Showing posts with label Thailand trade show 2012. Show all posts
Showing posts with label Thailand trade show 2012. Show all posts

Tuesday, 3 July 2012

மும்பைக்கு வந்த தாய்லாந்து

தாய்லாந்துலேர்ந்து நம்ம தாய்நாட்டுக்கு வந்துர்க்காங்க இவங்க. ஊரு முழுக்க பத்தடிக்கு ஒரு வெளம்பரம் ஒட்டியும், ரோட்டுல வெளக்குக் கம்பங்கள்ல எல்லாம் பேனர் கட்டியும்,.. "வாங்க.. வாங்க"ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. நாலு நாள்தான் எங்களுக்கு மும்பை வாசம், அதுக்கப்புறம் பொட்டியைக் கட்டிட்டுக் கிளம்பிட்டோம்ன்னா அடுத்த வருஷம்தான் வருவோம். அதனால அதுக்குள்ள வந்து கண்டுக்கிட்டுப்போங்கன்னு கூவிக்கூவிக் கூப்பிடறச்சே போய்த்தான் பார்ப்போமேன்னு தோணுச்சு.
இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே நல்லுறவை வளர்க்கறதுக்காகவும், பொருளாதார, வியாபார,  கலாச்சார இத்யாதி தொடர்புகளை ஏற்படுத்திக்கிறதுக்காகவும் வந்துருக்காங்க. இங்கே மும்பையின் கஃப பரேட் பகுதியில் இருக்கற உலக வர்த்தக மையத்துலதான் வருஷாவருஷம் கண்காட்சி நடக்கும். கண்காட்சியின் கடைசி நாள் வீக் எண்டாவும் அமைஞ்சுட்டதால் எங்களுக்கு வசதியாப்போச்சு. கண்டுக்கிட்டு வரலாம்ன்னு கிளம்பினோம்.

வீட்லேருந்து மின்சார ரயில்ல வி.டின்னு அப்பவும் சி.எஸ்.டி.ன்னு இப்பவும் அழைக்கப்படற எங்கூரு பெரிய ரயில் நிலையத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். சி.எஸ்.டிக்கு பக்கத்துல இருக்கற பஸ் நிலையத்துலேர்ந்து  2 அல்லது 138-ம் நம்பர் பஸ்ஸைப்பிடிச்சா, மும்பையைக் கொஞ்சம் இலவசமா சுத்திக் காமிச்சுட்டு உலக வர்த்தக மையத்துக்கு எதிரிலேயே இறக்கி விட்ருவாங்க. நாம ரோட்டைக் கடந்து வர்த்தக மையத்துக்கு வந்துரலாம். இல்லைன்னா டாக்ஸி பிடிச்சு சுருக்கு வழியிலும்  வரலாம்.

எல்லாக் கண்காட்சிகள்லேயும் நடத்தற சம்பிரதாயப்படி உள்ளே நுழையறப்ப படிவம் நிரப்பிக்கொடுத்ததும், ஒரு ஸ்டிக்கரை நம்ம கிட்ட தராங்க. நம்ம வசதிப்படி கையிலயோ, அல்லது பாட்ஜ் மாதிரி தோள்பட்டையிலயோ ஒட்டிக்கணும். அப்பத்தான் அனுமதி. 

இங்கே கிடைக்கும் பொருட்களெல்லாம் தாய்லாந்துலயே தயாரிக்கப்பட்டு, கப்பல்ல கொண்டு வரப்படுது. சுமார் எண்பது கம்பெனிகள் இந்தத்தடவை கடை விரிச்சுருக்காங்க. அழகு சாதனப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், வீட்டு உபயோகப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள், ஃபேன்ஸி நகைகள், செயற்கை மலர்கள், கலைப்பொருட்கள், தாய் மசாலா மற்றும் சாஸ் வகைகள், ஸ்பாவுக்கான பொருட்கள்ன்னு அத்தனையும் கொட்டிக்கிடக்குது. படம் எடுக்கத்தான் அனுமதி இல்லை. அலங்காரப் பூக்கள் வெச்சுருந்த ஒரு கடையில் மட்டும் அனுமதி கிடைச்சது. வெரைட்டி இருந்தாலும் ஃபேன்ஸி நகைகளுக்கான கடைகள் மட்டுமே அதிகம் இருக்கறதால சட்ன்னு சுத்திப்பார்த்து முடிச்சுட்டோம். மரச்சுள்ளிகளைக் குடைஞ்சு செஞ்சுருந்த பென்சில் ரொம்பவே அழகாருந்தது. வித்தியாசமாவும் இருந்தது. அலங்காரப்பொருளா வெச்சுக்கலாம். 
இந்தியச் சந்தையை உலக நாடுகளுக்காக இந்தியா திறந்து விட்டுருக்கறதால, இதைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தொடர்புகளை வலுவாக்கறதுக்காக, தாய்லாந்து அரசின் நிதித்துறையே இந்தக் கண்காட்சியை நடத்துதுன்னு ரிசப்ஷன்ல இருந்த ஒருங்கிணைப்பாளர் க்வாங் தெரிவிச்சாங்க. இவங்க  பூனாவில் ஒன்பது மாசம் வசிச்சுருக்காங்களாம். இந்தியாவை ரொம்பப் பிடிச்சுருக்குன்னு சொன்னாங்க. ஹிந்தியும் கூட "தோடா..தோடா" தெரியுமாம்.  இந்தியாவைத்தவிரவும் கிழக்கு ஆசிய நாடுகள்லயும் கூட இந்தக் கண்காட்சி நடக்குதுன்னு ஒரு பெரிய லிஸ்டே வாசிச்சாங்க. 
தாய்லாந்தின் கவுன்ஸ்லேட் ஜெனரல்
சரி,.. இந்தியாவில் மும்பையில் மட்டுந்தான் இந்தக் கண்காட்சி நடத்தப்படுதான்னு கேட்டா.. இல்லையாம். இங்கிருந்து கிளம்பி  வர்ற அஞ்சாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரைக்கும் சென்னையிலும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரைக்கும் பெங்களூரிலயும் நடக்குமாம். மும்பையில் நடந்த விழாவின்போது தாய்லாந்தின் கவுன்ஸ்லேட் ஜெனரல் வந்து சிறப்பிச்சார்.

தினசரி மதியம் ரெண்டு மணிக்கு உணவுத்திருவிழாவும், அஞ்சு மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கும். இருந்து கண்டுக்கிட்டுப்போங்கன்னு கேட்டுக்கிட்டாங்க. லோட்டஸ் ப்ளாஸம்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட்.  மும்பையில் பார்ட்டிகளுக்கான தாய் உணவைத்தயாரிச்சுத்தரும் கேட்டரிங் பிரிவை இப்ப புதுசா ஆரம்பிச்சுருக்காங்க. அதுக்கான அறிமுக விழாதான் இந்த உணவுத்திருவிழா. தினசரி புதுப்புது தாய் உணவுகளை செஞ்சு காமிச்சு, மக்களுக்கு ருசி காமிச்சுட்டிருக்காங்க. கூடவே அவங்களோட போன் நம்பரும், இமெயில் அட்ரஸும் சேர்த்து அச்சடிச்ச மெனு கார்டையும் விளம்பிட்டிருந்தாங்க. பார்ட்டிக்கு கேட்டரிங் செஞ்சு தரணும்ன்னா தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும் இல்லையா.
பூ செஞ்சு காமிக்கும் குமரேசன்
இந்தக் குழுவில் இருக்கும் குமரேசன், காய்கறிச் சிற்பங்கள் செதுக்கறதுல எக்ஸ்பர்ட். ஒரு வருஷ ஒப்பந்தத்துல தாய்லாந்துல வேலை பார்த்துட்டு, இப்ப தாய்நாடு திரும்பியிருக்கார். இந்த ஹைதராபாத்வாசி இனிமே மும்பை வாசியாம். அவரோட கை வண்ணத்துல பூசணிக்காயிலும், தர்பூசணியிலும் ரோஜாக்களும் தாமரையுமாப் பூத்துக்கிடந்தன. பத்தாக்குறைக்கு பார்வையாளர்களுக்காக வெள்ளரியில் இலையும், கேரட்டில் பூக்களும் செஞ்சு காமிச்சும் அசர வைச்சார்.
குமரேசனின் கைவண்ணம்
கண்ணுக்கு விருந்து கிடைச்சாப்போறுமா?.. அலைஞ்சு திரிஞ்சு அலுத்துப்போய் கடைசியில் காண்டீனுக்குப்போய் வடாபாவும் டீயும் வயித்துக்குள்ள தள்ளிட்டு, கொஞ்சம் பர்ச்சேஸும் முடிச்சுட்டுக் கிளம்பினோம். கடைசி நாளாப்போனதால் பாதி நாள் கழிஞ்சதும் ஒவ்வொரு கடையிலும் பொட்டியைக் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. பேரம் பேச நல்ல வாய்ப்பு தெரியுமோ. முதல் நாள் விலையை ஒப்பிடும்போது, கடைசி நாள்ல பாதி விலைக்கு கொடுத்துட்டிருந்தாங்க. சென்னை, மற்றும் பெங்களூர் வாசிகள் வாய்ப்பைத் தவற விடாம ஒரு எட்டு போயிட்டு வாங்க..

LinkWithin

Related Posts with Thumbnails