Monday 31 December 2018

சாரல் துளிகள்

இருந்திருக்கலாம்.. சாதகமாயொன்றுமில்லை. இல்லாமற் போனதால் பாதகமாயுமொன்றுமில்லை.

சூழ் உறவுகளிடை விதிக்கப்பட்ட தனி வாழ்வு போல் நன்னீர் நடுவே தாகித்திருக்கிறதொரு நீர்க்காகம்.

ஆகாயக்கோட்டையானாலும் ஏதோ ஓர் அஸ்திவாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்படுகின்றன.

காரிருள் மறைத்த கருநாகம் போன்று மனதில் ஔிந்து கிடக்கும் வஞ்சம். வெளிப்படும் நேரம் வரை எதுவும் தெரிவதில்லை.

ஒருமித்த குரலில் பாடும் பள்ளிப்பிள்ளைகள் போல் கூட்டமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றன குருவிகள்.

அப்பேர்க்கொத்த நிலவுட்பட, காணும் யாவற்றிலும் களங்கம் கண்டுபிடிக்கும் மனித மனதை விட களங்கம் மிக்கது வேறொன்றுமில்லை.

காற்றிற்பறக்கும் பதராய்ப் பிறப்பினும், குருவியின் அலகிடைக் கொறிபடும் நெல்மணியாய்ச் சிறத்தல் இனிது.

விஷந்தோய்ந்தவற்றை விட, அமுதில் நனைந்த அம்புகளே அதிகம் பலிகொள்கின்றன.

சிறகிழந்த தும்பியைப்போல் தத்தித் தவ்விக்கொண்டிருக்கிறது வாலறுந்த ஒரு பட்டம்.

பாசி படர்ந்த குளத்து நீரென மூடிக்கிடக்கும் ஞாபகங்களின் மேல், யாரோ கல்லெறிந்த பின், அல்லது உள்ளிருந்தொரு மீன் குதித்து வெளியுலகம் பார்த்துச் சென்றபின், கலைவதை விட அதி விரைவாக மூடிக்கொள்கிறது குளம்.

Thursday 27 December 2018

மண் கோட்டையானாலும் மலைக்கோட்டையாக்கும்..


"Diwali killa".. மஹாராஷ்ட்ராவில் தீபாவளி தோறும் குழந்தைகளால் தத்தம் குடியிருப்புப்பகுதிகளில் கட்டப்படும் சின்னஞ்சிறு கோட்டைகளே திவாலி கில்லா.. அதாவது தீபாவளிக்கோட்டை என அழைக்கப்படுகிறது. மராட்டிய மன்னரான சிவாஜி மஹராஜை நினைவு கூரும் விதமாக குழந்தைகள் இக்கோட்டையைக் கட்டுகிறார்கள்.


பொதுவாக ஒரு சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் அங்கிருக்கும் கோட்டைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நிலம், நீர், மலை, பாலைவனம் என ஒவ்வொரு பகுதியிலும் கோட்டை கட்டி பாதுகாப்பைப் பலப்படுத்துவார்கள் அரசர்கள். மலைப்பகுதி நிறைந்த மஹாராஷ்ட்ராவில் சுமாராக 150க்கும் மேற்பட்ட கோட்டைகளை சிவாஜி மஹராஜ் கட்டுவித்தார். அவற்றில் பெரும் எண்ணிக்கையிலான கோட்டைகள் மலைகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன. மராட்டா சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதில் மலைக்கோட்டைகள் பெரும்பங்கு வகித்தன என்றால் மிகையாகாது.

சிறு வயதில் சிவாஜி மஹராஜ் தன் விளையாட்டுத்தோழர்களுடன் சேர்ந்து, சிறு கோட்டை கட்டி போர் விளையாட்டு விளையாடுவதில் பெரு விருப்பம் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பெற்ற பயிற்சியும் இப்பகுதியிலுள்ள மலைகளின் மூலை முடுக்குகளைப் பற்றிய பரிச்சயமும் அவருக்கு எதிரிகளுடன் போரிடுவதில் பெரிதும் துணை நின்றன. மலைகளில் ஔிந்திருந்து கொண்டு, யாரும் எதிர்பாரா சமயத்தில் திடீரென வெளிப்பட்டு எதிரிகளைத் தாக்கி விட்டு மறுபடியும் மலைகளில் ஔிந்து கொள்வார். அவரது அப்போதைய எதிரிகளான முகலாயர்களால் அவரை எளிதில் பிடிக்கவே முடியவில்லை. இத்திறமைகளால் அவர் "மலை எலி"எனவும் அழைக்கப்பட்டார். சஹ்யாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராய்கட் கோட்டையில்தான் அவர் மன்னராக முடி சூட்டிக்கொண்டு ராய்கட்டை தன் தலைநகராக அறிவித்தார். இங்கிருந்துதான் மராட்டா சாம்ராஜ்யம் தமிழகத்தின் தஞ்சை வரை விரிவடைந்தது. இக்கோட்டையில்தான் சிவாஜி மஹராஜின் சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஷிவ் ஜெயந்தியன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டும் வருகிறது. இன்றளவும் மஹாராஷ்ட்ராவின் ஹீரோவாக சிவாஜி மஹராஜே விளங்குகிறார்.

அரையாண்டுத்தேர்வு முடிந்ததுமே குழந்தைகள் கோட்டை கட்டுவதைப் பற்றி கலந்தாலோசிக்கத் துவங்கி விடுவார்கள். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பிருந்து வேலை ஆரம்பமாகும். பல வித அளவுகளிலான கற்கள், உடைந்த செங்கற்கள், டைல் துண்டுகள், கோணி, மற்றும் மண் போன்றவை சேகரிக்கப்படும். கோட்டை கட்டப்படும் இடத்தில் முதலில் கற்கள், செங்கற்கள் மலை போல் குவிக்கப்பட்டு அதன் மேல் கோணியால் மூடுவார்கள். மலை போல் தோற்றமளிக்கும் பொருட்டு சற்று ஒழுங்கற்ற வடிவிலேயே இது செய்யப்படும். அதன்பின் மண்ணைக் குழைத்து, கோணியின் மேல் நன்கு பூசி விடுவார்கள். மண் ஈரமாக இருக்கும்போதே மலையுச்சியை சற்றே சமதளமாக்கி டைல் துண்டு ஒன்றை அதில் வைப்பார்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்படும். மலையின் ஒரு பகுதியில் சிறை ஒன்று அமைக்கப்படும். துடைப்பக்குச்சிகள் சிறைக்கம்பிகளாக உருமாறும். மலையைச் சுற்றி கோட்டைச்சுவரும் மண்ணைக் குழைத்து அமைக்கப்படும். கற்பனையைச் சற்றே நீட்டினால் மலைக்கும் கோட்டைச்சுவருக்கும் இடையே அகழி ஒன்றும் அமைக்கப்பட்டு முதலைகள் விடப்படும். ஊற வைத்த கடுகு, வெந்தயம் போன்றவற்றைஏராளமாகத் தூவி விட்டால் இரண்டு நாளில் அவை முளைத்து வளர்ந்து அடர்த்தியான காடாக மாறியிருக்கும். இப்போது மலை ரெடி.

தீபாவளி சமயத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சிவாஜி மஹராஜ், மற்றும் பீரங்கிகள், மாவல் எனப்படும் சிப்பாய்கள், குடி மக்கள், புலி, அஃப்ஸல் கான் ஆகிய பொம்மைகள் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து கோட்டைச் சுவரில் ஆங்காங்கே பீரங்கிகளையும் காவலர்களையும் நிறுத்துவர். அஃப்சல்கானை சிறையிலிட்டு வாசலில் இரண்டு புலிகளை நிறுத்தி விட்டால் தப்பிக்கும் எண்ணம் கனவில் கூட வராது. இறுதியாக மலையுச்சியில் காவலர்கள் புடை சூழ சிவாஜி மஹராஜை அமர்த்தி, ஆங்காங்கே குடி மக்களையும் நிறுத்தினால், அசல் தர்பார் கெட்டது போங்கள்.

இதன்பின் தினமும் காலை, மாலை கோட்டை வாசலில் வண்ணக்கோலமிட்டு அகல் விளக்குகளை ஆங்காங்கே ஏற்றி வைப்பார்கள். ஆகும் எல்லாச் செலவுகளையும் குழந்தைகள் மொத்தமாகப் பகிர்ந்து செய்வார்கள். நரக சதுர்த்தசி வரை இந்த வைபவம் தொடரும். வடக்கர்களின் தீபாவளியான லஷ்மி பூஜை தினத்தன்று விடிகாலையில் அத்தனை குழந்தைகளும் குளித்து தயாராகி வந்தபின், மலையில் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் சிறு பள்ளத்தில் ஒரு அணுகுண்டை வைத்து வெடிப்பார்கள். கோட்டை மொத்தமும் வெடித்துச்சிதறும். அதன்பின் மற்ற வெடிகளை வெடித்து கோட்டை தரை மட்டமாக்கப்படும். பொம்மைகள் அடுத்த தீபாவளிக்கென எடுத்து பத்திரப்படுத்தப்படும். இப்படியாகத்தானே தீபாவளி கோலாகலம் ஆரம்பிக்கும்.

பிள்ளைகளிடையே ஒற்றுமையுணர்ச்சி, வேலைகளைப் பகிர்ந்து செய்தல், கற்பனைத் திறன் மேம்படுதல், கணக்கு வழக்குகளைத் திறம்படக் கையாளுதல், விட்டுக்கொடுத்தல், நட்புணர்வு போன்ற திறன்கள் மேம்படுவதோடு குறைந்தது ஒரு வாரத்துக்கு பிள்ளைகளை மேய்க்கும் பொறுப்பிலிருந்து பெற்றோருக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். இப்போதெல்லாம் மண்பாண்டங்கள், பீங்கான் ஜாடிகள் செய்பவர்கள் சிறு கோட்டைகளையும் செய்து விற்கிறார்கள். இட நெருக்கடியுள்ள குடியிருப்புகளில் இதை மட்டும் வைத்து விடுகின்றனர். கொஞ்சம் இட வசதியிருந்தால் இதைச்சுற்றிலும் கோட்டையை மேலும் விரிவாக்கம் செய்கின்றனர். கற்பனைத் திறனுக்கு வானம் கூட எல்லையில்லைதானே?..

Monday 10 December 2018

சிறுபயறுடன் கூட்டணியமைத்த பூசணி.

புட்டு செய்யலாமெனவோ, சிறுபயிறு சப்பாத்தி செய்யலாமெனவோ அட.. வெறுமனே அவித்துத் தாளித்துத் தின்னலாமெனவோ திட்டமிட்டு சிறுபயிறை ஊற வைத்தபின் திட்டமாறுதலேற்பட்டு விட்டதா? கவலை வேண்டாம்.

சாம்பார், கூட்டுக்கறி, அல்லது அல்வா என ஏதாவது செய்யலாமென வாங்கி வைத்த பூசணிக்காயின் சிறுபகுதி மீதமாகி விட்டதா?.  ஃப்ரிஜ்ஜில் வைத்தாலும் கெட்டுப்போகும் அபாயமோ அல்லது நாட்கணக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு நீர்ச்சத்தெல்லாம் இழந்து சுருங்கி, கடைசியில் குப்பையில் அடைக்கலமாகும் தலையெழுத்தோ ஏற்படலாம். என்ன செய்யலாமென சுணங்கி நிற்கிறீர்களா?.. அஞ்சற்க. உதிரிக்கட்சிகள் இணைந்து ஒரு பலமான கூட்டணி அமைப்பது வழக்கம்தானே. அந்தப்படி பயிறையும் பூசணியையும் ஒன்று சேர்த்து கூட்டுக்கறி சமைத்து விடலாம்.

ஒரு கப் பயிறு இருந்தால், கால் கிலோ பூசணிக்காய், பாதி வெங்காயம், மூன்று பல் பூண்டு, மற்றும் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை போதும். தலா கால் டீ ஸ்பூன் அளவு கடுகு, ஜீரகம் போதும் தாளிப்பதற்கு. உப்பு காரம் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்துச் சூடாக்கி, ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கிக் கொண்டு அதில் கடுகு ஜீரகம் கால் ஸ்பூன் வீதம் போட்டுப் பொரிய விடவும். பொரிந்தபின் முதலில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டைப்போட்டு சிவ்வக்க வதக்கி, அதற்கடுத்தாற்போல் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். 

வெங்காயம் வதங்கி லேசாகச் சிவக்க ஆரம்பிக்கும்போது, ஊறிய பயிறை அதிலிட்டு ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து அரை வேக்காடு வரும் வரை வேக விடவும். பயிறைப்போடும் முன்பாக சிட்டிகை பெருங்காயத்தூளும் சேர்த்தால் வீடே மணக்கும். அதன் பின், பூசணித்துண்டங்களை அத்துடன் சேர்த்து முக்கால் ஸ்பூன் அல்லது ருசிக்கேற்ப உப்பிட்டு வேக விடவும். பயிறு முக்கால் வேக்காடு ஆனதும் மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும் சேர்த்து, கறிவேப்பிலையையும் உருவிப்போடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து நன்கு வேகட்டும். அள்ளி வைத்தால் அங்கிங்கு ஓடாமல் ஒரு இடத்தில் சமர்த்தாக இருக்க வேண்டும். அதே சமயம் உலர்ந்து பொரியல் பக்குவத்திலும் இருக்கக்கூடாது. ஆகவே, கூட்டு பதத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். பயிறு வெந்து மலர்ந்து வர வேண்டும், அதே சமயம் அதிகம் குழைந்து கூழாகி விடக்கூடாது. நல்ல மணம் வரும் இப்பொழுதில் அடுப்பை அணைத்து வாணலியை மூடி விட வேண்டும். ஐந்து நிமிடங்களாவது அப்படியே விட்டு வைத்து பின் பரிமாறினால் ஆஹா.. ஓஹோ!!!

இது சப்பாத்தியுடனும் சாதத்துடனும் மட்டுமே ஒத்துப்போகும். சாதத்தில் மேலாக ஊற்றிப் பிசைந்து கொண்டு, வறுத்த கேரள பப்படத்தைத் தொட்டுக்கொள்ளல் சுவை. ஊற வைத்த பயிறு மட்டுமே இந்த முறையில் சமைக்க ஏற்றது. கூடுதல் சத்திற்காக முளை கட்டிய பயிறை ஒரு முறை உபயோகித்தபோது அத்தனை சுவை கிடைக்கவில்லை. தவிரவும், தோல் தனியாகவும் பருப்பு தனியாகவும் மிதந்து வரும் அபாயமுண்டு. சின்ன குக்கரில் நேரடியாகத் தாளித்து, அதில் இதர பொருட்களைச் சேர்த்து ஒரு முறை செய்தேன். அதிகமில்லை ஜெண்டில்விமென்.. ஒர்ரே ஒரு விசில்தான். அது கூடப்பொறுக்காமல் குழைந்து விட்டது. வேண்டாம் விஷப்பரீட்சை என இப்பொழுதெல்லாம் நேரடியாக பாத்திரத்தில்தான் இதைச் சமைக்கிறேன். சற்றே கோபத்துடன் பார்த்தால், அந்த உஷ்ணத்திலேயே வெந்து விடுமளவுக்கு மென்மையானது சிறு பயிறு. ஆகவே அங்கிங்கு நகராது அண்டையிலேயே இருந்து சமைக்கவும்.

செய்முறையை ஒரு சிறிய வீடியோவாகவும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு உய்யவும்.
சப்பாத்தி, சாதம் தவிர மற்ற உணவுகளுடன் பொருந்திப்போகுமா என்று பரிசோதிப்பதானால், அவரவர் சொந்தப்பொறுப்பில் சூனியம் வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்குள் கலவரம் ஏதேனும் ஆனாலோ, நா தன் சுவையறியும் வேலையை இழந்தாலோ கம்பேனி பொறுப்பேற்காது.

Sunday 11 November 2018

சாரல் துளிகள்

அச்சிற்று உடையும் இறுதிக்கணத்திலும் இன்னொரு மயிற்பீலியைச் சுமத்தியபடி, பொறுமையைப் போதிக்கும் இவ்வுலகு.

நிழலுருவங்களில் நிஜத்தைப் பொருத்தி கற்பனையாய் உருவம் கொடுத்துக் குதூகலிக்கும் சிறுபிள்ளை விளையாட்டை பெரியவராய் ஆனபின்னும் அக்குழந்தை விட மறுக்கிறது.

அன்பைச் செலுத்த மட்டுமல்ல, அப்பேரன்பைப் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் கூட அன்புமுகிழ் மனத்தாலேதான் இயலும்.

வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் தட்டுப்படுகின்ற சில பிம்பங்களின் பிரதிபலிப்புகள், நினைவுகளையும் பிரதிபலித்து பயணத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச்செய்கின்றன.

நிலவூரும் அவ்வனத்துள் தனிமையின் அசைவின்மையில் சலசலக்கும் ஒற்றையிலையொன்று மட்டும் இல்லாது போமோ!!!

பாலைப்பூவின் தைலவாசனையுடன் சொட்டிக்கொண்டிருக்கும் இப்பொழுதோடு கூட்டணி கொண்ட சாரல்காற்று கருணையற்றது.

அத்தனை பிரம்மாண்டமான உடலின் வால் நுனியில் மட்டும் முடியை வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னது வலி பொறுக்கவியலா யானை.

முணுக்கென்றால் தன்னைத்தானே ஊதிப்பெருக்கிக் கொண்டு மல்லாக்க மிதக்கும் அம்மீனை பகையேதும் நெருங்கவில்லை,.. போலவே நட்புகளும்.


கிளர்ந்தெழும் மண்வாசனை போல் மூச்சடைக்க வைக்கும் நினைவுகள், சில நொடி ஊசலாட்டத்தின் பின் அமைதியுறும் மனக்குரங்கின் தோள்களில்.

இங்கே சில நொடி, அங்கே சில நொடிகளென தவ்வித்தவ்விப் பறக்கிறதந்தக் குருவி, புதிதாய் சைக்கிள் விடப் பழகும் குழந்தை போல்.

Wednesday 24 October 2018

ராமலஷ்மியின் பார்வையில் - சிறகு விரிந்தது.

இணைய உலகில் தோழி ராமலஷ்மியைத் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. "முத்துச்சரம்" என்ற வலைப்பூவில் எழுதி வரும் ராமலஷ்மி ஒளிப்பட வல்லுநரும் ஆவார். இவருடைய படைப்புகள் பல்வேறு இணைய இதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வெளியாகியுள்ளன. "அடைமழை" என்ற சிறுகதைத்தொகுப்பையும், "இலைகள் பழுக்கா உலகம்" என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். எனது கவிதைத்தொகுப்பான  "சிறகு விரிந்தது" பற்றி "திண்ணை" இணைய இதழில் வெளியான அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

கவிதைகளை மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன. உரக்கச் சொல்லவில்லை எதையும். ஆனால் உணரச் செய்கின்றன அழுத்தமாக. நூலிம் 91 கவிதைகளையும் நாம் கடந்து வரும்போது இது புரிய வரும். இயற்கையின் உன்னந்தங்கள், சமூகத்தின் அவலங்கள், இயந்திரமான நகர வாழ்வில் தொலைந்து போன அருமைகள், அன்றாட வாழ்வின் அவதானிப்புகள், வாழ்க்கையில் மாற்றவே முடியாது போய் விட்ட நிதர்சனங்கள் என நீள்கின்றன இவரது பாடுபொருட்கள்.

அழகிய மொழி வளமும், கற்பனைத் திறனும் இவர் கவிதைகளின் பலம்.

மனதைக் கவருகிறது ‘மகிழ்வின் நிறம்’:
“எந்தவொரு புதினத்தையும் விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது

ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்த வெளியில்
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்

காற்றில் வழிந்து வரும்
புல்லாங்குழலை விட
இனிமையான மழலையின் நகைப்பும்….”

அவரவர் துயரத்தின் போது அடுத்தவர் வேதனையையும் எண்ணி பதைக்கும் ஒரு மனதைப் பார்க்க முடிகிறது ‘எவரேனும்’ கவிதையில் எழுப்பட்டக் கேள்வியில்..
“தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின்கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்

பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
யாரேனும் இருக்கக் கூடுமோ?”

சமுதாயத்தில் அது, இது, எதுவுமே சரியில்லை எனும் எந்நாளும் சலித்துக் கொள்ளும் நாம் சரியில்லாத ஒன்றை சந்திக்க நேரும்போது செய்வதென்ன என்பதை கேட்கிறது, ‘சொல்வதெளிதாம்’. “விட்டு வந்த வயலும் வீடும் குளமும் குயில் கூவும் தோப்பும் கனவுகளாய் இம்சிக்க” ‘நகரமென்னும்’ மாயையான சொர்க்கத்தில் மயங்கி நாம் கிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

“காடுகளை அழித்து இன்னொரு காடு” ஆக ‘கான்க்ரீட் காடு’கள்:
“விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்
இயல்பைத் தொலைத்து
குறுகி நிற்கின்றன

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்
கான்க்ரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்”

சபிக்கப்பட்ட்டவர்களாய் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பரம பதத்தில் முன்னேறி சிம்மாசனத்தைப் பிடிக்கிறார்கள் ‘தாயம்’ கவிதையில். ஆனால் காலம் மாறினாலும் சமூகம் முழுவதுமாகவா மாறி விடுகிறது? இன்றும் அங்கே இங்கே எனத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது கள்ளிப்பால் கதைகள். ‘சன்னமாய் ஒரு குரல்’ பிசைகிறது மனதை:
“உணவென்று நம்பி அருந்திய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே
உறக்கம் கொண்டு விட்டோம்
கள்ளித்தாய் மடியிலேயே
பெற்றவளின் முகம் கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி
என் முகம் அவள் பார்த்த
தருணமென்றொன்று இருந்திருக்குமா.”

தேர்ந்த நிழற்படக் கலைஞரான இவர் எடுத்த படமே சிறகை விரித்து சிட்டுக் குருவியாய் நிற்கிறது அட்டையில். அனைத்து உயிர்களுக்குமான பூமியை மனிதன் சுயநலத்தோடு ஆக்ரமித்துக் கொள்ள அலைக்கழியும் சிட்டுக்குருவிகளின் ஆதங்கத்தை வடித்திருக்கிறார் ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ கவிதையில். நெகிழ வைக்கிறது, ‘அந்த இரவில்’ மகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பு. மனிதர்கள் சுமந்து திரியும் ‘முகமூடிகள்’, ‘தொடங்கிய புள்ளியிலேயே’ நிற்கிற காலம், மீனவர் துயர் பேசும் ‘ரத்தக் கடல்’, மனசாட்சியை உறுத்த வைக்கும் ‘இன்று மட்டுமாவது’, அன்பெனும் ‘மந்திரச் சொல்’, கடவுளின் ‘கையறு நிலை’, ஆழ்மன வேதனையாய் ‘கணக்குகள் தப்பலாம்’ எனத் தொகுப்பில் கவனிக்கத் தக்கக் கவிதைகளின் பட்டியல் நீண்டபடி இருக்கிறது.

பால்ய காலத்துக்கே அழைத்துச் சென்ற ‘ரயிலோடும் வீதிகள்’ ஏற்படுத்திய புன்னகை வெகுநேரம் விலகவில்லை:
“..அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு”

அழகியலோடு வாழ்வியலும், அவலங்களோடு ஆதங்கங்களும் வெளிப்படும் கவிதைகளுக்கு நடுவே மனித மனங்களில் நம்பிக்கையை விதைக்கச் செய்ய வேண்டியக் கடமையை மறக்கவில்லை ஆசிரியர். இளையவர் பெரியவர் பாகுபாடின்றி சந்திக்கும் எல்லாத் தோல்விகளுக்கும் தேடித் தேடிக் காரணம் கண்டு பிடித்து, பிறரைக் குறை சொல்லி, தம் தவறுகளை நியாயப்படுத்தியபடியே இருக்கிற உலகம் இது:
“விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்
பெருங்கடலாயினும் குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக் கற்றுக் கொண்ட மீன்கள்.”

ஆசிரியரின் கவிதை மீதான நேசமும் உணர்வுப் பூர்வமான வரிகளும் நம் எண்ணங்களின் சிறகை விரிய வைத்திருக்கின்றன.

வாழ்த்துகள் சாந்தி மாரியப்பன்!

‘சிறகு விரிந்தது’
சாந்தி மாரியப்பன்
‘அகநாழிகை’ வெளியீடு
96 பக்கங்கள், விலை ரூ.80/-
தபாலில் பெற்றிட:
aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட:
http://aganazhigaibookstore.com

அருமையான மதிப்புரைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி. மதிப்புரையை அவரது வலைப்பூவிலும் வாசிக்கலாம்.

Tuesday 2 October 2018

வீதிவலம்.. (நெல்லையப்பர் கோவில்)

சிறு கோவிலோ பெரிய கோவிலோ… அதைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் நடந்தே பார்த்து ரசிப்பது பிடித்தமான ஒன்று. கோவிலை வலம் வந்தாற்போலவும் ஆயிற்று, சுற்றியுள்ளவற்றைப் பார்வையிட்டாற்போலவும் ஆயிற்று என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதுவும் அவ்வீதிகள் ரதவீதிகளாக அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ரதவீதிகளுக்கென்றே ஒரு அமைதியான அழகு இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, தரிசனம் முடித்து வெளியே வந்ததும் ரதவீதிகளில் உலா வந்தோம்.

கீழரத வீதியில் தெற்கு நோக்கி நடக்கும்போது, நெல்லையப்பர் கோவிலின் எதிரிலிருக்கும் உணவகத்தையொட்டினாற் போலிருக்கும் இருட்டுக்கடையை அறியாதவர் இருக்க முடியாது. பகல் முழுவதும் பூட்டிக்கிடக்கும் கடை மாலை ஆறு மணியளவில் திறந்து வெகு விரைவிலேயே மூடிவிடும். அக்குறுகிய கால இடைவெளிக்குள் அல்வாவை வாங்கி விட வேண்டுமென்று பெருங்கூட்டம் காத்துக்கிடக்கும். முன்பு மாதிரி முண்டியடிக்காமல் இப்பொழுதெல்லாம் மக்கள் வரிசையில் நின்று வாங்கிச்செல்ல ஆரம்பித்திருப்பதால் அப்பகுதியில் நெரிசலும் தள்ளுமுள்ளும் குறைந்திருக்கிறது. நல்ல விஷயம்தான். 
 நெல்லை ஜங்க்ஷனிலிருக்கும் லஷ்மி விலாஸ் இனிப்பகம்

ஜங்க்ஷனிலிருக்கும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.
கீழரத வீதியிலேயே இன்னும் சற்று நடந்தால் வலப்பக்கம் சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட் உள்ளது. உள்ளே நுழைந்து கொஞ்சம் உடங்குடிக்கருப்பட்டியும் சின்ன வெங்காயமும் வாங்கிக்கொண்டு முறுக்கு வாசனை அழைத்த வழியில் மேலே நடந்தோம். மூன்றடிக்கு மூன்றடி இருந்த அந்தக் குறுகிய இடத்தில் விறகடுப்பில் கைமுறுக்குகள் வெந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து நடத்தும் கடை அது. வாசனையே பிரமாதமாக இருந்ததால் கொஞ்சம் கைமுறுக்கு வாங்கிக்கொண்டோம். எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு மாறாக சுவையாகவே இருந்தது. அடுத்த தடவை செல்லும்போது இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த மார்க்கெட் வீதியில் பார்க்க ஏதுமில்லாததால் திரும்பி நடந்து ரதவீதிக்கே வந்தோம். 
கோவில் வாசல்.

நெல்லையப்பர் கோவில் ராஜகோபுரம்

கீழ ரத வீதியும் தெற்கு ரதவீதியும் சந்திக்குமிடத்தை வாகையடி முக்கு என அழைக்கிறார்கள். அங்கிருக்கும் வாகைமரத்தின் கீழ் கோவில் கொண்டிருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாம். கோவிலின் வெளியே இருந்த கடையில் மும்பையில் பொங்கல் சமயம் மட்டுமே காணக்கிடைக்கும் கருப்பு கரும்பின் ஜூஸ் கிடைத்தது வெயிலுக்கு இதமாக இருந்தது. வாகையடி முக்கிலிருக்கும் லாலா கடை, இனிப்புக்கும் பலகாரங்களுக்கும் பெயர் போனதென்று உள்ளூர் மக்கள் சொல்லக்கேள்வி. அங்கிருந்து தெற்கு ரதவீதியிலேயே சில தப்படிகள் நடந்தால் உள்ளூரில் அல்வாவுக்கிணையாகப் புகழ் பெற்ற “திருப்பாகம்” என்ற இனிப்பு விற்கப்படும் கடையொன்று இருக்கிறது. ஒரு சில மளிகைக்கடைகளைத் தவிர அவ்வீதியில் குறிப்பிட்டுச்சொல்லும்படியாக ஏதும் காணப்படவில்லை. 
வாகையடி முக்கு.

தெற்கு ரதவீதி முடிவடைந்து மேற்கு ரதவீதி ஆரம்பிக்கும் முக்கில் சந்திப்பிள்ளையார் கோவில் இருக்கிறது. இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் கோவில் கொண்டிருப்பதால் அவருக்கு அக்காரணப்பெயர். கோவில் திறந்திருக்கும் சமயமானால் உள்ளே சென்று வணங்கலாம். அவ்வாறில்லையெனில் வெளியில் நின்றே மானசீகமாக வணங்கி தோப்புக்கரணமிட்டு குட்டிக்கொண்டு நகரலாம். எவ்வாறாயினும் அவர் அருள் பாலிப்பார். அவர்தான் கருவறையிலும் இருப்பார், கோபுரத்திலும் இருப்பவராயிற்றே. 
மேலரத வீதியில் சிறிதும் பெரிதுமாக நகைக்கடைகள் அதிகமும் காணப்படுகின்றன. வீதியிலிருந்து பிரிந்து செல்லும் சந்துகளுக்கு சமயப்பெரியவர்களான அப்பர், சுந்தரர் இன்னும் பலரின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. “முடுக்கு” என்று தெற்கத்தி மக்கள் அழைக்கும் சந்துகளில் ஒரு சிலவற்றில் பொற்கொல்லர்களின் கடைகள் இருக்கின்றன. ஒரு சமயம் நெல்லை சென்றிருந்த போது ஒரு நகையை ரிப்பேர் செய்ய வேண்டியிருந்தது. பெரிய கடைகளில் ரிப்பேர் வேலைகளை எடுப்பதில்லை எனக்கூறி, அங்கிருந்த பணியாள் ஒருவர் கை காட்டிய போதுதான் பொற்கொல்லர்களின் பட்டறைகள் அங்கிருப்பதை அறிந்தேன். எதிர்பார்த்ததை விட திருப்தியாகவே செய்து கொடுத்தனர். வீதிவலத்தால் கிடைத்த பலன்களில் இதுவுமொன்று.

இலக்கிய மணம் கமழும் பெயர்களைத்தாங்கியுள்ள மேலரத வீதியில் அமைந்திருந்திருக்கிறது அடுக்கு சுடலைமாடன் கோவில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு  போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற காரணப்பெயர் கொண்டது. இவ்வீதியிலிருந்து உட்செல்லும் சுடலைமாடன் கோவில் தெரு மிக முக்கியமானது. //தமிழகத்தின் முக்கியப் படைப்பாளிகளும் அரசியல் தலைவர்களும் வந்து சென்ற சிறப்புடையது. இத்தெருவில்தான் திரு. தி.க.சி. ஐயா அவர்கள் வசித்து வந்தார். தெருவின் இறுதியில், உயர்ந்த அந்தக் காரை வீட்டின் சந்துக்குள் சென்றால், பெரிய வானவெளி தென்படும். அந்தப் பெரிய வளவினுள் கடைசியாய் இருக்கும் வீட்டில் தி.க.சி ஐயா இருந்தார்.//(வரிகளுக்கு நன்றி நாறும்பூ நாதன் அண்ணாச்சி) அவரது தனயனும் மனதை வருடும் எழுத்துக்குச் சொந்தக்காரருமான வண்ணதாசன் ஐயா, கலாப்ரியா அண்ணாச்சி, போன்றோர் வசித்ததும் இவ்வீதியில்தான். சுடலைமாடன் கோவிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால் சற்றுத்தொலைவில் வரும் வைரமாளிகை உணவகத்தை சுகாவின் எழுத்தில் வாசகர்கள் தரிசித்திருக்கக்கூடும்.
மேலரத வீதியும் வடக்கு ரத வீதியும் சந்திக்கும் முக்கிலிருக்கும் பஸ் ஸ்டாப்பின் எதிரேயிருக்கும் டீக்கடையில் டீ நன்றாக இருக்கும் என்ற அரிய தகவலை இங்கே பதிவு செய்வது அதி முக்கியமானதாகும். இவ்வளவு நேரமும் நடந்த களைப்பைப் போக்க சூடாக டீ அருந்தி விட்டு வலத்தைத் தொடர்வது முக்கியம். ஏனெனில் ஆரெம்கேவி, போத்தீஸ், ராம்ராஜ் போன்ற ஜவுளிக்கடல்களும், சின்னச்சின்ன ஜவுளிக்கடைகளும் ஒரு சில நகைக்கடைகளும் இருக்கும் ஆபத்தான இப்பகுதியைக் கடக்க மிகுந்த மனத்துணிவும் உடற்தெம்பும் தேவை. லிஸ்டும் நாலைந்து கோணிகளும் தேவையான பணமும் கொண்டு வந்தால் ஒரு கல்யாணத்துக்குத் தேவையான நகை, மளிகை, ஜவுளி என எல்லாப்பொருட்களையும் இந்த ஒரு வீதியிலேயே வாங்கி விடலாம். வற்றல் வடகத்துக்கென்று பிரத்தியேகமாக இருந்த கடையில் மோர் மிளகாய், சீனியவரைக்காய் வற்றல், மிதுக்கு வற்றல், பாகற்காய் வற்றல் என ஒவ்வொன்றும் அணி வகுத்திருந்தது என் போன்ற நாக்கிற்கு அடிமையானவர்களுக்கு கண் கொள்ளாக்காட்சி. அங்கிருந்து வாங்கி வந்த மிதுக்கு வற்றல் செம ருசி. ரோஜாக்களுக்குப் போட வாங்கிய கடலைப்பிண்ணாக்கு எங்களுடன் மும்பைக்குப் பயணித்தது. ஆனால், வந்தபின் மழையில் நனைந்து வீணானது தனிக்கதை. ரயிலில் கட்டுச்சோறு கட்டுவதற்கான சில்வர் ஃபாயில் டப்பாக்கள் வற்றல் வடகம் கடையிலேயே கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. ஏனெனில் ஒவ்வொரு சமயம் இதெல்லாம் நெல்லையில் எங்கே கிடைக்கும் எனத்தெரியாமல் தேடியலைந்த சிரமம் எனக்குத்தான் தெரியும். 
ஆரெம்கேவியின் புதிய கிளை வண்ணாரப்பேட்டையில் திறந்தாலும் பழைய கடை இன்னும் இயங்கி வருகிறது. கைராசி உள்ள கடை என அக்கம்பக்கம் கிராமத்தார் இன்னும் இதைத்தான் தேடி வருவதாக முன்பொருமுறை அங்குள்ள பணியாளர் சொன்ன ஞாபகம். அவர்களுக்காக பட்டுப்புடவைப்பிரிவு இங்கும் இயங்குகிறது. அருகிலேயே ராயல் டாக்கீசை இடித்துக்கட்டப்பட்ட போத்தீஸ் கம்பீரமாக நிற்கிறது. டீ மற்றும் சிறுதீனிகள் விற்கும் கடைகள், பூ, பழங்கள் விற்கும் வண்டிகள், கரும்பு ஜூஸ், லொட்டு லொசுக்கு சாதனங்கள் விற்பவர்கள் என எப்பொழுதும் இந்த வீதி ஜே ஜே என இருக்கிறது. சீசன் சமயங்களில் கண்ணாடிப்பெட்டிக்குள் மின்னும் நாவல் பழம் வண்ணதாசன் ஐயாவை நினைவு படுத்தியதென்னவோ உண்மை. போத்தீஸின் எதிரே விற்றுக்கொண்டிருந்த பட்டாணி சுண்டல் சூடும் சுவையுமாக இருந்ததில் மகிழ்ச்சி. ஒரு பொட்டலம் வாங்கிக் கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு எத்தனை நேரமானாலும் நடக்கலாம். மல்லி, பிச்சி போன்ற பூக்களுக்கு அலந்து கிடக்கும் மும்பை வாழ்க்கையில் உழன்ற என் போன்றவர்களுக்கு அவற்றைக் கூடை கூடையாகப் பார்ப்பதிலேயே மனம் நிறைந்து விடும்.
வீதிவலம் இங்கே நிறைவுற்றது
ராயல் டாக்கீஸ் முக்கிலிருந்து வலப்பக்கம் திரும்பி, கீழ ரத வீதிக்குள் நுழைந்தால் ஆண்டி நாடார், வேலாயுதம் நாடார் பாத்திரக்கடல்கள் வரவேற்கின்றன. பித்தளை, எவர்சில்வர் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக்கடைகள். எத்தனை கடைகள் வந்தாலும், ஆண்டி நாடார் கடையின் பித்தளைப்பாத்திரங்களுக்கு இன்றும் மவுசு இருக்கிறது. பட்டாணிக்கடலையைக் கொறித்துக்கொண்டே மெல்ல நடந்து கோவில் வாசலை வந்தடைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டபின் கோவிலின் எதிரில் மண்டபத்திலிருக்கும் வளையல், சுவாமி அலங்காரப்பொருட்கள் மற்றும் கொலு பொம்மைக்கடைகளைப் பார்வையிட்டு வேண்டியதை வாங்கிக்கொண்டு கூட்டுக்குத் திரும்பினோம். 

இருட்டுக்கடை அல்வா வாங்கவில்லையா? எனக் கவலைப்படும் சமூகத்திற்கு… அதெல்லாம் ஜங்ஷனில் லஷ்மி விலாசிலேயே வாங்கியாயிற்று. லஷ்மியும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்சும் ஜங்க்ஷனில் எதிரெதிரே இருப்பது எத்தனை வசதியாயிருக்கிறது தெரியுமா?.

Saturday 22 September 2018

கண்பதி - 2018

“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”


எங்கள் வீட்டுப்பிள்ளையார்
இவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பிள்ளையார்
என வேண்டி விரும்பி அழைக்கும் மக்களின் அழைப்பையேற்று பிள்ளையார் எங்களூருக்கு வந்து கொலுவிருந்து அருள் பாலித்து வருகிறார். வழக்கம்போல் பத்து நாட்கள் இருந்து விட்டு "நா போயிட்டு வரேன்" என பத்தாம் நாளான அனந்த சதுர்த்தசியன்றி விடைபெற்றுக்கொண்டு விடுவார். ஆரத்தி பூஜை, பஜனை என கோலாகலமாக இருந்து விட்டு அவர் விடைபெற்றுச் சென்றதும் சட்டென்று ஒரு சூன்யம் மனதைச் சூழ்ந்து கொண்டு அரிக்கத்தொடங்கிவிடுகிறது. நவராத்திரிக்கு அம்பாள் வந்து கொலுவிருக்கும் வரைக்கும் இதே சூன்யம்தான் மனதை ஆளப்போகிறது. 

சுற்றுப்புறச் சூழலைக்காக்கும் பொருட்டு மஹாராஷ்ட்ராவில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மக்கர் எனப்படும் தெர்மோகூல் பொருட்களும் அடங்குவதால் பிள்ளையாருக்கான தெர்மோகூல் மண்டபங்கள் இவ்வருடம் எங்குமே காணக்கிடைக்கவில்லை. மூங்கில், மற்றும் துணிகளைக்கொண்டு செய்யப்பட்ட அலங்காரங்களே எங்கும் காணக்கிடைத்தன. கல்யாணிலிருக்கும் "பாயி கா புத்லா" பகுதியில் மூங்கில் கம்புகளால் மோதகம் மற்றும் தேங்காய் வடிவில், சட்டம் அமைக்கப்பட்டு அதில் தேங்காய் நாரைப் பொதிந்து உருவம் கொடுக்கப்பட்ட மண்டபங்கள் நிறையச் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வண்ணமே கைகளால் செய்யப்பட்டு நீர் வண்ணமடிக்கப்பட்டிருந்த பிள்ளையார்களும் இவ்வருடம் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்போதாவது சூழலைப்பற்றிய அக்கறை வந்ததே எனத்தோன்றியது நிஜம்.


வழக்கப்படி எங்கள் வீட்டுக்கும் பிள்ளையார் வந்த, ஐந்து நாட்கள் கொலுவிருந்து, ஐந்தாம் நாளான "கௌரி கணபதி" தினத்தன்று விடைபெற்றுச் சென்றார். பார்வதியின் இன்னொரு பெயர்தான் கௌரி. பிள்ளையார் சதுர்த்திக்கு முன் தினம் இவரை சில வீடுகளில் இருத்தி பூஜை செய்வார்கள். பின்னர் சதுர்த்தி ஆரம்பித்த ஐந்தாம் தினத்தன்று அனைவருக்கும், முக்கியமாக சுமங்கலிகளுக்கு விருந்திட்டு, தாம்பூலமளித்து பின்னர் கௌரியையும் பிள்ளையாரையும் விசர்ஜன் செய்வர். சில வீடுகளில் பிள்ளையாரை இருத்தாமல் கௌரியை மட்டும் வைத்துப் பூஜை செய்வதுமுண்டு. 


எங்கள் பிள்ளையாரையும் யதாஸ்தானம் அனுப்பி, கையில் கட்டுச்சோறு கொடுத்து, விசர்ஜன் செய்து விட்டு வந்தோம். நிர்மால்யம் என அழைக்கப்படும் களைந்து வைத்த பூஜைப்பொருட்கள் ஒரு பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், சில சமயம் அது நிரம்பி வழிந்து பக்தர்களின் காலில் மிதிபடுவது மனக்கஷ்டம் கொடுக்கக்கூடிய காட்சி. இம்முறை ஒரு பெரிய ட்ரக்கைக் கொண்டு வந்து நிறுத்தி, ஆட்கள் அங்கே நின்று அதில், நிர்மால்யத்தைச் சேகரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நல்ல விஷயம்தான்.


வழக்கமாக, சதுர்த்தி ஆரம்பித்த பின்னும் லேசான மழை இருந்து அனந்த சதுர்த்தசிக்குப் பின் நின்று விடும். மழையில் நனைந்து கொண்டே ஆரத்தி செய்த அனுபவங்களும் மும்பைக்கர்களுக்கு உண்டு. ஆனால் ஏனோ இவ்வருடம் பத்து நாட்களில் மழையே இல்லாமல் இருந்தது. இவ்வருடம் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பிள்ளையார்தான் காக்க வேண்டும். 

கட்டுச்சோறும் கையுமாக.
கிளம்பிச்சென்ற பிள்ளையாரின் இனிய ஞாபகங்களோடும் வரவிருக்கும் நவராத்திரியைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடும் இப்பண்டிகைக்காலம் இனிதே ஆரம்பித்திருக்கிறது. வரும் காலமெல்லாம் எல்லோருக்கும் எல்லா நலனும் விளைய இறைவன் அருள்வானாக.

"கணபதி பப்பா மோர்யா"

வால்: ஒன்றிரண்டு படங்களைத்தவிர மற்ற அனைத்தும் மொபைலில் க்ளிக்கியவை. இன்னுமிருக்கும் படங்கள் வரவிருக்கும் இடுகையில்.

Thursday 20 September 2018

புட்டுப்புட்டு வைத்தாயிற்று..

பிட்டுக்கு மண் சுமந்து அந்த ஈசன் பிரம்படியே பட்டிருக்கிறானென்றால் இதன் சுவைக்கு அளவுகோலும் வேண்டுமோ?!. கேரளாவைத் தாயகமாகக்கொண்ட இவ்வுணவு கேரளாவின் தங்கையான கன்யாகுமரி மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், தூரத்துச் சொந்தங்களான ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகாவிலும் அதிகம் சமைக்கப்படுகிறது. முன்பெல்லாம் கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் காலையுணவாக புட்டு சாப்பிடப்பட்டது. மொத்தமாக மாவை இடித்து பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டால் நினைத்த போதுகளிலெல்லாம் செய்து கொள்ளலாம். பச்சைப்பயிறு என்றழைக்கப்படும் சிறுபயிறை மட்டும் அவ்வப்போது ஊறவைத்து அவித்துத் தாளித்துக்கொண்டால் போதுமானது. தவிரவும் தென்னந்தோப்புகள் மலிந்த இவ்விடங்களில் தேங்காய்க்குப் பஞ்சமா என்ன?
எங்களூர் வழக்கில் புட்டுத்தோண்டி என்றும், உலக வழக்கில் புட்டுக்குடம் என்றும் அழைக்கப்படும், புட்டு செய்யப்பயன்படும் பாத்திரம் முன்பெல்லாம் பித்தளை அல்லது தாமிரத்தில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது. சின்னப்பானை போன்ற கீழ்ப்பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதன் வாய்ப்பகுதியில் புட்டுக்குழல் வைக்கப்பட்டு ஆவியில் புட்டு வேகும். குழல் சரியானபடி பொருந்துவதற்காக அப்பகுதியில் துணி சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்தது. இப்பொழுது எவர்சில்வரிலும் கிடைக்க ஆரம்பித்திருக்கும் புட்டுக்குடம் மற்றும் குழலின் வடிவமைப்பும் நவீனமடைந்திருக்கிறது. டிஜிட்டல் உலகிற்கேற்றவாறு மேம்பட வேண்டும் இல்லையோ?! தண்ணீர் கொதிக்கும் கீழ்ப்பாத்திரமும் அதன் வாய்ப்பகுதியில் வைக்கப்படும் குழல் போன்ற பாத்திரமுமாக இரண்டு பகுதிகளைக்கொண்ட புட்டுக்குடத்தைத் தவிர இப்பொழுதெல்லாம் புட்டுக்குழல் மட்டுமேயும் கிடைக்கிறது. இதை குக்கரின் வெயிட் வால்வில் பொருத்தி உபயோகிக்கலாம். இதைத்தவிரவும் சிரட்டை என்றழைக்கப்படும் கொட்டாங்கச்சி வடிவிலான கிண்ணமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் சிறிய அளவில் புட்டு அவித்துக்கொள்ளலாம்.
(படக்கொடை- இணையம்)
பக்கவாத்தியங்களின்றி மெயின் கச்சேரி சோபிக்காது. அவ்வண்ணமே புட்டுக்கும் சில பக்கவுணவுகள் தேவை. புட்டும் பயறும் என்பது எங்களூர் வழக்கு. இங்கே பயறு என்பது சிறுபயிறைக்குறிக்கும். பொதுவாகவே கேரள மற்றும் கன்யாகுமரி மாவட்ட உணவுகளில் சிறுபயிறு மற்றும் பயத்தபருப்பு அதிகமும் உபயோகப்படுவது கண்கூடு. சிறுபயிறை நன்கு ஊற வைத்து உப்பிட்டு வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். இரண்டு மூன்று வற்றல் மிளகாய்களைப் பிய்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மற்றும் வற்றல் மிளகாய்களைப் போட்டு மிளகாய் வறுபட்டதும் அவித்த பயறைப்போட்டுக் கிளறவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி தேங்காய்த்துருவலையும் இட்டுக் கிளறி இறக்கவும். பயறு ரெடி. மலையாளப்பப்படம் கிடைத்தால் அதையும் பொரித்து வைத்துக்கொள்ளவும். சாதாரணப்பப்படம் கிடைத்தால் அதுவும் நன்றே.

புட்டு சாதாரண அல்லது சிவப்புப் பச்சையரிசியில்தான் தயார் செய்யப்படுகிறது. கல் மண் உமி நீக்கி சுத்தம் செய்த பச்சையரிசியை தண்ணீரிலிட்டு நன்றாகக் கழுவி அரிவட்டி என்றழைக்கப்படும் அரிபெட்டியிலிட்டு நீரை வடிய விடவும். ஊற விட வேண்டாம். முன்பெல்லாம் பனை நார் அல்லது ஓலையால் செய்யப்பட்ட கெட்டியான அரிபெட்டிகள் கிடைக்கும். இப்போது அது அரிதாகி எவர்சில்வரிலான சல்லடைப்பாத்திரங்களும் ப்ளாஸ்டிக்கிலான சிறுகண்ணுடைய கூடைகளும் கிடைக்கின்றன. அவற்றையும் உபயோகித்துக்கொள்ளலாம். தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு துணியில் பரப்பி நன்கு காய்ந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மிக்ஸியிலிட்டு கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் அளவு அரிசியைப் பொடித்ததும் பெரிய கண் கொண்ட சல்லடையிலிட்டு சலித்துக்கொள்ளவும். கிடைக்கும் மாவு ரவை பதத்தில் இருப்பது நலம். எல்லா அரிசியையும் பொடித்து மாவாக்கியதும், பெரிய வாணலியிலிட்டு மிதமான தீயில் வறுக்கவும். மாவு பொலபொலவென உதிரியாகி மணக்க ஆரம்பிக்கும். அதிலிருந்து சிறு சிட்டிகையளவு எடுத்து கோலம் போடுவது போல் இழையாக இடவும். சுலபமாக இட முடிந்தால் அதுவே சரியான பக்குவம். இப்போது மாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். இவ்வளவு மெனக்கெட நேரமில்லையெனில் ரெடிமேடாகக் கிடைக்கும் புட்டு மாவை வாங்கிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் ராகி, கேழ்வரகு, கப்பை, போன்றவற்றிலும் புட்டு மாவுகள் கிடைக்கின்றன. தவிரவும் சேமியா, கோதுமை மாவு, கோதுமை ரவை, பாம்பே ரவை போன்றவற்றிலும் புட்டு செய்யலாம். எந்த மாவாயினும் மணம் வரும் வரை வறுத்தே பயன்படுத்த வேண்டும்.

ஒன்றரைக்கப் புட்டு மாவை எடுத்துக்கொண்டு அதில் சிட்டிகை உப்பிட்டு நன்கு விரவிக்கொள்ளவும். பின் கொஞ்சங்கொஞ்சமாக தண்ணீரைத் தெளித்து பிசிறிக்கொண்டே இருக்க வேண்டும். தெளித்த தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாவு மறுபடியும் வறளும். இச்சமயம் மறுபடியும் தண்ணீர் தெளித்துப்பிசிற வேண்டும். மாவில் கட்டிகள் தென்பட்டால் விரல்களாலேயே உதிர்த்துக்கொள்ளவும். மாவைக் கைகளில் எடுத்து இறுக்கிப் பிடித்தால் கொழுக்கட்டை போல் பிடிபடவும், விட்டால் உதிரவும் வேண்டும். இப்பக்குவம் வரும் வரை பிசிறவும். தண்ணீர் அதிகமானது போல் தோன்றினால் லேசாக மாவைத் தூவிச் சேர்த்துப் பிசிறவும். ரெடிமேட் மாவுகளானால் ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் தானாகவே உலர்ந்து விடுகிறது. தேங்காயைத் துண்டுகளின்றி பூவாகத் துருவி வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது, புட்டுக்குழலினுள் அதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய சல்லடைத்தட்டையிட்டு அதன் மேல் ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலை இட்டு அதன் மேல் புட்டு மாவை முக்கால் கப் அளவில் இடவும். பின் மறுபடியும் தேங்காய்த்துருவலையிடவும். இப்படியே குழல் நிரம்பும் வரை மாவையும் தேங்காயையும் அடுக்குகளாக இட்டு மேலாக துருவலையிட்டுப் பொதிந்து குழலை மூடியால் மூடி, தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும் புட்டுக்குடம் அல்லது குக்கரின் வால்வில் பொருத்தவும். புட்டுக்குழலின் மூடியிலிருக்கும் துளைகள் வழியே ஆவி வெளியாக ஆரம்பித்து, புட்டு மணமும் வந்தால் புட்டு வெந்து விட்டது என்றறிக. பின் அதை மெல்ல இறக்கி, காத்துக்கொண்டிருக்கும் தட்டு அல்லது வாழையிலையில் பக்கவாட்டில் சரித்து, கொடுக்கப்பட்டிருக்கும் கம்பியைக்கொண்டு கீழ்ப்பகுதியிலிருக்கும் துளையின் வழியே சல்லடைத்தட்டைத் தள்ள வேண்டும். புட்டு மெதுவாக பிதுங்கி வெளியே வரும். குழலை நேரே நிறுத்தி ராக்கெட் போல் புட்டை நிறுத்துவது உங்கள் சாமர்த்தியம்.
 நவீன புட்டுக்குழல்

ஒரு தட்டில் புட்டு, தாளித்த பயறு, பப்படம், பழம் மற்றும் சீனி அல்லது வெல்லத்தை  சீர்வரிசைத் தட்டு போல் அழகுற அடுக்கிப் பரிமாறவும். புட்டை மேலாக அழுத்தி உடைத்து, பப்படத்தை நொறுக்கிச் சேர்த்து, மேலாக பயிறையும் சீனியையும் தூவி எல்லாவற்றையும் விரவிக்கொண்டு, பழத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக இக்கலவையுடன் பிசைந்து வாயிலிட்டு.. ஆஹா!!!.. ஆஹாஹா!! எனக் கண் மூடி சொக்குவது எம் மக்களின் பண்டைய பழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் கடலைக்கறி என்றொரு வஸ்து வந்து மடத்தைப் பிடுங்கப்பார்க்கிறது. "புட்டும் பழமும் காப்பியும் போச்சு" என்றுதான் எம் மண்ணின் தாத்தன் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைவாள் தன்னுடைய நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தில் "கோடேறிக் குடிமுடித்த படலத்தில் 497வது வரியில் சொல்லியிருக்கிறாரேயன்றி கடலையைத் தொட(வில்)லை. ஆனால், விதவிதமான ருசிகளைக் கேட்கும் நாக்கு, கடலையோடு நின்று விடாமல் தேங்காய்த்துருவலின் இடத்தில் வேறு கறி வகைகளை இருத்தி நிரப்பி புட்டவித்து, ருசித்து மகிழ்கிறது. கறி வகைகளோடு உண்ண ஆப்பம், இடியாப்பம் போன்றவை இருப்பதால் யாம் புட்டை அதன் இயல்பான ருசியோடு உண்பேம்.

சாரல் துளிகள்

எல்லாவற்றையும் பின்தங்கவிட்டு முன்னேறிப் பறந்து இறங்கும்போதுதான் இறங்கியது வெற்றுக்கூடெனப்புரிபடுகிறது. மனமா?.. அது எங்கே லயித்து விழுந்து கிடக்கிறதோ.. யாருக்குத்தெரியும்!.

சட்டெனப் பறக்க நினைத்தெம்பிப் பின் பட்டெனத் திரும்பியமரும் பறவையின் இறகுகளில் ஒளிர்ந்தணைகிறது அது பறக்க நினைத்த வானம்.

சிறுமழையில் சூரியன் கரைந்த அப்புல்வெளியெங்கும் முளைத்திருக்கின்றன ஓராயிரம் சூரியன்கள்.

சொட்டித் தீராத வெயில், பொழிந்து தீராத நிலவு
சிறுகண் திறக்கும் மலர்களொடு என்றும் அலுக்காத அப்புன்னகையும்.

நடைபாதையில் தூங்கும் குழந்தையைப் போர்த்தி பாதுகாப்பு கொடுத்திருக்கிறது L.I.C விளம்பர சுவரொட்டி, ப்ரீமியம் எதுவும் கட்டாமலே.

தேடித்தேடி நம்மைக் கண்டுகொள்ளும் இறுதிக்கணத்தில் மறுபடியும் தொலைந்து போகிறோம்.

பேராசை அரக்கனின் பசி, குடும்பங்களின் மகிழ்வையும் நிம்மதியையும் காவு கொண்டபின்னும் அடங்குவதில்லை. எத்தனைதான் இட்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென கபளீகரம் செய்து செல்லும்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல் காற்றில் சுழன்று செல்லும் பூஞ்சருகைத் துரத்துகிறதொரு வண்ணத்துப்பூச்சி. யாருமற்ற அவ்வனாந்திரமெங்கும் நிறைகிறது அத்தனை வண்ணங்களாலும்.

சொற்கள் இறைபடும் தளத்தைச் சற்றே கவனத்துடன் கடப்போம். ஏனெனில் நம்மைக் காயப்படுத்தும் சொல்லொன்று நம்மால் வீசப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.

அமிலமும் வெந்நீருமாய் ஊற்றி அத்தனை அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட பின்னும், ஏனோ துளிர்க்கவில்லை அம்மரம்.

Wednesday 15 August 2018

72-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

சில வருடங்களுக்கு முன் எழுதிய வரிகள் இவை. வருடங்கள் கடந்திருக்கின்றனவே தவிர நிலையில் சிறிதாவது மாற்றம் இருக்கிறதா எனக்கேட்டால் இல்லையென்றே பதிலளிக்க வேண்டியிருக்கும்.  லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனிமேல் தண்டனையுண்டு என்ற அறிவிப்பு சற்றே ஆறுதலளித்தாலும், சிறுமிகளென்றும் பாராமல் ஆங்காங்கே அவர்கள் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை கவலையளிக்கிறது. இனிமேல் வரும் வருடங்களிலாவது இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Monday 30 July 2018

சாரல் துளிகள்

குற்றங்கடியும் தாய் போல் தண்மையைப் பொழியும் இவ்வெண்ணிலவு, எத்தனையோ நெஞ்சங்களைத் தன் நெஞ்சில் சாய்த்துத் தேற்றுகிறது.

விரிசல் விட்டிருக்கும் கூரையைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வீட்டைச்சுமந்து கொண்டலைகிறது நத்தை.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

மழையில் நனைவதும் வெயிலில் காய்வதுமான இவ்வாழ்விற்கு இளஞ்சாரல் நேரத்து வானவிற்கள்தான் அவ்வப்போது வண்ணமூட்டுகின்றன.

உயிர் ஊசலாட அந்தரத்தில் வித்தை புரிந்து திரும்பிய கழைக்கூத்தாடி, உயிர் வளர்க்கவென ஒவ்வொருவரிடமும் கையேந்தியபின் வெறுங்கையுடன் நகர்ந்து கொண்டிருந்தான்.

கடும் போக்குவரத்து நெரிசலில் அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லும் பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் மேல் அமர்ந்தவாறு, மழையில் நனைந்தபடி பயணிக்கும் அக்குழந்தைக்கு எல்லாமே குதூகலமாக இருக்கிறது.

சிற்றூர்களிலிருந்து வந்து வாழ்வைத்தொடங்கும் எளிய மனிதர்களின் எளிய ஆசைகளை, உண்டு செரித்து வளர்கிறது பெருநகரம்.

ஆக்ரோஷத்துடனிருக்கும் மழையுடனான வாக்குவாதத்தின் நடுவே, கோபத்துடன் கதவை அறைந்து சாத்திவிட்டுச் செல்கிறது காற்று.

தாலாட்டுகிறது காற்று, கடற்தொட்டிலில் தூங்குகின்றன படகுகள்.

உயிர் வரை நனைந்து குளிர்ந்திருந்த செங்கற்சூளையின் மேல் முளைத்திருக்கும் பூர்வீகக்காடு காத்திருக்கிறது விட்டுச்சென்ற பறவைகளுக்காய்.

Monday 23 July 2018

சாரல் துளிகள்

ஆயிரங்கால் கொண்ட பரி போல் தாவிச்சென்று கொண்டிருக்கும் இம்மழையை வாழ்த்துமுகமாய் ஓரிரு பூவிதழ்களை உதிர்க்கிறது குல்மொஹர்.

சொந்த ஊரில் பெய்யும் ஒவ்வொரு துளியும், புலம்பெயர்ந்தவர் மனதில் பெருமழையாய்ப் பொழிந்து பசும்நினைவுகளை மலர்த்துகிறது.

ஒரு கறாரான ஆசிரியரைப்போல், தினமும் குறித்த நேரத்தில் வந்து விடும் இம்மழையை என்ன செய்ய!!!!

வாகனங்களில் கரம் சிரம் புறம் நீட்டும் சிறார் போல் பால்கனி அழிக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டி மழையனுபவிக்கின்றன தாவரங்கள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் 
உறுமியும் பளிச்செனப் புன்னகைத்தும் 
மறுமொழியளித்துக் கொண்டிருந்த வானம் 
இருந்தாற்போல் அழத்துவங்கியது. 
இத்தனைக்கும் நான் 
மனதோடுதான் பேசிக்கொண்டிருந்தேன்.

களைத்துச் சோர்ந்து இற்று வீழும் இறுதிக்கணத்திலும் ஒரு பெருங்கனவு துணைக்கு வருவது எப்பேர்ப்பட்ட வரம்.

கடந்து வந்த பாதையெங்கும் பதிந்த நினைவுத்தடங்களில் தளும்பி நிற்கும் ப்ரியம் பொசிந்து ஆங்கோர் கடலாய் ஆர்ப்பரிப்பதை அறிவாயா நிலவே?.

கண் சிமிட்டும் நட்சத்திரங்களின் சமிக்ஞையைப் புரிந்து கொள்ளாமல் ஊரெங்கும் தேடிக் கொண்டிருக்கிறது நிலா. சூரியனை விழுங்கி வயிற்றில் ஔித்த மின்மினியோ ஏதுமறியாததுபோல் செடிக்குச்செடி தாவுகிறது. இருவரையும் நோக்கி குறும்புடன் சுடர்கிறான் சூரியன்.

விருப்புடனோ, அன்றியோ.. காம்பை விட்டுக் கழலும் பூ எவ்வுணர்வு கொண்டிருக்கும்?! சோகமா? விடுதலையா? அல்லால், கடந்த ஒன்றா?

உருகி வழியும் சூரியனைக் குடித்துப் பசியாறும் இலைகளின் கீழ் வெயிலாறிய குருவி கடைசி நொடி வரை கவனிக்கவேயில்லை, குறி வைத்திருந்த கவண்வில்லை.

Thursday 19 July 2018

தீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.


எட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உண்டு.. எட்டாவது கண்டம் எது? எனக்குழம்பாதீர்கள். கழுத்துக்கும் கண்டம் எனப்பெயருண்டே :-). செய்து சாப்பிட்ட பின் ருசி நாக்கோடு நின்று விடாமல் கழுத்து வரைக்கும் பரவும் என உறுதியிட்டுக்கூறுகிறேன் :-)

தீயலின் செய்முறையை அறிய சுட்டியைச் சொடுக்குங்கள்.
"ஆடிச்சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் குமுதம் சிநேகிதியின் ஆகஸ்ட் மாத இதழில் நான் எழுதிய "நாஞ்சில் நாட்டு தீயல்" வெளியாகியிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வெளியிட்ட சிநேகிதிக்கும், திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்கும் மிக்க நன்றி.

தீயல் எட்டுத்திக்கும் மணக்கட்டும்... ட்டும்.. டும்.. ம்..

Wednesday 4 July 2018

பிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.

இந்த வருடம் பூத்த முழு மலர்
இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் மலர ஆரம்பித்து இரவில் நன்கு மலர்ந்து விடியுமுன் வாடிவிடும் ஓர் அரியவகை மலர்தான் பிரம்மகமல். மனதை மயக்கும் நறுமணம் கொண்ட இம்மலர் நிஷாகந்தி எனவும் அழைக்கப்படுகிறது. Epiphyllum oxypetalum என்ற தாவரவியல் பெயராலும், Dutchman's pipe cactus, queen of the night போன்ற பிற பெயர்களாலும் இது வழங்கப்படுகிறது. தெற்கு மெக்ஸிகோ மற்றும் தென்னமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இத்தாவரம் இப்பொழுது உலகெங்கும் விரும்பி வளர்க்கப்படுகிறது. 
சிறு மொட்டு
கேக்டஸ் அதாவது கள்ளி வகையைச் சேர்ந்த இச்செடியை வளர்க்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. வாரமிரு முறை நீர் ஊற்றினால் போதுமானது. தாய்த்தாவரத்திலிருந்து ஒரு முதிர்ந்த இலையைத் துண்டித்து மண்ணில் நட்டு விட்டால் போதுமானது. ஒரு இலையையே அதன் நீளத்தைப்பொறுத்து இன்னும் இரண்டு மூன்று துண்டுகளாக ஒடித்து அவற்றை நட்டு வைத்தால் அவையும் தனிச்செடிகளாக வளர்ந்து விடும். நட்டு வைத்த இலையிலிருந்தே பக்க இலைகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். நன்கு வேர் பிடித்து வளர ஆரம்பித்த பின் செடியை ஒட்டினாற்போல் குச்சி போன்று ஒல்லியான நீளமான முதன்மைத்தண்டுகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். முதன்மைத்தண்டின் நுனி, தட்டையான இலையைக் கொண்டிருக்கும். 
சற்றே வளர்ந்த மொட்டு
பிரம்மகமல் செடி இரண்டு மீட்டர் உயரத்திற்குக் குறையாத முதன்மைத்தண்டையும், 30 செ.மீ அளவு வரை நீளமாக வளரக்கூடிய பக்க இலைகளையும் கொண்டது. இதன் இலைகள் அலைபோல் நெளிநெளியான புறக்கோட்டைக் கொண்டவை. இக்கோடுகளிலிருந்துதான் மொட்டுகள் தோன்றும். புறக்கோடுகளிலிருந்து தொப்புள்கொடி போல் நீண்டு வளர்ந்த பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் தாமரை வடிவிலான மலர், விஷ்ணுவின் உந்தியிலிருந்து தோன்றிய பிரம்மா தாமரைமலரில் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையொத்திருப்பதால் இப்பூ பிரம்மகமல் எனப்பெயர் பெற்றது. 30 செ.மீ நீளமுள்ள பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் பிரம்மகமல் பூக்கள் 17 செ.மீ அகலம் கொண்டவை. மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில்தான் இது பூக்கும்.
பூக்கும் நாள் நெருங்குகிறது
மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது ஓர் அபூர்வ மலர் மட்டுமல்ல, தெய்வீக மலரும் கூட. தன் வீட்டில் வளர்க்க விரும்பி யாரேனும் இலையைக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அப்படிக்கொடுத்தால் அதிர்ஷ்டம் தன்னை விட்டுப் போய் விடுமென்று ஓர் நம்பிக்கை இங்கே நிலவுகிறது. ஆகவே பிறர் அறியா வண்ணம் யாருடைய தோட்டத்திலிருந்தாவது கொண்டு வந்துதான் வளர்க்க வேண்டும் என்பார்கள். ஒரு வீட்டில் பிரம்மகமல் பூப்பதென்பது அதிர்ஷ்டத்தைக்கொண்டு வரும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பூக்கும்போது அருகிலிருப்பது அதிர்ஷ்டம் என்றும் அவ்வாறு அருகிலிருக்கும்போது வைக்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும் கருதப்படுகிறது. தெய்வீக மலராகக் கருதப்படுவதால் இதைப் பறிக்க மாட்டார்கள். ஆண்டின் முதல் பூவுக்கும், செடியில் முதன்முதலாகப் பூக்கும் பூவுக்கும் தூபதீபம் காட்டி வழிபடுவார்கள். 
முழுமையடைந்த மொட்டு
மகளின் தோழி மனமுவந்து கொடுத்ததன் மூலம் இச்செடி எங்கள் வீட்டில் நுழைந்தது. நட்டு வைத்து நான்கு வருடங்களுக்குப் பின் மொட்டு விட்டபோது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மினியேச்சர் வாழைமொட்டு போல் தோன்றி தாமரை மொட்டு அளவில் வளரும் வரை தினமும் அதன் வளர்ச்சியைக் கண்டு ரசித்தோம். பூமியை நோக்கி வளர்ந்த மொட்டு ஒரு சமயம் யூ டர்ன் போட்டு வானத்தை நோக்கி வளைந்து வளர ஆரம்பித்தது. மொட்டு அப்படி வளைந்து வளர ஆரம்பித்தால் பூக்கும் நாள் நெருங்கி விட்டதென அர்த்தமாம்.  ஒரு நாள் மாலை, உள்ளிருந்து வெள்ளை நிற இதழ்கள் மெல்லத் தலை காட்டின. அங்கிங்கு நகராமல் அருகிலேயே அமர்ந்து பூவொன்று மலர்வதைப் படிப்படியாகக் கண்டு ரசித்தோம். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் மெல்ல இதழ் விரிக்க ஆரம்பித்து ஒன்பது மணியளவில் சிறிய வெண்டாமரையொன்று முழுவதுமாய் மலர்ந்திருந்தது. வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது அதன் நறுமணம். தொட்டாலே வாடிவிடும் மென்மையான இதழ்கள் கொண்டவையாய்த் திகழ்ந்தது அம்மலர். கைச்சூடு கூட தாங்காது எனக் கேள்விப்பட்டிருந்ததால் தொட்டு ரசிக்கத் துணியவில்லை. முதற்பூவை பூஜித்தோம். அதன் பின் அந்த சீசனிலேயே குறைந்தது நான்கு பூக்களாவது பூத்தன. அதன் பின் ஆண்டு தோறும் பூக்க ஆரம்பித்தது. 
மலரத்தயாராக
சில காரணங்களுக்காக வீட்டை இடமாற்றம் செய்ய நேர்ந்தபோது, ஷிப்டிங் வசதிக்காக செடியில் கொஞ்சம் இலைகளை வெட்டி ட்ரிம் செய்தேன். அவ்வளவுதான்.. பூப்பது நின்று போனது. அப்படிச்செய்யக்கூடாதாம், இலைகள் தானாகவே காய்ந்து உதிர வேண்டுமாம். அடக்கடவுளே!! இது தெரியாமல் போய் விட்டதே என நொந்து கொண்டு மறுபடி எப்போ பூக்குமோ என எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு முதலிலிருந்து காத்திருக்க ஆரம்பித்தேன். இதோ.. நான்கு வருடங்களுக்குப் பின் இந்த சீசனின் முதற்பூ பூத்திருக்கிறது.
இது சிலவருடங்களுக்கு முன் பூத்தது.
இரவு முழுவதும் மலர்ந்திருக்கும் இப்பூக்கள் பிரம்ம முஹூர்த்த காலத்துக்குப்பின், அதாவது விடியலில் கூம்பி மறுபடியும் மொட்டு போல் தோற்றம் கொள்கின்றன. அதேபோல் தண்டும் படிப்படியாகத் தளர்ந்து துவண்டு விடும். அ ந் நிலையில் நான்கைந்து நாட்கள் செடியிலேயே இருந்தபின் தண்டுப்பகுதி மெல்ல மெல்ல பழுத்து வெளிர் மஞ்சள் நிறம் கொள்ள ஆரம்பிக்கும். இது உதிரப்போகும் அறிகுறியாகும். தண்டு முழுவது மஞ்சள் நிறமானதும் ஓரிரு நாட்களில் காய்ந்து வற்றிச் சுருங்கி செடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பந்தத்தை முடித்துக்கொள்ளும். 
மலர்ந்து மணம் பரப்பிய மறுநாளில்
சில வருடங்களுக்கு முன் தம்பி வீட்டில் பூத்தவை
செடி நடப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் பூக்க ஆரம்பிக்கும். ஆகவே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். ஆனால், என் வீட்டிலிருந்து பெங்களூருக்கு இலைத்துண்டைக் கொண்டு சென்று நட்டு வைத்து வளர்த்த தம்பி வீட்டில் ஒரு வருடத்திலேயே பூக்க ஆரம்பித்து விட்டது. அங்குள்ள சீதோஷ்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் ஒரே தடவையிலேயே பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூத்திருந்தன. உண்மையிலேயே அரிய மலர்தான்.

Thursday 28 June 2018

சாரல் துளிகள்

மதங்கொண்டு புத்தியழிந்த யானையின் பாதையில் குறுஞ்செடி எங்ஙனம் பிழைக்கும்?.

வான்வெளியின் எங்கோ ஒரு மூலையில் கவனிக்கப்படாமலேயே அவிந்து வீழ்ந்த எரிநட்சத்திரங்கள் ஒன்றிணைந்து பெருநட்சத்திரமான போழ்து ஆங்கொரு பிரபஞ்சம் பிறந்தது.

நினைவுகளால் கனத்துத் ததும்பித் திணறும் இவ்விரவு அந்நினைவுகளையே ஊன்றிக்கொண்டு மெல்ல நகர்கிறது.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

காலம் ஒரு நெருப்பாறு. இறங்கிக் கரையேறுகிறவர்களைப் புடம் போட்டும், பொய் வேஷத்தைக் கலைத்து அடையாளம் காட்டியும், மூடிய மாசெரித்து மின்னவும் வைத்து விட்டு தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறுகுழந்தையின் கையிலகப்பட்ட லட்டைப்போல் நொறுங்கிக் கரைந்து கொண்டிருக்கும் அம்மலையின் விலாவில் கிச்சுக்கிச்சு மூட்ட முயல்கிறது ஒரு இயந்திரம்.

கேட்கக் காதுகள் இல்லாவிடத்தில் துயரம் தன்னைக் கண்ணீரால் வரைந்து கொள்கிறது. கண்ணுடையவன் பார்க்கக் கடவன்.

உளுத்துப்போன பேழையில் காக்கப்படும் பொக்கிஷத்தையொத்ததே, தகுதியில்லார் மேல் வைக்கப்படும் நம்பிக்கை. இரண்டுக்குமே உத்தரவாதமில்லை.

உண்மைத்தன்மை சோதித்தறியும் நோக்கில் தோலுரிக்கப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் நிலையிலும் மனங்கசிந்து நேசிக்கும் ப்ரியத்தின்முன் குற்றவுணர்வு கொள்கிறது நப்பாசை. கை வீசி அப்பால் விலகிச்செல்கிறது நம்பிக்கையின்மை.

நிதர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுபவர்களே முப்பொழுதும் கற்பனையுலகில் சஞ்சாரித்துக் கிடப்பர். அல்லாதோர் எதிர்கொண்டு வென்று கடப்பர்.

LinkWithin

Related Posts with Thumbnails