Sunday 31 December 2017

பழங்கணக்கு..

மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரின் தரிசனத்துடன் ஆரம்பித்த 2016 ஓரளவு இனிமையான நினைவுகளையே தந்து சென்றிருக்கிறது. பயணத்துடன் ஆரம்பித்ததாலோ என்னவோ!! போதும் போதுமென உடலும் மனமும் அலுக்குமளவுக்கு, சென்னை முதல் குமரி வரையிலான ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுப்பயணமாகச் சென்று கண்டு களித்து வந்தோம். அவற்றில் இராமேஸ்வரம், திருநள்ளாறு போன்ற இடங்களில் தீர்த்தமாடியதும், ஆற்றுக்கால் பகவதி கோவிலுக்கு முதன் முறையாகச் சென்றதும் மறக்க முடியாத ஒன்று. திருப்பதியில் ஆரம்பித்த அப்பயணத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லுமுன், முந்தின நாள்தான் தத்கால் முறையில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொண்டே சென்றோம். ஏனெனில், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை நாட்கள் தங்கப்போகிறோமென எங்களுக்கே தெரியாது.  சீட்டுகள் உறுதிப்படுத்தப்படும் வரை சற்றே திக்திக்கென இருந்த அந்தப்பயணம் த்ரில்லிங்காகவும் இருந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் எதிரிலிருந்த ராயாஸில் தங்கியிருந்தும் கோவிலுக்குச் செல்லாமல் வந்தது பெரிய மனக்குறை. வரும் வருடங்களிலாவது கும்பகோணத்துக்கு மட்டுமென ஒரு பயணம் சென்று வர வேண்டும். 

சென்னையில்நுனிப்புல் உஷா, நம் வல்லிம்மா மற்றும் அவர்கள் வீட்டு செடிகொடிகளுடன் நடந்த பதிவர் சந்திப்பும், வித்யா சுப்ரமணியன் அவர்களுடன் நடந்த ஒன் டு ஒன் பதிவர் சந்திப்பும், ஃபேஸ்புக் தோழிகளான கீதா, செல்வி, மாலா, சுமதி, ஜெயந்தி, கலைச்செல்வி, ஆகியோரைச் சந்தித்து அடித்த கொட்டமும் பசுமையானவை. 

எழுத்திலும் வாசிப்பிலும் ஒரு சிறிய மைல்கல்லை எட்ட முடிந்தது சிறு மகிழ்ச்சி. வலைப்பூவை வாடவிடாமல் சராசரியாக மாதந்தோறும் ஒரு இடுகையாவது இட முடிந்ததும், முதன்முறையாக புத்தக விமர்சனம் எழுத ஆரம்பித்ததும் மகிழ்ச்சியே. தவிர, எங்கள் "பயோனியர் குமாரசுவாமி கல்லூரி"யின் பொன்விழா ஆண்டு மலரில் என் படைப்பு வெளியானது பெருமகிழ்ச்சியைத்தந்தது.

உடல் நலிவும், எங்கள் குடும்பத்திலேற்பட்ட ஒரு பேரிழப்பின் காரணமாக விளைந்த மனநலிவும் சற்றே சோர்வுறச்செய்ததால், வாசிப்பு மற்றும் ஒளிப்படமெடுப்பதில் மனதைத் திசை திருப்பி சற்றே மீண்டு வந்திருக்கிறேன். எது எப்படியானாலும், காமிராவைக் கீழே வைத்து விடாமல் ஃப்ளிக்கரில் தினமும் இரண்டு படங்களைப் பதிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் அதுதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. டியெஸ்ஸெல்லார் வகை காமிராக்களுடன் போட்டி போடும் வகையில், நல்ல பிக்ஸல் எண்ணிக்கையுடன் மொபைல் அலைபேசிகள் வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒளிப்படக்கலையின் விதிமுறைகட்குட்பட்டு மொபைலிலும் ஏராளமான படங்களை எடுக்க முயன்று ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.  "மொபைல் க்ளிக்ஸ்" என்ற குறிச்சொல்லுடன் அவற்றை ஃபேஸ்புக்கில் வலையேற்றி வருகிறேன். விரைவில் அவை வலைப்பூவிலும் காணக்கிடைக்கும்.

சோம்பி முடங்கியிராமல், முடிந்ததைச் செய்து உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருப்பது இருத்தலின் பொருட்டென்றாலும், அதிலும் ஓர் மனநிறைவு ஏற்படும்படி இயங்குவதே அதன் வெற்றி. இல்லையெனில் நேரமும் உழைப்பும் வீணே.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே விளையட்டும்.


Sunday 24 December 2017

நாஞ்சில் நாட்டு சமையல் (இடிசக்கை துவரன்)

காயாகி.. கனிந்து.. என ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வரும் பலாவை பிஞ்சுப்பருவத்தில் மட்டும் விட்டு வைப்போமா என்ன? கேரளாவிலும் அதை அடியொற்றி நாஞ்சில் நாட்டிலும் பொடித்துவள், இடிசக்கை துவரன் என வெவ்வேறு பெயர்களில் சமைக்கப்படும் பலாப்பிஞ்சு துவரன் மிகவும் பிரசித்தி பெற்றது. நெல்லை மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இது சமைக்கப்படுகிறது. இதைச்செய்வதற்கு சுமார் ஏழு அங்குலம் அளவு விட்டமுள்ள பலாப்பிஞ்சே மிகவும் பொருத்தமானது. அதிகம் முற்றியதானால் விளைய ஆரம்பித்திருக்கும் பலாக்கொட்டைகள் வாயில் கடிபட்டு, இடிசக்கைத்துவரத்தின் ருசியைக் கெடுத்து விடும். 

அந்தக்காலத்திலெல்லாம், தோல் சீவிய பலாப்பிஞ்சை நிற்க வைத்து,  கத்தியால் கொத்திக்கொத்தியே துண்டுகளாக்குவார்களாம். இல்லையெனில் பெரிய துண்டுகளாக்கிக்கொண்டு உரலிலிட்டு இடித்துச் சதைப்பார்களாம். இதன் பொருட்டே இது இடிசக்கைத்துவரன் எனப்பெயர் கொண்டிருக்கக்கூடும் என்பது ஊகம். மிகவும் ருசியான இந்த துவரனைச் சமைக்க கையில் ஓரளவு வலு இருக்கும் தினமாக தேர்வு செய்து  கொண்டாலொழிய இதைச்சுவைக்கும் பாக்கியம் கிடைப்பதரிதாகவேயிருந்திருக்கக்கூடும்.

முதலில், பலாப்பிஞ்சை நிற்க வைத்து, கூர்மையான கத்தியில் சொதசொதவென எண்ணெய்யைத் தடவிக்கொண்டு  முள்முள்ளாக சொரசொரவென்றிருக்கும் பலாப்பிஞ்சின் தோலைச் சீவிக்கொள்ள வேண்டும். பின், நான்காக வகுந்து, நடுவிலிருக்கும் கெட்டியான பகுதியை வெட்டி அகற்றி விட வேண்டும். எண்ணெய்யைத் தடவிக்கொள்வதால் பலாப்பிசின் கைகளிலோ கத்தியிலோ ஒட்டாதென அறிக. பின், பலாப்பிஞ்சை ஓரங்குல அளவில் துண்டுகளாக வெட்டிக்கொண்டு, மிக்ஸியில் நாலைந்தாகப் போட்டு, துருவிய தேங்காய் அளவிலான பக்குவத்தில் துருவிக்கொள்ளவும். அதற்கேற்ற ப்ளேடையே மிக்ஸியிலும் பொருத்திக்கொள்ள வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த எண்ணி, துண்டுகளை அதிகமாக அள்ளிப்போட்டு அரைத்தால், மிக்ஸி ஓவர்லோட் ஆகி மண்டையைப் போட்டு விடும்.. கவனம்.

இத்தனை சிரமப்படாமல் தோல் சீவி, துருவ இன்னொரு உபாயத்தையும் கையாளலாம். அதாவது, பலாப்பிஞ்சை காம்பு நீக்கி, வட்ட வட்டமாக வெட்டிக்கொண்டு, ஆவியில் வேக வைத்தால் தோலை எளிதாக நீக்கி விடலாம். அதன் பின் துண்டு போட்டு, மிக்ஸியில் துருவிக்கொண்டால் பிசின் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியும். துருவுவதும் எளிது. இந்த டிப்ஸைக்கொடுத்த நானானிம்மாவுக்கு நன்றிகள்.
துவரனுக்கான மசாலாவையும் எளிதாகத் தயாரித்துக்கொள்ளலாம். ஒரு கை நிறைய அள்ளிக்கொண்ட தேங்காய்த்துருவலுடன்அரை ஸ்பூன் சீரகம், நாலைந்து நல்லமிளகு, ஒரு பல் பூண்டு, மஞ்சட்பொடி, காரத்துக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நல்லமிளகு சேர்ப்பதால் வாயுத்தொந்தரவு தவிர்க்கப்படும். மேலும் பச்சை மிளகாய் வேண்டாமென்று நினைத்தால் மிளகாய்ப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், சாஸ்திரோக்கமாகச் செய்ய நினைப்பவர்கள் பச்சைமிளகாயையே நாடுவர்.

ஒரு வாணலியில் சிறிது தேங்காயெண்ணெய்யைச் சூடாக்கி, கடுகும் உளுத்தம்பருப்பும் போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பொரிந்ததும், துருவிய பலாப்பிஞ்சை அதிலிட்டு, லேசாகத்தண்ணீர் தெளித்து ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக்கிளறி மூடியிட்டு முக்கால் பதம் வரை வேக விடவும். இடையிடையே சற்றுக்கிளறி விட்டால் அடிப்பிடித்து கருகுவது தவிர்க்கப்படும். பிஞ்சுத்துருவல் வெந்ததும், துவரன் மசாலாவை அதில் சேர்த்து, கரண்டிக்காம்பால் லேசாகக் கிளறி மறுபடியும் மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக விடவும். மசாலாவும் பலாப்பிஞ்சுத்துருவலும் செம்புலப்பெயல் நீர் போல் இரண்டறக்கலந்து மணம் வந்ததும், அரை ஸ்பூன் தேங்காயெண்ணெய்யைச் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி நீர்ப்பதம் வற்றி வந்ததும் இறக்கி விடலாம்.

இதுவே, வேக வைத்தபின் தோல் நீக்கித்துருவப்பட்டதானால் தாளிதத்துடன் துவரன் மசாலாவைச் சேர்த்து உப்பிட்டு, மூடியிட்டு வேக வைக்கவும். மூன்று நிமிடங்களில் மசாலா வெந்து விடும். அதன் பின் பலாப்பிஞ்சுத் துருவலையிட்டு லேசாகக் கிளறி மூடியிட்டு இரண்டு நிமிடம் வேக விடவும். பின்னர் மூடியைத்திறந்து நீர்ப்பதம் வற்றி பொடித்துவள் பக்குவமானதும் இறக்கி விடலாம்.

ரசம், தயிர், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்று சாதங்களுடன் மட்டுமலாது, ஒரு கிண்ணத்திலிட்டு சும்மாவே ஒரு பிடி பிடிக்கலாம்.

Sunday 3 December 2017

சாரல் துளிகள்

ஜன்னலோர இருக்கையிலமர்ந்து, இரவில் முழுமையடையாத தூக்கத்தைத் தொடரும் அவளுக்கோ அருகமர்ந்திருந்த மற்றவர்களுக்கோ, அவளது நிறுத்தத்தை ரயில் கடந்து செல்வது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

மடியிலிருத்திய குழந்தையை
முந்தானையால் மூடிக்காப்பதையொத்ததே
கொத்தாய்க் காய்த்தவற்றை
இலைகளால் கவிந்து காக்கும் மாமரத்தின்
தாய்மையும்.

தன் மனப்போக்கில்
எல்லாம் செய்து முடித்தவன்
இறுதிவிளைவுகளுக்கு மட்டும்
விதியைத் துணைக்கழைக்கிறான்
நினைக்க வைத்ததுவும்
நடத்தி வைத்ததுவும் விதியேயென்றால்
முடித்து வைத்ததுவும்
அதுவேயாய் இருக்கட்டும்.

சிலர் இறந்தபின்தான் அத்தனை நாள் அவர்கள் இருந்ததையே நினைவுகூர்கிறோம்.

செம்பாய் இருக்கும் இலைகளை மரகதமாக்கும் இயற்கையை விடப்பெரிய இரசவாதி யாருமில்லை.

விலகிச்செல்வது போல் போக்குக் காட்டி விட்டு சரேலென்று திரும்பி தாக்க வரும் யானையைப்போன்றதே, நீளுறக்கத்திலிருந்து மறுபடியும் விழித்தெழும் பிரச்சினைகள்.

கிளம்புவதும் சென்றடைவதுமாக, இன்னும் நிலை சேராமல் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன சாலைகள்.

பூசைகள் முடங்கிய வனக்கோவிலாயினும் ஆண்டிற்கு ஒருமுறையேனும் சிறப்பு கிடைத்து விடுகிறது தேவியாய் அமர்ந்த தெய்வத்திற்கு.

விழுந்து விழுந்து படித்த பதிலை மாங்கு மாங்கென்று விடைத்தாளில் எழுதிக்கொண்டிருந்தபோது கணகணவென்று அடித்த கடைசி மணியால் பாதியிலேயே விட்டு வந்ததையெண்ணி மூசுமூசென விசும்பிக் கொண்டிருந்த போது கிணுகிணுவென அடித்தது மொபைல் அலாரம்.

எதையாவது ஏற்றுக்கொள்ளவோ தள்ளிப்போடவோ இயலாவிடில், சமயோசிதமாக சமாளித்து விடல் நன்று. இம்மூன்றில் பிற இரண்டு அம்சங்களுக்கும் கூட இந்த விதி சாலப்பொருந்துவது ஒரு முக்கோணக்காதல் கதையை ஒத்திருக்கிறது.

Wednesday 18 October 2017

ஒளிக்கொண்டாட்டம்

ஒளியில் குளித்துக்கொண்டிருக்கின்றன வட மாநில நகரங்கள். காணுமிடமெங்கும் சரவிளக்குகளாலும் Rice lights எனப்படும் சீன சீரியல் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருண்ட மென்பட்டில் இறைக்கப்பட்ட நவமணிகளென மின்னுகின்றன. கண்கொள்ளாக் காட்சிதான் எனினும் பட்டாசுகளின் அதிகப்படியான ஒலியிலிருந்து சற்றே காதுகளையும் பாதுகாத்துக் கொள்வது நல்லது.


வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடுவதில்லை. மேலதிக விவரங்களுக்கு கடந்த வருடங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் சுட்டியைச் சொடுக்கவும்.


தினம் தினம் தீபாவளி...











அனைவருக்கும் இனிய விழாக்கால நல்வாழ்த்துகள்.

Monday 18 September 2017

கண்பதி - 2017

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியை அக்கம்பக்கத்து பண்டல்களில் வீற்றிருந்த பிள்ளையார்களைத் தரிசித்தும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பிள்ளையார்களைக் கண்டு களித்தும் சுருக்கமாக முடித்துக்கொண்டோம். எனது இளைய சகோதரன் ஒருவன் எதிர்பாராவிதமாக இவ்வுலக வாழ்வை நீத்ததால் இந்த வருடம் எங்களுக்குப் பண்டிகைக்கொண்டாட்டம் எதுவுமில்லை. ஆயினும் அழகுப்பிள்ளையார்களைக் கண்டபோது க்ளிக்காமல் வர மனது ஒப்புக்கொள்ளவில்லை. கையிலிருந்த மொபைல் போனில் க்ளிக்கியவை உங்கள் பார்வைக்காகவும் எனது வலைப்பூவில் நிரந்தரக்கொலுவாகவும்..


















கடந்த வருடங்களில் சதுர்த்திக்கொண்டாட்டம்..

துன்பம் நீக்கும் தும்பிக்கையான்




கிடைப்பது கிடைக்காமல் இருக்காது.

நான் படித்த நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டமும் முன்னாள் மாணவர் சந்திப்பும் இந்த வருடம் மார்ச் மாதக்கடைசியில் நடைபெற்றன. கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை வழக்கம் போல் கடைசி நிமிடத்தில் நிராசையானது. எனினும் நான் எழுதியனுப்பிய கட்டுரை பொன்விழா மலரில் இடம் பெற்றதன் மூலமாக மறைமுகமாகவேனும் அதில் கலந்து கொண்ட திருப்தி) என்ன ஒன்று.. படைப்பை அனுப்ப கடைசி நாளாகி விட்டபடியால் கட்டுரையை மெயிலில் அனுப்பி, பொன்விழாவை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த எங்கள் தமிழ்த்துறைத்தலைவர். திரு. மாதவன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு என் சீனியரும் குமுதம் நிருபருமான திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்குத்தான் கொஞ்சம் சிரமம் கொடுக்க வேண்டியதாயிற்று :)
வாட்ஸப் புண்ணியத்தில் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததைப் போலவே பொன்விழா மலரையும் காண வேண்டுமென்று ஆசை. அனுப்பித்தருவதாக அண்ணன் கூறியிருந்ததால் வரும்போது வரட்டுமென்று காத்திருந்தேன். அப்போதுதான் தமிழகத்தில் கோவில்களுக்குச் சென்று வர வேண்டுமென்று பிள்ளைகள் திட்டம் போட்டு, பயணம் கிளம்பும் வாய்ப்பு வந்தது. நாங்களும் திருப்பதி, திருநள்ளாறு, கூத்தனூர், ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி என எல்லாக் கோவில்களுக்கும் போய்விட்டு நாகர்கோவிலை வந்தடைந்தோம்.

அன்றைக்கு நாகரம்மன் கோவிலுக்குப் போகலாமென்று கிளம்பி ஆட்டோ ஸ்டாண்டுக்கும் வந்தபின், திடீரென்று கன்யாகுமரி போகலாமென்று ப்ளான் திசை மாறியது. கன்யாகுமரியென்றால் கொஞ்சம் நேரம் கழித்து கூட போய்க்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. இப்போதுதான் நான், அப்டீன்னா.. மாதவன் சாரைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்" என நாகர்கோவிலுக்கு வந்த நாள் முதலாக சுமந்து கொண்டிருந்த ஆசையை வெளியிட்டேன். ஆச்சரியப்படும் விதமாக குடும்பம் ஒத்துக் கொண்டதும் மனசு மாறுவதற்குள் அவர்களை ஆட்டோவில் அள்ளிப்போட்டுக் கொண்டு வடசேரி பெரியதெருவிலிருக்கும் சார் வீட்டுக்குப் போனோம். முன்னரே போனில் அனுமதியும் அட்ரசும் வாங்கியிருந்ததால் சாரும் எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்று கண்டது போலவே அப்படியே இருந்த மாதவன் சாரை அடையாளம் கண்டுகொள்ள எனக்குச் சிரமமில்லை. மலர் தொடர்பாக அடிக்கடி மொபைலில் பேசியிருந்ததால் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். நான் எந்த வருடம் அங்கு படித்தேன் என்பதையும் குடும்பத்தையும் பற்றி ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்து கொண்டார். முகத்தை வைத்துதான் அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. ஆசிரியரிடம் எத்தனையோ மாணவர்கள் பயின்றிருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் கொள்ள இயலாதுதானே.

மாதவன் சாரின் மனைவி திருமதி. பிரேமா மணி அவர்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை என்று அறிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம். ஏனெனில் நான் அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவி. ஆங்கில மீடியத்துக்குப் பாடம் எடுத்ததாக அவர் கூறினாலும் எனக்கென்னவோ எங்கள் தமிழ் மீடியத்துக்கும் வந்ததாகவே தோன்றிக் கொண்டிருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிக்கால பழைய நினைவுகளை வெகுநேரம் அசை போட்டபின் அவரிடம் பொன்விழா மலரையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு விடை பெற்றோம். இத்தனை வருடம் கழித்து பழைய ஸ்டூடண்டை குடும்பத்துடன் சந்தித்ததில் சாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. படைப்பாளியின் போட்டோ போடப்படாவிட்டால் என்ன? என் கல்லூரியின் பொன்விழா மலரில் என் பெயருடன் படைப்பும் இடம் பெற்றிருக்கிறதே.. எனக்கு அது போதும்.

கல்லூரியை விட்டு வெளியே வந்த இத்தனை வருடங்களுக்குப் பிறகு, எனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடக்குமென்றோ என் ஆசிரியர்களைச் சந்திப்பேனென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. மைக்கை மானசீகமாக நீட்டி, "இப்பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்றாள் மகள்.

"மனம் நிறைந்திருக்கிறது" என்றேன்.

Friday 7 July 2017

சின்னஞ்சிறு மனிதர்கள்.

எத்தனை வயதானாலும் சரி, மனிதன் எப்போதும் தன் நினைவுக்கிடங்கில் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருவது அவனது குழந்தைப்பருவ நினைவுகளாய்த்தானிருக்கும். வளர்ந்தபின் தூக்கம் தொலைத்த இரவுகளில் கள்ளங்கபடமற்ற, சுமைகளற்ற அந்தப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதும், இயல்பே. "குழந்தையாவே இருந்துருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும்" என்ற பெருமூச்சினூடே நம்முடைய ஏக்கங்களையும் வெளியிட்டுக்கொள்கிறோம்.

உண்மையில் குழந்தைகளிடமும் அந்தந்த வயதுக்குரிய கவலைகளும் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.  விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை, பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்(ன்), அப்பா அம்மா குட்டிப்பாப்பாவையே அதிகம் கவனிக்கிறார்கள், நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு பருப்பு, எண்ணெய் எல்லாம் யார் கொண்டு போய் கொடுப்பார்கள், அப்பா வாங்கி வந்த இனிப்பில் தம்பிக்கு, தங்கைக்கு  ஒரு விள்ளல் அதிகம் கிடைத்து விட்டது என்று எத்தனையோ உலகமகாக்கவலைகளால் நாமும்தானே பாதிக்கப்பட்டிருந்தோம். நெல்லிக்காய் கொடுத்து நாம் தாஜா செய்து வைத்திருந்த ஃப்ரெண்டை, கலர் சாக்பீஸ் கொடுத்து தட்டிக்கொண்டு போன எதிரியை நினைத்து எத்தனை நாள் கறுவியிருப்போம். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பிறரறியாமல் நம்மை நறுக்கென்று கிள்ளி வைத்த எதிரியை, இமை தாண்டா நம் கண்ணீர் கண்டு பதறி, சமயம் பார்த்து தலையில் குட்டி பழி வாங்கிய நம் தோழமையை "மை ஃப்ரெண்டு" என்று தோள் சேர்த்து அணைத்திருப்போம். இப்படி நாளொரு கவலை, பொழுதொரு வருத்தம் என்று இருந்திருந்தாலும் நம் எனிமீஸ்களை பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசுடன் மன்னித்து விடும் பெருந்தன்மையும் நமக்கிருந்தது. அதே பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசு நம் எதிரிகளுக்கும் இருந்தது என்பது வேறு விஷயம்.

ஆனால் இன்றைய குழந்தைகளின் நிலையே வேறு. எதற்கெடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் என்று குழந்தைப்பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களை அலைக்கழிக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விடுவார்கள். இந்தச் சின்னஞ்சிறு மனிதனுக்கு இத்தனை பெரிய கவலையா என்று சிரிப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் புரியும். காலை எழுந்தவுடன் படிப்பு,.. பின்பும் படிப்பு, மேலும் படிப்பு என்றே நாளைக்கழிக்க வேண்டியிருக்கிறது. இதை விட்டால் இருக்கவே இருக்கிறது விளையாட்டு. விளையாட்டு என்றவுடன் மைதானத்திலும் தெருவிலும் ஓடியாடி விளையாடுவார்கள் என்று எண்ணிக்கொண்டால் நீங்கள் அந்தக்காலத்து ஆள் என்று அர்த்தம். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட அசையாமல் கம்ப்யூட்டரில் விளையாடுவார்கள் என்று பதில் சொன்னால் உங்களுக்கு ஒரு சபாஷ் கொடுத்துக்கொள்ளுங்கள்.

மதிப்பெண் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டுப்போட்டு இந்தப்பிஞ்சு உள்ளங்கள் களைத்துத்தான் விடுகின்றன. இப்பொழுதெல்லாம் கோடை விடுமுறைகளையும் விட்டு வைப்பதில்லை. கராத்தே, நீச்சல், டான்ஸ் , ஓவியம், கிரிக்கெட், மியூசிக் என்று ஆயிரத்தெட்டு வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு விடுகிறார்கள்.  அதையாவது முறைப்படி முழுப்பயிற்சி கொடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. குறுகிய காலப்பயிற்சி என்ற பெயரில் வெறும் இரண்டு மாதம், மூன்று மாதம் போய்வந்து கற்றுக்கொள்ளும் ஓவியம் அல்லது நடனத்தில் என்ன முழுமை இருக்க முடியும்? இசைக்கருவிகளை மீட்ட முழுவதுமாக அறிந்து கொள்ளுமுன் பயிற்சிக்காலம் முடிந்து விடும்.

வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் கற்றுக்கொடுக்கப்பட்ட அந்த ஒரே ஒரு பாடலை அக்குழந்தை வருடமுழுவதும் விருந்தினர் முன் அரங்கேற்றும் பாவம். ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டி கற்றுக்கொள்ள வைத்த அக்குழலும் பியானோவும் நிச்சயமாக பெற்றோருக்கு இனிமைதான். வரும் விருந்தினர்தான் பாவம். பூனை முனகும் ஒலியைக்கூட ஆஹோ ஓஹோவென்று ரசிக்கும் பாவனையில் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு கொடுமைக்கு ஆட்பட்ட அவர் மேலும் சில மாதங்களுக்காவது அப்பக்கம் எட்டிப்பார்க்கத் துணியாரென்பது திண்ணம். இத்தோடு நின்று விடுவதில்லை.. வருடம் முழுக்க கல்விக்கூடங்களுக்குப் போய் வந்த குழந்தைகள் விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கான  பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள். அங்கேயும் ஹோம் வொர்க் போன்றவை உண்டாம். என் தோழியின் பையன் சொன்னபோது "அடப்பாவமே.." என்றிருந்தது. வளரும் வயதில் குழந்தைகள் எதையும் சீக்கிரம் கிரகித்துக்கொள்வார்கள், இது கற்றுக்கொள்ளும் வயது என்பதெல்லாம் சரிதான். அதற்காக இப்படியா?!!!!!  முன்பெல்லாம் விடுமுறை வந்தால் குழந்தைகள் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி, மற்ற உறவினர்களின் பிள்ளைகளோடு லூட்டியடித்து, பொழியும் வெயிலையெல்லாம் தாங்கள் வாங்கி உடல் கறுத்து வந்தாலும், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், உறவு பேணுதல், பெரியோரை மதித்தல் என நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டு வந்தார்கள். இப்பொழுதோ,. அந்த நல்ல பழக்கங்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் காணக்கிடைக்கின்றன.  

குழந்தைகளுக்குக் கதை சொல்லுதலைப் பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். அப்பொழுதெல்லாம் கதை நேரமாக சாப்பாட்டு நேரம் இருந்தது. பாட்டியின் கதையோடு இரண்டு கவளம் சாதம் கூடுதலாக உள்ளே இறங்கும். இல்லையென்றால் தாத்தா பாட்டியின் மேல் கால், கைகளைப் போட்டுக்கொண்டு 'உம்' கொட்டிக்கொண்டு குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டு விழித்திருக்க, கதை சொன்ன தாத்தா பாட்டிகள் தூங்கி விடும் இரவுகளும் உண்டு. சில சமயங்களில் குழந்தைகளையே கதை சொல்லவும் தூண்டும்பொழுது அவர்களும் நன்றாகக் கதை விடுவார்கள் :-)) இது குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்ப்பதாகவும் இருந்தது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் நடக்கும். அதிலும் கூட குழந்தைகளை நல்ல நீதிக்கதைகளைச் சொல்லச்சொல்வது வழக்கம். இதனால் மேடைக்கூச்சமில்லாமல் பத்துப்பேருக்கு முன்னால் பேசவும், தன் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்கவும் பயின்றார்கள். பிள்ளைகளும் வளரும்போதே நல்ல பழக்கங்களுடன் வளர்ந்தார்கள். இந்த நீதிபோதனை வகுப்புகளின் அருமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளில் மறுபடியும் நீதிபோதனை வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. நல்லது கெட்டது சொல்லித்தர, சரியான முறையில் வழி நடத்த ஆளில்லாத நிலையில் நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் வளரும் இளம்பிள்ளைகளுக்கு அத்தகைய வகுப்புகள் அவசியமும் கூட.
வால்: நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரில் இடம் பெற்றது.

Monday 26 June 2017

ஆற்றுக்கால் பகவதி..

அழுத கண்ணும் சிவந்த மூக்குமாக தலைவிரி கோலத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி. மதுரையில் தன்னுடைய சிலம்பை உடைத்து அதிலிருந்த மாணிக்கப்பரல்களே சாட்சியாக, தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தபின், ஆவேசம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு, அதே ஆவேசம் எள்ளளவும் குறையாமல் பரசுராம ஷேத்திரத்தில் அந்த ஆற்றங்கரைக்கு வந்தடைந்திருந்தாள். அங்கு இருந்த பெரியவர் ஒருவர் அவளை ஆற்றுப்படுத்தி அமைதியடையச்செய்தபின் அவள் பொன்னுடலோடு தனக்காகக் காத்திருந்த கோவலனுடன் புஷ்பக விமானத்திலேறி வானுலகம் சென்றாள் என்பது செவி வழிச் செய்தி. அவள் யார் என்பதைக் கண்டுகொண்ட பெரியவர் அந்த ஆற்றங்கரையிலேயே அவளுக்காக ஒரு கோவில் கட்டினார். பொதுவாக கேரளக்கோவில்களில் தேவியை "பகவதி" என அழைப்பது மரபு. அந்தப்படியே இவளும் "ஆற்றுக்கால் பகவதி" எனப் பெயர் கொண்டாள்.

திருவனந்தபுரத்தின் பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கோவில் உள்ளூர் மக்களால் "தேவி ஷேத்ரம்" எனவும் அழைக்கப்படுகிறது. "பெண்களின் சபரிமலை" எனவும் அழைக்கப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூர நட்சத்திரம் பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் "பொங்காலை" மிகப்பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்ற பெருமையுடையது.

தேவி சன்னிதியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் தீபத்தினால் கோவிலின் பெரிய மற்றும் சிறிய பள்ளி அடுப்புகளும் பண்டார அடுப்புகளும் குலவை மற்றும் மங்கல ஓசைகள் முழங்க தீப்பெருக்கப்படும். இவ்வோசை கேட்டதும் அனைவரும் தத்தம் அடுப்புகளில் தீப்பெருக்குவர். கோவில் வளாகத்தில் மட்டுமன்றி சுற்றுப்பட்டு பத்து கி.மீ. அளவில் ரோடுகள் சந்துபொந்துகளில் அடுப்பு கூட்டி, புது மண்பானையில் பொங்கலிடுவர். அதன்பின் மேல்சாந்தியும் நம்பூதிரியும் பொங்கல் பானைகளில் நீர் தெளித்து நிவேதனம் செய்வர். ஆகாயத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூமழை தூவியதும், மக்கள் தங்கள் நிவேதனத்தை தேவி ஏற்றுக்கொண்டாள் என்ற மகிழ்ச்சியுடன் வீடு செல்வர்.

கோவிலின் முற்றத்திலேயே ஒரு பக்கமாக இருக்கும் கவுண்டர்களில் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக்கொண்டு தேவிக்குப் பிரியமான தெச்சிப்பூ மாலையும் கையில் சுமந்து தரிசனத்துக்கான வரிசையில் நின்றோம். முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் கேரளக்கோவில்களுக்கேயுரிய வெடி வழிபாட்டுக்கான அனுமதிச்சீட்டுக் கவுண்டரும் இருக்கிறது. கோவிலின் கோபுரவாசல்களில் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. வாசலில் நிற்கும்போதே மூலவரைத் தரிசிக்க முடியுமளவிற்கு மிகச் சிறிய கோவில். இதை நாடியா எங்கெங்கிருந்தோ பக்தர்கள் வருகிறார்கள்!!!? என்ற வியப்பு தோன்றுவது இயல்பே. மூர்த்தி சிறிதெனினும் இவளது கீர்த்தி பெரிது.
வாசலைத்தாண்டினால் முன் மண்டப முகப்பிலும் பகவதியே சிறுவடிவில் அமர்ந்திருக்கக் காண்கிறோம். மூலவரைப்போலவே இவளுக்கும் வஸ்திரம் அணிவித்து அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அதைப்பார்த்துக்கொண்டிருந்தபோதே சங்கநாதத்துடன் கேரளத்துக்கேயுரிய செண்டை மேளம் முழங்கியது. என்னவொரு தாளநடை.!!! அதில் மயங்கி நின்றுவிட்டால் தீபாராதனையைக் காணாமல் தவறவிட நேரும்.. கவனம்.

மூலவரான பகவதி ரத்னாங்கி அணிந்து மலர்களினூடே மதிவதனம் காட்டி, "அஞ்சேல்" என அருள்பாலிக்கிறாள். அவளைத்தரிசித்துக்கொண்டு சற்றே முன்நகர்ந்து அர்ச்சனைச்சீட்டையும் வாங்கி வந்த தெச்சிமாலையையும் நீட்டினேன். மாலையை அருகிலிருந்த ஆணியில் ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த மாலைகளுடன் சேர்த்துப் போட்டு விட்டு "பிரசாதம் அந்தப்பக்கம்" என எதிர்ப்பக்கத்தைக் கை காண்பித்தார். அந்த ஆணி செய்த பாக்கியம்தான் என்னே!!.. எதிர்ப்பக்கத்தில், ஆஸ்பத்திரி மற்றும் வங்கிகளில் உரக்க டோக்கன் எண்ணைச் சொல்லி அழைப்பது போல் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். உரியவர் போய், குங்குமம் களபம், பூக்கள் மற்றும் ஒரு வாழைப்பழம் வைக்கப்பட்டிருக்கும் இலைத்துண்டை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். வெகுநேரமாக நாம் அழைக்கப்படவில்லையென்றாலும் பாதகமில்லை. விவரங்களைச் சொன்னால் போதும். பிரசாதம் வழங்கப்பட்டு விடும்.

பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடி செண்டைமேளம் முழங்கியது. சன்னிதியின் முன் ஓடி வந்து நின்றால் அடடா!! உற்சவ மூர்த்தி சன்னிதிக்கு வெளியே கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அபிஷேகங்களும் முடியும் வரை செண்டை மேளம் தொடர்ந்தது ஓர் வித்தியாசமான அனுபவம். அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடத்தியதும் உற்சவ மூர்த்தி மறுபடியும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஒவ்வொரு வழிபாட்டின்போதும் செண்டையும் சங்கும் முழங்க தேவிக்கான பாடல்களும் பாடப்படுவதைக் கேட்பது நமக்கெல்லாம் ஒரு புது அனுபவம்தான்.

கோவிலினுள் சிற்பங்களுக்குக் கணக்கேயில்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், ரதி மன்மதன் சிலைகள், வினாயகர், ஆஞ்சநேயர் மற்றும் சிவன் என அனைவரும் ஆளுயரச் சிலைகளாக ஒவ்வொரு தூணிலும் வடிக்கப்பட்டிருக்கின்றனர். கண்ணகியின் வாழ்வு நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இரண்டாம் பிரகாரத்தில் வினாயகருக்கென தனிச்சன்னிதியும் அமைந்துள்ளது. அதன் அருகே கேரளக்கோவில்களுக்கேயுரிய சர்ப்பக்காவு அமைக்கப்பட்டு, பிரதி மாதமும் ஆயில்ய பூஜையும் நடந்து வருகிறது.

நாங்கள் பிள்ளையாரை வணங்கி நகரும்போது சர்ப்பக்காவினருகே சிறு கூட்டமாக ஆட்கள் நிற்பதும் நடுவில் நின்ற ஒருவர் ஏதோ பாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. என்னவென்று அங்கே போய்ப்பார்த்தால்,.. மக்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொன்னதும் அவர் தன் கையில் வைத்திருந்த, கொட்டாங்கச்சி வயலின் போன்ற சிறு கருவியை இசைத்தவாறே நாலைந்து வரிகள் பாடினார். இதுவும் அங்கே ஒரு விதமான வழிபாடாக நடத்தப்படுகிறது.

பிரகாரம் சுற்றி வரும்போது, பிரசாத ஸ்டால் தாண்டியதும் இருந்த சிறு முற்றத்தில், மணைப்பலகை முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்குகள், நெல் நிரப்பப்பட்ட பாத்திரம், அதில் செருகப்பட்டிருந்த தென்னம்பூக்குலை, நாணத்துடன் மணமக்கள் என திருமணச்சூழல் நிரம்பியிருந்தது. கேரள முறைப்படி நடக்கும் கல்யாணம்.. அதுவும் கோவிலில் நடக்கும் கல்யாணத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென ஆவல் முட்டினாலும், இன்னும் போக வேண்டிய இடங்கள் நினைவில் வந்து அழைக்க மனதில்லா மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்.

இக்கோவிலில் பொங்கல் வழிபாடு நடத்தப்படும் சமயம் "தாலப்பொலி" என்ற நேர்ச்சையும் பெண்குழந்தைகளால் நிறைவேற்றப்படும். இதனால் அக்குழந்தைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுமென்பது நம்பிக்கை.

Wednesday 21 June 2017

வாய் பிளந்தான் மணி(மேத்தன் மணி)

திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் பத்மநாப சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலை நோக்கிச் செல்லும்போது, நமக்கு இடது புறமிருக்கும் கட்டிடத்தின் முகப்பில், தெப்பக்குளத்தைப் பார்த்தாற்போல் இருக்கிறது மேத்தன் மணி என அழைக்கப்படும் வாய் பிளந்தான் மணி.
கேரளா யூனிவர்சிட்டியில் வேலை பார்த்து வந்த சித்தப்பா அப்போது கரியவட்டத்தில் வசித்து வந்தார். ஒரு தடவை, ஸ்கூல் பெரிய லீவில் அங்கே சென்றிருந்த சமயம் பப்பநாதனைத் தரிசித்து விட்டு வெளியே வந்தபோது இந்த மணியைப் பார்த்து வியந்து நின்றது மங்கலாக நினைவிருக்கிறது. அதன்பின், பல வருடங்களுக்குப்பிறகு, என் அண்ணன் உடம்பு சரியில்லாமல் பத்மதீர்த்தக் குளத்தின் வடகரையிலிருக்கும் ஆர்யவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் தங்கியிருந்த அறை தெப்பக்குளம் வ்யூ ஆதலால் பால்கனியில் நின்று பார்த்தாலே கடிகாரமும், அந்த மனிதத்தலையின் வாய் திறந்து மூடுவதையும், ஆடுகள் மனிதத்தலையில் வந்து முட்டுவதையும் அதைக்காண கூடியிருக்கும் கூட்டத்தையும் காண முடியும். மிகச்சிறு வயதில் அதிசயித்த காட்சி ஒரு நாளிலேயே பார்த்துப்பார்த்து அலுத்துப்போனது.

சமீபத்தைய திருவனந்தபுரம் விசிட்டின்போது, பப்பநாதனைக் காணச்சென்றோம். கோவிலை நெருங்கியதும் மணியின் ஓர்மை வர ஏறிட்டுப்பார்த்தேன். ஹைய்யோ!!.. ஐந்து மணிக்கு இன்னும் ஒரு நிமிடமே இருந்தது. தகவலைச் சொன்னபோது, "அது இப்பவுமா வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கப்போவுது?" என குடும்பம் அவநம்பிக்கை தெரிவித்தது. அவர்கள் சொல்லி வாய் மூடவில்லை. மணி அடிக்கத்தொடங்கியது. வாய் பிளக்கும் மனிதத்தலையையும், ஒவ்வொரு மணி அடிக்கும்போதும் அதை முட்டும் ஆடுகளையும் கண்டு,  ஆச்சரியத்தால் அப்படியே நின்று விட்டார்கள். மும்பை திரும்பியபின், மணியைப்பற்றி மேலும் தகவல் அறியும் பொருட்டு இணையத்தைத் துழாவினால் தகவல்களை அள்ளிக்கொட்டியது மகேஷ் ஆச்சார்யாவின் வலைப்பூ.

தகவல்கள் இங்கே..

//திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தானச் சுவடிகளிலிருந்து தெரிகிறது. இதை நாளிகை சூத்திரச் சுவடி என்றும் கூறுவர்…

அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பதுடன் , துல்லியமாக நேரமும் காட்டுகிறது. இது ஒரு புதுமையான விந்தையான கடிகாரம். கடிகாரத்தின் மேலே ஒரு மனிதனின் தலை, அந்த தலையின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றையொன்று பார்ப்பது போல் அமைந்துள்ளது. கடிகாரத்தின் முட்கள் 1 மணி காட்டும் போது அந்த மனிதனின் வாய் மெதுவாக திறக்க ஆரம்பிக்கும். வாய் முழுவதும் திறந்ததும் 2 ஆட்டுக் கடாக்களும் ஒரே நேரத்தில் அந்த மனிதத் தலையில் வந்து மோதும். ஒரு மணி அடிக்கும். மனிதனின் வாய் மூடிக்கொள்ளும். அவ்வாறாக 12 மணியானால் மனிதனின் வாய் 12 தடவை திறந்து , திறந்து மூடும். ஆட்டுக்கடாக்களும் 12 தடவை முட்டும்.

இந்த விந்தையான கடிகாரத்தைத் திறம்பட செய்து முடித்தவர் திருவனந்தபுரம் அருகிலுள்ள வஞ்சியூரை சார்ந்த ப்ரம்ம ஸ்ரீ குளத்தூரான் ஆச்சாரியா என்னும் விஸ்வகர்மா ஆவார். நுட்பமான வேலைகளில் திறமை மிக்கவர். துப்பாக்கி முதல் பீரங்கி வரை எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். வெள்ளையர்கள் தங்கள் இயந்திரங்கள் பழுது பட்டால் இவரிடம் வந்து தான் ஆலோசனை கேட்பார்கள். திருவனந்தபுரம் மகாராஜாவும் , ஆலப்புழையில் இருந்த ஜான்கால்டிகேட் என்ற வெள்ளையரும் சேர்ந்து குளத்தூரான் ஆச்சாரியாவிடம் சொல்லி கடிகாரத்தைச் செய்ய வைத்தனர். இந்தக் கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டு இருப்பதுடன் துல்லியமாக நேரமும் காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை மேத்தன் மணி என்றும் வாய் பிளந்து மூடுவதால் வாய் பிளந்தான் மணி என்றும் கூறுவார்கள்.//

நன்றி மகேஷ் ஆச்சார்யா.

யாராவது பேசுவதை வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பவர்களையும், நாம் பேசுவதை சற்றே அசமஞ்சமாக, புரிந்ததோ இல்லையோ!!.. என்ற குழப்பமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டு நிற்பவர்களையும் "ஏம்டே வாப்பொளந்தான் மணி மாரி நிக்கே? போயி உள்ள சோலிகளப்பாரு" என்று திட்டுவது கன்யாகுமரி வழக்கு.

Tuesday 20 June 2017

அயினிச்சக்கை என்ற அயினிப்பலா.

அயினிப்பலா அல்லது அயினிச்சக்கை என அழைக்கப்படும் இந்தப்பழத்தின் தாவரவியல் பெயர் Artocarpus hirsutus ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது. முப்பத்தைந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற snake boats அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டார், திற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது. தொட்டிப்பாலத்தைக் காணச்செல்லும்போது வழி நெடுக இருக்கும் ரப்பர் தோட்டங்களினூடே அயினி மரங்களும் அதிகம் வளர்ந்திருப்பதைக்காணலாம். 

அயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் மினியேச்சர் போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது சகஜமான காட்சி. நான் தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு பழம் பத்துப்பைசாவிற்கு விற்கும். அப்போதெல்லாம் அது பெரிய தொகை. ஆகவே இரண்டு மூன்று பேர் சேர்ந்து காசு போட்டு பழம் வாங்கி பங்கு பிரித்துக் கொள்வோம்.
பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம். இவ்விதையின் பொடி, ஆஸ்துமாவிற்கு அருமருந்து எனச்சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நாகர்கோவிலுக்குப் போயிருந்த சமயம், டதி ஸ்கூலை ஆட்டோ கடந்தபோது அயினி கண்ணில் பட்டது. சிறுவயது நினைவுகள் மேலெழ, சுவைத்தே ஆக வேண்டுமென கொதியுண்டாயிற்று. மறுநாள் போய் வாங்கி வந்து விட்டேன். ஆஹா.. ஆஹா.. இதைக் கையிலெடுத்து எத்தனை வருடங்களாயிற்று. பழத்தை மெல்லக்கையிலெடுத்து சுளை பிரித்து வாயிலிட்டேன். அபாரம்!! அப்படியே நினைவுத்தேரிலேறி பள்ளி நாட்களுக்கே போய் விட்டாற்போலொரு ஆனந்தம். யாம் பெற்ற இன்பம் என் மக்களும் பெறட்டுமென்று பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். பழத்தைச் சுவைத்த மகள் சில விதைகளை மும்பைக்குக் கொண்டு வந்து மண்ணில் ஊன்றி அவையும் முளைத்திருக்கின்றன. கன்றுகளானதும் வெளியே கொண்டு போய் மண்ணில் நட வேண்டுமாம். நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
நாகர்கோவிலில் பள்ளிகளின் வெளியே மட்டுமன்றி, வடசேரியிலிருக்கும் கனகமூலம் சந்தையிலும் கிடைக்கும். மேலும், நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையிலும், சுங்கான்கடை எனும் இடத்தினருகே குவியல் குவியலாக விற்பனைக்கு வைத்திருப்பதைக் காணலாம்.

Friday 16 June 2017

திரு. நாறும்பூநாதனின் பார்வையில் - "சிறகு விரிந்தது"

நெல்லை மண்ணுக்கேயுரிய மண்வாசனையுடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு. நாறும்பூநாதன் அவர்களுக்கு கோவில்பட்டியின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையிலும் மிக முக்கிய இடமுண்டு.  "கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல" போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும், "கண் முன்னே விரியும் கடல், யானைச்சொப்பனம்" என்ற கட்டுரைத்தொகுப்புகளையும், வெளியிட்டுள்ளார். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவருமாவார். எனது கவிதைத்தொகுப்பான  "சிறகு விரிந்தது" பற்றி அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 
 
சாந்தி மாரியப்பனின்"சிறகு விரிந்தது"(கவிதைத் தொகுப்பு )
---------------------------------------------------------
கடந்த ஜனவரி மாதமே சென்னை புத்தகக்கண்காட்சியில் வாங்கிப் படித்து விட்டேன் என்றபோதிலும், உடனடியாக அபிப்பிராயம் சொல்லாமல் காலம் தாழ்த்தி விட்டேன். 

இவரது நிழற்படங்களை ரசித்த எனக்கு, தற்போது தான் கவிதைகளை வாசிக்க நேரம் கிடைத்தது. திருநெல்வேலியில் பிறந்து (சரிதானா..?) தற்போது மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், அவ்வப்போது நெல்லை பாஷையில் பின்னூட்டங்கள் இடுவார். அவரது முதல் கவிதை தொகுப்பு இது.
"கால் தடம் பதியாப்பாதையெனவும் 
எழுதப்படாத வெற்றுக் காகிதமெனவும் 
முன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம்"
என்றொரு கவிதை துவங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை தெளித்து விட்டு, இறுதியில் 
"அற்புதமானதாகவோ 
சாதாரணமாகவோ 
ஏதேனும் ஒரு கிறுக்கலையாவது 
பரிசளிப்பது மிக நன்று 
அதை வெறுமையாகவே விட்டு செல்வதை விட.."
என்று அற்புதமாக முடித்திருக்கிறார். 

கள்ளிப்பால் குடித்த சிசுவொன்றின் சன்னமான குரல் இன்னொரு கவிதையில் ..
"உணவென்று நம்பி அருந்திய பால் 
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே 
உறக்கம் கொண்டு விட்டோம் 
கள்ளித்தாய் மடியிலேயே 
பெற்றவள் முகம் கண்ட திருப்தியினூடே 
அறுக்கிறதொரு கேள்வி 
என் முகம் அவள் பார்த்த 
தருணமென்றொன்று இருந்திருக்குமா"
என்று கேள்வி பெற்றவளுக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் தான்.

இவரது கவிதைக்குள் சஞ்சரிக்கும்போது, சில வரிகளில் கடக்க முடியாமல் மனம் நங்கூரமிட்டு அங்கேயே நின்று விடுகிறது. 
உதாரணத்திற்கு...
"சட்டைப் பையைத்துழாவும் கைகள் 
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும் 
கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெல்லாம் .."
என்ற வரிகள் நம்மை வேறொரு நினைவுக்கு திசை திருப்பி விடுவது தற்செயலானதா அல்லது இவரது கவிதையின் இயல்பா என்று தெரியவில்லை. 

"துரத்தித்திரிந்த தும்பிகளையும் 
பூவரச இல்லை பீப்பியையும் 
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து 
விவரிக்கும்போது 
பனையோலைக் காற்றாடிகளுடன் 
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள் 
சென்ற தலைமுறையின் 
மனதெங்கும் அப்பிக்கிடக்கும் 
செம்மண் புழுதியில்.."
என்று பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, கணினியில் உழலும் கூண்டுக்கிளிகளை பார்த்து நகைக்கிறார்.

"பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து 
மெல்லக் கண்பொத்தி 
கன்னம் கடித்த தருணங்களில் 
சீறிச்சினந்ததை பொருட்படுத்தாமல் 
சில்லறையாய் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை"
என அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கவிதை உச்சம்..!

ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தைகள் உண்டா என்ன ?
கி.ரா.வின் கதவு கதையை நினைவுபடுத்தும் கவிதை இவரது"ரயிலோடும் வீதிகள்".
"அலுத்துப்போன கடைசிப்பெட்டி 
சட்டென்று திருப்பிக்கொண்டு இஞ்சினாகியதில் 
வேகம் பிடித்த ரயிலில் 
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது 
முன்னாள் இன்ஜின் 
வலியில் அலறிக்கொண்டு"
என்று வாழ்வின் அவலங்களை சற்றே மறந்து சிரிக்க வைக்கிறார்.

இவரது நிழற்படங்களை போலவே, நுட்பமான வாழ்வின் பதிவுகளை கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். இவர்"வல்லமை"என்ற மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர்."அமைதிச்சாரல்"மற்றும்,"கவிதை நேரம்"போன்ற வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வரும் சாந்தி மாரியப்பன் தொடர்ந்து அடுத்தடுத்து தொகுப்புக்கள் கொண்டு வர வாழ்த்துகிறேன்!


மதிப்புரைக்கு நன்றி திரு. நாறும்பூநாதன் அண்ணாச்சி.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

Sunday 14 May 2017

சக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.

பலாப்பழ சீசன் வந்ததும், பழமாகவே செழிக்கத்தின்று அலுத்த நாக்கு வேறு சுவையை நாடும் சமயம், வீடுகளில் சக்கையப்பம் அவிக்கப்படும். பொதுவாகவே பழச்சாறு அருந்துவதை விட பழமாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட விடாமல் வெவ்வேறு வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட வைக்கிறது மனிதனின் நாலு இஞ்ச் நாக்கு. அதைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் மனிதன் வெற்றியடைந்தானா எனக்கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

பலாப்பழத்தை கீற்றுகளாக அரிந்தும் விற்பனைக்கு வைப்பார்கள். அந்தக்கீற்றுகளை கன்யாகுமரி மாவட்டத்தில் "முறி" என்று அழைப்பதுண்டு. சில வீடுகளில் தேவைக்குத்தக்கபடி ஒன்றிரண்டு கீற்றுகள் வாங்கி வருவர். சில வீடுகளிலோ முழுப்பழமும் வாங்கினால்தான் கட்டுபடியாகும். அப்படி வாங்கி வந்தாலும், அத்தனையும் கொடுக்காமல் "நெறயத்திண்ணா செமிக்காது மக்ளே" எனக்கூறி விட்டு கொஞ்சத்தைப் பதுக்கி விடுவாள் அம்மை. எதற்கா?.. எல்லாம் பலாப்பழ பணியாரம் செய்வதற்குத்தான்.

ஊறப்போட்ட சம்பா பச்சரிசியை நன்கு கழுவி, கல் இல்லாமல் வடிகட்டி ஆட்டுரலிலோ கிரைண்டரிலோ இட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, முக்கால் பக்குவம் அரைந்ததும் பலாச்சுளைகளைச்சேர்த்து அதையும் அரைத்து, இட்லி மாவு பக்குவத்தில் அரைந்ததும் பொடித்து வைத்த வெல்லம் மற்றும் துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கை அள்ளிப்போட்டு கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும். அரைக்கும்போதே மணம் நாவூறச்செய்யும். 

இரண்டு உள்ளங்கையளவு அகலமாக அரிந்து வைத்த வாழையிலைத்துண்டில், ஒரு பக்கமாக மாவைப்பரத்தி புத்தகத்தை மூடுவதுபோல் மீதமிருக்கும் இலைப்பகுதியால் மூடி, இலேசாக அழுத்தித் தடவினால் மாவு நன்கு படர்ந்து கொள்ளும். இதை இட்லித்தட்டில் அடுக்கி ஆவியில் வேக வைத்தால், பத்து நிமிடத்தில் சக்கையப்பம் சாப்பிட ரெடியாகி விடும். இது பாரம்பரிய முறை.

ஆனால், இப்போதிருக்கும் அவசர யுகத்தில், இப்படியெல்லாம் ரொம்பவும் மெனக்கெடத்தேவையில்லை. உங்கள் வீட்டில் சம்பா புட்டு மாவு இருந்தால், சட்டென்று செய்து பட்டென்று பரிமாறி விடலாம். நான் அப்படித்தான் பரிமாறினேன். வாங்கி வந்ததில் பதுக்கி வைத்த பத்து பலாச்சுளைகளை விதை நீக்கி வைக்கவும். மிக்ஸியின் சட்னி ஜாரில் மூன்று அச்சு வெல்லத்தை உடைத்துப்போட்டு, whip பட்டனை லேசாகத் திருகித்திருகி அரைக்கவும். நன்கு அரைபட்டவுடன் வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின், அதே ஜாரில் பலாச்சுளைகளைப்போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அதிகம் அரைந்தால் பரமாத்மாவுடன் ஒன்றிய ஜீவாத்மாபோல் மாவில் கரைந்து காணாமற்போய் விடும். சாப்பிடும்போது ஓரிரு இழைகள் பழமும் பல்லில் பட வேண்டும். அப்போதுதான் சக்கையப்பம் சாப்பிட்டதாக அர்த்தம். 

இப்படியாக அரைக்கப்பட்ட பழத்தை, வெல்லத்துடன் சேர்க்கவும். பின் ஒரு கப் சம்பா புட்டு மாவு, அல்லது சாதா புட்டு மாவு, அதுவுமில்லையெனில் இடியாப்ப மாவு என எது கைவசமிருக்கிறதோ அதைச் சேர்க்கவும். அரிசி சேர்க்க விருப்பப் படாதவர்கள் சோளமாவு, ராகி, கேழ்வரகு என சிறுதானிய மாவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் புட்டு மாவுடன் சோள மாவு சேர்த்தேன். இதோடு துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கையளவு சேர்க்கவும். நாஞ்சில் நாட்டில் வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளுக்கு சுக்கு பொடித்து சேர்ப்பது வழக்கம். அந்தப்படியே மிளகளவு சுக்குப்பொடியும் சேர்த்தாயிற்று. இத்தனையையும் சேர்த்து, தேவைப்பட்டதால் சிறிது தண்ணீரும் சேர்த்துப்பிசைந்து, வீட்டில் வளர்க்கும் வாழைமரத்திலிருந்து நறுக்கி வந்த இலையில் பரத்தி வேக வைத்து எடுத்தாயிற்று. அவித்த முதல் நாளே காலி செய்து விட வேண்டும். இல்லையெனில், ஊசிப்போய் நூல் கோர்த்துக்கொள்ளும். ஆனால், அப்படி ஆக விட மாட்டார்கள் நம் வீட்டுக் குழந்தைகளும், பெரிய குழந்தைகளும். தெவிட்டாமலிருக்க மாங்காய்ப்பச்சடி, ஊறுகாய் போன்றவற்றையும் துளி எடுத்து நாக்கில் தடவிக்கொள்வது சுவை கூட்டும். அதை விட, மொறுமொறுவென சுடப்பட்ட பருப்பு வடை உத்தமச்சுவை.

எப்போது பலாப்பழம் வாங்கி வந்தாலும், சக்கையப்பம் செய்யவென எடுத்து வைக்கப்படும் சுளைகள், "அப்புறம் செய்து கொள்ளலாம்" என திட்டம் தள்ளிப்போடப்பட்டு அப்படியே சாப்பிடப்பட்ட காலம் போய், சக்கையப்பம் செய்து பிள்ளைகளும் சாப்பிட்டது இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறை. இனி இது தொடரும்..

Monday 24 April 2017

ஒரு சிறு இசை(வண்ணதாசன்) - புத்தக விமர்சனம்

கவிழ்ந்து படுத்துக்கொண்டு அடம்பிடிக்கும் குழந்தையாய் இதழ்களைப் பரப்பிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் பாதிரிப்பூவை மென்கரங்களால் வருடி ஆற்றுப்படுத்தும் மென்காற்றைப்போன்றது வண்ணதாசனின் எழுத்து.. நம் மனம்தான் அந்தப்பாதிரிப்பூ. அம்மென்காற்றிலிருந்து பிறந்த “ஒரு சிறு இசை” நம்மை எந்தெந்த உயரங்களுக்கோ கொண்டு சென்று, லயிக்கவும் வாழ்வின் வண்ணங்களைத் தரிசிக்கவும் வைக்கிறது.

நித்திய வாழ்வின் வலிகளைச் சுமந்தலைகிற மனிதர்கள் சற்றே அன்பின் நிழலில் இளைப்பாறுவதும் அந்நிழல் அவர்களுக்குக் கிடைப்பதும் எத்தகைய கொடுப்பினை. பிரதிபலன் எதிர்பாராமல் அமிர்த ஊற்றாய் அன்பைச்சொரியும் மனிதர்கள் வாய்ப்பது எத்தகைய வரம். முரட்டு மனிதர்கள் என நாம் எண்ணுபவரிடத்தும் அத்தகைய அடைபட்ட ஊற்றுக்கண் திறக்கப்படக் காத்திருக்கக்கூடும். அத்தகைய அன்பை மையமாய்க்கொண்டவையே வண்ணதாசனின் கதைகள். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே முகிழ்த்த அன்பாய் இருந்தால்தான் என்ன? எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் அன்பு அன்புதானே?. சற்றே நூல் பிசகினாலும் வேறு வண்ணங்கொள்ள சாத்தியமுள்ள அந்த அன்பை விகல்பமில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லிச்செல்வதுதான் வண்ணதாசனின் வெற்றி.

பதினைந்து சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பிற்கு, 2016-ம் ஆண்டுக்கான "சாகித்ய அகாடமி" கிடைத்துள்ளது. இத்தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையிலுமே ஒரு சிறு இசை ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது. அன்பின், நேசத்தின் இசை நம்மைச்சூழ்ந்து கொள்வதை உணர முடிகிறது. ஒவ்வொரு மனித மனமும் ஒரு பெட்டியே. எத்தனையோ ரகசியங்களை அது ஒளித்து வைத்துக்கொண்டு பொருத்தமான சாவிக்காகக் காத்திருக்கிறது. சரியான நேரத்தில் அது திறக்கப்படும்போது வெளிப்படும் சிறு இசை, அதற்குரிய அங்கீகாரத்தை அடைகிறது. மணமானவுடனே விதவையாகி விட்ட மூக்கம்மா ஆச்சியின் அடிமன ஆசையை அவள் அக்காள் புரிந்து கொண்டு, தன் கணவரின் சட்டையோடு மூக்கம்மா ஆச்சியின் புகைப்படத்தைச் சேர்த்து வைத்து அதற்குரிய அங்கீகாரத்தை வழங்கியதைப்போல், பிரமநாயகத்தை கல்பனா ஸ்டுடியோவில் தம்பதியாகப் போட்டோ எடுத்துக்கொள்ளச்சொல்ல வேண்டுமென்று கைலாசம் விழைவதைப்போல், இக்கதைகளில் ஆங்காங்கே ஒலிக்கும் சிறு இசை ஓர் இசைக்கோர்வையாய் நம் மனதை நிறைக்கிறது.

நிரப்புவதும் நிரம்புவதும் அத்தனை எளிதா? எத்தனை மார்ட்டின் மல்லிகள் பூத்தாலென்ன? எத்தனை குருவிகள் வந்து தண்ணீர் அருந்தினாலென்ன? மரமல்லிகள் உதிர்ந்து பாய் விரித்தாற்போல் பரந்து கிடந்தால்தான் என்ன? பிறந்த பெண்குழந்தையைப் பறி கொடுத்து விட்டு வெறுமையாய்க்கிடக்கும் குருசாமி-பார்வதி தம்பதியரின் முற்றம், “நம்ம வீட்டுக்குப் போலாமா?” என அவ்வீட்டின் தகப்பன் கூட்டி வரப்போகும் நாய்க்குட்டியால் நிச்சயம் நிரம்பி விடும். ஒரு தாமரைப்பூ போதும் ஒரு குளத்தை நிரப்ப. ஒரு பூ உதிர்ந்தாலும் இன்னொரு பூ இட்டு நிரப்பும்.. சுப்புவைப்போல். ஒரே ஒருத்தர் அத்தனை பேர் இடத்தையும் நிரப்புவதுதானே விசேஷம்.

காந்தி டீச்சருக்கும் நமசுவின் அப்பாவுக்கும் இருக்கும் உறவுக்கும் தண்டவாளங்களுக்கிடையே இருக்கும் உறவுக்கும் வித்தியாசமொன்றுமில்லை. அருகருகே இருந்தாலும் நெருங்கிச்சென்று இணைவது போல் தோற்றம் காட்டினாலும் இணைவதேயில்லை. அப்படி இணைந்து விட்டாலோ அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆகவே அதை அப்படியே தாண்டிப்போய் விட வேண்டியதுதான். சிந்திய தண்ணீரைத் தாண்டுவதைப்போல் நமசுவின் அப்பா அவ்வுறவைத் தாண்டிச்செல்வதும், காந்தி டீச்சர் தண்டவாளத்தைத் தாண்டிச்செல்வதும் ஒன்றுதான். 

பொழுது போகாமல் ஒவ்வொருவர் வாழ்விலும் விளையாடும் சதுரங்கம்தான் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் அது ஏற்படுத்தும் பாதிப்பும். வெற்றி தோல்வி மனப்பான்மை ஏதுமின்றி, வாழ்வதை ஒரு கடமையாக மட்டும் எடுத்துக்கொண்டு வெறுமையான மனங்களுடன் இருப்பது வேறென்னவாக இருக்க முடியும்? இத்தனை சிறு களத்தில் எத்தனை போட்டி, பொறாமை, சந்தேகம், சக உயிரின் மீது அன்பின்மை, சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் வெட்டி வீழ்த்தத்துடிக்கும் வஞ்சகம், புரிந்து கொள்ளாத சித்திரவதை என எத்தனை விதமான நகர்வுகள்!! அத்தனைக்கும் ஈடு கொடுத்து விளையாடி முடித்தபின் இறுதியில் கணக்குப்பார்த்தால் நம் கையில் மிஞ்சுவதென்ன? வாழ்நாள் முழுவதும் ஒருவரோடொருவர் இணக்கமின்றி இருக்கும் அம்மச்சி டீச்சருக்கும் அவள் கணவனான சூரிக்குமிடையே நடக்கும் போராட்டத்தில் தனுக்கோடிக்கும் நிச்சயம் ஒரு பங்கிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ அச்சதுரங்கத்தில் அவரும் ஒரு காயாக இடம் பெற்று, அலைக்கழிந்து பின் தானாகவே விலகிச்சென்று விடுகிறார். அதன்பின்னும் அவர்கள் மனம் ஒட்டாமல் வாழும் வாழ்வே “பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்” 

நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்து புழுங்கும் வாழ்வின் இடுக்குகளில் அன்பின் தென்றல் வீசுவது எத்தனை சுகம்!! அப்படி அன்பு வெளிப்படும் அரிய தருணங்களை வெளிப்படுத்தி காட்சிப்படுத்துபவை வண்ணதாசனின் கதைகள். உரைநடை வரிகளினூடே இழையோடிச்செல்லும் கவிநயம் வாசிப்பை ஆனந்தமானதாக்குகிறது. படிமங்கள் நிரம்பிய சிறுகதைகள் எளிமையான வரிகளால் பின்னப்பட்டிருந்தாலும் சற்றே ஆழ்ந்து வாசிக்குங்கால், அத்தனை கனமான உட்பொருளையும் கொண்டுள்ளது. சிந்திக்குந்தோறும் அதன் பொருள் விரிந்து வாசகனின் சிந்தனையை விரிவாக்குகிறது. வாசக மனதை அங்கிங்கு அலைய விடாமல் கட்டிப்போடும் சீரான ஒழுக்குப்போன்ற மொழிநடை இன்னொரு பலம். ‘குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல் எதிர்ச்சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது’ போல் நம் மனதில் இச்சிறுகதைத்தொகுப்பின் மாந்தர் வரையும் சித்திரங்களும் அத்தகைய அரூபமானதே.

ஆசிரியர்: வண்ணதாசன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.
இணையத்தில் வாங்க: 





Wednesday 19 April 2017

செம்பருத்தி(தி.ஜானகிராமன்) - புத்தக விமர்சனம்

தி.ஜாவின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற்ற நாவல்களை விட இதில் மன விசாரங்களும், தத்துவ விசாரங்களும் சற்று அதிகமாகவே இடம்பெற்று அலசப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் அவரது நாவல்களில் “செம்பருத்தி” தனியிடத்தைப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

விருப்பத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலிருக்கும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் அது கிடைப்பதற்கும் இடையிலேற்படும் ஊசலாட்டம், உறவுகளைப் பேணிக்காக்கும் இச்சைக்கும் அது பலிப்பதற்கும் இடையிலுள்ள போராட்டம் என இவற்றை வெவ்வேறு காலப்பின்னணியில் வைத்து அலசும் புனைவை சட்டநாதன் உட்பட்ட கதை மாந்தர்கள் வழியாக நம்முன் வைக்கிறார் தி.ஜா. பணத்தை விட மனிதர்களைச் சம்பாதித்து அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியமாகி, காலங்கள் கடந்தபோதும் அவை நிலைத்திருக்கச்செய்வதே மனிதனின் உண்மையான வெற்றி. 

“செம்பருத்தி”யின் சட்டநாதனும் இவ்வகைதான். பெண்கள் நிரம்பிய அவனது உலகத்தில் அவர்களூடே பயணித்து அவர்களைப் புரிந்து கொள்ள, அவர்களைத்தக்க வைத்துக்கொள்ள முயலும் அவனது வாழ்வும், அவன் கடந்து வரும் மூன்று பெண்கள் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இந்நாவல். இவற்றைக்கூறுவதன் மூலம் குடும்பம், சமுதாயம் இவற்றைக்கட்டமைப்பதில் பெண்களின் பங்கு எத்தகையது என்பது புரிய வருகிறது. அப்பெண்களின் இயல்புகளையும் அவர்களது துக்கம், கண்ணீர், மென்னகை போன்றவற்றையும் கூறி வரும்போதே அவர்களிடையே சிக்கித்தவிக்கும் ஆணின் கதையும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. பெண் மட்டுமல்ல ஆணும் பல சமயங்களில் பரிதாபத்துக்குரியவனே. 

பால்யத்தில் பிரியம் வைத்த பெண் சந்தர்ப்ப வசத்தால் தனக்கு அண்ணியாகி, எதிர்பாரா விதமாக விதவையுமானபின், ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபின்னும் அந்நெருப்பில் பற்றிக்கொள்ளாமல் அதே சமயம் அதன் அருகே வாழ்ந்து வரும் நனைந்த பஞ்சான சட்டநாதன் தன்னறத்தை இயல்பாகக்கொண்டு வாழ்வின் ஓட்டத்தில் அதைத்தொலைத்து விடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இயல்பான மனிதன். சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து நொடித்த பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது. இறக்குந்தருவாயில் சின்ன அண்ணன் பார்த்து வைத்து விட்டுப்போன புவனாவை மணந்து கொள்வதன் மூலம் சட்டநாதனுக்கெனவும் ஓர் குடும்பம் அமைகிறது. பெரியண்ணனின் சொற்படிக்கூறுவதானால் கருடாழ்வார் போல் அனைவரையும் தாங்கும் சட்டநாதன், தேள் கொடுக்காய்க் கொட்டும் பெரிய அண்ணியையும், “பார்த்துக்கிட்டே இருந்தாப்போதும்” என தன் உள்ளக்கிடக்கையை காலங்கடந்து வெளிப்படுத்தும் சின்ன அண்ணியையும் சேர்த்து தங்களுக்கிடையேயான கண்ணியமான உறவு கெட்டு விடாமல் தாங்குகிறான். முற்றிலும் வேறுபட்ட இம்மூவரின் குணாதிசயங்களும் அக்குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் தி.ஜாவின் தனித்தன்மை. தஞ்சை மண்ணின் ஒரு சிறு கிராமத்தில் நிகழும் கதைக்களத்தின் துணை மாந்தர்களும் தன்னிருப்பை நம்முள்ளத்தில் ஆழப்பதிக்கிறார்கள் கிட்னம்மாவையும் ஆண்டாளையும் போல்.

தி.ஜாவின் செம்பருத்தியில் பெண்களின் துர்க்குணங்கள் சற்று அதிகமாகவே விவரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது ஆணின் மேல் ஏற்படும் பரிதாபத்தை சற்று அதிகப்படுத்துவதற்காகவும் இருக்கலாம். அதிலும் சட்டநாதனின் பெரிய அண்ணியின் பாத்திரப்படைப்பு சிக்கலான ஒன்று. அவளது துர்க்குணங்கள் காரணமாக அவளை, “புளியமரம்” என்றே அனைவரும் ஜாடையாகக்குறிப்பிடுகின்றனர். தன் சுபாவத்தால் பிறரை நிம்மதியிழக்கச்செய்யும் அவள் மேல் நமக்கு ஆத்திரமும் அசூயையும் ஏற்படும் அதே சமயம் தன் குணத்தை எண்ணி வருந்தி, தன்னையே வெறுத்து பட்டினி கிடந்து தன்னையே வருத்திக்கொண்டு இறக்கும் அவள் மேல் ஒரு துளி அனுதாபமும் ஏற்படுகிறது. 

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கப்பட வேண்டுமென்றான் பாரதி. கணவன் பிற மகளிரை விழைவதை எந்தப்பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டாள். பொறுத்துக்கொண்டு அன்பு செலுத்த மாட்டாள். அவள் அவனுக்கு உண்மையாக இருப்பதைப்போலவே அவனும் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று அவள் எதிர்பார்ப்பது இயற்கைதானே. அது பிறழும்போது அவள் வருந்துவதும் சினம் கொள்வதும் இயல்புதானே.. இதிலென்ன தவறு இருக்கிறது? ஆனால், அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இன்முகத்துடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண், அவள் தன் மனப்புழுக்கத்திற்கு வடிகாலாக யாரோடோ வெறுமனே பேசிச்சிரித்தால் அவளைச் சந்தேகப்படுவது எவ்விதத்தில் நியாயம்?. பெரியண்ணியின் பாத்திரப்படைப்பைப் பொறுத்தவரை அவள் தன் கணவனின் மேலுள்ள கசப்பைத்தான் பிறர் மேலும் துப்புகிறாள். அவள் மனதில் ஊறிக்கசியும் அக்கசப்பே அவளை அனைவரும் வெறுக்கக்காரணமாக அமைந்து விடுகிறது. அவளைச் சற்றேனும் புரிந்தவள் புவனா மட்டுமே.

விரும்பியவனுக்கு அண்ணியாக சந்தர்ப்ப வசத்தால் ஆக நேர்ந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்த குஞ்சம்மா, விதவையானபின், சட்டநாதனைப் பார்த்துக்கொண்டேயாவது வாழ்ந்து விடுவது என முடிவெடுத்து அந்நேசத்தை ஆராதித்து அவ்வீட்டில் வாழும்போது அவள் மேல் ஏற்படும் பச்சாதாபம், தனக்கும் அவனுக்குமான உறவை அவன் மனைவியிடமும் ஒன்று விடாமல் கூறியிருக்கிறான் என அறிந்து அவனை வெறுத்து தன் பெண்ணோடு நிரந்தரமாக இருக்கப் புறப்படும்போது கலைந்து விடுகிறது. அவ்வளவுதானா மனிதர்கள்! எனத்தோன்றுகிறது. எனினும், தன்னுடைய அந்தரங்கம் வெளிப்பட்டு விட்ட இடத்தில் ஒரு மனுஷியால் மீதமுள்ள காலத்தை எவ்வித உறுத்தலுமில்லாமல் கடந்து விட இயலுமா? என்ற கேள்வியையும் விதைக்கிறது.

ஒரு ஆதர்ச மனைவியாக, அவ்வீடு எந்தச்சிக்கலுமில்லாமல் ஓட அடிப்படையான அச்சாணியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் புவனாவின் படைப்பு இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா என வியக்க வைக்கிறது. அதுவும் தன் கணவன் கல்யாணத்திற்கு முன் பிரியம் வைத்த பெண்ணே தனது ஓர்ப்படியாக ஒரே வீட்டில் வாழும்போது, அதை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன! தினந்தோறும் நடக்கும் நல்லது கெட்டதுகளை கணவன் தன்னோடு பகிரும்போது அதைக்கேட்டு, தேவைப்படும்போது நல்ல வழியும் காட்டி அவனுக்கு ஒரு நல்ல துணையாக இருந்தவள் மெனோபாஸ் சமயத்தில் அதே சின்ன அண்ணியோடு கணவனைத்தொடர்பு படுத்தி அவன் மேல் சந்தேகப்பட்டு தங்கள் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளும்போது, அத்தனை நாள் அவன் அவள்மேல் இறக்கி வைத்த பாரத்தைச் சுமந்த துன்பம்தான் இப்படி வெளிப்படுகிறதோ எனத்தோன்றுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவும் வேண்டுமோ என ஐயத்தை ஏற்படுத்துகிறது. அர்த்தநாரீசுவரான சிவனாலேயே தன் மனைவியுடன் இரண்டறக்கலக்க இயலவில்லை எனும்போது நாம் யார்?

சரளமான நடை, பெரும்பாலும் உரையாடல் மூலமாகவே கதையை நகர்த்தும் உத்தி, கதையின் முடிச்சை சொற்களில் பொதிந்து தரும் லாகவம் என தி.ஜாவின் முத்திரை இந்நாவலிலும் அழுந்தப்பதிந்துள்ளது. சாவி ஆசிரியராக இருந்த சமயம் தினமணி கதிரில் 1968-ம் வருடம் தொடராக வந்தது இந்த நாவல்,

ஆசிரியர்: தி.ஜானகிராமன்.
வெளியீடு: ஐந்திணைப்பதிப்பகம்(2003-செம்பதிப்பு)
இணையத்தில் வாங்க: 

Monday 17 April 2017

நெடுமரம்..

நாம் சொல்லும் எந்தச்சொல்லுக்கும் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் சும்மா அமைதியாக நிற்பவரை "மரம் மாதிரி நிக்கறியே"எனத் திட்டுகிறோம். உண்மையில் மரம் எதற்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் சும்மாவா நிற்கிறது? ஒவ்வொரு பருவகாலத்துக்குமேற்ப தன்னுடலில் அது வெளிப்படுத்தும் மாற்றங்கள் எத்தனையெத்தனை!!

வசந்த காலம் வந்ததும் மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, வெள்ளை என பலப்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறதே.. இத்தனை வண்ணமலர்களை அதுகாறும் எங்கே ஔித்து வைத்திருந்தது அது? உதிர்ந்து வழியெங்கும் பூம்பாய் விரித்த மலர்கள் போக சிலவற்றை தனது வம்சவிருத்திக்கென விதையுற்பத்திச்சாலை சுமக்கும் கனிகளாக உருமாற்றும் இரசவித்தையை ஒவ்வொரு நாளும் பிறரறியாமல் நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறது. இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு உடலெங்கும் செம்பூக்களை மட்டும் அணிந்து நிற்கிறதே இந்த மரம்.. எந்தப் பருவகாலத்திலிருந்து இதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்ததோ!! யாருக்குத் தெரியும்?

வாழும் ஒவ்வொரு நொடியும் தனக்காகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உயிர்ப்புடன் பேரமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்ச்சாலையல்லவா அது!! புரட்டிப்போடும் புயலுக்கிசைந்து தன்னுடலில் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலும், மறு நொடியிலிருந்தே அவ்விழப்பைச் சரிக்கட்டும் முயற்சியில் அதன் வேர்களும் திசுக்களும் ஒன்றிணைந்து சத்தமில்லாமல் பாடுபடத் தொடங்கி விடுவதை யாரறிவார்.

அசைவற்று அது நிற்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதற்குள் ஒரு பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிந்தோமில்லை. அதைப்போய் சும்மா நிற்கிறது என மனிதனோடு எப்படி ஒப்பிடவியலும்? வேண்டுமானால், காய்ந்து பட்டுப்போன மரத்தைப் பார்த்து, "மனிதனைப்போல் சும்மா நிற்கிறாயே" என்று ஒப்பிட்டுச் சொல்லிக்கொள்ளலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails