Monday 28 March 2022

சாரல் துளிகள்


இல்லாத ஈயைத் துரத்திக் கடிக்க முயலும் நாயைப்போல், இல்லாத ப்ரச்னைகளுடன் போராடிச் சலிக்கின்றனர் சில மனிதர்கள்.

இலையென்னவோ மெல்லென வீழ்ந்து விடுகிறது. சுவடின்றி தன்னுள் இணைத்துக்கொள்ள இயற்கைதான் படாத பாடு படுகிறது.

ஜன்னலில் ஒட்டியிருக்கும் வெயிலை தட்டி விட்டுக்கொண்டேயிருக்கிறது இலையின் நிழல். அகன்று விட்டதுபோல் போக்குக் காட்டி மறுபடியும் வந்தமரும் வெயில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் படபடக்கிறது.

சவலைப்பிள்ளையென
கதறிக்கதறி ஓய்கிறது
ஆட்கள்
வெளியே போயிருக்கும் வீட்டிலிருக்கும்
தொலைபேசி.

'கிச்சடி' என்பது வெறும்சொல்
'அர்சிம்பருப்பு' என்பது ஓர் உணர்ச்சிக்குவியல்
"பொங்கல்" என்பது பேரோசையுடன் அறையும் ஓர் அலை.

ஒரு சொல் தீப்பெருக்க ஒரு சொல் தீயடக்க, மனம் கொதித்துத் தளும்பும் நுரை விளிம்பில் தள்ளாடுகின்றன ஒன்றிரண்டு கசந்த சொற்கள். வழியுமோ அன்றி அடங்குமோ!!!! தீ பெருகுமோ அன்றி குளிருமோ!!

பட்டுப்பட்டாய் அவித்த இட்லியைப் பிட்டுப்பிட்டுப் போட்டுக்கொண்டவனுக்கு, லொட்டு லொட்டென்று பாத்திரத்தில் தட்டி நினைவூட்டுகிறாள், 'பாத்திரம் காலி சொக்கா.. பாரம் சுமக்கப்போ'. 

கால் நோக கை கடுக்க ஏந்தி நின்ற விளக்கிலிருந்து ஒளியைப் பறித்து வானில் எறிகிறான் எவனோ ஒருவன். கல்லாய்ச் சமைந்து காலகாலமாய் நிற்கும் காரிகையின் கை விளக்கில் திருட்டுத்தனமாய் அமைந்தெழுந்து செல்கிறான் சூரியன் மின்மினிப்பூச்சியாக.

எல்லாப்பக்கத்திலும் ஒரே கடல்தான் என்கிறபோது, எந்தத் துறையில் முங்கினால்தான் என்ன?

முஹூர்த்தம் முடிந்து பெண்ணை புகுந்த வீடு அனுப்பிய வீடும், கொடை கழிந்த கோவிலும் ஒரே முகத்தை அணிந்து கொண்டிருக்கின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails