Showing posts with label நினைவுச்சின்னங்கள். Show all posts
Showing posts with label நினைவுச்சின்னங்கள். Show all posts

Monday, 25 April 2016

நினைவுச்சின்னங்கள்- என் காமிராப் பார்வையில்(3)

சி.எஸ்.டி ரயில் நிலையம்
நாட்டிலேயே பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையம் யுனெஸ்கோவால் 2004ல் உலக  பாரம்பரிய மிக்க கட்டிடம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்து நான்கு கி.மீ பயண தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் முதல் ரயில் பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ். மும்பை கிழக்குக்கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரி பந்தர் எனும் பகுதியை ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களைப் பாதுகாத்து வைப்பதற்காகத்  தேர்ந்தெடுத்தனர். இங்கே ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்ததால் கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவை கருதி ரயில் நிலையக் கட்டடத்தைப் பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. சுமார் பத்து மாதங்கள் பல்வேறு ரயில் நிலையங்களைச் சுற்றிப்பார்த்து ஆராய்ந்த பின்னர், மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதைப்போலவே மும்பை ரயில் நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகோவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில் நிலையம். மர வேலைப்பாடு, டைல்ஸ், அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பிரம்மாண்டமாக உருவான ரயில் நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியைப் பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் எனப் பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டுகளையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர். இச்சிறப்பு மிக்க ரயில் நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய ரயில்வேயின் தலைமையகமாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது. 
ரயில் நிலையக்கட்டிடத்தின் முன்புறத்தோற்றம்
கட்டடத்தின் பின்புறத்தோற்றம்.

கட்டடத்தின் உச்சியிலிருக்கும் முன்னேற்ற தேவியின் சிலை 1969-ல் இடியால் பாதிக்கப்பட்டு, செப்பனிடப்பட்ட பின்னர் மறுபடியும் நிறுவப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் பூதவுடல், தங்கச்சி மடம் பஞ்சாயத்துக்குட்பட்ட பேய்க்கரும்பு எனும் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் இப்பொழுது மணி மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.


ஃப்ளோரா ஃபவுண்டன்
ரோமானிய தேவதையான ஃப்ளோராவின் பெயரைத்தாங்கி நிற்கும் இச்செயற்கை நீரூற்று மண்டபம் மும்பையின் சி.எஸ்.டி ரயில் நிலையத்திலிருந்து அருங்காட்சியகம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. பெருவாரியான நேரங்களில் காய்ந்து கிடக்கும் இந்நீரூற்று மண்டபத்தில் எப்பொழுதாவது நீரூற்று வேலை செய்யும். மும்பை வர்த்தகச்சந்தைக்கட்டிடம், உயர்நீதி மன்றம், மும்பைப் பல்கலைக்கழகம், ஆகியவை இதன் அருகண்மையில் அமைந்துள்ளவற்றில் முக்கியமானவையாகும். இம்மண்டபத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் சர்ச்கேட் ரயில் நிலையமும் அமைந்திருக்கிறது. ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்புக்கற்கள் போர்ட்லேண்டிலிருந்து கொண்டு வரப்பட்டு கட்டப்பட்ட இம்மண்டபத்தின் உச்சியில் பூக்களின் தேவதையான ஃப்ளோரா ஒயிலாக நின்று கொண்டு அக்காலத்திலிருந்து தற்காலம் வரை மும்பை அடைந்து வரும் மாற்றங்களைக் கண் கொட்டாமல் கவனித்து வருகிறாள். அவளுக்குத்துணையாக நான்கு தூண்களிலும் மேலும் நான்கு ரோமானிய தேவ,தேவதைகள் இருக்கிறார்கள். ஹூதாத்மா சவுக் என இப்பொழுது அழைக்கப்படும் இப்பகுதியில்தான் அக்காலத்தில் மும்பைக்கோட்டை இருந்தது, நகர விரிவாக்கத்திற்காக அப்போதைய கவர்னரான Sir Batle Fraire என்பவரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இக்கோட்டைக்குள் நுழைய அப்போலோ, சர்ச்(புனித தாமஸ் கதீட்ரல்), பஜார் என மூன்று நுழைவாயில்கள் இருந்தன. இவற்றில் கதீட்ரலின் நுழைவாயில் இருந்த அதே இடத்தில்தான் தற்சமயம் ஃப்ளோரா ஃபவுண்டன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முதலில் பைகுல்லாவிலிருக்கும் விக்டோரியா தோட்டத்தில் நிறுவப்படுவதாக இருந்து, இறுதியில் சர்ச் கேட் பகுதியில் இடம் பெற்றது. உலகளாவிய புராதானச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இம்மண்டபம் மும்பையின் மிக முக்கியமான அடையாளமாகும்.


"கேட் வே ஆப் இண்டியா"
மும்பையின் "கேட் வே ஆப் இண்டியா" அதாவது இந்தியாவின் நுழைவாயிலைப்பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இதைப்பற்றி முன்னெப்போதோ எழுதியது. "கேட் வே ஆஃப் இண்டியா" வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரை, நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-)// 



//நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.// என எப்பொழுதோ எழுதிய சாரல் துளியொன்று நினைவுக்கு வருகிறது. ஆனாலும் அவை கிளறி விட்ட அந்த வாசம் நெடு நாட்களாய் மணத்துக்கொண்டே இருக்கிறது மனதில் :-)

Monday, 12 August 2013

நினைவுச்சின்னங்கள் - என் காமிராப்பார்வையில்: 2 (சர்க்கா-மும்பை)

பறவைகள் வந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதோ, அல்லது கிளம்பிப் போகும்போதோ, அசுத்தப்படுத்தப் படுவதற்கும், நினைவு நாட்கள், விசேஷ நாட்களில் மாலை சுமந்து நிற்பதற்கும், எதிர்க்கட்சியினரால் உடைக்கப்படுவதற்கும் மட்டுமல்லாது, அவர்கள் வாழ்ந்த காலங்களையும் அவர்கள் செய்த செயல்களையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன அவர்களது நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்ட சிலைகள். இவ்வாறு சிலைகள் மட்டுமன்றி, ஒரு சில நிகழ்வுகளை என்றென்றும் நினைவு கூரும் வகையில் ஒரு சில கட்டிடங்களோ அல்லது அமைப்புகளோ கூட நினைவுச்சின்னங்களாக எழுப்பப்படுகின்றன.

இன்னும் சில, அப்படியெல்லாம் எந்தவொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமலே எழுப்பப்பட்டாலும் நாளடைவில் நினைவுச்சின்னங்களாக ஆகிவிடுகின்றன. மும்பையில் 'க்ராஸ் மைதான்' என்றழைக்கப்படும் சிலுவை மைதானத்திலிருக்கும் 'சர்க்கா' அப்படியானவற்றில் ஒன்று. மும்பையிலிருக்கும் 'கேட் வே ஆஃப் இந்தியா'வைப்போன்று இப்போது சர்க்காவும் மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது. இந்த சர்க்கா 'நூரு கரீம்' என்ற ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்டது. இவர் இதை, மும்பையில் டாடா ஸ்டீல் கம்பெனியும் I&Bயும் (Indian Architect and Builder) சேர்ந்து நடத்திய architectural and engineering design போட்டிக்காக வடிவமைத்திருந்தார். நாடு முழுவதுமிலிருந்து சுமார் நூறு பங்கேற்புகள் அந்தப்போட்டியில் இடம்பெற்றன. நூறையும் பின்னுக்குத்தள்ளி விட்டு நூரு கரீமின் படைப்பு போட்டியில் வென்றது. அப்படியென்ன சிறப்பு அந்தப்படைப்பில் இருக்கிறது?.
 நாட்டியமாடும் சர்க்கா..
இந்தியா என்றதுமே எப்பொழுதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காந்தியும், சர்க்காவுமாகத்தான் இருக்கும். அன்னியப் பொருட்களைப் பகிஷ்கரித்து அவர் உபயோகிக்கச் சொன்ன சுதேசிப்பொருட்களில் முக்கிய இடம் பெற்றது கதர்தானே. அதை நூற்க அவர் உபயோகித்த சர்க்காவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் நூரு கரீம் இதை உருவாக்கியிருந்தார். 'சமகாலத்திய அளவில் இந்தியாவிற்கான அடையாளம்' என்பதைத் தலைப்பாகக் கொண்டிருந்த போட்டியில், என்றுமே இந்தியாவிற்கு முக்கிய அடையாளமாக விளங்கும் சர்க்கா ஜெயித்ததில் ஆச்சரியமென்ன! நமது தேசியக்கொடியிலிருக்கும் அசோகச்சக்கரம் கூட ஒரு வகையில் சுழலும் சக்கரத்தைக்கொண்டிருக்கும் சர்க்காவைத்தானே நினைவு படுத்துகிறது.

வட்டத்துக்குள் கட்டம் கட்டப்பட்டிருப்பதுதான் மும்பையின் மேற்கு ரயில்வேயின் தலைமையகம்..
சுமார் 30 அடி அளவு உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த சர்க்கா மும்பைக்கு வந்த விதம் சுவாரஸ்யமானது. காந்தியின் கொள்கையைப் பிரதிபலிப்பதால் இதைக் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தின் காந்தி நகரிலும், அவர் ஒரு தடவை சிறை வைக்கப்பட்டிருந்த பூனாவிலும் நிறுவ இடம் பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் சரிப்படாமல் கடைசியில், க்ராஸ் மைதானத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த ஓவல் (Organisation for Verdent Ambience and Land (OVAL)) ட்ரஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இதை இங்கே நிறுவினார்கள். இதைத்தான் 'வரணும்ங்கறது வராம இருக்காது' என்று சொன்னார்களோ :-))
கடிக்க வரும் சுறாமீனை நினைவுபடுத்துகிறது இந்தக்கோணம்..
முப்பதடி உயர அளவில் கைமுறுக்கு மாதிரியும் ஜாங்கிரி மாதிரியும் முறுக்கித் திருகிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி காட்சி தருகிறது. சர்க்கா சுழலுவதையே இதன் திருகல்கள் குறிக்கின்றனவாம். காந்தியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் கடந்த 2011-ம் வருஷம், அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று டாடா ஸ்டீலின் வைஸ் சேர்மன் முத்துராமன் முன்னிலை வகிக்க இயக்குனர் R.K.கிருஷ்ணகுமார் திறந்து வைத்திருக்கிறார். இங்கே வரும் மக்கள் விவரம் அறிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாகக் கல்வெட்டும் இருக்கிறது. தஞ்சாவூரில்தான் கல்வெட்டு இருக்குமா என்ன? மும்பையிலும் இருக்கிறதாக்கும் :-)
வாஸ்து எதுவும் பார்க்காமலேயே இந்த சர்க்கா சரியான இடத்தில் அமைந்து விட்டது போலிருக்கிறது. ஒரு புறம் வி.டி ஸ்டேஷன், அடுத்த புறம் சர்ச் கேட் ஸ்டேஷன் என்று இரண்டு பிரபலமான ரயில் நிலையங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு மும்பையின் பிரபலமான ஃப்லோரா ஃபவுண்டனுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. வி.டி. மற்றும் சர்ச் கேட் நிலையங்களை இணைக்கும் பாதையாகவும் இந்த மைதானம் அமைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கும், பொழுதைப்போக்க வருபவர்களுக்கும் குறைவில்லை. இந்தப்பாதைதான் மும்பையின் சரித்திரப்புகழ் பெற்ற காவூ கலி(khau gali) என்று அழைக்கப்படுகிறது. மராட்டியில் காவூ என்றால் தின்பண்டம். gali என்றால் தெரு அல்லது சந்து என்று அர்த்தம். பேல்பூரி, சேவ்பூரி, வடாபாவ், ஆலு டிக்கி, போன்றவையும் மேலும், விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் எப்போதும் விற்பனையாகிக்கொண்டிருப்பதால் இரண்டு ஸ்டேஷன்களிலும் இருந்து வெளி வரும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குப்போகுமுன் இங்கு வந்து பேட்பூஜா அதாவது வயிற்றுக்கும் சிறிது ஈயாமல் செல்வதில்லை. பற்றாக்குறைக்கு கிரிக்கெட்டு விளையாடும் சிறுவர்களுக்கும் குறைவில்லை. எப்பொழுதும் ஜேஜேவென்று இருக்கும், புகழ்பெற்ற ஃபேஷன் ஸ்ட்ரீட்டும் இங்கேதான் இருக்கிறது.
புதுக்கோணம்.. புதுத்தோற்றம்..
சர்க்காவின் அருகிலேயே குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டுச் சாதனங்களடங்கிய பூங்காவும், வருபவர்கள் அமர்ந்து இளைப்பாற சிமிண்டுத்திண்ணைகளும் இருப்பதால் குடும்ப சகிதம் வருபவர்களும் உண்டு. வி.டி ஸ்டேஷனிலிருந்து டாக்சி மூலம் இங்கே வரலாம். ஆசாத் மைதான் அருகே என்று சொன்னால் நிறையப்பேருக்குப் புரியும். முதன் முதலில் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு எலும்புக்கூடு போன்று வினோதமாகத் தோன்றத்தான் செய்கிறது. இதற்காகவே மக்கள் இதன் முன் நின்று படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குழந்தைகளோ இதையும் ஒரு விளையாட்டுப்பொருளாக எண்ணி ஏணிப்படிகளில் ஏறுவதுபோல் கடகடவென்று ஏற ஆரம்பித்து விடுகின்றன. இதனருகில் செல்ல அனுமதியில்லை என்றாலும், வெள்ளை வெளேரென்று தந்தம் போல் மின்னும் இந்த அமைப்பு கிட்டே போய்த் தொட்டுப்பார்க்கத் தூண்டுவதென்னவோ நிஜம்.

Wednesday, 25 January 2012

நினைவுச்சின்னங்கள்- என் காமிராப் பார்வையில்.

அமெரிக்காவை மனசுல நினைச்சதும் ஜுவாலை ஏந்தி நிக்கிற சுதந்திரதேவியும், டில்லியை நினைச்சதும் செங்கோட்டையும், மதுரைன்னதும் மீனாட்சியும், ஆக்ரான்னதும் தாஜ்மஹாலும்தான் ஞாபகம் வருது. (வடக்கே உள்ளவங்களுக்கு ஆக்ரான்னதும் வேற ஒரு 'வில்லங்கமான' ஞாபகமும் வர்றதுண்டு). அந்தந்த இடங்களை ஞாபகப்படுத்தற விஷயங்களைத்தானே நினைவுச்சின்னங்கள்ன்னு சொல்றோம். அதுக்காக, திருனேலின்னதும் 'அல்வா'தானே ஞாபகம் வருது. அப்டீன்னா அல்வாதான் திருனேலியோட நினைவுச்சின்னமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது. பின்னே இருட்டுக்கடை எதுக்கு இருக்குதாம்?? காலப்போக்குல அதுவும் நினைவுச் சின்னமா ஆனாலும் ஆகலாம், சொல்ல முடியாது :-) 

ஒவ்வொரு ஊர்லயும் எந்தவொரு கட்டிடத்தைக் கட்டும் போதும், எந்த நோக்கத்துல கட்டப்பட்டாலும் நாட்பட அந்த ஊரைப் பத்தி நினைக்கும் போதே சம்பந்தப்பட்ட கட்டிடமும் நினைவுக்கு வர்ற மாதிரி அந்த ஊரோட வரலாற்றுல இரண்டறக் கலந்துடுது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தோட படத்தைப் பார்க்கிறப்பவும் "அட!!.. இது அந்த ஊராச்சே.."ன்னு சட்டுன்னு அந்த ஊரோட ஞாபகமும் வந்துரும். அதுவும் அந்த ஊர் நாம போய் வந்த ஊராயிருந்தா கேக்கவே வேணாம். அங்கே தங்கியிருந்த நாட்கள், அனுபவங்கள்ன்னு சரசரன்னு கொசுவத்தி பத்திக்கும். இதுல சில கட்டிடங்களைக் கட்டும் போதே அறிஞர்கள், நிகழ்வுகளோட ஞாபகார்த்தமா நினைவுச்சின்னங்களா கட்டினாலும், சில கட்டிடங்கள் மொதல்ல வெறுமே கல்லு மண்ணாலான கட்டிடமா இருந்துட்டு காலப்போக்குல நினைவுச் சின்னங்களாப் ப்ரமோஷன் வாங்கிக்கும். அப்படி என்னோட காமிராவில் பிடிச்சிட்டு வந்த சில நினைவுச்சின்னங்களை, ஃப்ளிக்கரோட நிறுத்திக்காம இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-))

கன்னியாகுமரி: இந்தப் பேரைச் சொன்னதும் குமரியம்மனுக்கு அடுத்தபடியா மனசுல வர்றது விவேகானந்தரோட ஞாபகார்த்தமா கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னம்தான். அமெரிக்கா போறதுக்கு முந்தி அவர் இந்தப் பாறையில் அமர்ந்துதான் தியானம் செஞ்சாராம். அந்த ஞாபகார்த்தமா 1970ல் கட்டப்பட்ட இந்த மண்டபம் அரிச்செடுக்கும் உப்புக் காத்தையும் சுனாமியையும் சமாளிச்சுக் கிட்டுக் கம்பீரமா நிக்குது.

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா: கிட்டப் பார்வையில்..


விவேகானந்தரும், ஸ்ரீபாத மண்டபமும் ஒரு தொலை நோக்குப் பார்வையில்.. 
இந்த காந்தி மண்டபத்தோட படத்தைப் பார்த்த அப்றமும் இது கன்னியாகுமரிதானேன்னு தெரிஞ்சுக்காதவங்க ஒரு நடை கன்னியாரி போயிட்டு வந்துருங்க. கன்னியாகுமரிக் கடல்ல கரைக்கிறதுக்கு முன்னாடி அவரோட அஸ்தியை வெச்சிருந்த ஞாபகார்த்தமா கட்டப்பட்ட இந்த மண்டபத்துல,   மேல் விதானத்துல இருக்கற ஒரு துளை வழியா அஸ்தியை வெச்சிருந்த இடத்துக்கு ஒவ்வொரு வருஷமும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, அதாவது அக்டோபர் 2-ம் தேதி அன்னிக்கு சரியா நடுப்பகல் 12 மணிக்கு சூரிய பகவான் ஒளியபிஷேகம் செஞ்சு அஞ்சலி செலுத்தறதைப் பார்க்கக் கூட்டம் நெரியும். எள்ளு போட்டா எண்ணெய்தான் விழும். 

மும்பையில் மலபார் பகுதியில் தொங்கும் தோட்டத்துக்குப் பக்கத்துல இருக்கற கமலா நேரு குழந்தைகள் பூங்காவில் இருக்குது இந்த பாட்டிம்மாவின் ஷூ.. (பாவம்.. ஒரு ஷூவை இங்கே தொலைச்சுட்டு என்ன சிரமப் படறாங்களோ :-))

மும்பையின் தாஜ் ஹோட்டல்: 565 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல் திரு. ஜாம்ஷெட்ஜி டாடாவால் கட்டப்பட்டு,  1903-ம் வருஷம் டிசம்பர் 16-ம் தேதியன்னிக்கு விருந்தினர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கு. முதலாம் உலகப்போர் சமயத்துல இதை 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையா மாத்தி உபயோகப் படுத்தியிருந்துருக்காங்க.  இதுல படத்தோட இடது பக்கம் இருக்கறது பழைய ஹோட்டல். இதுல நடுவே இருக்கும் வெங்காயக்கூம்பு பகுதியில் ஈஃபில் டவர்ல உபயோகப் படுத்தியிருக்கற அதே வகை இரும்பை வெளிநாட்லேருந்து தருவிச்சுப் பயன்படுத்திக் கட்டியிருக்காங்களாம். 

1980-85 கால கட்டத்துல உலகத்துலயே சிறந்த ஐந்தாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்ங்கற இடத்தை அடைஞ்ச பெருமை இதுக்குண்டு. 2008-ல் 26 நவம்பர் அன்னிக்கு நடந்த தாக்குதல்ல கொஞ்சம் கலகலத்தாலும் மறுபடியும் மீண்டு வந்து, அழிவின் சுவடுகளையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டுத், தனக்காக உயிர் கொடுத்தவர்களின் நினைவையும் சுமந்துக்கிட்டுத் தலை நிமிர்ந்து நிக்குது. தாக்குதலுக்கு அப்புறம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமே அதுக்குச் சாட்சி.

மும்பையின் புகழ்பெற்ற கேட் வே ஆஃப் இந்தியா: இது வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரு. நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-). எதிர்த்தாப்ல இருக்கற தாஜ் ஹோட்டல்ல தங்கிக்கிட்டா நாள் முழுசும் பார்த்துட்டே இருக்கலாம். (சில வருந்தத்தக்க நிகழ்வுகளால இப்ப தாஜும் நினைவுச்சின்னமாகிடுச்சு ) 

மும்பையின் பாந்திரா-வொர்லி கடல் இணைப்பு: 1999-ல் பால் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு 2010-ல் மக்கள் உபயோகத்துக்காக முழுவதும் திறந்து விடப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்குப் பேர் போன மும்பையில் இந்தப் பாலம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இந்தப் பாலம் வர்றதுக்கு முந்தி, இங்கேருந்து அங்கே போகறதுக்குச் சுமார் ஒன்னரையிலேர்ந்து ரெண்டு மணி நேரம் எடுக்குமாம். இப்பல்லாம் பாந்திராவுலேர்ந்து வொர்லிக்கு வெறும் ஏழே நிமிஷத்துல போயிடலாம். போக்குவரத்து நெரிசல் இருந்தா சுமார் பத்துப்பதினஞ்சு நிமிஷங்களாகும். அவ்ளோதான்.  டோல் வசூல் கொஞ்சம் கூடுதல்தான்னாலும் நல்லாவே பராமரிக்கிறாங்க.

டிஸ்கி: ஊர் சுத்தப் போயிருந்தப்ப விவரங்கள் சொன்ன கைடுக்கும், மேல் விவரங்கள் கொடுத்த விக்கியண்ணனுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் :-))

LinkWithin

Related Posts with Thumbnails