை.

அவரவருக்கென்றோர் இடத்தை
அடையப்போராடும் கிளியந்தட்டில்
தனக்குரிய பீடத்தை 
எப்படியோ கண்டறிந்து
அமர்ந்து விடுகின்றன சாமிகள்.

அன்பு எதையும் வற்புறுத்தாது, அன்பின் பெயரால் நடத்தும் ஆக்கிரமிப்போ ஒன்றுமில்லாமல் வழித்துத் துடைத்துவிடும்.

கனிகளின் இனிமையை மட்டும் சிலாகிப்பவன், அதன் பின்னிருக்கும் இயற்கையின் உழைப்பை அறிந்தும் அறியாதவனாகவே காட்டிக்கொள்கிறான்.

காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் வித்தையோடு.

Sunday, 14 December 2025

சாரல் துளிகள்


அறியாமலே போய்விட்ட கண்ணீருக்கு எங்ஙனம் ஆறுதலளிப்பது? மலராமலே உதிர்ந்து விட்ட மொட்டுகளின் நறுமணத்தை எங்ஙனம் திறப்பது? முகிலுள்ளிருக்கும் மதியை எங்கிருந்தோ நோக்கியிருக்கும் அல்லியின் தவத்தை யாரே கலைக்கவும் கூடும். பிரிந்திருந்தும் முழுமை கொண்டிருப்பவற்றின் பூரணத்துவத்தைப் புரிந்தவர்தான் யார்.

பறவைகளெல்லாம் தனக்காகத்தான் வந்தன என எண்ணி ஏமாந்தது இறுதியில் தானியங்களை இழந்து தனித்து விடப்பட்ட வயல்.

தனது காலில் இடித்துக்கொள்ளாதவரையில், பாதையிலிருக்கும் இடையூறைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. தான் பாதுகாப்பாய் இருக்கும் வரையிலும் இன்னொருவரின் குடையிலிருக்கும் பொத்தல்களைப்பற்றி அக்கறை கொள்வதுமில்லை. அனைவருக்கும் பொதுவாகப்பொழிந்த வெயிலும் மழையும் எல்லை மீறிய ஓர் தினத்தில் கோர்த்துக்கொண்டன அத்தனை கரங்களும், பாகுபாடுகளை மறந்து.

நடக்கும் வழியெங்கும் பூக்கள் மட்டுமே இருக்க வேண்டும், முட்கள் கூடாதென்பது ஆசை. இலைகள் கூட இருக்கக்கூடாதென்பது பேராசை.

அத்தனை ஊசிகளால் தைத்து ஓர் மரகதக்கம்பளத்தைப் போர்த்துகிறது மழை.

எங்கோ ஒரு வனாந்திரத்தின் அந்தகாரத்தில் யாருக்காகவும் அன்றி, தனக்காக மட்டும் பூத்திருக்கும் மலருக்குக் கம்பீர மணம்.

இரையை இறுக்கும் மலைப்பாம்பைப்போல் இவ்வாழ்வை இறுக்கித் திணறச்செய்கின்றது பித்தேறிய மனது. 

பாலைப்பூக்களென கொஞ்சங்கொஞ்சமாய் உதிர்ந்து படியும் நேசத்தால் இளகுகின்றன அன்பின்மையின் இறுகிய சொற்கள்.

சொல்லின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள முயலாமல், மேலோட்டமாகப் பொருள் கொள்வதென்பது, உள்ளிருக்கும் பருப்பின் ருசியை அறிய முற்படாது காயின் தோலை ருசிப்பதாகும். 

சற்றுத் தாமதமாகவே உதிக்குமாறு நிலவிடம் வேண்டிக்கொண்டது குழந்தை. நிலாச்சோறு ஊட்டும் அம்மை இன்னும் வேலையிலிருந்து வரவில்லையாம்.

Friday, 18 July 2025

சாரல் துளிகள்

அன்பெனப்படுவது..
கைச்சூட்டால் கூட வதங்கிவிடாமல் ஒரு மலரை உள்ளங்கையில் பொத்திப் பாதுகாப்பது.

இளைப்பாறிய அத்தனை பறவைகளும் பறந்து சென்றபின், இலைகளெல்லாம் உதிர்ந்தபின், கிளைகளும் கழிந்து அடிமரம் மட்டும் எஞ்சியபோது வேரடி மண் இறுக்கிக்கொண்டது தனது பந்தத்தை.

பனியை விதைத்து நிலவொளியை அறுவடை செய்யக் காத்திருந்தவனின் எஞ்சிய கனவுகளில் ஒரு ஊதாப்பூவைச் செருகுகிறது வெயில்.

அன்பு, அழகு, குணம், உதவும் மனம், திறமை போன்றவற்றில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ பிறருடன் பழகவும் நட்பு பாராட்டவும் தகுதிகளாய்க்கொள்கின்றனர் சிலர். பணம் ஒன்றை மட்டுமே அவ்வாறு நெருங்குவதற்கான ஒரே தகுதியாய்க் கொள்கின்றனர் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள் போன்ற சிலர்.

அங்கெங்கெனாது எல்லா இடங்களிலும் நீக்கமற வந்துவிட்டது காசில்லா பணப்பரிமாற்றம். வாய்க்கரிசிக்கும் நெற்றிக்காசுக்கும் கூட க்யூஆர் கோட் வந்து விட்டதென்றால் நிம்மதியாகப் போய்விடும். 

நாலு பேர் என்ன சொல்வார்கள்? சமுதாயம் நம்மை எப்படிப்பார்க்கும்? என்ற அச்சத்திலும் குழப்பத்திலும்தான் பல தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சமுதாயம் என்பதும் அதிலிருக்கும் நாலு பேர் எனப்படுபவர்களும் வேறு யாருமல்ல.. நீங்களும் நானும்தான். புறம் பேசுதல், முன்பின் அறியாதவர்களைப்பற்றி மனம் போன போக்கில் எடைபோடுதல், வன்மம் வளர்த்தல் போன்ற பல கல்யாண குணங்களை எப்போது விட்டொழிக்கப்போகிறோம்? எப்போது திருந்தப்போகிறோம்?!

வலியைச்சொல்லி அழக்கூட விதியற்றுப்போனவர்களின் கண்ணீர்க்குரலை மௌனமாய்க் கேட்டுக்கொள்கிறது தலையணை.

ஓங்கியோங்கி அறைந்து கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறது மழை. பழம் விட மறுத்து பிடிவாதமாய் இன்னும் இறுகிக்கொள்கிறது திறவா நெடுங்கதவம்.

ஒன்றுக்கும் மதிப்பில்லாத உறுத்தலை விலைமதிப்பில்லா முத்தாக்கி வெல்கிறது சிப்பி. உறுத்தல்களை எண்ணியெண்ணி விலைமதிப்பில்லா நேரத்தையும் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் தோற்கிறோம் நாம்.

உளி தொடா ஆழத்தில் புதைந்து கிடக்கிறது சிற்பியின் மனம் தொட்டுக்கொணராத இன்னொரு சிலை.

Sunday, 27 April 2025

சாரல் துளிகள்

மண்ணிறங்கிய முதல் மழைத்துளியைக் கண்டது ஒரு நொடி. காலடித்தடத்தில் ஊறும் நீரைக்கண்டது மறு நொடி. இரண்டுக்குமிடையே குளிர்ந்து கிடக்கிறது மேகத்தின் வாழ்வு.

விழி மூடி ஓய்வெடுக்க ஏங்கும் களைத்தவளுக்கு, தலை சாய்க்கக் கிடைத்திருப்பது இலவம் பஞ்சுத்தலையணையா அல்லது மீன் கூடையா என்பது ஒரு பொருட்டேயல்ல. அவளுக்கு அதுவும் ஒரு தாய்மடியே.

பலி கொள்ளும் வரை.. இரையுடன் சற்று விளையாடுகிறது புலி, தப்பிக்க கருணை காட்டி நேரமளிக்கிறது சிலந்தி, வாத்சல்யமும் பாசமும் காட்டுகிறான் மனிதன்.

ஒருவர் தனது கடமைகளிலிருந்து விலக பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் வழுவாமலிருக்க தன்னறம் ஒன்றே காரணமாய் இருக்க முடியும்.

புரிந்தும் புரியாதவர்போல் அராஜகம் செய்வோரே, சாதுர்யமாய்க் காய் நகர்த்தி எதிராளியைக் குழப்புவதில் முன்னணியில் இருக்கின்றனர்.

இயல்பிலேயே கசக்கும் வேப்பம்பூவின் அமுதையும் அதற்கான தேனீ எங்கிருந்தாவது தேடி வந்துவிடுகிறது.

கண்ணாடி வளையல்களும் கொலுசுகளும் எழுதும் இசைக்குறிப்புகளுக்கான நுட்பங்கள் விடுவிக்குந்தோறும் இன்னும் இறுகிக்கொள்கின்றன.

எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் கடலில் படகைச்செலுத்த இயலாது, அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதில் உருப்படியான சிந்தனைகள் பிறக்காது.

தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாதவர்களே பிறரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் குலைப்பதில் முதலிடம் வகிக்கிறார்கள்.

நமது அபிமானத்தைப் பெறுவதற்காக இன்னொருவரைத் தரம் தாழ்த்துபவர்கள் ஆபத்தானவர்கள். வேறொருவரின் அபிமானத்தைப் பெறுவதற்காக என்றாவது நம்மையும் தரம் தாழ்த்தக்கூடும் இவர்கள். அன்பைப் பூசிக்கொண்டிருக்கும் அவர்களை அடையாளம் காண்பதும் எளிதல்ல.

Tuesday, 3 December 2024

சாரல் துளிகள்


பறக்க வேண்டிய தூரமெல்லாம் ஒரு பொருட்டேயில்லை, இளைப்பாற ஏதுவாய் நட்சத்திரங்கள் சில கதைகளுடன் வந்தால் போதும்.

முளைத்துப் பலன்தருமென விதைத்தவற்றையெலாம் உரமாய் உண்டு, தழைத்தோங்குகின்றன களைச்செடிகள். வீரியமற்ற விதைகளுக்கும், சாமர்த்தியமிக்க களைகளுக்கும் நடக்கும் போட்டியை அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது தாங்கும் நிலம்.

அபாயத்திலிருந்து தப்பித்ததும் மனிதன் செய்யும் முதல்வேலை அச்சூழலைப் பகடி செய்வதுதான். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் தானடைந்த மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு அச்சூழலைக் கடந்து செல்ல முயல்கிறான்.

தேடல் உள்ள உயிர்களெல்லாம் தேடித்தேடிக் களைத்திருக்க, ஆர்வமற்றிருப்பவனின் மடியில் விழுகிறது அருங்கனி.

இருளும் ஔியும் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தன. எங்கும் வியாபித்திருந்த இருளை ஔி தேடிக்கொண்டிருக்க, தனக்குள்ளிருந்த ஔியை நொடியில் தொட்டிழுத்துப் போட்டது இருள்.

தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் அரிவாள் அதன் பின் அதை வெட்டியும் சாய்க்கிறது. செய்த தவறென்னவென்று கடைசி நிமிடங்கள் வரை யோசிக்கிறது குற்றமற்ற மரம்.

ஒரு வாசலை கான்க்ரீட்டால் பூசி மூடி, மறுவாசலைத் திறக்கும் இறைவன் அதன் சாவியைத் தொலைக்குமுன் பிடுங்கிக்கொண்டு நுழைந்து விடுங்கள். இனியெப்போதும் அடையா நெடுங்கதவமாக அது இருக்கட்டும்.

ஆசை, கோபம் முதலானவை கூர் கொண்டிருக்குமிடத்தில் அறிவு மழுங்கி விடுகிறது. 

கனவுகளை நனவாக்க முயற்சியேதும் செய்யாமல் வெறுங்கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் தங்கள் தோல்விக்குப் பிறரைக் காரணம் காட்டி, தங்களைச் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

இறுதியாக தனது உடும்புப்பிடியை இன்னும் இறுக்கி, தலை கோதியது அவரவர் இயல்புடனேயே  அவரவரை நேசிப்பதாகச் சொன்ன அன்பு. காயங்களிலிருந்து ரத்தம் கசிய மூச்சுக்காற்றுக்காய் தவித்துக்கொண்டிருந்தனர் அவரவரும்.

Thursday, 5 September 2024

சாரல் துளிகள்


கனவுகள் நொறுங்கும் ஒலி காதுகளுக்குக் கேட்பதில்லை.

நனவின் இருண்மைகளுக்குள் அடைகாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன மேலும் பல கனவுகள்.

ஆடியில் தன் பிம்பத்தை நோக்கியவாறு வெகுநேரம் நின்றிருந்தது நனவு. பொறுத்திருந்து பொறுமையிழந்து நனவின் கைகோர்த்து நடக்கத்தொடங்கிய பிம்பம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது கனவென.

நிராசையாகப் போகக்கூடியவை எனத் தெரிந்தே காணும் கனவுகளுக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசு.

பூவாகிக் காயாகிக் கனியக் காத்ததைப் பறிகொடுப்பதையொத்ததே, கனவு வளர்த்து நிதர்சனத்துக்காகப் பலி கொடுப்பதும்.

கனவுகளால் அலங்கரிக்கப்பட்டு கனவை நோக்கி இட்டுச்செல்லும் கனவுப்பாதையில் அடிக்கொரு வேகத்தடை இடறத் தயாராய்.

கலையாத கனவொன்றை வேண்டி நின்றால், சுக்குநூறாய்க்கலைத்த துண்டுகளையள்ளிக் கையில் நிறைத்து, இணைத்து அடைந்துகொள் என்னும் விதியே.. அடியெது முடிவெது என்றாவது சொல்லிப்போ. 

யார் தொலைத்த கனவோ?!.. வழி மறந்து தவித்துக்கொண்டிருந்ததை யாரோ இன்னொருவர் அபயமளித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்.

கனவின் அடியொற்றி ஓடியும் கை நழுவி விட, குற்றப்பத்திரிகை வாசித்தபடி அமர்ந்திருப்பவரின் கண்ணுக்குள் உற்று நோக்கி, 'என்னையடையும் இலட்சியத்தைத் தொலைத்தது நீயா நானா?'வெனக்கேட்கிறது மீளவும் வந்த கனவு. 

தன்னிடம் வருபவர்களிடம் அவ்வப்போது பலியும் கேட்கிறது அடிக்கொரு தரம் சன்னதம் கொண்டு ஆடியபடியிருக்கும் உக்கிரமான ஆதி கனவிலிருந்து கிளைத்த அந்த அதியுக்கிரக் கனவு.

Sunday, 23 June 2024

சாரல் துளிகள்..


வானவில்லை வரைந்து முடித்தபின் வண்ணங்குழைத்த தூரிகையைச் சற்றே உதறியது மேகம். வண்ணத்துளிகள் படிந்த சிறகுகளை ஒவ்வொரு பூவிலும் ஒட்ட வைத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்.

நட்சத்திரங்களை இழந்த வானம் கலங்காதிருக்க, மேகங்கள் மட்டும் ஓரமாய்ப்போய் அழுது விட்டு வருகின்றன.

வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தன்னியல்பு கழன்று, இறுதியில் நமக்கே நாம் அன்னியராகத் தெரிகிறோம். சிலர்  அதை பக்குவம் என்கின்றனர், சிலர் அனுபவப்பாடம் என்கின்றனர், சிலரோ திக்குத்தெரியாத உலகில் அப்போது, பழைய தன்னைத் தேடி அலைகின்றனர்.

இன்னொருவரின் அடியொற்றிச் செல்வதுதான் எவ்வளவு சௌகரியமாயிருக்கிறது! வழிசமைத்துச் செல்லும் கால்களில் கல்லும் முள்ளும் குத்துவதை மட்டும் பிறர் காண்பதேயில்லை.

ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும்? என எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள். எத்திசையில் நகர்வது என குழம்பிக்கொண்டேயிருந்தால் முதல் அடியைக்கூட எடுக்க முடியாது.

நேற்றைய சூரியனின் கதகதப்பில் இன்றைய தானியத்தைக் காய வைக்க முடியாது. காலங்கடந்த பின் ஆற்றாமையைத்தவிர வேறேதும் எஞ்சுவதில்லை.

நினைவுகள் சொட்டி நனைந்த வெளியெங்கும் அரும்பும் மொக்குகளை மலர வைக்க முயல்கிறது அதே பௌர்ணமி இரவு, வெடித்துப்பரவுகின்றன  ஓராயிரம் பௌர்ணமி நிலாக்கள்.

ஒளிந்து பிடித்து விளையாடும் குழந்தையைப்போல் மலைக்குகைகளுக்குள் மறைந்து மறைந்து விளையாடுகிறது ரயில்.

சிங்கத்தின் பிடரியையும் யானையின் மத்தகத்தையும் கூட தொட்டுவிட்டு மீண்டுவிடலாம் போலிருக்கிறது, மழையைத்தின்று வெயிலை அருந்தி எரிமலைச்சரிவில் விளையாடும் இந்த மனதை மீட்டுக்கொண்டு வருவதுதான் பெரும்பாடு.

அவரவர் கால்தடங்களைப்பதித்துச்சென்ற மணல் வெளியில் தன் தடத்தையும் வரைந்து சென்றது அலை.

Wednesday, 15 May 2024

சாரல் துளிகள்


அத்தியாவசியத்தையும் ஆடம்பரத்தையும் எதுவென நிர்ணயிக்கும், அதற்கான எல்லைக்கோட்டை வரையறுக்கும் அகக்காரணி மனம், புறக்காரணி வருமானம்.

புகழ்ச்சியை மட்டுமே கேட்டு வளர்ந்தவன், தான் செய்வதெல்லாமே சரிதான் என்ற மனநிலையைக் கொண்டிருக்கிறான். உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என மட்டம் தட்டப்பட்டு வளர்ந்தவன், தன்னால் எதுவுமே ஆகாது என்ற மனநிலையுடன் இருக்கிறான். அவர்கள் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாகச் சொல்லப்படும் வார்த்தைகள் எதையுமே ஏற்பதில்லை என்ற ஒரு புள்ளியில்தான் இருவரும் ஒன்றுபடுகிறார்கள்.

கீழே விழுந்தாலும் காயப்படுவதில்லை நீர், புதைக்கப்பட்டாலும் பெருவீச்சுடன் முகிழ்க்கின்றன விதைகள், சிறைப்பட்டாலும் கீற்றாய் ஔிர்கிறான் சூரியன், மனித மனம் மட்டும் தொட்டாற்சிணுங்கியாய் சிறு இடையூறுக்கும் அவ்வப்போது சுணங்குகிறது.

எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம், காயப்படுத்தப்படலாம் என்ற நுண்ணுணர்வு அதீத எச்சரிக்கையுணர்வை உண்டுபண்ணுகிறது.

எதிர்காலக் கற்பனைகளில் மிதக்காத, கடந்த கால நினைவுகளை மேயாத, நிகழ்காலத்தின் யதார்த்த வெளியி்ல் காலூன்றி நிற்கும் மனக்குதிரையைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

ஓய்வெடுக்க ஒரு மேகத்திண்ணை கூட இல்லாத நீலவீதியில் மயங்கிக்கிடக்கிறான் செய்யோன், மனம் பொறுக்காமல் விசிறுகிறது ஒரு சிறு பறவை.

எதைப்பேச ஆரம்பித்தாலும் அறிவுரையில் முடிப்பவர்கள் அறிவுரை கூற ஆரம்பித்தால் எதைப் பேசி முடிப்பார்கள்?

எங்கோ பொழிவதற்காக இங்கிருந்தே கருக்கொள்ள ஆரம்பிக்கின்றன மேகங்கள், மொத்தமாய்ப் பறிகொடுப்பதற்காய் துளித்துளியாய்ச் சேகரிக்கும் தேனீக்கள் போல்.

பற்றிப் படர்ந்து செல்லும் பசுங்கொடிக்குத் தன் வீடென்ன? பிறர் வீடானாலுந்தானென்ன? நல் கொழுகொம்பொன்றே அதற்குக் குறி.

ஒரு செயலைத் திட்டமிடும் அதே நேரத்தில் மாற்றுத்திட்டத்தையும் கைவசம் வைத்திருப்பது நல்லது. ஒன்று எதிர்பாராதபடி நடக்கவில்லையானாலும் இன்னொன்று கை கொடுக்கும். இது வேண்டாத மன உளைச்சலைத் தவிர்க்கிறது.




Saturday, 3 February 2024

சாரல் துளிகள்


அலைகளற்ற கடலாய் நிச்சலனமாயிருக்கும் மனதில் பாளம் பெயர்த்து எழுந்தமையும் பழம்நினைவால் பிறக்கும் சுனாமியை ஆற்றுப்படுத்துகிறது அறிவின் கரம்.

விலக்கி விலக்கிப்போனாலும், குளத்துப்பாசி போல் நெருங்கிச்சூழ்ந்து வருபவை கழிவிரக்கமும், குற்றவுணர்வும், பழியுணர்வும். விலக்கிக் கரை சேர்பவர் சிலர், அமிழ்ந்து கிடப்பதே சுகமென எண்ணி மூழ்கிப்போகிறவர் ஒரு சிலர் எனில்  மீட்க வருபவரையும் சேர்த்து மூழ்கடிக்கும் சிலருமுண்டு.

உணர்ச்சி வேகத்தில் அறியாமல் உதிர்க்கும் சொற்களே கூட ஒருவரைச் சிக்க வைக்கும் தூண்டிலாகி விடுவதுண்டு. 

அன்பே வலையாய் ஆதரவுச்சொற்களே இரையாய் அக்கறையே மாயையாய் விரித்து வைக்கும் வேடனிடமிருந்து, புலி வேடமிட்டு சாதுர்யமாய் நழுவித்தப்புகிறது மான்குட்டி.

உணர்வு பூர்வமாகச் சிந்திப்பவரை விட அறிவு பூர்வமாக, தர்க்க பூர்வமாக, பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுப்பவர் எவ்வகையான புதிய சூழலையும் சமாளித்து தீர்வு காண்பார்.

கூடவே செல்லும் எஸ்கலேட்டர் படிக்கட்டுகளாக நாம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம், ஆனால் உண்மையில், உபயோகித்தபின் அங்கேயே விட்டுச்செல்லப்படும் சாதாரண படிக்கட்டாகவோ அல்லது எட்டி உதைக்கப்படும் ஏணியாகவோதான் இருக்கிறோம். 

பொங்கிப்பெருக்கெடுக்கும் வெள்ளமும் உள்ளமும் ஒன்றே. அத்தனைக்கும் பின் கசடற நிர்மலமாய் அமைதியாய் தெளிந்திருக்கும்.

பட்டத்தின் வாலைப்போல் சீராக இருப்பதைவிட்டு, அதன் நூல்கண்டைப்போல் ஏன் இந்த வாழ்க்கை தன்னைச் சிக்கலாக்கிக் கொள்கிறது? பொத்திப் பாதுகாக்கும் கரங்களை விடுத்து முரட்டுக் கரங்களையே ஏன் அந்த நூல்கண்டு சென்றடைகிறது? விலகிச்செல்வதைச் சீண்டாத கரங்கள், தம்மைச் சரணடைபவற்றைச் சிதைக்கும் கொடூரம் கொள்வது ஏன்? மாயக்கயிற்றால் விரல்களை ஆட்டிப்படைக்கும் மனமல்லவோ சூத்ரதாரி. திருத்தப்படாத தீர்ப்புகளுக்குப்பின் சிதைந்து கிடக்கிறது நூல்கண்டு.

துரத்தித் துரத்திக் குரைத்துக் களைத்து விழும் நடுநிசி நாய்களைக் கண்டுகொள்ளாமல் தனக்கான உயரத்தில் கம்பீரமாகப் பெருஞ்சத்தத்துடன்  பறந்து செல்கின்றன விமானங்கள். பதில் கிடைக்கப்பெற்றும் புரிந்து கொள்ளாத ஞமலிகள் அடுத்த விமானத்தைத் துரத்த ஆரம்பிக்கின்றன.

குறை சொல்வதை மட்டுமே  நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் செவி சாய்த்துக்கொண்டேயிருந்தால் பறத்தல் முடங்கி சிறகுகள் கருகி இறுதியில் நடையற்றுக்கிடக்க நேரிடும்.

Sunday, 3 December 2023

சாரல் துளிகள்


உறுமீன் வரும்வரை காத்திருக்காத கொக்கு ஓடுமீன்களையெல்லாம் வேட்டையாடுகிறது.. பேராசையோ!.. கொடும்பசியோ!!..

நிஜத்தின் ஔியைத் தன்னுள் ஔித்தும் அளித்தும் விளையாடும் இருண்மை கொண்ட பிரதிகள்தானே நிழல்கள்.

'எங்களை நம்புவதேயில்லை' என சடைத்துக்கொள்வதைத்தவிர வேறொன்றும் அறியாதவை மண்குதிரைகள். ஏனென்றும் புரிந்து கொள்வதில்லை, நம்பியவர் தத்தளிப்பதையும் கண்டுகொள்வதில்லை.

வாழ்வின் முக்கியமான கணங்களில் ஒரு திறப்பிற்காகக் காத்திருப்பதுவும், சூரியகிரகணத்தின் உச்சத்தில் நிகழும் வைர ஒளிச்சிதறலாய் ஒரு நொடியில் அத்திறப்பு நிகழ்ந்து முடிந்து விடுவதும் இவ்வாழ்வு நமக்களிக்கும் தரிசனம்.

பாரம் சுமக்கச் சோம்பல்படும் பொதிமாட்டுக்கு தினமும் வயிறு நிறையாது.

காற்றுக்காய் வாயைத் திறந்துதிறந்து மூடும் மீனைப்போல், மின்னிக்கொண்டு விரைகிறது ஏதோவொரு விமானம்.

பிறந்து விழுந்து எழுந்ததிலிருந்து மலர்களால் ஒத்தடம் கொண்டு, முட்களால் காயப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு, நொந்து நூடுல்ஸாகி, தென்றலில் மிதந்து, புயலில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் வீழும் வரையான சம்பவங்களின் கனமே 'அனுபவஸ்தர்' என்ற கிரீடமாக அழுந்தி அமைகிறது. கனக்கும்போது 'இறக்கி வைக்க மாட்டோமா' எனப் பரிதவிப்பதும், அழுந்தும்போது 'நமக்கு அமையுமா' என ஆவலுறுவதும் மனித மனங்களின் நிறம்.

காண்பதெலாம் கவிதையாகும், கடப்பதெலாம் கதையாகும், கற்பனை தொட்டு அலங்கரித்தால் அத்தனையும் உயிர் கொளும். கருக்கள் சுமக்கும் படைப்பாளியோ பூரண கர்ப்பம் நித்ய ஜனனம்..

அம்மையைத் தேடியலையும் பரிதவித்த கன்றுக்குட்டியின் குரலொலியை அமுக்கிவிடுகிறது நகரத்துத்தெருக்களின் வாகனச்சத்தம்.

பிற குடும்பங்களின் சலசலப்பை வேடிக்கை பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி சில கசடு படிந்த மனங்களுக்கு. உண்மையில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது இம்மாதிரியான வேண்டப்பட்ட விரோதிகளிடம்தான்.

Wednesday, 15 March 2023

சாரல் துளிகள்



எண்ணுந்தோறும் புதிதாய் முளைத்துப் பெருகும் நட்சத்திரங்களுக்கு, தேர்வடம் பிடிக்கும் மக்களின் முகங்கள். எப்படியும் நிலையம் சேர்ந்துவிடும் நிலா.

அங்கிங்கெனாதபடி வியாபித்து தீரா வினை தீர்த்து அருள்புரியும் சொள்ளமாடனுக்கொரு திருநீற்றுக்கொப்பரை காணிக்கையாய் இன்னும் வரவில்லையாம், கழுத்து வரை குறையுடன் குமுறும் மாடனுக்கு மற்றதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

'என்னை நினைவிருக்கிறதா?' எனக்கேட்ட, சிதைந்த பெருந்தேர் வடங்களில் ரதவீதிகளின்  வாசனை.

சொற்களுக்கப்பாற்பட்ட வெறுமை, மௌனத்தைக்கொண்டு தன்னைப் போர்த்திக்கொள்கிறது.

அத்தனைக்கும் பிறகும் மீதமிருக்கும் வாழ்வின் கட்டங்களில் இன்னும் எத்தனை ஏணிகளும் பாம்புகளுமோ! வீழவும் மீளவும் எத்தனை தாயங்களோ! பகடைகளும் காய்களும் உருள்கின்றன அதனதன் விதிப்படி.

முகம் வருடி, கூந்தல் கலைக்கும் மந்தமாருதம் வேண்டிய ஜன்னல் பயணத்தில், குப்பையும் புழுதியும் நாற்றமுமாக மூச்சடைக்க வைக்க, இடைவெளியின்றிச் சாத்தப்பட்ட ஜன்னலுக்கு இப்பக்கம் வெறும் பார்வையாளனாகக் கடந்து போக வேண்டியிருப்பதெல்லாம் தற்செயலோ!! முற்செயலோ!!

விதவிதமாயும் புதிது புதிதாயும் ஏமாறுவதில்தான் மனிதனுக்கு எத்தனை உற்சாகம். 'இனிமேல் ஏமாற மாட்டேன்' எனக்கூறிக்கொண்டே அடுத்த ஏமாற்றத்துக்குத் தயாராகிறான் அவன்.

நான்தான் செய்தேன், என்னால்தான் நடந்தது, என்னைத்தான் அணுகினர் என புகழுக்குப்போட்டியிடும் அதே மனிதர்கள்தான் இகழ் நேரிடும்போது கல்லெறி பட்ட காக்கைக்கூட்டமாய்ப் பறந்து அகன்று விடுகின்றனர்.

அத்தனை பேரையும் உறங்க வைத்து விட்டு, சாலை உறங்குகிறது. கலைக்க மனமில்லாத வழிப்போக்கன் சுருண்டு படுத்துக்கொள்கிறான் மரத்தடியில்.

அற்ற குளம் போல் வெறிச்சோடிக்கிடக்கிறது நட்சத்திரங்களற்ற வானம். கால்களால் தடவித்திரியும் ஒற்றைக்கொக்கைப் போல் தனிமையில் திரிகிறது நிலா.

Thursday, 26 May 2022

சாரல் துளிகள்

வெய்யிலை சலித்து உள்ளே அனுப்புகிறது வலையடித்த ஜன்னல். ஒவ்வொரு கம்பியாய்த் தாவும் அணிற்பிள்ளை விரவிக்கொடுக்கிறது.

சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருப்பவளின் கன்னத்தில் படிகிறது ஜன்னல் கம்பிகளின் நிழல். இப்போது அவள் ஜன்னலில் சாய்ந்திருக்கிறாள். ஆம்.. அப்படித்தானிருக்க வேண்டும். பூக்களைத் தொடுத்துக் காய்ப்பேறிய விரல்களால், பச்சிளம் தளிரை வருடுகிறாள். அன்று ஒரு கிள்ளுப்பூ அதிகமாகவே சூட்டப்பெறுகிறது அந்த உச்சிக்குடுமி.

நேற்றிரவு முகவரி தெரிவித்த தவளையைத்தேடி, இன்று சுடுபகலில் தவ்வித்தவ்விப் போய்க்கொண்டிருக்கும் பாம்பின் மனசை அலைபாய வைக்கிறது எலிக்குஞ்சுகளின் கொண்டாட்டக் கூச்சல். போலச்செய்வதிலாவது ஒரு பாவனையும் முனைப்பும் இருக்கிறது, நகலெடுப்பதில் அதுவுமில்லை.

எழுப்பி எழுப்பி சலித்த இல்லத்தரசி பெருஞ்சத்தமெழ பாத்திரம் துலக்குகிறாள் திங்கட்கிழமை காலையில் தடதடவென எழுந்தோடுகின்றன பூனைக்குட்டிகளும் பிள்ளை குட்டிகளும் ஒரு கைப்பேசியில் அவனும் அவளும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். யார் கண்டது? எதிர் முனையிலிருப்பது யாரோவொருவரின் முன்னாள் காதலாகவுமிருக்கலாம். தலைக்குல்லாவை இழுத்து வீசும் கைக்குழந்தையைத் தோளில் கிடத்தியபடி வெயிலில் நடந்து செல்லும் தாயின் கை குடையாய்ப்படிந்திருக்கிறது சேயின் தலை மேல். சலனமின்றி இருவரையும் அவசரமாய்க்கடக்கிறது, சிறுதுண்டு மேகம்.

வேரோடிப் படர்ந்து கொண்டிருக்கும் அருகின் வனத்தில் திணறிக்கொண்டிருக்கிறது தழைக்கவியலாத ஆலங்கன்று.

சளைக்காமல் நீந்தி உடற்பயிற்சி செய்தாலும் பெருத்துக்கொண்டே போகிறது தொப்பை குறையாத மீன்.

Monday, 28 March 2022

சாரல் துளிகள்


இல்லாத ஈயைத் துரத்திக் கடிக்க முயலும் நாயைப்போல், இல்லாத ப்ரச்னைகளுடன் போராடிச் சலிக்கின்றனர் சில மனிதர்கள்.

இலையென்னவோ மெல்லென வீழ்ந்து விடுகிறது. சுவடின்றி தன்னுள் இணைத்துக்கொள்ள இயற்கைதான் படாத பாடு படுகிறது.

ஜன்னலில் ஒட்டியிருக்கும் வெயிலை தட்டி விட்டுக்கொண்டேயிருக்கிறது இலையின் நிழல். அகன்று விட்டதுபோல் போக்குக் காட்டி மறுபடியும் வந்தமரும் வெயில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் படபடக்கிறது.

சவலைப்பிள்ளையென
கதறிக்கதறி ஓய்கிறது
ஆட்கள்
வெளியே போயிருக்கும் வீட்டிலிருக்கும்
தொலைபேசி.

'கிச்சடி' என்பது வெறும்சொல்
'அர்சிம்பருப்பு' என்பது ஓர் உணர்ச்சிக்குவியல்
"பொங்கல்" என்பது பேரோசையுடன் அறையும் ஓர் அலை.

ஒரு சொல் தீப்பெருக்க ஒரு சொல் தீயடக்க, மனம் கொதித்துத் தளும்பும் நுரை விளிம்பில் தள்ளாடுகின்றன ஒன்றிரண்டு கசந்த சொற்கள். வழியுமோ அன்றி அடங்குமோ!!!! தீ பெருகுமோ அன்றி குளிருமோ!!

பட்டுப்பட்டாய் அவித்த இட்லியைப் பிட்டுப்பிட்டுப் போட்டுக்கொண்டவனுக்கு, லொட்டு லொட்டென்று பாத்திரத்தில் தட்டி நினைவூட்டுகிறாள், 'பாத்திரம் காலி சொக்கா.. பாரம் சுமக்கப்போ'. 

கால் நோக கை கடுக்க ஏந்தி நின்ற விளக்கிலிருந்து ஒளியைப் பறித்து வானில் எறிகிறான் எவனோ ஒருவன். கல்லாய்ச் சமைந்து காலகாலமாய் நிற்கும் காரிகையின் கை விளக்கில் திருட்டுத்தனமாய் அமைந்தெழுந்து செல்கிறான் சூரியன் மின்மினிப்பூச்சியாக.

எல்லாப்பக்கத்திலும் ஒரே கடல்தான் என்கிறபோது, எந்தத் துறையில் முங்கினால்தான் என்ன?

முஹூர்த்தம் முடிந்து பெண்ணை புகுந்த வீடு அனுப்பிய வீடும், கொடை கழிந்த கோவிலும் ஒரே முகத்தை அணிந்து கொண்டிருக்கின்றன.

Tuesday, 3 March 2020

சாரல் துளிகள்

பிய்த்துப் போட்ட இட்லித்துண்டுகளாய்ச் சிதறிக்கிடக்கும் முகிற்கூட்டத்தைக் கூட்டிப் பெருக்குகிறாள் தென்றல் பெண்.

சமையல் பழகும் சிறு பெண் வார்த்த தோசை போல் பிய்ந்து கிடக்கின்றன மேகங்கள்.

மலைமகளின் தோளில் முந்தானையெனத் தொற்றிக்கொண்டிருக்கிறது முகில்.

கழுவிக் கவிழ்த்த பாத்திரம்போல் நிர்மலமாயிருக்கும் வானத்தில், ஒட்டிக்கொண்டிருக்கும் பருக்கை போல் ஒற்றை முகில்.

இலக்கில்லாத வழிப்போக்கனைப்போல் காற்று இழுத்துச்செல்லும் வழி சென்று கொண்டிருக்கிறது முகில்.

வாழையிலையில் விழுந்த சூடான அல்வா போல் வழுக்கிக்கொண்டு ஓடுகிறது மேகம்.

எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் சர்க்கரைத்துண்டுகள் போல், வான்வெளியில் ஊர்ந்து செல்கின்றன முகில்கள்.

எந்தக் குழந்தை சிந்திய தேங்காய்த் துருவலோ... சிதறிக் கிடக்கிறது வானமெங்கும் முகில்களாய். காரிருளில் பஞ்சு மிட்டாயென மெல்ல அசைந்த உருவத்திடம் 'யார் நீ?'யெனக் கேட்டேன். 'ம்யாவ்' எனக் கூறி விட்டு விர்ரென வானேகி நீந்தத்தொடங்கியது முகில்.

பருத்திப் பாலாய் முகந்தனவோ அத்தனை முகில்களும்! இத்தனை வெண்மை கொண்டிருக்கின்றன!

Sunday, 16 February 2020

சாரல் துளிகள்

கிடாரின் தந்தியென விட்டு விட்டு அதிர்ந்து கொண்டிருக்கும் புறாவோடு, சுதி சேராமல் இணைந்திசைக்கிறது இன்னொரு புறா.

ஒருவருக்கொருவர் உதவியும் கைத்தாங்கலுமாக இருக்க வேண்டும் மனித வாழ்வு. ஒருவழிப் பாதையாக அல்ல.

அத்தனை மொட்டுகளும் மலர்ந்தபின் தனக்கானதைத் தேர்ந்தெடுக்கவெனக் காத்திருக்கிறது பட்டாம்பூச்சி, சிறகுகள் வெளிறி உதிர்ந்து கொண்டிருப்பதை உணராமல்.

எருதை மேன்மேலும் புண்படுத்திக்கொண்டிருக்கும் காக்கைகள் ஒருபோதும் அறிவதில்லை, அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் கரிச்சான்களை.

அரவமற்ற பின்னிரவில் இரைச்சல் அதிகம்.

எல்லா மொழியும் தெரிந்த கடவுளுக்கு எந்த மொழியில் சொன்னாலும் புரிவதில்லை. ஆகவே, செவி சாய்ப்பதுமில்லை.

ஆட்டோ கேப்பில் சைக்கிளில் போய்விட நினைப்பவரை, சைக்கிள் கேப்பில் நடந்து போக வைக்கிறது வாழ்க்கை.

அளவுக்கு மீறிய செயற்கையான பணிவுடன் காலில் விழுவதெல்லாம் காலை வாரி விடத்தானேயன்றி வேறெதற்குமல்ல.

நீட்டவும் குறுக்கவும் வேண்டியிருக்கும்  தாமரைத்தண்டுக்கு யாதொரு கவலையுமில்லை. கவலையெல்லாம், வற்றவும் பெருக்கவுமாயிருந்து அவதிப்படும் குளத்துக்குத்தான்.

கொந்தளிக்கும் நடுக்கடலில் அலைவுறும் படகில், துடுப்பு வலிப்பதை நிறுத்தி, பேரமைதியுடன் நிமிர்ந்து அமர்கிறான். விதி வழிப் பயணிக்கிறது படகு.

Wednesday, 18 December 2019

சாரல் துளிகள்

துரத்தும் இரவிடம் புறமுதுகிட்டு, தவ்வித்தவ்விச் சென்று கொண்டிருக்கிறது வெயில்
கண்ணாடித்துண்டுகள் சூடிய மதிற்சுவரைச் சற்றும் அஞ்சாது பரவிக்கிடக்கும் பூங்கொடியை எச்சரிக்கிறது சுடுவெய்யில், ஆற்றுப்படுத்துகிறது இளங்காற்று, அது பாட்டுக்கு அதுவென்று பூத்துக்கிடக்கின்றன இள நீலப்பூக்கள்.
ஒரு வெள்ளைப்பந்தாய்ப் பூத்திருக்கும் நந்தியாவட்டைச் செடியை வாஞ்சையுடன் தடவி இறங்குகிறது வெய்யில்.
ஒரு திருடனைப்போல் மெல்ல ஏறி வந்து முற்றத்தில் காத்திருக்கும் வெய்யில், முதற்பார்வையில் திடுக்கிடச்செய்கிறது.

தடாகத்தினுள் வழுக்கி விழுந்த வெயில், தங்கமீனாய் நீந்திக்கொண்டிருக்கிறது.

முற்றத்தில் வந்து நின்று கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஓட்டைப்பிரித்து உள்ளிறங்குகிறது வெயில்.

வானத்துடன் பிணங்கிவிட்டு, பூக்களினுள் ஔிந்திருக்கும் வெயிலைத் தேடியலைகிறது வண்ணத்துப்பூச்சி.

ஆங்கோர் மலைக்குவையில், வரையாட்டைப் போல் தொற்றி ஏறிக்கொண்டிருக்கிறது வெயில்.

மலையிடை வைரமாய் மின்னிய வெயிலை நோக்கிக் கண் சிமிட்டுகிறது, வானில் முளைத்த வெள்ளி.

ஆழ்கடலில் முத்தென அமிழ்ந்து கிடக்கும் வெயிலைக் கரை சேர்க்கின்றன அலைக்கரங்கள்.

Sunday, 2 June 2019

சாரல் துளிகள்

காலியாயிருக்கும் பள்ளி மைதானத்தின் நிசப்தம் காதை அறைகிறது. தலை தூக்கிப் பார்த்து விட்டு மறுபடியும் துயிலத்தொடங்கும் நாயின் கனவில் உருள்கின்றன பந்துகள்.

குழந்தையின் கிறுக்கல்களாய் மேகச்சிதறல், காற்றே கலைத்து விடாதிரு.

புன்னகையைப் பொதிந்திருக்கும் மனப்பேழையை கண்ணீர்த்துளிகளால் அறைந்து இறுக மூடுகிறது வாழ்வு.

பலவீனமானவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பதுண்டு. அப்பலவீனத்திலிருந்தே தங்களுக்கான பலத்தைத் திரட்டிக் கொள்கிறார்கள். மெலிந்த கிளையை இறுகப்பற்றியிருக்கும் தேன்சிட்டைப்போல்.

நோக்கு விலக்கி தம்முள் அமிழ்ந்து ஆழ மௌனித்திருக்கும் நீர்க்காகங்கள் சிறகுயர்த்தி ஆசீர்வதிக்கின்றன, இன்று பிறந்த மீன் குஞ்சுகளை.

அறையின் உள்ளும் புறமும் நோக்கியபடி வலைத்தடுப்பின் ஓர் இழையில் திரும்பித்திரும்பி அமர்ந்து வட்டமடிக்கிறது ஒரு குருவி. சட்டென ஒரு முடிவெடு மனமே..

தாகித்த மரம் அனுப்பிய வேர் விடு தூதிற்கிணங்கி, தன்னையே சமர்ப்பிக்கிறது மறைந்திருக்கும் ஈரம்.

பேசிப்பேசி சொற்கள் தீர்ந்து போன ஒரு கனத்த பொழுதின் தருணங்களில் சண்பக மலர்ப்பொடிகள் வந்தமைந்தபோது மறுபடி பொங்கி வழிந்தன சொற்கள்.

மூச்சை நிறுத்திவிடுமுன் இறுதிக்கணங்களில் நினைவிற்கு வாராதொழியட்டும் வாழ்விலடைந்த லாப நட்டங்கள்.

காற்றில் சரசரக்கின்றன காய்ந்த புற்கள். எச்சரிக்கை கொண்டு பதுங்கும் ஓணானின் நினைவுகளில் நெளிகிறது பசித்த பாம்பு.

Monday, 11 February 2019

சாரல் துளிகள்

வருத்தப்பட்டு வண்டியோட்டும்போதும் அலைபேசியில் பேசுவோரை மன்னியாதிரும் ஆண்டவரே. அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்.

குறும்புக்கார பகலை அத்தனை விழிகளாலும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது இரவு.

பச்சோந்தியைப்போல் நிறம் மாறிக்கொண்டேயிருந்த பகல், கனத்த இரவுக்குள் தன்னை ஔித்துக்கொண்டது.

ஏதும் எஞ்சாது எல்லாம் கொடுத்து விட்ட நிறைவில் நடையிட்டுச்செல்லும் பகல் அறியவில்லை, நாளை வரப்போகும் அதனிடம் கேட்கப்படவிருப்பவை.

விரலிடுக்கில் நீரென, ஏதுமெஞ்சாது மெள்ளக் கசிந்தொழியும் பகலிடம் மன்றாட ஏதுமில்லை. எத்தனை நிறைந்திருந்தென்ன? கையளவுதானே அள்ள முடியும்.

தாலாட்டித் தூங்க வைக்கும் இரவின் மடியில் சாய்ந்து கனவுப்புற்களை மேய்கிறது களைத்துப்போன பகல்.

ஒரு சிற்றலை போல் எழுந்தமர்ந்த வெண்பறவைகளின் இறகுகளிலிருந்து பருவெளிக்கு இடம்பெயர்ந்தது பகல்.

துளித்துளியாய் தன்னைச் செதுக்கி பட்டை தீட்டிய இருள், பகலென்று பேர் சூடிக்கொண்டது.

இரவைக் குழைத்து, தோன்றியும் மறைந்தும் வித்தை காட்டும் பல்வண்ண மாயக்கம்பளமாய் நெளிய விடுகிறது பகல்.

ஒரு மொட்டு மலர்வதைப்போல் இரவின் இதழ்கள் ஒவ்வொன்றாய் விரிய, விடுபட்டுப் பறக்கிறது அனற்பூச்சி.

Monday, 21 January 2019

சாரல் துளிகள்

.அகங்காரத்தினுள் தைத்த சொல், வஞ்சம் தீர்ப்பதற்காக பூநாகமெனக் காத்திருக்க ஆரம்பிக்கிறது.

அனைத்தையும் விட மிகக்கொடிய ஆயுதம் எண்ணத்தில் உருவாகிறது. சொல்லும், செயலும், எண்ணத்தொடருமென ஒவ்வொரு நிலையாகப் பெருகிச் செல்வதும் அதுவே.

உள்ளத்தில் சென்று தைக்காத எந்தச்சொல்லும் அலைவுறச்செய்வதில்லை.

ஒரு சொல் அது மதிப்புறும் இடத்தில் மட்டுமே நல்மணியெனக் கொள்ளப்படுகிறது. மதிப்பறியா இடங்களிலோ, அது வெறும் ஒலி மட்டுமே.

கிழிந்த மேகத்தினூடே வழுக்கி விழுந்த சூரியக்கற்றையைக் கொத்திக்கொண்டு போகும் பறவையின் பின் பறக்கிறது சொற்கூட்டம்.

நானாவித சொற்களால் மாசுபட்ட மனதை, மெல்ல கழுவிச் சுத்தப்படுத்துகிறது நற்சொல்மழை.

குவிந்த பூவில் வண்டென, ரீங்காரித்துக்கொண்டிருக்கிறது சொல்லொன்று, வெளியேறும் திசையறியாது.

முதற்பறவையிலிருந்து கிளம்பிய சொல்லுடன், பிற பறவைகளில் ஆரோகணித்திருந்த சொற்களும் இணைந்து உருவான தொடரில் ஒட்டிப்பறந்து கொண்டிருந்தான் ஆதவன்.

அதற்கு மேல் அதைப்பற்றி அறிந்து கொள்ள ஏதுமில்லை எனும்போது அவ்விஷயத்தின் மேல் சலிப்பு கொள்ள ஆரம்பிக்கிறோம்.

சுடரிலிருந்து மெல்ல முனகியபடி பொறியாய்த் தெறித்ததொரு சொல். ஆமாமென்று அதை ஆமோதித்தன சில சொற்கள், இல்லையென ஆட்சேபித்தன வேறு சில. ஆமோதிப்பும் ஆட்சேபிப்புமாய் களத்தில் எரியெழுந்தபோது கள்ளச்சிரிப்புடன் நழுவிச்சென்றது முதற்சொல்.

Monday, 31 December 2018

சாரல் துளிகள்

இருந்திருக்கலாம்.. சாதகமாயொன்றுமில்லை. இல்லாமற் போனதால் பாதகமாயுமொன்றுமில்லை.

சூழ் உறவுகளிடை விதிக்கப்பட்ட தனி வாழ்வு போல் நன்னீர் நடுவே தாகித்திருக்கிறதொரு நீர்க்காகம்.

ஆகாயக்கோட்டையானாலும் ஏதோ ஓர் அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்படுகின்றன.

காரிருள் மறைத்த கருநாகம் போன்று மனதில் ஔிந்து கிடக்கும் வஞ்சம். வெளிப்படும் நேரம் வரை எதுவும் தெரிவதில்லை.

ஒருமித்த குரலில் பாடும் பள்ளிப்பிள்ளைகள் போல் கூட்டமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்.

அப்பேர்க்கொத்த நிலவுட்பட, காணும் யாவற்றிலும் களங்கம் கண்டுபிடிக்கும் மனித மனதை விட களங்கம் மிக்கது வேறொன்றுமில்லை.

காற்றிற்பறக்கும் பதராய்ப் பிறப்பினும், குருவியின் அலகிடைக் கொறிபடும் நெல்மணியாய்ச் சிறத்தல் இனிது.

விஷந்தோய்ந்தவற்றை விட, அமுதில் நனைந்த அம்புகளே அதிகம் பலிகொள்கின்றன.

சிறகிழந்த தும்பியைப்போல் தத்தித் தவ்விக்கொண்டிருக்கிறது வாலறுந்த ஒரு பட்டம்.

பாசி படர்ந்த குளத்து நீரென மூடிக்கிடக்கும் ஞாபகங்களின் மேல், யாரோ கல்லெறிந்த பின், அல்லது உள்ளிருந்தொரு மீன் குதித்து வெளியுலகம் பார்த்துச் சென்றபின், கலைவதை விட அதி விரைவாக மூடிக்கொள்கிறது குளம்.

LinkWithin

Related Posts with Thumbnails