எந்தவொரு செயலையுமே ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு.சுமாராகவோ நன்றாகவோ.. எப்படிச்செய்தாலும் சரி,.. அதற்கு ஒரு சின்னப்புன்னகையாகவோ மெல்லிய தலையாட்டலாகவோ கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அதீதமானது. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற உற்சாகம் நிச்சயமாக ஊற்றெடுக்கும். அதுவே மேலும் முன்னேறவும் தூண்டும்.
என்னதான் எதையும் எதிர்பார்க்காமல்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், "இன்னிக்கு சமையல் நல்லாருக்கு.." என்று ரங்க்ஸ்கள் வாய்தவறிச் சொல்லி விட்டால் நாம் மகிழ்ந்துதானே போகிறோம். தினமும் சொல்லத்தான் நம் புத்திர சிகாமணிகள் இருக்கிறார்களே :-) இந்த ஒரு வார்த்தைக்காகவே அடுத்த வேளைச் சமையலை இன்னும் ருசியாகச் செய்து போடுகிறோமா இல்லையா? :-))
வீட்டில் கிடைக்கும் சின்ன அங்கீகாரமே நம்மை இவ்வளவு உற்சாகப் படுத்தும்போது, ஊரளவில் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தாதா என்ன? அதுவும் பெரிய பத்திரிகைகள் நம்மையும் நம் எழுத்துகளையும் கவனிக்கிறார்கள், வாசிக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது நம் மதிப்பும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் உயர்கிறது. "பரவாயில்லை,.. ஏதோ உபயோகமாகச் செய்கிறாள்" என்று அவர்களும் நம்மை எழுத்தாளினி ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றுதானே கேட்கிறீர்கள்? நிற்க.. இயலாதவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்க. சென்ற ஞாயிறன்று வெளியான தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள் தொகுப்பில் என் பெயரையும் இணைத்து இனிய அதிர்ச்சி கொடுத்து விட்டார்கள். ஃபேஸ்புக்கில் ஜலீலாக்கா பகிர்ந்திருந்ததைப் பார்த்து கை தவறுதலாக என் பெயரை டைப்பிட்டார்களோ என்று நினைத்து வசந்தத்தின் இணைய பக்கத்திற்குப் போய்ப்பார்த்தால் செய்தி நிஜம். வலைப்பூவையும் அறிமுகம் செய்திருக்கிரார்கள். பக்கத்தைப் பெரிதாக்கிப்பார்த்து சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். உடனேயே ஸ்க்ரீன் ஷாட்டும் எடுத்து விட்டேன். நாளப்பின்னே 'நீயெல்லாம் இலக்கிய வியாதி இல்லை' என்று பல்டியடித்து விட்டால் நம் நிலைமை என்ன? காலத்துக்கும் அழியாதபடி கல்வெட்டில் செதுக்கியாயிற்று :-))
என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நம் மதுமிதா, மனோம்மா,சுசீலாம்மா, அருணா, ருக்மணிம்மா, புவனேஸ்வரி ராமநாதன், கோமதிம்மா, ஜலீலாக்கா, ஸாதிகா, பத்மஜா, கீதா இளங்கோவன், மலிக்கா அப்புறம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் புதுகைத்தென்றல் எல்லோருக்கும் வாழ்த்துகள்.இதில் ஓரிருவரைத்தவிர எல்லோருமே நம் தோஸ்துகள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
ஃபேஸ்புக்கிலும் தனிமடல்களிலும் குழுமங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.
ஃபேஸ்புக்கிலும் தனிமடல்களிலும் குழுமங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

