Tuesday 4 December 2012

மம்மியைப்பார்க்கப்போனோம்..


ஏதோ இப்பவாவது எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்க வேண்டுமென்று தோன்றியதே.. நம்மூருக்கு வந்தவங்களை நாம் போய்ப் பார்க்கவில்லையென்றால் எப்படி? வயதில் நம்மை விட மூத்தவர்களாக இருந்தால் நாம் நேரில் போய்ப்பார்ப்பதுதானே மரியாதை. அதுவும் எங்களையெல்லாம் விட 3000 வருஷம் வயதில் பெரியவர்களாகப் போய் விட்டார்கள். பார்த்து விட்டு வருவோமென்று நானும் பெண்ணும் பெண்ணின் தோழியுமாகக் கிளம்புனோம். :-)
எங்களூர் மியூசியத்தில்தான் இப்போது தற்காலிக வாசம். போன மாதம் அதாவது நவம்பர் 21-ம் தேதியன்று வந்தார்கள். அடுத்த வருஷம் மார்ச் 24-ம் தேதி வரைக்கும்(இந்த டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழிஞ்சுராம இருந்தா) இங்கேதான் ஜாகை. மும்பையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இப்ப இதுவும் சேர்ந்து விட்டது. நாலைந்து மம்மிகளும் கூடவே அவர்களுக்குண்டான பொருட்களுமாக மியூசியத்தின் முதல் மாடியில் நல்லாவே செட்டிலாகி விட்டார்கள்.

வேல்ஸ் மியூசியமென்று முன்னாளிலும் சிவாஜி வஸ்து சங்க்ரஹாலயா என்று இன்னாளிலும் அழைக்கப்படும் இந்த மியூசியத்திற்கு மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது சர்ச் கேட் ரயில் நிலையத்திலிருந்தோ பொடி நடையாகவே போய்ச்சேரலாம். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் இடது கைப்பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் மும்பையின் புகழ் பெற்ற ஃப்ளோரா ஃபவுண்டனுக்கு அடுத்தபடியாக மியூசியத்தின் வாசலில்தான் நம் கால்கள் சென்று நிற்கும். மியூசியத்தைத் தொட்டடுத்துதான் ஜஹாங்கீர் ஆர்ட் காலரி இருக்கிறது.

இந்தக்கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று தனியா ஏதும் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. மியூசியத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக மாணவர்களிடம் 20, பொதுமக்களிடம் 50, வெளி நாட்டினரிடம் 300 ரூபாய்கள் வசூலிக்கிறார்கள். மாணவர்கள் தங்களோட ஐ.டி கார்டை கூடவே கொண்டு வரவேண்டியது அவசியம். நம்ம நாட்டைப்பத்தித் தெரிந்து கொள்ள ஆவலோடு வரும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டே கூடுதல் காசு வசூலிப்பதுதான் கொஞ்சம் இடிக்குது. இவ்ளோ அதிகத் தொகை வசூலித்தால் வருபவர்கள் வாசலோடு போய்விட மாட்டார்களா?.. 

நாம் கொண்டு செல்லும் பைகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து விட்டு, உள்ளே அனுப்புகிறார்கள். தண்ணீர் பாட்டில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. பிடுங்கிப்போட்டுக்கொண்டு டோக்கனைத்தந்து அனுப்புகிறார்கள். 

மியூசியத்தின் முன்பகுதியிலேயே 3D காட்சி நடக்கிறது. உள்ளே இருக்கும் மம்மியை அதன் கட்டுகளைப்பிரிக்காமலேயே சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே, எல்லாம் செய்து அதன் ரகசியங்களைக் கண்டறிந்து நமக்கு விளக்கிச்சொல்கிறார்கள். மம்மியை வைத்திருக்கும் மரப்பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அதன் பெயர், குடும்பத்தகவல்கள் போன்ற எல்லாவற்றையும் கண்டறிந்து விளக்குகிறார்கள். இந்த ஷோவைப் பார்த்து விட்டு அப்புறம் கண்காட்சியைப் பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் மாடியில் மம்மிகள் இருக்கும் இடத்துக்குப் போனதுமே படமெடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் மியூசியத்தில் மற்ற பகுதிகளைச் சுற்றிப்பார்க்கும்போது படம் எடுத்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவுக்கு 20, ஸ்டில் காமிராவுக்கு 200 மற்றும் வீடியோ காமிராவுக்கு 1000 ரூபாய்கள் வசூலிக்கப்படுகிறது. ஃப்ளாஷுக்கும், ட்ரை பாடுக்கும் அனுமதியில்லை. மற்றபடி தாராளமாக வளைத்து வளைத்துச் சுட்டுக்கொள்ளலாம். காமிராவுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியதும் அதை ஒரு நூலில் இணைத்து காமிராவிலேயே கட்டித்தொங்க விட்டு விடுகிறார்கள். மணிக்கட்டிலும் சின்னதாக ஃபோட்டோ பாஸ் என்று எழுதப்பட்ட ஒரு பாண்டேஜைக் கட்டி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரா போட்டோவுக்கு பாஸ் எடுத்துருக்கீங்களா என்று கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லாமல் காமிராவையும் கையையும் பார்த்ததுமே விலகி வழி விடுகிறார்கள்.

மம்மிகளெல்லாம் பாவம்போல் படுத்திருக்கிறார்கள். போரடித்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளக்கூட முடியாதபடி அவர்களது உடம்போடு வாயையும் சேர்த்து துணியால் பொதிந்து வைத்திருக்கிறார்கள்.  :-) மொத்தம் நான்கு மம்மிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுமாக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. மம்மிஃபையிங் என்று சொல்லப்படும் முறையில், மூளையை மூக்கு வழியாக வெளியே இழுக்க உபயோகப்படுத்தப்படும் கருவிகள் முதற்கொண்டு சில ஒரிஜினல்களும் பல மாதிரிகளுமாகப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மம்மிகளெல்லாம் காபினில் சமர்த்தாகப் படுத்துக்கொண்டிருக்க,, காற்றாட வெளியே வந்து படுத்திருந்த, வெறுமே பாண்டேஜ் துணியால் சுற்றப்பட்ட மம்மி ஒன்றை நம் கண்ணெதிரே பார்ப்பது விசித்திரமான அனுபவம்தான். 

இங்கே இருக்கும் மம்மிகள் அனைத்தும் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. பொதுவா இந்தியாவில் ஆங்காங்கே மியூசியங்களில் மம்மிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எகிப்திலிருந்து, அதுவும் பிரமிடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரிஜினல் மம்மிகள் இந்தியாவுக்கு வருவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த வகையில் அதைப்பார்வையிட்ட நாங்களும் வரலாற்றில் இடம் பிடித்தோம்.

இங்கே இருக்கும் மம்மிகளில் “நெஸ்பரனூ”வின் மம்மி குறிப்பிடத்தகுந்தது. இதன் ரகசியங்களைத்தான் பல்வேறு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தப்படம் இணையத்தின் நன்கொடை..
“நெஸ்பரனூவும் அவரது தந்தையும் கார்னாக் கோயிலில் பூசாரிகளாக இருந்தவர்கள். சுமார் ஐம்பது வயதில், அதுவும் ப்ரெயின் ட்யூமர் காரணமாக நெஸ்பரனூ இறந்திருக்கக்கூடும். என்று அறியப்படுகிறது. இந்த மம்மியில் வெகு நாட்களாகக் யாருமறியாமல் இருந்த ஒரு சுவாரஸ்யமான ரகசியம் கண்டறியப்பட்டிருக்கிறது.

பொதுவாக மம்மிகளை அடுத்த உலகத்திற்கான வாழ்க்கைக்காகத் தயார் செய்யும்போது சில பொருட்களையும் மந்திரச்சொற்களையும், மந்திரசக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சில படங்களையும் அதனுடன் வைத்து மூடுவது வழக்கம். இதனுடன் கூடுதலாக நெஸ்பரனூவின் தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு களிமண் கிண்ணம் ஆராய்ச்சியின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை வைக்கும் சம்பிரதாயம் கிடையாதே என்று விவாதித்து அலசும் வேளையில்தான் ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.

அதாவது, உடலைப் பதப்படுத்தும்போது ஒரு விதப் பசையை உடல் முழுக்கப் பூசி விடுவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் மூளையை வெளியே எடுத்தபின் தலைப்பகுதியில் பூசும்போது அதிகப்படியான பசை வழிந்து தேங்குவதற்கு ஏதுவாக தலைக்கடியில் களிமண் கிண்ணம் ஒன்றை வைத்தவர்கள் அதை எடுக்க மறந்து விட்டார்கள். ஞாபகம் வந்து அதை எடுக்க முயற்சித்தபோது அது நன்றாக ஒட்டிகொண்டு விட்டது. இப்போது என்ன செய்வதென்று குழம்பிய அவர்கள், பிறர் தன்னுடைய தப்பைக் கண்டுபிடித்து விடுமுன் மளமளவென்று பாண்டேஜ்களைச் சுற்றி வைத்து விட்டார்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

நாங்கள் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை மணி ஆறு ஆகிவிட்டது. மியூசியம் மூடப்படும் நேரம். அனேகமாக மியூசியம் மொத்தமுமாக அங்கிருந்த கடைசி பத்து ஆட்களில் நாங்களும் அடக்கம். குழந்தைகளுக்கானால் இன்னும் பார்த்துத்தீரவில்லை. அந்த அரையிருட்டுச் சூழ்நிலையில் வெறுமே பாண்டேஜால் சுற்றப்பட்ட அந்த மம்மி, லேசானதொரு அமானுஷ்ய உணர்வைத்தூண்டியதென்னவோ நிஜம். 

“நாம உள்ளே இருக்கறதைக் கவனிக்காம வெச்சுப்பூட்டிட்டுப் போயிட்டாங்க, ராத்திரியானதும் மம்மிகளுக்கெல்லாம் உயிர் வந்துருதுன்னு வெச்சுக்குவோம். என்னவாகும்?” என்று ஒரு பிட்டைப்போட்டேன்.

“என்னாகும்,.. அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.”ன்னு கோரசா பதில் வந்தது. நிறைய இடுகைகளுக்கு ஐடியா கிடைக்கும் போலிருக்கே :-)

33 comments:

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யமான பதிவு
ஜனவரி பாம்பே விசிட் லிஸ்டில்
இதையும் சேர்த்துக் கொண்டேன்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

CS. Mohan Kumar said...

காமெடியா சொல்லிருக்கீங்க

அய்யாசாமிக்கு இது மாதிரி சமாசாரம் என்றால் பயம் தான்

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு சாந்தி.

கடைசியில் நல்லா பயம் வேறு காட்டி விட்டீர்கள். வாய்ப்பு கிடைத்தாலும் யோசித்துதான் போகணும்:)!

குறையொன்றுமில்லை. said...

உங்க கூட உங்க பொண்ணுக்கும் இதுபோல வித்யாசமான கண்காட்சியெல்லாம் இண்ட்ரெஸ்ட் இருப்பதேபெரிய விஷயம். பகிர்வுக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மூளையை வெளியே எடுக்கிறது கேக்கவே திகிலா இருக்கு..

சரி மூளை இல்லாத மம்மிக்கிட்ட நல்லாவே கதை சொல்லலாம் (விடலாம்)போலயே...:)

மாதேவி said...

நல்ல சுவாரஸ்யமாக சொல்லியுள்ளீர்கள்.

அமுதா கிருஷ்ணா said...

மம்மிகளை சென்னைக்கு ஒரு விசிட் வர சொன்னீங்களா?

வல்லிசிம்ஹன் said...

ஏற்கனவே மம்மி ரிடர்ன்ஸ் பார்ஹ்து அலறிக் கிடக்கேன். நீங்கவேற சாந்தி. மும்பை வந்தாலும் சுத்திவச்ச பண்டிலுக்குள் இருக்கறவங்களை அப்படியே விட்டுடுவேன்பா.:) ஆளைவிடு. ஆனாலும் ரொம்பத்தான் உங்களுக்குதைரியம்!!பிள்ளைகளை வேற திகில் காட்டிப் பதிவு சேர்க்கறீங்களா;)))))))))))))))))0

semmalai akash said...

கலக்கலான பதிவு, வெளிநாட்டவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது மட்டும் உங்களைப்போலவே எனக்கும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, அப்பறம் கேமராவுக்கு டோக்கன் வாங்கிய பிறகும் ஏன் அடுத்து இருந்து படம் எடுக்க அனுமதிக்கவில்லை, கேமராவுக்கும் அதிக காசு வசூலிக்கிறார்கள். ம்ம்ம்ம் அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள் இப்போதுதான் உங்கள் பக்கம் வந்துள்ளேன், இனிமேல் தொடர்ந்து வருவேன், இதோ இப்போதே உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

தலைப்பை பார்த்ததும் நான் வேறு மாதிரி நினைச்சுட்டேன்.உங்கள் பாணியில் ரொம்ப சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க.சென்னை ம்யூஸியத்திற்கு மம்மீ வருமா?

//“என்னாகும்,.. அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.”ன்னு கோரசா பதில் வந்தது. நிறைய இடுகைகளுக்கு ஐடியா கிடைக்கும் போலிருக்கே :‍)//இந்தக்காலத்துப்பிள்ளைங்க சும்மாவா:)

Asiya Omar said...

நான் பார்ப்பேனான்னு சந்தேகம் தான்.பகிர்வு அருமை.

இமா க்றிஸ் said...

:) ம்.. சுவாரசியமான எழுத்து. //அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.// ஆஹா!! ;)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ஜனவரியில் மும்பை விஜயமா?. மம்மியைத் தவறாமக் கண்டுக்கிடுங்க.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

பூனைக்கடவுளுக்கு மம்மிகள் பயப்படும்ங்கறது அவங்க ஐதீகமாம். அதனால அய்யாசாமியை கையில ரெண்டு பூனைகளைப்பிடிச்சுட்டு வந்து மம்மிகளைப் பார்க்கச்சொல்லுங்க :-))))

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாய்ப்பு கிடைச்சா யோசிக்கவே வேணாம். நிஜமாவே அவங்களுக்கு உயிர் வந்தா அவங்க உயிரோட இருந்த காலகட்டத்துல நடந்த கதைகளைக் கேக்கலாமில்லே. நமக்கும் இடுகைகளைத் தேத்திக்கலாம். இப்படியொரு பொன்னான வாய்ப்பு எப்பவும் கிடைக்காதே. நல்லா யோசிச்சுப்பாருங்க :-)))

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

அவங்களுக்கும் இது ரொம்பவே சுவாரஸ்யமா இருந்ததும்மா.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலஷ்மி,

அந்த 3டி ஷோவுல மூளையை வெளியே எடுக்கறதெல்லாம் காமிப்பாங்களோன்னு யோசிச்சிட்டே பார்த்தேன். ஏமாத்திட்டாங்கப்பா :-)))

நாம கதை விடலாம்தான். மூளையில்லாத மம்மி நம்ம கிட்ட என்னல்லாம் கதை விடும்ன்னு தெரியலையே :-)))))

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

சுவாரஸ்யமா ரசிச்சு வாசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

நல்ல தூக்கத்துல இருந்தாங்கப்பா. சொல்ல முடியலை :-))

வாசித்தமைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

பிள்ளைகளா?.. ம்க்கும். பயந்துட்டாலும். ஒரு திகில் படத்தை காமெடி படமா மாத்தின பெருமை இவங்களுக்குண்டு. :-)))

ராஸ்-3ன்னு ஒரு திகில் படத்தைப் பார்க்கப் போயிட்டு ஒவ்வொரு சீன்லயும் இதுங்க காமெடி பின்பாட்டுப் பாடி, கடைசியில் மொத்த தியேட்டரும் இதுகளை மாதிரியே காமெடி டயலாக் விட ஆரம்பிச்சுருச்சு.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

மம்மிகளுக்கு உயிர் வந்தா என்னல்லாம் பேசுவோம்ன்னு ஆரம்பிச்சது, கடைசியில் "அதுகளை காண்டீனுக்கு அனுப்பி டிபன் வாங்கிட்டு வரச்சொல்லுவோம்"ங்கறது வரை நீண்டது. நானும் என் பங்குக்கு "அப்டியே எனக்கும் வடாபாவ் வாங்கிட்டு வரச்சொல்லுங்க"ன்னு ஆர்டர் கொடுத்தேன் :-))

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாய்ப்புக்கிடைச்சா விடாதீங்க. அத்தனையும் ஒரிஜினலாக்கும்.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இமா,

வாசித்தமைக்கு நன்றிங்க :-)

Ranjani Narayanan said...

மம்மி விசிட் நன்றாக இருந்தது. எனக்குக் கூட பிரமிட் போக வேண்டும் என்று ஆசை தான். இப்போது நீங்கள் எழுதியதைப் படித்த பின் அட்லீஸ்ட் மும்பை போய் மம்மிகளை மட்டுமாவது பார்த்துவிடலாமே என்று தோன்றுகிறது.
நகைசுவையும் கடைசியில் திகிலுமான பதிவு அருமை!

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com

ADHI VENKAT said...

என்னப்பா! இப்படி ஒரு திகிலூட்டும் விஷயத்தை கடைசில காமெடியா ஆக்கிட்டீங்களே...

சத்தியமா நான் பார்க்க மாட்டேன். ரெண்டு நாளைக்கு படுக்கும் முன் விபூதி வெச்சுக்கணும்... கனவுல வந்துட்டா...

ஹுஸைனம்மா said...

ஆமா, இந்தியாவில் வேறு எந்த ஊருக்கும் போகாம உங்க ஊருக்கு நேரா வந்திருக்காங்களே, இனப்பாசமோ? :-))))

அல்லது, மற்ற மாநிலங்களிலெல்லாம் அரசியல் மம்மிகளாவது இருக்காங்க. இங்க அதுகூட இல்லியேன்னு வந்தாங்களோ!! :-))))

கடசீல அவங்க முன்னாடியே அவங்ககிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்போம்னெல்லாம் பேசிகிட்டிருந்திருக்கீங்க.. பாத்து அப்படியே ’உருகி’ப்போய் உங்க வீட்டுக்கே தேடி வந்துடப்போறாங்க...

வெங்கட் நாகராஜ் said...

மூளையை மூக்கு வழியா எடுப்பாங்களா... அட டெரரா இருக்கே....

நல்ல பகிர்வு. கடைசில சொன்ன மாதிரி கூடவே இருந்து பேசினா நல்லா இருந்துருக்கும்! :)

ஹேமா said...

மம்மியை பார்க்கவேணுமெண்டு கனநாள் ஆசை.அடுத்த வருஷ சுற்றுலாவாவது கிடைக்கவேணும் எனக்கு.உங்கள் பதிவு இன்னும் ஆவலைத் தூண்டிவிட்டது சாரல் !

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். மம்மிகளுக்கு உயிர் வந்தால்.... நைட் அட் மியூசியம் படம் மாதிரி ஆகிவிடும்!!

கோமதி அரசு said...

இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.
//

மம்மியின் ரகசியங்கள் அறிந்துக் கொண்டேன்.

அமானுஷ்ய உணர்வைத்தூண்டியதென்னவோ நிஜம்//

அமானுஷ்ய உணர்வு உங்கள் குழந்தைகளால் ஜோக் அடிக்கும் மனநிலைக்கு மாற்றி விட்டதே!.

இராஜராஜேஸ்வரி said...

பதிவும் அமானுஷ்ய உணர்வைத் தூண்டியதென்னவோ நிஜம்.

Sattanathan said...

நெருல் பெயரை " தமிழ்மணத்தில் " பார்த்துத் தான் இங்கு வந்தேன். நேற்று BNHS இல் Global Warming சம்பந்தமாக ஒரு பேச்சைக் கேட்கப் போகும் போது , மியுசியம் முன்பு இந்த அறிவிப்பைப் பார்த்தேன்.

என்ன இருக்கப் போகுதுன்னு நெனச்சேன் , நீங்க எழுதுனதப் படிச்சிட்டு பார்க்கனும்னு ஆர்வம் வந்திருச்சு.

ஐயோ !! மும்பை யை விட்டு கிளம்பப் போகும் சமயம் தான் இவ்வளவு தகவல் தரும் ப்ளாக்குகள் எல்லாம் கண்ணில் படவேண்டுமா ?

LinkWithin

Related Posts with Thumbnails