Friday 4 November 2022

துணை.. (அகநாழிகையில் வெளியானது)

சிலுசிலுவென ஜன்னல் வழியாக பேருந்தின் உள்ளே வீசிய காற்று கண்ணைச்சொக்க வைத்தது, சற்று தலை சாய்த்து உறங்கினால் நன்றாயிருக்கும்தான், ஆனால் முடியாது. பருவ வயதிலிருக்கும் மகளை அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறாள், அதுவும் நேரங்கெட்ட நேரத்தில். கடைத்தெருவில் ஷாப்பிங் சுவாரஸ்யத்தில் ‘ஆ’வென வாயைப் பிளந்து கொண்டு கடைகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்த மகளை கைப்பிடியாக இழுத்துக்கொண்டு வந்தும் கடைசி பஸ் கிளம்பி மெல்ல நகர ஆரம்பித்து விட்டிருந்தது. இரண்டு பெண்கள் ஓடி வருவதைக் கண்ட டிரைவர் பஸ்ஸை நல்ல வேளையாக பஸ்ஸை நிறுத்தினார். ஏறியமர்ந்து படபடப்புக் குறைந்ததும் ஒரு வாய் தண்ணீரைக் குடித்துக்கொண்டாள்.

அவள் புருஷனுக்கு மாதாமாதம் தன் பெற்றோரைப்பார்த்தே ஆக வேண்டும். தனியாகவும் அவ்வப்போது குடும்பத்தோடும் வருபவன், இந்த முறை பக்கத்து ஊர் திருவிழாவுக்கென குடும்பத்தை இழுத்து வந்திருந்தான். “அரப்பரீச்ச வருதுப்பா.. படிக்கணும்” என சிணுங்கிய மகளுக்கு, ரங்கராட்டினம், ஜவ்வு மிட்டாய் என ஆசை காட்டியிருந்தான். அவன் மட்டும் இப்போது கூட வந்திருந்தால் பயமில்லாமல் இருந்திருக்கும். கடைசி பஸ் போய்விட்டால் கூட ஆட்டோவிலோ, காரிலோ ஊருக்குப் போய் விடலாம். இந்நேரத்துக்கு இப்படி ஓடிச்சாட வேண்டியதில்லை.  “அக்கா மகளுக்கு சடங்கு வெச்சிருக்கு, நீயே போயி புடவை எடுத்து வா” என அனுப்பி விட்டான். “தொணைக்கி ஒரு பொம்பளையாளு கூட வராம ஒத்தைக்கி எப்பிடிப்போக?” என்றவளிடம், “இந்தா… இந்த பெரிய மனுசியைக் கூட்டிக்கிட்டுப் போ, நல்லா செலக்ட் பண்ணுவா” என மகளைத் தள்ளி விட்டு விட்டான். ஷாப்பிங் போகும் உற்சாகத்தில் அதுவும் ஒட்டிக்கொண்டு விட்டது. சொந்தக்காரப் பெண்கள் யாரையாவது அழைத்துக்கொண்டு போகலாமென்றால், “ஏ… அவளுக வந்தா இஷ்டத்துக்கு எடுப்பாளுக, நம்ம பட்ஜெட்ல முடியாது. சத்தங்காட்டாம போயிட்டு வான்னா கிராக்கி பண்ணுதியே?” என புருஷன் முறைக்கவும் கிளம்பி விட்டாள்.

கடைத்தெருவுக்கு வந்து புடவை, இதர துணிமணிகள், அலங்கார சாமான்கள் என எல்லாவற்றையும் வாங்கும் வரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம்தான் மகளரசி கடைத்தெருவை அளக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு கடையாக ஏறி “ஷோ கேஸ்ல பாக்கச்செல நல்லாருந்துது, கிட்ட போய்ப்பாக்கைலதான் பவுசு தெரியுது” என இறங்கிக்கொண்டிருந்தாள். “எம்மா.. மல்லிப்பூவு” என்றவளுக்கு வாங்கிக்கொடுத்து, “எங்கியோ பலாப்பழம் மணக்கு” என வாசம் பிடித்தவளுக்காக தெருமுனை வரை தேடி வாங்கிக்கொடுத்து, கூடவே தான் ரொம்ப நாளாய் ஆசைப்பட்ட வெங்கலப்பானைக்காக பாத்திரக்கடைக்குள் நுழையும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது. முழுசாக ஒரு மணி நேரத்தைச் செலவிட்டு விட்டு வெளியே வரும்போதுதான், “எப்பா… கடைசி பஸ்ஸு போயிருமே” என உறைத்தது.

முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் பஸ்ஸுக்குள் சுற்றுமுற்றும் நோட்டமிட்டாள். அரிசியும் உளுந்தும் விரவினாற்போல் ஆணும் பெண்ணுமாய் இருந்த கூட்டம், ஒவ்வொரு நிறுத்தத்திலும் கரைந்து ஆண்கள் மட்டுமே அதிகமாகக் காணப்பட்டனர். அவளுள் கிளம்பிய பயஊற்று வியர்வை ஆறுகளை உற்பத்தி செய்தது. “இன்னும் நாலஞ்சு ஸ்டாப்தானே.. ஊருக்குப் போயி இறங்கிரலாம்” என மனம் சமாதானம் செய்தாலும், “பயவுள்ளை பராக்குப் பாத்துக்கிட்டு இவ்வளவு நேரம் ஆக்கலைனா எப்பமோ பத்தரமா போயிருக்கலாம், நீ ஊருக்கு வா,… ஒன்ன செரியாக்குதேன்” என ஒரு பக்கம் கறுவிக்கொண்டும், “வளந்த பொம்பள எனக்கே ஆசய அடக்கத்தெரியல, கூடச்சேர்ந்து திரிஞ்சிக்கிட்டு, இப்ப சின்னப்புள்ளயச்சொல்லி என்ன பலன்?” என இன்னொரு பக்கம் மனதை ஆற்றிக்கொண்டும் இருந்தாள்.

‘டமால்’ என தலை முன்னிருக்கைக் கம்பியில் இடிபட, சிந்தனை கலைந்து நிமிர்ந்து அமர்ந்தாள். பஸ் கும்மிருட்டில் நின்றிருந்தது மட்டும்தான் புரிந்ததே தவிர எந்த ஊர்ப்பக்கம் நிற்கிறது எனத்தெரியவில்லை. கண்களைக்கொட்டித்தட்டி வெளியே இருட்டில் நோக்கினாள். ஏதோ ஓர் ஊர் விலக்கில் உறுமிக்கொண்டே பஸ் நின்றிருந்தது. கூர்ந்து நோக்கினாள்.. இவர்களது ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரிலிருக்கும் ஊர்தான். ‘அப்பாடி!! ஊர் கிட்ட வந்துட்டுது’ என சற்று ஆசுவாசப்பட்டது நிலைக்கவில்லை.

“பஸ்ஸு எங்க ஊருக்குள்ள போயே ஆவணும், அதெப்படி ஊருக்குள்ள போவாம இருக்கும்ண்ணு பாத்துருகேன்” ஒருத்தன் நடத்துனரிடம் சலம்பிக்கொண்டிருந்தான்.

“ஏ.. காருக்குள்ள ஏறச்செலயே சொன்னம்லா? பஸ்ஸு ஊருக்குள்ள போவாது, வெலக்குலதான் நிக்கும்ன்னுட்டு. அப்பம்லாம் மண்டைய ஆட்டிட்டு இப்பம் எகுறுனா எப்பிடிரே?”

“அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது. பஸ்ஸு ஊருக்குள்ள போகணும்ன்னா போய்த்தான் ஆகணும், இல்லண்ணு வைய்யி… நாளப்பின்ன ஒம்பஸ்ஸு ரோட்டுல ஓடாது பாத்துக்க” வாய் குழறச்சொன்னான் ஒருத்தன்.

“ஆமா மாப்ளே.. ஊர்ல திருழா நடக்கு, இந்த நேரம் ஊருக்குள்ள பஸ்ஸுல போயி எறங்கினாத்தான் கெத்து. வெலக்குல எறங்கி நடந்தம்ண்ணு கேட்டா ஒரு சொந்தக்காரனும் மதிக்க மாட்டான்” என குழறலுடன் ஆமோதித்தான் அடுத்தவன்.

“சொந்தக்காரன் மதிக்கணும்ன்னா சொந்தக்கார்ல போவெண்டியதுதான? எறங்கவும் செய்யாம எங்க உசிர எடுக்குதியே?. எண்ணேன்… இவுனுவோ எறங்கலைன்னா கெடக்கட்டும், நீங்க பஸ்ஸ எடுங்க”  நடத்துனர் ஓட்டுநரைப்பார்த்துச்சொன்னார்.

சட்டென எகிறினான் ஒருவன் “வண்டி ஒரு அடி பைபாஸ்ல நவுந்திச்சி… அவ்ளோதான், குதிச்சிருவேன்” 

ஓட்டுநர் செய்வதறியாது திகைத்தார். பாயிண்ட் டு பாயிண்ட் போகும் பஸ் எனத்தெரிந்தும், ஏறி விட்டு வம்பு பண்ணுகிறார்கள். இன்றைக்கு இவர்களுக்காக ஊருக்குள் பஸ்ஸை விட்டால், நாளைக்கு இதைப்போல் இன்னும் பலரும் நினைத்த இடத்தில் பஸ்ஸை நிறுத்தச்சொல்வார்கள், வேலைக்கும் ஆபத்து வரும். “சவத்தெளவு தண்ணியைப்போட்டுட்டு நம்ம உசுர வாங்குதுகள்” எரிச்சலுடன் இஞ்சினை ஆஃப் செய்தார். “ஊருக்குள்ளல்லாம் பஸ்ஸு வராது, வேலையக்கெடுக்காம ஒழுங்கா எறங்கிப்போங்க, இவுனுவோ எறங்கற வரைக்கும் பஸ்ஸு நவுராது” பயணிகளைப்பார்த்து பொதுவாகச்சொல்லி விட்டு நெட்டி முறித்தார்.

இவளுக்கு சொரேரென்றது. ‘நல்லா வந்து மாட்டிக்கிட்டோமே’ என அழுகையாக வந்தது. சுற்றுமுற்றும் பஸ்ஸுக்குள் பார்த்தாள். நாலைந்து ஆண்கள் மட்டுமே இருந்தனர். வயிற்றில் புளி கரைத்தது, “இவுனுவள வெலக்கி விடாம ஓரோருத்தனும் வேடிக்க பாத்துட்டிருக்கதப்பாரு.” மகளிடம் முணுமுணுத்தாள்.

“எம்மா.. சும்ம இரும்மா”

பரிதவிப்புடன் ட்ரைவரைப்பார்த்தாள், அவன் எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பி வைத்திருந்தான்.

“உள்ள நேரம் அம்புடும் ஊரு சுத்திட்டு, இப்பப் பாரு, நல்லா வந்து மாட்டியிருக்கோம். கொஞ்சமாது வடவருத்தம் இருந்தா சட்டுனு பொறப்பட்டுருப்பே” எல்லா எரிச்சலையும் மகள் மேல் திருப்பினாள்.

“நாம் மட்டுந்தானா? நீங்களுந்தான் பாத்திரக்கடைல..” 

“சரி சரி.. வாய மூடு. பதிலுக்குப்பதுலு பேச மட்டும் படிச்சு வெச்சிருக்கே. எல்லாம் அப்பனூட்டு புத்தி”

ட்ரைவர் பின்னால் திரும்பிப்பார்த்த ஒரு சமயம், ‘தயவு செஞ்சு வண்டிய எடுப்பா’ என விழிகளால் கெஞ்சியபடி அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் கையெடுத்துக்கும்பிட்டாள்.

ஒரு கணம் பதறிய அவன், சண்டையை விலக்கி விடப்போவது போல் எழுந்து நடத்துனரிடம் போனான், கிசுகிசுவெனப்பேசினான். மறுபடி வந்து ஒன்றுமே நடவாவது போல் இருக்கையில் அமர்ந்து, பக்க வாட்டில் சொருகி வைத்திருந்த ஒரு அழுக்குத்துணியை எடுத்து, பஸ்ஸின் கண்ணாடிகளைத்துடைக்க ஆரம்பித்தான்.

அவளுக்கு பஸ் உடனே கிளம்புமென்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னும் நேரமானதென்றால் புருஷனிடமும் புகுந்த வீட்டாரிடமும் பேச்சு வாங்க வேண்டி வரும். ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் துணைக்குக் கூப்பிட்டாள். இரவு நேரம் அவையெல்லாம் தூங்கப்போய் விட்டதோ என்னவோ ஒரு தெய்வமும் அவளுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்க்கவில்லை. அவளுக்குப் படபடப்பாக வந்தது. பிபி எகிறும் போல் இருந்தது. பாட்டிலிலிருந்த தண்ணீரைக்குடித்துக்கொண்டாள்.

“ஏட்டி.. அப்பாக்கு போன் போட்டு விஷயத்த சொல்லு, முடிஞ்சா கெடைக்கற வண்டிய எடுத்துட்டு வரச்சொல்லு”

“எம்மா.. சார்ஜ் இல்லாம மொபைலு எப்பமோ ஆஃப் ஆயிட்டு”

“எப்பம் பாத்தாலும் அதயே நோண்டிக்கிட்டிருந்தா? ஒரு அவசரத்துக்கு ஆவுமுன்னு வாங்கிக்குடுத்தா, இப்பிடியா கால வாரும்!? இப்ப என்ன செய்ய?”

“எம்மா.. நீ கொஞ்சம் அமைதியா இரு, இப்பிடி படபடன்னு வந்தா ஒண்ணும் பிரயோசனமில்ல. பொறுமையா இரும்மா, நீ பதட்டப்பட்டா எனக்கும் பதட்டமாவுதுல்லா”

“அவுனுவோ எறங்கற மாரியும் தெரியல, பஸ்ஸு கெளம்பற மாரியும் தெரியல, அர மணிக்கூரா சண்ட புடிச்சிட்டிருக்கானுங்க. ஏட்டி… ஊரு கிட்டதாம் வந்துருக்கோம். எறங்கி நடந்துருவோமா?” மகளிடம் கேட்டாள்.

“இந்த இருட்டுக்குள்ளயா?”

“இருட்டு என்ன இருட்டு? சர்ரு சர்ருன்னு ரோட்டுல பஸ்ஸும் லாரியுமா ஓடிட்டுதான இருக்கு? வெளிச்சத்துல நடந்துரலாம்”

“பயமா இருக்கும்மா..” 

இவளுக்கும் பயமாகத்தான் இருந்தது. திருவிழாவை சாக்கிட்டு சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வயசுப்பெண்ணுடன் பத்திரமாக ஊர் போய்ச்சேர வேண்டும். ‘எங்கள பத்தரமா வீடு சேத்துரு முத்தாலமா, ஒனக்கு பொங்கலு வைக்கேன்’ இழுத்து மூச்சு விட்டு படபடப்பை சமப்படுத்திக்கொண்டாள். 

“அம்மை நானிருக்கையில் ஒனக்கெதுக்கிட்டி பயம்? வா..”

குனிந்து காலடியில் இருந்த கட்டைப்பைகளை எடுத்துக்கொண்டாள், சேலையை இழுத்துச்செருகிக்கொண்டாள். மகள் பின்தொடர பஸ்ஸை விட்டிறங்கி விறுவிறுவென நடந்தாள். ரோட்டில் ஓடிய வண்டிகளின் முன்விளக்கு வெளிச்சத்தால் மரங்களின் நிழல்களும் நெளிந்து வளைந்து ஓடியது கிலியைக்கிளப்பியது. மகளைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டாள். இன்னும் சற்று தூரம்தான், கூப்பிடு தூரத்திலிருக்கும் கலுங்கைக் கடந்து ஐம்பது தப்படிகள் நடந்து விட்டால் போதும் இவர்களது ஊர் வந்து விடும், அதன்பின் பயமில்லை. ஆனால் கலுங்கை ஒட்டினாற்போல் நிற்கும் ஆலமரத்தைக் கடக்கத்தான் பயமாயிருந்தது. தலைக்குக்குளித்த பெண்ணொருத்தி கூந்தலை விரித்துக் காய விட்டிருப்பது போல் விழுதுகள் அடர்ந்து தொங்கி திகிலூட்டின.

“எங்களுக்கு நீதான் தொண ஆத்தா..” வாய்க்குள் முணுமுணுத்தவாறு பர்சில் வைத்திருந்த குங்குமப்பிரசாதப் பொட்டலத்தைத் தடவி எடுத்துப் பிரித்து ஒரு கிள்ளு எடுத்து மகளுக்குப் பூசி விட்டு, தானும் இட்டுக்கொண்டு தலையைக்குனிந்து கொண்டு விறுவிறுவென நடக்கலானாள். ஊர் முகப்புக்கு வந்ததும்தான் மூச்சே வந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் பைகளைப் போட்டு விட்டு “அப்பாடி..” என தளர்ந்து அமர்ந்தாள். 'பத்தரமா வந்து சேந்துட்டமே' என உற்சாகமாகவும் தன்னை நினைத்துப் பெருமிதமாகவும் இருந்தது. இவ்வளவு நேர மனக்கலவரத்தில் கவனத்துக்கு வராத அடிவயிற்றுக்கனம் ‘என்னைக் கவனி’ என்றது. எழுந்து கொல்லைப்புறத்திலிருந்த பாத்ரூமுக்கு நடந்தாள்.

“பொறவாசல்ல லைட்டு இல்ல, ஒத்தையில போகாத.. பயப்புடுவ. இன்னா கணேசன தொணைக்கி வரச்சொல்லுதேன் கூட்டிட்டுப்போ. லேய் மக்கா கணேசா.. அத்த கூட போலே”

‘தைரியமா ரோட்டுல முக்காஇருட்டுக்குள்ள மக கூட ரெண்டு ஊர கடந்து வந்த நாப்பது வயசு பொம்பளைக்கி, நாழி ஒசரம் கூட இல்லாத ஆம்பளப்பய தொணையா? அதுவும் வீட்டு காம்பவுண்டுக்குள்ளயே!!.. சர்தாம் போ’

அழுவதா சிரிப்பதா என அவளுக்குத்தெரியவில்லை. அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகம் பொசுக்கென்று வடிந்து விட்டிருந்தது, பெருமிதம் உடைந்து விட்டிருந்தது. அதை உடைத்த விரல்களை முறித்துப்போட விரும்பினாள். 'முறித்துப்போடப்போட இன்னும் உடைப்பார்கள். கடந்து செல்' என்றது உள்ளிருந்து ஒரு குரல். தான் சற்று நேரம் முன் நிகழ்த்திய சாகசத்தைக்கூட முட்டாள்தனமாகத்தான் சொல்வார்கள், 'போகட்டும்..  ஒரு பெரும் பொக்கிஷம் போல் அதை மனதுக்குள் பத்திரப்படுத்திக்கொள்' என்றது அது.

அவள் தெளிவானாள்..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி.


Wednesday 12 October 2022

உப்புமா கவியரங்கம்..


அப்படியே உண்பேம் அருகில் வடையுண்டு
உப்புமாவிற் கேற்ற துணை

முந்திரி உப்புமா மூக்குவரை தின்னாலும்
எந்திரி என்னாதே நாவு

சுந்தரியைத் தள்ளுவோ ராயினும் தள்ளாரே
முந்திரி உப்புமா காண்

அடையிட்லி யாப்பம் அரங்கில் இலையேல்
தடையுடைத் துப்புமா போம்

சம்பா ரவையொடு சேமியா சவ்வரியாம்
ஏம்பா மறந்தீர் அவல்

சிறுபசியோ தீப்பசியோ ஐயமிலை உப்மா
உறுபசி தீர்க்கும் உணவு

ஏங்கிய உப்புமா வின்துணை யாகவே
இங்கே யமர்ந்த வடை.

டிஸ்கி: ஃபேஸ்புக்கில் தம்பி ஐயப்பனின் டைம்லைனில் நடந்த காலட்சேபம் இங்கேயும் மறு பதிப்பாக.

Thursday 8 September 2022

அக்கா (துளசி கோபால்) - புத்தக மதிப்புரை

புத்தகம்: அக்கா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ஆசிரியர்: துளசி கோபால்

பதிவுலகில் எங்கள் அனைவராலும் அக்கா என அன்போடு அழைக்கப்படும் துள்சிக்கா என்ற துளசி கோபால், தனது அக்காக்களோடும் அண்ணனோடும் கழித்த இளம்பிராயத்து அனுபவங்களைக் கட்டுரைகளாகத் "துளசி தளம்" என்ற தனது வலைப்பூவில் எழுதி வந்தார். அவ்வனுபவங்களின் தொகுப்பே “அக்கா” என்ற தலைப்பில் தனி நூலாக மலர்ந்திருக்கிறது. அக்கா என்றதும் எனக்கு கலாப்ரியா அண்ணாச்சியின்,

“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கச்சிப் பாப்பாக்களைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்”

என்ற புகழ்பெற்ற கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. அக்காக்கள் அப்படித்தான். அக்கா என்பவள் இன்னொரு தாயும் கூட. 

அக்காக்களின் கதையைச்சொல்ல வந்த துள்சிக்கா, அதனுடன் தன் கதையையும் பின்னியே சொல்லியிருக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும் மூன்று சகோதரிகளின் வாழ்வும் மூன்று வெவ்வேறு திசைகளில் பயணித்திருக்கின்றன. அக்காக்கள் என்றால் அவர்கள் தனி மரமா? மாமாக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் வாழ்க்கை முறை என எல்லாமும் சேர்ந்த தோப்புதான் அக்கா.

அக்கா என்றால் இன்னொரு அம்மாதானே? துள்சிக்காவின் பெரியக்காவைப்பற்றி வாசிக்கும்போது எனக்கு அவர் துள்சிக்காவின் இன்னொரு அம்மா என்றுதான் தோன்றியது. அந்தப்பகுதியை வாசிக்கும்போது துள்சிக்காவின் ஞாபகசக்தியை வியந்தேன். எவ்வளவு சிறுசிறு விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்து எழுதுகிறார்!. முக்கியமாக, நீளமான எலி போன கதை, அக்கா வீட்டில் மெழுகிக்கோலம் போடும் முறை, வீட்டில் என்ன நடந்தாலும்“நானு” என எல்லாவற்றுக்கும் குழந்தை ரேணு சொல்லும் விதம், முக்கியமாக அக்காவின் கல்யாணக்கூரையான பனாரஸ் பட்டுப்புடவையைக் கட்டிக்கிழித்தது, முத்தாய்ப்பு வைத்தது போல் அப்பா தனது கடைசி நாட்களை மூத்த மகள் வீட்டில் கழித்தது என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

சின்னக்காவிற்கும் அண்ணனுக்குமிடையே அகப்பட்டுக்கொண்டு சின்ன துள்சிக்கா பட்ட பாடு நமது உடன்பிறப்புகளிடையே ஏற்படும் விளையாட்டுச் சண்டைகளைக் கண்டிப்பாக நினைவூட்டும். இருவருக்கும் சமரசம் ஏற்பட்டிருக்ககூடாதா என்ற ஏக்கம் தோன்றியது நிஜம். சின்னக்காவையும் அவரது நறுவிசான காரியங்களையும் வாசிக்க வாசிக்க, அவரைக்கொண்டு போன எமன் மேல் கோபம் வந்தது. சின்னக்காவுடன் துள்சிக்கா பூவுக்குப் பங்கு கேட்கும் முறையையும், அம்மா மற்றும் அக்காக்களுடன் சினிமாவுக்குக் கிளம்பும் வைபவம் பற்றியும் விவரித்திருப்பதை வாசிக்கும்போது, அந்த உணர்வை நம்முள் நேரடியாகக் கடத்திவிடுகிறார். சிறந்த கதை சொல்லியான துள்சிக்கா.

மருத்துவரான அம்மா இருந்த வரைக்கும், கதம்பமாய் ஒற்றுமையாய் இருந்த உடன்பிறப்புகள், அவரின் இறப்புக்குப்பின் சிதறிப்போவதும், அந்தக்குடும்பம் கொஞ்சங்கொஞ்சமாய்க் கலைவதும் வாசிக்கும்போதே வலி தருகிறது. அக்காக்களின் கல்யாணம் பற்றி விவரிக்கும்போதே, அம்மா வழி குடும்பத்தையும் சற்று நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அம்மம்மாவுடன் நிகழ்த்தும் “நடு வீடு” கலாட்டா நகைக்க வைத்தது.

அக்காக்கள் என்பவர்கள் நிச்சயமாக அபூர்வப்பிறவிகள்தான், இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக அவரவர் அக்காக்கள் நினைவுக்கு வருவது உறுதி. தனது வலியைக்கூட புன்னகையுடன் நகைச்சுவையுணர்வுடன் சொல்வது எங்கள் துள்சிக்காவின் சிறப்பியல்பு. இப்புத்தகத்திலும் அது வெளிப்பட்டுள்ளது. கையிலெடுக்கும் ஒவ்வொருவரும் புன்னகை தவழ வாசித்து முடிப்பது உறுதி.

Sunday 28 August 2022

அளம் - புத்தக மதிப்புரை


கணவன் மனைவி இருவரில் பொருளீட்டும்பொருட்டு மனைவி பிரிந்து சென்றாலோ, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காத பொறுப்பற்ற ஊதாரியாய் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, கணவன் மீதி வாழ்க்கையைத் தொடர, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிக் கரையேற்ற மிகவும் சிரமப்படுவான். அதுவே கணவனின் துணையும் ஆதரவும் இல்லாத சூழலில் வாழ நேர்ந்தால், மனைவியானவள் குடும்பத்துக்கே அச்சாணியாய் இருந்து எப்பாடு பட்டாவது குழந்தைகளை வளர்த்துக் கரை சேர்த்து விடுவாள். அப்படி கரை சேர்க்குமுன் அவள் படும் பாடுகளும் நடத்தும் போராட்டங்களும்தான் எத்தனையெத்தனை!!!! 

சின்னச்சின்ன கவலைகள் வந்தாலும் உடைந்து போவார்கள், தானும் பயந்து துவண்டு பிறரையும் பயத்துக்கு உள்ளாக்குவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். ‘பொசுக் பொசுக்கென’ அழுது தீர்ப்ப்பார்கள். ஆகவே, மலரினும் மெல்லியர் பெண்கள் எனக்கூறப்படுவதுண்டு. அப்படி மென்மையான பெண்கள்தான், வாழ்வில் விழும் அடிகளால் கெட்டிப்பட்டு, வலிமையானவளாகவும் பொறுப்பானவளாகவும் மாறுகிறாள். அதுவும், அசாதாரணமான சூழ்நிலைகளில் “அடுத்து என்ன செய்ய?” என கணவன் கலங்கி நிற்கும் சமயங்களில், “பாத்துக்கலாங்க.. சமாளிப்போம்” என அவள் கூறும் வார்த்தைகளில் கணவனுக்கு புதுத்தெம்பே அல்லவா வந்து விடுகிறது!.

ஆண் இல்லாவிட்டாலும் பெண் ஓய்ந்து உட்கார்ந்து விடுவதில்லை. குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கப்போராடுகிறாள், ‘பொம்பள வளத்த புள்ளதானே?’ என்றொரு சொல் தன் பிள்ளைகளின் மேல் விழுந்து விடக்கூடாதென பிள்ளைகளை, முக்கியமாகப் பெண்பிள்ளைகளை அடைகாத்து வளர்க்கிறாள். அவளில்லாவிட்டால் குடும்பம் நிச்சயமாக இருண்டுதான் போய்விடுகிறது. நாளொரு பாடு, பொழுதொரு போராட்டமென தினந்தினம் செத்துப்பிழைக்கும் அப்பெண்களின் பிரதிநிதியான சுந்தராம்பாள் மற்றும் அவளது மூன்று மகள்களின் கண்ணீர்க்கதையை “அளம்” நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி.

கப்பலில் வேலை செய்து சம்பாதித்து வருவதாகச்சொன்ன பொன்னையன் நாவலின் இறுதி வரி வரை திரும்பி வரவேயில்லை. வேலைக்குச் சேர்த்து விட்ட இடத்திலிருந்து காணாமல் போய் விடுகிறான். கோயில்தாழ்வு ஊரிலிருக்கும்போதும் குடும்பத்துக்காகச் சம்பாதிக்காமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் ஆகவே அவன் இருந்தாலும் இல்லாமற்போனாலும் உழைத்தாக வேண்டிய பொறுப்பு சுந்தராம்பாளுக்குத்தான். கஷ்டத்தையும் கண்ணீரையுமே சொத்தாகக் கொண்டிருக்கும் அவர்களை இயற்கைச்சீற்றமும் தன் பங்குக்குச் சோதிக்கிறது. எழ நினைக்கும்போதெல்லாம் அடித்து உட்கார வைக்கிறது. வீடு, ஆடு மாடுகள்,  விளைந்து நிற்கும் பயிர் என எல்லாவற்றையும் நந்தன, மன்மத வருடங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தில் பறிகொடுத்து நிற்கிறார்கள். புயல் வீசும் அத்தியாயத்தை வாசிக்கும்போது, “கஜா” புயல் நினைவுக்கு வந்தது.

இரண்டு முறை திருமணம் செய்து கொடுத்தும் விதவையாய்த் தாய்வீட்டுக்கே மறுபடி மறுபடி வந்து சேரும் வடிவாம்பாள், மகிழ்வாய் ஆரம்பித்த மணவாழ்வு கணவன் வேறு திருமணம் செய்து கொண்டதால் கருகி விட, மூன்று குழந்தைகளுடன் தாய்வீட்டுக்குத் திரும்பும் இரண்டாவது மகளான ராசாம்பாள், கல்யாணமாகாத கடைசிப்பெண் அஞ்சம்மாள் என அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போகிறது. அவர்களது அயராத உழைப்பை மட்டுந்தான் விதியால் பறிக்கவியலவில்லை. சுப்பையன் சிங்கப்பூரில் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கையிலேயே நாட்களை ஓட்டுகிறார்கள். என்றாவது ஒரு நாள் அவன் திரும்பி வரக்கூடும், தங்களைத் தேடுவான் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதால் கோயில்தாழ்வை விட்டு வெளியூருக்குப் பிழைக்கப்போகாமல் எல்லாச் சோதனைகளையும் தாங்கிக்கொண்டு அங்கேயே இருப்பது நெகிழ வைக்கிறது என்றாலும், குடும்பத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒருத்தனுக்காக இவ்வளவு சிரமங்களைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

வாட்டும் வறுமையில் வயிற்றுப்பாட்டைக்கழிக்க அன்றாடங்காய்ச்சியான அவர்கள் படும் பாடுகள் அநேகம். இயற்கையும் அவர்கள் மேல் கருணை கொண்டு, மின்னிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, கார கொட்டிக்கிழங்கு, அதலை விதைகள், தொம்மட்டிக்காய்களும் பழங்களும் என அள்ளி வழங்கி அரைவயிற்றுக்காவது பசியைத்தீர்க்கிறது. உப்பளத்தில் வேலைக்குச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு உப்பளத்தை வாங்குகிறார்கள். ஆண் துணையற்ற அக்குடும்பத்துக்கு அந்த உப்பளம்தான் இறுதியில் துணையாகிறது. அதில் விளையும் உப்பில் அவர்களது கண்ணீர் கலந்து இன்னும் கரிக்கலாம், யார் கண்டது?

நாவலில் நெடுக வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளின் வட்டார வழக்கு இடையோடுகிறது. அத்துடன், நெய்தல் நிலமான அப்பகுதிகள் மற்றும் உப்பளங்களின் நிலவியல் அமைப்பை மிகவும் அழகாகவும், அந்த எளிய பெண்களின் போராட்டத்தை யதார்த்தமான தனது எழுத்தால் அழுத்தமாகவும் இந்த வாழ்வியல் நூலில் பதிவு செய்துள்ளார் தமிழ்ச்செல்வி..

நூல்: அளம்
ஆசிரியர்: சு. தமிழ்ச்செல்வி
வெளியீடு: ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

Saturday 27 August 2022

“நேரா யோசி" - புத்தக மதிப்புரை


திரு. சுதாகர் கஸ்தூரியின் இப்புத்தகம் சுயமுன்னேற்றப் புத்தகமா எனில் ஆம், ஆனால் உளவியல் ரீதியான சுய முன்னேற்றப்புத்தகம் என்று கூறலாம். ஒரு மனிதன் முன்னேற முட்டுக்கட்டையாய், தடைக்கல்லாய் இருப்பது எவ்விதமான வெளிக்காரணியுமல்ல.. முழு முதற்காரணி அவனேதான். அவன் எனில் அவனது மனம், அந்த மனத்தை அவன் கையாளும் விதம், அவன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாங்கு, அவற்றைத் தீர்க்கும் விதம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருக்கும் சுய மதிப்பீடு, அவனது பொறுப்புணர்வு என பலவும் கொண்டது. அவையே பெரும்பாலும் அவனது வெளித்தெரியாத எதிரிகளுமாகும்.

“எண்ணித்துணிக கருமம்” என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனங்குவித்துச் சிந்தனை செய்யப்புகும்போது, இந்த எதிரிகள்தான் தடையாக வந்து நிற்பர். இந்நூலில் அப்படிப்பட்ட 26 எதிரிகளை நமக்கு இனங்காட்டி, அவர்களை வெல்லவும் தாண்டிச்செல்லவும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது, “அட!! ஆமால்ல” என நாமும் ஒத்துக்கொள்கிறோம். நம்மில் உறையும் ஒவ்வொரு எதிரியையும் இனங்காண்கிறோம். இவற்றில் ஒவ்வொரு எதிரியும் முக்கியமானவர்தான் எனினும் என்னளவில், பின்னூட்டமற்ற போக்கு, சுய இரக்கம், விருப்பமும் முன் முடிவுகளும், பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு, தேர்ச்சியெனும் பொறி, எல்லையற்ற நற்பண்புகள் போன்றவற்றை மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். “நான் எதைச்செஞ்சாலும் வெளங்காது” என்ற கழிவிரக்கம் நம்மை ஒரு அடி கூட முன்னேற விடாமல் அப்படியே அங்கேயே ஆணியடித்தாற்போல் அமரச்செய்து விடும். அப்புறம் முன்னேற்றமாவது ஒன்றாவது..

மனம், மூளை இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்ற விவாதம் அவ்வப்போது எழுந்தடங்குவது உண்டு. நம் சிந்தனையின் வேகத்திற்கேற்ப மூளையின் செயல்பாடுகள் மாறுவதும், மூளையிலேற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் சிந்தனைகள் அமைவதும் உண்டு. Anxiety எனப்படும் மனப்பதற்றப்பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிறுசிறு பிரச்சினைகள் வந்தால் கூட அதை எதிர்கொள்ள கடினமாக இருக்கும், பயம் வந்து மூடிக்கொள்ளும், இதயத்துடிப்பு எகிற, உடல் முழுதும் வியர்த்து வழிய துவண்டு போவார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்யும், அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதோ சிங்கம் புலியை நேரில் கண்டாற்போல் பயப்படுவார்கள். அந்த பயமே அவர்களை சிறைப்படுத்தி விடுவதுமுண்டு. இதெல்லாம் மூளையிலிருக்கும் (Amygdala)செய்யும் வேலை. 

நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோது இந்த அமைக்டிலாதான், “இங்கே நிற்காதே.. ஓடி உன்னைக்காப்பாற்றிக்கொள்” என எச்சரிக்கை செய்தது, அட்ரீனலினைச்சுரக்க வைத்துப் பரபரப்பூட்டியது. தற்காலத்திலும் அதேபோல்தான், சில செய்திகளைக்கேட்கும்போது அட்ரீனலினைச்சுரக்க வைத்து பரபரப்பூட்டி விடுகிறது. அதிகமான அட்ரீனலின் சுரப்பே anxietyக்கும் காரணமாகிறது. அந்த உணர்ச்சி வேகத்தில் ஓடும் நமது அனிச்சைச்சிந்தனைகளுக்கும், முடிவுகளுக்கும் அட்ரீனலினின் வேகம் சற்றுக்குறைந்த பின் வரும் சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. இந்த அனிச்சை எண்ணங்களை மாற்றியமைப்பதற்காக CBT (Cognitive Behaviour Therapy) கொடுப்பதுண்டு. கொஞ்சங்கொஞ்சமாக அமைக்டிலாவின் தாக்கத்தைக் குறைத்து தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கற்றுத்தருவார் கவுன்ஸிலர். அதாவது எதையும் “நேரா யோசிக்க”க் கற்றுத்தருவார். நேரா யோசிக்கும்போது என்னதான் நாம் பிற காரணிகளால் தூண்டப்பட்டாலும் நிதானமிழக்காமல் இருப்போம். இப்புத்தகத்திலும் அந்த தெரப்பியின் அடிப்படையிலேயே பல்வேறு உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. “You can’t change, but modify” என கவுன்ஸிலர்கள் சொல்வதுண்டு.

நமது முன்முடிவுகள் காரணமாக, பிரச்சினைகளையும், இவ்வுலகையும் அது எப்படியிருக்கிறதோ அப்படிப்பார்க்காமல், நாம் எப்படிப்பார்க்க விரும்புகிறோமோ அப்படிப்பார்க்கிறோம். இவற்றிலுள்ள பிழைகளைச்சுட்டிக்காட்டி நேராக யோசிக்கக்கற்றுத்தந்து நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது இந்நூல். 

இன்றைய தினம் நம் முன் முக்கியமாக இளைய தலைமுறையினர் முன் நிற்பது “போலிச்செய்திகள்” எனும் மிகப்பெரிய எதிரி. “முன்னோர் ஒன்றும் முட்டாளல்ல” எனவும் “ஷேர் செய்யுங்கள்” என நிபந்தனை விதித்தும் வெளியாகும் பொய்ச்செய்திகள் அனேகம். இப்பொறிக்குள் விழுபவர்கள், பிறர் மீது வெறுப்பு, கோபம், மற்றும் ஆதாரமில்லாத மருத்துவக்குறிப்புகளைப்பின்பற்றுதல் என தங்கள் சமூக, குடும்ப உறவுகளைச் சிதைத்து உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இளைய தலைமுறையினர் சற்று யோசித்தாலே அதிலிருந்து வெளி வந்து விடுவர். இந்த நூல் அனைத்துத் தரப்பினரும் வாசிக்க ஏற்றதுதான் என்றாலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் வாசித்தால் அவர்களது மனநலம், சிந்திக்கும் திறன், அதன் காரணமாக வாழ்வில் முன்னேற்றம் என எல்லாமும் மேம்படும். கல்லூரிகள், பள்ளிகளில் பாடமாக வைக்கலாம்.

எழுத்தாளர், நண்பர், திரு.சுதாகர் கஸ்தூரி பன்முக வித்தகர். வெண்பா எழுதி வியக்க வைப்பார். தெற்கத்தித் தமிழில் எழுதி ரசிக்க வைப்பார். அறிவியல் கட்டுரைகள் எழுதி அசர வைப்பார். மும்பையில் வசித்தாலும் தூத்துக்குடித் தமிழர். அவரின் நூற்களில், 6174 மற்றும் 7.83 ஹெர்ட்ஸ் என இரு நூல்களையும் வாசித்திருக்கிறேன். இந்நூல் அவரது அனைத்து நூற்களிலிருந்தும் மாறுபட்ட ஒன்று.

Thursday 4 August 2022

"ஆனந்தவல்லி" - புத்தக மதிப்புரை


முடியாட்சி நடந்து வந்த காலத்தில், வென்றவர் தோற்ற மன்னரின் நாட்டிலுள்ள செல்வங்களை அழித்ததையும், மகளிரைச் சூறையாடிப் பொசுக்கியதையும், கவர்ந்து சென்று தம் நாட்டில் அடிமைகளாக வைத்திருந்ததையும், கைது செய்து கொண்டு வந்த ஆண்களை தம் நாட்டில் அணை, கோவில் கட்டுதல் போன்ற கடினப்பணிகளில் ஈடுபடுத்தியதையும் கேட்டிருக்கிறோம். பிற்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் மக்களை அண்டை நாடுகளுக்கு கொத்தடிமைகளாக அனுப்பியதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக்காலத்தில் அடிமை வாணிகம் சர்வ சாதாரணமாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த வாணிகம் வெளிநாட்டில் மட்டுமன்றி உள்நாட்டிலும் நடந்திருக்கின்றது, குறிப்பாகப் பெண்களை ராஜாக்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். இச்சமயம் அரிச்சந்திரன் தன்னையும் தன் மனைவி மற்றும் மகனையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. இந்த அவலம் நம் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்திருக்கின்றது என்பது சீரணிக்க சற்றுக் கடினமான ஒன்றே. அப்படி விற்கப்பட்ட.. அதுவும் பெற்ற தகப்பனாலேயே அக்கதிக்கு ஆளாக்கப்பட்ட “ஆனந்தவல்லி” என்பாளின் உண்மைக்கதையே இந்நாவல்.

ஊர்ந்து நடந்து அதன்பின் ஓடத்துவங்காமல், நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலேயே நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கி விடுகிறது நாவல். பெரிய நாயக் கொத்தனின் திருவிளையாடல்களையும் அவன் எப்பேர்ப்பட்ட வாய்ஜாலக்காரன் என்பதையும் ஆரம்பத்திலேயே கோடு போட்டுக்காட்டி விடுகிறார் நூலாசிரியர். இப்பேர்ப்பட்ட ஒருத்தனிடமிருந்து அவன் மனைவி பிள்ளைகளை அவன் கூடப்பிறந்தவர்கள் காத்திருக்கக்கூடாதா என்ற அங்கலாய்ப்பு பின்னர் நமக்கு எழுகிறது. குறைந்த பட்சம் அவன் மனைவியாவது எதிர்த்து நின்று அவனைக் கேள்வி கேட்டு, நெறிப்படுத்த முயன்றிருந்தால் பாவம்.. ஒரு பெண்பிள்ளையின் வாழ்வு பிழைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

மீனாட்சியாக இருந்தவள் ஆனந்தவல்லியாக மாறும் வரையிலான வருடக்கணக்கான அவளது அடிமை வாழ்வில், ஐந்து வயதில் தன்னை மணந்த சபாபதிப்பிள்ளையை ஒரே ஒரு முறைதான் நினைத்துப்பார்க்கிறாள். ஆனால், அவனோ அவளை மீட்பதைத்தவிர வேறு சிந்தனையே இல்லாதவன். “அவ வெளிய வந்தாலும் ஒம்பொண்டாட்டியா இருக்கறதுக்கு தகுதியானவளா இருக்க முடியாது” என தகப்பனே ரசக்குறைவாகப் பேசினாலும் “அவள மீறி நடந்த எந்த விஷயத்துக்கும் அவள பொறுப்பாக்க முடியாது” என்ற நிலைப்பாடு கொண்டவன். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் அவ்வண்ணம் ஒரு கருத்தைக் கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதே. அப்படியொரு எண்ணம் இருந்ததால்தானே அவன் மதறாஸ் மாகாணத்தின் கவர்னரின் கதவுகளைத் தட்டும் வரை போயிருக்கிறான். “மொகம் கூட தெளிச்சியா இல்லை, ஆனா அந்தப்பாசத்த மாத்திக்க முடியாதுப்பா” எனும்போது நாமும் கலங்குகிறோம்.

இவ்விருவரின் ஊடேயும் நாவல் முழுக்க இழையோடுகிறது தஞ்சை அரசின் அரசியல் வரலாற்றுச்சிடுக்குகளும், கல்யாண மஹாலின் பதவிஅதிகார அடுக்கும். கத்திக்கல்யாணத்துக்கும், மன்னர் நேரடியாக மணந்த அரசியருக்கும் கூட அதிகாரத்திலும் அவர்கள் வயிற்றிலுதித்த மக்களுக்கான உரிமையின் அடுக்கிலும் வித்தியாசம் இருந்திருக்கிறது. தவிரவும் போகஸ்திரீகளான பாயிகள், அவர்களுக்குப் பணிவிடை புரியும் அக்காமார்கள், இறுதியாக தொண்டூழியம் புரியும் ஏவல் பெண்டுகள் என இத்தனை பேரின் ஊடே அந்தக்கால தஞ்சையைக் காண்கிறோம். 

அக்காலத்தில் பெருமளவில் நிலவி வந்த ‘உடன்கட்டையேறுதல்’ எனும் கொடிய பழக்கத்தை ஆங்கிலேயர் வெறுத்ததற்கு ‘அரசகுடும்பத்துப்பெண் சதிமாதாவானால் அது ஆங்கிலேயருக்கு எதிராக அச்சமஸ்தானம் எழுப்பும் குரல்’ என்ற கண்ணோட்டம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பெண்டிரோ இரு வகைகளில் தூண்டப்பட்டு வந்தனர். சதிமாதாவானால் கிடைக்கும் தெய்வநிலை, நடுகல் வழிபாடு போன்ற உயர்நிலை ஒரு பக்கமெனில், “அக்னிப்பிரவேசம் ஒன்றில்தான் பெண்ணுக்குக் குடிப்பெருமை கிடைக்கும், அப்பெண்ணின் மைந்தனுக்கு அதன்மூலம் கிடைக்கும் அதிகாரம் இணையற்றது” என்ற மனநிலை இன்னொரு பக்கம். அக்காலத்தில் சதிமாதாக்களின் உடலில் இருக்கும் நகையை ஈமக்கடனை நடப்பித்த புரோகிதர்கள் மறுநாள் சாம்பலிலிருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

அப்போது நம் நாட்டை மெல்ல மெல்ல கைக்குள் கொண்டு வந்து ஆளத்தொடங்கியிருந்த பிரிட்டிஷாரின் நரித்தனம், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதிகாரம் செய்தல் போன்றவை இந்த நாவலில் நிறையவே விளக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. சொகுசாய் வாழ்வது ஒன்றே குறியாய், மக்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று வாழ்ந்திருந்த அவர்களிடமிருந்து என்ன நியாயம் கிடைத்து விடும்?. ஆங்கிலேயரின் உண்டு உறைவிடப்பள்ளிக்கு நன்கொடை தருவதாக மஹாராஜா சொன்னபின் அவரை எதிர்த்துக்கொள்வார்கள் என்றோ, மீனாட்சியை விடுதலை செய்து அவள் கணவனுடன் அனுப்பி வைக்கும்படி ராஜாவுக்கு உத்தரவிடுவார்கள் என்றோ எதிர்பார்க்க முடியுமா என்ன?

அசிங்கப்பட்ட உடம்போடு வாழ்வதா? என தற்கொலைக்குத்துணியும் சந்திரம்மாவிடம் ஆனந்தவல்லி கேட்கும் கேள்வி ஒவ்வொரு பெண்ணும் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டியது. விசுவாசம் என்பது கூட சமூகத்தின் ஜாதி, பொருளாதார படிநிலைகளுக்கேற்ப மாறுமா என்ன? அப்படித்தான் அப்பெண்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். என்றேனும் ஒரு நாள் தன் அம்மாவைப் பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் ஆனந்தவல்லி.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியாத நேர்மையாளரான மோஹித்தே, மீனாட்சியின் நிலை கண்டு, அவள் கணவனுடன் இணைய தடையாக இருந்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பால் வீரம்மா என்ற அக்காவிடம் உதிர்த்த “பவித்ரம்” என்ற ஒரு சொல் மீனாட்சியின் வாழ்வைப் புரட்டிப்போட்டு அவளை அவள் குடும்பத்திடமிருந்தே பிரித்து விடும் என அவர் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. “நான் ஒண்ணும் பரம்பரையா அக்காவா இருக்கறவ இல்ல” என வீரம்மாவை அந்தச்சொல் உலுக்கிப்போடாமல் இருந்திருந்தால் ஒருவேளை மீனாட்சி அவள் குடும்பத்தினருடன் சேருவதைத் தடுக்காமல் இருந்திருப்பாளோ என்னவோ!! ஒரு பெண்ணின் அகங்காரத்தைத் தூண்டிய அச்சொல்லால் இன்னொரு பெண்ணின் வாழ்வையே பலியிடத்துணிகிறாள்.

கொடிகட்டிப்பறந்த அடிமை வியாபாரத்துக்கு எதிராக மன்னரிடமும், அதன்பின் அவர்களையே கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்ட ஆங்கிலேயரிடமும் புகாரளித்தும்  மீனாட்சியை மீட்க இயலாத சபாபதியின் கையறுநிலை கலங்க வைக்கிறது. காவலனே கள்வனானால் என் செய்ய இயலும்?. சபாபதி மதறாஸ் கவர்னருக்கு எழுதிய கடிதத்தின் மேல் எழுந்து நிற்கிறது இந்நாவல். ஒற்றைக் கடிதத்தை அஸ்திவாரமாய்க்கொண்டு, இதுவரை யாருமே தொடாத புதுக்களத்தில்  பெருங்கோட்டையொன்றை எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன். இவரது முதல் நாவல் என்று சொல்லவியலாத அளவுக்கு ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரிகள் வரை விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நூல்.

ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

“வேணுவன மனிதர்கள்” - புத்தக மதிப்புரை


பிஞ்சுப்பிராயத்திலிருந்து பழுத்து உதிரும் காலம் வரை வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம், எத்தனையோ பேர் நம்மைச் சந்திக்கிறார்கள், சிறு பொழுதே சந்தித்துப்பிரிபவர்கள் முதல் அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்க நேர்பவர்கள் முதல் எத்தனையோ பேருடன் பழகினாலும் ஒரு சில மனிதர்கள் தம் தடத்தை லேசாகவோ அழுத்தமாகவோ நம் நினைவுகளில் பதிய வைத்து விடுகிறார்கள். அப்படி தன் நினைவில் பதிந்தவர்களை திரு. நாறும்பூ நாதன் அண்ணாச்சி இந்த வேணுவன மனிதர்களில் ரத்தமும் சதையுமாக உலவ விட்டிருக்கிறார்.

கிணற்றில் விழுந்த பொருட்களைத் துழாவி எடுக்கும் பாதாளக்கரண்டி அதற்கு முன் எப்போதோ விழுந்த பொருட்களையும் சேர்த்து தேடியெடுத்துத்தரும். அதைப்போல், இந்த மனிதர்களைப்பற்றி வாசிக்கையில் நாம் எப்போதோ சந்தித்த மனிதர்களிடம் போய் நிற்கிறது நமது நினைவுத்தடம். அவ்வகையில் இந்நூலும் ஒரு பாதாளக்கரண்டியே. காது கேட்காத, வாய் பேச இயலாத குருவம்மா அப்படித்தான் எங்கள் அம்மை வீட்டில் ஒத்தாசைக்கு வந்து போய்க்கொண்டிருந்த கிட்னம்மாவை ஞாபகப்படுத்தினார். காது கேட்காதே தவிர திக்கித்திக்கி ஓரளவு பேசுவார், எதிராளியின் உதடு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து ஓரளவு புரிந்து கொள்வார். எம்.ஜி.ஆர் படங்களென்றால் உயிர், பார்த்து விட்டு வந்து மறுநாள் வீட்டுக்காரியங்கள் பார்த்துக்கொண்டே அம்மைக்கும் எங்களுக்கும் கதை சொல்வார்.

பிரியமாய்ப் பழகி பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல் மனதில் ஒட்டிக்கொண்ட இன்னொருவர் “பாஞ்சாலி ஆச்சி’. தினமும் வீட்டுக்கு வருவார், ஆர்ப்பாட்டமாய் நுழைந்து உற்சாகமாய்ப்பேசி கலகலக்க வைத்து விட்டுச் செல்வார். வீட்டில் காய்த்த கொய்யாக்காய்கள், பழங்களை மடி நிறையக் கட்டிக்கொண்டு வருவார். சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அவற்றைக் கொடுத்து ரசிப்பார். சில சமயம், வாசலில் வரும்போதே, அம்மையைப்பார்த்து “ஏ பிள்ள… சரஸோதில(சரஸ்வதி) புதுப்படம் போட்ருக்கான், வா, ரெண்டாம்ப்ளே போலாம்” எனக்கேட்டபடி ஆர்ப்பாட்டமாய் நுழைவார். வருகிறாயா? என்றெல்லாம் கேட்பது அவரது அகராதியிலேயே கிடையாது, கைப்பிடியாக இழுத்துக்கொண்டு போய் விடுவார். எல்லோரையும் குசலம் விசாரித்தபடி எல்லோருடனும் இணக்கமாக இருக்க எண்ணிய அவரை சேது ஆச்சி என்றும் சொல்லலாம்.

ஒரு காலத்தில் போட்டோ கிராபர்களுக்கு விசேஷ வீடுகளில் இருந்த வரவேற்பையும், அந்தக்கால ஃபிலிம் காமிராக்களையும், பற்றி திருச்சிற்றம்பலம் அண்ணாச்சியைப் பற்றிய கட்டுரையில் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர். இப்போதெல்லாம் “கேண்டிட் போட்டோகிராஃபி” மிகவும் பிரபலமான ஒன்று. அந்தக்காலத்திலேயே கலைநயத்துடன் எடுக்கப்பட்ட அவ்வகைப் போட்டோக்களின் மூலம் மட்டுமல்ல, வேணுவன மனிதர்களில் இடம் பெற்றதன் மூலமாகவும் காலத்துக்கும் நின்று பேசப்படுவார்.

புனைவுகளில் வேறு பெயர்களில் நிழலாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் பலரை அவர்களின் நிஜத்தோடு நம்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். அவர்களில், நம் அடுத்த வீடுகளில் தினசரி பார்க்க வாய்க்கக்கூடிய எம்.ஜி.ஆர். சங்கரன், கல்யாணி அக்கா, பொன்னையா வாத்தியார், முத்தம்மாள், சிவஞான மாமா, சிகைக்கலைஞர் மகேந்திரன், சூரியன் முதல், கான்சர் வந்து படாதபாடு படும் ஆம்ஸ், தன் நகையேயானாலும் ஏலத்துக்கு வந்தபின் தனக்குச் சொந்தமில்லாத நகையைக் கையில் போடுவதும் தப்பு என்றெண்ணும் அறவுணர்வு கொண்ட அங்கயற்கண்ணி, சிறைப்பட்டிருக்கும் தோழர்களின் குடும்பங்கள் பசியில் வாடாவண்ணம் ஆதரித்த சங்கரப்ப நைனா, சலவைத்தாளை சரட்சரட்டென எண்ணி செலவு செய்ய புது ரூபாய்க்கட்டுகளையே கேட்டு வாங்கும், “சீதேவிய காலடிப்பக்கம் போட்டிருக்கீகளே” என அங்கலாய்க்கும் முத்துக்காளை, பால்யத்தைக் கிராமங்களில் கழிக்க நேர்ந்த ஒவ்வொருவரும் தனது விளையாட்டுத் தோழமையாகக் கண்டிருக்கக்கூடிய சாக்கடை முருகனாக இருந்து தற்போது சாத்தூர் முருகராக இருப்பவர், சவத்து மூதி போன்ற வசவுகளையே கை அசைவுகளில் விளக்கி விடும் பர்வதத்தக்கா வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடம்.
எல்லாக் குடும்பங்களிலும், வேலையிடங்களிலும் பொறுப்பான ஒரு ஏமாளி இருப்பார். பிறர் செய்யத்தயங்கும், அஞ்சும் வேலைகளை நாலு நல்ல வார்த்தை சொல்லி இவர் மேல் சுமத்தி விட்டு, அவர்கள் ஒதுங்கி விடுவார்கள். வேறு வழியில்லாமல் செய்ய நேர்ந்தாலும், தன் மேல் நிஜமான பரிவு காட்டுபவர்களிடம் இளகி விடுபவர்கள் உண்டு.. பொறுப்பு கணேசனைப்போல். ரசிகன் என்ற நிலையைத்தாண்டி, எம்.ஜி.ஆரை ஆராதிக்கும் உபாசகனாகவே இருக்கும் தங்கராசு, மது மயக்கத்தில் தெருவாசிகளுக்குத் தொல்லை கொடுக்கும்போது அவரைத் திசை திருப்பி, நைச்சியமாய் அமைதிப்படுத்த ஒரு எம்.ஜி.ஆர். பாடல் போதும். “சந்திரன்” ரொம்பச்சுருக்கமாகச் சொல்லி விட்டாரோ எனத்தோன்ற வைக்கும் பகுதி. அணிந்துரையில் வண்ணதாசன் ஐயாவே சொல்லியிருப்பது போல் ஒரு நாவலாக விரியக்கூடிய சாத்தியக்கூறுகள் அதற்கு அதிகம். காவிரியைக் குறுமுனி கமண்டலத்தில் அடைத்தது போல் நூலாசிரியரும் சுருக்கி விடாமல் என்றாவது நாவலாகப் பெருகச்செய்வார் என எதிர்பார்ப்போமாக.

குழந்தைகளை வழிக்குக்கொண்டுவர வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்ற நடைமுறை பள்ளிகளில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் இக்காலப் பிள்ளைகளுக்கு, அந்தக்காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதுண்டு என்ற செய்தியே புதுமையாகத் தோன்றும். ஆனால், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வி மீது மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் அக்கறை கொண்டிருந்த காலம் அது. ‘கண்ணு முழிய மட்டும் விட்டுட்டு தோல உரிச்சுருங்க’ என பெற்றவர்களே ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த சமயம். அப்படியிருந்தும், தன்னிடம் கற்கும் மாணவனை அடித்து விட்டதற்காக, கலங்கி அழும், இறைவனிடம் மன்றாடும், தன்னையே அடித்துத்துன்புறுத்திக்கொள்ளும் அன்னத்தாய்கள் அபூர்வப்பிறவிகள்தான். தன்னிடம் பயிலும் பிள்ளைகள் எல்லோருமே தன் மகவுகள்தான் என்றெண்ணும் தாயுள்ளமல்லவா அது.

சுகாவின் எழுத்துகளை வாசிக்கும் அனைவருக்குமே “டவுன் மீனாட்சி” பரிச்சயப்பட்டவர்தான். நெல்லை ஜங்க்ஷன் மற்றும் டவுனில் எந்தெந்தக் கடைகளில் எந்தெந்த சாப்பாட்டு அயிட்டம் நன்றாக இருக்கும் என்ற அரிய தகவல்களைக் குவலயத்திற்கு அறியச்செய்வதில் இவரது பங்கு அளப்பரியது. இவர் அள்ளித்தெளித்திருக்கும் பட்டியலை அறியும்போது, இவ்வளவு கடைகளை எப்படித்தெரிந்து வைத்திருக்கிறாரென்று நூலாசிரியருக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சரியம் வரும். நெல்லை டவுனில் தெற்கு ரத வீதியிலிருக்கும் மாரியம்மன் விலாசின் புகழ் பெற்ற ‘திருப்பாகம்’ என்ற இனிப்பு இவர் சொல்லி நூலாசிரியர் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானது. ருசியும் அபாரம். இலக்கியம் படிக்காவிட்டாலும் மனிதர்களைப் படித்திருக்கும் மீனாட்சி முத்தாய்ப்பாகச் சொன்னதுதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது. அத்தியாயங்களில் வரவில்லைதான் எனினும் நம்பிக்கை ஒளிவிடுகிறது அரசு அண்ணன் என்னும் ஒளிக்கீற்று. 

“ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ மனிதர்கள் வந்து போயிருப்பார்கள், அவர்களை நினைவூட்டவே இந்த நூல்” என நூலாசிரியர் கூறுவதைப்போல் அனைவரது வாழ்விலும் மனிதர்கள் வந்து போகிறார்கள்தான், ஆனால் ஏதோ ஒரு வகையில், நினைவில் தடமாய் தடயங்களாய் நின்று விடுகிறார்கள் அழியாமல்.

நூலாசிரியர் :திரு. இரா. நாறும்பூ நாதன்.
வெளியீடு; சந்தியா பதிப்பகம்.
விலை: Rs.140/-

Thursday 26 May 2022

சாரல் துளிகள்

வெய்யிலை சலித்து உள்ளே அனுப்புகிறது வலையடித்த ஜன்னல். ஒவ்வொரு கம்பியாய்த் தாவும் அணிற்பிள்ளை விரவிக்கொடுக்கிறது.

சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருப்பவளின் கன்னத்தில் படிகிறது ஜன்னல் கம்பிகளின் நிழல். இப்போது அவள் ஜன்னலில் சாய்ந்திருக்கிறாள். ஆம்.. அப்படித்தானிருக்க வேண்டும். பூக்களைத் தொடுத்துக் காய்ப்பேறிய விரல்களால், பச்சிளம் தளிரை வருடுகிறாள். அன்று ஒரு கிள்ளுப்பூ அதிகமாகவே சூட்டப்பெறுகிறது அந்த உச்சிக்குடுமி.

நேற்றிரவு முகவரி தெரிவித்த தவளையைத்தேடி, இன்று சுடுபகலில் தவ்வித்தவ்விப் போய்க்கொண்டிருக்கும் பாம்பின் மனசை அலைபாய வைக்கிறது எலிக்குஞ்சுகளின் கொண்டாட்டக் கூச்சல். போலச்செய்வதிலாவது ஒரு பாவனையும் முனைப்பும் இருக்கிறது, நகலெடுப்பதில் அதுவுமில்லை.

எழுப்பி எழுப்பி சலித்த இல்லத்தரசி பெருஞ்சத்தமெழ பாத்திரம் துலக்குகிறாள் திங்கட்கிழமை காலையில் தடதடவென எழுந்தோடுகின்றன பூனைக்குட்டிகளும் பிள்ளை குட்டிகளும் ஒரு கைப்பேசியில் அவனும் அவளும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். யார் கண்டது? எதிர் முனையிலிருப்பது யாரோவொருவரின் முன்னாள் காதலாகவுமிருக்கலாம். தலைக்குல்லாவை இழுத்து வீசும் கைக்குழந்தையைத் தோளில் கிடத்தியபடி வெயிலில் நடந்து செல்லும் தாயின் கை குடையாய்ப்படிந்திருக்கிறது சேயின் தலை மேல். சலனமின்றி இருவரையும் அவசரமாய்க்கடக்கிறது, சிறுதுண்டு மேகம்.

வேரோடிப் படர்ந்து கொண்டிருக்கும் அருகின் வனத்தில் திணறிக்கொண்டிருக்கிறது தழைக்கவியலாத ஆலங்கன்று.

சளைக்காமல் நீந்தி உடற்பயிற்சி செய்தாலும் பெருத்துக்கொண்டே போகிறது தொப்பை குறையாத மீன்.

Tuesday 10 May 2022

கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி - நூல் அறிமுகம்

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??. தங்கமக்கா என நான் அன்போடு அழைக்கும் திருமதி. தங்கம் வள்ளிநாயகம் எழுதியுள்ள "கண்ணாச்சி என்கிற தாயக்கட்டை ஆச்சி" நூலின் பல பகுதிகளை வாசிக்கையில் வாசகருக்கு அப்படியான உணர்வே தோன்றும். நம் பால்ய நினைவுகள், செய்த சேட்டைகள், காக்காய்க்கடி தோழமைகள் என பலவும் மனக்கண் முன் நிழலாடி, புன்னகை பூக்க வைக்குமென்றால் அது மிகையல்ல.

இந்நூல் தங்கமக்காவின் முதல் நூலாம், ஆனால் வாசிக்கையில் அப்படித்தோன்றாவண்ணம் ஆற்றொழுக்காய் தவழ்ந்து செல்கிறது நடை. மொத்தம் 33 கட்டுரைகள் கொண்ட இந்நூலில் பெரும்பான்மையானவை நூலாசிரியரின் சொந்த ஊரான கழுகுமலையில் அவரது இளம்பிராயத்தில் நிகழ்பவையே. குழந்தைகளின் உலகத்தில் ஆச்சிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. விளையாட்டுத்தோழமையாக, ஆலோசனை சொல்லும் மந்திரியாக, அப்பா அம்மாவின் கண்டிப்பிலிருந்து காக்கும் மெய்க்காப்பாளராக, சிறந்த கதை சொல்லியாக, உடல் மற்றும் மனதைப் பேணிப்பாதுகாக்கும் மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாசானாக இருப்பவர்கள் அவர்களே. அவர்களுக்கு அடுத்தபடிதான் அப்பா அம்மாவும் மற்ற உறவுகளும்.

கிராமிய விளையாட்டுகளான, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள் இந்த ஆச்சிகள், அவர்களிடம் விளையாடி மிச்சம் கொண்டு போக முடியாது. ஒரே காய் நகர்த்தலில் நமது எல்லா ராஜதந்திரங்களையும் காலி செய்து விடுவர். தாயக்கட்டை ஆச்சிகள், பேரப்பிள்ளைகளோடு இருக்கும்போதுதான் அவர்கள் தங்கள் தனிமையை வெல்கின்றனர், அல்லாத பொழுதுகளில் தாத்தாவிற்கும் சேர்த்து அவர்களே பல்லாங்குழி விளையாட வேண்டிய அவலநிலைதான். பொதுவாக பெண்குழந்தைகளுக்கு அவர்களின் நெருக்கமான முதல் தோழியாக ஆச்சிதான் இருப்பார். ஆச்சிகள் ரத்த உறவாகவோ நெருங்கிய சொந்தமாகவோ கூட இருக்க வேண்டியதில்லை. பேரன் பேத்தி வயதுள்ள எல்லாக்குழந்தைகளுக்கும் அவர்கள் ஆச்சிதான், தன்னுடைய புதுப்புடவையை முதன்முதலில் பேத்திதான் உடுத்த வேண்டுமென்ற பாசக்காரிகள். வழிப்போக்கனுக்கும் வயிறார உணவிட்டு, அவனது கஷ்டங்களைக்கேட்டுக் கண்ணீர் வடிக்கும் தாய்மனசு கொண்டவர்கள்.

இந்நூலில் தங்கமக்கா தனது வாழ்வியல் அனுபவங்களை, அலங்காரப்பூச்சின்றி இயல்பான மொழியில் சொல்லிச்செல்கிறார். தான் சந்தித்த மனிதர்களைப்பற்றி அவர் குறிப்பிடும்போது அதில் சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் பெண்களே இருக்கின்றனர். அவற்றில் நாணாவின் அம்மா, மடிசார் மாமி, பகவதி டீச்சர், பெரிய வீட்டு அம்மா போன்றோரை மறக்க முடியாது எனில், "பொம்மனாட்டிகளாப்பிறந்தா சகிச்சுண்டுதான் ஆகணும். நாம தேமேன்னு இருந்தா அவாளுக்கே சலிச்சுப்போய் விட்டுடுவா" என பெண்களுக்கான வாழ்க்கைப்பாடமெடுக்கும் வசந்தா என்றும் நினைவில் நிற்பார். இப்படி சகித்துக்கொண்டுதான் அம்மாக்களும் பாட்டிகளும் காலத்தை ஓட்டினர். வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. வசந்தா போன்றவர்களுக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது. எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

நூலில் நெல்லை மண்ணுக்கேயுரிய நுணுக்கமான வார்த்தை விளையாட்டுகளும், குறும்புகளும் விரவிக்கிடந்தாலும் ஊடேஊடே கோவைத்தமிழும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது. கோவையின் பேருந்துப்பயணத்தைச் சுவாரஸ்யமாய்ச் சொல்வதைப்போலவே தான் முதன்முதலாய் கத்துக்குட்டித்தனமாய் செய்த சமையல் அப்பாவிற்கு அவரது அம்மையை எப்படி நினைவூட்டியது என்றும் அதே சுவாரஸ்யத்தோடு சொல்கிறார். பெண்குழந்தைகளை சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்ய வைக்க வேண்டுமென்றால், "உன்னைய மாதிரி உண்டா?" என லேசாக உசுப்பேத்தி விட்டால் போதும், பம்பரமாகச் சுழல்வார்கள். ஆனால், இங்கே நூலாசிரியரின் அப்பா முகஸ்துதி செய்யாமல் மறைமுகமாகப் பாராட்டுவதிலிருந்தே அவர் உண்மையாகவே தன் அம்மையின் கைப்பக்குவத்தை மகளிடம் கண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. அப்பாவிற்காகச் சமைத்தது கடமை, ஆனால் அதில் அன்பும் பாசமுமல்லவா கலந்திருக்கிறது. பின்னெப்படி ருசியில்லாமல் போகும்?

இரயில் பயணங்களில் பத்தியில் அவர் விவரித்திருந்த ஒவ்வொன்றையும் நான் மும்பை-நாகர்கோவில் பயணங்களின்போது நேரில் கண்டிருக்கிறேன். என்னவொன்று எண்பதுகளின் பிற்பகுதிகளில் தொலைதூரப் பயணங்களின்போது கூஜா கட்டுப்படியாகாது. ஐந்து லிட்டர் கேன்களை வாங்கி வைத்துக்கொண்டு, ரயில் நிற்கும் ஒவ்வொரு பெரிய நிலையங்களிலும் ஓடியோடி தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். மருந்து போல் அளவாகத்தான் குடிப்போம். மிளகாய்ப்பொடி தடவிய இட்லி, வாட்டிய வாழையிலை, தூக்குவாளிகளில் புளிச்சோறு, பொரித்த கூழ்வற்றல் போன்றவற்றை அப்படியே கண் முன் நிறுத்தி விடுகிறார் தங்கமக்கா. 

பலவீனமானவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பதுண்டு. அப்பலவீனத்திலிருந்தே தங்களுக்கான பலத்தைத் திரட்டிக் கொள்கிறார்கள். மெலிந்த கிளையை இறுகப்பற்றியிருக்கும் தேன்சிட்டைப்போல். தந்தையின் இடத்திலிருந்து தம்பியையும் குடும்பத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய அண்ணனைப்போல், சொல்லாத கிளிஜோசியத்துக்குக் காசு வாங்காமல் திருப்பிக்கொடுத்த ஜோசியரைப்போல், ஏழு நாட்கள் விடாமல் சைக்கிள் ஓட்டுபவரைப்போல். 

மொத்தத்தில் பார்க்கும்போது ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் வாழ்க்கைச்சித்திரங்களாக இருந்தாலும் தனித்தனியே சிறுகதைகளாக விரியக்கூடிய கூறுகள் கொண்டிருக்கின்றன. "ப்ரியங்கள் சுமந்த அத்தை" பத்தி மேலும் விரிந்து ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அவற்றின் சாராம்சங்களையும் பேசுகிறது. சிறு பெண்ணாக இருந்ததிலிருந்து இறுதிக்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவளது மனம் படிப்படியாக முதிர்ந்து பக்குவப்படுவது சித்திரிக்கப்பட்டுள்ளது. அக்கால மற்றும் இக்காலப் பெண்களிடையே இருக்கும் வித்தியாசத்தை பெண்களும் பூக்களும் என்ற கட்டுரையில் அவர் விவரிக்கையில் நாமும் 'ஆமா.. ஆமா..' என்கிறோம்.

தான் சந்தித்த, தனது பாதையில் கடந்த எல்லா மனிதர்களையும் ரத்தமும் சதையுமாக நம்முன் உலவ விட்டிருக்கிறார் நூலாசிரியர். கடந்து வந்த பாதையெங்கும் பதிந்த நினைவுத்தடங்களில் தளும்பி நிற்கும் ப்ரியம் பொசிந்து ஆங்கோர் கடலாய் ஆர்ப்பரிக்கிறது நூலெங்கும்.

 நூலாசிரியர்: திருமதி. தங்கம் வள்ளிநாயகம்

பதிப்பகம்: கோதை பதிப்பகம்

விலை: ரூ. 210

Tuesday 3 May 2022

கரையெல்லாம் செண்பகப்பூ - புத்தக மதிப்புரை


சுஜாதா..

வயது வித்தியாசமில்லாமல் அத்தனை வாசகர்களையும் சம்பாதித்து வைத்திருக்கும் முத்திரை பதித்த எழுத்தாளர். வர்ணனைகள் நிரம்பிய வரிகளைக்கொண்ட நாவல்கள், சிறுகதைகளிடையே இவர் ஜனரஞ்சகமாய் எழுதிய கதைகள் ஒரு புதிய மலர்ச்சியை உண்டாக்கின. தனது வித்தியாசமான கற்பனை மற்றும் நடையால் பெருவாரியான வாசகர்களைக் கவர்ந்திழுத்தவர். இவர் தொட்டு எழுதாத துறைகளே கிடையாது எனினும் அறிவியலை சுவாரஸ்யமான கதைகள் மூலம் வெகுஜனத்துக்குக் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு முக்கியமானது. சினிமாக்களில் கதை வசனமும் எழுதிய சுஜாதாவின் பல்வேறு நாவல்களில் ஒரு சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் "கரையெல்லாம் செண்பகப்பூ" என்ற நாவல். ஆனால், நாவல் அளவுக்கு திரைப்படம் அவ்வளவு சோபிக்கவில்லை.

கரையெல்லாம் செண்பகப்பூ சற்றே அமானுஷ்ய நிழல் கொண்ட த்ரில்லர் வகை நாவல். கிராமத்து ஜமீன் பங்களாவைக் கதைக்களமாகக்கொண்டது. வழக்கமாகக் கிராமங்களுக்கு டாக்டர்தான் வருவது வழக்கம், ஆனால், நாவலில் பட்டணத்து இளைஞனொருவன் நாட்டுப்பாடல் ஆராய்ச்சிக்காக வருகிறான், பங்களாவில் தங்குகிறான். அங்கே ரத்னாவதியால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் புதையல் , அதை எடுப்பதற்காக ஜமீன் வாரிசாக பொய் சொல்லி நுழையும் சினேகலதா, அவளது கூட்டாளியான பயாஸ்கோப், மற்றும் கிராமத்து ஜோடியான வள்ளி, மருதமுத்து, இவர்களைச்சுற்றி நிகழ்வதே கதை.

மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தைப் பிரிப்பது போன்று ஒவ்வொரு சம்பவமும் தன்னை வெளிக்காட்டிக்கொண்டு இறுதியாக பங்களாவில் இருக்கும் மர்மத்தை நோக்கி சுவாரஸ்யமாக நம்மை இட்டுச்செல்கிறது. ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ நமது நெஞ்சத்துடிப்பு கூடிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் சித்திரிக்கப்படும் அமானுஷ்யம் கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்போது, அப்படியெனில் அது யாராக இருக்கக்கூடுமென நாம் நகம் கடிக்க ஆரம்பித்து விடுகிரோம். இந்நாவல்  ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்ததாம். அக்கால கட்டத்தில் அடுத்த பகுதி வரும்வரை வாசகர்கள் எப்படித்தவித்திருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. நாவலில் அதிகமும் வர்ணனைகள், அலங்காரமான வாக்கியங்கள் என எதுவும் கிடையாது. ஆனால், அவரது வாசகர்களுக்கென வரிகளில் நிறையவே 'தீனி' போட்டிருக்கிறார்.

நா.வானமாமலை ஐயாவின் "தமிழர் நாட்டுப்பாடல்கள்" புத்தகத்திலிருந்து பெரும்பான்மையான நாட்டுப்புறப்பாடல்கள் மேம்பட்டி கிராம மக்களின் வாய்மொழியாகவும் பெரியாத்தாவின் வாய்மொழியாகவும் இந்நாவலில் இடம்பெற்று குளிர்தென்றலாய் வருடுகின்றன. ஊர்த்திருவிழாவில் "பழையனூர் நீலி" கதையின் பல்வேறு வடிவங்களில் ஒன்று வில்லிசையில் இசைக்கப்படும். அப்பாடல் வரிகளை வாசிக்கும்போது நம் உடம்பும் பதறுகிறது. நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களுக்குக் கட்டியம் கூறுவது போன்று அமைந்துள்ளது அப்பகுதி.

பொதுவாக, கிராமங்கள் என்றாலே அங்குள்ள மக்கள் ரொம்பவே வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுச்சித்திரம் ஒன்றுண்டு. அப்படியில்லை, அங்கிருப்பவர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே, கிராமமோ நகரமோ மனித உணர்வுகள் எல்லா இடங்களிலும் ஒன்றே என்ற உண்மையைப் பளிச்செனச்சொல்லியிருக்கிறார். க்ரஷ், பொஸஸிவ்னெஸ், சபலம், வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளல், பணத்தாசை என மனித மனதின் எல்லா அழுக்குகளும் இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளன. "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி.நாகராஜனின் கூற்று நாவலில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், இறுதியில் வெள்ளியின் தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நறுக்கென்ற வரிகளில் மின்னற்தெறித்தாற்போன்று எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அத்தனை வாசகர்களையும் இன்றும் கவர்ந்திழுக்கும் என்றும் பசுமையான சித்திரம் என்றால் மிகையல்ல.

ஆசிரியர் : சுஜாதா

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்.


கொலுசு போட்ட பூனை


ஒரு காலத்தில் நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பஞ்சை கோடவுனில் சேமித்து வைப்பது வழக்கம். அடைசலாக இருந்த கோடவுனுக்கு வந்த ஒரு எலி, "ஆஹா... ரொம்ப வசதியான இடமா இருக்கே, இங்கேயே செட்டிலாகி விடலாம்" என்று அங்கேயே தங்கி குட்டி போட்டுப் பல்கிப்பெருகலாயிற்று.

எலிகளின் பற்கள் மிக வேகமாக வளருமென்பதும், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கூராக வைத்திருக்கவுமென அவை பொருட்களைக் கரம்பும் என்கிறது அறிவியல். ஒரு எலி என்றாலும் பரவாயில்லை, எலிக்கூட்டமே அல்லவா கோடவுனில் கிடக்கிறது. அவை துவம்சம் செய்ய ஆரம்பித்தன. பஞ்சு மூட்டைகளைக் கடித்து ஓட்டையாக்குவதும், பஞ்சைப் பறத்துவதும், கோடவுனிலிருக்கும் கணக்குப்புத்தகங்களைப் பஞ்சு பஞ்சாகக் கிழிப்பதுமாக அவற்றின் கொட்டம் அதிகரித்துக்கொண்டே போயிற்று.

எலித்தொல்லையைச் சமாளிக்கவென நான்கு பேரும் ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தார்கள். அதுவும், நாளொரு எலியும் பொழுதொரு கிண்ணம் பாலுமாக வேட்டையாட ஆரம்பித்தது. சில நாட்களிலேயே எலித்தொல்லை கட்டுக்குள் வந்துவிடவே நண்பர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். பூனையின் மேல் சொல்லவொண்ணா பாசமுண்டாயிற்று. நான்கு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப்பொழிந்தார்கள். ஆளுக்கொரு பொறுப்பாகப் பிரித்துக்கொண்டு அதற்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்தார்கள். ஒரு படி மேலேயே போய் பட்டுச்சொக்காய், கால்களுக்குக் கொலுசு, கழுத்துக்கு வைர அட்டிகை என அணிவித்து அழகு பார்த்தனர்.

இப்போதெல்லாம் எலிகள் பூனையைக் கண்டு நடுங்குவதில்லை. கொலுசு சத்தம் கேட்டதுமே, அவற்றின் மனதில் தந்தி அடித்து, அவையெல்லாம் ஓடிப்போய் பதுங்கி விடும். இப்படியிருக்க, கோடவுனில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்த இரவுக்காவலனுக்கோ ஒரு புதுப்பிரச்சினை தோன்றியிருந்தது. நடுஇரவில் வெள்ளையாய் ஒரு உருவம் ஜல் ஜல் என கொலுசோசை ஒலிக்க அங்குமிங்கும் அலைவதை அரசல்புரசலாய்க்கண்டு பயத்தில் நடுங்கினான். இரண்டு கைகளிலும் தாயத்துகள், நெற்றி நிறைய கோவில் பிரசாதங்கள் என பேயிடமிருந்து காத்துக்கொள்ள எல்லா விதமான ஆயுதங்களோடுதான் அவன் பணிக்கு வருவதே. அன்றும் அப்படியே நாற்காலியில் ஆழ்ந்த நித்திரையிலாழ்ந்து அவன் பணி செய்யுங்காலை, ஒரு உருவம் அவன் மேல் பாய்ந்தது. "யம்மே.." என வீறிட்டு எழுந்த வேகத்தில் அவன் கையிலிருந்த லத்தி அவ்வுருவத்தின் மேல் வேகமாக மோதவும் "ம்யாவ்" என்ற அலறலோடு தூரப்போய் விழுந்தது, நொண்டிக்கொண்டே நகர முயன்றது.

"அயயோ.. இது எஜமானர்கள் வளர்க்கற பூனையாச்சே. இதுவா இத்தனை நாள் என்னைப் பயமுறுத்துச்சு, நடக்க வேற சிரமப்படுதே" என்றபடி பூனையைக் கையிலெடுத்து கால்களைப் பரிசோதித்தான். வலது முன்னங்காலைத் தொடும்போது வலியால் சீறியபடி அவன் கையைத் தட்டிவிட முயன்றது. அவனுக்குத்தெரிந்த கை வைத்தியமாக அப்போதைக்கு கைக்குட்டையைக் கிழித்து காலில் கட்டுப்போட்டு விட்டான். மறுநாள் வந்த நண்பர்கள் நடந்ததைக் கேள்விப்பட்டு கோபமும் வருத்தமும் ஏற்பட்டாலும், பூனையின் அடிபட்ட காலுக்குச் சொந்தக்காரர் அதன் காலில் காயத்திருமேனி எண்ணெய்யைத் தடவி நீவி விட்டு கட்டுப்போட்டார். எண்ணெய் நன்கு ஊறட்டுமென கட்டின் மேலும் கொஞ்சம் ஊற்றி விட்டார்.

அந்தப்படியே இரண்டொரு நாள் போனது, பூனையை பெட்ரெஸ்டில் வைத்துப் பார்த்துக்கொண்டனர். படுத்த வாக்கிலேயே பக்கவாட்டில் நாக்கை மட்டும் நீட்டி சாப்பிடும் அளவுக்கு அது சோம்பேறியாய்ப் போய்விட்டது. சின்னாளிலேயே பழகப்பழகப் பாலும் புளித்து கசந்து படுக்கையும் நொந்தது அதற்கு. எலியின் சுவையை நாக்கு தேடியது. கனவில் கூட சுண்டெலிகளின் கொட்டம்தான். எலி ரோஸ்ட், சுண்டெலி 65, தந்தூரி பெருச்சாளி என நாக்கில் ஜொள் வழிய அது கனவிலாழ்ந்திருந்த காலை, தொட்டு விடும் தூரத்திலில் ஒரு எலி வந்து, "பிடி பார்க்கலாம்" என வம்புக்கிழுத்தது. கோபம் கொண்ட பூனை பாயவும், பூனையின் கேண்டில் லைட் டின்னருக்கென அங்கே அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சரிந்து விழவும் சரியாக இருந்தது. 

பக்கத்திலிருந்தாலே கப்பெனப் பற்றிக்கொள்ளும் பஞ்சும் நெருப்பும், கை கோர்த்துக்கொள்ளுமளவுக்கு நெருங்கினால் கேட்கவா வேண்டும். ஒரு நொடியில் கோடவுனே எரிந்து சாம்பலானது. செய்தியறிந்து ஓடி வந்த நண்பர்கள் குய்யோமுறையோ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும், பண்டல் பண்டலாய் எரிந்த பஞ்சு திரும்ப வரவா செய்யும்?. சிசிடிவி மூலம் நடந்ததையெல்லாம் அறிந்து கொண்டவர்கள், கட்டுப்போட்ட காலுக்குச் சொந்தக்காரரின் மேல் வழக்குப்போட்டு, மிச்சம் மீதி இருந்த சொத்துகளும் பஞ்சாய்ப்பறந்து கொண்டிருக்கின்றன எனக்கேள்வி.

கெட்டும் பட்டணம் போ என்பார்கள், பட்டணம் போய் கெட்டுப்போன பூனையோ, "வனத்தில் மேய்ஞ்சாலும் இனத்தில் வந்து அடையணும்" என்ற தாயின் சொல்லைத்தட்டாத தனயனாக சொந்த ஊருக்கே போய் விட்டது. அங்கே, ஒரு நாய்க்குட்டிக்குப் பயந்து மரத்தில் தாவி ஏறும்போது காலில் ஏற்பட்டிருந்த சுளுக்கு சரியாகி விட்டதாம். கோடவுனில் மிச்சம் மீதி இருந்த எலிகளெல்லாம் பக்கத்துக் கிராமத்து வயல்வெளிகளில் விளைந்திருக்கும் ஆர்கானிக் விளைபொருட்களை நாடியிருப்பதாகத் தகவல்.

இதனால் அறியப்படும் நீதி என்னவெனில்: எலித்தொல்லை அதிகமானால், எலிப்பொறி வையுங்கள், இல்லாவிடில் pest controlஐ நாடுங்கள்.

Sunday 1 May 2022

செம்பருத்தி நூல் அறிமுக உரை - கல்கியில் வெளியானது.

எந்தவொரு செயலையுமே ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு.சுமாராகவோ நன்றாகவோ.. எப்படிச்செய்தாலும் சரி,.. அதற்கு ஒரு சின்னப்புன்னகையாகவோ மெல்லிய தலையாட்டலாகவோ கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அதீதமானது. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற உற்சாகம் நிச்சயமாக ஊற்றெடுக்கும். அதுவே மேலும் முன்னேறவும் தூண்டும். 

என்னதான் எதையும் எதிர்பார்க்காமல்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், "இன்னிக்கு சமையல் நல்லாருக்கு.." என்று ரங்க்ஸ்கள் வாய்தவறிச் சொல்லி விட்டால் நாம் மகிழ்ந்துதானே போகிறோம். தினமும் சொல்லத்தான் நம் புத்திர சிகாமணிகள் இருக்கிறார்களே 🙂 இந்த ஒரு வார்த்தைக்காகவே அடுத்த வேளைச் சமையலை இன்னும் ருசியாகச் செய்து போடுகிறோமா இல்லையா? :-))

வீட்டில் கிடைக்கும் சின்ன அங்கீகாரமே நம்மை இவ்வளவு உற்சாகப் படுத்தும்போது, ஊரளவில் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தாதா என்ன? அதுவும் பெரிய பத்திரிகைகள் நம்மையும் நம் எழுத்துகளையும் கவனிக்கிறார்கள், வாசிக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிய வரும் அக்கணம் பொற்கணம்.

வாசிப்பு ஒரு மனிதனைப் பண்படுத்துகிறது, பண்பட்ட வாசிப்பு இன்னும் அவனை மேம்படுத்துகிறது. புத்தகங்கள் மீதான காதல் அதைத் தேடித்தேடி வாசிக்க வைக்கிறது. வாசித்ததோடு நின்று விடாமல் அவ்வினிய அனுபவத்தை நம் அணுக்கர்களோடு பகிரும் விழைவும் உண்டாகிறது. அவ்வினிய பயணத்தின் பொருட்டு ஃபேஸ்புக்கில் உருவானதே "வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு. எத்தனையெத்தனை நூற்களைப்பற்றி அறிந்து கொள்ள இயலுகிறது!!

எழுத்தாளர்கள், ஆன்றோர் நிரம்பிய இக்குழுவில் இணைந்து நான் பகிர்ந்த நூல் அறிமுகங்களில் தி. ஜானகிராமன் எழுதிய "செம்பருத்தி"யின் அறிமுகம் பெரும் வரவேற்பைப்பெற்றதுடன், கல்கி ஆன்லைன் இதழிலும் வெளியாகியிருக்கிறது என்ற இனிய செய்தியை குழுவின் வழிநடத்துனர்களில் ஒருவரான திரு. மந்திரமூர்த்தி அவர்கள் மூலம் இன்று அறிந்தேன். குழுவினர் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பிரசுரித்த கல்கி இதழின் எடிட்டர் திரு. ரமணன் அவர்களுக்கு இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும் "நூல் அறிமுகம்" பகுதியின் மூலம் நீங்கள் செய்து வரும் பணி அளப்பரியது.

கல்கியில் வெளியாகியிருக்கும் நூல் அறிமுகக்கட்டுரையை வாசிக்க இணைக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள்.


எனது வலைப்பூவில் எழுதிய அறிமுக உரையை வாசிக்க 

Sunday 24 April 2022

படமும் பாடலும் (5)

பறக்குந் திறனிருந்தும் பற்றுவிடாப் பட்சி
சிறகை மறந்து சடசடக்கும்- பற்றை
மறந்து விடுவீரேல் மாந்தர் அறிவீர்
சிறக்கும் பிறவி இனிது.

முறுகல் அடையும் மொளவாடி நெய்யும்
சுடச்சுட காப்பியொடு உண் (இருவிகற்ப குறள் வெண்பா)

சுவையுங் குறையாத சூடும் நுரையும்
அவையத்து காப்பிக் கழகு. (ஒரு விகற்ப குறள் வெண்பா)

இரட்டுற மொழிதல் - பஜ்ஜியும் முகிலும்
உருவு மருவும் உளங்கொளும் வண்ணம்
வருவழி யெண்ணி விழிபூத் திருக்கும்
மிருதாய் மிதக்கும் மெதுவாய்க் கருக்கும்
தருமுகில் பஜ்ஜிக்கு நேர். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

உருவம் மாற்றமடையும், மனதைக்கொள்ளை கொள்ளும் நிறம் கொண்டது, அது வரும் வழியை நோக்கி விழி பூக்க காத்திருப்போம், எண்ணெய்யில்  அல்லது வானத்தில் மிருதுவாக மிதக்கும், மெதுவாகக் கருநிறம் கொள்ளும். (கவனிக்காமல் விட்ட பஜ்ஜி கருகி விடும்)

ஆகவே மழையைத் தருகின்ற முகிலும் பஜ்ஜியும் ஒன்று.

அத்தனும் அம்மையும்போல் ஆதுரம் பாலித்து
புத்தியும் போதிக்கும் நற்குருவாம் நித்தமும்
பத்தம் பயனுரைக்கும் நண்ணுநர் நேரென
புத்தகம் போலிங்கு ஏது. (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா) உலக புத்தக தினத்திற்காக எழுதப்பட்டது.

Monday 18 April 2022

அனல்


கோடை ஆரம்பித்து விட்டது. பொன்னை உருக்கி ஊற்றியது போல் வெயில் வழிந்து கொண்டிருக்கிறது, நெருப்பாய்ப்பொழியும் சூரியன், அனலை வேறு அனுப்பி இன்னொரு முனையில் தாக்குதல் நடத்துகிறார்.

நாகர்கோவிலில் இருந்தவரை வெய்யில் அத்தனை கடுமையானதாக இல்லை, அங்குள்ளது பொத்தினாற்போல் அடிக்கும் அம்மையைப்போன்ற ஊமைவெயில். கையை வெயிலில் நீட்டினால் சூடு உறைக்காதே தவிர தோலைக்கருக்கி விடும். குளித்த ஈரம் போல் வியர்வை படருமளவு அனலும் வாட்டும். ஆனாலும், சுற்றிச்சூழ இருக்கும் வயல் வெளி, தோப்புத்துரவு, குளங்குட்டைகளைத்தழுவி வரும் நாஞ்சில் காற்று நம்மையும் தழுவி வியர்வையை ஒற்றியெடுத்து விடும்.

சிறு வயதில், அப்பா இருந்த வரை, வேனல் காலங்களில் புத்தேரி குளம், நுள்ளி குளம், பழையாற்றின் வடக்காறு என நீர் நிலைகளுக்கு அழைத்துச்செல்வார். நுங்கும் இளநீரும் குலைகுலையாக வீட்டில் கிடக்கும். போதாதென்று, வீட்டு முற்றத்தில் சிமெண்டில் குளியல் தொட்டியும் கட்டி விட்டிருந்தார். நாங்கள் கிடந்து ஊறுவதற்கென்று. கோடை மழை வேறு அவ்வப்போது ஆசீர்வதித்துச்செல்வதால், அதிகமும் அனலின் தாக்கமில்லாமல்தான் வளர்ந்தோம்.

அப்போதெல்லாம், கோபாலசமுத்திரத்துப்பெரியம்மை வீட்டுக்குப் போவதென்றால், கொல்லக்கொண்டு போவது போல் இருக்கும். வெக்கையும் அனலும் வாட்டி வதைத்து விடும். 'செங்கச்சூளைல இருக்கது போலல்லா இருக்குது' என்பாள் அம்மை. சோதனையாக கோடை விடுமுறையின் போதுதான் அம்மன் கோவிலில் கொடை என பெரியப்பா லெட்டர் போடுவார். போயே ஆக வேண்டும். ஓடு போட்ட மச்சில்தான் இருக்க முடியாமல் காந்தும் என்றால், கீழ்வீட்டிலும் முற்றத்து வெயில் முகத்தில் அறையும். பகல் முழுதும் குடித்த வெப்பத்தை, இரவில் உதட்டோரத்துப்பாலாய் வழியவிடும் மச்சில் தூங்க முடியாமல் தட்டட்டியில் வந்து படுத்துக்கிடப்போம். அதற்காக, சாயந்திரமே தண்ணீரெல்லாம் தெளித்து வைத்திருப்போம். 'எல.. அது சூட்டல்லா இன்னும் கெளப்பி விடும், நாளக்கி வயத்த வலிக்கின்னு வரப்போறீங்க' என்பாள் ஆச்சி.

ஆச்சிகளின் வீடு இருந்த தெற்குவள்ளியூருக்குப் போனால் வீடு தங்க மாட்டோம். சக வயதுப்பிள்ளைகளோடும், சித்தப்பா மக்களோடும் சேர்ந்து ஊர்வெயிலை எல்லாம் முதுகிலும், முகத்திலும் வாங்கிக்கொண்டு ஊர் சுற்றும் ஜோரில் வெயிலாவது, அனலாவது, இன்னொன்றாவது. சின்ன கிராமத்தைச்சுற்றிச்சூழ வயல்வெளிகள் இருந்ததால் அதிகம் அனலடிக்காது.

மும்பை வெயில் வேறு மாதிரி. இங்குள்ள காற்றுக்கும் வேறு மாதிரி வாசனையுண்டு. திருமணத்தின்போது மை ரங்க்ஸ் மும்பையின் கிங்க்ஸ் சர்க்கிளில் ஆபீஸின் சகவாசிகளோடு ரூமை பகிர்ந்து வசித்து வந்தார். திருமணமானதும், புற நகர்ப்பகுதியான கல்யாணுக்குக் குடி புகுந்தோம். அங்கும் மத்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால், அப்பகுதிக்கு அப்பொழுது சி.ஜி.எஸ் காலனி என்றே செல்லப்பெயர் இருந்தது. 

ஒரு பெரிய சதுரத்தை நடுவில் சுவரெழுப்பி இரண்டு செவ்வகங்களாகப் பிரித்து அந்த செவ்வகங்களையும் நடுவில் அரைச்சுவர் எழுப்பி மேலும் இரண்டிரண்டு செவ்வகங்களைப்பிரித்தாற்போன்ற வீடு. இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கிச்சனிலேயே ஒரு பகுதியில் டாய்லெட், பாத்ரூம் எனப்பிரிக்கப்பட்ட பக்கா மும்பை ஸ்டைல் வீடு. இரண்டு பேருக்கு மிகத்தாராளமான பெரிய வீடு. கூரை மட்டும் ஆஸ்பெஸ்டாஸ். கோடையில் பொரித்து எடுத்து விடும். 

வெயிலோ, மழையோ, பனியோ மும்பை வாசிகள் கவலையே பட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள். கோடை வரும்போது, மை ரங்க்ஸ் வீடு முழுவதும் பக்கெட் பக்கெட்டாகத் தண்ணீரை ஊற்றி வைத்து விடுவார். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே சாப்பாடு எல்லாம். நீளமான பைப் சுருளை வாங்கி வந்து வைத்துக்கொண்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல் மழை பொழிவது போல் தண்ணீரைப்பீய்ச்சியடிக்கும் திருக்கூத்தும் நடக்கும். இரண்டு நாட்கள், 'நசநசன்னு இருக்கே' என இருந்தது. அப்புறம் அது பழகிப்போயிற்று. எவ்வளவு தண்ணீர் ஊற்றி வைத்தாலும் சாயங்காலத்துக்குள் அது காய்ந்து விடும். மிச்சமிருக்கும் ஈரத்தை படுக்கும்போது துடைத்து விட்டால், ஜில்லென்ற தரையில் கட்டையைச்சாய்த்த அடுத்த நிமிடம் கண்ணைச்சொக்கும்.

ஆனாலும், சின்னச்சின்ன அசௌகரியங்களும் இருந்ததான், இருந்த சொற்பப்பொருட்களைக் கட்டில் மேல் ஏற்றி வைத்து விட்டு, குரங்கு குத்த வைத்தது போல் நாற்காலிகளிலேயே உட்கார்ந்து கிடக்க வேண்டும். ஆசுவாசமாக, காலை நீட்டி உட்கார்ந்து, அரிவாள் மணை, சுளவு சகிதம் காய் நறுக்க முடியாமல், கத்தியால் நறுக்கப் பழகிக்கொண்டாயிற்று. போதாதென, சைக்கிளில் ஒட்டிக்கொண்டு வரும் மண், அதன் தடத்தை வீட்டு ஹாலில் பதித்து வைத்திருக்கும். காற்று அள்ளிக்கொண்டு போடும் தூசி தண்ணீரில் கலந்து கிடக்கும். முகப்பவுடர் அளவுக்கே மென்மையாக இருக்கும் மும்பையின் தூசி பொல்லாதது, பகல் முழுதும் நடந்த சுவடுகளை சாயங்கால நேரத்துத் தரை காட்டித்தரும், கழுவித்தீராது. 'தினமும்தான் தரை துடைக்கப்படுகிறதே, தினமும் தண்ணீரை ஊற்றியே ஆக வேண்டுமா? ரெண்டு நாளுக்கொரு முறை தொளிச்சா ஆகாதா?.. போதாதா?'  என்றால், 'ஊஹூம்.. மூச்.

பிள்ளைகளுக்கும் இது பிடித்துப்போயிற்று. ஒரு படி மேலே போய் ஃப்ரிஜ்ஜிலிருந்து ஐஸ்வாட்டரெல்லாம் எடுத்து வந்து தெளித்து வைக்க ஆரம்பித்தோம். ஊற்றி வைப்பது பாடில்லை, 'இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க' நடக்க வேண்டும், இல்லையெனில் காலை வாரி விடும். 

ஒரு சமயம், திருச்சியிலிருந்த என் பெரிய மச்சினர் வீட்டுக்குப்போயிருந்தோம். நல்ல கோடைக்காலம்.. தஞ்சை, ஸ்ரீரங்கம், முக்கூடல் என எல்லா இடங்களுக்கும் போய் விட்டு, சாயந்திரம் வீடு வந்தோம். மும்பையின் கோடைக்காலத்துக் கதைகளைப்பற்றி பேசிச்சிரித்து பொழுது போயிற்று. வீட்டில் தண்ணீரை தெளித்து வைத்து இவர் பண்ணும் திருக்கூத்தைப்பற்றி அவர் அண்ணனிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, 'இருங்க வரேன்' என்றபடி எழுந்து போனார் அவர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு பக்கெட் தண்ணீரைக்கொண்டு வந்து, குவளையால் கோரிக்கோரி தரையில் தெளிக்கத்தொடங்கினார் அந்த முன்னாள் மும்பை வாசி.

சரிதான்..

Sunday 17 April 2022

திருநெல்வேலி - நீர் நிலம் மனிதர்கள் (நாறும்பூ நாதன்)


ஒரு பகுதியைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், அப்பகுதியின் நீர், நில வளம், அமைப்பு, மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, அப்பகுதியின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும், பதிவு செய்யப்பட வேண்டும், பகிரப்படவும் வேண்டும். அப்படி நெல்லைச்சீமையைப்பற்றி நாம் அறிந்து கொள்ள ஏதுவான ஒரு நூல்தான் எழுத்தாளர் இரா. நாறும்பூ நாதன் அண்ணாச்சி எழுதிய திருநெல்வேலி நீர்- நிலம் - மனிதர்கள். அண்ணாச்சியே இந்நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல திருநெல்வேலியின் ஒவ்வொரு அடிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு அங்குலத்துக்குமே வரலாறு உண்டு எனத்தோன்றுகிறது இந்நூலை வாசித்து முடிக்கையில். ஏயப்பா!!.. எத்தனைத்தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது இச்சுரங்கம் என மலைக்கிறோம். மாணாக்கருக்குப் பாடப்புத்தகமாகவே வைக்கலாம். 

வரலாறு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நெல்லை மண்ணிலிருக்கும் "ஆதிச்ச நல்லூர்". சிந்து சமவெளி நாகரிக ஆய்வுக்கும் முற்பட்டது இங்கு நடந்த ஆய்வு. இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வும் ஆதிச்ச நல்லூரில் நடந்ததே.  எகிப்திய பிரமிடுகளை விட இங்குள்ள முதுமக்கள் தாழிகள் பழமையானவை என அறியும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. அவ்வாறே கொற்கையில் நடந்த ஆய்வும் தமிழ்நாட்டின் பல பழம்பெருமைகளை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. பழந்தமிழகத்தில் கரன்சி அச்சடிக்கப்பட்ட முதல் இடமாக கொற்கை அமைந்துள்ளது. இவ்விரண்டு இடங்களிலும் பிஷப் கால்டுவெல் ஆரம்பித்து வைத்த அகழ்வாராய்ச்சியைப் பின்னர் பிற ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருட்களைப்பற்றியும் அவை தற்போது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப்பற்றியும் நூலாசிரியர் பல்வேறு தகவல்களைக் கொடுத்துள்ளார்.

நெல்லைச்சீமையில் அக்காலத்தில் மிஷனரிகள் வந்ததையும் அவர்கள் இங்குள்ள மக்களின், முக்கியமாக தாழ்த்தப்பட்ட, உடலில், மனதில் குறைபாடுள்ள மக்களின் அறிவுக்கண்களைத்திறந்து வைத்ததையும், ஏராளமான கல்வி நிலையங்களைத் திறந்து வைத்ததையும் வாசிக்கும்போது, தேவாலயங்களுடன் கல்வி நிலையங்களும் நிரம்பிய பாளையங்கோட்டையை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விடுகிறது. கூடவே மிஷனரிகள் அவர்கள் இந்தியாவுக்கு வந்த முக்கிய வேலையான மதம் பரப்புதலையும் செவ்வனே செய்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. ஆயினும் சாராள் டக்கர், ரெயினீஸ் அடிகளார், ஆனி ஜென் ஆக்ஸ்வித், ஃப்ளாரென்ஸ் சுவைன்ஸன், எமி கார்மைக்கேல் போன்றவர்கள் தங்களது சமயப்பணியையும் தாண்டி, கல்விப்பணிக்காக மக்கள் மனதில் ஏன் நீங்காத இடம் பெற்றனர் என்பது வரலாற்றுச்செய்தி. பாளையங்கோட்டையிலிருக்கும் பாப்பாத்தியம்மாள் கிணறுகளை யார் வெட்டினார் என்பதையும் அதன் தற்போதைய நிலை என்ன என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார். கோகிலா என்ற தஞ்சை மராட்டியப் பிராமணப்பெண், க்ளாரிந்தாவாக மாறிய வரலாறு அதன் பின்னிருக்கிறது. கழுகுமலையிலுள்ள வெட்டியான் கோவிலை, "தமிழகத்தின் எல்லோரா" என ஏன் அழைக்கிறார்கள் என்பதற்கான விடையை நூலாசிரியர் மிகவும் அழகுற விளக்கியுள்ளார். கழுகுமலை கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் ஆசிரியரின் சொந்த ஊர்ப்பாசம் கொப்பளிப்பதை நன்றாகவே உணர முடிகிறது. 

நெல்லை என்றாலே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் "சுலோசன முதலியார் பாலம்"தான் நினைவுக்கு வரும். ஊர் கூடித் தேரிழுப்பார்கள் கண்டிருக்கிறோம். இங்கே தன் மக்கள் வரிச்சுமையால் அவதிப்படக்கூடாதென்று அத்தனை நிதிச்சுமையையும் தானே சுமந்து தனது சொந்தச்செலவில் ஒரு மனிதன் கட்டிய பாலம்தான் இன்றும் அவர் பெயரைச்சொன்னபடி அங்கே நின்று கொண்டிருக்கிறது. அதன் அருகிலிருக்கும் மேலப்பாளையத்தின் உண்மையான பெயர் என்னவென்றும் அங்கு தற்போது வசித்து வரும் முஸ்லிம் மக்கள் வந்த கதையும் சொன்ன விதம் வெகு சிறப்பு.  காருகுறிச்சி அருணாசலம், உமறுப்புலவர், தமிழ் அச்சுக்கலையின் தந்தையான ஆண்ட்ரிக் அடிகளார், வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்த வீரமாமுனிவர், நாட்டார் வழக்காற்றியலின் தந்தையான பேரா.நா.வானமாமலை, போன்றோரின் பணிகளைப்பற்றிய கட்டுரைகள் ஏராளமான அரிய தகவல்களைக்கொண்டுள்ளன. அதிலும் பண்பாட்டு ஆய்வாளர்கள் சாத்தாங்குளம் ராகவன் ஐயா,  தொ.பரமசிவம் ஐயாவைப்பற்றிய கட்டுரைகள் தவற விடக்கூடாதவை. இந்த ஒவ்வொரு கட்டுரைக்குப்பின்னும் தகவல்களைச் சேகரித்த ஆசிரியரின் உழைப்பு தென்படுகிறது.

இலக்கியமும் வாழ்வும் பின்னிப்பிணைந்தவை. புத்தகத்தில் இலக்கியத்துக்கு நெல்லை மண் அளித்த பங்கு விரிவாகச்சொல்லப்பட்டுள்ளது. நெல்லை மண்ணின் பொருநை இலக்கிய வட்டம், மாநில தமிழ்ச்சங்கம் பற்றிய கட்டுரைகளின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆரெம்கேவியின் பட்டு மட்டுமல்ல அதன் முதலாளியின் வாசிப்பு ரசனையும் அழகே. வாசிப்பே எழுத்துக்கு அடிநாதம் எனச்சொல்வார்கள். வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதாலேயே கோவில்பட்டியில் நிறைய எழுத்தாளர்கள் இருந்தார்களாம். கரிசல் மண்ணின் முன்னத்தி ஏரான கி. ராஜ நாராயணன் உட்பட கோவில்பட்டியின் எழுத்தாளர்களைப்பற்றி அறிய முடிகிறது. நாகர்கோவிலில் எழுத்தாளர்கள் அதிகம் என வேடிக்கையாகச்சொல்வதுண்டு. கோவில்பட்டியோ அதையும் மிஞ்சி விட்டது.

நெல்லை என்றால் எட்டையபுரத்துப் பாரதி இல்லாமல் வரலாறு நிறைவடையாது. அவருக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு ஏற்பட்ட கதையும், அவர்தம் தந்தையார் சின்னச்சாமி ஐயர்வாளின் ஸ்பின்னிங் மில் தற்போது இருக்கும் பரிதாப இருப்பும், நெல்லையின் புகழ்பெற்ற இந்துக்கல்லூரியின் வரலாறும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

நூலில் நெல்லையின் பல்வேறு பெருமைகளான பறவைகள் சரணாலயங்கள், பத்தமடைப்பாய், கோவில்களில் இடம்பெற்றுள்ள மூலிகை ஓவியங்கள் போன்றவற்றைப்பற்றி மிகவும் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது, பிரிட்டன் அரசு சேவைக்கான விருதைப்பெறும் கோகிலா ராமலிங்கம் உட்பட. மரியா காண்டீன், தமிழகத்தில் பேராசிரியர்களுக்கென்று ஓர் அமைப்பு ஏற்படக் காரணமாக அமைந்த லூர்து நாதன் சிலை, இன்றும் மக்களிடம் நற்பெயர் பெற்றிருக்கும் மனகாவலம் ஆஸ்பத்திரி போன்ற அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 

நெல்லை என்றாலே அல்வாவுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது குற்றாலம். சீசனின்போது எப்படிக் குளிக்கவேண்டுமென்று ரசிகமணி அவர்களின் விளக்கமிருக்கிறதே.. அடேயப்பா. கி.ரா. அவர்களின் படைப்புகளில் பறவைகள், தாவரங்கள், விலங்குகள் என்ற கட்டுரை இன்னும் சற்று விரிவாக எழுதப்பட்டால் தனி நூலாகவே அமையும். அவ்வளவு தகவல்களைக்கொடுத்திருக்கிறார் ஐயா.

எல்லா ஊருக்கும் ஏதாவதொரு பெருமை இருக்கத்தான் செய்யும். ஆனால் 'எந்தூரா இருந்தாலும் நம்மூரு மாதிரி வருமா?' என்றுதான் நம் மனதில் தோன்றும். நெல்லைச்சீமையைப்பொறுத்தவரை ஊர்ப்பாசமும் ஊர்ப்பெருமையும் சற்று அதிகம் கொண்ட வெள்ளந்தி மக்கள் நிரம்பிய ஊர் இது. நதிக்கரையில்தான் நாகரிகம் செழித்து வளரும் என்பார்கள். ஜீவநதியாம் தாமிரபரணி நதிக்கரை அதை நிரூபித்திருக்கிறது. நிலமென்னும் நல்லாள் மடியில் தாங்கி வளர்த்த மனிதர்களையும், அவர்கள் பேணிக்காத்த பண்பாட்டையும் அவர்தம் வாழ்வையும் இந்நிலத்தையும் அதன் பழம்பெருமைகளில் ஒரு துளியையும் இந்த நூலின் மூலம் நமக்குக் காட்டுகிறார் நூலாசிரியர். அவரே சொல்லியிருப்பது போல் இது சமுத்திரத்தின் ஒரு துளிதான், ஆனாலும் அதுவே ஒரு சமுத்திரமாய் பரந்திருக்கிறது எனில் நெல்லையின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள ஒரு வாழ்நாள் போதாதென உணர வைப்பதே இந்நூலின் வெற்றி. 

நெல்லையிலிருந்து வெளியாகும்  'நெல்லை டைம்ஸ்" இதழில் தொடராக வெளியான 41 கட்டுரைகள் நூல் வடிவம் கொண்டு, சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. 

விலை : 270
ஆசிரியர்: இரா. நாறும்பூ நாதன்.

Monday 28 March 2022

சாரல் துளிகள்


இல்லாத ஈயைத் துரத்திக் கடிக்க முயலும் நாயைப்போல், இல்லாத ப்ரச்னைகளுடன் போராடிச் சலிக்கின்றனர் சில மனிதர்கள்.

இலையென்னவோ மெல்லென வீழ்ந்து விடுகிறது. சுவடின்றி தன்னுள் இணைத்துக்கொள்ள இயற்கைதான் படாத பாடு படுகிறது.

ஜன்னலில் ஒட்டியிருக்கும் வெயிலை தட்டி விட்டுக்கொண்டேயிருக்கிறது இலையின் நிழல். அகன்று விட்டதுபோல் போக்குக் காட்டி மறுபடியும் வந்தமரும் வெயில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் படபடக்கிறது.

சவலைப்பிள்ளையென
கதறிக்கதறி ஓய்கிறது
ஆட்கள்
வெளியே போயிருக்கும் வீட்டிலிருக்கும்
தொலைபேசி.

'கிச்சடி' என்பது வெறும்சொல்
'அர்சிம்பருப்பு' என்பது ஓர் உணர்ச்சிக்குவியல்
"பொங்கல்" என்பது பேரோசையுடன் அறையும் ஓர் அலை.

ஒரு சொல் தீப்பெருக்க ஒரு சொல் தீயடக்க, மனம் கொதித்துத் தளும்பும் நுரை விளிம்பில் தள்ளாடுகின்றன ஒன்றிரண்டு கசந்த சொற்கள். வழியுமோ அன்றி அடங்குமோ!!!! தீ பெருகுமோ அன்றி குளிருமோ!!

பட்டுப்பட்டாய் அவித்த இட்லியைப் பிட்டுப்பிட்டுப் போட்டுக்கொண்டவனுக்கு, லொட்டு லொட்டென்று பாத்திரத்தில் தட்டி நினைவூட்டுகிறாள், 'பாத்திரம் காலி சொக்கா.. பாரம் சுமக்கப்போ'. 

கால் நோக கை கடுக்க ஏந்தி நின்ற விளக்கிலிருந்து ஒளியைப் பறித்து வானில் எறிகிறான் எவனோ ஒருவன். கல்லாய்ச் சமைந்து காலகாலமாய் நிற்கும் காரிகையின் கை விளக்கில் திருட்டுத்தனமாய் அமைந்தெழுந்து செல்கிறான் சூரியன் மின்மினிப்பூச்சியாக.

எல்லாப்பக்கத்திலும் ஒரே கடல்தான் என்கிறபோது, எந்தத் துறையில் முங்கினால்தான் என்ன?

முஹூர்த்தம் முடிந்து பெண்ணை புகுந்த வீடு அனுப்பிய வீடும், கொடை கழிந்த கோவிலும் ஒரே முகத்தை அணிந்து கொண்டிருக்கின்றன.

Monday 14 February 2022

அன்புடை நெஞ்சம்..

வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டம் பிப்ரவரி-14 தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒவ்வொரு நாளும், 

ரோஜா தினம் 

காதலை வெளிப்படுத்தும் தினம்

சாக்லெட் தினம்
டெடி தினம்



உறுதியளிக்கும் தினம்



Hug day

Kiss day

என ஒவ்வொரு தினமாகக் கொண்டாடப்பட்டு, 14-ம் தினத்தன்று இரு மனங்கள் இணைந்து ஒரு மனமாகும் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

வேலண்டைன் எனும் துறவியின் உண்மையான தியாகத்தை மதிக்கும் முகமாக, அன்பைப்பரப்பும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, தன் பாதையிலிருந்து விலகி, வியாபார மயமாகிக்கொண்டிருக்கிறது. மேற்கு நாடுகளின் நாகரிகத்தாக்கத்தால் இந்தியாவில் தற்சமயம் கடைப்பிடிக்கப்படும், அன்னையர், தந்தையர், மகள், மகன், தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட சித்தி, கொண்டான் கொடுத்தான் போன்ற தினங்களின் வரிசையில் காதலர் தினமும் ஒன்று. 

பெரும்பாலும் தனிக்குடித்தனமாகவோ, அல்லது வீட்டிலிருந்து வெளியேறி தனியாகவோ வசிக்கும் மக்கள் வருடத்திற்கொரு முறை குடும்பத்தினரைச் சந்தித்து அளவளாவுவதற்கு ஒரு தினத்தை நிர்ணயித்துக்கொண்டதை, கார்ப்பரேட் உலகம் வியாபாரமயமாக்கியது. அதன் பொருட்டே பரிசுப்பொருட்களின் சந்தை ஆன்லைனிலும் விரிவடைந்து தன் ஆக்டோபஸ் கரங்களால் உலகெங்குமிருந்து காசை வாங்கி தன் கல்லாவை நிறைத்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோனோரிடம் காதலை விட இப்பரிசுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருட்கள் கொடுக்கப்படவில்லையெனில் காதலையே சந்தேகப்படுவதும் முறித்துக்கொள்வதும் கூட காணப்படுகிறது. அன்பையும் அதைக்கொடுப்பவரையும் விட பரிசுப்பொருட்கள்தாம் உயர்ந்தவையா?


LinkWithin

Related Posts with Thumbnails