Showing posts with label மொபைல் க்ளிக்ஸ். Show all posts
Showing posts with label மொபைல் க்ளிக்ஸ். Show all posts

Thursday, 27 December 2018

மண் கோட்டையானாலும் மலைக்கோட்டையாக்கும்..


"Diwali killa".. மஹாராஷ்ட்ராவில் தீபாவளி தோறும் குழந்தைகளால் தத்தம் குடியிருப்புப்பகுதிகளில் கட்டப்படும் சின்னஞ்சிறு கோட்டைகளே திவாலி கில்லா.. அதாவது தீபாவளிக்கோட்டை என அழைக்கப்படுகிறது. மராட்டிய மன்னரான சிவாஜி மஹராஜை நினைவு கூரும் விதமாக குழந்தைகள் இக்கோட்டையைக் கட்டுகிறார்கள்.


பொதுவாக ஒரு சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் அங்கிருக்கும் கோட்டைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நிலம், நீர், மலை, பாலைவனம் என ஒவ்வொரு பகுதியிலும் கோட்டை கட்டி பாதுகாப்பைப் பலப்படுத்துவார்கள் அரசர்கள். மலைப்பகுதி நிறைந்த மஹாராஷ்ட்ராவில் சுமாராக 150க்கும் மேற்பட்ட கோட்டைகளை சிவாஜி மஹராஜ் கட்டுவித்தார். அவற்றில் பெரும் எண்ணிக்கையிலான கோட்டைகள் மலைகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன. மராட்டா சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதில் மலைக்கோட்டைகள் பெரும்பங்கு வகித்தன என்றால் மிகையாகாது.

சிறு வயதில் சிவாஜி மஹராஜ் தன் விளையாட்டுத்தோழர்களுடன் சேர்ந்து, சிறு கோட்டை கட்டி போர் விளையாட்டு விளையாடுவதில் பெரு விருப்பம் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பெற்ற பயிற்சியும் இப்பகுதியிலுள்ள மலைகளின் மூலை முடுக்குகளைப் பற்றிய பரிச்சயமும் அவருக்கு எதிரிகளுடன் போரிடுவதில் பெரிதும் துணை நின்றன. மலைகளில் ஔிந்திருந்து கொண்டு, யாரும் எதிர்பாரா சமயத்தில் திடீரென வெளிப்பட்டு எதிரிகளைத் தாக்கி விட்டு மறுபடியும் மலைகளில் ஔிந்து கொள்வார். அவரது அப்போதைய எதிரிகளான முகலாயர்களால் அவரை எளிதில் பிடிக்கவே முடியவில்லை. இத்திறமைகளால் அவர் "மலை எலி"எனவும் அழைக்கப்பட்டார். சஹ்யாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராய்கட் கோட்டையில்தான் அவர் மன்னராக முடி சூட்டிக்கொண்டு ராய்கட்டை தன் தலைநகராக அறிவித்தார். இங்கிருந்துதான் மராட்டா சாம்ராஜ்யம் தமிழகத்தின் தஞ்சை வரை விரிவடைந்தது. இக்கோட்டையில்தான் சிவாஜி மஹராஜின் சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஷிவ் ஜெயந்தியன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டும் வருகிறது. இன்றளவும் மஹாராஷ்ட்ராவின் ஹீரோவாக சிவாஜி மஹராஜே விளங்குகிறார்.

அரையாண்டுத்தேர்வு முடிந்ததுமே குழந்தைகள் கோட்டை கட்டுவதைப் பற்றி கலந்தாலோசிக்கத் துவங்கி விடுவார்கள். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பிருந்து வேலை ஆரம்பமாகும். பல வித அளவுகளிலான கற்கள், உடைந்த செங்கற்கள், டைல் துண்டுகள், கோணி, மற்றும் மண் போன்றவை சேகரிக்கப்படும். கோட்டை கட்டப்படும் இடத்தில் முதலில் கற்கள், செங்கற்கள் மலை போல் குவிக்கப்பட்டு அதன் மேல் கோணியால் மூடுவார்கள். மலை போல் தோற்றமளிக்கும் பொருட்டு சற்று ஒழுங்கற்ற வடிவிலேயே இது செய்யப்படும். அதன்பின் மண்ணைக் குழைத்து, கோணியின் மேல் நன்கு பூசி விடுவார்கள். மண் ஈரமாக இருக்கும்போதே மலையுச்சியை சற்றே சமதளமாக்கி டைல் துண்டு ஒன்றை அதில் வைப்பார்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்படும். மலையின் ஒரு பகுதியில் சிறை ஒன்று அமைக்கப்படும். துடைப்பக்குச்சிகள் சிறைக்கம்பிகளாக உருமாறும். மலையைச் சுற்றி கோட்டைச்சுவரும் மண்ணைக் குழைத்து அமைக்கப்படும். கற்பனையைச் சற்றே நீட்டினால் மலைக்கும் கோட்டைச்சுவருக்கும் இடையே அகழி ஒன்றும் அமைக்கப்பட்டு முதலைகள் விடப்படும். ஊற வைத்த கடுகு, வெந்தயம் போன்றவற்றைஏராளமாகத் தூவி விட்டால் இரண்டு நாளில் அவை முளைத்து வளர்ந்து அடர்த்தியான காடாக மாறியிருக்கும். இப்போது மலை ரெடி.

தீபாவளி சமயத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சிவாஜி மஹராஜ், மற்றும் பீரங்கிகள், மாவல் எனப்படும் சிப்பாய்கள், குடி மக்கள், புலி, அஃப்ஸல் கான் ஆகிய பொம்மைகள் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து கோட்டைச் சுவரில் ஆங்காங்கே பீரங்கிகளையும் காவலர்களையும் நிறுத்துவர். அஃப்சல்கானை சிறையிலிட்டு வாசலில் இரண்டு புலிகளை நிறுத்தி விட்டால் தப்பிக்கும் எண்ணம் கனவில் கூட வராது. இறுதியாக மலையுச்சியில் காவலர்கள் புடை சூழ சிவாஜி மஹராஜை அமர்த்தி, ஆங்காங்கே குடி மக்களையும் நிறுத்தினால், அசல் தர்பார் கெட்டது போங்கள்.

இதன்பின் தினமும் காலை, மாலை கோட்டை வாசலில் வண்ணக்கோலமிட்டு அகல் விளக்குகளை ஆங்காங்கே ஏற்றி வைப்பார்கள். ஆகும் எல்லாச் செலவுகளையும் குழந்தைகள் மொத்தமாகப் பகிர்ந்து செய்வார்கள். நரக சதுர்த்தசி வரை இந்த வைபவம் தொடரும். வடக்கர்களின் தீபாவளியான லஷ்மி பூஜை தினத்தன்று விடிகாலையில் அத்தனை குழந்தைகளும் குளித்து தயாராகி வந்தபின், மலையில் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் சிறு பள்ளத்தில் ஒரு அணுகுண்டை வைத்து வெடிப்பார்கள். கோட்டை மொத்தமும் வெடித்துச்சிதறும். அதன்பின் மற்ற வெடிகளை வெடித்து கோட்டை தரை மட்டமாக்கப்படும். பொம்மைகள் அடுத்த தீபாவளிக்கென எடுத்து பத்திரப்படுத்தப்படும். இப்படியாகத்தானே தீபாவளி கோலாகலம் ஆரம்பிக்கும்.

பிள்ளைகளிடையே ஒற்றுமையுணர்ச்சி, வேலைகளைப் பகிர்ந்து செய்தல், கற்பனைத் திறன் மேம்படுதல், கணக்கு வழக்குகளைத் திறம்படக் கையாளுதல், விட்டுக்கொடுத்தல், நட்புணர்வு போன்ற திறன்கள் மேம்படுவதோடு குறைந்தது ஒரு வாரத்துக்கு பிள்ளைகளை மேய்க்கும் பொறுப்பிலிருந்து பெற்றோருக்கும் சற்று ஓய்வு கிடைக்கும். இப்போதெல்லாம் மண்பாண்டங்கள், பீங்கான் ஜாடிகள் செய்பவர்கள் சிறு கோட்டைகளையும் செய்து விற்கிறார்கள். இட நெருக்கடியுள்ள குடியிருப்புகளில் இதை மட்டும் வைத்து விடுகின்றனர். கொஞ்சம் இட வசதியிருந்தால் இதைச்சுற்றிலும் கோட்டையை மேலும் விரிவாக்கம் செய்கின்றனர். கற்பனைத் திறனுக்கு வானம் கூட எல்லையில்லைதானே?..

Saturday, 22 September 2018

கண்பதி - 2018

“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”


எங்கள் வீட்டுப்பிள்ளையார்
இவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பிள்ளையார்
என வேண்டி விரும்பி அழைக்கும் மக்களின் அழைப்பையேற்று பிள்ளையார் எங்களூருக்கு வந்து கொலுவிருந்து அருள் பாலித்து வருகிறார். வழக்கம்போல் பத்து நாட்கள் இருந்து விட்டு "நா போயிட்டு வரேன்" என பத்தாம் நாளான அனந்த சதுர்த்தசியன்றி விடைபெற்றுக்கொண்டு விடுவார். ஆரத்தி பூஜை, பஜனை என கோலாகலமாக இருந்து விட்டு அவர் விடைபெற்றுச் சென்றதும் சட்டென்று ஒரு சூன்யம் மனதைச் சூழ்ந்து கொண்டு அரிக்கத்தொடங்கிவிடுகிறது. நவராத்திரிக்கு அம்பாள் வந்து கொலுவிருக்கும் வரைக்கும் இதே சூன்யம்தான் மனதை ஆளப்போகிறது. 

சுற்றுப்புறச் சூழலைக்காக்கும் பொருட்டு மஹாராஷ்ட்ராவில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மக்கர் எனப்படும் தெர்மோகூல் பொருட்களும் அடங்குவதால் பிள்ளையாருக்கான தெர்மோகூல் மண்டபங்கள் இவ்வருடம் எங்குமே காணக்கிடைக்கவில்லை. மூங்கில், மற்றும் துணிகளைக்கொண்டு செய்யப்பட்ட அலங்காரங்களே எங்கும் காணக்கிடைத்தன. கல்யாணிலிருக்கும் "பாயி கா புத்லா" பகுதியில் மூங்கில் கம்புகளால் மோதகம் மற்றும் தேங்காய் வடிவில், சட்டம் அமைக்கப்பட்டு அதில் தேங்காய் நாரைப் பொதிந்து உருவம் கொடுக்கப்பட்ட மண்டபங்கள் நிறையச் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வண்ணமே கைகளால் செய்யப்பட்டு நீர் வண்ணமடிக்கப்பட்டிருந்த பிள்ளையார்களும் இவ்வருடம் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்போதாவது சூழலைப்பற்றிய அக்கறை வந்ததே எனத்தோன்றியது நிஜம்.


வழக்கப்படி எங்கள் வீட்டுக்கும் பிள்ளையார் வந்த, ஐந்து நாட்கள் கொலுவிருந்து, ஐந்தாம் நாளான "கௌரி கணபதி" தினத்தன்று விடைபெற்றுச் சென்றார். பார்வதியின் இன்னொரு பெயர்தான் கௌரி. பிள்ளையார் சதுர்த்திக்கு முன் தினம் இவரை சில வீடுகளில் இருத்தி பூஜை செய்வார்கள். பின்னர் சதுர்த்தி ஆரம்பித்த ஐந்தாம் தினத்தன்று அனைவருக்கும், முக்கியமாக சுமங்கலிகளுக்கு விருந்திட்டு, தாம்பூலமளித்து பின்னர் கௌரியையும் பிள்ளையாரையும் விசர்ஜன் செய்வர். சில வீடுகளில் பிள்ளையாரை இருத்தாமல் கௌரியை மட்டும் வைத்துப் பூஜை செய்வதுமுண்டு. 


எங்கள் பிள்ளையாரையும் யதாஸ்தானம் அனுப்பி, கையில் கட்டுச்சோறு கொடுத்து, விசர்ஜன் செய்து விட்டு வந்தோம். நிர்மால்யம் என அழைக்கப்படும் களைந்து வைத்த பூஜைப்பொருட்கள் ஒரு பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், சில சமயம் அது நிரம்பி வழிந்து பக்தர்களின் காலில் மிதிபடுவது மனக்கஷ்டம் கொடுக்கக்கூடிய காட்சி. இம்முறை ஒரு பெரிய ட்ரக்கைக் கொண்டு வந்து நிறுத்தி, ஆட்கள் அங்கே நின்று அதில், நிர்மால்யத்தைச் சேகரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நல்ல விஷயம்தான்.


வழக்கமாக, சதுர்த்தி ஆரம்பித்த பின்னும் லேசான மழை இருந்து அனந்த சதுர்த்தசிக்குப் பின் நின்று விடும். மழையில் நனைந்து கொண்டே ஆரத்தி செய்த அனுபவங்களும் மும்பைக்கர்களுக்கு உண்டு. ஆனால் ஏனோ இவ்வருடம் பத்து நாட்களில் மழையே இல்லாமல் இருந்தது. இவ்வருடம் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பிள்ளையார்தான் காக்க வேண்டும். 

கட்டுச்சோறும் கையுமாக.
கிளம்பிச்சென்ற பிள்ளையாரின் இனிய ஞாபகங்களோடும் வரவிருக்கும் நவராத்திரியைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடும் இப்பண்டிகைக்காலம் இனிதே ஆரம்பித்திருக்கிறது. வரும் காலமெல்லாம் எல்லோருக்கும் எல்லா நலனும் விளைய இறைவன் அருள்வானாக.

"கணபதி பப்பா மோர்யா"

வால்: ஒன்றிரண்டு படங்களைத்தவிர மற்ற அனைத்தும் மொபைலில் க்ளிக்கியவை. இன்னுமிருக்கும் படங்கள் வரவிருக்கும் இடுகையில்.

Monday, 12 March 2018

மொபைல் க்ளிக்ஸ் 7 (கலைப்பொருட்கள்-2)

அலைபேசி மூலம் படம் பிடிக்கப்பெற்ற கலைப்பொருட்கள் அணிவகுப்பின் இரண்டாம் பாகம் தொடர்கிறது. இதன் முந்தைய பகுதி இங்கே.

கிறிஸ்துமஸ் மரம்
வேண்டாத டப்பாக்களில் பெயிண்ட் செய்து செடி நட்டு ஏற்படுத்தியிருந்த container garden.


நிரப்பப்படக் காத்திருக்கும் வெற்றிடம்.

விருந்தினரை வரவேற்கும் மலர் அலங்காரம். பாட்டி காலத்துப் பழைய உருளியைப் பாத்திரக்கடையில் கொடுத்து மாற்றிக்கொள்ளாமல், பரணில் போட்டுப் பாழாக்காமல் இப்படி உபயோகித்தல் நன்று.


மறைந்த முதல்வர் திரு.எம்.ஜி.ஆரின் சமாதி முகப்பில்..

பேரத்துக்காகக் காத்திருக்கும் குதிரைகள்.

சால மிகுத்துச் சுமப்பின் மலரும் சுமைதான்.

 ஞான ஒளி.

ஒளிவிளக்கு..
மேத்தமணி. இதைப்பற்றி முன்பு எழுதியது இங்கே

இந்தியில் சிதார் என்பர்..

ஜிங்கில் பெல்.. ஜிங்கிள் ஆல் த வே..


மூவர்ணம்..

வேண்டாத தண்ணீர் பாட்டிலில் அமைத்த container garden.
தொடரும்..

Monday, 26 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 6 (பண்டிகைகள்)

பண்டிகைகளும் விழாக்களும், அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளில் சோர்வுற்று நொய்ந்திருக்கும் மனிதனுக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றன. அல்லது,.. தலைகீழாகவும் இருக்கலாமோ!!.. புத்துணர்வூட்டவென்றே மனிதன் இவற்றை உருவாக்கினானோ!! எது எப்படியோ, பண்டிகைகளும் விழாக்களும் மனிதனுக்கு, அவ்வப்போது சமுதாயத்தில் தான் தனியில்லை என்ற பிரக்ஞையைத் தக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

பல்வேறு கலாச்சாரங்களின் கதம்பமே இந்தியா. ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு தடவையும் மக்களின் உணவுமுறை, பழக்க வழக்கங்கள், கொண்டாட்டங்கள் எல்லாமும் மாறுவதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் ஒரு சிலவற்றைப் பதிவு செய்தவை இங்கே வரிசை கட்டுகின்றன. 

வட இந்தியாவில் மார்ச் முதல் வாரத்துக்கப்புறம் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்தாலும், ஹோலியே வேனல்காலத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இதோ இன்னும் மூன்று தினங்களில் ஹோலி வரவிருக்கிறது. வண்ணங்களில் குளிக்கக் காத்திருக்கின்றனர் மக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைப் பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். 

வானவில்லின் அத்தனை வண்ணங்களும்..

ஹோலிகா தகனம் மற்றும் கலர்பூசு விளையாட்டுக்கான பொருட்கள் விற்பனைக்கு.
எரியக்காத்திருக்கும் சொக்கப்பனை
ஹோலிகா தகனம்
வண்ணங்கலந்த தண்ணீரைப் பீய்ச்சி விளையாட உபயோகிக்கும் பிச்காரி எனப்படும் பீச்சாங்குழல்கள்.
ஹோலியைத்தொடர்ந்து மஹாராஷ்ட்ராவில் புத்தாண்டு தினமான "குடி பாட்வா" கொண்டாடப்படுகிறது. //தமிழ்நாட்ல விஷூன்னும், ஆந்திராவில் யுகாதின்னும் கொண்டாடற மாதிரி மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா”ங்கற பேர்ல புது வருஷம் கொண்டாடப்படுது. இங்கே உள்ள மக்களுக்கு இன்னிக்குத்தான் சித்திரை முதல் தேதியாக்கும். சித்திரையை இங்கேயுள்ளவங்க “சைத்ர”ன்னு சொல்லுவாங்க.// என ஆரம்பித்து இப்பண்டிகையைப் பற்றி முன்னொரு முறை எழுதியது இங்கே பத்திரமாக இருக்கிறது. 

வீடுகளில் ஏற்றப்படுவது போலவே வியாபார நிறுவனங்களிலும் "குடி" ஏற்றப்படுவதுண்டு. ஒரு கரும்புச்சாறு விற்பனையகத்தில் அவரது தொழிலுக்குப் பொருத்தமாக கருப்பங்கழியில் ஏற்றப்பட்டிருந்த "குடி" அனைவரையும் கவர்ந்தது. வித்தியாசமான சிந்தனைதான் இல்லையா?
மஹாராஷ்ட்ர மக்களின் விருப்ப தெய்வமான பிள்ளையார். இவரை மஹாராஷ்ட்ரா மக்கள் கொண்டாடும் விதத்தை எத்தனை எழுதினாலும் தீராது. இவரை மொபைலில் எடுத்த படங்கள் தனிப்பதிவாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் இப்பண்டிகை, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆரம்பித்து பதினான்காம் நாளான அனந்த சதுர்த்தசி வரையிலும் மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்தே பிள்ளையார் சதுர்த்தி  அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், வெகு காலத்திற்குப் பின் அது பொது மக்களும் கொண்டாடும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. 
ஹோலிப்பண்டிகையை அடுத்து இங்குள்ள மக்கள் நவராத்திரியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். பத்து நாளும் கர்பா, தாண்டியா என ஆட்டம் பாட்டத்தோடு அதிர வைப்பார்கள். நம்மூர் மாதிரி படி கட்டுவதில்லையே தவிர, முளைப்பாரி போன்ற எல்லாச் சடங்குகளும் இங்கே உண்டு. அஷ்டமியன்று ஒன்பது கன்யாப்பெண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு சகலவிதமான உபசாரங்களும் செய்து பூஜித்தல் நல்லது என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. 

மகிஷாசுரமர்த்தினி.
எங்கள் வீட்டுக்கொலுவில் என் கைப்படச்செய்த அம்பாள் அலங்காரம். அவளுக்குக் குஞ்சலமும் செய்து அணிவித்தேன்.
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். 

சென்னை-கோடம்பாக்கம் மேம்பாலத்தினருகில் ஒரு சிறிய கோவிலின் முகப்பில் அமைந்திருக்கும் திருவுருவம். 
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர்-25ம் தேதி கொண்டாடப்படும் "கிறிஸ்துமஸ்" பண்டிகையைப் பற்றி அறியாதவருண்டோ?!. தீபாவளிக்கடுத்தபடியாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு இங்குள்ள மால்கள் வண்ண விளக்குகளால் விதவிதமாக அலங்கரிக்கப்படும். தவிரவும், சாண்டாக்ளாஸ் அலங்காரங்களும் அமைக்கப்படுவதுண்டு. அவற்றைக்காண்பதற்கென்றே மக்கள் கூட்டம் குவியும். பாட்டு, ஓவியம் போன்ற வழக்கமான போட்டிகளைத்தவிர திடீர் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். 

இங்குள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் அலங்காரம்.




தொடரும்..

Monday, 19 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 5 (கலைப்பொருட்கள்)

வசிக்குமிடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதன் அடுத்தபடி, அதை அழகுற அலங்கரிப்பதுவுமாகும். கிராமங்களில் மண்குடிசையில் வசித்தாலும் தினமும் இருமுறை, வாசலையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்து, கோலமிட்டு, சாயங்காலங்களில் வாசற்புறத்திலிருக்கும் துளசி மாடப்பிறையிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி, ஊதிவத்தியும் ஏற்றி வைப்பர். கோவிலுக்குள் நுழைந்த தெய்வீக உணர்வை அது தரும். தவிர,  வாரத்துக்கொருமுறை சாணமிட்டு மெழுகி தரையைப் பளிங்கு போல் வழுவழுவென ஆக்கி வைப்பர். மார்போனைட் டைல்ஸோ, மண்தரையோ.. எதுவாக இருப்பினும், தினமும் பெருக்கித்துடைத்து, ஒட்டடையின்றி சுவர்கள் மிளிர, பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டால் அழகுதான். "சுத்தம் சோறுபோடும்.. சுகாதாரம் குழம்பு ஊற்றும்"

இந்தப்பிள்ளையார் எங்கள் வீட்டின் முகப்பில் இருப்பவர். தினம் தூபதீபமும் வெள்ளிக்கிழமைதோறும் கூடுதலாக மலர்மாலையும் பெற்றுக்கொள்பவர்.

இந்த கருடர் மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் இருக்கிறார். மூக்கழகர் :-)

இவரை ஒரு பயணத்தின்போது மதுரையில் பிடித்தேன். ஹோட்டல் அறையை அலங்கரித்தவர் இப்போது இந்த வலைப்பூவையும்..


ஆடம்பரமான பங்களாக்களில் மட்டுமல்ல, சாதாரண வீடுகளிலும் ஒரு ஓவியம், ஒரு சிறிய சிற்பம் அல்லது பொம்மை, வாடாமலர்கள் அல்லது வாசம் வீசும் மலர்களை ஏதாவதொரு இடத்தில் அலங்காரமாக வைத்துப்பாருங்கள். அந்த அறையின் முகமே மாறியிருக்கும். ஒரே மாதிரியான வீட்டு அலங்காரத்தைப் பார்த்துப்பார்த்து போரடித்தால், அறையின் சோபா, மேசை அலங்காரம் போன்றவற்றை இடம் மாற்றி வைத்துப்பாருங்கள். அது மனதுக்கு ஓர் புத்துணர்வு தரும் என மனவள வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு கலைப்பொருட்களை வாங்குவதும் அவற்றைக்கொண்டு வீட்டை அலங்கரிப்பதும் பிடித்தமான பொழுதுபோக்கு. வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லுந்தோறும் அந்தந்த இடங்களின் சிறப்பான பொருட்களை வாங்கி வருவர். வெளிநாட்டுப்பொருட்களை நாம் விரும்புவது போல், நம் தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டிப்பொம்மை, போன்றவற்றை வெளிநாட்டவர் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். கன்னியாகுமரியில் அலங்கார மணிமாலைகளையும், சங்கு, சிப்பி மற்றும் தென்னை நெட்டியால் செய்த கைவினைப்  பொருட்களையும் அவர்கள்தான் அதிக விலை கொடுத்தாவது வாங்கிச்செல்கின்றனர்.

மதுரைப் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் ரிசப்ஷன் பகுதியில் அருள் பாலித்துக்கொண்டிருந்தவர். பணங்காசு நடமாடும் பகுதிகளில் விரும்பி வாசம் செய்வார்.
சென்னைப்பயணத்தின்போது மண்பாத்திரம் தேடியலைந்தபோது கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் பகுதியில் கிடைத்தது. அங்கிருந்த கலைப்பொருட்களைக் கண்டு அகமகிழ்ந்து, டெரகோட்டாவில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிக்கொள்ளலாமா என யோசித்தபோது, "ஆசையே துன்பத்திற்குக் காரணம், என்னதான் பொதிந்து கொண்டுசென்றாலும் மும்பை செல்வதற்குள் உடைந்துவிடக்கூடும்" என என் அறிவுக்கண்ணை படாலெனத் திறந்தவர். 

அதிக விலை கொடுத்து சுவரோவியம், அலங்காரப்பொருட்கள் போன்றவற்றை வாங்கித்தான் வீட்டை அலங்கரிக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் குழந்தைகள் வரைந்த அழகிய ஓவியம், மற்றும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்தால் ஏற்படும் திருப்தியும் பெருமையும் விலைமதிப்பில்லாதது. அவ்வாறு சுவரோவியங்களை மாட்டும்போது நல்ல நிழல்விழாத, நல்ல ஒளியமைப்புள்ள இடத்தில் மாட்டினால் அந்த அறைக்கே ஒரு தனியழகு வந்து விடும். சிலர், ஓவியங்களின் மீது வெளிச்சம் விழுமாறு சிறப்பான சுவர்விளக்குகளையும் மாட்டி வைப்பர். சரியான கோணத்திலும் அளவிலும் ஒளி விழும்போது மிளிரும் வண்ணத்துடன் பொலியும்.

ஒரு சென்னைப்பயணத்தின்போது, ஹோட்டலின் சுவர்களில் வால்பேப்பராக ஒட்டப்பட்டிருந்த இந்தியக்கலாச்சாரம் சம்பந்தப்பட்ட படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று.
ஆசையை ஒழி என எனக்கு புத்தர் அறிவுறுத்தியபோது அருகிலிருந்த இரட்டையர். அடுத்த பயணத்தில் கூட்டிக்கொண்டு செல்வதாக வாக்களித்ததும் முகங்களில் புன்சிரி. மண்குதிரையானாலும் டெரகோட்டா குதிரையை நம்பலாம் என குளம்பால் அடித்து சத்தியம் செய்தனர். "ஊர் உலகமெல்லாம் சுற்றித்திரிந்து காவல்புரியும் அய்யனாரின் வாகனமாக்கும் நாங்கள். உங்களைப்போன்ற மனிதர்கள்தான் எங்களை தோட்டத்தில் அலங்காரமாக நிற்க வைத்து விடுகிறீர்கள்" என ஒரே அங்கலாய்ப்பு.

என் வீட்டு வாசலில் ஷூரேக்கின் மேல் வைக்கப்பட்டிருக்கும் மலர் அலங்காரம். காலணிகள் கொண்டு வரும் எதிரெண்ணெங்களை இம்மாதிரியான அலங்காரம் வீட்டினுள் நுழைய விடாமல் அழித்து விடுவதாக நம்பப்படுகிறது.

தற்காலங்களில், வீட்டின் முன்னறையில் அல்லது வீட்டு முன்வாசல் முற்றத்தில் ஒரு வெண்கல உருளி அல்லது மண்பாண்டத்தில் நீர் நிரப்பி, அதில் பூக்களையும் ஏற்றி வைத்த மெழுகு அல்லது அகல் விளக்குகளையும் மிதக்க விடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அக்காலங்களில் வீட்டின் முன் அல்லிக்குளம் அமைக்கப்பட்டதன் மரூஉ எனவும் இதைக்கொள்ளலாம். இன்னும் சிலர் அந்த நீரில் காசுகளையும் போட்டு வைப்பர். தீபத்தில் அக்னி, நீரில் வருணன், பாண்டத்தில் ப்ருத்வி, காற்றில் வாயு, சுற்றுப்புறத்தில் ஆகாயம் என பஞ்சபூதங்களும் இதில் வழிபடப்படுவதாகவும், அவை வீட்டினுள் எதிரெண்ணெங்கள் புகுவதைத் தடுத்து, நல்லெண்ணங்களைப் பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது. ஆன்மீக நோக்கில் இல்லையெனினும் அழகு நோக்கில் கொண்டால், வாசலில் மணம் வீசும் மலர்களைக் காணுந்தோறும், அவற்றின் சுகந்தத்தை நுகருந்தோறும் மனம் கொள்ளும் களியுணர்வைச் சொல்ல வார்த்தைகள்தான் உண்டா!!

சென்னைப்பயணத்தின்போது கிடைத்த தேசப்பிதா..
குத்துவிளக்குகளின் கொண்டை எனச்சொல்லப்படும் தலைப்பகுதியில் தெய்வத்திருவுருவங்கள், மதச்சின்னங்கள், அன்னம், தாமரை போன்றவை அமைக்கப்படுவது ஒரு தனியலங்காரமாக இருக்கும். இந்த விநாயகர் விளக்கு மதுரையில் காணக்கிடைத்தது.

பொருளீட்டும்பொருட்டு வெளியுலகிற்குச் சென்று அன்றாடம் பல்வேறு போராட்டங்களைச்  சந்தித்து விட்டு வந்து , அக்கடா என நிம்மதியாய்க் கால் நீட்டி உட்கார நாம் நாளின் இறுதியில் வீட்டுக்குத்தான்  வருகிறோம். அப்படி நிம்மதியைத் தரும் வீட்டைக் கொஞ்சம் அலங்கரித்து வைத்தால் கண்ணுக்கும் மனதுக்கும் சுகம்.

தொடரும்..

LinkWithin

Related Posts with Thumbnails