Friday 28 April 2023

கொடுக்கு.


“அவன் அப்புடித்தான், தேளு கொட்டுன மாதிரி என்னமும் சொல்லிருவான்.. கொஞ்ச நேரத்துல மறந்துட்டு எப்பமும் போல சாதாரணமா பேசுவான், நாம்தான் கெடந்து தவிக்கணும்” அரைத்து வைத்த மசாலாவைக் குழம்பில் கலக்கியபடியே ராஜீவின் அம்மா சாதாரணமாகச் சொன்னாள். கேட்டுக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கௌசி.

அவளுக்குத் தேள் கொட்டிய நேரடி அனுபவம் கிடையாதே தவிர, பக்கத்து வீட்டு மகேஸ்வரிக்கு நெறி கட்டிக்கொண்டு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டாள் என்பதை அருகிலிருந்து கவனித்திருக்கிறாள். கொடுக்கைத் தூக்கிக்கொண்டு தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கும் தேள், தன் பாதையில் ஏதோவொன்று வந்ததும், இடைஞ்சலாக எரிச்சலாக உணர்ந்தோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவென பயந்தோ, சுளீரெனக் கொட்டி விஷத்தையெல்லாம் கொடுக்கு வழியே வழிய விட்டுவிட்டு  அதன் பாட்டுக்குப் போகும். அதற்கு ஆயுள் மீதமிருந்தால் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொள்ள வாய்க்கும். இல்லையெனில் விறகுக்கட்டையோ செருப்போ.. ஏதாவதொன்றால் ஒன்று போட்டு அதைச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

ராஜீவும் அப்படித்தான்,.. நன்றாகத்தான் பேசிக்கொண்டிருப்பான், திடீரென குத்தலாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு, சொன்ன வார்த்தை எதிராளியைக் காயப்படுத்துமே என்ற உணர்வின்றி சாதாரணமாக இருப்பான். கேட்டவருக்குள் அந்த வார்த்தை விஷம் போல் சுறுசுறுவெனப் பரவும். நேரமாக ஆக அதன் வீரியம் மனதுக்குள் கூடிக்கொண்டே போக, முகம் சுண்டிப்போய் இருப்பவர்களின் உணர்வை சுண்டுவிரல் நகத்தின் அளவு கூட மதிக்காமல், அவன் பாட்டுக்கு, “ இப்ப என்ன நடந்துருச்சு?” என்ற பாவனையில் இருப்பான்.

திருமணமான புதிதிலேயே அவள் மாமியார் சொல்லிவிட்டாள். “எங்கிட்ட இருக்கப்பட்ட கொரங்குப்புத்தியெல்லாம் எம்புள்ளை கிட்டயும் உண்டு, பாத்துப்பொழைச்சுக்கோ” என. ‘சும்மா ஒரு இதுக்காகச் சொல்றாங்க’ என அவளும் அதைப்பெரிதாக நினைக்கவில்லை. முதலிரண்டு மாதங்கள் புதுக்கல்யாண ஜோரில் நகர, அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க அவளுக்கு நேரம் வாய்க்கவுமில்லை. நாட்கள் வாரங்களாகி மாதங்களாக நகரத்தொடங்கிய போதுதான் முட்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். முதல் முத்தம், முதல் காதலைப்போல முதல் முள்ளையும் மறக்க முடியாதுதான் போலும். அவளாலும் மறக்க முடியவில்லை.

“மழை வராப்ல இருக்கு,.. காய்ஞ்ச துணியெல்லாம் எடுத்துரு கௌசி..” மாமியாரின் சொல் கேட்டு ஓடுவதற்குள் மழை வலுத்து விட துணியெல்லாம் நனைந்து ஓரிரண்டு துணிகள் காற்றில் பறந்து விழுந்து விட்டிருந்தன. அப்படி விழுந்திருந்தவற்றில் அவனது வெள்ளைச் சட்டையும் ஒன்று. விழுந்த இடம் செம்மண்ணும் மாட்டுச்சாணமும்  மணலுமாக விரவி அமைக்கப்பட்டிருந்த கீரைப்பாத்தியில். ஓடிச்சென்று துணிகளை அள்ளி வந்தவள் செம்மண் அப்பி சாணிக்கறை படிந்திருந்த சட்டையின் நிலை கண்டு, சட்டென பக்கெட்டில் விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் அலசிக் கொண்டிருந்தபோது வந்தான்.

“என்னா?.. எஞ்சட்டையை நாசமாக்கியாச்சா?.. காஞ்ச ஒடனே எடுக்காம மழை வலுக்கற வரைக்கும் என்ன செஞ்சுட்டிருந்தே? ஒனக்கெல்லாம் தெண்டச்சோறுதான் போட்டுக்கிட்டிருக்கு..” 

“என்னது?.. என்ன சொன்னீங்க? திருப்பிச்சொல்லுங்க”

“ஆங்.. சொன்னாங்க.. சோத்துக்கு உப்பில்லைன்னு”

போய் விட்டான்.

அவளுக்குப் பொங்கிப்பொங்கி வந்தது. “என்ன வார்த்தை சொல்லி விட்டான்!! தண்டச்சோறா? நானா? பெண்டாட்டியைக் காப்பாத்த வேண்டியது ஒரு புருஷனின் கடமையில்லையா? அப்படியும் நானென்ன சும்மா உட்கார்ந்தா சாப்பிடுகிறேன்? காலைல எழுந்ததிலிருந்து இரவு படுக்கப்போகும் வரைக்கும் இந்த வீட்டுக்காக உழைச்சுக்கொட்டியதெல்லாம் கணக்கிலயே வராதா? ஆபீஸ் போய் உழைச்சு சம்பளம் வாங்கினாத்தான் மதிப்பா?” முகத்தில் அறைந்த மழைத்துளிகள் அவளின் கண்ணீரையும் சேர்த்துக் கரைத்துக்கொண்டு இறங்கின. மெல்ல மெல்ல கோபம் நுரைத்துக்கொண்டு எழும்பியது. துணிகளை அள்ளிக்கொண்டு கிணற்றடிக்குப்போனவள் நனைந்து கொண்டே துவைக்க ஆரம்பித்தாள். கணவனின் மேல் வந்த கோபம், ஒரு வேலைக்குப்போய் செட்டிலாகும் வரை காத்திருக்காமல் சீக்கிரமே திருமணம் செய்து வைத்து விட்ட பெற்றோரின் மீது திரும்பியது. அவர்கள் மேலுள்ள கோபம், தன் மீது எழுந்த சுயஇரக்கத்தால் வந்த கையாலாகாத கோபம் என எல்லாவற்றையும் துணிகளின் மேல் காட்டி அறைந்து துவைத்தாள். 

அழுந்தத் துடைத்துக்கொண்டு நுழைந்தாலும் முக வாட்டம் காட்டிக்கொடுத்து விட்டது. 

“அழுதியா என்ன?” மாமியார் கேட்டாள்.

“இல்ல”

“அவன் என்னமும் சொன்னானா?”

‘ஒங்க காதுலயும் விழற மாதிரிதானே பேசுனாரு. அப்புறமென்னா கேள்வி?’ பதில் சொல்ல மனது துடித்தாலும் “ப்ச்.. ஒண்ணுமில்ல” என்றாள்.

“அது கொடுக்குக்குப் பதிலா நாக்கை வச்சிருக்கப்பட்ட தேளு” என்றாள் மாமியார்.

இவளுக்கு மறுபடி கண் கலங்கிற்று.. அதெப்படி என்னைப்பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்னான்!!!

“சரி,.. விடு, அதையே நினைச்சுட்டிருக்காதே. மனுஷன் வாயில் இருந்து வர்ற ஒவ்வொரு சொல்லுக்கும் கோவப்படணும்ன்னு ஆரம்பிச்சா, ஆயுசு அதுலயே கரைஞ்சுரும். போ.. போயி முகத்தைக் கழுவி பொட்டு வெச்சுக்கிட்டு வெளக்கேத்து”

இரவு சாப்பிடும்போதாவது தான் சொன்ன வார்த்தைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்பானென எதிர்பார்த்தாள். ஆனால், எதுவுமே நடக்காதது போல் அவன் பாட்டுக்குச் சாப்பிட்டுக் கை கழுவ எழுந்து போனான். அவள் தன் தட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இப்படியொரு வார்த்தையைக் கேட்ட பிறகும் மானங்கெட்டுப்போயி இந்தச்சோத்தைச் சாப்பிடணுமா? சீ… அதுக்கு பட்டினி கிடக்கலாம்’

தட்டிலிருந்தவற்றை வழித்து நாய்க்குப்போட்டு விட்டு, இரண்டு செம்பு தண்ணீரைக் குடித்தாள். இனி வரவிருக்கும் தினங்களை நினைத்துக் கலவரமாக இருந்தது. ‘இப்போதே இப்படியிருக்கிறானே.. இன்னும் வரும் காலங்களில் எப்படி இருப்பானோ”. அன்றிரவு அவள் தலையணை முதல் முறையாகக் கண்ணீரில் நனைந்தது.  ஆணோ பெண்ணோ.. அவரவர் துக்கத்தை ரகசியமாய் இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளல்லவா தலையணைகள். அழுதழுது தூங்கிப்போனாள்.

வீங்கிய முகத்துடன் காலையில் எழுந்து வந்தவளை மாமியார் கூர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். அவனோ எதுவுமே நடக்காதது போல் பேப்பரில் மூழ்கியிருந்தான். நேரமாக ஆக கௌசிக்குள் அவன் வார்த்தையின் விஷம் பரவ ஆரம்பித்தது. வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது,.. முக்கியமாக அவன் தன்னுடைய அழுகையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளுக்குள் ஆங்காரத்தை வளர்த்தது. மனம் கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டுக்காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

அவனும் மாமியாரும் சாப்பிட்டானதும், பாத்திரங்களை ஒழித்து சிங்க்கில் போட்டு விட்டு, துலக்க ஆரம்பித்தாள்.

“கௌசி”

“இதோ வரேன் அத்தை..” கைகளைக் கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“நீ சாப்பிடலை?” 

“இல்ல.. பசிக்கல..”

“மொகமெல்லாம் வாடிக்கெடக்கு. என்னத்த பசிக்கலங்கற? காலைலயும் சாப்பிடல, நேத்து நைட்டும் சாப்பிட்ட மாதிரி தெரியல. உள்ளதச்சொல்லணும், என்ன நடந்துது?”

அவள் மௌனமாக ஜன்னலை வெறித்தாள்.

“கேக்கறேன்ல?.. சொல்லு”

“உங்க பிள்ளை கிட்ட எதுவுமே கேக்க மாட்டீங்களா? எல்லாத்துக்கும் நாந்தான் பதில் சொல்லணுமா?” மெல்லிய குரலில் பதில் வந்தது கௌசியிடமிருந்து.

“என்னடா டேய்?.. இவ என்ன சொல்றா?”

“எனக்குப் புரியலைம்மா… எனக்குத் தெரியல” என்றான். 

“கௌசிய என்னமும் திட்டினியா?”

“அய்யோ?!!.. நானா? திட்டினேனா?” அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தான் ராஜீவ்.

“இல்ல, பொய் சொல்றார். திட்டினாரு… தண்டச்சோறுன்னு திட்டினாரு” அழுகையும் பரிதவிப்புமாய் கிட்டத்தட்ட கதறினாள் கௌசி.

அவளைக் கூர்ந்து பார்த்தான் ராஜீவ். “நேத்து சொன்னதுக்கு இன்னிக்கு வரைக்கும் மூஞ்சைத் தூக்கி வெச்சிட்டிருப்பியா?. நேத்து சொன்னது நேத்தோட போச்சு”

“சொன்னது சாதாரண வார்த்தையா இருந்தா மறந்திருப்பேன், இது என் தன்மானத்தை உரசிப்பார்க்கற வார்த்தையா இல்லே இருக்கு?”

“இதோ பாரு,.. உன்னைப் புண்படுத்தற நோக்கத்தோட நான் சொல்லல. சட்டுன்னு வாயில வந்துட்டுது. குடும்பத்துல இதெல்லாம் சகஜம், சின்னச்சின்ன விஷயங்களப் பெருசாக்காதே” சற்றே கடுமையாகச் சொன்னான்.

இடைமறித்தார் அவனது அம்மா.

“இருடா…. இந்த வார்த்தை சின்ன விஷயமில்லை. வீட்ல இருந்தா தண்டச்சோறுன்னு அர்த்தமா?. இங்க பாரு,.. வீட்ல இருக்கப்பட்ட பெண்கள் அவங்க செய்யற ஒவ்வொரு வீட்டுவேலைக்கும் சம்பளம் நிர்ணயிச்சா உன்னால கொடுத்து மாளாது பார்த்துக்கோ.  படிப்பை முடிச்சுட்டு நீ மூணு வருஷம் வேலையில்லாம வீட்ல சும்மாதான் இருந்தே, அப்ப நானோ உங்கப்பாவோ உன்ன ஒரு பொழுது.. ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா? நீ மட்டும் ஏண்டா இப்படி மத்தவங்களைக் கொட்டற புத்தியோட இருக்கே? அதென்ன நாக்கா இல்லே தேள் கொடுக்கா?”

“நான் யாரையும் எதுவும் சொல்லலை தாயே, சொன்ன வார்த்தைக்கு என்னை ரெண்டு பேரும் மன்னிச்சுக்கிடுங்க.” எழுந்து போக யத்தனித்தான். அவன் குரலும் முகபாவமுமே தனது தவறை அவன் இன்னமும் உணரவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை எனக்காட்டியது. அவனது அம்மாவிற்கு கவலை ஆரம்பித்தது.

"இங்க பாரு.. ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்பட ஆரம்பிச்சா, அப்றம் அந்தக்கோபத்துக்கே மதிப்பிருக்காது" என ஆரம்பித்த அம்மாவைக் கையமர்த்தியவன், "ஒரு வார்த்தை கூட பொறுத்துக்கலைன்னா அப்றம் என்ன இருக்கு? இஷ்டமிருந்தா இங்க இருக்கட்டும், இல்லைன்னா அவ அம்மா வீட்டுக்கே போயிரட்டும்" எனச்சொல்லி விட்டு பேப்பரில் மூழ்கி விட்டான்.

என்ன ஆனாலும் சரி,.. அம்மா வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். 'அம்மா வீட்டுக்குப்போய் மூலையில் முடங்கி மூக்கைச்சிந்திக்கிட்டிருப்பேன்னு நினைச்சீங்களா? வெளில போ.. போன்னு துரத்திட்டேயிருந்தா நான் வெளிய போயிருவேன்னு நினைப்பா?. எங்கியும் போக மாட்டேன், இங்கியே உங்க கண்ணெதிர்லயே இருந்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்னு பாருங்க. வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்ன்னு சொல்லுவாங்க. நீங்க எங்கே யாருக்கு அடங்கறீங்கன்னு பார்க்கறேன்' என மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.

வெளிப்பார்வைக்கு எப்போதும்போல் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளே கனன்று கொண்டுதான் இருந்தது. கால் வயிறு ஆகாரத்துடன் நிறுத்திக்கொண்டாள். மீதியைப் பிறர் கவனிக்காத போது நாய்க்குப்போட்டாள். நாட்கள் தேயத்தொடங்கின,.. போலவே அவளும் தேய்ந்து மெலிந்து கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் தெரியாவிட்டாலும் நாட்கள் செல்லச்செல்ல அவளது மெலிவு கண்கூடாகத் தெரிந்தது. விசாரித்த மாமியாருக்கும் நாத்தனாருக்கும் மழுப்பலான பதிலைச்சொன்னாள். விரைவில் அக்கம்பக்கத்தினர் விசாரிக்க ஆரம்பித்தனர். பின், ஊராரும் உற்றாரும் விசாரித்தனர். "என்னடே.. உங்க வீட்லயே உம்பொண்டாட்டி மட்டும் எலும்பும் தோலுமா இருக்கா.. அவளுக்கு ஒழுங்கா சோறு கீறு போடறீங்களா இல்லியா?"

தர்ம சங்கடத்துடன் திருதிருவென விழித்தான்.

"மாந்தையன் மாதிரி முழிக்காதே. என்ன ஏதுன்னு பார்த்து சரி பண்ற வழியைப் பாரு. அவ அப்பா அம்மா கேட்டா என்னன்னு பதில் சொல்லுவே? கெட்டிக்குடுத்து வரச்சிலே விக்ரகம் மாதிரி இருந்த புள்ளைய இப்பிடி ஆக்கி வெச்சிருக்கீங்களே, ஒங்களுக்கெல்லாம் கூறுவாடு இருக்கா? வச்சுக்காப்பாத்த வக்கு இல்லேன்னா நீயெல்லாம் எதுக்குடே பொண்ணு கெட்டுதே?" எதிர் வீட்டு மாமா கோபாவேசமாகப் பேசிக்கொண்டே போனார்.

கதவண்டையில் நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். நாலு பேர் நடுவில் திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. நசுங்கிக்கிடக்கும் தேளைக் கண்டுவிட்டதுபோல் அசூயையுடன் குரூரப் புன்னகையில் நெளிந்தது அவள் முகம். 

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட சொல்வனம் மின்னிதழுக்கு நன்றி. சிறுகதையின் ஒலிவடிவத்தை சொல்வனத்தின் யூட்யூப் சேனலில் கேட்கலாம்.

Tuesday 25 April 2023

கொல்லாம்பழம் அல்லது கொல்லமாவு..


தமிழகத்தின் பிற பகுதிகளில் 'முந்திரிப்பழம்' என அழைக்கப்பெறும் இப்பழத்தை அந்தக்காலத்திலெல்லாம் கேரளா மற்றும் லிட்டில் கேரளாவான கன்யாகுமரி மாவட்டத்தில் கொல்லாம்பழம் எனவும் கொல்லமாவு எனவும் கூறுவோம்.

அப்போதெல்லாம் ஒரு பெரிய கடவம் நிறைய பழங்களை தெருவில் விற்றுக்கொண்டு வருவார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தளதளவென, கொழுகொழுவென நிறைந்திருக்கும் பழங்கள், 'என்னை வாங்கேன்' என நம்மைக் கூப்பிடும். ஒவ்வொரு பழமும் நல்ல பெரிய சாத்துக்குடி சைஸில் இருக்கும். வெட்டி உப்புப்போட்டுப் பிசிறி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர்தான் சாப்பிடுவோம். இல்லையெனில் தொண்டை 'காறும்'.. அதாவது நமைச்சல் உண்டாகும். அவ்வளவாக இனிப்பில்லையென்பதால் சர்க்கரை தூவி உண்ணலாமா? என்றால்... அது அவ்வளவு ருசியாய் இராது. உப்பிட்ட பழமே உள்ளளவும் நினைப்பிலிருக்கும்.

பள்ளிக்கூடங்களுக்கு வெளியேயும் வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள். உப்பு தொட்டுத் தின்னப் பொறுமையில்லாத பிள்ளைகள் அப்படியே கடித்து சாறு வழிய உண்பர். வீட்டுக்குத் தெரியாமல் கொல்லாம்பழம் சாப்பிட்டவனை அவன் சட்டை காட்டிக்கொடுத்து விடும். சட்டையில் சாறு வழிந்த இடமெல்லாம் கறையாகிக்கிடக்கும். துவைத்தாலும் போகாத கறையைக்கண்டு எரிச்சலடையும் தாய்மார் அதன்பின் பிள்ளைகளைத் துவைப்பார்கள்.

கொத்துக்கொத்தாய் பூத்திருக்கும் பூக்களிலிருந்து முதலில் முந்திரிப்பருப்பு இருக்கும் பகுதி வரும். அதன்பின் பூக்காம்பு தடித்து  பச்சை வண்ணத்தில் துலங்கி வரும். பின், நாளாக ஆக மரம் முழுக்க கெம்புக்கற்களும் புஷ்பராகக்கற்களும் தொங்குவது போல் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கனிந்து கொத்துக்கொத்தாய்க் கிடக்கும். கொல்லாம்பழத்திலிருந்து வாற்றியெடுக்கப்படும் "ஃபென்னி" என்னும் மதுவகை கோவாவில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. 

எதற்கும் எங்கேயும் முந்திக்கொண்டு நிற்பவனை, 'முந்திரிக்கொட்டை' என ஏன் அதட்டுகிறோம் என்பது இப்பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும். சாறு நிரம்பியிருக்கும் முந்திரிப்பழம் உண்மையில் பழமல்ல, அது பொய்க்கனி வகையைச்சேர்ந்தது. பூவின் காம்புப்பகுதி பருத்து சாறு நிரம்பி பழம் போல் தோற்றமளிக்கிறது. பொய்க்கனியில் கீழே சிறுநீரகவடிவில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே முந்திரிக்கொட்டை.. அதுதான் உண்மையான கனி. அதனுள்தான் நாம் மிகவும் விரும்பியுண்ணும் முந்திரிப்பருப்பு இருக்கிறது. பழத்தின் கேரளப்பெயருக்கோ தமிழகப் பெயருக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் 'அண்டிப்பருப்பு' என்போம் நாங்கள். சுருக்கமாக அண்டி.

முந்திரிக்கொட்டையிலிருந்து முந்திரிப்பருப்பை மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்க வேண்டும். கத்தி அல்லது அரிவாள்மணையால் நறுக்கும்போது வெளியாகும் திரவம் பட்டு தோல் புண்ணாகி விடும் எனக் கேட்டதுண்டு. முந்திரிக்கொட்டைகளை முழுதாகப்போட்டு வறுத்தெடுக்கும்போது வெளியாகும் புகை நச்சு நிரம்பியது எனச் சொல்லப்படுகிறது. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் கிராமங்களிலிருந்து சாக்கு சாக்காய் கொண்டு வந்த முந்திரிப்பருப்பை சிலர் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் வாங்கியதில்லை. சித்தப்பா கேரளாவின் கரியவட்டத்திலிருந்த க்வாட்டேழ்ஸில் வசித்தபோது வீட்டைச்சுற்றிலும் கொல்லாந்தோப்புகள்தான். அத்தனையும் அரசால் பாட்டத்துக்கு விடப்பட்டவை ஆகவே ஒரு பழம் கூட பறித்து விட முடியாது. ஆனாலும் கண்ணெதிரே எப்போதும் பார்த்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ.. தின்ன வேண்டுமென்ற ஆசையே வந்ததில்லை.

மும்பைக்கு வந்த இத்தனை வருடங்களில் இப்போதுதான் இதை சந்தையில் கிடக்கக் கண்டேன். அப்புறமென்ன?.. வாங்கி கண்டந்துண்டமாக வெட்டி உப்பில் ஊறப்போட்டாயிற்று. உப்பில் பழம் ஊற.. பழையநினைவுகளில் மனது ஊற.. சுவையாகத்தான் இருக்கிறது எல்லாமும்.

Tuesday 4 April 2023

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை (அம்பை) - புத்தக மதிப்புரை


அம்பையின் எழுத்தை நான் முதன்முதலில் வாசித்தது “அழியாச்சுடர்கள்” தளத்தில்தான். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை மூலம் எனக்கு அவர் அறிமுகமானார். தொடர்ந்து அவரது எழுத்துகளில் சிலவற்றைத் தேடித்தேடி வாசித்தேன். அவற்றில் ஒன்றுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற “சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு.

அம்பை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, மேகங்களும் பறவைகளும் கதைகளாய் ஆண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகக் குதித்து வருவதைப்போன்றே, பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் உலகம் துண்டு துண்டாகப் பெண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகவும் குதித்து வருகிறது. அம்பை குறிப்பிட்டிருக்கும் விதவிதமான வடிவங்களில் அமைப்புகளில் இருக்கும் புற ஜன்னல்களைப்போலவே, பெண்களின் மனதிலும் நிறைய அக ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக, அவள் காண்பதை, அவள் உணர்வதை அவள் கண்ணோட்டத்தின் வழியாகவே அம்பை தன் எழுத்துகளின் மூலம் வெளிக்கொணர்கிறார். 

இத்தொகுப்பிலிருக்கும் பெரும்பான்மையான சிறுகதைகள் மும்பையைக் கதைக்களமாகக்கொண்டவை. பல்வேறு பகுதிகளிலிருந்தும் எக்கச்சக்கமான கனவுகளைச்சுமந்து கொண்டு மக்கள் மும்பைக்கு வருகின்றனர். அம்மக்களின் கனவுகளை உண்டு செரித்தும் எரித்துச்சாம்பலாக்கியும் அதையே அடித்தளமாகக்கொண்டு இப்பெருநகரம் தன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போகிறது. போனால் போகிறதென்று ஒரு சிலரின் கனவை நனவாக்கியும் வைக்கிறது. இதில் மும்பைக்குப் பதிலாக எந்தப்பெருநகரத்தின் பெயரையும் எழுதிக்கொள்ளலாம். அந்நகரத்திலும் ஒரு மரத்தை அடையாளம் கண்டு கொண்டு, எரிவதற்கு முன் அம்மரத்தின் அருகே இருந்த தன் வீட்டை நினைத்துக் கண் கலங்கியபடி ஒரு கம்லி இருப்பாள். தன் தந்தை வேலை செய்த ஆலையை நினைத்துப்பாடியபடி ஒரு கம்மு இருப்பாள்.

நோய்மை பீடித்தவர்களுக்கு எவ்வளவு துன்பமோ அவ்வளவே துன்பத்தை, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தரும். தனக்குப் பிரியமானவர்கள் தன் முன்னே துடிப்பதைக் கண்டும் ஒன்றும் செய்யவியலாத கையறு நிலைக்குப் பெயரே நரகம். மறதி நல்லதுதான், ஆனால் அதுவே ஒரு நோயாகும்போது வாழும் ஒவ்வொரு நொடியும் நோயாளியும் சார்ந்தவர்களும் செத்துச்செத்துதான் பிழைக்கின்றனர். விதி வசமாக நோயாளி இவ்வுலகில் இல்லாமல் போய்விட்டாலும் அவர்களை நினைவூட்டுவது போல் ஏதேனும் சம்பவிக்கும்போது தாங்கவியலாமற் போகின்றது. தொண்டை புடைத்த காகம் தன் தந்தையை நினைவூட்டியபோது தாங்கவியலாமல் கதவைச்சாத்திய கல்யாணியும் நாம்தான். வாத நோய் முடக்கிப்போட்ட காமும்மா எழுதிய நூலைத்தேடி டெல்லி வரை போகும் அனன்யாவும் நாம்தான். மாமியாரைப்பார்த்துக்கொள்ள இயலாமல், அதே சமயம் அவளை முதியோர் இல்லத்திலும் விட முடியாமல் தவித்து, கடைசியில் தீக்கு தன்னைத்தின்னக்கொடுக்கும் ஊர்மிளாவும் நாமேதான். தேன்மொழி என்ற பச்சைப்பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டிருப்பது குறித்துத் தவித்து, அதன் ஒலியைக் கேட்க முயன்று, பின் ஒலியே அப்பறவைக்கு ஓர் ஆக்கிரமிப்பாக இருப்பதை உணர்ந்து வீடு நீங்கும் கூங்கா பாபாவாகிய வசந்தும் நாம்தான்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிக்கான சிகிச்சை பலனின்றி இறந்த கணவனுக்குப் பின் தானும் காலாவதியாகும் முடிவுக்குப்போகும் கமலாவின் மகன் ஆதிக்கும், கடைசி காலத்தில் மறதியால் அவதிப்பட்டு இறந்த தந்தைக்குப்பின் தங்கள் தாய்க்கு ஒரு துணை வேண்டுமென்று சுயம்வரம் ஏற்பாடு செய்யுமளவுக்கு பரந்த மனம் கொண்டு, அதே தாய் தனது கல்லூரிக்கால நண்பனுடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பதை ஒப்புக்கொள்ள இயலாமல் தவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அவரவர் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சுயநலத்தின் கைப்பாவைகள்தான் அவர்கள். “உயிரை நீடிக்கறதுல என்ன பிரயோசனம்?” எனக்கேட்டு தந்தையின் ட்ரக்கியோஸ்டமியை நிறுத்தும் ஆதியும், பிறகு சிக்கல் வராமலிருக்க “அவரவர் சொத்துகள் அவரவர் குழந்தைகளுக்குத்தான் எனப் பத்திரப்படுத்தி விட்டு மறுமணம் செய்து கொள்” எனும் சாந்தியின் குழந்தைகளும் தாய் எனும் பெண்ணின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள எவ்வனத்தின் எப்பொய்கையில் மூழ்கி எழ வேண்டியிருக்குமோ!

பதின்மூன்று சிறுகதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் “சிங்கத்தின் வால்” என்ற கதை பிரமிக்கச்செய்கிறது. இந்தியச்சமூகத்தில் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளையும், அவர்களின் அறிவு புறக்கணிக்கப்படுவதையும், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்கங்களையும் திணிக்கப்படும் கற்பிதங்களையும் அதை அவர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் நெருக்கடிகளையும் பற்றிப் பெரிதும் பேசுகின்றன அம்பையின் எழுத்துகள். அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை, அவள் உலகை, இன்னும் நுணுக்கமாக அணுகி அவள் நோக்கிலேயே புரிந்து கொள்ளலேயாம்.

LinkWithin

Related Posts with Thumbnails