Showing posts with label Mumbai. Show all posts
Showing posts with label Mumbai. Show all posts

Friday, 23 March 2012

எங்க ஊர்ல விசேஷம்ங்க..

இன்னிக்கு எங்கூர்லயும் புது வருஷக் கொண்டாட்டம்தான். தமிழ்நாட்ல விஷூன்னும், ஆந்திராவில் யுகாதின்னும் கொண்டாடற மாதிரி மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா”ங்கற பேர்ல புது வருஷம் கொண்டாடப்படுது. இங்கே உள்ள மக்களுக்கு இன்னிக்குத்தான் சித்திரை முதல் தேதியாக்கும். சித்திரையை இங்கேயுள்ளவங்க “சைத்ர”ன்னு சொல்லுவாங்க.

எப்பவுமே பொறந்த ஊரைப்பத்தி மட்டுமே நெனைச்சிட்டிருக்காம, கொஞ்சம் புகுந்த ஊரையும் அப்பப்ப கண்டுக்கணும். என்ன இருந்தாலும் நமக்கு அன்னந்தண்ணி தர்ற இடம் இல்லையோ. அதனாலத்தான் இங்கே உள்ள பண்டிகைகளையும் கொஞ்சம் நாங்க கண்டுக்குவோம்.
சுட்ட படம்...
பண்டிகைக் கொண்டாட்டம்ன்னா என்ன?.. மனசும் வயிறும் குளிர்றதுதானே. அந்தக் கணக்குல நாங்களும் இங்கே உள்ள பண்டிகைகளை அடுக்களையளவில் கொண்டாடுவோம். விளக்கமாச் சொன்னா, அன்னிக்கு எங்கூட்லயும் விருந்து இருக்கும். பக்கத்து ஊட்டு அடுக்களை ஜன்னல்லேர்ந்து நெய்யும் வெல்லமுமா வாசனை மிதந்து வந்து நம்மூட்டுல மணக்கும்போது நம்மால சும்மா இருக்க முடியுதா சொல்லுங்க.

“Gudi Padva” இங்கே வசந்தத்தின் முதல் தினத்தைக் குறிக்குது. ராவணனை அழிச்சப்புறம் ராமன் அயோத்திக்கு வந்த நாள்தான் இதுன்னு சில பேர் சொல்றாங்க. இல்லேல்ல… இன்னிய தினம் ராமன் முடி சூட்டிய நாளாக்கும்ன்னு சில பேர் சொல்றாங்க. அதெல்லாம் இல்லை பிரம்மா இன்னிக்குத்தான் உலகத்தைப் படைக்க ஆரம்பிச்சார்ன்னு இங்கே உள்ளவங்க சொல்லிக்கிறாங்க. சிவாஜி மஹராஜ் சாலிவாகனர்களை வெற்றி கொண்ட தினம்தான் இன்னிய தினம் அப்டீன்னு மஹராஜை தெய்வமாக வணங்கி வழிபடற மராட்டிய மக்கள் விட்டுக் கொடுக்காம சொல்றாங்க. காரணம் எதுவாயிருந்தா என்ன?.. சந்தோஷமாக் கொண்டாடணும். அதானே முக்கியம்.

அமாவாசைக்கு அடுத்து வர்ற முதல் தினத்தை இங்கே பாட்வான்னு சொல்லுவாங்க. வடக்கே ரெண்டு பாட்வா தினங்கள் ரொம்பவும் முக்கியம் வாய்ஞ்சவை. தீபாவளிப் பண்டிகையின்போது கிருஷ்ண பட்சத்துல வர்ற பாட்வாவும், சைத்ர மாசம் சுக்ல பட்சத்துல வந்துருக்கும் இன்னிய பாட்வாவும் கொண்டாட்டத்துக்கான தினங்கள். பண்டிகைக்கு முன்னாடியே வீடு வாசல் எல்லாம் சுத்தம் செஞ்சுருவாங்க. கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் இன்னிக்கு வீட்டு முற்றத்துல சாணமிட்டு மொழுகி வெச்சிருப்பாங்க.

பாட்வா அன்னிக்கு காலைல தீபாவளியன்னிக்கு செஞ்சுக்கற மாதிரியே அப்யங்க ஸ்நானம் எல்லாம் செஞ்சு, புது ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்குவாங்க. வாசல்ல அலங்காரத்தோரணம், மாவிலைத்தோரணம், ரங்கோலின்னு பண்டிகை களை கட்டிரும்.

இப்ப Gudi-ஐ வீட்டுத்தலைவர் தயார் செய்வார். ஒரு நீளமான மூங்கில் கம்பையெடுத்துக்கிட்டு அதோட ஒரு நுனியில் அழகான ஜரிகை போட்ட புதுத்துணியைக் கட்டி வைப்பாங்க. சில வீடுகள்ல நல்ல அழகான துப்பட்டாவையோ அல்லது புதுப்புடவையையோ கட்டி விடறதும் உண்டு. சில புத்திசாலி தங்க்ஸுகள் இதுக்குன்னே வெலை கூடுன புடவையா எடுத்துக்கறது வழக்கம். எப்படியும் அது அவங்க கைக்குத்தானே போய்ச் சேரப்போவுது.

அப்றம் நல்லா பளபளன்னு பொன்னு போலத் துலக்கி வெச்சிருக்கும் தாமிரச்சொம்பை கம்பு நுனியில் கவிழ்த்து வைப்பாங்க. சில வீடுகள்ல வெள்ளிச்சொம்பையும் வைக்கிறதுண்டு. அப்றம் பூமாலை, சர்க்கரை மாலை, மாவிலைத்தோரணம் இல்லைன்ன ஒரு கொத்து வேப்பிலை எல்லாம் போட்டு அலங்கரிச்சு வெச்சதுமே பார்க்கறதுக்கு ஒரு அம்சமா ஆகிரும். இதை குடும்பத்தலைவர் வீட்டு வாசல்ல வலப்பக்கம் கொண்டாந்து வெச்சு, அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, அட்சதை போட்டு தூப தீபம் காட்டி ஆராதனை செய்வாங்க. பூஜை முடிஞ்சதும் யுகாதிக்கு நாம செய்யறது மாதிரியே இங்கியும் வேப்பங்கொழுந்து, ஓமம், வெல்லம் இத்யாதிகளை அரைச்சு உருண்டை பிடிச்சு பிரசாதமா முதல்ல சாப்பிடுவாங்க.


இந்த 'Gudi'க்கு பிரம்மாவின் கொடின்னும் இன்னொரு பெயர் உண்டாம். கொடிதான் மழுவி 'குடி'ன்னு ஆகிருச்சு போல இருக்கு. உசரமான வீடுகள்லயும் கட்டிடங்கள்லயும் மூங்கில் கம்பு நுனியில் பளபளன்னு காத்துல பறக்கற துணிகள் அசப்புல பார்க்கறதுக்கு கொடி மாதிரியேத்தான் தோணும். காலையில் ஏத்தப்படற இந்தக்கொடி சாயந்திரம் சூரிய அஸ்தமனம் சமயம் எடுக்கப்பட்டுரும்.

சாமி கும்பிட்டு, முடிஞ்சதும் வீட்ல செஞ்ச இனிப்பை நைவேத்தியமா படைக்கிறதுண்டு. இன்னிக்கு பூரி, ஸ்ரீகண்ட், பூரண்போளின்னு விருந்து அமர்க்களப்படும். சில வீடுகள்ல சேமியா கீர் செய்யறதும் உண்டு. எனவே ஊரோடு ஒத்து வாழும் முறைப்படி எங்கூட்லயும் இன்னிக்கு கீரும், பூரண்போளியும் செஞ்சாச்.
பூரண் போளி..
இந்த குடி பாட்வா அன்னிக்கு எந்த ஒரு சுபகாரியம் ஆரம்பிச்சாலும் அது பன்மடங்காப் பெருகும்ன்னு ஒரு நம்பிக்கை உண்டு. நம்மூர் அட்சய திருதியை மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். புது வீட்டுக்கான பத்திரப் பதிவுகள், அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செஞ்சுக்கறதுன்னு இன்னிக்கு ரியல் எஸ்டேட் காரங்க காட்டுல ஒரே அடைமழைதான். நாலஞ்சு நாளாவே செய்தித்தாள்கள்ல தள்ளுபடிக்கான விளம்பரங்கள்தான் பக்கங்களை அடைச்சுக்கிட்டு இருக்குது.

வடக்கே அட்சய திருதியை, குடி பாட்வா, நவராத்திரி, அப்றம் தந்தேரஸ் இந்த நாலு தினங்களையும் “ஸாடே தீன் முஹுரத்”ன்னு ரொம்பவும் விசேஷமாச் சொல்லுவாங்க. இந்த தினங்கள் முழுக்க நல்ல நேரமாத்தான் இருக்குமாம். ராகு, எம, இத்யாதிகளையெல்லாம் கடவுள்கள் கெட்டவுட் சொல்லிருவாங்களாம். அதனால அன்னிக்கு முழுக்க கல்யாணம், கிரகப்பிரவேசம்ன்னு எந்தவொரு விசேஷமானாலும் எப்போ வேண்ணாலும் நடத்திக்கலாம்.” முஹூர்த்தம் முடியப்போறது, பொண்ணைக் கூப்பிடுங்கோ”ன்னு இன்னிக்கு பண்டிட்ஜீ சீன் போட முடியாது.

‘ஸாடே தீன்’ அப்டீன்னா மூணரைன்னு அர்த்தம். மொத்தம் நாலு தினங்கள் வருது. அப்றம் அதென்ன ஸாடே தீன் கணக்கு??. எங்கியோ இடிக்குதேன்னு என்னோட தோழியான மராட்டிய மைந்தி ஒருத்தங்க கிட்ட கேட்டேன். அவங்க சொன்ன விளக்கப்படி அட்சய திருதியையை முழுக் கணக்குல எடுத்துக்க மாட்டாங்களாம். அது அரை நாள் கணக்குலதான் வருமாம்.

இந்தியா ஒரு விவசாய நாடு. அதனால இங்கே எல்லாப் பண்டிகைகளுமே ஏதோ ஒரு விதத்துல விவசாயத்தோட பலனை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறதாவே அமைஞ்சுருது. இங்கேயும் கிராமப்புறங்கள்ல "Gudi Padva" அன்னிக்கு விவசாயிகள் பொன்னேர் பூட்டி உழவை ஆரம்பிக்கிறது வழக்கம். வெவ்வேறு பெயர்கள்ல கொண்டாடப்பட்டாலும் பண்டிகை ஒண்ணுதானே. வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களல்லவா நாம். ஆகவே,

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..



Wednesday, 11 January 2012

மும்பை-2012 புகைப்படக் கண்காட்சியும் நானும்..

அடுத்த வருஷங்களுக்கான அறிவிப்பு..
ஏதாவது ஒரு பொதுவான தொழில்ல இருக்கற நண்பர்கள் உதவி தேவைப்படும் சமயங்களில், தங்களுக்குள்ளயே ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறது சகஜம்தான். இப்ப நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குவோம். நமக்கு தெரிஞ்ச தொழில் நுட்பங்களை இடுகையிடறது மூலமா, நிச்சயம் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறோம்தானே.

1970-களில் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வெச்சிருந்த சில நண்பர்களும் அப்படித்தான் தங்களுக்குள்ளேயே தொழில் முறையில் உதவி செஞ்சுக்கறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. புகைப்படத் துறையில் நாளுக்கு நாள் எவ்வளவோ புதுப்புது முயற்சிகள் நடக்குது, புகைப்படக் கருவிகள், லென்சுகள்ன்னு சந்தைக்கு தெனமும் எவ்வளவோ விதவிதமா வந்துக்கிட்டே இருக்குது. இது தவிர, எடுத்த படத்தை டெவலப் செய்யறது, ப்ரிண்ட் போடறது, அதுகளை ஆல்பமாக்குறதுன்னு எவ்வளவோ வேலைகள் இருக்குது. (அப்ப டிஜிட்டல் காலம் வரலைங்கறதை நினைவில் கொள்க).


அந்த வேலைகளில் ஏற்படற சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுல ஆரம்பிச்சு, ஆல்பம் தயார் செய்யறதுக்கான தரமான பொருட்கள், பிலிம், எங்கே டெவலப் செய்யக் கொடுத்தா வேலை தரமானதா இருக்கும்கற தகவல் உதவிகள் உட்பட எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்குவாங்க. இப்ப நம்ம ‘பிட்,ஃப்ளிக்கர்’ எல்லாம் ஆத்துதே.. அதே கடமையைத்தான் அப்ப அவங்களும் ஆத்திக் கிட்டிருந்துருக்காங்க.

அப்பத்தான், இதை மாதிரி தகவல் உதவிகள் தேவைப்படற மத்த புகைப்பட ஆர்வலர்களுக்கும் உதவியா இருக்கற மாதிரி நம்ம வட்டத்தை பெரூசாக்கினா என்னான்னு அவங்களுக்கு தோணியிருக்கு. மளமளன்னு ஏற்பாடுகள்ல இறங்கி, 1973-ம் வருஷம் ஜூன் 23-ம் தேதியன்னிக்கு சுமார் இருபத்தஞ்சு நண்பர்கள் கூடி, Photographic Dealers Association(PDA)ன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. காலப்போக்குல வட்டம் 3400 மெம்பர்களைக் கொண்டதா வளர்ந்து தன்னோட பேரை All India Photographic Trade & Industry Association அப்டீன்னு மாத்திக்கிடுச்சு.
கண்காட்சிக்குள் ஒரு கண்காட்சி..
புகைப்படக் கலையை ஊக்குவிக்கறதுக்காகவும், லேட்டஸ்டான டெக்னிக்குகளை மக்கள் கிட்ட பகிர்ந்துக்கவும் என்ன வழின்னு யோசிச்சப்பதான் மக்களெல்லாம் ஒரு கூரையின் கீழ் கூடி எக்ஸிபிஷன் நடத்தினா என்ன?ன்னு தோணியிருக்கு. புகைப்படக் கலை சம்பந்தமா இருக்கற எல்லா விஷயங்களும் ஒரு கூரையின் கீழ் கிடைக்குதுன்னா நல்லதுதானே.. அப்படியே மக்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் கண்காட்சியா வெச்சாங்கன்னா, புது விஷயங்களையும் கத்துக்கிடலாம்ன்னு முடிவெடுத்து 1978-ம் வருஷம் முதற் கொண்டு ‘போட்டோ ஃபேர்’ நடத்த ஆரம்பிச்சுருக்காங்க. அப்பலேர்ந்து இன்னி வரைக்கும் அதே கோரேகாவ் (Goregaon) NSE மைதானத்துல இருக்கற Bombay Exhibition Centre-லதான் இது நடக்குதுங்கறது ஒரு விசேஷச் செய்தி. இங்கே மட்டும் இன்னும் மும்பையாக்காம விட்டு வெச்சிருக்காங்களேன்னு யோசனையோட பார்த்தேன். ஒரு கேட்ல மட்டும் Bombay-ஐ சுரண்டி எடுத்துட்டு, வெறுமே எக்ஸிபிஷன் செண்டரை மட்டும் விட்டு வெச்சிருக்காங்க. மத்த கேட்ல இன்னும் பாம்பேயோட அதிகாரம்தான் நடக்குது.
கண்காட்சி நடக்குற இடத்துல உள்ளே ஸ்டால் போடறவங்களுக்காகவும், அதெல்லாம் சரியாயிருக்கான்னு செக் செய்யறதுக்காக வந்து போற பார்வையாளர்களுக்கும் தனித்தனியா ஆன்லைன்ல ரெஜிஸ்ட்ரேஷன் வசதி செஞ்சுருந்தாங்க. அதெல்லாம் வெளியூர்லேர்ந்து வரவங்களுக்குத்தான். உள்ளூர்க் காரங்க நமக்கெதுக்கு? நாம நேரடியா டீல் செஞ்சுக்குவோம்ன்னுட்டு கிளம்பிட்டோம். நீள நீளமான மேசைகள்ல விண்ணப்ப படிவங்களை வெச்சுக்கிட்டு நமக்காகக் கால் கடுக்க காத்துட்டிருக்காங்க. படிவத்தை நிரப்பிக்கிட்டு, பக்கத்துலயே இருக்கற ஜன்னல்ல நூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுத்ததும், கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து காமிராவைப் பாருங்கன்னு சொல்லி நம்மைப் படம் எடுத்துக்கறாங்க. ஆச்சு.. ஐடி தயார். அதையும் ஐடியை கழுத்துல போட்டுக்கறதுக்காக ரிப்பனில் கோர்த்த கார்டையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துடறாங்க. வாங்கிட்டு நேராப் போயி க்யூவில் நின்னு உள்ளே நுழைஞ்சோம்.

பீரங்கியை.. அதாங்க.. நம்ம கேனானை தவிர மத்தவங்க எல்லாம் ஸ்டால் போட்டுருக்காங்க. ஒலிம்பஸ், ஃப்யூஜியோட நம்ம நிகானும் அங்கே நிக்கார். மொதல்ல ஒவ்வொரு வரிசையா பார்த்துட்டே வருவோம். வேணுங்கறதை மனசுல முடிச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பொருளை கம்பேர் செஞ்சு வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்திருந்தேன். அதான் ஒவ்வொரு பொருளுக்கும் நாலஞ்சு கடைகள் தொறந்து வெச்சுருக்காங்களே..
ஸ்டால்கள்..
முந்தின தடவை போயிருந்தப்ப போட்டோ, வீடியோ காமிராக்கள், லென்சுகள்ன்னு நிறைய கடைகள் இருந்தது. இப்ப ஒரே ஒரு கடையை தவிர மத்த இடங்கள்ல காமிராக்களை காணோம். ஜூம் லென்சுகள் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா இருந்தது. ஆனா sigmaவுல மட்டும்தான் லென்சுகள் வெச்சிருந்தாங்க. நாலஞ்சு கடைகள் பார்த்துட்டு, ஒரு கடையில் வாங்கினாத்தானே நமக்கு திருப்தி. வெறுமே ஒரே ஒரு கடையில் பார்த்துட்டு வாங்கினா நம்ம கொளுகையை விட்டுக் கொடுத்துட்டதா ஆகிடாதோ.. அதனால வெறுமே ட்ரைபாட் மட்டும் வாங்கிக்கிட்டேன். லென்ஸ் வேணும்னா இங்கே இருக்கற வாஷிக்குப் போனா ஆச்சு. இன்னொரு சமயம் வாங்கிக்கலாம். மொதல்ல எனக்கு எந்த மாதிரி லென்ஸ் தேவைங்கறதை மொதல்ல முடிவு செஞ்சுட்டு அப்றம் போகலாம்ன்னு ஒத்திப் போட்டுட்டேன்.

போட்டோ ஸ்டுடியோ வெச்சுருக்கறவங்களுக்கு இந்தத் தடவை நடந்த கண்காட்சி ரொம்பவே உபயோகமா இருந்துருக்கும்.ஃப்ளாஷ் லைட்டுகள், ரிஃப்ளெக்டர்கள், ட்ரைபாடுகள், பின்னணிக்கான துணிகள், அப்றம் வீடியோவுலயும், போட்டோக்கள்லயும் உபயோகப் படுத்தறதுக்கான எக்கச்சக்கமான தீம்களுக்கான சாப்ட்வேர்கள், போட்டோ ஃப்ரேம்கள், வீடியோ எடிட்டிங்குக்கான சாப்ட்வேர்ன்னு கொட்டிக் கிடந்துது. இப்பல்லாம் கல்யாண வீடியோக்கள், போட்டோக்களை 3D தொழில் நுட்பத்துல தயாரிக்கிறதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு. விருப்பமிருக்கறவங்க பேரைப் பதிஞ்சுகிட்டா, எப்படித் தயாரிக்கிறதுன்னு பயிற்சி கொடுப்பாங்க. பயிற்சி எடுத்தப்புறம் அந்த முறையில் வீடியோக்கள், போட்டோக்கள்ன்னு தயார் செஞ்சு அசத்தலாம். அதுக்குன்னு இருக்கும் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு வீடியோக்களைப் பார்த்து எஞ்சாயலாம் :-)

இப்பல்லாம் யாரும் பெயர் பொறிக்கறதில்லையாம்...
இப்பல்லாம் கப், தலையணை, ப்ளேட், பொம்மை இத்யாதிகள்ல தங்களோட போட்டோக்களை பதிஞ்சு வெச்சுக்கற வழக்கம் பெருகிட்டு வருது. முக்கியமா குட்டீஸ் இதை ரொம்பவே விரும்பறாங்க. அதுக்கான கருவிகளும் காணக்கிடைச்சது. அதே மாதிரி சினிமா, டெலிவிஷன் ஷூட்டிங்குகளுக்கு உபயோகப் படுத்தற கிரேன்கள் அங்கங்கே கொக்கு மாதிரி தலையை நீட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்குது. ‘ஸ்டெடிகேம்’ன்னு ஒரு வகை காமிரா. இது கூடுதல் அதிர்வுகள் இல்லாம ஷூட் செய்ய ஏதுவா இருக்குமாம். மத்த காமிராக்கள் மாதிரி இதை ட்ரைபாடிலோ, ட்ராலியிலோ வைக்க தேவையில்லை. காமிராமேன் உடம்புல கட்டிக்கிட்டு நடிகர், நடிகைகள் கூடவே நடந்து போய் நடிப்பைப் படம் பிடிக்க ஏதுவா Garrett Brown என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இதை உடம்புல கட்டிக்கிட்டு ரெண்டு பேர் அங்கியும் இங்கியும் நடந்து டெமோ கொடுத்துட்டிருந்தாங்க.
ஸ்டெடியாப் படம் புடிக்கும் ஸ்டெடிகேம்..
கண்காட்சி நடந்த நாட்கள் முழுசும், பிரபல போட்டோகிராபர்கள் வந்து, வொர்க் ஷாப்கள் நடத்துனாங்க. அழகழகான போட்டோக்களெல்லாம் கண்காட்சிக்கு வெச்சிருந்தாங்க. விட்டுட்டு வர மனசேயில்லை. போன தடவை ஃபேஷன் ஷோ சமயத்துல மாடல்கள் ஒவ்வொரு கம்பெனிகளோட காமிராக்களைக் கையில் பிடிச்சுட்டு பூனை நடை நடந்துட்டிருந்தாங்க. இந்தத் தடவை portrait மாடலிங்காம். அங்கங்கே நின்னு போஸ் கொடுத்துட்டிருந்தாங்க. தொழில் முறை போட்டோ கிராபர்கள் சந்தர்ப்பத்தை உபயோகிச்சுக்கிட்டு சுட்டுத் தள்ளிட்டிருந்தாங்க. என்னை மாதிரி கத்துக்குட்டிகள் ‘ஞே’ன்னு வேடிக்கை பார்த்துட்டு நகர்ந்து போயிட்டோம்.
வளைச்சு வளைச்சு படம் எடுத்தாலும் அசராம போஸ் கொடுத்தவங்க..
காஃபிடோரியா பரவாயில்லாம இருக்கு.இன்னும் நாலு டேபிள் சேர் போட்டுருந்தா, அலைஞ்சு திரிஞ்சு அலுத்த கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துட்டு, வாய்க்கு வேலை கொடுத்துருக்கலாம். இல்லாததால மியூசிக் சேர் விளையாண்ட மாதிரி, உக்காந்துர்ந்தவங்கள்ல யாரு எழுந்திரிச்சுப் போறான்னு கவனிச்சுட்டு இருந்துட்டுக் காலியான நாற்காலியைக் கபால்ன்னு கவ்விட்டு வர வேண்டியதாப் போச்சு.

அடுத்த வருஷத்துக்கான புகைப்படக் கண்காட்சி இந்தியத் தலை நகர்ல நடக்கப் போவுதாம். துண்டு போட்டு இடம் புடிக்க ரெடியா இருந்துக்கோங்க. அதுக்கு அடுத்த வருஷம் அதாவது 2014-ல் மறுபடியும் மும்பை வருதாம்.


LinkWithin

Related Posts with Thumbnails