Monday 18 September 2017

கண்பதி - 2017

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியை அக்கம்பக்கத்து பண்டல்களில் வீற்றிருந்த பிள்ளையார்களைத் தரிசித்தும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பிள்ளையார்களைக் கண்டு களித்தும் சுருக்கமாக முடித்துக்கொண்டோம். எனது இளைய சகோதரன் ஒருவன் எதிர்பாராவிதமாக இவ்வுலக வாழ்வை நீத்ததால் இந்த வருடம் எங்களுக்குப் பண்டிகைக்கொண்டாட்டம் எதுவுமில்லை. ஆயினும் அழகுப்பிள்ளையார்களைக் கண்டபோது க்ளிக்காமல் வர மனது ஒப்புக்கொள்ளவில்லை. கையிலிருந்த மொபைல் போனில் க்ளிக்கியவை உங்கள் பார்வைக்காகவும் எனது வலைப்பூவில் நிரந்தரக்கொலுவாகவும்..


















கடந்த வருடங்களில் சதுர்த்திக்கொண்டாட்டம்..

துன்பம் நீக்கும் தும்பிக்கையான்




கிடைப்பது கிடைக்காமல் இருக்காது.

நான் படித்த நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டமும் முன்னாள் மாணவர் சந்திப்பும் இந்த வருடம் மார்ச் மாதக்கடைசியில் நடைபெற்றன. கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை வழக்கம் போல் கடைசி நிமிடத்தில் நிராசையானது. எனினும் நான் எழுதியனுப்பிய கட்டுரை பொன்விழா மலரில் இடம் பெற்றதன் மூலமாக மறைமுகமாகவேனும் அதில் கலந்து கொண்ட திருப்தி) என்ன ஒன்று.. படைப்பை அனுப்ப கடைசி நாளாகி விட்டபடியால் கட்டுரையை மெயிலில் அனுப்பி, பொன்விழாவை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த எங்கள் தமிழ்த்துறைத்தலைவர். திரு. மாதவன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு என் சீனியரும் குமுதம் நிருபருமான திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்குத்தான் கொஞ்சம் சிரமம் கொடுக்க வேண்டியதாயிற்று :)
வாட்ஸப் புண்ணியத்தில் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததைப் போலவே பொன்விழா மலரையும் காண வேண்டுமென்று ஆசை. அனுப்பித்தருவதாக அண்ணன் கூறியிருந்ததால் வரும்போது வரட்டுமென்று காத்திருந்தேன். அப்போதுதான் தமிழகத்தில் கோவில்களுக்குச் சென்று வர வேண்டுமென்று பிள்ளைகள் திட்டம் போட்டு, பயணம் கிளம்பும் வாய்ப்பு வந்தது. நாங்களும் திருப்பதி, திருநள்ளாறு, கூத்தனூர், ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி என எல்லாக் கோவில்களுக்கும் போய்விட்டு நாகர்கோவிலை வந்தடைந்தோம்.

அன்றைக்கு நாகரம்மன் கோவிலுக்குப் போகலாமென்று கிளம்பி ஆட்டோ ஸ்டாண்டுக்கும் வந்தபின், திடீரென்று கன்யாகுமரி போகலாமென்று ப்ளான் திசை மாறியது. கன்யாகுமரியென்றால் கொஞ்சம் நேரம் கழித்து கூட போய்க்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. இப்போதுதான் நான், அப்டீன்னா.. மாதவன் சாரைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்" என நாகர்கோவிலுக்கு வந்த நாள் முதலாக சுமந்து கொண்டிருந்த ஆசையை வெளியிட்டேன். ஆச்சரியப்படும் விதமாக குடும்பம் ஒத்துக் கொண்டதும் மனசு மாறுவதற்குள் அவர்களை ஆட்டோவில் அள்ளிப்போட்டுக் கொண்டு வடசேரி பெரியதெருவிலிருக்கும் சார் வீட்டுக்குப் போனோம். முன்னரே போனில் அனுமதியும் அட்ரசும் வாங்கியிருந்ததால் சாரும் எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்று கண்டது போலவே அப்படியே இருந்த மாதவன் சாரை அடையாளம் கண்டுகொள்ள எனக்குச் சிரமமில்லை. மலர் தொடர்பாக அடிக்கடி மொபைலில் பேசியிருந்ததால் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். நான் எந்த வருடம் அங்கு படித்தேன் என்பதையும் குடும்பத்தையும் பற்றி ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்து கொண்டார். முகத்தை வைத்துதான் அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. ஆசிரியரிடம் எத்தனையோ மாணவர்கள் பயின்றிருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் கொள்ள இயலாதுதானே.

மாதவன் சாரின் மனைவி திருமதி. பிரேமா மணி அவர்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை என்று அறிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம். ஏனெனில் நான் அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவி. ஆங்கில மீடியத்துக்குப் பாடம் எடுத்ததாக அவர் கூறினாலும் எனக்கென்னவோ எங்கள் தமிழ் மீடியத்துக்கும் வந்ததாகவே தோன்றிக் கொண்டிருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிக்கால பழைய நினைவுகளை வெகுநேரம் அசை போட்டபின் அவரிடம் பொன்விழா மலரையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு விடை பெற்றோம். இத்தனை வருடம் கழித்து பழைய ஸ்டூடண்டை குடும்பத்துடன் சந்தித்ததில் சாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. படைப்பாளியின் போட்டோ போடப்படாவிட்டால் என்ன? என் கல்லூரியின் பொன்விழா மலரில் என் பெயருடன் படைப்பும் இடம் பெற்றிருக்கிறதே.. எனக்கு அது போதும்.

கல்லூரியை விட்டு வெளியே வந்த இத்தனை வருடங்களுக்குப் பிறகு, எனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடக்குமென்றோ என் ஆசிரியர்களைச் சந்திப்பேனென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. மைக்கை மானசீகமாக நீட்டி, "இப்பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்றாள் மகள்.

"மனம் நிறைந்திருக்கிறது" என்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails