புளி, நெல்லி, மாங்காய் வரிசையில் பேரைச்சொன்னாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் ஒரு பழம்தான் ஸ்ட்ராபெர்ரி. உருண்டை உடம்புடன் செக்கச்செவேலென்ற ட்ரெஸ்ஸுடன் பச்சைத்தொப்பிப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாய் இந்தச்சீமாட்டி மால்களிலும் பழக்கடைகளிலும் உட்கார்ந்திருக்கும் அழகே அழகு. பார்த்தவுடனேயே கொத்திக்கொண்டு போய்விட வைக்கும் இந்தக் கொள்ளையழகுச் சீமாட்டி தன்னை விழுங்கியவரையும் நோயின்றி வாழ வைக்கும் ஈர மனசுக்காரி.
கொடி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டாலும் இப்பொழுது உலகம் முழுக்கப் பயிரிடப்படுகிறது. ரோஜாக்குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி Fragaria ananassa என்ற தாவரவியல் பெயராலும் அறியப்படுகிறது.
காட்டுப்பயிராக இருந்த ஸ்ட்ராபெர்ரியை நாட்டுக்குள் கொண்டு வந்த பெருமை பிரெஞ்சுக்காரர்களையே சாரும். 1300களின் கடைசியில் ஆட்சி புரிந்த ஐந்தாம் சார்லஸ் மன்னனின் தோட்டத்தில் 1200 செடிகள் இருந்தனவாம். பழங்கால ரோம் இலக்கியங்களில் இதன் மருத்துவ மகிமையைப்பற்றி நிறையச் சொல்லி வைத்திருக்கிறார்களாம். 1500களில் பரவலாகப் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். பயிரிடும் மற்றும் அறுவடை செய்யும் முறைகளை பக்காவாக 1578லேயே எழுதி வைத்திருக்கிறார்கள்.
மஹாராஷ்டிராவில் மஹாபலேஷ்வரில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்கள் ருசியான பழங்களுக்குப் பெயர் பெற்றவை. பிரிட்டிஷார் ஆஸ்திரேலியாவிலிருந்து செடிகளைக்கொண்டு வந்து பஞ்ச்கனியிலும் மஹாபலேஷ்வரிலும் நட்டு வைத்து வளர்த்திருக்கிறார்கள். இங்கே விளையும் பழங்கள் உலகம் முழுக்கவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மஹாபலேஷ்வருக்கு சுற்றுலா போய்த்திரும்புபவர்கள் கையில் நிச்சயமாக பழப்பாக்கெட்டும், கண்கள் விரியச்சொல்வதற்கு ஸ்ட்ராபெர்ரி ஃபார்மில் சுற்றித்திரிந்த ஏராளமான அனுபவங்களும் இருக்கும்.
மகளின் தோழியொருத்தி அங்கே பஞ்ச்கனியில் தங்கிப்படித்தவளாததால் தோட்டங்களில் செடி வளர்க்கப்படும் விதம் பற்றிச் சொன்னதுண்டு. சில இடங்களில் நம்மூரில் திராட்சை வளர்க்கப்படுவது மாதிரியே உயரத்தில் செடிகள் நடப்பட்டிருக்கும். பழங்களும் காய்களுமாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இம்முறையில் பழங்கள் மண்ணில் புரண்டும், காலில் மிதிபட்டும் வீணாவது தடுக்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் ப்ளாஸ்டிக் விரிப்பொன்று தயார் செய்யப்பட்ட நிலத்தின் மேல் விரிக்கப்படுகிறது. ஆங்காங்கே துளையிடப்பட்ட அந்த விரிப்பில் துளைகளில் செடிகள் நடப்படுகின்றன. இந்தச்செடிகளுக்கு சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. இதிலும் பழங்கள் விரிப்பின் மேல் பாதுகாப்பாக இருப்பதால் அறுவடைக்கால நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. இந்தக் குளிர்கால லீவில் போய் அதையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்ற எனது ஆசை வழக்கம்போல் வீட்டார் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் ஊற்றி மூடிக்கொண்டது. அவ்வ்வ்வ்வ்வ்….
ஸ்ட்ராபெர்ரியை வீட்டிலும் வளர்க்கலாம் என்றும் இணையம் சொல்கிறது. விதை போட்டும் கன்றுகளை நட்டும் வளர்க்கும் வழக்கமான முறைகளைத்தவிர நன்கு முதிர்ந்த பழத்திலிருந்து விதைகளை உபயோகப்படுத்தியும் வளர்க்கலாமாம். பழத்தை ஐந்து மி.மி. அளவுக்கு ஸ்லைஸ் செய்து கொண்டு அதை மண்ணில் நட்டு வைக்க வேண்டுமாம். அதிலிருக்கும் விதைகள் மூலம் செடிகள் வளருமாம். இந்தப்பழத்தில் எங்கே விதைகள் இருக்கின்றன என்றுதானே கேட்கிறீர்கள்?.. சிவந்த பட்டுப்புடவையில் மஞ்சள் ஜரிகைப்பொட்டுகள் போன்று இருக்கின்றனவே அவைதான் விதைகள். அடுத்த தடவை வாங்கும்போது நட்டு வைத்து வளர்கிறதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
செடிகளுக்குத்தண்ணீர் பாய்ச்சும்போது இலைகளில் படாமல் வேரில் மட்டும் படும்படியாக ஊற்ற வேண்டும். இல்லையெனில் இலைகள் அழுகி விடும். சம்மரின் பிற்பகுதி அல்லது ஸ்ப்ரிங்க் சமயம் பயிரிட ஏற்றது. மணற்பாங்கான பகுதி உகந்தது. எல்லாக் கால நிலைகளிலும் நிலைத்து நிற்கக்கூடியதென்றாலும் பழம் வரும் சமயம் ஈரப்பதம் இருந்தால் நல்லது
கலோரிகள் குறைந்த அளவில் இருக்கும் இந்தப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. ஒரு கப் பழத்தில் வெறும் 49 கலோரிகள் மட்டும்தான் இருக்கிறதாம். ஒரு நாளைக்கு எட்டுப்பழங்கள் எடுத்துக்கொண்டாலே போதும். குழந்தைகளுக்கு அன்றைக்குத்தேவையான வைட்டமின் சி 140 சதவீதம் கிடைத்துவிடும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குகின்றன. ஒரு ஸ்ட்ராபெர்ரியை இரண்டாக வெட்டி அதன் சாறு பற்களிலும் ஈறுகளிலும் படுமாறு நன்றாகத் தேய்த்து விட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின் சுத்தமான தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படிச்செய்தால் பற்களில் ஏற்படும் கறை போய்விடும். ஈறுகளும் பலப்படுமாம். இந்தப்பழத்திலிருக்கும் மாங்கனீஸ் உப்புச்சத்து நமது எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து வாசனையூட்டிய பால், மில்க் ஷேக், ஐஸ்க்ரீம், கேக், பை(pie) இன்னும் எத்தனையோ ஐட்டங்களைச்செய்யலாம். மருந்து சாப்பிடப் படுத்தும் சின்னக்குழந்தைகள்கூட இதன் வாசனை சேர்க்கப்பட்ட மருந்துகளாயிருந்தால் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். எல்லோருக்கும் பிடித்தமான இந்தப்பழம் சிலருக்கு மூச்சுத்திணறல், வாய்ப்புண் போன்ற ஒவ்வாமையையும் உண்டாக்கலாம்.
இந்தப் பழத்தை வாங்கி வந்து இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். அதற்கு மேல் தாங்காது. அழுக ஆரம்பித்து விடும். ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கூடுதலாக இரண்டு நாள் அவ்வளவுதான். இப்பொழுதெல்லாம் பழங்களின் மேலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுவதால் திராட்சை போன்று இதையும் தண்ணீரில் கழுவிச்சுத்தப்படுத்தி உபயோகிப்பது நல்லது. வாங்கி வந்த பழங்களை சாப்பிடுமுன் கொஞ்சத்தைச் சுட்டு வைத்தேன். சுடுவதற்கு ஏற்ற இடம் ஏது?.. அடுக்களைதானே. அதுதான் இங்கே ஷூட்டிங் ஸ்பாட். அடுத்தது காட்டும் பளிங்காய்ப் பளபளத்த மேடை வா.. வா.. என்று அழைக்க மேடையில் அழகாகப் பிரதிபலித்த தன்னழகைத்தானே பார்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டது ஸ்ட்ராபெர்ரி. வெள்ளைப்பின்னணிக்கு ட்ராயிங் பேப்பர் உதவி செய்தது :-))
சிவப்பாக இருக்கும் பழங்களெல்லாம் இதயத்தைப்பலப்படுத்துவதிலும், புற்று நோய் வரும் வாய்ப்புகளைக் குறைப்பதிலும், வயதாவதைத் தாமதப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது மார்க்கெட்டில் ஸ்ட்ராபெர்ரி மலிவாகக் கிடைக்கிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே தினமும் அதைச்சாப்பிடலாமே.