Monday 30 July 2018

சாரல் துளிகள்

குற்றங்கடியும் தாய் போல் தண்மையைப் பொழியும் இவ்வெண்ணிலவு, எத்தனையோ நெஞ்சங்களைத் தன் நெஞ்சில் சாய்த்துத் தேற்றுகிறது.

விரிசல் விட்டிருக்கும் கூரையைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வீட்டைச்சுமந்து கொண்டலைகிறது நத்தை.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

மழையில் நனைவதும் வெயிலில் காய்வதுமான இவ்வாழ்விற்கு இளஞ்சாரல் நேரத்து வானவிற்கள்தான் அவ்வப்போது வண்ணமூட்டுகின்றன.

உயிர் ஊசலாட அந்தரத்தில் வித்தை புரிந்து திரும்பிய கழைக்கூத்தாடி, உயிர் வளர்க்கவென ஒவ்வொருவரிடமும் கையேந்தியபின் வெறுங்கையுடன் நகர்ந்து கொண்டிருந்தான்.

கடும் போக்குவரத்து நெரிசலில் அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லும் பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் மேல் அமர்ந்தவாறு, மழையில் நனைந்தபடி பயணிக்கும் அக்குழந்தைக்கு எல்லாமே குதூகலமாக இருக்கிறது.

சிற்றூர்களிலிருந்து வந்து வாழ்வைத்தொடங்கும் எளிய மனிதர்களின் எளிய ஆசைகளை, உண்டு செரித்து வளர்கிறது பெருநகரம்.

ஆக்ரோஷத்துடனிருக்கும் மழையுடனான வாக்குவாதத்தின் நடுவே, கோபத்துடன் கதவை அறைந்து சாத்திவிட்டுச் செல்கிறது காற்று.

தாலாட்டுகிறது காற்று, கடற்தொட்டிலில் தூங்குகின்றன படகுகள்.

உயிர் வரை நனைந்து குளிர்ந்திருந்த செங்கற்சூளையின் மேல் முளைத்திருக்கும் பூர்வீகக்காடு காத்திருக்கிறது விட்டுச்சென்ற பறவைகளுக்காய்.

2 comments:

Ajai Sunilkar Joseph said...

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

அதற்கு ஒருநாள் கூட ஆயுள் இருந்திருந்தால்
ரசிக்க பொழுதிருந்திருக்கும் அல்லவா...?

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails