Monday 18 April 2011

சகுனம்..


"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே.." கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறுபடியும் முளைத்தது.

"யாரது.. கூரைல கல்லெறியறது..??" வீட்டுக்காரனின் குரல் கோபத்துடன் ஒலித்தது.

"தெனமும் ராத்திரியானா இதே தொல்லையா போச்சு.." ஒரு வாரமாக வீடுகளிலும், பைப்பில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடமும் இதே பேச்சுதான்..

ஏதோவொரு வீட்டில் கைக்குழந்தை அழுகிறது என்றுதான், இரவில் வீட்டுக்கு வெளியில், காற்றுக்காக உட்கார்ந்துகொண்டு வம்பளந்து கொண்டிருந்தவர்கள் முதலில் நினைத்தார்கள். 'புள்ளையை அழவிட்டுட்டு எங்க போனா.. என்ன செஞ்சுக்கிட்டிருக்கா..' என்று பார்க்காத அம்மாவுக்கு வசவு விழுந்தது.

இரண்டொரு நாளில், ' ஏ.. இது புள்ளை அழற சத்தமில்லை.. பூனைல்லா கத்துது..' என்று தெரிந்துவிட, 'பூனை அழுதா நல்லதில்லையே..' என்று ஒவ்வொருவரும் சகுனம்சொல்ல ஆரம்பித்தார்கள். வெள்ளையில் கறுப்பு டிசைன்போட்ட புடவை மாதிரியிருந்த அந்த அழகான பூனை, இதனாலேயே அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தது. சும்மாவே அது எதிரே வந்தால் சகுனம்சரியில்லை என்று வெறுத்தவர்கள் இன்னும் கூடுதலாகவே அந்த வெறுப்பை கடைப்பிடித்தார்கள்.

ஏதோ சிறுகுழந்தையின் அழுகுரலாக ஆரம்பிக்கும்,.. நேரம் செல்லச்செல்ல சுதியும் வேகமும் கூடி, நெஞ்சைப்பிசையும் நீண்ட கத்தலாக தொடரும். இந்த சத்தத்தை கேட்டு இன்னும் சில பூனைகளும் வந்து உட்கார்ந்துகொண்டு கூட்டாக ஒப்பாரி வைக்கத்தொடங்கின.  ஒன்று யாராவது கல்லெறிந்து விரட்டவேண்டும். இல்லையென்றால் வேறு ஏதாவது பூனையோ, கடுவனோ வந்து சீறும்போதோ, இல்லை தெரு நாயொன்றின் குரைப்பிலோ சட்டென சத்தம் அமுங்கிவிடும்.

'யாருக்காவது மரணம் சம்பவிக்க இருந்தால், பூனைக்கு அது முதலிலேயே தெரிந்துவிடும். அப்படியிருந்தால்தான் அது அழும்'  என்று ருக்மணி பாட்டி சொல்லிவைத்துவிட, அந்த ஏரியாவில் சாகக்கிடப்பவர்கள் யார்யாரெல்லாம்?என்று கணக்கு எடுக்கப்பட்டது.

அவர்கள் கணிப்பில் முத்தையா தாத்தா ஒருவரைத்தவிர, மத்த வயசானதுகள் எல்லாம் கிழங்கு மாதிரி இருந்தன. எப்படியும் ஆறேழு வருஷங்களுக்காவது, கம்பை ஊன்றிக்கொண்டு நடந்தாவது.. தாக்குப்பிடித்துவிடும். முத்தையா தாத்தா ஒருவர்தான், படுத்த படுக்கையாக இருக்கிறார். உணர்வுகளெல்லாம் மங்கி, சகலமும் படுக்கையில் என்றானபின்னும், உயிர்மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது.

'எல்லாம் தின்னு, ஆண்டுஅனுபவிச்சாச்சு, நெறைய நல்லது கெட்டது பார்த்து, வாழ்ந்து தீர்த்தாச்சு. அப்புறமும் என்ன குறையோ..' என்று அடிக்கடி ஊர்வாயில் அடிபடுவார். 'என்னடே கதிரேசா.. உங்க தாத்தா அம்மாவாசை தாண்டிடுவாரா..' என்று சிலர் அவர் பேரனை வம்பிழுக்கையில் தலையை குனிந்துகொண்டே போய்விடுவான். எத்தனை வயதானால் என்ன.. சொந்தமல்லவா!!..

பூனை அழுவது அவரது மரணத்துக்காகத்தான்.. என்று எல்லோரும் அனுமானித்துக்கொண்டார்கள். எப்போது நிகழும் என்றே காத்திருக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். விட்டால்,.. யமனையே ஆட்டோவில் கூட்டிக்கொண்டுவந்து, தாத்தாவையும் சேர்த்து அனுப்பிவைத்துவிடுவார்கள் போல..

கதிரேசனுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அந்தத்தெருவிலேயே முதல்முதலில் கார் வந்தது அவனது வீட்டுக்குத்தான். காரை நிறுத்த இடம் வேண்டுமென்பதற்காகவே,  தோட்டத்தில் ஒரு பகுதியில் ஷெட் கட்டியிருந்தான். 'கார்காரர் வீடு...' என்று அவர்கள் வீடு அடையாளம் காட்டப்படுவதில், அவன் அம்மைக்குத்தான் ரொம்ப பெருமை.

கார் வாங்கி, வீட்டுக்கு கொண்டுவந்தபின் அதில் முதல்முதலாக கோயிலுக்குத்தான் குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று அவன் அம்மை பிடிவாதம் பிடித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை மாலையன்று, சந்தனம், குங்குமம் இடப்பட்டும் , மாலையணிந்துகொண்டும் கார் தயாராக இருந்தது. சக்கரங்களின் அடியில் எலுமிச்சம்பழமும் பலியிட தயாராக இருந்தது. 'கொஞ்சம் இருப்பா.. நல்ல சகுனம் பார்த்து வண்டியை எடுக்கணும். எம்மா விஜயா,.. நெற கொடத்த கொண்டுட்டு எதிர்ல வாம்மா..' என்று உத்தரவிடவும், அவள் எதிரில் வந்து நின்றாள்.

கார் ஸ்டார்ட்டாகி, காம்பவுண்டை விட்டு வெளியே வரவும் திடீரென்று அது நாலுகால் பாய்ச்சலில் குறுக்கே பாய்ந்தது. விரட்டிக்கொண்டு வந்த தெருநாய், நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இரைக்க இரைக்க நின்றது. கண்மூடித்திறப்பதற்குள் என்ன நடந்ததென்று ஒருவருக்கும் உறைக்கவில்லை. மெதுவாக டிரைவர் ஆசனத்திலிருந்து இறங்கியவன், காருக்கு கீழே குனிந்து பார்த்தான். ரத்த சகதியினூடே வெள்ளையும் கறுப்பும் கலந்தநிறத்தில் ஒரு கால் லேசாக துடித்து பின் மெதுவாய்.. மெதுவாய்.. அடங்கியது.  இப்போதெல்லாம் அந்த தெருவில் ராத்திரியில் அழுகுரல் கேட்பதேயில்லை.



Wednesday 6 April 2011

க்ரீமெல்லாம் பூசலைப்பா..

அதென்னவோ.. நம்ம மக்களுக்கு சிகப்புன்னா அப்படியொரு மோகம்.. அதைத்தெரிஞ்சு வெச்சிக்கிட்டுத்தானே சிகப்பழகு க்ரீம்களோட வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது. ஏற்கனவே, சிகப்பா இருக்கறவங்களுக்குத்தான் கல்யாணம் ஆகும், நல்ல வேலை கிடைக்கும், அழகிப்போட்டியில ஜெயிப்பாங்க.. அப்படி இப்படின்னு மூளைச்சலவை நடக்குது. பத்தாததுக்கு இப்போ வெய்யில் காலம் வேற ஆரம்பிச்சாச்சா.. வெய்யில்ல போனா கறுத்துடுவே.. இந்த க்ரீமை உபயோகி... உன் நிறம் அப்படியே இருக்கும்ன்னு வேற ஆரம்பிச்சுட்டாங்க..

இது ஒண்ணைத்தான் ரசிக்கமுடியலையே தவிர சிவப்பு நிறமும், அந்த நிறத்திலிருக்கும் பொருட்களும், பூக்களும் எல்லோரையும் கண்டிப்பா ரசிக்கவைக்குது. சிவப்பு ரோஜாவுக்கு இருக்கும் வரவேற்பு சொல்லித்தான் தெரியணுமா என்ன.. அதுவும் அந்த மருதாணிச்சிவப்பு..  மத்தவங்களைவிட அதிகமா செவந்திருந்தா என்ன ஒரு பெருமிதம் :-)) பளீர்ன்னு இருக்கும் அந்த சிவப்பு அடடான்னு இருக்குமே.

'ரத்தம் ஒரே நிறம்'கறது மனுஷங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இல்லைங்கறதுக்கு சிம்பாலிக்கா சொல்லப்படற ஒரு அழகான சொற்றொடர். ஒரு பெண்ணை வர்ணிக்கணும்ன்னா, 'கோவைப்பழம்போல் சிவந்த இதழ்கள்'னு சொல்லாம முடிக்கமாட்டாங்க இலக்கியத்துல.. இவ்ளோ ஏன்??.. அதிகமா செவந்திருக்கும் தக்காளியும், தர்பூசணியும் யாரும் வாங்காம விட்டதா சரித்திரமே இல்ல.. இது எப்டி இருக்கு??

சீனர்களுக்கு இந்த சிவப்பு நிறம் ரொம்ப பிடித்தமானது.. சின்னப்பசங்களை கெட்ட ஆவியிலிருந்து இது காப்பாத்துறதா அவங்க நம்பறாங்க. இந்த நிறத்துக்கு இன்னும் சில குணங்களும் உண்டு.. இது சக்தி, ஆற்றல், மற்றும் வலிமையை குறிக்குது. சிவப்பு கலர் சிந்திக்கும் தன்மையை தூண்டுவதாகவும், நரம்புகளுக்கு வலுவூட்டுவதாவும் சொல்றாங்க. ரத்தம், மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளையும் இது சரிப்படுத்துதாம். உடம்புவலியையும் இது குணப்படுத்துவதா சொல்றாங்க. எல்லோர் கவனத்தையும் சட்டுனு கவர்ந்து இழுக்கறதாலதான் போக்குவரத்து சிக்னல்கள்ல இதை உபயோகப்படுத்துறோம். இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.. சிகப்பு நிறக்கார்கள்லதான் அடிக்கடி திருடர்கள் கைவரிசையை காட்டுறாங்களாம். ஏனாம்?.. முந்தையவரியை படிங்க :-))))

இந்த மாசம் நம்ம பிட்டிலும் இதான் தலைப்பு.. என்னோட கைவரிசையையும் காமிச்சிருக்கேன். நாட்டாமை.. தீர்ப்பை மாத்திமாத்தி சொல்லாம கரெக்டா சொல்லு :-))))))

மைக் டெஸ்டிங்.. ஒன்.. டூ.. த்ரீ!!..

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் ஜகஜமப்பா :-))

வெய்யிலுக்கு இதம்மா.. ஜூஸ் போட தயாரா.. தக்காளி:-)

க்ளோஸப்பில் ஹீரோயின் :-)))


இவங்க வழி தனீ வழி..

தேர்வு செஞ்ச களைப்பைப்போக்க கலர்ஜோடா :-))))))))

உங்க கருத்துகளையும் எடுத்துவுடுங்க :-))




LinkWithin

Related Posts with Thumbnails