Sunday 24 April 2022

படமும் பாடலும் (5)

பறக்குந் திறனிருந்தும் பற்றுவிடாப் பட்சி
சிறகை மறந்து சடசடக்கும்- பற்றை
மறந்து விடுவீரேல் மாந்தர் அறிவீர்
சிறக்கும் பிறவி இனிது.

முறுகல் அடையும் மொளவாடி நெய்யும்
சுடச்சுட காப்பியொடு உண் (இருவிகற்ப குறள் வெண்பா)

சுவையுங் குறையாத சூடும் நுரையும்
அவையத்து காப்பிக் கழகு. (ஒரு விகற்ப குறள் வெண்பா)

இரட்டுற மொழிதல் - பஜ்ஜியும் முகிலும்
உருவு மருவும் உளங்கொளும் வண்ணம்
வருவழி யெண்ணி விழிபூத் திருக்கும்
மிருதாய் மிதக்கும் மெதுவாய்க் கருக்கும்
தருமுகில் பஜ்ஜிக்கு நேர். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

உருவம் மாற்றமடையும், மனதைக்கொள்ளை கொள்ளும் நிறம் கொண்டது, அது வரும் வழியை நோக்கி விழி பூக்க காத்திருப்போம், எண்ணெய்யில்  அல்லது வானத்தில் மிருதுவாக மிதக்கும், மெதுவாகக் கருநிறம் கொள்ளும். (கவனிக்காமல் விட்ட பஜ்ஜி கருகி விடும்)

ஆகவே மழையைத் தருகின்ற முகிலும் பஜ்ஜியும் ஒன்று.

அத்தனும் அம்மையும்போல் ஆதுரம் பாலித்து
புத்தியும் போதிக்கும் நற்குருவாம் நித்தமும்
பத்தம் பயனுரைக்கும் நண்ணுநர் நேரென
புத்தகம் போலிங்கு ஏது. (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா) உலக புத்தக தினத்திற்காக எழுதப்பட்டது.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் பாக்களும் சிறப்பு. அனைத்தும் ரசித்தேன்.

LinkWithin

Related Posts with Thumbnails