Wednesday, 1 July 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை பாவலர் கருமலைத் தமிழாழன் வழங்கியிருந்தார். "உழைப்பே தரும்நல் உயர்வு" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது. 

தேர்வாகி பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

கல்லாமை நீக்கிக் கருத்தூன்றி நாளும்நற்
சொல்லாளன் போலவே சொல்லெடு- நல்லாய்
விழைவொடு நாள்தொறும் வீறுகொண்டு கற்பாய்
உழைப்பே தரும்நல் உயர்வு

ஊழைநம்பிச் சோம்பி உலோபர்பின் ஏகாதோர்
கூழைபோல் கும்பிட்டுக் கோராதோர் - வாழி
தழைத்திடச் செய்யும் தகவோர்க்கு என்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு

நற்பேறு நாளும் நடைவந்து நிற்காது
பொற்பேறாம் நற்செயல் பூணுக - மற்றோ
பிழைக்க வழிகண்டு பேறுகள் காண்பாய் 
உழைப்பே தரும்நல் உயர்வு.

சோம்பல் களைந்து சுறுசுறுப்பாய் நாளும்நாம்
ஆம்பல் மலராய் அகமலர்ந்(து) — ஓம்பும்
விழைவு கருதி விவேகமாய் ஆற்றும்
உழைப்பே தரும்நல் உயர்வு.

LinkWithin

Related Posts with Thumbnails